எல்லையற்ற அன்பு கொள்வோம்

Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts

Thursday, February 15, 2007

போகாதே... போகாதே... - தீபாவளி

யுவன் இசையில் சோகமான சோலோ பாடலை பெரும்பாலும் அவரே பாடிவிடுவார்
மொட்டையின் குரல் அளவுக்கு சோகத்தை வரவழைக்க முடியாவிட்டாலும்
ஓரளவுக்கு அருகில் வருகிறார் மோசமில்லை. படத்தின் கதை மூன்றாம்பிறையின்
ஒன்றுவிட்ட சித்தப்பா கதைதான். கதாநாயகிக்கு நடந்த ஒரு விபத்தில் கடந்த
மூன்று வருடங்களாக நடந்த சம்பவங்கள் யாவையும் மறந்து விடுகிறார்.
மாறுதலுக்காக சென்னை வருபவர் (பில்லுவை)ஜெயம் ரவி காதலிக்கிறார். பின்னர்
ஒரு அதிர்ச்சியான சம்பவத்தில் கடந்த மூன்று வருடங்களாக நடந்தது எல்லாம்
ஞாபகத்திற்கு வர பில்லுவை மறந்துவிடுகிறார். (இதுக்கு பேரு வியாதியாம்)
சமீபத்தில் விகடன் கட்டுரையில் ஒரு பெண் இதுமாதிரி பாதிக்கப்பட்டதாக படித்த
ஞாபகம். மறுபடி அவரை கைபிடிக்கிறாரா அவருக்கு நினைவு திரும்புகிறதா
என்பது மீதி கதை. ரவிக்கு சோக காட்சிகள் சுத்தமாக வரவில்லை. ஆள் மட்டும்
பாக்குறதுக்கு HULK படத்துல வர்ற ஹீரோ மாதிரி உடம்பு அளவுக்கு மீறிய
ஆஜானுபாகு என்று சொல்ல முடியாது கை கால் எல்லாம் ரொம்ப ஓவரா
வளர்ந்துடுச்சி மூன்றாம் பிறை படத்தில் ஸ்ரீதேவிக்கு ஞாபகம் வர கமல் செய்யும்
நடிப்பு ஏனோ கண் முன் வந்து போனது. தமிழ்சினிமா ரசிகர்கள் யாரும் இன்னும்
மறந்திருக்க மாட்டார்கள் அந்த ரயில் காட்சியை.

சொன்ன விதத்தில் சுவாரசியமாக இருக்கும்படி சொல்லி இருக்கிறார்கள். படம்
முழுக்க காமெடி தூவி அழகாக இருக்கிறது. இந்த தமிழ்சினிமாவில ஹீரோவ என்ன
ஏதுன்னே தெரியாம ஊரே கொண்டாடும் அதே மாதிரி இந்த படத்துலயும் இருக்கு.
படத்துல பெரிய ப்ளஸ் பாயிண்ட் பாவனாவும் அவரின் நடிப்பும். ச்சே இந்த மாதிரி
ஒரு காதலி நமக்கு கிடக்க மாட்டாளான்னு ஏங்க வைக்கும் அழகு. என்னதான் அழகா
இருந்தாலும் கோலிவுட்டுல சொல்லிக்கற மாதிரி ஒரு தமிழச்சி கூட இல்லயேன்னு
பொறாமையா இருக்கு.

சில பாடல்கள் கேட்டவுடன் நச்சென்று மனதில் பதியும். சில பாடல்களை பலமுறை
கேட்டால்தான் மனதில் பதியும். முதலில் சொன்ன வகையை சேர்ந்து இந்த பாடல்.
வரிகள் சாதாரணமான வார்த்தைகளாக இருந்தாலும் பாடலின் இசை பலமுறை
கேட்க வைக்கிறது. பாடலின் நடு நடுவே வீணையோ, மேண்டலினோ தெரியவில்லை
(தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) இனிமையாக உள்ளது. இன்னும் கொஞ்ச நாள்
இளைஞர்களின் உதடுகளில் குடியிருக்க போகும் பாடலாக அமையும் போல இருக்கு.
பாடலை கண்ண மூடிகிட்டு மனசுக்குள்ள பாவனாவை கொண்டு வந்தீங்கன்னா
பாடலை முழுமையாக ரசிக்கலாம். அதுக்கு வசதியா ஒரு போட்டோ கீழ ஒரு
போட்டோ இருக்கு பாத்து ரசிக்கலாம்.

Photobucket - Video and Image Hosting

போகாதே... போகாதே...
நீயிருந்தால் நான் இருப்பேன்
போகாதே... போகாதே...
நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும்
கனவாய் என்னை மூடுதடி
யாரென்று நீயும் எனைப் பார்கும்போது
உயிரே உயி போகுதடி
கல்லறையில் கூட ஜன்னல் ஒணு வைத்து
உந்தன் முகம் பார்ப்பேனடி...

