எல்லையற்ற அன்பு கொள்வோம்

Wednesday, October 12, 2022

காக்கையும் குயிலும்

 அப்பா இன்னிக்கு காக்கா கதை சொல்லுப்பா...

சரி சொல்றேன். வழக்கமா காக்கா கதைனாவே, காக்கா வடை திருடுன கதை சொல்வாங்க. அது எல்லாருக்கும் தெரியும். நாம வேற ஒண்ணு சொல்வோம். சரியா?

ஒரு ஊர்ல ஒரு கோயில் இருந்தது. மிகப்பெரிய கோயில். எதோ ஒரு மன்னன் அந்தக்காலத்துல பிரம்மாண்டமா கட்டிட்டு போயிருக்கான். அந்தக்கோயில் வாசல்ல பெரிய கோபுரம், மரத்தால் ஆன கதவுகள் மூணு ஆள் உயரத்துக்கு இருந்தது. முழுக்க கற்களால கட்டியிருக்காங்க. கோபுரம் தாண்டி போகையில இரண்டு பக்கமும் திண்ணை இருக்கும். கல் திண்ணை. அதுல உக்காந்தா குளிர்ச்சியா இருக்கும். அங்க உக்காந்துதான் ஊர்க்கதை பேசுவார்கள் மக்கள். அதைத் தாண்டி போனோம்னா பெரிய விஸ்தாரமான இடம் ஆயிரம் பேர் நிக்கற அளவுக்கு பெரிய இடம். வலதுபக்கம் கோயில் குளம். இடது பக்கம் பூக்கள் நிறைஞ்ச சிறிய தோட்டம். அதைத்தாண்டி போனா மண்டபம். அங்கதான் கல்யாணம் நடக்கும். மண்டபம் முழுக்க கல்தூண்களால் கட்டப்பட்டிருக்கும். மண்டபம் பின்னாடிதான் கோயில் இருக்கும் அதுக்கு உள்ள கருவறை. அங்கதான் தெய்வம் இருக்கும். அந்தக் கோயிலுக்கு இடது புறம் பெரிய மாமரம் இருந்தது.

கோயிலை சுற்றி 12 அடி உயரத்துக்கு சுவர் இருக்கும். கோயில் உள்ளார இருக்கறது மாமரம். அந்த ஊர்லயே அந்த மரம்தான் பெரிய மரம். கோயிலுக்கு அந்தப்பக்கம் மக்கள் குடியிருக்கற தெருக்கள் இருந்தது. அந்தத் தெருவுலயும் ஒரு பெரிய மரம் இருந்தது. அந்த மரத்துல நிறைய காக்காய்கள் குடியிருந்துச்சு. கோயில் கோபுரம்னு சொன்னேன் இல்லயா, அந்த கோபுரத்துல நிறைய புறாக்கள் குடியிருந்துச்சு, வெண்புறா, மணிப்புறா, பழுப்பு நிறப்புறா, தங்க நிறத்துலன்னு அழகழகா நிறைய புறாக்கள். கோயிலுக்கு உள்ள இருந்த மரத்துல குயில்கள், கிளிகள் குடியிருந்துச்சு. 



கோபுரவாசலைத் தாண்டினா நிறைய இடம் இருக்கும்னு சொன்னேன்ல, அங்கதான் சாமி கும்பிட்ட பிறகு மக்கள் அமர்ந்திருப்பாங்க. அப்போ அங்க இருக்கற புறாக்களுக்கு மக்கள் தானியங்கள போடுவாங்க. புறாக்களும் அதை கும்பலா பறந்து வந்து கொத்தி கொத்தி சாப்பிடும். அது சாப்பிடற அழகை மக்களும் குழந்தைகளும் வேடிக்கை பாப்பாங்க. 

அந்த மரத்துல குயில்களும் கிளிகளும் இருந்துச்சு சொன்னேன்ல அதுல கிளிகள் மட்டும் கீழ வந்து தானியங்களை தின்னுமாம். குயில்கள் கீழ வரவே வராதாம். குயில்களுக்கு தான்தான் ரொம்ப அழகு. அதுவுமில்லாம தன்னால மட்டும்தான் அழகா கூவ முடியும். அது பாடல் போல இருக்கும்னு நினைப்பு. அதனால கர்வம் அதிகம். உங்களோட சரிக்கு சமமா சாப்பிட்டா அது எனக்கு கவுரவம் இல்லன்னு நினைக்குமாம்.



கோயில்லும் பின்புறம் உள்ள தெருவில் ஒரு மரம் இருக்கும்னு சொன்னேன்ல அந்த மரத்துப் பேரு புங்கை மரம். நல்ல அடர்த்தியான பெரிய மரம். அதுல எண்ணவே முடியாத அளவுக்கு காகங்கள் இருந்துச்சு. அந்தக் காகங்கள் கோயிலுக்குள்ள தானியம் தின்ன வரும்போதெல்லாம் மாமரத்துக் கிளிகளும் குயில்களும் சத்தம் போட்டு காட்டிக்கொடுக்குமாம். புறாக்கள் எல்லாம் சேர்ந்து காகங்கள கோயிலுக்குள்ள வரமுடியாதபடி விரட்டுமாம். 

காகங்கள் ஒருநாள் புறாக்கள் கிட்ட கேட்டுச்சாம். ஏன் நாங்க கோயிலுக்கு உள்ள வந்து தானியங்கள சாப்பிட விடாம தடுக்கறிங்க?

நீ ரொம்ப கருப்பா, அசிங்கமா இருக்கிங்க, அதுவுமில்லாம நீங்க கத்துனா காது கிழியற மாதிரி கத்தறிங்க, செத்த எலிய சாப்பிடறிங்க, போதாக்குறைக்கு எங்களவிட அதிகமான எண்ணிக்கைல இருக்கிங்க. நீங்க உள்ள வந்தா எங்களுக்கு அவமானம். மக்கள் எங்களோட அழகான தோற்றத்துக்காகவும் குரலுக்காகவும்தான் தானியங்கள் போடறாங்க. உங்களுக்காக இல்ல என்றதாம்.



கருப்பா இருக்கறது நாங்கள் தேர்ந்தெடுக்கறது இல்ல, அது இறைவன் கொடுத்தது. எங்களோட குரல் மோசமா இருக்கலாம் ஆனா நாங்க கத்துறது எங்களோட நண்பர்களை கூப்பிடவும், கிடைத்த உணவை அனைவரும் பகிர்ந்து உண்ணவும்தான் கத்துறோம். அப்படி கத்தும்போது அருகில் இருக்கிற எங்கள் சக காக்கைகள் வந்து உணவு உண்ணும். பகிர்ந்து உண்ணும் பண்பாடு எங்களோட வரம். அப்புறம் செத்த எலிகள நாங்க சாப்பிடலன்னா ஊரே நாறிடும். அந்த வகைல ஊரை சுத்தமா வச்சிக்கறதுல எங்களோட பங்கும் இருக்கு.  உங்கள மாதிரி கர்வம் பிடிச்சி தானே எல்லாத்தையும் அனுபவிக்கணும்னு எங்களுக்குத் தெரியாது என காக்கைகள் சொன்னதாம்.

நீங்க என்ன வேணா சொல்லுங்க, நீங்க கோயிலுக்குள்ள வந்தா சத்தம் போடுவோம். நீங்க வரக்கூடாது என்றதாம் கோயில் புறாக்கள்.

காலம் ஒருநாள் மாறும். அப்போ நாங்களும் கோயிலுக்குள்ள வருவோம் அதுவரைக்கும் காத்திருக்கிறோம் என்றதாம் காக்கைகள்.

சரி கெளம்பு கெளம்பு காத்து வரட்டும் என்று சிரித்ததாம் கிளிகளும், புறாக்களும். இதை மரத்தில் இருந்த குயில் மகிழ்ச்சியோடு பார்த்ததாம்.

காக்கைகள் அவமானத்தோடு தங்களோட புங்கை மரத்துக்கு திரும்புச்சாம்.

கொஞ்சநாள் கழிச்சி மாமரத்துக் குயிலுக்கு முட்டை இடும் காலம் வந்துச்சு. குயில் என்னதான் அழகா இருந்தாலும், அருமையா பாடினாலும் அதுக்கு கூடு கட்டத் தெரியாது. கூடு இருந்தாதான் அடை காக்க முடியும். அவயம் இருந்தாதான் முட்டைகள் பொறிஞ்சி குயில் குஞ்சுகள் வெளிய வரும். கூடு இல்லன்னா எப்படி குஞ்சு வரும். அதனால குயில் என்ன பண்ணுச்சாம் தெரியுமா? 

என்ன பண்ணுச்சு?

புறாக்கள்தாம் நம்ம நண்பர்களாச்சே, அவங்க கூட்டில முட்டை இடலாம்னு போய் அங்க முட்டையிட்டு வந்துடுச்சாம்.

பெண்குயில் ஆண்குயில்கிட்ட சொன்னுச்சாம். நான் புறாவோட கூட்டில் ரெண்டு முட்டையிட்டுட்டு வந்தேன். அது இன்னும் கொஞ்ச நாள்ல குஞ்சு பொரிச்சிடும். நம்ம குடும்பத்து ரெண்டு வாரிசு வரப்போறாங்க என்று மகிழ்ச்சியோடு சொன்னதாம். ஆண்குயிலும் அதக்கேட்டு மகிழ்ச்சியாயிடுச்சி.



ஆனா மறுநாள் குயிலுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்ததாம்.

என்ன அதிர்ச்சி?

புறா தன்னோட கூட்டில் இருந்த குயில் முட்டைகளை மட்டும் காலால தள்ளி விட்டுருச்சி. அதனால முட்டைகள் கீழ விழுந்து உடைஞ்சிடுச்சி.

குயில் முட்டைன்னு புறாவுக்கு எப்படி தெரியும்?

பொதுவா வெவ்வேறு வகை பறவைகளுக்கு வெவ்வேறு நிறத்தில முட்டைகள் இருக்கும். புறாக்களுக்கு வெள்ளையும், காபிபொடியும் கலந்த நிறத்தில் இருக்கும்.  குயில் முட்டைகள் இளநீல நிறத்தில் இருக்கும். இந்த நிறவேறுபாடு காரணமா தன்னோட முட்டை இல்லன்னு கீழ தள்ளி ஒடச்சிடுச்சி.

குயில் வந்து புறாகிட்ட கேட்டுச்சாம். ஏன் முட்டைகளை உடைச்ச?

உன் முட்டைகளை நீயே பொரிச்சுக்க, ஏன் என்கிட்ட குடுக்கற? என்றதாம் புறா

எனக்கு கூடு கட்ட தெரியலன்னுதான் உன்கிட்ட முட்டை வச்சேன். ஆனா நீ கீழ தள்ளி உடைப்பேன்னு எனக்கு தெரியல, அநியாயமா இப்படி உடச்சிட்டியேன்னு அழுதுச்சாம் குயில்.

என்கிட்டயே நாலஞ்சி முட்டை இருக்கு. நீயும் முட்டைய வச்சா அதிகமாயிடும் என் முட்டையால என் முட்டைகள் பொரிக்காம போயிடும் இனிமே நீ வேற எடம் பாத்துக்கன்னு புறா வெறுப்பா சொன்னுச்சாம்.

குயிலும் அழுதுகிட்டே மரத்துக்கு வந்து ஆண் குயில்கிட்ட சொன்னுச்சாம்.

சரி விடு அடுத்த முறை முயற்சி பண்ணலாம்னு சமாதானம் சொன்னுச்சாம் ஆண்குயில்.

இதயெல்லாம் தூரத்துல புங்கை மரத்துலருந்து பாத்துகிட்டுருந்துச்சாம் காக்கை. அந்த காக்கைக்கு ரொம்ப பாவமா இருந்துச்சாம்.

அங்கருந்து பறந்து வந்து குயில்கிட்ட பேச்சு குடுத்ததாம். குயில்களே... நடந்ததை எல்லாம் நான் பார்த்தேன். உங்களுக்கு உதவணும்னு எனக்குத் தோணுது என்றதாம் காக்கை.

