எல்லையற்ற அன்பு கொள்வோம்

Showing posts with label துபாய். Show all posts
Showing posts with label துபாய். Show all posts

Saturday, February 23, 2008

மாறாததும், மாறியதும்

சில பெருசுகள் மண்டைய போட்டுடுச்சு.

சில சிறுசுகள் ஓடிப்போச்சு.

சிகரெட் விலை ஏறி போச்சு.

சண்டை போட்ட பக்கத்து வீட்டு சனம் பாத்தவுடனே சிரிக்குது.
காலம் எல்லாத்தையும் தோசை மாதிரி திருப்பி போடும்ன்ற உண்மை உண்மைதான்.

மண்டபத்திலாவது எதும் தேறுமான்னு பாத்தேன், அங்கயும் ஒரு லோடு மண்.

ஒரு வீட்டுக்கு குறைந்தது இரண்டு மொபைல் போன் இருக்குது. எல்லாருமே
ரெண்டு மொபைலாவது வச்சிருக்காங்க. (ரேஷன்ல கூட தர்றாங்களாம்பா)

"இதெல்லாம் தேறும்னு" கணக்கு பண்ணி வச்சிருந்த பிகர்கள ஆட்டை
போட்டுட்டானுங்க.

துப்பாய்ல எங்க இருந்த? என்ற கேள்வியை அனைவரும் கேட்டு கேட்டு
சாகடித்தனர். யோவ் வடிவேலு உன்னய...

டீக்கடையில் டீ குடிச்சதும் கடைக்காரர் பத்திரமா டீகிளாசை வாங்கி
வைத்து நக்கல் சிரிப்பு சிரிக்கிறார்.

ஊர்ல உள்ள மக்கள விட அதிகமா ஒரு ரூபாய் தொலைபேசி பொட்டிகள் தொங்குது.

ஸ்கூல் பொண்ணுங்க கூட பக்கத்துல யார் வர்றாங்க போறாங்கன்னு கவனிக்காம
கை நிறைய ஒரு ரூபாய் வச்சிகிட்டு லொடக் லொடக்னு காச விட்டு கடல போட்டுகிட்டு இருக்குதுங்க. அப்படி போடற காச உண்டியல்ல போட்டா அத வச்சு ஒரு குடும்பமே
வாழலாம்.

எல்லா விலையும் ஏறினாலும் எங்க ஊர் தியேட்டர்ல இன்னமும் அஞ்சு ரூபாய்தான்
டிக்கெட் விக்கறாங்க. இடைவேளைல குடிச்ச டீ கூட அதே சுவை. முன்னல்லாம்
சூடா சமோசா போடுவாங்க. தட்டுல பரப்பி தியேட்டர் உள்ள வந்து விக்கறத
நிறுத்திட்டாங்க. தியேட்டர் பொட்டிக்கடைல ரஸ்னா பாக்கெட் அமோக விற்பனை.
ஆனா நான் ரஸ்னா குடிக்கறதை நிறுத்திட்டேன். :)

எவ்ளோ தாமதமா வீட்டுக்கு வந்தாலும் ஏன் எதுக்குன்னு எப்படின்னு ஒரு
கேள்வியும் இல்லாம கதவ திறந்து விடறாங்க. ரொம்ப ஏமாற்றமா இருந்தது.

ஆங்கிலப்படங்களுக்கு மிரட்டலான தமிழ் பெயர் வைக்கிறாங்க. உதாரணம்
சங்கிலிக்கருப்பன், பாதாள பைரவி.

எல்லார் வீட்டுலயும் கலைஞர் டீவிதான் பாக்கறாங்க.

ரெண்டு டீவி இருக்குற வீட்டுல மூணாவதா கலைஞர் டீவி கொடுத்துருக்காங்க.
கிட்டதட்ட எல்லா வீட்டுலயும் இதுதான்.

எல்லா ஊர்லயும் பிரம்மாண்டமான வினைல் போர்டுல பல்லாயிரக்கணக்கான
தலைகள் சிரிச்சிகிட்டும், செல்போன்ல பேசுற மாதிரியும், வணக்கம் வைக்கிற
மாதிரியும் போஸ் குடுத்துகிட்டு இருக்கறாங்க. புருடா புராணத்துல இதுக்கு
எதாச்சும் தண்டனை இருக்குதான்னு பாக்கணும் இல்லாட்டி உருவாக்கணும்.

