எல்லையற்ற அன்பு கொள்வோம்

Showing posts with label நூல்நயம். Show all posts
Showing posts with label நூல்நயம். Show all posts

Tuesday, July 21, 2009

வடக்கநந்தல் பேரூராட்சி துணை நூலகம் மற்றும் "என் கதை"

சரியாக ஏழாம் வகுப்பு படிக்கையில் நான் நூலகத்தினுள் நுழந்தது நினைவில்
இருக்கிறது. மரக்கட்டைகளின் அடியில் தப்பிவிட பறக்கும் தினசரிகளுக்கு அப்பால்
தனியான அறையில் நூலகர் இருப்பார். அங்கு உறுப்பினர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். ஏழாம் வகுப்பு படிப்பவர்க்கெல்லாம் நுழைய அனுமதி இல்லையாம். இடதுபக்க மூலையில்தான் சாமுத்திரிகா லட்சணம் பற்றிய புத்தகங்கள் இருப்பதாக செட்டியார்
வீட்டு பையன் சொன்னது நினைவில் இருக்கிறது. ஒரு பெண்ணின் முடியை
வைத்தே அவளது முகலட்சணங்களைக் கூட கண்டுபிடிக்க முடியுமாம். அப்பேர்ப்பட்ட புத்தகங்கள் இருக்குமிடத்தில்தான் எங்களை நுழைய அனுமதிக்கவில்லை. அதற்கு
பிறகு பத்தாம் வகுப்பு படிக்கையில் அரசு நூலகத்தில் அதிகாரப்பூர்வமாக அங்கத்தினராக சேர்ந்தபோது இனித்தது, ஆனால் முக்கியமாக நான் தேடிய புத்தகங்கள் எந்த மூலையில் தேடியும் கிடைக்கவில்லை. அப்போதைய நூலகம் வடக்கநந்தல் அரசுப்பள்ளிக்கு
அருகில் இருந்தது. நூலகத்தினுள் எப்போதும் காற்றாடியின் சப்தம் மட்டுமே கேட்கும். இப்போது பேரூராட்சி அலுவலகத்திற்கு அருகில் பஸ்நிலையம் பின்புறம், கார் ஸ்டேண்ட் என பரபரப்பான இடத்தில் இருப்பதால் அமைதியைக் காணவில்லை. முக்கியமாக
புத்தகங்கள் அடுக்கிய அறையினுள் அந்துருண்டையுடன் கூடிய புத்தகங்களின் வாசனை அறவே போய் ப்ளீச்சின் பவுடர் நாறல் அடித்தது.

இப்போது நூலகத்தினுள் நுழையும்போது கூட அங்கமுத்து சக்கரையின் மீதான
பயத்தினால் சற்றே பின்வாங்கினேன். ஏனென்றால் உறுப்பினராக சேரும்போது
அடம்பிடித்து சேர்ந்த நான் நாளடைவில் புத்தகங்கள் திருப்பித்தராமல் டபாய்க்கத்துவங்கினேன். சிலநாள் என் பின்னாலேயே சுற்றினார் அ.மு சக்கரை.
நான் பிடிபடவேயில்லை. கல்லூரி, மறுபடி கல்லூரி, வெளிநாடு என்று சுற்றி விட்டு இப்போழுது வந்தால் இப்போழுதும் அதே நூலகரே இருப்பாரோ, அடையாளம் கண்டுகொள்வாரோ என்று பயம் அதனாலே இங்கு வந்தநாள் முதல் நூலகம் பக்கம் தலைகாட்டவில்லை. சென்ற வார இறுதிக்கொண்டாட்டத்தின்
உச்சமாக எனது டயர் பஞ்சராகியது அதை நான்கு மைல் தள்ளி வந்து நல்லாத்தூர் என்னுமிடத்தில் ஒட்டக்கொடுத்துவிட்டு உட்கார்ந்திருந்தேன். சரியாக பஸ்நிறுத்தத்திற்கு
எதிரே அமைந்துள்ளது அந்தக் கடை. இரண்டு புளியமரங்களுக்கிடையில் ஒரு கடை
அதற்கு ஒரு நிறுத்தம். சிகரெட் கூட கிடைக்காத ஒரு இடத்தில் மாட்டிக்கொண்டதை நினைத்து வெந்தபடி கல்திண்டில் அமர்ந்திருந்தேன். ஒரு பேருந்து வந்தது. அதில்
இருந்து ஒருவர் இறங்கினார். சில முகங்களைப் பார்க்கும்போது பழகிய முகம் ஆனால்
மறந்து போயிருக்கும் ஞாபகத்தில் வராதவரை மூளையை போட்டு கசக்கிப்போட்டு பிழிந்தெடுத்து வாட்டிக்கொண்டிருக்கும்போது “சக்கர சார் என்ன பென்சன் நாளா...”
என்று கேட்டபோதுதான் எனக்கு உரைத்தது, அது பலவருடங்களாக என்னை
வலைவீசி தேடிக்கொண்டிருக்கும் அங்கமுத்து சக்கரை என்ற வடக்கநந்தல் சிறப்புநிலை பேரூராட்சியில் துணை நூலகத்தின் நூலகர் என்று. உடனே பயமும் பிடித்துக்கொண்டது என்னை ஒருவேளை அடையாளம் கண்டுகொண்டால்? திருட்டுப்பயலே உன்னால நான் எவ்ளோ அலைஞ்சேன் தெரியுமா..., நீ அந்த புக்கு திரும்பக்குடுக்காத பையன் தான?
தம்பி உன் பேர் கதிரவன் தான? மொத்தம் மூணு புக்கு திருப்பி தரல என் காச போட்டு கட்டினேன் ஏழு வருச வட்டி போட்டாக்கூட ஆயிரம் தொடும் ஒழுங்கா காச குடு...
இப்படி ஏதாவதொன்றை சொல்வார் என்று எதிர்பார்த்தேன் ஆனால் எதுவும்
சொல்லவில்லை. என்னை அடையாளம் தெரியவில்லை. பெரிய சந்தோஷம்.