எப்படி நீ எங்களுக்கு உதவி செய்வாய்?

அடுத்த முறை உனக்கு முட்டையிடும் பருவம் வந்ததும் நீ புறாவின் கூட்டில் முட்டை வைக்காதே, நேராக எங்கள் கூட்டில் முட்டை வைத்துவிடு. அதை உனக்காக நான் அவயம் காக்கிறேன் என்றதாம் காக்கை.

அதைக்கேட்ட குயில்களுக்கு மனம் இளகியது. என்னதான் நாங்க உங்கள அவமானப்படுத்தினாலும், கோயிலுக்குள்ள விடலன்னாலும், உணவு தர மறுத்தாலும் எனக்காக நீங்க செய்ய நினைக்கிறிங்க, உள்ளத்தால் உயர்ந்தவர்கள் நீங்கன்னு சொன்னுச்சாம் குயில். 

அடுத்த முறை நான் நேராக வந்து உங்கள் கூட்டில் முட்டையிடுகிறேன் சொன்னது குயில்.

இதையெல்லாம் கிளி ஒட்டுக்கேட்டு போய் புறாக்கூட்டத்திடம் சொன்னதாம். புறாக்களுக்கு கோபம் வந்துச்சாம். அந்த அவலட்சண காக்கைகளுடன் நட்பாக இருக்கும் குயிலை திட்டியது. சரியான நேரம் பார்த்து குயில்களை விரட்டணும்னு முடிவு பண்ணுச்சாம்.

அந்த நேரம் பார்த்து அந்த ஊருக்குள்ள ஒரு கிளி ஜோசியன் வந்தான். அவனுக்குத் தொழிலே கிளிய பிடிச்சி பழக்கி அத வச்சு கிளி ஜோசியம் பாக்கறதுதான். அவனிடம் நீண்ட காகம் இருந்த கிளி செத்துப்போனது. புதுக்கிளிய பிடிக்கறதுக்காக வந்திருந்தான். இந்த மாமரத்துல கிளிகள் நிறைய இருக்குன்னு கேள்விபட்டு கோயிலுக்குள் வந்தான். அவனும் மரத்தில் ஏறி கூட்டில் இருந்த சிறிய கிளியை பிடித்தான். உருவத்தில் சிறிய கிளிகளால் சத்தம்தான் போட முடிந்தது. ஜோசியனை விரட்ட முடியவில்லை. கூட்டமாக சேர்ந்து கத்தின. 

இதைப்பார்த்த காக்கைக் கூட்டம் உச்ச குரலெடுத்து கத்தியது. அது கத்தியதும் எங்கிருந்துதான் வந்ததோ தெரியாதது போல ஆயிரமாயிரம் காக்கைகள் வந்து மரத்தில் இருந்த ஜோசியனை தன் கூரிய அலகால் கொத்தியது. வலி பொறுக்க முடியாமல் ஜோசியக்காரன் குஞ்சு கிளியை மரத்திலேயே விட்டுவிட்டு கீழே குதித்து ஓட்டம் பிடித்தான்.

சரியான நேரத்தில் உதவிக்கு வந்த காக்கைகளுக்கு கிளிகள் நன்றி தெரிவித்தன. இனிமேல் நீங்கள் கோயிலுக்கு வரும்போது நாங்கள் கத்த மாட்டோம். நாம் நட்போடு இருப்போம் என்றது கிளிகள். காக்கைகளும் கிளிகளும் நட்பானார்கள்.

கொஞ்ச காலம் கழித்து குயிலுக்கு முட்டையிடும் பருவம் வந்தது. அது நேராக சென்று காக்கையின் கூட்டில் முட்டை வைத்தது. இந்த முட்டைகளை என் முட்டைகள் போல் நினைத்து அவயம் காத்து குஞ்சு பொரித்ததும் உங்களிடம் ஒப்படைப்பேன் என காக்கை வாக்கு கொடுத்தது.



சொன்னது போலவே கொஞ்சநாளில் அழகிய இரு குயில் குஞ்சுகள் முட்டையிலிருந்து வந்தன. அதனை காகம் குயில்களிடம் கொடுத்தது.

குயில் குடும்பம் ஆனந்தத்தில் கூத்தாடியது. நம் குடும்பம் காக்கைகளின் உதவியால் பெருகியது. நாம் என்றென்றைக்கும் காக்கைகளுக்கு நன்றியோடு இருப்போம் என்றது குயில்.

ஆம், காக்கைகள் குணத்தால் நம்மைவிட உயர்ந்தவர்கள் என்றது அங்கிருந்த கிளிகள்.

கோயிலில் மக்கள் பறவைகளுக்கு தானியங்களை வீசும்போதெல்லாம் மாமரத்துக் கிளிகளும் குயில்களும் சப்தமெழுப்பவில்லை. அதனால் காகங்களும் வந்து தானியங்களை மகிழ்ச்சியோடு சாப்பிட்டன.

புறாக்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. பிறகு வேறு வழியில்லாம ஏற்றுக்கொண்டன.

பிறகு வந்த காலங்களில் அக்கோயிலின் தானியங்களை புறாக்களும், காகங்களும், கிளிகளும், குயில்களும் இன்ன பிற பறவைகளும் பகிர்ந்து உண்டு மகிழ்ச்சியோடு வாழ்ந்தன.





Tuesday, October 11, 2022

சுறாக்குடும்பமும் வாட்ச்மேன் ஆமையும்

 இன்னிக்கு என்ன கதை வேணும்?

ஷார்க் கதை?

ஷார்க்னா என்ன?

அதுவா... அது ஒரு பெரிய மீனு.

அப்படியா, ஷார்க்னா தமிழ்ல சுறா என்று அர்த்தம். சுறா மீன். இதோட பற்கள் பயங்கர கூரா இருக்கும். ரொம்ப ஆபத்தான கடல்வாழ் உயிரினம். இந்த மீன வச்சு நிறைய ஹாலிவுட் படங்கள் வந்திருக்கு. நீங்க ரெண்டு பேரும் இன்னும் கொஞ்சம் பெரியவன் ஆனதும் பாக்கலாம்.

சரி ஓகே. இன்னிக்கு கதையோட பேரு வந்து "சுறாமீன் குடும்பமும் வாட்ச்மேன் ஆமையும்"


சுறாமீன் குடும்பமும் வாட்ச்மேன் ஆமையும். 


அது ஒரு பெரிய கடல். நல்ல ஆழமான கடல். ஆழமான கடல்லதான் சுறா மீன் நிறைய இருக்கும். அந்தமாதிரி ஆழமான ஒரு கடலில் ஒரு சுறாமீன் குடும்பம் இருந்தது. அந்த சுறா மீன் குடும்பத்துல புதுசா ரெண்டு சுறாக்குட்டிகள் பிறந்துச்சு. அது ரொம்ப அழகா பயங்கர சுட்டி சுறாக்களா இருந்துச்சு. ஆழமான கடல்ல ஆபத்துகளும் நிறைய இருக்கும் இல்லையா அதனால தன்னோட குட்டிகள பாதுகாக்க ஒரு நல்ல இடம் தேடுச்சாம் பெரிய சுறா. 



அப்படி ஒருநாள் தேடும்போது ஒரு நல்ல இடம் கிடைச்சுதாம். அந்த இடத்துல ஒரு பெரிய போர்க்கப்பல் மூழ்கி இருந்தது. அந்தக்கப்பல் இரண்டாம் உலகப்போர்ல நடந்த சண்டைல மூழ்கிய ஒரு கப்பல். ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி மூழ்கியதால அது ரொம்ப பாழடைஞ்சி இருந்தது.  அந்த பாழடஞ்ச கப்பல்ல ஒரு கண்ணாடி அறை இருந்தது. அது பாக்க நம்ம வீடுகள் இருக்கற மீன் தொட்டி மாதிரி இருந்துச்சு. இந்த இடம் பாதுகாப்பா இருக்கும்னு நினைக்கிறேன்னு அப்பா சுறா சொன்னது. 



ஆமாங்க இந்த இடம் பாதுகாப்பா இருக்கும் என்று அம்மா சுறா சொன்னது. 

அப்போது அந்தக்கப்பலில் இருந்து ஒரு வயதான ஆமை அவர்களை வரவேற்றது.

ஆமையாரே நீங்க இங்கதான் தங்கி இருக்கிங்களா?

ஆமாம், கடந்த ஐம்பது வருஷத்துக்கு மேல் இங்கதான் இருக்கேன்.

ஏன் நீங்க இங்கயே இருக்கிங்க?



என்னை ஒரு சுறா ரொம்ப வருஷத்துக்கு முன்னர் கடித்துவிட்டது. அதனால் பின்புறம் எனக்கு ஒரு கால் இல்லை. அதனால் வேகமாக நீந்த முடியாது. பாதுகாப்பாக இருக்கும் என்று இங்கயே தங்கிட்டேன் என்றது ஆமை.

சுறா இனத்தின் சார்பாக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். என்றது அப்பா சுறா.

மன்னிப்பெல்லாம் வேண்டாம் சுறா. மிக வயதாகிவிட்டதான் முன்பு போல இரை தேடி வெளியில் செல்ல முடிதில்லை என்றது ஆமை.

எங்களுக்கு இரண்டு பிள்ளை சுறாக்கள் உள்ளது. அவை பெரிதாக வளரும் வரை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இடம் தேடி வந்தோம். இந்த கப்பல் பாதுகாப்பாக இருக்கும்போல தோன்றுகிறது. எங்களுக்கு இடம் கொடுப்பீர்களா ஆமையாரே?

இந்தக்கடல் எல்லோருக்கும் சொந்தமானது. தாராளமாக இங்கே தங்கிக்கொள்ளலாம் என்றது ஆமை.

ரொம்ப நன்றி ஆமையாரே. நாங்கள் இரை தேடி வெளியே சென்று திரும்பும் வரை எங்கள் பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுடைய பசியை நாங்கள் போக்குகிறோம் என்றது சுறா.



மகிழ்ச்சி சுறாவே. இன்றிலிருந்து நான் உங்கள் பிள்ளைகளுக்கு வாட்ச்மேன் போல பாதுகாப்பாக இருப்பேன். பத்திரமாக அந்தக்கண்ணாடி அறைக்கும் பிள்ளைகளை விடுங்கள் என்றது ஆமை.

அந்தக்கண்ணாடி அறை இரண்டு சிறிய சுறாக்கள் நீந்தும் அளவுக்கு இடவசதியுடன் இருந்தது. தாழிட ஒரு கதவும் இருக்கிறது. எனவே இது குட்டிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நிம்மதியடைந்தன பெரிய சுறாக்கள்.

உள்ளே மகிழ்ச்சியுடன் நீந்திக் களித்தன சுட்டி சுறாக்கள். 

ஆமையாரே நாங்கள் இருவரும் இரை தேடிச் செல்கிறோம். நீங்கள் எங்கள் பிள்ளைகளை பத்திரமாக பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்று வேண்டியது.

நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் தைரியமாக கிளம்புங்கள் என்றது ஆமை.

இரண்டு பெரிய சுறாக்களும் இரை தேடச்சென்றன. அன்று கடலில் இரை கிடைப்பது பெரிய சாதனையாக இருந்தது. மிக நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந்தது. 

அதேநேரம் இங்கே கப்பலிந் அருகில் வசித்து வந்த கெட்டசுறா ஒரு திட்டம் தீட்டியது. புதிதாக வந்த இந்த குட்டி சுறாக்களை தின்றுவிட திட்டம் போட்டது. 



கப்பலின் அருகே சென்று சுறாக்களை தின்ன முயற்சித்தது. கண்ணாடி அறையினை முட்டிப் பார்த்தது. உறுதியான கண்ணாடி அறையினை அந்த கெட்ட சுறாவால் உடைக்க முடியவில்லை. உள்ளே இருந்த குட்டி சுறாக்கள் பயந்து அழுதன. சத்தம் கேட்டு வெளிய வந்த ஆமை கெட்ட சுறாவினைப் பார்த்து சொன்னது.