போகாதே... போகாதே...
நீயிருந்தால் நான் இருப்பேன்
போகாதே... போகாதே...
நீ பிரிந்தால் நான் இறப்பேன்

கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்
அது போலதானே உந்தன் காதல் எனக்கும்
நடைபாதை விளக்கா காதல்
விடிந்தவுடன் அணைப்பதற்கு
நெருப்பாலும் முடியாதம்மா
நினைவுகளை அழிப்பதற்கு
உனக்காக காத்திருப்பேன் ஓ.. ஓ
உயிரோடு பார்த்திருப்பேன் ஓ..ஓ

போகாதே... போகாதே...
நீயிருந்தால் நான் இருப்பேன்
போகாதே... போகாதே...
நீ பிரிந்தால் நான் இறப்பேன்

அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்
கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்
என் வாழ்வில் வந்தேவானாய் ஏமாற்றம் தாங்கலையே
பெண்ணே நீ இல்லாமல்...
பூலோகம் இருட்டிடுதே...

போகாதே... போகாதே...
நீயிருந்தால் நான் இருப்பேன்
போகாதே... போகாதே...
நீ பிரிந்தால் நான் இறப்பேன்


பாடல் தரவிறக்கம் செய்ய ஏராளமான தளங்கள் உள்ளது.
www.123musiq.com
www.indiamoviezone.com
www.tamilmp3world.com

ராகாவில இன்னும் போடவில்லை.

பாட்டை மட்டும் எழுதலாம்னு நினைச்சி எழுதினேன் படத்தோட விமர்சனமும்
எழுதற மாதிரி ஆயிடுச்சி. இந்த கலப்பைய கைல புடிச்சாவே இப்படிதான் சுலபத்துல
கீழ வைக்க முடியல. போன சென்மத்துல வெவசாயியா பொறந்துருப்பனா தெரில.

Thursday, December 21, 2006

வெயில் திரைப்படவிமர்சனம்

வெயில் படத்தின் பாடல்களை கேட்டபொழுதே படம் பார்க்க வேண்டும்
என்ற ஆர்வம் தோன்றியது. இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் அவரது
சீடர் வசந்தபாலன் எடுத்திருக்கும் படம் இவர் முன்னரே ஆல்பம் என்ற
படம் எடுத்திருந்த போதும் அது கவனிக்கபடாமலேயே போய்விட்டது.
அந்த குறையை இந்த வெயில் கண்டிப்பாக தீர்க்கும். நிச்சயம் பார்க்கவேண்டிய
படம்தான் என்று பார்த்தவுடனே மனதிலும் தோன்றியது.

Photobucket - Video and Image Hosting

வாழ்க்கையின் சகலபரிமாணங்களிலும் தோற்ற ஒருவனின் கதையை
படமாக்க முயன்றிருக்கிறார்கள். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
இதுவரை இந்த முயற்சி தமிழ் சினிமாவில் இல்லை. சினிமா
கதாநாயகனுக்கான எந்த அடையாளமும் இல்லாமல் கதைக்கான,
கதைக்களத்துக்கான இரு கதாநாயகன்களாக பசுபதி (முருகேசன்).
அவரின் தம்பியாக பரத் (கதிர்).

Photobucket - Video and Image Hosting

முதல் பாடல்காட்சியிலேயே தெரிந்து விடுகிறது இது வழக்கமான சினிமா
இல்லையென்பது. வெயிலோடு விளையாடி பாடலில் வரும் அத்தனை
விஷயங்களும் சிறுவயதில் நாம் செய்த ரசிக்கும்படியான குறும்புகள்.

பள்ளி கட் அடித்து விட்டு தியேட்டரில் திருட்டு தம் அடிக்கும் மகனை
பூதாகரமாக கண்டிக்கிறார் தந்தை. அவமானம் பொறுக்க முடியாமல்
பணத்தை திருடிக்கொண்டு வீட்டை விட்டு ஓடி விடுகிறார் பசுபதி.
இருக்கும் பணத்தையும் தொலைத்து விட்டு தியேட்டரில் வளர்கிறார்.
அங்கிருந்து காதல், சமூகம், எல்லாம் விளையாடுகையில் கண் முன்னே
காதலியின் தற்கொலை, தியேட்டர் இடித்த பிறகு வேலையும் போய்
ஏன் வாழ்கிறோம் என்று வேதனையில் இருக்கும்போது வீட்டுக்கு
போக முடிவெடுக்கிறார். இருபது வருடம் கழித்து வரும் மகனை
கண்டதும் பாசத்தில் தாய், இன்னும் அதே கோபத்தில் தந்தை இந்த
இடத்தில் அந்த தந்தை கதாபாத்திரத்தை குறிப்பிட்டே ஆகவேண்டும்.
மிக அற்புதமாக செய்திருக்கிறார்.