ரூட் கிளியராயிடுச்சி, அப்ப அடுத்து உனக்குதான கல்யாணம் என்ற கேள்வியை
அனைவரும் வாயிலேயே வைத்திருந்தனர்.

பதிவர்களில் புலி மட்டும் கல்யாணத்திற்கு முதல் நாள் வந்து கொஞ்ச நேரம் உறுமி
விட்டு போனது. நான் புலிக்கு எதுமே செய்யலன்ற குற்றவுணர்ச்சி தினம் தினம்
என்னை கொல்லுது. துபாய் வா ராசா!

ரோட்டுல போற எதாச்சும் ஒரு பொண்ண ரெண்டு நிமிசம் தொடர்ந்தாப்புல
பாத்தம்னா அடுத்த அஞ்சாவது நிமிசத்துல ரெண்டு மூணு பேர் பைக்ல வந்து
"ஏன் பாத்த"ன்னு ஜோதிகா ரேஞ்சுல கேள்வி கேக்கறானுங்க.

ஒரு ஒயின்ஷாப் இருந்த ஊர்ல இப்ப அஞ்சு டாஸ்மாக் இருந்தும் கேட்ட
சரக்கு கிடைக்கவில்லை. என்ன கொடும இது...

ஒருநாளைக்கு மூணு என்ற வீதத்துல ஒவ்வொரு முறையும் ஒரு மணி நேரம்
மின்சாரத்தை நிறுத்தி வச்சிடறாங்க. முன்னாடி இதுபோல இல்ல. இப்ப மட்டும்
ஏன்னு தெரில. இங்கருந்து கர்னாடகாவுக்கு போகற மின்சாரத்துல எந்த
தடையுமில்லை.

முன்னவிட தினத்தந்தி சாணி பேப்பரின் தரம் குறைந்து சினிமா படங்களின்
விளம்பரங்களும், பிறந்தநாள் வாழ்த்து பக்கங்களாலும் நிறைந்திருக்கிறது.
இப்ப டீக்கடைய நம்பி பத்திரிக்கை நடத்துறாங்கன்னு யாரும் சொல்ல முடியாதுல்ல.

இப்பலாம் குங்குமத்துக்கு இனாமா எதுவும் கொடுக்கறதில்லயாம். என்ன ஏதுன்னு
கேட்டா இனாமா கொடுத்த பொருள் எதுவும் சந்தைக்கு வரும்போது காசு கொடுத்து
வாங்கறதில்லியாம். இத அடுத்த வாரம் இனாமா வாங்கிக்கலாம்னு விட்டுருப்பாங்க
போலருக்கு.

தாரே சமீன் பர் படத்தை அக்கா பசங்களுக்கு போட்டு காட்டணும்னு ஆவலோட
டிவிடி வாங்கி வந்து போட்டேன். அஞ்சாவது நிமிசத்துல "அட இதுவா மாமா
நான் ஏற்கனவே இந்த படத்தோட கதைய கேட்டுட்டேன்னு சொல்றான்.
அவங்க ஸ்கூல் மிஸ் சொன்னாங்களாம். மிஸ் பேர் என்ன? வயசு என்னன்னு
கேட்டதுக்கு "அய்யய்ய ஆய் மாமான்னு" சொல்லிட்டு தூங்கிட்டான்.

நிறைய பேர பாக்கணும்னு நினைச்சு பாக்கமுடில. எங்க ஊர்லருந்து சென்னை
போகணும்னா குறைந்தது 10 மணி நேரம் ஆகுது. பத்து மணி நேரம், பன்னெண்டு
மணி நேரம் ட்ராபிக் எல்லாம் சாதாரணம். ரோடு போடறாங்களாம். இதுக்காகவே
போகவில்லை.

பதிவர்களில் சந்தித்தது இரண்டு பேர்தான். சுரேகா மற்றும் ஜ்யோவ்ராம் சுந்தர்.
ரெண்டு பதிவர்களின் பேரும் சுந்தர். அப்புறம் என்னுடைய தீவிர ரசிகர்(?)
ஒருத்தரையும் பார்த்தேன். யோவ் அய்யனார் எனக்கும் ரசிகர் இருக்காங்க!