"இங்கே இருந்து சென்று விடு", இவை இரண்டும் எனது பாதுகாப்பில் உள்ளது. இவற்றைக் காக்கும் பொறுப்பும் உள்ளது என்னைத் தாண்டிதான் நீ செல்ல வேண்டும் முடிந்தால் செய்து பார் என்றது ஆமை.

கெட்ட சுறா பயங்கரமாக சிரித்தது, நீ பாதுகாப்பா? உனக்கே ஒரு கால் இல்லாம இங்கயே தங்கி இருக்க, இந்தக் கண்ணாடி அறை இல்லன்னா இந்நேரம் நான் இந்தக் குட்டிக்கள தின்னு ஏப்பம் விட்டுருப்பேன். என்றது

முடிஞ்சா செஞ்சி பார் என்றது ஆமை.

கோபம் வந்த கெட்ட சுறா, தூரத்திலிருந்து வேகமாக நீந்தி வந்து கண்ணாடி மீது மோதியது. ஆனால் கண்ணாடி உடையவில்லை. பதிலாக கெட்ட சுறாவின் மூக்குதான் உடைந்து ரத்தம் ஒழுகியது.

உள்ளே இருந்த குட்டி சுறாவும் ஆமையும் அதைப்பார்த்து சிரித்தன.

என்ன பாத்தா உங்களுக்கு சிரிப்பு வருதா, நான் போய் என் தலைவன கூட்டிட்டு வரேன். அவன் வந்த உடனே உங்க சிரிப்பு எங்க போகுது பாருங்க, அவன் வாலால உங்கள அடிச்சி தின்னுடுவான் என்று சொன்னவாறு அங்கிருந்து கிளம்பியது.

போய் யாரவேணாலும் கூட்டிட்டு வா என்று ஆமை நக்கலடித்தது.

இப்படி சொன்னாலும் ஆமைக்கு உள்ளுக்குள் கொஞ்சம் பயம் இருந்தது. இந்த கெட்ட சுறா யாரைக் கூட்டிக்கொண்டு வரும் என்று கணக்குப் போட்டது. கப்பலில் இருந்து கொஞ்ச தூரத்தில் ஒரு பெரிய நீலத்திமிங்கிலம் வசித்து வருகிறது ஒருவேளை அதைக் கூட்டி வந்தால் இந்தக்கப்பலையே புரட்டிப்போடும் பலம் அதற்கு உண்டு. நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்ன செய்யலாம் என யோசித்தது.



இது போர்க்கப்பல் இங்கே வெடிக்காத குண்டுகள் சில இருந்தது நினைவுக்கு வந்தது. கப்பலின் கீழ் அறைக்கு சென்று ஆமை பார்த்தது. அங்கே வெடிக்காத குண்டுகள் நிறைய இருந்தன.  ஆமையின் அளவின் உள்ள ஒரு குண்டை கஷ்டப்பட்டு நகர்த்தி வந்தது. அந்தக்  குண்டின் மேல் ஆமை போலவே படம் வரைந்தது. யாராவது அந்தக் குண்டைப் பார்த்தால் ஆமை என்றே நினைக்கும் அளவுக்கு அந்தக்குண்டு ஆமை வடிவத்தில் இருந்தது.

அந்த ஆமை குண்டை நகர்த்தி வந்து தான் அமரும் இடத்தில் வைத்துவிட்டு கண்ணாடி அறையின் பின்புறம் மறைந்துகொண்டது.

இங்கிருந்து கோபத்தோடு கிளம்பிச்சென்ற கெட்டசுறா நேராக திமிங்கிலத்திடம் சென்று முறையிட்டது. திமிங்கிலமும் பசியோடு இருந்தது. அதனிடம் எனக்கு சுவையான இரண்டு குட்டி சுறாக்கள் இருக்கும் இடம் தெரியும். அதை நான் உங்களுக்கு காட்டுகிறேன். ஆளுக்கு ஒன்றாக சாப்பிடலாம் என்று ஆசை காட்டியது. ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது என்று கொக்கி போட்டது.

என்ன சிக்கல் என்று திமிங்கிலம் கேட்டது.

அந்த குட்டி சுறாக்கள் இரண்டும் கண்ணாடி அறைக்குள் இருக்கிறது. என்னால் உடைக்க முடியவில்லை. நீங்கள் வந்தால் சுலபமாக உடைக்கலாம். அதுவுமில்லாமல் அங்கே கால் உடைந்த ஆமை பாதுகாப்புக்கு இருக்கிறது.

சரி அதற்கென்ன என்றது திமிங்கிலம்.

அந்த ஒரு கால் உடைந்த ஆமை என்னைப் பார்த்து சவால் விட்டது. அதை மீறி குட்டி சுறாவை தின்ன முடியாதாம். 

அப்படியா, அந்த ஆமையை அப்படியே விழுங்கிவிடுகிறேன். வா போகலாம் என்று புறப்பட்டது திமிங்கிலமும் கெட்ட சுறாவும்.

முன்னரே திட்டமிட்டபடி ஒளிந்திருந்த ஆமை. இவை இரண்டும் எதோ திட்டத்தோடு வருகிறது என்று புரிந்துகொண்டது. 

கப்பலின் அருகே வந்த திமிங்கிலத்திடம் "அங்கே ஒண்ணுந்தெரியாத மாதிரி உக்காந்திருக்கான் பார் அவன முதல்ல முழுங்கிடுங்க திமிங்கிலம் சார்" என்றது கெட்டசுறா.

நேராக ஆமை இருக்குமிடம் சென்று அதை ஒரே வாயில் முழுங்கியது திமிங்கிலம்.

என்னமோ சவால் விட்ட? உன் கத இதோட முடிஞ்சி போச்சு ஆமையாரே. இப்ப நாங்க ரெண்டு பேரும் ஆளுக்கொரு சுறாவ சாப்பிடப் போறோம். என்று நக்கலாக சொன்னது கெட்ட சுறா.

அந்த நொடியில் மறைந்திருந்த இடத்தில் இருந்து வெளியே வந்த ஆமை. "உன்னால் ஒருநாளும் என்னை வெல்ல முடியாது" என்றது

கெட்டசுறாவும், திமிங்கிலமும் விழித்தது. இவனத்தான் முழுங்கிட்டோமே எப்படி திரும்ப வந்தான் என இரண்டும் குழப்பமடைந்தது.

"ரொம்ப முழிக்காத, நீ முழுங்குனது என்னையில்ல, அணுகுண்டு முழுங்கியிருக்க, இவன மாதிரி கெட்ட சுறாவோட பழக்கம் வச்சிகிட்டா இதான் உனக்கு கதி என்றது ஆமை.

இதைக்கேட்ட திமிங்கிலம் பதறியது, அடப்பாவி சும்மா இருந்த என்னைக் கூட்டி வந்து இவ்வளவு பெரிய ஆபத்துல சிக்க வச்சிட்டியே என்று கதறிய திமிங்கிலம் பக்கத்தில் இருந்த கெட்ட சுறாவை லபக்கென முழுங்கி அங்கிருந்து ஓடியது.

கொஞ்ச தூரம் சென்றவுடன் திமிங்கிலத்தின் வயிற்றில் இருந்த குண்டு வெடித்தது. கடலே அதிர்ந்துபோகும் அளவுக்கு பயங்கர சத்தம். நீல நிறக்கடல் செந்நிறமாக மாறியது. உள்ளே இருந்த கெட்டசுறாவும் வெடித்து செத்தது.

கண்ணாடி அறையில் இருந்த குட்டி சுறாக்கள் பயந்து நடுங்கின. யாரும் பயப்பட வேணாம். இனிமேல் நமக்கு ஆபத்தில்ல என்றது ஆமை.

அந்த நேரம் இரை தேடிச்சென்ற பெரிய சுறாக்கள் திரும்பி வந்தன. அங்கே எல்லாமே சிவப்புற நிறத்தில் இருந்தததும் குட்டிகளுக்கு எதோ ஆபத்து போல என்று நினைத்து அழுதுகொண்டே ஓடி வந்தன். ஆனால் அங்கே குட்டிகள் பாதுகாப்பாக இருப்பதைக்கண்டு நிம்மதியடைந்தன.

என்ன ஆச்சு ஆமையாரே? ஏன் இவ்வளவு ரத்தம்?

நடந்த கதையை சொன்னது ஆமை. 

சுறாக்கள் இரண்டும் ஆமையைக் கட்டிப்பிடித்து நன்றி சொன்னது. எங்கள் வாழ்நாள் பூராவும் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம் என்றது.

என்னுடைய கடமை. அதைத்தான் நான் செய்தேன். குட்டிகள் எல்லோரும் பசியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு கொடுங்கள் என்றது ஆமை.

போதுமான அளவு உணவு உள்ளது, வாருங்கள் ஆமையாரே நாம் அனைவரும் பகிர்ந்து உண்ணுவோம் என்றது பெரிய சுறாக்கள்.

கண்ணாடி அறைக்குள் சென்று அவர்கள் அனைவரும் பசி தீர உண்டனர்.

நீண்ட காலம் ஆமையும் சுறாக்களும் நட்போடும், மகிழ்ச்சியோடும் அந்த கப்பலில் வாழ்ந்தனர்.


Monday, October 10, 2022

கரடியின் கருணையும் எலியின் கைமாறும்.

தினமும் இல்லையென்றாலும் அவ்வப்போது பிள்ளைகளுக்கு கதைகள் சொல்வது வழக்கம். என்ன கதை சொல்லவேண்டும் என்று அவர்களிடமே கேட்பேன். யானை, பூனை, காக்கா, ஸ்பைடர் மேன், ஸ்னோ மேன், கரடி, என எதையாவது சொல்வார்கள். அந்த வார்த்தையில் ஆரம்பித்து அப்படியே வாய்க்கு வந்ததை சொல்லி முடிக்கும்போது தூங்கியிருப்பார்களா என்றால் இல்லை, அதற்குப் பிறகு கேள்வி பதில் பகுதிக்கு செல்வார்கள். ஓய்ந்து விடும். பல நாட்களில் பெரியவன் கேட்பான், நீ சொல்ற கதையெல்லாம் எங்க படிச்ச? அது தானாக அவிழ்வதுதான் என்ன கதை வேண்டும் என நீங்கள்தானே முடிவு செய்கிறீர்கள், அந்த நொடியிலிருந்துதான் கதைகளை உருவாக்குகிறேன் என்பேன். 


அது எப்படிப்பா சுவாரசியமா சொல்ற, உன்னோட கதைய அப்படியே எங்க க்ளாஸ்ல நான் சொல்லுவேன். நல்லா கத சொல்ற நீன்னு மேடம் சொல்வாங்க என்றான். எனக்கே கூட இந்த ஆச்சரியம் அவ்வப்போது ஏற்படுவதுண்டு. எல்லா கதைகளிலும் நட்பை, பாசத்தை, நன்றியை, சகோதரத்துவத்தை மையமாக வைத்து சொல்வதுதான். குழந்தைகளுக்கு அதுதானே தேவை.  எதோ ஒரு சொல்லில் இருந்து கதையை ஆரம்பித்து அதை முடிக்கும்போது ஒரு திருப்தி ஏற்படுவதை உணர்ந்திருக்கிறேன். இதையெல்லாம் மறக்காம இருக்க சொல்லும்போதே எழுதி வச்சிக்கப்பா, பின்னாடி யூஸ் ஆகும் என்பான்.

வேண்டுமளவு குழந்தை எழுத்தாளர்கள் நிறைய உண்டு என்றாலும் ஒவ்வொரு வீட்டிலும் கதைக்கு சாத்தியப்படுவதில்லைதானே. அதனால் அன்றன்று சொல்லும் கதைகளை இங்கே எழுதி வைக்கலாம் என்று ஒரு யோசனை தோன்றியது. 


கரடியின் கருணையும் எலியின் கைமாறும்.