Photobucket - Video and Image Hosting

வீட்டிலும் தான் எதிர்பார்க்கும் பாசம், அன்பு கிடைக்கவில்லை
தங்கைகள் தன்னை அண்ணனாக ஏற்கவில்லை, திரும்பவும் திருட்டு
பட்டம் என்று காட்சிக்கு காட்சி தோல்விகள் கண்முன்னே தோன்றும்
போது பிரமிப்பு மீளவில்லை. பசுபதி நடிப்பின் உச்சத்தை தொட
முயன்றிருக்கிறார் அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். என்
முகத்திலே முழிக்காதே என்று சொன்ன அதே அப்பா மகன் காலடியில்
வீழ்ந்து மன்னிப்பு கேட்கிறார்.

சிறப்பான ஒளிப்பதிவு, தரமான இசை படத்துக்கு கூடுதல் பலம் கிடைக்கிறது.
முத்துக்குமாரின் வரிகளில் "உருகுதே மருகுதே" பாடல் மிக அழகாக படமாக்க
பட்டிருக்கிறது. அழகான வரிகளும் கூட. "வெயிலோடு விளையாடி" பாடல்
உங்கள் உதட்டில் குறுநகையயும் ஆச்சரியத்தையும் கொடுக்கும். "காதல்
நெருப்பின் நடனம்" உயிரே பாடலை நினைவுபடுத்துகிறது. அருவா பாடலும்
ஊராந்தோட்டத்தில பாடலும் தாளம் போட வைக்கிறது. "இறைவனை உணர்கிற"
காதுக்கு இனிமை.

Photobucket - Video and Image Hosting

தென்மாவட்டமான விருதுநகரில் கதை நடக்கிறது. அந்த மண்ணுக்குரிய
வெக்கைதான் படத்துக்கு பெயராக வைத்திருக்கிறார்கள். வெயிலின்
குறியாக கோபம், தவிப்பு, வெறுப்பு, மற்றொன்றாக பசுபதியயும் சொல்ல
வைக்கிறது. படத்தின் முழுக்கதையும் இவரை சுற்றியே வருகிறது இவரை
சுற்றி பலரும் அருமையாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

பரத்துக்கு ஜோடியாக பாவனா. இவர் தனது பங்களிப்பை செய்து விட்டு
கடைசியில் காணாமல் போகிறார். பசுபதிக்கு ஜோடியாக இருவர் இருந்தாலும்
இதிலும் தோல்விதான். படத்தில ஸ்ரேயான்னு ஒரு அம்மணி இருக்காங்க
சவுண்டையெல்லாம் தூக்கி வெச்சிட்டு பாந்தமான நடிப்பை தந்து நம்மளை
நிம்மதி பெருமூச்சு விட வைக்கிறார்.

Photobucket - Video and Image Hosting

மொத்தத்தில படம் பார்த்துவிட்டு வெளிவரும்போது ஏதோ ஒரு கிராமத்து
வீட்டின் உள்நுழைந்து ஒருவர் வாழ்க்கையை பார்த்து வந்தது போன்ற
உணர்வு. சண்டைக்காட்சிகள் மிக தத்ரூபமாக இருந்தாலும் ரத்தம் அதிகம்
நன்றாக அமைத்திருக்கிறார்கள் சபாஷ்.

பஞ்ச் டயலாக், குலுக்ஸ் நடனங்கலை எதிர்பார்த்து சென்றால் ஏமாற்றமே
மிஞ்சும். வித்தியாசமான படங்களை விரும்பி பார்ப்பவர்களுக்கு ஒரு
விருந்து இந்த படம்.

இதை தயாரித்ததற்காக ஷங்கருக்கு ஒரு நன்றி.

இதை எழுதி இயக்கிய வசந்த பாலனுக்கும் வாழ்த்துக்கள்

எச்சரிக்கை!!!

இது ஒரு எச்சரிக்கை பதிவு!!!

காலம் கடந்த எச்சரிக்கைதான் ஆனாலும் கவனமா இருங்க பின்னாடி இதே
தப்பை செஞ்சிறாதிங்க.

சென்னைக்காதல்

Photobucket - Video and Image Hosting

இந்த படத்தை நான் பார்க்க கூடாதுன்னு சில தரப்புகளில் இருந்து
எதிர்ப்புகளும், பல இடங்களில் இருந்து எச்சரிக்கைகளும் வந்தன். இதே
போல எச்சரிக்கைகள் வல்லவன் படம் பார்க்க முடிவு செய்த போது என்
நல விரும்பிகள் கொடுத்தார்கள். அதனை அலட்சியம் செய்து பார்த்தேன்.
அதன் பின்விளைவு அப்புறம் தெரிந்தது.