"பக்கத்து சீட்டுல பாட்டி உக்காராம பிகர் உக்காரணும்னு கடவுள்கிட்ட வேண்டிக்குங்க
அய்யனார்னு சொன்னேன். உனுக்குலாம் ஆயாதாண்டா பக்கத்துல உக்காரும்னு சாபம்
விட்டார். பத்தினன் சாபம்தான் பலிக்கும்னு நினைச்சேன்.

சினிமாக்கு போற வழில ஒரு ஆயா எலந்தபழம்னு கூவிகிட்டே போச்சு. ரெண்டு
ரூபாய்க்கு வாங்கி பேண்ட் பாக்கெட்ல போட்டு கடிச்சி தின்னுகிட்டே போனேன்.
"ஏண்டா நீ உண்மைலயே துபாய்லருந்துதான் வந்தியா"ன்னு கேட்டுட்டான்.

இல்லடா மச்சி, நான் அபிதாபி...

சும்மா இது ஒரு வருகைப் பதிவு மட்டும்தான்.

Monday, November 19, 2007

அலெக்ஸ்

அலெக்ஸ் இலங்கைத்தமிழர், தமிழை விட சிங்களம் நன்றாக பேசக்கூடியவர்.
தமிழையும் நன்றாக பேசிக்கொண்டிருந்தவர்தான் ஆனால் கடந்த ஒன்றரை
வருடமாக தமிழை பேச அதிக வாய்ப்பு இல்லாததால் பல வார்த்தைகளை
மறந்து விட்டிருக்கிறார். ஒவ்வொருமுறை பேசும்போது காற்றில் துழாவி
வார்த்தைகளை வரவழைக்கிறார் அவை வராதபோது தோற்றுப்போன
குழந்தையின் முகத்தினை ஞாபகப்படுத்துகிறது அவரது முகம்.

அலெக்ஸ் நாம் பார்க்கும் உலகத்திலிருந்து விலகி நிற்பவர். அவர் உலகத்தில்
அவரும் அவர் பூனை மட்டுமே பெரும்பாலான நேரத்தினை நிறைத்துக்
கொள்கின்றன. அதற்கு மேல் அவருக்கும் செய்வதற்கு ஒன்றுமில்லை.
எனக்கு அலெக்ஸை இப்போது மூன்று நாட்களாகத்தான் தெரியும். என் வருகை
அவரை மிக சந்தோஷத்தில் ஆழ்த்தியிருந்தது. வண்டியை விட்டு இறங்கியதும்
அவர் முகத்தில் தெரிந்த சந்தோஷம் அளவிட முடியாததாக இருந்தது. மிக
உணர்ச்சிவசப்படுகின்ற ஆள் என்று நினைத்துக் கொண்டேன்.

அலெக்ஸ் நகரத்திலிருந்து நூறு மைல் தள்ளி இருக்கிறார். அல் அய்னின்
நெடுஞ்சாலையிலிருந்து ஒரு மூன்று கிலோமீட்டர் உள்ளே நடந்து சென்றோமானால்
ஒரு காலத்தில் இயங்கிக்கொண்டிருந்த பாக்டரியை நீங்கள் காணலாம். அந்த
பாக்டரியின் எடுக்கமுடியாத எச்சங்களாக ஒரு சில இயந்திரங்களும் சில பொருட்களும்
இருக்கின்றன. அவற்றை பாதுகாக்கும் வாட்ச்மேன் பொறுப்பில்தான் அலெக்ஸ்
இருக்கிறார். மாதத்தின் ஐந்தாவது நாளில் சம்பளமும் அதற்கடுத்த நாள் நகரத்திற்கு
சென்று வீட்டுக்கு பணம் அனுப்பிவிட்டு அம்மாத சாப்பாட்டு தேவைக்கான பொருட்களை
வாங்கி வருவார் அந்த ஒருநாள் நகரப்பிரவேசம்.