அது ஒரு பெரிய காடு. அந்தக்காட்டுல ஒரு எலிக்குடும்பம் வாழ்ந்து வந்துச்சு. எலி வளையானாலும் தனி வளை வேணும்னு பழமொழி இருக்கு. அதுமாதிரி அந்த எலிக்குடும்பத்துக்குன்னு ஒரு வளை இருந்துச்சு. வளைன்னா வீடுன்னு புரிஞ்சிக்கணும். அது எப்படி இருக்கும்னா நிலத்துல சின்னதா ஒரு ஓட்டை போட்டு எலி மட்டும் போய் வரமாதிரி இருக்கும். அதைத்தான் வளைன்னு சொல்வாங்க, அந்த வளை உள்ள போகப்போக பெரிதாவும் இருக்கும் சின்னதாவும் இருக்கும் இல்லன்னா அந்த வளையில இருந்து இன்னொரு வளைக்கு தொடர்ச்சியா போகலாம். 

அந்த பழமொழிக்கு என்ன அர்த்தம்பா?

சிறிய வீடாக இருந்தாலும் சொந்தத்துல ஒரு வீடு இருக்கணும், நமக்குன்னு ஒரு இடம். அதான் அதுக்கு அர்த்தம். 

அந்த எலிக்குடும்பத்துல மொத்தம் ஆறு பேர். அம்மா எலி, அப்பா எலி, நாலு குட்டி எலி. அவங்க எல்லாரும் அந்த வளைல ரொம்ப சந்தோஷமா வாழ்ந்துட்டு இருந்தாங்க. போதுமான அளவுக்கு அவங்களுக்கு உணவு தாராளமாவே கிடைச்சது. பாம்புகள் இல்லாத இடத்துல வளை இருந்ததால அவங்க ரொம்ப பாதுகாப்பாவே இருந்தாங்க. 

ஒருநாள் திடீர்னு அந்தக் காட்டுல அடை மழை பேய்ஞ்சது. மழைன்னா அப்படி ஒரு மழை எதிர்ல யாரு என்னன்னு கண்ணு தெரியாத அளவுக்கு மழை அடிச்சு ஊத்துது. குளம், குட்டை, ஆறு எல்லாமே நிரம்பி வழியிது. அந்த எலிக்குடும்பத்தால வெளில போகமுடியல. அதனால குட்டி எலிகளுக்கு உணவு இல்லாம பசியோட இருந்தாங்க. மழை விட்ட வெளில போய் அப்பா எலி எதாவது உணவு கொண்டு வருவார். ஆனா மழை விடவேல்ல, ரெண்டு மூணு நாளாகவே தொடர்ந்து பேய்மழை பேய்ஞ்சது.

அப்பா எலிக்கு ஒரே வருத்தம். இப்படியே மழை பேய்ஞ்சதுன்னா இந்த வளை மூழ்கிடும். இதவிட இன்னும் மேடான பகுதிக்கு போனாதான் பிழைக்க முடியும்னு அதுக்கு தோணுது. மெதுவா வளைய விட்டு வெளில வந்து பாக்குது. அப்போ அதுக்கு பயங்கர அதிர்ச்சி. மழை விடல அதுபாட்டுக்கும் பேய்ஞ்சிட்டே இருக்கு. வளைக்கு பக்கத்துல சிறிய ஆறுபோல பெருக்கெடுத்து ஓடுது மழைநீர். இப்படியே போச்சுன்னா வளைக்குள்ள தண்ணி வந்துடும். நாம் சீக்கிரமா இங்கிருந்து தப்பிக்கணும்னு அப்பா எலி முடிவு பண்ணுது. 

உடமே அம்மா எலிகிட்ட வந்து சொல்லுது அப்பா எலி. இன்னும் கொஞ்ச நேரத்துல வளைக்குள்ள தண்ணி வந்துடும், அதுக்குள்ள நாம கிளம்பணும்னு சொல்லும்போதே லேசா வளைக்குள்ள தண்ணி வர ஆரம்பிக்குது. நேரமில்ல என்னோட வாலை நீ பிடிச்சிக்க, உன்னோட வாலை பிள்ளைங்க ஒவ்வொண்ணா பிடிச்சிக்குங்க எக்காரணத்தைக்கொண்டும் பிடிய விடாதிங்க, நல்லா இறுக்கமா பிடிச்சிக்குங்க. எதிர்ல வேகமா தண்ணி வரும். தைரியமா என் பின்னாடி வாங்க எறும்புக்கூட்டம் வரிசையா போறத பாத்திருக்கிங்க இல்லையா அதுபோல தொடர்ந்து வரணும் சரியா என்று சொன்னபடி எலி வளைக்கு வெளியே செல்ல ஆரம்பித்தார். நீரின் வேகம் அதிரிகரித்திருந்தது. பெரிய போராட்டத்திற்குப் பிறகு வளையை விட்டு வெளியே வந்தார்கள்.

அப்போதும் மழை பெய்து கொண்டிருந்தது. அப்பா எலி எங்கு போவதென்றே தெரியாமல் முழித்தது. குட்டி எலிகளுக்கு மழையில் நனைந்து குளிரில் நடுக்கமெடுத்தது. எப்படி பிழைத்து பிள்ளைகளை காப்பாற்றுவது என்று திகைத்தபோது திடீரென அருகில் இருக்கும் குன்றும் அதற்குள்ளே இருக்கும் சிறிய குகையும் நினைவுக்கு வந்தது. அங்கே ஒரு பெரிய கரடி அண்ணன் வாழ்ந்து வருகிறார். சரி அங்கே போனால்தான் தப்பிக்க முடியும். உதவி கேட்போம் என முடிவு செய்தது. 

மறுபடி எறும்பு ஊர்வதுபோல ஒருவர் பின் ஒருவராக கடினமான பாதையில் ஏறி குன்றை அடைந்தார்கள்.

அங்கே கரடியண்ணம் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார்.



மழை மேல் படாதவாறு அம்மா எலியும் குட்டி எலிகளும் ஒதுங்க வைத்துவிட்டு அப்பா எலி மட்டும் பயத்தோட கரடியண்ணன் அருகில் சென்று அண்ணே, அண்ணே என்று கூப்பிட்டது.

யார்ரா இந்த நேரத்துல என்னை எழுப்பறது என்று கோபத்துடன் எழுந்தது கரடி.

யார்ரா நீ என்றது கரடி

அண்ணே நாந்தான் எலி. இங்க பக்கத்துலதான் குடியிருக்கேன். மழை பேய்ஞ்சு வளைக்குள்ள தண்ணி வந்துடுச்சு எப்படியோ பொழச்சு மேல வந்துட்டேன். 

அதுக்கு என்ன இப்போ என்று கொட்டாவி விட்டபடி கேட்டது கரடி.

இந்த மழ விடறமட்டும் நானும் என் குடும்பமும் இந்த குகையில தங்கிக்கறம்ணே. கொஞ்சம் உதவி பண்ணுங்க அண்ணே என்றது.

அதெல்லாம் முடியாது. நீயும் உன் குடும்பமும் குட்டி எலிங்கணும் நாள் பூரா கிரீச், க்ரீச்னு கத்திட்டே இருப்பிங்க பெரிய தொந்தரவா இருக்கும். என்னால நிம்மதியா தூங்கவே முடியாது. வேற எடம் பாத்துக்க ராசா என்றது கரடி.

அண்ணே உங்க தூக்கத்துக்கு ஒரு தொந்தரவு வராது. ஒரு சின்ன சத்தம் கூட வராம நான் பாத்துக்கறண்ணே. சின்ன சத்தம் வந்தாலும் எங்கள தொரத்திடுங்க. கடவுள் மாதிரி உங்கள நம்பி வந்திருக்கேன். என்னையும் என் குடும்பத்தையும் காப்பாத்துங்கண்ணே நல்லாருப்பிங்க நீங்க என்றது அப்பா எலி.

உன்ன பாத்தாலும் பாவமாதான் இருக்கு. இந்த மழையும் இப்ப நிக்கிற மாதிரி தெரியல, குட்டி எலிங்களுக்காக உனக்கு உதவி பண்றேன். ஆனா என் தூக்கத்துக்கு எதாவது தொந்திரவுன்னு எல்லாரையும் அப்படியே நசுக்கிருவேன், புரிஞ்சுதா? என்றது கரடி.

ஒரு சத்தம் கூட வராது. எங்கள நம்பி இடம் கொடுங்கண்ணே என்றது எலி.

சரி, நேரா போய் இடதுபக்கம் திரும்புனா சின்னதா ஒரு இடம் இருக்கும். அங்க தங்கிக்குங்க, ஆனா மழை விட்டதும் ஓடிரணும், சரியா?

சத்தியமா மழை விட்டதும் போயிடறோம் அண்ணே என்றது எலி.

சரி போய் குட்டிங்கள கூட்டிட்டு உள்ள போ...

ரொம்ப நன்றிங்க கரடி அண்ணே.

ம்ம் இருக்கட்டும்.

அப்பா எலி மெதுவான குரலில் "எல்லாரும் என் பின்னாடி வாங்க, சத்தம் போடாம" என்றது.

எல்லோரும் போய் உள்ளே அமர்ந்தன. கரடி அண்ணன் பெரிய மனசு வச்சு நம்மளுக்கு இடம் குடுத்துருக்காரு. அவரு தூக்கத்த கெடுக்கற மாதிரி சின்ன சத்தம் கூட வரக்கூடாது புரிஞ்சுதா குட்டிங்களா.

புரிஞ்சது அப்பா என்றது நான்கு குட்டி எலிகளும்.

கொஞ்ச நேரம் கழித்து குட்டிகளுக்கு குளிரில் உடல் நடுங்கியது. மெதுவாக அம்மா எலி அப்பா எலியிடம் சொன்னது. பிள்ளைங்க குளிர்ல நடுங்கறாங்க பாருங்க. ராத்திரி முழுக்க இப்படியே நடுங்கினா பிழைக்க மாட்டாங்க எதாச்சும் பண்ணுங்க என்றது.

என்ன பண்ணலாம் என்றது அப்பா எலி.

கொஞ்சம் நெருப்பு மூட்டினா கதகதன்னு இருக்கும் என்றது அம்மா எலி. கரடி அண்ணங்கிட்ட கேட்டுப் பாருங்க.

சரி கேட்டுப்பாக்கறேன். 

மெதுவான குரலில் கரடி அண்ணனின் நெருப்பு கொஞ்சம் பத்த வச்சிக்கறேன் அண்ணே, பிள்ளைங்க குளிர்ல நடுங்குது என்றது.

அய்யய்யோ நெருப்பா, நெருப்பு எனக்கு ஆகாது. அதுமட்டும் வேணாம் என்றது கரடி.

பிள்ளைங்களுக்காக கேக்கறேன். என கெஞ்சியது அப்பா எலி.

சரி சரி, போய்த்தொலை, ஆனா பெரிய  நெருப்பு வச்சிராத, கொஞ்சமா வைக்கணும். புரிஞ்சுதா?

சரிங்கண்ணே

சரி, போய் சமையலறைல தீப்பெட்டி இருக்கும். கொஞ்சமா விறகு எடுத்து யூஸ் பண்ணனும்.

சரிங்கண்ணே. ரொம்ப நன்றி அண்ணே என்று சமையலறை பக்கம் ஓடியது எலி.

டேய் எலி, நில்லு, எல்லாரும் சாப்டிங்களா?  

சாப்டு ரெண்டு நாளாச்சிண்ணே, என்று கண்கலங்கியது அப்பா எலி.

அங்க கிச்சன்ல ஒரு சாலமன் மீன் இருக்கு. நேத்துதான் ஆத்துல பிடிச்சிட்டு வந்தேன். அதுல ஒண்ணே ஒன்னு மிச்சம் இருக்கு. அத எடுத்து நெருப்புல காட்டி சாப்புடுங்க, நீயே தின்னுடாத பிள்ளைங்களுக்கும் குடு.



எவ்வளவு நல்ல மனசுண்ணே உங்களுக்கு. என்று நெகிழ்ந்து போனது அப்பா எலி.