சரி படத்துக்கு வருவோம் அதுக்கு முன்னாடி இயக்குனர் விக்ரமன் பத்தி
கொஞ்சம் சொல்லுவோம். இவர பத்தி எனக்கு இருக்குற ஒரே கருத்து
செண்டிமெண்ட் கலந்த காமெடி படம் எடுப்பாரு. பெரும்பாலும் இவரோட
முந்தைய படங்களின் கதையயே மத்த படங்களுக்கும் உபயோகிப்பார்
ஆங்கிலப்படங்களையோ, வேற்று மொழிப்படங்களையோ பார்த்து காப்பி
அடிக்காம ஒரே கதையை திரும்ப திரும்ப எடுக்கறதினால இவரை
பாராட்டலாம். லாலாலா பிண்ணனி இசையும், ஆர்மோனியத்தின் அபஸ்வர
ஒலியையும் இவரையும் பிரிக்கவே முடியாது அப்படி ஒரு பந்தம்.

Photobucket - Video and Image Hosting

இவரு இயக்குனராக முயற்சி செய்யும்போது எழுதின கதைய இப்ப
எடுத்திருக்காரு படத்த பாத்தா அந்த மாதிரிதான் தெரியுது. இதே மாதிரி
கதையில ஆயிரத்தி சொச்சம் படம் தமிழ்ல வந்திருக்கு.இப்ப எதுக்கு இந்த
படத்தை எடுத்தாரோ தெரியல. ஒருவேளை தாணுகிட்ட ஏகப்பட்ட பணம்
இருந்திருக்குமோ தெரியல.

ஒரு சென்னைப்பயன் படிக்காம ஊர சுத்தி, வீட்டையும் மதிக்காம, யாரையும்
மதிக்காம ஒரு பிகரை(ஜெனிலியா) காதல் செய்கிறார். அவளையே கல்யாணம்
செய்யிறதுக்கு எல்லா விதமான எதிர்ப்புகளையும் சந்தித்து காதலில் வெற்றி
பெறுகிறார். " உன்ன வளர்த்ததுக்கு பதிலா ஒரு எருமை மாட்டையே
வளர்த்திருக்கலாம்"னு பரத்தோட அப்பா சொல்லப்போக ஒரு எருமை
மாட்டையே வீட்டுக்கு கொண்டு வந்து நிறுத்தறாரு பரத். இதுக்காக படத்தில
15 நிமிஷம் காமெடின்ற பேர்ல இந்த சீனை எடுத்திருக்காங்க. யெப்பா
சகிக்கலடா சாமி... ஹீரோவோட காதலுக்கு உதவி செய்யறதுக்காகவே
விக்ரமன் படத்தில குறைஞ்சது நாலு பேர் இருப்பாங்க. இவங்க உயிரை
குடுத்தாவது ஹீரோவை காப்பாத்துவாங்க. அந்த மாதிரி இதுல நாலு பேர்
நடிச்சிருக்காங்க அதில ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் கொஞ்சம் ஆறுதல் தருகிறார்.
ஏற்கனவே தொலைக்காட்சில செய்த காமெடியையே திரையிலும் பார்த்ததுதான்
கொஞ்சம் புதுமையா செஞ்சிருக்கலாம்.

Photobucket - Video and Image Hosting

அது என்னவோ தெரியல ஹீரோயின் அப்பா பயங்கரமான ரவுடியா வருவது
தமிழுக்கு எத்தனையாவது படம்னு. அழகான ஜெனிலியாவுக்கு ராதாரவி
அப்பாவாக நடித்திருக்கிறார். எங்க சார் போயிருந்திங்க இவ்ளோ நாளா?.
இவ்வளவு நாளா காத்திருந்தது வீண் போகல. ஒரு அருமையான படத்தில
நடிச்சிட்டிங்க.

கிளிகள் மும்பைக்குதான் பறந்து போச்சின்னு ராதாரவிக்கு எந்த படை வீட்டு
அம்மன் கனவில வந்து சொல்றாங்கன்னு தெரியல அதுவும் இவரு தோஸ்தான
இன்னொரு ரவுடி வீட்டுலயே தஞ்சம் புகுந்து அங்கயே யாருக்கும் தெரியாம
இருக்கறது காமெடியின் உச்சம்.