சுற்றிலும் மொட்டை பாலைவனம். நாளுக்கு நாள் தோன்றி மறையும் மணல் மேடுகள்.
மணலிலேயே இரண்டு மைல் நடந்தால் பந்தயத்திற்கான ஒட்டகங்களை தயார்படுத்தும்
பண்ணை. அங்கு சில மனிதர்கள் வாழ்கிறார்கள். தான் இறந்த செய்தி கூட உலகிற்கு
தெரிய ஒரு மாத காலமாகலாம். இதற்கு நடுவிலே அந்த இடத்தில் கடந்த ஒன்றரை
வருடமாக பணியில் இருக்கிறாராம்.

வந்திறங்கியதும் இந்த இடத்தில்தான் நாம் நாலைந்து நாட்கள் தங்க வேண்டும் என்று
நினைக்கும்போதே வயிற்றை கலக்கியது. வெளி உலக தொடர்புகள் அறவே அற்ற
இடம் நினைத்துப்பார்க்கவே கொடுமையாக இருந்தது. என்ன சமைக்கலாம் என்று
கேட்டார். ஏதாச்சும் செய்ங்க என்றேன்.

மாலை நெருங்கி விட்டிருந்தது. அந்த இரவில் பாலைவன் பார்ப்பதற்கு மிக ரம்மியமாக
இருந்தது. இதமான குளிர், நிலா வெளிச்சம் மணல் குன்றுகள் எல்லாமே அழகுதான்
என்றாவது ஒருநாள் காணவேண்டிய அழகு அவை. தினமும் அங்கே இருந்தால்
அழகும் சீக்கிரம் சலித்துவிடும்.

அலெக்ஸ் கிட்டத்தட்ட உங்க வாழ்க்கை மாதிரியே ஆங்கிலத்துல ஒரு படம் வந்திருக்கு
தெரியுமா? பார்த்திருக்கிங்களா? என்றேன்.

கடைசியா பார்த்த படம் கில்லி என்று சொன்னார்.

" சிரித்துக்கொண்டே "கேஸ்ட் அவே" னு ஒரு படம் அந்த படம் முக்காவாசி ஒரே
கேரக்டர் ஒரு தீவுல மாட்டிக்கறதுதான். அது விபத்து இது வாழ்க்கை அவ்வளவுதான் வித்தியாசம்".

தனியா என்னதான் பண்ணுவிங்க?

இங்க என்ன வேலை இருக்கு பெருசா செய்யறதுக்கு? என்னை பாத்துக்கறதே
பெரிய வேலையா இருக்கு இதுல என்னங்க அதுவுமில்லாம சொல்லிக்கற மாதிரி
ஒருவேலையும் இல்ல அதான் உண்மை. அதான் நீங்க பாக்கறிங்கல்ல. எந்த நேரமும்
யாராச்சும் போன் பண்ணிகிட்டே இருப்பாங்க. அவங்க கூட பேசிட்டே இருப்பேன்,
அப்போதுதான் கவனித்தேன் அவர் போனில் கிட்டத்தட்ட அரைமணி நேரம்
பேசிவிட்டு வைக்கும்போது மறக்காமல் முத்தம் வைப்பதை.

யாருங்க அதெல்லாம்?

தெரிலங்க. ப்ரெண்ட் ஒருத்தன் ஒருநாள் ஒரு பொண்ணோட நம்பர் தந்தான்.
அதுக்கு போன் பண்ணி பேசினேன். மனசுக்கு இதமா இருந்துச்சு. அப்படி அதிலருந்து இன்னொண்ணு அதுகூட இன்னொண்ணுன்னு கிட்டத்தட்ட பத்து பதினஞ்சு
பொம்பளைங்க நம்பர் இருக்கு ஒண்ணு மாத்தி ஒருத்தரா போன் பண்ணிகிட்டே
இருப்பாங்க. ஜாலியா பேசிட்டு இருப்பேன் நேரமும் போறது தெரியாது. எல்லாருமே
அரபி வீட்டுல வேலை செய்றவங்க. யாரையும் நேர்ல பாத்தது கிடையாது.
அவங்களுக்கு தேவை அன்பான பேச்சுதான். எனக்கும் அதுதான் தேவையா இருக்குது.

இதுக்கு முன்னாடி இங்க யாரு வேலை பார்த்தது?