தீப்பெட்டியும் விறகும் எடுத்து வந்து நெருப்பு மூட்டி எல்லா எலிகளும் நெருப்பு முன் அமர்ந்தன. உடம்பிலிருந்து குளிர் மெல்ல விலகி சுறுசுறுப்பானது எலிகள். குட்டி எலிகள் எல்லாம் சேர்ந்து "பசிக்கிறது அப்பா" என்றன.

சமையலறை போய் சால்மன் மீனை எடுத்து வந்து அதே நெருப்பில் காட்டி அந்த எலிக்குடும்பமே சேர்ந்து உண்டது.

உணவு உள்ளே போனதும் சிறிது நேரத்தில் தூக்கம் வந்து அனைவரும் தூங்கிவிட்டனர்.

காலையில் எழுந்து பார்த்தபோது மழை விட்டிருந்தது. சூரியன் உதித்து தரையெல்லாம் காயத்தொடங்கியது. காட்டில் இருள் அகன்று வெளிச்சம் வந்திருந்தது. 

அப்பா எலி எல்லாரையும் எழுப்பிவிட்டு வெளியில் கூட்டிக்கொண்டு வந்தது.

கரடி அண்ணன் தூங்கிக்கொண்டிருந்தார். தூக்கத்தை கெடுக்காம போயிடலாமா என்றது அப்பா எலி. 

அது எப்படிங்க சொல்லாம போக முடியும், நமக்கு மிகப்பெரிய உதவி செஞ்சிருக்கார். சொல்லாம போனா மரியாதையா இருக்காது. எழுப்பி நன்றி சொல்லுங்க. அப்படியே அவருக்கு எதாவது நம்மளால உதவ முடியுமானு கேட்டு பாருங்க என்றது அம்மா எலி.

மெதுவாக சென்று கரடி மூக்கில் சுறண்டியது அப்பா எலி.

தூக்கத்திலிருந்து விழித்த கரடி கொட்டாவி விட்டது. விடிஞ்சிருச்சா? 

ஆமாங்கண்ணே, வெயில் விழ ஆரம்பிச்சிடுச்சி அப்படியே நாங்க கிளம்பறோம். நீங்க உதவி பண்ணலன்னா இந்த குடும்பமே இப்போ இல்ல. உயிர் உள்ளவரை நன்றியா இருப்போம் கரடி அண்ணே என்றது அப்பா எலி.

சரி, சரி போய்ட்டு வா, நல்ல மேடான இடமா பாத்து வளைய தோண்டனும் அப்பதான் மழை உள்ள வராம பாதுகாப்பா இருக்க முடியும் சரியா என்றது கரடி.

ரொம்ப நன்றி கரடி அண்ணே! உங்களுக்கு எதாவது உதவி செய்யணும்னு எனக்கு தோணுது. எங்களால உங்களுக்கு ஆக வேண்டியது எதாவது இருந்தா சொல்லுங்க அண்ணே என்றது அப்பா எலி.

கொஞ்ச நேரம் யோசித்தது கரடி. உன்னால அது முடியாது. நீ உன் வழிய பாத்துப் போ என்றது கரடி.

அப்படிலாம் சொல்லாதிங்கண்ணே, என்ன உதவின்னு சொல்லுங்க எங்களால முடியுமான்னு பாக்கறோம் என்றது.

அது ஒண்ணும் இல்லடா எலிப்பயலே, எனக்கு தேன் சாப்பிடணும் போல இருக்கு. தூரமா ஒரு மரத்துல பாத்தேன். நல்ல பெரிய தேன்கூடு. ஆனா ரொம்ப ரொம்ப உயரத்துல இருக்கு. உன்னால அவ்ளோ உயரம் போக முடியாது.

அட... எவ்வளவு பெரிய மரமா இருந்தாலும் நான் ஏறிடுவேன். எங்கள கூட்டிட்டு போங்கணே நான் தேன் எடுத்து தரேன் என்றது கரடி

அப்படியா சொல்ற?.. சரி வா போகலாம். என்றது கரடி.

மகிழ்ச்சியுடன் கரடி பின்னால் சென்றன எலிகள். வழியெல்லாம் சேரும் சகதியுமாக இருந்தது. எலிகள் சிரமப்பட்டன. வழியில் ஒரு காட்டாறு ஓடியது. ஆற்றை கடந்தால் அந்தப்பக்கம் இருக்கிறது மரம்.

இந்த தண்ணில இறங்கினா அடிச்சிகிட்டு போயிடுவிங்க, என்னோட முதுகுல ஏரி கெட்டியா முடிய புடிச்சிக்குங்க, பிடிய விடக்கூடாது. விட்டேன்னா ஆத்தோட போயிடுவிங்க என்றது கரடி.

எலிகள் முதுகில் ஏறிக்கொண்டன. குட்டி எலிகளுக்கு கொண்டாட்டமாக இருந்தது. கரடியின் முதுகில் பஞ்சு மெத்தை போல முடிகள் இருந்தது. நன்றாக இறுக்கிப்பிடித்துக்கொண்டன.

ஆற்றைக்கடந்தது ஒவ்வொன்றாக குதித்து நடக்க ஆரம்பித்தன. சிறிது தூரத்தில் அந்தப் பெரிய மரத்தைக்கண்டனர்.

அவ்வளவு பெரிய மரத்தை வாழ்நாளில் கண்டதில்லை எலிகள். வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருந்தன.

பாத்தியா, இதுல ஏற முடியுமா உன்னால? மேலருந்து விழுந்தின்னா சட்னி ஆயிடுவ, முடிஞ்சா பாரு இல்லன்னா ஏற வேணாம் என்றது கரடி.

உங்களுக்காக கண்டிப்பா ஏறிடுவேன். இன்னும் கொஞ்ச நேரத்துல பாருங்க உங்க கைல தேனடை இருக்கும் என்றது அப்பா எலி.

மரத்தில் ஏற ஆயத்தமானது எலி.

டேய் எலி, நில்லு. இப்படியே போனா தேனீக்கள் உன்ன கடிச்சிடும். இந்தா நெருப்பட்டி. நெருப்ப காட்டினா தேனி பறந்துடும் அப்புறமா உன்னோட பெரிய பல்ல கத்திரிக்கோல் மாதிரி யூஸ் பண்ணி அறுக்கனும். அப்படி பண்ணா அது கீழ விழும். அப்படியே நான் பிடிச்சிக்கறேன். புரிஞ்சுதா என்றது கரடி.

நல்லவேல இப்பவே சொன்னிங்க. மேல போயிருந்தன்னா அப்படியே மேல போயிருப்பேன் என்றபடி தீப்பெட்டியை வாங்கிக்கொண்டு மேல ஏற ஆரம்பித்தது.

ஏற ஏற உயரம் கூடிக்கொண்டே போனது. கையெல்லாம் வலியெடுத்தது. பெரிய பெரிய எறும்புகள் தொல்லை செய்தது. அங்கங்கே ஓய்வெடுத்து ஒருவழியாக தேனடை அருகே சென்றது. ஒரு கிளைய ஒடித்து அதிலே தீ வைத்து தேனடை பக்கம் காட்டியதும் தேனீக்கள் பறந்து ஓடின.

தன் கூரிய பற்களால் ஒரு பக்கமிருந்து மறுபக்கமாக கடித்துக்கொண்டே சென்றது. பாதி தூரத்திலேயே பாரம் தாங்காமல் தேனடையின் ஒரு பகுதி கீழே விழுந்தது.

கரடி சரியாக மண்ணில் படாமல் அதை பிடித்து சாப்பிட ஆரம்பித்தது. குட்டி எலிகளும் தேனை நக்கிப்பார்த்தன. புதுசுவையாக இருந்ததால் தேனை விரும்பி சாப்பிட்டன குட்டி எலிகள்.

கரடிக்கு வயிறு நிறைந்தது. மேலே அண்ணாந்து பார்த்தது. மரத்தில் இன்னும் கொஞ்சம் தேன் இருந்தது.

டேய் எலிப்பயலே, அதையும் கடிச்சி கீழ போடு என்று கத்தியது.

கரடியண்ணே, நாம எல்லாத்தையும் சாப்பிட்டா பாவம் தேனீக்கள் திரும்ப வந்து பாத்து ஏமாந்து போயிடும். பாவம்ணே, இன்னொரு நாள் வந்து சாப்பிடலாம். என்றது அப்பா எலி.

நீ சொல்றதும் சரிதான். கீழ இறங்கி வா என்றது.

ஏறுவதை விட இறங்குவது சுலபமாக இருந்ததால் எலி சீக்கிரமே கீழே வந்து விட்டது.

ரொம்ப மகிழ்ச்சிடா எலி. இவ்வளவு ருசியான தேனை சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு. நல்ல தேன் சாப்பிட்டா அருமையான தூக்கம் வரும்னு சொல்வாங்க. எனக்கு இப்ப நல்ல தூக்கம் வருது. இந்த மரத்துக்கு அடியிலயே தூங்க போறேன். நீங்களும் தூங்கி ஓய்வெடுங்க என்றது.



உங்களுக்கு உதவி செஞ்சதுல ரொம்ப மகிழ்ச்சி அண்ணே என்றது அப்பா எலி.

சரி, நீங்க எல்லாரும் என்கூடவே வந்து தங்கிடுங்க, அதான் குட்டிகளுக்கு பாதுகாப்பு. பாம்பு தொல்லை இருக்காது. மழைநீர் உள்ள வராது, பத்திரமா இருக்கலாம் என்றது.

எலிக்குடும்பம் மகிழ்ச்சியுடன் சம்மதித்தன. கரடியும் எலிக்குடும்பமும் அந்தக்குகையில் நீண்ட நாட்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தன.



Saturday, March 07, 2020

திரௌபதிம்

முகநூலில் நேற்று ஒரு நிலைத்தகவல் இட்டிருந்தேன்.

//ஒரு கருத்தை ஏற்பதா? எதிர்ப்பதா? என்று குழப்பம் வரும் போது பார்ப்பனீயம் எதை ஆதரிக்கிறது என்று பார்!
யோசிக்காமல் அதை எதிர்த்து நில்!
-பெரியார்//

இதற்கு என்ன அர்த்தம்? நமக்குள்ள நடக்கும் பிரச்சினைகளை நீங்கள் எதற்கு முகநூலில் எழுதுகிறீர்கள் என்றொரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

எனக்கு பகீர் என்றது. நான் நிறைய சந்தர்ப்பங்களில் பெரியார் குறித்தும் இலக்கியம் குறித்தும் என் மனைவியுடன் பேசுவதுண்டு. பெரிய கொட்டாவி ஒன்றை விட்டு "அதுக்கென்ன இப்ப" என்பது போல பார்ப்பார். இத்தனைக்கும் வீட்டில் நானூறு புத்தகங்களுக்கு மேல் இருக்கிறது. ஓய்வான சமயங்களில் நான் எடுத்துப் பிரித்துப் படிக்க ஆரம்பிக்கும்போதுதான் வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளின் நீளமான பட்டியல் ஒன்றை வாசிப்பார். நான் புத்தகங்களை மூடிவிட்டுக் கிளம்ப வேண்டியதுதான்.

விஷயத்துக்கு வருவோம். இந்த நிலைத்தகவலில் பொதுவான ஒரு விஷயத்தைத் தான் சொல்லியிருக்கிறேன். அது பெரியார் சொன்ன ஒரு கருத்து. அதில் எங்கே நம் பிரச்சினை இருக்கிறது என்றேன்?

அதுசரி, நீங்க சொல்ற மாதிரியே இருக்கட்டும். அதை ஏன் இப்போ எழுதணும்?

அதைச் சொல்றதுக்கு முன்னாடி பெரியார் பற்றியும், திராவிடர் கழகம், பற்றியும், பகுத்தறிவு, பெண்ணுரிமை, சாதியொழிப்பு பற்றியெல்லாம் விளக்கிச் சொல்ல வேண்டியிருக்கும். அப்படிப் பேச ஆரம்பித்தால் இரவு சோறு நிச்சயம் கிடைக்காது. அதைப் பற்றிப் பேசப்போவதுமில்லை. ஆனால் அந்த நிலைத்தகவல் என்னை இந்த இக்கட்டில் கொண்டு வந்துவிடும் என எழுதியபோது எண்ணவில்லை. 