இப்ப தமிழ் சினிமா இருக்கற சூழ்நிலைக்கு எப்படியெல்லாம் படம் எடுக்க
கூடாதோ அப்படி எடுத்திருக்கிறார் விக்ரமன் அதுக்காகவாச்சும் அவருக்கு
உதவி இயக்குனர்கள் நன்றி சொல்லணும். படத்துல ஆறுதல் அதில வரும்
பாடல்கள் அப்படின்னு கூடசொல்ல முடியாது பிண்ணனி இசை படு
கேவலம். சீரியல்ல கூட இதை விட பிரமாதமா கொடுக்கறாங்க. த்ரில்
காட்சிக்கு பிண்ணனிஇசையா டொட்ட டொய்ங் டொட்ட டொய்ங்தான்
போடறாங்க.

ஏண்டா நாயே படம் பாத்துட்டு இந்த வைய்யி வைய்யரேன்னு கேக்கறிங்களா?

ஜெனிலியான்னு ஒரு அம்மணி நடிச்சிருந்த ஒரே காரணத்துனாலயும், கூட பரத்தும் இருக்கறதினால பாத்து தொலச்சிட்டங்க.

பள்ளி ஆண்டுவிழா நாடகத்துல கண்ணுல மை வைக்க தெரியாம வெச்சி,
சாந்துபொட்டை உதட்டு சாயமா போட்டுகிட்டு ஏதாவது ஒரு பொண்ணு ஓரமா
ஒரே இடத்தில நின்னுகிட்டு கைய மட்டும் சுத்துவாங்க அதுக்கு பேரு டான்ஸ்.
ஆமாங்க அந்த மாதிரி ஒரு நாடகத்தை பார்த்திருந்திங்கன்னா அதுல வர்ற
பொண்ணு கேரக்டர்தான் ஜெனிலியா பண்ணது.

என்னவோ போ!

இன்னிக்கு வெயில் படம் பாக்கறேன் அதுவாச்சும் நல்லா இருக்குதான்னு பார்ப்போம்.

Friday, December 01, 2006

THREE BURIALS

சினிமா பாத்தேன்னா விமர்சனம் எழுதற பழக்கமே இல்ல. ஏன்னா விமர்சனம் பண்ற அளவுக்கு நம்ம பொதுஅறிவு கிடையாது. படத்துல நமக்கு பிடிச்ச காட்சிகளையும் அதை பார்வையாளன் பார்வையில சொல்றதும்தான் எனக்கு பிடிச்சது. அதுவும் ஆங்கில படம்னாவே ரெண்டு அடி தள்ளியே நிப்பேன். நேத்திக்கு என்னவோ ஆங்கிலப் படம் பாக்கணும்னு வெறி வந்துடுச்சி சரி பாத்துருவோம்னு பக்கத்துல இருக்குற டப்பா டி.வி.டிகடைக்கு போனேன். என் அறிவுக்கு எட்டிய வரைக்கும் ஆங்கிலத்துல தமிழ்ல டப் செய்யப்பட்ட படங்கள்தான் ஆங்கிலப்படங்கள்னு சொல்வேன். அதனால நம்ம விஷயத்துல ஆங்கிலப்படம்னாவே அனகோண்டா, ஜுராசிக்பார்க் இந்த லெவல்தான். கடைக்காரர்கிட்டயே கேட்டேன் எதுனா நல்லா ரசிச்சி பாக்கற மாதிரி படம் இருந்தா குடுங்கண்ணேன்னு அவரும் அருமையா இருக்கும்னு ஒரு படத்தை கிளி மாதிரி கவ்வி போட்டாரு. THREE BURIALSனு ஒரு படம். படம் பார்த்து முடிக்கற வரைக்கும் அந்த படத்தின் தலைப்பு கூட அர்த்தம் தெரியாது எனக்கு என்பதுதான் உண்மை.

Photobucket - Video and Image Hosting


வழக்கம்போல அமெரிக்காவில நடக்கற கதைதான். வறுமையின் கோரப்பிடியிலிருந்து தப்பிக்க மெக்ஸிகோ நாட்டிலிருந்து மலைகள், பாலைவனங்கள் வழியாக பயணம் செய்து அமெரிக்காவிற்கு ஊடுருவும் மெக்ஸிகோ மக்கள். அதை தடுக்கும் அதிகாரிகள் அதையும் மீறி வருபவர்கள் என இதுதான் கதை. ஆனால் வித்யாசமாக சொல்லி இருக்கிறார்கள். படத்தில் யார் கதாநாயகன் என்பது தெரியவில்லை. எனக்கு தெரிந்து படத்தின் இயக்குனரும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் டாம்மி லீ ஜோன்ஸ் என்பவரைத்தான் சொல்வேன். ஒவ்வொரு நொடியும் கவனமாக பார்த்தால்தான் புரியும் அவ்வளவு நுணுக்கமான கதை. படத்தில் நிறைய ஸ்பானிஷ் வசனங்கள் வருகின்றன. எனக்கு ஸ்பானிஷ் தெரியாது ஆனால் இந்த அலைவரிசையில் (ரேடியோ) வரும் அனைத்து நிகழ்ச்சிகளையும் கேட்பேன். இனிமையான மொழி அது. என்று கண்தெரியாத ஒரு பெரியவர் சொல்வார். என்னை கவர்ந்த இரண்டாவது கதாபாத்திரம் அவருடையதுதான்.