"அது ஒரு சோகமான கதைங்க சொன்னா கேவலம் இங்க இந்த மாதிரிலாம் நடக்கறத
பாக்கும்போது கடவுள் இருக்காரான்னு சந்தேகமா இருக்குங்க."

அப்படி என்ன நடந்தது?

எனக்கு முன்னாடி இங்க ஒரு நேபாளி வேலை பாத்தாங்க. பாக்கறதுக்கு ஆள்
லட்சணமா கைக்கு அடக்கமா செக்கச்செவுப்பேன்னு இருப்பான். இங்க பட்டான்னு
சொல்ற பாகிஸ்தானி ஆளுங்க பக்கத்துல இருக்கற தோட்டத்துல வேலை
பாக்கறானுங்க. இந்த பையன் இங்க தனியா இருக்கறத பாத்துட்டு நாலஞ்சு பேரா
வந்து வண்டில அள்ளி போட்டுகிட்டு போய் ரெண்டு நாள் கழிச்சிதான் கொண்டு
வந்து விட்டானுங்க.

"தூக்கிட்டு போய் என்ன பண்ணாங்க?"

என்னங்க கேள்வி இது? ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைபூ சக்கரை மாதிரி
பொம்பளைங்களயே பாக்காத அவனுவளுக்கு இவந்தான் பொம்பளை மாதிரி
தெரிஞ்சிருக்கான் போலருக்கு. பாவம் இவன் ஆபிஸ்லயும் சொல்லமுடியாம
வெளிலயும் சொல்ல முடியாம அவஸ்தைபட்டிருக்கான். அவனுங்க அடிக்கடி
வந்து தூக்கிட்டு போறதும் ரெண்டு நாள் கழிச்சு கொண்டு வந்து விடறதுமா
இருக்கவே இவன் பொறுக்க முடியாம மெயின் ஆபிஸ்க்கு போய் ட்ரான்ஸ்பர்
கேட்டுருக்கான் வேலைல சேர்ந்தே ரெண்டு மாசம்தான் ஆகுது அதெல்லாம் மாத்த
முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம்.

இங்க வந்து இதோ பக்கத்து ரூம்லதான் தூக்கு மாட்டிகிட்டான் என்று சொல்லி
அலெக்ஸ் சிரித்தார். நான் ஆள் பாக்கறதுக்கு கருப்பா கட்டையா இருக்கறேனா
அதனால பட்டானிங்க வந்து பாத்துட்டு இவன் வேலைக்கு ஆகமாட்டான்னு
போயிட்டாங்க. மறுபடியும் அதே சிரிப்பு.

இந்த மாதிரி இடத்தில அவனுங்கதாங்க சரி. நம்மளால எல்லாம் வேலை பாக்க
முடியாது ஏதோ காலக்கொடுமை இங்கலாம் வேலை பாக்க வேண்டியதா இருக்கு.

இப்படி ஒரு மேட்டர சொல்லு நம்மள தூங்கவிடாம பண்ணிட்டிங்களே அலெக்ஸ்.

தூக்கம் வரலன்னா இந்த ஆல்பத்த பாருங்க. இவர்தான் எங்க அப்பா சாகும்போது
எடுத்த போட்டோ. இது என்னோட மனைவி, அந்த சின்ன பொடியன் என்னோட
பையன்.

இது என்னோட பொண்ணுங்க. பசங்கள எல்லாம் ஸ்கூல்ல சேர்த்து படிக்க வைச்சிகிட்டு
இருக்கேன். அதுக்கேதான் மாசா மாசம் கனமா செலவாகுது.

Tuesday, June 19, 2007

உழைக்க வரவில்லை, உயிர்பிழைக்க வந்தேன்

ஒரு முறை ஆமியில் இருந்த மாமா அவர்கள் மாட்டிறைச்சி கொண்டு வந்தார்கள்
அதை சமைச்சி சாப்பிட்ட பொறவுதான் இந்த வருத்தம் வந்தது. வகுத்துலே
ஊசி கொண்டு குத்துறாப்புல இருக்கி. நாட்டிலே டொக்டரிடம் காட்டினால்
வயித்துலே சிறிய கல் இருக்கிறதெண்டு சொன்னார்கள். ஆப்ரேசன் செய்ய
முடியாதெண்டும் மாத்திரை மூலமே சரிப்படுத்த முடியும் என்றும் சொன்னார்கள்.
சிறீலங்காவிலே பெரிய மருத்துவமனையிலே காட்டிதான் விமானமேறினேன்.
இங்க வந்தபிறகுதான் மறுபடி இந்த வருத்தம் வருதண்ணா. ஏன் எண்டுதான்
விளங்கல்லை.