இப்போது ஒரு கருத்து சமூகத்தில் நடக்குதென்று வைத்துக்கொள்வோம். அது நம் சமூகத்திற்கும், மக்களுக்கும் ஏற்புடையதா? இல்லையா என்றொரு குழப்பம் வரும்போது பார்ப்பனீயம் அதை ஆதரித்தால் அதை எதிர்த்து நில்
அப்படின்னு பெரியார் சொல்லியிருக்கார் என்றேன்.

பார்ப்பனீயம்னா என்ன? 

எனக்கு நெஞ்சு வலித்தது. சமூகமே ஒரு பிரச்சினையில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும்போது இவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாது மகிழ்ச்சியில் இருப்பது எனக்கு பெரும் துயரைத் தந்தது.

நான் பேச ஆரம்பிக்கும் நேரம் வந்துவிட்டது என தொண்டையைச் செருமிக் கொண்டு இப்போ திரௌபதி என்றொரு படம் வந்திருக்கிறது. அதன் போஸ்டரில் "ஜாதிகள் உள்ளதடி பாப்பா" என்று டேக்லைன் போட்டு போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். படமும் வெளிவந்து வசூலில் வெற்றிபெற்று ஓடிக்கொண்டிருக்கிறது இது நல்ல படமா நஞ்சை விதைக்கும் படமா என்று எல்லோரும் விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் என் முடிவைப் பற்றி ரெண்டு வரி எழுதியிருக்கிறேன் அதுதான் அந்த நிலைத்தகவல்?

மலையாளப்படமா?

இல்லை, தமிழ்ப்படம்தான். 

இதுல விவாதிப்பதற்கு என்ன இருக்கு?

பார்ப்பனீயம் இதுல எங்க வந்துச்சு?

பாரதிய ஜனதா, இந்து முண்ணனி போன்ற அமைப்புகள்ல இருக்கிற சிலர் இந்தப்படத்துக்கு ஆதரவு தெரிவிச்சிருக்காங்க.  இந்த கட்சிகள் எல்லாம் பிராமணக் கொள்கைகள் உடையவை, பிராமணியம் தீண்டாமையை ஆதரிக்கும் கட்சி. பாமக, வன்னியர் பேரவை, முக்குலத்தோர், சோழர் படை, என எல்லா ஜாதி சங்கங்களும் இந்தப்படத்தை மக்களுக்கு இலவசமா டிக்கெட் எடுத்து தரோம்னு கூட அறிவிச்சிருக்காங்க.  தீண்டாமைய ஒழிக்கணும்னு தமிழ்நாட்டுல எவ்வளவு போராட்டாங்கள் நடந்து இப்ப இருக்கிற நிலையை அடைஞ்சிருக்கோம். இப்பவும் எல்லாமும் ஒழிஞ்சதா சொல்ல முடியாது ஆனா மத்த மாநிலங்கள்ல இருக்கறதை விட ஜாதிப்பிரச்சினை இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறைகள் குறைவான மாநிலம். இப்படி இருக்கற நேரத்துல மறுபடி இருபது, முப்பது ஆண்டுகளுக்கு பின்னாடி இழுத்துட்டுப்போற பிற்போக்கு கலாச்சாரத்தை எதிர்க்க வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் இருக்கு.

இந்த மாதிரி பார்ப்பனீய கொள்கைகள் உடைய கட்சிகள் ஆதரவு இந்தப்படத்துக்கு இருக்கிறது. எதோவொரு ஆதாயத்துக்கு அவங்க ஆதரிக்கறாங்க என்ற ஒரு காரணமே போதும் இப்படத்தை எதிர்க்கறதுக்கு. அதனால அந்த நிலைத்தகவல் இட்டேன்.

எவனோ என்னமோ படம் எடுத்துட்டுப் போறான் உனக்கென்ன?

இந்தப் படம் வெற்றி பெற்றால் இதைப்போல இன்னும் பத்து படம் வரும். எல்லாத்தையும் நாடக காதல்னு சொல்லி கடைசில காதலித்தாலே குற்றம்னு கொண்டுவந்து தாலிபான் ஆட்சியைக் கொண்டு வருவார்கள். இதெல்லாம் எதிர்க்கணும் இல்லியா?

ஆமா... இப்படி ஒரு படம் வந்ததே யாருக்கும் தெரியல. நீ சொல்லிதான் எனக்கே தெரியும். எல்லாரும் இப்படி பேசி பேசிதான் சின்ன விஷயத்தைப் பெருசா ஆக்கறிங்க. 

அதிலும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கிறது. 

Friday, March 06, 2020

பக்தி மார்க்கம் - அஷ்வகோஷ்

எழுத்தாளர் ராஜேந்திர சோழன் என்கிற அஷ்வகோஷ் அவர்களின் சில சிறுகதைகள் அந்த மொழிநடைக்காக பெரும் வாசகர்களைக் கவர்ந்திருக்கிறது. பெரும்பாலான வாசகர்கள் அவரின் புற்றில் உறையும் பாம்புகள், தனபாக்கியத்தோட ரவ நேரம், தற்செயல், சிதைவுகள் என குறிப்பிட்ட சில கதைகளையே சிலாகித்துப் பேசிக்கொண்டிருப்பார்கள். உண்மையில் அவருடைய சிறுகதைகளில் எல்லாமே எல்லா நேரத்திலும் வாசிக்கக் கூடியவையாக இருப்பது பேரதிசயம்.  அவர் கதைகளின் அடிப்படை பலமே அதன் எளிமைதான். எந்த விதமான ஜோடனைகளும் இன்றி
பூச்சுகள் இன்றி சராசரி மனிதர்களின் உரையாடல் இருக்கும். பாலியல் கதைகள் எழுதியிருக்கிறார் ஆனால் பாலியல் சொல்லாடல் ஒன்று கூட இருக்காது. பெரும்பாலான கதைகள் உரையாடல் வழிதான். எளிய நடுத்தர வர்க்கம், கிராமப்புற விவசாய சனங்கள் சந்திக்கக் கூடிய பிரச்சினைகள்தான் அவரின் கதைகள் பேசும். 

எனக்கு ஒவ்வொருமுறை எதை வாசிப்பது என்ற குழப்பம் ஏற்படும்போதெல்லாம் அஷ்வகோஷ் சிறுகதைத் தொகுப்பு நூலை எடுத்து எதாவது ஒரு பக்கத்தில் பிரித்து அக்கதையை வாசிப்பதை வழக்கமாக வைத்திருப்பேன். அதை ஏற்கனவே வாசித்திருந்தால் கூட மறுபடி வாசிக்கும்போது வேறொரு கோணத்தில் கதை வெளிப்படுவதை உணர்ந்திருக்கிறேன்.

அப்படி ஒரு கதையை நேற்று வாசித்து இரவு முழுக்கச் சிரித்துக்கொண்டிருந்தேன். அவ்வப்போது நினைத்துச் சிரிக்கும் அளவுக்கு அதில் ஓர் வரியை ஒளித்து வைத்திருந்தார். அதை நேற்றைய மீள் வாசிப்பில் கண்டுகொண்டேன்.

கதையின் பெயர் "பக்தி மார்க்கம்". பெயரைப் பார்த்ததும் ஆன்மீகக் கதை என்று நினைக்க வேண்டாம். கட்சிக்கதை. ஒரு கட்சியின் வட்டப்பேரவைக் கூட்டத்தில் கட்சியின் புதிய நிலைப்பாட்டை விவரிக்கும் நிகழ்வும் அதைத்தொடர்ந்து கட்சியின் நிலைப்பாட்டின் மீது தனக்கிருக்கும் சந்தேகத்தை ஒரு தோழர் எழுப்புகிறார். அந்த எளிய கேள்வியின் வழியாக நடக்கும் உரையாடலில் கடைசி வரை கேள்வி எழுப்பிய தோழருக்கு விடையே கிடைக்காது. மாறாக கேள்வி கேட்டவரையே குழப்பி கட்சியின் நிலைப்பாட்டுக்கு அவரை சம்மதிக்க வைத்துவிடுவார்கள்.

அந்தக்கதை இப்படி ஆரம்பிக்கும்.

"ஆகவே தோழர்களே இன்றைய காலகட்டத்தில், இப்போதுள்ள யதார்த்த நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாகப் பரிசீலனை செய்து, ஐந்தும் ஐந்தும் ஒன்பது என்ற, சரியானம் தெளிவான அரசியல் நிலைப்பாட்டிற்கு நமது கட்சி வந்துள்ளது, ஆகவே வரக்கூடிய காலகட்டங்களில் நடைபெற இருக்கிற... தேர்தலில்""

இப்படி ஆரம்பிக்கும் கதையில் ஒரு தோழருக்கு ஐந்தும் ஐந்தும் பத்துதானே வரும் எப்படி ஒன்பது வரும் என கேள்வி எழுப்புகிறார்.  அக்கேள்விக்கு இடைக்கமிட்டித் தோழர், மேல்கமிட்டித்தோழர் என ஒவ்வொருவராக வந்து வெவ்வேறு ஆங்கிளில் பதில் அளிக்கிறார்கள். சிரிக்காமல் இக்கதையைப் படிப்பது மிகச்சிரமம்.

அதில் வந்த ஒரு பத்தியில் சிரிப்பைக்கட்டுப்படுத்த முடியாமல் சிரித்துக்கொண்டிருக்கும்போது வீட்டம்மணி முறைத்தார். அப்பத்தியை அப்படியே கீழே தருகிறேன்.

போனதடவை அப்படிதான் அஞ்சும் அஞ்சும் பதனொண்ணுன்னு முடிவு பண்ணமே... அப்ப, எங்க போனாலும்.... என்னாங்க இது அஞ்சும் அஞ்சும் பத்துன்னுதான் ஆரம்பத்துல சொன்னீங்க. இவ்வளோ நாளும் அப்பிடியேதான் சொல்லிக்னு வந்தீங்க. இப்ப போய்த் திடீர்னு என்னாங்க பதனொன்னுன்னு சொல்றிங்க, எல்லாம் ஆரம்பத்துல நல்லாதான் சொல்றாங்க. அப்புறம் போவப் போவ எல்லாரும் மத்தவங்க மாதிரிதான் ஆயிடறாங்க... உங்க கட்சி அப்படி ஆவாதுன்னு பாத்தம். கடைசீல நீங்களும் அப்படி ஆயிட்டிங்களான்னு கேட்டாங்க. அதுவே நம்ம தோழர்களுக்கெல்லாம் ஒரு மாதிரியாயிருந்தது. அது போதாதுன்னு இப்ப வேற் அவங்ககிட்ட போய் அஞ்சும் அஞ்சும் ஒம்பதுன்னு சொல்லி அதுக்கு அவங்க விளக்கம் கேட்டாங்கள்னா என்னா பதில் சொல்றது. அதனாலதான் தோழர் இதெல்லாம் கேக்க வேண்டியதா இருக்குது இந்த சிக்கல் இல்லண்ணா ஏன் இதெல்லாம் கேக்கறோம்"

இதுல என்ன தோழர் சிக்கல். அப்ப நாம்ப பு.ந.கவோட கூட்டு வச்சிருந்தோம். பதனொண்ணுன்னு சொன்னோம். இப்ப பூ.ஊ.கவோட கூட்டு வச்சிருக்கறோம். அதனால ஒம்பதுன்னு சொல்றம்... இதுல என்ன தோழர் தப்பு என மேல்க்ககமிட்டி தோழர் பதில் சொல்கிறார்.

பு.ந.க,     பூ.ஊ.க.... யூகிக்க முடிகிறதா?

அதுக்குதான் விடிந்தும்கூட சிரித்துக்கொண்டிருந்தேன்.