Photobucket - Video and Image Hosting

மெல்கியுடெஸ் எஸ்ட்ரடா(Melquiades Estrada) என்னும் மெக்சிகோ இளைஞன் எல்லையை தாண்டி டெக்ஸாஸ் நகரத்திற்கு வருகிறான். நகரம் என்றால் ஒதுக்கு புறமான கிராமம், அங்கு பண்ணை வைத்திருக்கிறார் ஜோன்ஸ் அவரிடம் ஏதாவது வேலை கேட்கிறார். என்ன வேலை தெரியும் உனக்கு? எனக்கு மாடு மேய்க்க தெரியும் (கவ்பாய்) என்று சொல்கிறார். முதல் பார்வையிலேயே இருவருக்கும் சினேகம் ஏற்பட்டுவிடுகிறது. எஸ்ட்ரடாவை தன்னுடனே வைத்துக்கொள்கிறார் ஜோன்ஸ். எஸ்ட்ரடா தன் குடும்பம் பற்றியும், வீட்டை பற்றியும் விவரிக்கும் இடத்தில் நெகிழ்கிறார் ஜோன்ஸ். மிக்க மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் கதையில் குண்டு போடுகிறார் பெர்ரி பெப்பர் (Barry Pepper).

Photobucket - Video and Image Hosting

ஒருமுறை தூரத்தில் உள்ள பண்ணையை பார்க்கசெல்லும் எஸ்ட்ரடா ஒரு நரியை சுடுகிறார். தன்னைத்தான் சுடுகிறார்கள் என்று பெப்பர் எஸ்ட்ரடாவை சுட்டு விடுகிறார். அதை மறைத்தும் விடுகிறார். இதை கண்டுபிடித்து அந்த காவலதிகாரியான பெப்பரை பழி வாங்குகிறார் ஜோன்ஸ் இதுதான் கதை என்றாலும் அதை திறம்பட சொன்னதுதான் படத்தின் சிறப்பு. முன்பொரு முறை நான் இறந்தால் என்னை என் வீட்டில் அந்த இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் புதைக்கும்படி விருப்பம் தெரிவித்ததை நினைவில் கொண்டு அதை நிறைவேற்ற அதே போலிஸ் அதிகாரியை கடத்தி வந்து எஸ்ட்ரடாவை புதைத்த இடத்தில் இருந்து பிண்த்தை தோண்டி எடுத்து அதை அவனையே சுமக்க வைத்து குதிரையில் மெக்சிகோ புறப்படுகிறார் ஜோன்ஸ். இந்த பயணத்தில் ஜோன்ஸிடமிருந்து தப்பிக்க பெப்பர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகின்றன. இந்த நீண்ட நெடும்பயணத்தில் பல அனுபவங்கள் நமக்கே ஏற்படுவது போல இருக்கிறது.

Photobucket - Video and Image Hosting

வழியில் பல இன்னல்களை இருவருமே சந்திகிறார்கள். மலைகள், பாலைவனங்கள் பல கடந்து பிணத்தை எடுத்து செல்வதென்பது சாதாரண விஷயமில்லை. எஸ்ட்ரடாவின் ஆசைக்கிணங்க அதை செய்கிறார். படத்தில் இவரின் நடிப்பி என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. மனுசன் கொஞ்சம் கூட அலட்டிக்கவே இல்லை இத்தனைக்கு இவரேதான் இயக்குனர். இந்த பயணத்தில் இவர்கள் சந்திக்கும் மெக்ஸிகோ மக்கள், கண் தெரியாத கிழவர், ஆற்றை கடக்கவும் விலாசத்தை கண்டுபிடிக்க உதவும் உள்ளூர்வாசியும்
நடிப்பில் மனதில் பதிகிறார்கள்.

பல இன்னல்களுக்கிடையில் எஸ்ட்ரடாவின் வீட்டை கண்டுபிடிக்கிறார்கள் யாருமே இல்லாத மலைக்காட்டில் சுற்றுச்சுவர்கள் மட்டுமே உள்ள இடம்தான் அந்த வீடு. இந்த இடத்தில் புதைக்கவா இத்தனை கஷ்டப்பட்டு பிணத்தை வைத்துக்கொண்டு வந்தார்கள் என்று நினைக்கவே முடியவில்லை. அத்தனை சிறப்பாக எடுத்திருக்கிறார்கள். பெப்பரின் கையாலேயே அந்த வீட்டை செப்பனிட வைத்து குழியும் பறித்து அதில் புதைக்கிறார்கள். எஸ்ட்ரடாவின் குடும்ப புகைப்படத்தை வைத்து மன்னிப்பு கேட்கச்சொல்லுகிறார் ஜோன்ஸ்.
தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பும் கேட்கிறார் பெப்பர்.