சமீபத்தில் எங்கள் அலுவலகத்தில் செக்யூரிட்டியாக வேலைக்கு வந்த இலங்கை
நண்பரின் பேச்சுதான் இது. திடீர்னு அவருக்கு பயங்கரமான வயித்து வலி
வந்துடுச்சி. டாக்டர்கிட்ட தன் பிரச்சினைய எடுத்து சொல்ற அளவுக்கு ஆங்கிலம்
தெரியாத காரணத்தால் நானும் அவருடன் சென்றேன். அப்படி போனபோது
அவருடன் ஏற்பட்ட உரையாடலே மேல் உள்ளவை.

வாயிலை கடந்து செல்லும்போதும், வரும்போதும் கை அசைப்பார்.

ஏங்க வயித்துல ப்ராப்ளம் வச்சிகிட்டு எதுக்கு வந்திங்க? எல்லாம் சரியான பிறகு
வந்துருக்கலாமே!

அதுதான் அண்ணா நாங்க பண்ணின பாவம். எங்கட ஊரிலே எனக்கு சொந்தமாக
10 ஏக்கரும் ரெண்டு கிணறும் இருக்குது. கடந்த வருடம் கோயில் பூமியும் சேர்த்து
குத்தகைக்கு எடுத்து உழைத்தும் ஒண்ணும் காணல. கடன் வாங்கித்தான் விவசாயம்
பண்ணினோம். ரெண்டாவது முறை எடுக்கலாமெண்டுதான் நெல் விதைச்சேன்
அப்போதான் பிரச்சினை வந்து ஊரைவிட்டு ஓடிப்போனோம் அப்படியே பாடுபட்ட
நிலத்தை விட்டுபோட்டு. நல்ல விளைச்சலிலே ஆமிக்காரன் மாட்டை விட்டு மேய
விட்டுட்டான். மொத்தமும் கடனாகிப்போச்சு. அதெல்லாம் அடைக்கணும்
அல்லவா?

அதுக்கு ஏன் அவசரபட்டு வந்திங்க? ஏதாச்சும் தொழில் தெரிஞ்சாலும் பரவால்ல.
விவசாயத்தை மட்டும் தெரிஞ்சிகிட்டு வந்துட்டிங்களே. பாருங்க இங்க செக்யூரிட்டியா
நிக்க வச்சிட்டாங்க.

ஆமிக்காரனுக்கு பயந்தேதான் இங்கு வந்தேன். உழைக்கவெல்லாம் தெம்பிருக்கதுண்ணா
உடம்பிலே. ஆனால் உயிர்பயம்தான் கவலையாயிருக்கு. ரெண்டு வயசு பிள்ளைய
விட்டுபோட்டு வந்துட்டதுதான் இன்னும் வருத்தமாயிருக்குது.

பொண்டாட்டி பிள்ளைகள விட்டுட்டு வந்துட்டிங்களே அவங்களுக்கு மட்டும் ஆபத்து
இல்லையா?

ஆண்கள கண்டாதான் அடிப்பான், உதைப்பான். பெண்களையும், குழந்தைகளையும்
அதிகம் துன்புறுத்த மாட்டான்.

மருத்துவமனை வந்திருந்தது. அந்த அரபி டாக்டரிடம் பேசி புரிய வைக்கறதுக்குள்ள
நாக்கு தள்ளிபோச்சு. நெஜமாவே இவன்லாம் டாக்டருக்கு படிச்சானா? இல்ல நம்மூரு
மாதிரியான்னு சந்தேகமாகிச்சு எனக்கு.