Wednesday, March 04, 2020

கொரோனா

கொரோனா பாதிப்பு இந்தியாவில் துவங்கிவிட்டதாக செய்திகளிலிருந்து அறிய முடிகிறது. முதல் கட்டமாக கேரளாவில் வுஹானிலிருந்து திரும்பிய மூன்று மாணவர்களுக்கு அறிகுறி தென்பட்டு சிகிச்சையிலிருந்து மீண்டு விட்டார்கள். இதுவே மிகப்பெரிய ஆச்சரியம். அந்த மூன்று பேரிலிருந்து வேறு எவருக்குமே பரவாமல் தடுத்திருப்பது மிகப்பெரிய சாதனைதான். கேரள அரசு உண்மையிலேயே மெச்சத்தக்கது. சிறந்த உள்கட்டமைப்பைக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் அரசு நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துமே இன்னும் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறி வருகிறார்கள். சிங்கப்பூரின் இன்னொரு சாதக அம்சம் இங்கு இருக்கும் வெயில்தான். வெப்பம்தான் இந்தக் கிருமித்தொற்று பரவுவதைத் தடுக்கிறது. இன்றைய நாளில் வுஹானின் வெப்பநிலை 10 டிகிரி செல்ஷியஸ். ஊட்டியை விட ஆறேழு டிகிரி குறைவு. இந்தக்காலநிலையில் வைரஸ்கள் எளிதில் சாவதில்லை, தொடுதல் மூலமோ, ஒரே அறைக்குள் பயணப்பட்டாக வேண்டிய சூழலோ எதுவானாலும் எளிதில் பரவிவிடும் வாய்ப்புள்ளது. இன்று சிங்கப்பூரில் 28 டிகிரி செல்ஷியஸ். இங்கு அதிகமாக பரவாததற்கு இதுவும் ஒரு காரணமாகச் சொல்லலாம்.

இருந்தாலுமே கூட பொதுமக்களும், அரசாங்கமும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறது. மக்கள் கூடுமிடங்களைத் தவிர்க்க வேண்டுமாய் அறிவுறுத்துகிறார்கள், தொட்டுப் பேசுவதை தவிர்க்கச் சொல்கிறார்கள். எல்லா வங்கி, அரசு,பள்ளிகள், கல்லுரிகள்,  தனியார் நிறுவனங்களிலும் வேலைக்குச் செல்லும் ஒவ்வொருவரையும் வாசலிலேயே வைத்து உடல் சூட்டைச் சோதிக்கிறார்கள். கொஞ்சம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் அவரை தனிமைப்படுத்தி, அவருடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எச்சரிக்கை செய்கிறார்கள். பொதுப்போக்குவரத்தில் எந்நேரமும் கிருமி நாசினி கொண்ட திரவங்களை வைத்து அழுந்தத் துடைத்தபடியே இருக்கிறார்கள். லிப்ட் பட்டன்கள், எஸ்கலேட்டர் கைப்பிடி, பேருந்தின் கம்பிகள், ரயில் பெட்டி நின்ற ஐந்து நிமிடத்தில் ஒவ்வொரு கம்பார்ட்மெண்டிலும் ஒரு குழு சென்று சுத்தமாக துடைத்து அனுப்புகிறார்கள். முன்னரே தீர்மானிக்கப்பட்ட கூட்டங்கள், தொழில் சந்திப்புகள், எதுவாக இருந்தாலும் தவிர்க்கச்சொல்லி வலியுறுத்துகிறார்கள்.

வைரசை விட போலிச்செய்திதான் மிகப்பெரிய அபாயம். அப்படி போலிச் செய்திகளைப் பரப்புபவர்களை மிகக்கடுமையான தண்டனைக்கு ஆளாகலாம் என எச்சரிக்கிறார்கள். ஓரிருவர் தண்டிக்கப்பட்டதாக தகவல்கள் வந்தன. வெளிநாட்டு ஊழியராக இருக்கும்பட்சத்தில் அவரின் வேலை உரிமத்தை ரத்து செய்து நாட்டுக்குள் நுழைய முடியாதபடி தடை செய்ய முடியும் என அறிவித்திருக்கிறார்கள். வைரஸ் தொடர்பான போலிச் செய்திகள் பரவுவதை முற்றிலுமாக தடுத்துவிட்டது அரசின் மிகப்பெரிய சாதனை.

சிங்கப்பூரில் இன்றைய நிலவரப்படி 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட போதிலும் உயிரழப்பு என்பது இல்லை என்பது  கவனிக்க வேண்டிய விஷயம். மிக உயர்ந்த சிகிச்சையை வழங்கி உயிரைக் காப்பாற்றி அனுப்புகிறார்கள். 70க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று முற்றிலும் வைரஸ் நீங்கி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது அரசு. ஒருவரியில் சொல்வதென்றால் இமாலய சாதனை. சிங்கப்பூர் போன்ற மக்கள் அடர்த்தி மிக்க தீவில் மிக எளிதாக பரவி பலிவாங்கக்கூடிய வைரஸ் காய்ச்சலை ஒரு உயிரழப்பு கூட இல்லாமல் தடுத்திருப்பது நிச்சயமாக சாதனைதான்.

இப்போது இந்தியாவுக்கு வருவோம். வட இந்தியாவில் 28 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இது இரண்டே நாட்களில் பத்து மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. நம் ஆட்சியாளர்கள் அப்படி. மக்களை பீதியடைய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறார்கள். எச்சரிக்கைச் செய்திகளை வெளியிடுவதற்குப் பதிலாக மாட்டு மூத்திரத்தைக் குடிக்கச் சொல்லும் கூட்டம் வடநாட்டில் உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களே மேடைதோறும் முழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.  டெல்லியில் இன்னும் கோடை தொடங்கவில்லை, குளிர்காலத்தின் இறுதிக்கட்டம், வுஹான் நகரத்தை விட ஐந்து டிகிரி அதிகம்தான். இருந்தாலுமே கூட ஒரு நாளில் 28 பேருக்கு பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. டெல்லி இந்தியாவில் தலை என்றால் மற்ற நகரங்களுக்கு மிக எளிதாக பரவுவதற்கு வாய்ப்புள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களான, கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூரு என எல்லாமே மக்கள் நெரிசல் மிக்க நகரங்கள்தான். இங்கெல்லாம் பரவினால் தடுக்க கடவுளாலும் முடியாது. அப்படி ஆகாது என வேண்டிக்கொள்ளலாம்.

ஆனால் மாட்டு மூத்திரம் குடிக்கச்சொல்லும் கூட்டமும், மருந்து கண்டுபிடித்துவிட்டதாக சொல்லும் கப்சா கும்பலும், நமக்கெல்லாம் வராது பாஸ் எனச் சொல்லும் ஆட்களும் இருப்பதுதான் பயத்தைக் கொடுக்கிறது.


வல்லினம் சிறுகதைச் சிறப்பிதழ்

மலேசியாவிலிருந்து வெளிவரும் இணைய இலக்கிய இதழான வல்லினத்தை தொடர்ந்து கவனித்து வருகிறேன். படைப்புகளிலும், நிகழ்வுகளிலும் பங்கேற்று வந்திருக்கிறேன். இம்மாத இதழ் சிறுகதை சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறார்கள். மொத்தம் பனிரெண்டு சிறுகதைகள். அதில் இரண்டு சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டது. மீதி பத்தும் உலகின் பல பகுதிகளிலிருந்து எழுதும் புதிய, மூத்த, சற்று அறிமுகம் ஆன எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆசானும், சு.வேணுவும் எல்லோருக்கும் அறிமுகம் ஆனவர்கள். அனோஜன், சுரேஷ் பிரதீப், நவீன், சுனில் கிருஷ்ணன் என அறியப்பட்ட எழுத்தாளர்களும் எழுதியிருக்கிறார்கள்.

எல்லா கதைகளையும் வாசித்துவிடவேண்டும் என்ற முனைப்பில் இருந்தேன். ஆனால் ஆசானின் சமீப கதையான சா தேவி படித்த சோர்வில் இருந்ததால் ஆசான் கதையைத் தவிர்த்து எல்லாவற்றையும் வாசித்தேன்.  தமிழ்ச்சிறுகதைப் பரப்பில் எல்லாவிதமாகவும் சிறுகதைகளை எழுதிப்பார்த்துவிட்டார்கள். வாசகர்களும் திளைப்பில் இருந்து மீண்டு விட்டார்கள், ஆனாலும் ஏதோ ஒன்று மிச்சமிருப்பதை ருசித்துவிடவேண்டும் என்ற வேட்கையை தவிர்க்க முடியாது. மிக அபூர்வமாகவே கலைத்தருணங்கள் மிளிர ஒரு கதை பேசப்படும்.  அப்படியான கதைகளைத் தேடித்தான் எல்லா கதைகளுமே வாசிக்கப்படுகின்றன. 

தெய்வீகனின் கதை “கறை நதி” முதல் வரியிலேயே உள்ளிழுத்துக்கொண்டது. எழுத்து நடை அ.முத்துலிங்கத்தைப் போலவே உணர முடிந்தது. சொற்களின் தேர்வு, உரையாடல்களுக்கிடையேயான பகடி. ஒரு கணம் இக்கதை அ.மு எழுதியதுதானோ என்றொரு மயக்கம் கொள்ள வைத்தது. இலங்கையிலிருந்து மேல்படிப்புக்கு ஆஸ்திரேலியா வரும் ஒருவனுக்கு இத்தாலிய முதியவர்களின் வீட்டில் தங்க இடம் கிடைக்கிறது. பிறகு பகுதி நேர வேலை கிடைக்கிறது, அங்கே ஒரு சம்பவம் பிறகு முடிவு. வெகு இயல்பான கதை. சொல்லிச்செல்லும் விதமும், இடையிடையே வரும் தகவல்களும் கதையை ஆர்வமாக வாசிக்கக் கோருகிறது. எனக்கு மிகவும் பிடித்த கதையாக இதைச் சொல்வேன்.

அனோஜன் பெயரை அங்குமிங்கும் கேள்விபட்டிருக்கிறேன். சமீபமாக இலக்கிய உலகில் உச்சரிக்கப்படும் பெயர். ஆசானின் தளத்தில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது படித்த நினைவுள்ளது. அவரின் பச்சை நரம்பு சிறுகதைத் தொகுப்பு வாசிக்க வேண்டிய பட்டியலில் உள்ள புத்தகம். அவரின் பெயர் பார்த்த உடனே ஆர்வமாக வாசித்தேன். கதையின் தொடக்கம் பொம்மையை புணர்வதாக ஆரம்பித்த உடனே சா தேவி போல கதை என்ற சலிப்பு உண்டானது. ஆனால் கதை வேறு தளத்தில் பயணித்தது. ஆரம்பகட்ட சலிப்பை எண்ணி நொந்துகொண்டேன். பிரமாதமான கதை.
இறுதிக்கட்டப் போரின்போது பொதுமக்களை வலியச்சென்று பிடித்து இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பார்கள் என்ற தகவல் புதியது. அதுவும் வீட்டுக்கொருவர் ஆண் பெண் பேதமின்றி. ஒருவீட்டில் 16 வயது நிரம்பிய பெண்ணை இயக்கத்திற்கு அனுப்பு விருப்பமில்லாத அப்பா அவளுக்கு விருப்பமில்லாத மூர்க்கனுடன் திருமணம் செய்து அனுப்புகிறார். அவள் கற்பமடைகிறாள். போர்ச்சூழலின் விபத்தொன்றில் அவள் கர்ப்பபை எடுக்கும்படி ஆகிறது. பிறகு இலங்கை வந்து படிப்பைத் தொடர்கிறாள். பொம்மையை புணரும் அதே சமயம் நிஜத்தில் தடுமாறும் அவனிடம் நானும் ஒரு பொம்மைதான். என்னைப்புணர்ந்தாலும் கர்ப்பம் தரிக்க முடியாது என்கிறாள். கதையின் இரண்டு பகுதிகளை ஒன்றாகச் சேர்த்த விதம் அபாரமானது.  போர் முடிந்த இந்த பத்தாண்டுகளில் புலிகள் இயக்கத்தின் மீதான விமர்சனப்பார்வை இலக்கியத்தில் பல்வேறு படைப்புகளின் வழியாகப் பதியப்பட்டு வருகிறது. இது ஆரோக்கியமான விஷயம். எல்லாத்தரப்பு மக்களின் பாடுகளும் வாசிக்கப்படவேண்டும். பதியப்படவேண்டும்.