கேட்பதற்கு பைத்தியக்காரத்தனமாக இருந்தாலும் படத்தில் பார்க்கும்போது மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள்.

கடைசியில் கழுதையை தனக்கு எடுத்துக்கொண்டு குதிரையை பெப்பருக்கு அளித்து விட்டு அமெரிக்கா புறப்படுகிறார் ஜோன்ஸ். இத்துடன் கதை முடிகிறது. படத்தில் என்னதான் சொல்கிறார்கள் என்று பார்த்தால் மெக்சிகோ மலை வாழ் மக்களின் ஏழ்மை நிலையையும், எல்லைப்பாதுகாப்பு அதிகாரிகள் கண்மூடித்தனமாக அந்த மக்கள் மீது நடத்தும் தாக்குதல்கள் பற்றியும் தொட்டு சென்று உன்னதமான ஒரு நட்பின் பிரிவை சொல்லியிருக்கிறார்.

நான் படம் பார்த்து தெரிஞ்சிகிட்டது இவ்வளவுதான். படம் பார்த்தவங்க நான் எழுதினதுல குத்தங்குறை இருந்தா எடுத்து சொல்லுங்க. ஏன்னா எனக்கு புரிஞ்ச மாதிரிதான் எழுதி இருக்கிறேன்.

இதையெல்லாம் எழுதி முடிச்சி வாசிச்சா எனக்கே பொறுக்கல, என்னடா ஒரு நல்ல படத்தை இப்படி நாஸ்தி பண்ணி எழுதிட்டமோன்னு. என்ன செய்யிறது எல்லாம் அந்த கடைக்காரன சொல்லணும்!.

Wednesday, October 04, 2006

லஹே ரஹோ முன்னாபாய் - என்ன சொல்கிறார்?

Image Hosted by ImageShack.us

விமர்சனம் எழுதற அளவுக்கு நமக்கு விஷயஞானம்
கிடையாது ஏன்னா நான் பார்த்த முதல் இந்தி படம்
என்பதால்தான். முன்னாபாய் M.B.B.S படத்தின் பெயரில்
பாதியை மட்டுமே லஹேரஹோ வுக்காக எடுத்து
இருக்கிறார்கள். மற்றபடி இதற்கும் முந்தைய பாகத்திற்கும்
துளியும் சம்பந்தமில்லை. படம் முழுக்க காந்திய
சிந்தனைகளை தெளித்திருக்கிறார்கள்.

Image Hosted by ImageShack.us

காமெடி படங்களில் ஹீரோவுக்கு துணையாக ஒரு
கேரக்டர் இருந்தே ஆகவேண்டும் என்ற விதியை
இந்த படம் ஒத்திருந்தாலும் கொஞ்சம் வித்யாசம்
இருப்பதை உணர முடிகிறது. சஞ்சய்தத் ஒரு ரவுடி
ஆள் அசாத்திய உயரத்துடனும் வடநாட்டு லாரி
டிரைவரை நினைவுபடுத்துகிறார். ஆரம்ப காட்சியே
தூள். ரேடியோவுடன் பேசிக்கொண்டிருக்கிறார்.
கதாநாயகி ஒரு ரேடியோ ஜாக்கி அந்த குரலை
கேட்டே மயங்கி விடுகிறார் சஞ்சய். அவளை
எப்படியாவது பார்க்கவேண்டும் என்ற ஆவலில்
இருக்கிறார். இந்த படத்தில் குறிப்பிடவேண்டிய
கதாபாத்திரங்கள் காந்தியாக நடித்திருக்கும்
பெரியவரும் சஞ்சயின் தம்பியாக நடித்திருக்கும்
அர்ஷத் வார்ஸியும் மனுசனுக்கு காமெடி
சூப்பரா வருது.