வழக்கம்போல, தேவையில்லாம எல்லா டெஸ்டும் எடுத்து வயித்துல கல்தான் இருக்குன்ற
பெரிய உண்மைய கண்டுபிடிச்சிட்டாரு. ஒரு ஊசி, மருந்து மாத்திரை எழுதி கொடுத்தார்.
எல்லாம் சேர்த்து 200 திர்ஹாமுக்கும் எட்டிவிட்டது. வந்து முதல் மாத சம்பளம் கூட
வாங்காமல் செலவாகிவிட்டதே என்ற வருத்தம் அவருக்கு. அந்த கவலையில் வயிற்று
வலி போயிடுச்சி.

இப்ப எப்படிய்யா இருக்கு?

இப்போ கொஞ்சம் பரவால்லங்கண்ணா

கொஞ்சம் சகஜ நிலைக்கு அவரை திருப்ப பேச்சை சுவாரசியமாக்க நினைத்தேன்.

ஏன்யா கல்யாணம் ஆகி எவ்வளவு நாள் ஆச்சு?

மூண்டு வருடமும் ஐந்து மாதமும் ஆச்சு.

காதல் கல்யாணமா? வீட்ல பாத்தாங்களா?

சிறு புன்னகையுடன் வெட்கப்பட்டுக்கொண்டே காதல் கல்யாணம்தான் ஆச்சு என்றார்.

இந்த மாதிரி காதல் கதைகள கேக்கணும்னாவே கொஞ்சம் ஆர்வம் அதிகம் நமக்கு.
ஆமா எந்த இடத்துல பாத்திங்க முதல் முதல்ல? யார் முதலில் காதலை சொன்னது?

அவரும் சிரித்துக்கொண்டே என்ன இப்படியெல்லாம் கதைக்கறிங்களே என்று ரொம்பவே
கூச்சப்பட்டுவிட்டார்.

அட சும்ம சொல்லுங்க. அறைக்கு போக இன்னும் நேரமிருக்கு. உம்முனு இருக்காம
எதாச்சும் பேசலாமில்ல.

எங்கட மனைவிதான் முதலில் சொன்னது. பிறகு நானும் சொன்னேன்.

என்னன்னு?

மறுபடியும் வெட்கப்பட்டுவிட்டார்!

ஐ லவ் யூ எண்டுதான். வேறென்ன சொல்வார்கள். இதெல்லாம் கேள்வியெண்டு
கதைக்கறீங்களே அண்ணா!

சரி சரி கடைசியா ஒரே கேள்வி. பொண்ணு உங்க ஊரேவா? இல்ல பக்கத்து
ஊரா? எப்படி சந்திப்பிங்க என்ன பேசிப்பிங்க?

பக்கத்து வீடேதான். சொந்த மாமன் பொண்ணுதான் சிறு பிராயத்திலிருந்தே தெரியும்.
விரும்பினோம் கல்யாணம் செய்து வைத்தார்கள்.

யோவ்! உன்னயெல்லாம் என்ன செய்றது? சொந்த அத்தை பெண்ண யாராச்சும்
லவ் பண்ணுவாங்களா? நீங்க சும்மா இருந்தாவே பெரியவங்க அவங்களுக்குள்ள
பேசி கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க.

சிரித்துக்கொண்டே தலையாட்டினார்.

வலியும் மனதும் அவருக்கு லேசானது போன்ற உணர்வு அவர் முகத்தில்.

எனக்கும்தான்.

ஆதரவில்லாத இடத்தில் ஆறுதலாக இரண்டு வார்த்தை பேசுவதற்கு கூட நேரமில்லாத
ஊரல்லவா இது.

Friday, May 04, 2007

நான் துபாய்காரன் இல்லிங்கோ!

நண்பர் ஒருத்தர் இரண்டு மாத விடுப்பில் நாடு சென்று வந்தார். வந்த நாள் முதல்
முகம் சோகமாக இருக்கவே என்னங்க ஆச்சு இப்படி மூஞ்ச தூக்கி வச்சிருக்கிங்கன்னு
கேட்டேன்.

அட ரெண்டு மாசம் ஊர்ல இருந்தேன் கல்யாணம் பண்ணிட்டு வந்தா கம்பெனில
பேமிலி ஸ்டேட்டஸ் குடுப்பாங்க அப்படின்னு நினைச்சேன்.