சுசித்ராவின் கதை ஆராய்ச்சி மாணவி ஒருத்தியின் பயணம் வழியாக ஒரு தீவின் மக்களை, சடங்குகளை, வாழ்வியலைச் சொல்கிறது. திசைகளை நாம் பார்ப்பதற்கும் அத்தீவின் மக்கள் பார்ப்பதற்கும் உள்ள வேறுபாடுகள் ஆச்சரியப்பட வைக்கின்றன. எனக்கு இப்போது திசைகள் குழப்பம்தான் சிறு வயதில் இன்னும் மோசம். இடது மாட்டை இழுத்துப்பிடிக்கச்சொன்னால் எது இடது என்றொரு குழப்பம் படர்ந்துவிடும். தெக்காலப் போய் வடக்குல திரும்பணும் என்றால் எது தெற்கு எது வடக்கு என்று மண்டை காயும். என்னை ப்போலவே பலர் இருக்கலாம். நம் திசையறியும் அறிவு நமக்கு சரியாக போதிக்கப்படவில்லையோ என்று தோன்றும். ஆனால் கதையில் வரும் சிறுகுழந்தைகள் கூட திசையறிவு உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதுதான் வாழ்வியல் அறிவு. அது போதிக்கப்படுவதில்லை தலைமுறைகளாக கடத்தபடுவது என்று நினைத்துக்கொண்டேன். என்னைப்போன்ற திசைக் குழப்பவாதிகள் இருமுறை வாசிக்கவேண்டிய கதை இது. வித்தியாசமான சிறுகதை.

அடித்தூர் என்றொரு கதை. சிறுகதை எழுதப்பயிலும் எல்லோருமே முதலில் தேர்ந்தெடுப்பது சிறுவயது நினைவுகளை எழுதிப்பார்ப்பதுதான். பல மறந்த விஷயங்கள் துல்லியமாக மேலெழுந்து வந்து எழுத்தில் அமரும். எழுதியவருக்கே ஆச்சரியத்தைக் கொடுக்கும். அப்படியொரு கதைதான் இது. தனது தாத்தா பாட்டியின் நினைவுகளை அசைபோடும் பேரனின் கதை. கதையின் முதல் பாராவில் தாத்தா ஆள்காட்டி விரலையும் மோதிர விரலையும் விரித்து எச்சில் துப்பினார் என்று வருகிறது. நடுவில் உள்ள விரலை அவர் என்ன செய்தார்? மடக்கினாரா அல்லது நடுவிரல் இல்லையா? அது எப்படி அருகிலேயே ஒரு விரல் இருக்க அவர் ஏன் மூன்றாவதாக உள்ள விரலைத் தேர்ந்தெடுத்தார். அனிச்சையாக நான் எனது ஆள்காட்டி விரலையும் மோதிர விரலையும் விரித்து எச்சில் துப்புவதுபோல முயற்சித்துப் பார்த்தேன். சுலபமாக வரவில்லை. ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் விரித்தால்தான் சுலபம் அதுதான் உலக வழக்கமும் கூட. கதையைவிட்டு நான் இப்படி ஒரு ஆராய்ச்சியில் இறங்கிவிட்டேன். உடனே சினிமாவில் வந்த நாக்கால் மூக்கைத் தொடும் காட்சி நினைவுக்கு வந்தது.
அந்தத் தாத்தாவின் பிடிவாத குணம் அவருக்கு நேர் எதிரான குணமுடைய பாட்டியின் குணம் இடையில் ஒரு பேரன் பாத்திரம் என மூன்றே பாத்திரங்கள்தான். இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாமோ எனத் தோன்றியது.

சுரேஷ் பிரதீப்பின் வெம்மை சிறுகதை அபூர்வ வகை. அவரின் கதைகள் மிகுந்த கவனத்தோடு வாசிக்க வேண்டியவை. சில கதைகளை முதல் வாசிப்பிலேயே கொடுக்க வேண்டிய அனுபவத்தைக் கொடுத்து விடும். சில கதைகளை திரும்பத் திரும்ப வாசிக்கையில் வேறொரு பரிமாணத்தைக் கொடுத்தபடியே இருப்பவை. இரண்டாவது வகை கதைகள் சுரேஷ் உடையது.  மகாபாரதத்திலிருந்து ஒரு கருவை எடுத்து புனைவாக மாற்றியிருக்கிறார். கதை வாசிக்கும்போது தளபதி படமும், கர்ணன் சிவாஜி வாயில் ரத்தம் கொப்பு நினைவுக்கு வந்தனர். சந்தேகமில்லாமல் குந்தி களங்கிய கண்களுடைய ஸ்ரீவித்யாதான்.  இதிகாசங்களில் இருந்து இப்படி ஏராளமான சம்பவங்களை உருவியெடுத்து சிறுகதைகளாக மாற்றலாம். திரையில் இதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. வரவேற்கப்பட வேண்டிய உத்தி எழுத்து. இதுபோன்ற கதைகளை நீண்ட அனுபவமும் பயிற்சியும் உள்ளவர்கள் எளிதில் அடையாளம் கண்டு நுழைந்துவிட முடியும். கதைக்கு இடையேயான மெல்லிய விவரணைகளை அனுமதிக்கலாம் ஆனால் நீளமான விவரணைகள் அலுப்பூட்டுபவை, அன்றி அதையும் வாசகன் சோர்வடையாமல் எழுத முயல வேண்டும்.

சுனில் கிருஷ்ணனின் இயல்வாகை கதை இயல்பாக இருந்தது. ஆசான் பள்ளியைச் சேர்ந்தவர் என்றே இவரை மனதில் நினைத்திருந்தேன். அந்த எழுத்தின் சாயல் இவரிடமும் இருக்கிறது என்றே வாசக மனம் சொல்லியது. இதற்கு முன் அனோஜனின் கதையிலும் அப்படி உணர்ந்தேன். மனதிற்கு நெருக்கமான முன்மாதிரி எழுத்தாளர்களின் தாக்கம் இல்லாமல் எழுத முடியாது. அப்படி எழுதியவர்களின் எழுத்து பிற்காலத்தில் தனித்த இடத்தில் தானாகவே சென்று அமர்ந்துவிடும். இந்த சிறப்பிதழில் கறை நதி கதைக்கு அடுத்த இடத்தில் இக்கதையை மனம் நினைத்துக் கொள்கிறது. ஒரு மருத்துவர், அவரின் அக்கா மகனுக்குப் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டிய தந்தை பொறுப்பில் இருக்கிறார். முதல் பெண் பார்த்து அது தடைபட்டுப் போன சோகத்தில் இரண்டாவது பெண் அமையும்போது பெண்ணைப் பற்றிய ஒரு உண்மை இவருக்குத் தெரிகிறது. உண்மையைச் சொல்லி நிறுத்தினால் தன் தொழிலுக்கு நேர்மையாக இருக்க முடியாது, சொல்லாமல் விட்டால் தன் மருமகனின் வாழ்க்கையைப் பாழ்பண்ணி விட்டோமே என்ற குற்ற உணர்வு வரக்கூடும். எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்று தவிக்கையில் ஒரு அற்புதம் நிகழ்கிறது. இக்கதை எனக்கு கி.ராவின் மின்னல் சிறுகதையை நினைவுபடுத்தியது. ஒரு நல்ல சிறுகதை உங்களை தொந்தரவு பண்ணும் அல்லது இன்னொரு நல்ல சிறுகதையை நினைவுபடுத்தும்.

துவந்த யுத்தம் என்ற கதையை கிரிதரன் ராஜகோபாலன் என்பவர் எழுதியிருக்கிறார். சற்றே நீளமான கதை. ஸ்க்ரோல் வாசிப்புக்குப் பழக்கப்பட்ட விரல்கள் அடம்பிடித்தன. விரலே நொந்துகொள்ளும்படி ஸ்க்ரோல் செய்யச் செய்ய போய்க்கொண்டே இருந்தது. விவரணைகள் மிக அதிகமாக இடம்பெற்றிருந்ததுதான் காரணம் என யூகிக்கிறேன். இப்போதெல்லாம் ஒப்பீடு இல்லாமல் ஒரு கதையை வாசிக்க முடியவில்லை. இக்கதைக்குள் நுழைந்த உடனே எனக்கு கோணங்கி நினைவுக்கு வந்தார். தொன்மம்தான் காரணம். இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு கூலிகளாக பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு இந்தியாவிலிருந்து மொரிஷியஸ் சென்றவர்களின் பிண்ணனியில் கதை எழுதப்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கில் மலேரியா காய்ச்சலில் இறந்த இந்தியர்களின் கல்லறைத்தோட்டத்தில் புதிய சர்ச் கட்டுவதற்காகவும் அதைச் செயல்படுத்துவதற்காக நியமிக்கப்படும் வேலு என்பரின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கும் கதை. வரலாற்றுப்பிண்ணனி உடைய கதைகளை வாசிக்கும்போது அவ்வரலாற்றுச் சம்பவங்கள் நாம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். சில கதைகளுக்கு தெரியவேண்டிய அவசியமில்லை. உதாரணம் புயலிலே ஒரு தோணி, கடலுக்கப்பால், சயாம் பர்மா மரண ரயில்பாதை, எரியும் பனிக்காடு போன்றவை. நாவல் அளவுக்கு விரித்து எழுத வாய்ப்புள்ள களம் உடைய கதை இது. ஒருவேளை இது நாவலாக வரும்பட்சத்தில் இன்னும் சிறப்பாக அமையலாம்.

சு.வேணுகோபால் கதைகள் எப்போதுமே ஒரு அதிசயத் திறப்பை முடிவில் உண்டாக்கிவிடும். இக்கதையில் பார்வையற்றவராக வரும் பாத்திரம் கோவை ஞானியாக இருக்குமோ என்றொரு சம்சயம் ஏற்பட்டது. ஒரு சிறிய நிகழ்வுதான் மொத்தக் கதையையும் தாங்கி நிற்கும். அதுபோல குழப்பமான மனநிலையில் ஒருவரைச் சந்திக்கச்செல்பவர் அவரின் பாதையிலேயே சென்று தனக்கான தெளிவை அடைந்துகொள்ளும். சு.வே கதை கூறும் முறை மிக நுட்பமானது. இக்கதையில் மேலும் ஒருபடி கூடி வந்திருக்கிறது. பழனிச்சாமி ஐயா, ஒரு இடத்தில் பழனிவேல் அய்யா என்று மாற்றி எழுதியிருந்தது கண்டு குழம்பி மேலே சென்று பழனிச்சாமி ஐயா என்று உறுதி செய்ய வேண்டியிருந்தது. மற்றபடி அந்தப் பாத்திர உருவாக்கம் அபாரம்.

மற்ற கதைகளை இன்னும் படிக்கவில்லை. திரையைப் பார்த்துக்கொண்டே வாசித்ததால் கண்கள் பூத்துவிட்டன. வல்லினம் குழுவினர் பாராட்டத் தகுதி உடையவர்கள். அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். தகவல் பிழை, எழுத்துப்பிழைகளை இன்னும் கவனமாக பார்க்க வேண்டும். எல்லாருமே கணினியில் தட்டச்சு செய்து கதைகளை அனுப்புபவர்கள். பேனாவில் வருவதை விட க.த இல் பிழை அதிகம் வர வாய்ப்புண்டு. அதிகம் ஒற்றுப்பிழைகள்தான் கவனத்தில் கொள்ள வேண்டும். அமிர்தலிங்கம் இரண்டு இடங்களில் அமிர்ந்தலிங்கமாகிவிட்டார். ஏராளமான எழுத்துப்பிழைகள். கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள்.