Image Hosted by ImageShack.us

குட்மாஆஆஆர்னிங் மும்பை என்று குயில் கூவி
மும்பையை எழுப்புகிறது அந்த குயில்தான் வித்யா
பாலன். சேச்சிக்கு உண்டான எந்த அடையாளமும்
இல்லாமல் இருக்கிறார் அதனாலே ரசிக்க முடிகிறது.
காந்தி பற்றிய கேள்விகளுக்கு சரியான பதில்
சொல்பவர்கள் வித்யா பாலனுடன் ரேடியோவில்
பேசலாம் இதுதான் போட்டி இதற்காக நான்கு
பேராசிரியர்களை கடத்தி வந்து விடுகிறார் சஞ்சய்
பத்து பேர் சஞ்சய்யுடன் இருந்து ரேடியோவுக்கு
போன் போட்ட வண்ணம் இருக்காங்க யாருக்கு
முதலில் லைன் கிடைத்தாலும் சஞ்சயிடம் கொடுத்து
பேராசிரியர்களின் உதவியுடன் கேள்விகளுக்கு
சரியான விடை சொல்கிறார்.

Image Hosted by ImageShack.us

காந்தியை பற்றி லெக்சர் கொடுக்க வேண்டி
மூன்று நாள் கண்விழித்து அவரை பற்றி படிக்கிறார்.
சஞ்சய் கண்ணுக்கு மட்டும் காட்சி தருகிறார் காந்தி.
ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் நேயர்களின் பிரச்சினை
களுக்கு நேரடியாக காந்தியின் உதவியுடன் தீர்வு
சொல்கிறார் அந்த காட்சிகள் மிக உணர்ச்சிகரமாக
இருக்கீறது. இவன் கலந்து கொண்ட நிகழ்ச்சி
ரேட்டிங்கில் உயர வித்யா பாலனுக்கு கல்தா
கொடுத்துவிட்டு சஞ்சயை நிகழ்ச்சி நடந்த வைக்கிறது
ரேடியோ நிர்வாகம்.

Image Hosted by ImageShack.us

இதற்கு நடுவில் கதாநாயகியின் வீடு சஞ்சய்க்கு தெரியாமல்
காலி செய்யப்படுகிறது. வில்லன் தந்திரமாக எல்லாரையும்
வெளியூருக்கு அனுப்பிவிட்டு வீட்டை காலி செய்ய பழி
சஞ்சய் மீது வருகிறது. இவையெல்லாவற்றையும் சரி
செய்து காதலியுடன் இணைகிறாரா என்பதுதான் கதை.
இதை மிக சுவாரசியமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

Image Hosted by ImageShack.us

மன்னிப்பு தமிழ்ல வேணா கேப்டனுக்கு பிடிக்காத
வார்த்தையா இருக்கலாம் ஆனால் காந்திக்கு
மிகப்பிடித்த வார்த்தை. தவறு செய்து விட்டால்
தயங்காமல் மன்னிப்பு கேட்டு விடு என்கிறார்.
ஒரு சீனில் சஞ்சய் அர்ஷத்தை கை நீட்டி அடித்து
விட அதற்காக காந்தி மன்னிப்பு கேட்க சொல்லும்
காட்சியில் தியேட்டரில் இருந்த அத்தனை முகங்களிலும்
கண்ணீர் வழிந்தது. பக்கத்தில இருந்த சேட்டு வீட்டு
மாமி குலுங்கி குலுங்கி அழுவுது. நமக்கு அரை குறையா
புரிஞ்சாலும் சோகத்தை மறைக்க முடியவில்லை.

Image Hosted by ImageShack.us

சஞ்சயின் கண்களுக்கு மட்டுமே தெரியும் காந்தி.
உன் கண்ணுக்கு தெரிகிறாரா என்று அர்ஷத்தை பார்த்து
கேட்கிறார் சஞ்சய். ஓ தெரியராறே, ஹாய் பப்பு என்று
கை கொடுக்க போவது காமெடியின் உச்சம்.

அடுக்கு மாடி குடியிருப்பில் மேல் தளத்தில் வசிப்பவர்
தினமும் என் வீட்டு வாசலிஃல் பான் மென்று துப்புகிறார்
என்ன செய்வது என்று ஒரு நேயர் கேட்கிறார். அதற்கு
காந்தி தினமும் அவர் செல்லும்போது சிரிப்புடன் ஒரு
வணக்கத்தை வைத்துவிட்டு அவர் துப்பிவிட்டு போன
கறையை துடையுங்கள். இதே போலவே அவரும்
செய்கிறார் மூன்றாவது நாளில் எச்சில் துப்புபவர்
திருந்தி விடுவார். அகிம்சையின் வலிமையை அந்த
இடத்தில் உணர முடிகிறது.

நாட்டில் அனைவரும் மறந்து போன ஒரு விஷயத்தை
நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
அதுதான் அகிம்சை.

மும்பை குண்டுவெடிப்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஒரு
நடிகர் என்பது மட்டும் நான் கேள்விப்படாதிருந்தால்
படத்தை இன்னும் ரசித்திருப்பேன்.

இந்த பதிவு விமர்சன பதிவு என்று நினைத்து வந்தவர்களிடம்
மாப்பு கேட்டுக்கொள்கிறேன்.