"சரி அதுல என்ன பிரச்சினை"?

அட போப்பா அங்கதான் பெரிய பிரச்சினையே இருக்கு. நான் என்னவோ துபாய்
ரிட்டர்ன்னு சொன்னா பொண்ணு தர நான் நீன்னு போட்டி போடுவாங்கன்னு
பாத்தேன் ஆனா ஒரு பய கூட தரமாட்டேங்குறான். இந்த வடிவேலு, சினிமாகாரனுங்க
எல்லாம் சேந்து இந்த ஊர ஒரு காமெடிதேசமா மாத்திட்டானுங்க. எங்க வேல
செய்றன்னு எவனாச்சும் கேட்டா துபாய்லன்னு சொன்ன உடனே மெகா ஜோக்க
கேட்டவன் மாதிரி சிரிக்கறானுங்க.

என்னங்க சொல்றிங்க?

அட ஆமாப்பா ஒரு வீட்டுக்கு பொண்ணு பாக்க போயிருந்தேன். ஜாதகம் எல்லாம்
ஓரளவுக்கு பொருந்தி வந்து பொண்ணும் பிடிச்சிருந்தது. மத்த விஷயங்கள பத்தி
பேச ஆரம்பிச்சோம் பேச்சு வாக்குல கல்யாணம் முடிஞ்ச ரெண்டு மாசத்துல பொண்ணு
இங்க வந்துறணும்னு சொன்னேன். அப்பதான் நான் துபாய்ல வேல பாக்குறேன்னு
அவங்களுக்கு தெரியும் போலருக்கு உடனே உங்களுக்கெல்லாம் பொண்ணு தர
முடியாதுன்னு கட் அன் ரைட்டா சொல்லிட்டானுங்க. அமெரிக்கா, ஐரோப்பா
மாதிரி ஏதாச்சும் ஒன்னுல இருந்தா சொல்லுங்க யோசிக்கலாம்னு வேற சொன்னான்.

அடப்பாவமே!

இப்பவே அரை மண்டையாச்சு அடுத்த முறை போகும்போது கணிசமான முடி
இந்த மண்ணுக்கு காணிக்கையாகிடும் அப்புறம் எவனும் பொண்ணு தர மாட்டான்.
முத்துன கத்திரிக்கான்னு எவனாச்சும் சொல்லிடுவானோன்னு பயமாருக்குப்பா.

நான் வேணா ஒரு ஐடியா தரட்டுங்களா?

சொல்லு...

பேசாம காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கோங்க.

அடபோப்பா நீ வேற வெந்த புண்ணுல முள்கரண்டிய விட்டு நோண்டுற. அந்த
கருமம் எல்லாம் வந்தா நான் ஏன் வீடு வீடா போய் பொண்ணு தேடறேன்.

இதுக்கு ஒரே வழிதான் இருக்கு. பேசாம ஊருக்கு போய் நல்ல வேலையா பாத்து
செட்டில் ஆகிடுங்க.

நானும் அதை யோசிச்சேன். நான் பாக்குற வேலைக்கு மிஞ்சி மிஞ்சி போனா நாலு
L தான் தருவானுங்க அப்புறம் இங்க வாழ்ந்த சுகவாழ்க்கை அங்க கிடைக்காது.
உள்ளதும் போச்சுடா நொள்ளன்னு முட்டிக்கணும்.

"உன் வாழ்க்கை உன் கையில்"

இப்படி ஒரு ஆபத்து இருக்குன்னு தெரியாம நான் வேற ஊரெல்லாம் தமுக்கு
அடிச்சிட்டனே. இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போயிடல நான் துபாய்காரன்
இல்லிங்கோன்னு ஒரு பதிவு போட்டுட்டு எஸ்கேப் ஆகிட வேண்டியதுதான்.

ஆகவே மக்களே...

இந்த மாசத்துலருந்து நான் துபாய்வாசி இல்ல, அபுதாபிவாசி :)

இந்த மாதம் தாயகம் செல்ல இருக்கும் ஷார்ஜாவாசி அஞ்சா நெஞ்சன் கோபி
அவர்களுக்கு மேற்சொன்ன விபத்து நடக்காமலிருக்க இறைவனை வேண்டுகிறேன்.