என் கதை - நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை



சாருவின் எழுத்துத் தொனிக்கும் நாமக்கல் கவிஞரின் எழுத்துத் தொனிக்கும் ஆறு வித்தியாசங்களை கண்டுபிடித்துவிடலாம். அதனால்தான் சாருவின் வலைப்பக்கத்தில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது என்று கருதுகிறேன். இரண்டு பேருக்குமே தனிப்பட்ட வாழ்க்கையிலும் பொதுவாழ்க்கையிலும் நிறைய ஒற்றுமைகள் உள்ளதை வாசிக்கும்போது உணர முடிந்தது. குறிப்பாக கட்டை மீசையுடன் கம்பீரமான தோற்றம், புலவன் வறுமை (இதைப்பற்றி பெரிய அத்தியாயமே உள்ளது), இரண்டு திருமணங்கள், தன் மனைவியை தெய்வத்திற்கு சமமான ஒன்றாக முன்வைத்து அவர் எழுதும் பல உதாரணங்களுடன் சில பக்கங்கள், புலவரின் இல்லறவாழ்வு வறுமையால் வாடியபோது அவரது நண்பர்களே உதவுவது. குறிப்பாக உனது எழுத்துவேலையை நீ தொடர்ந்து செய் உனது
குடும்பம் பற்றி கவலைப்படாதே அதற்கான நிரந்தர வருமானத்தை உருவாக்கித்தர
நாங்கள் இருக்கிறோம் என. அதிலும் பல சிக்கல்கள் நிலம் எழுதித்தர முடிவு செய்யும்
நண்பர் ஒருவர் இறந்துவிடுவது, அல்லது எதோவொரு காரணத்தால் தடைபடுவது என.
கடைசியாக பாரதியார் மேல் கொண்டிருந்த அபரிதமான அன்பு. அவரை நேரில் சந்திக்க நடந்தே செல்வது என சொல்லிக்கொண்டே போகலாம்.

நாமக்கல் கவிஞரின் இளமைக்காலத்தை விவரிக்கும் இடங்களில் வெள்ளைப்படம்
பார்ப்பது போன்ற உணர்வைத் தந்தது. குறிப்பாக அவரது ஓவியத்திறமை. காவல்
துறை ஏட்டான அவரது தந்தையோ படம் வரையும் தொழில் சுத்தமாக பிடிக்கவில்லை.
தன் மகன் தன்னைப்போலவே காவல்துறையில் அதிகாரியாக வேண்டும் என்று ஆசை. பிரிட்டிஷ் உயர் அதிகாரி ஒருவரின் செல்லமகள் இறந்து போகிறாள் அவளுடைய
புகைப்படம் கூட ஒன்று இருப்பதாகவும் ஆனால் அது மிகச்சிறிய வயதில் எடுத்தது.
நான் சொல்லும் குறிப்புகளை வைத்து படம் வரைந்து தரமுடியுமா எனக்கேட்கிறார். அதுவரை தன் ஓவியத்திறமைக்கு எவருமே ஆதரவாக இல்லை என்ற குறை அவருக்கிருந்தது அதனால் உடனே சம்மதிக்கிறார். புகைப்படத்தை வாங்கிக்கொண்டு
அவர் சொல்லும் குறிப்புகளை எழுதிக்கொண்டு பதினைந்து நாளில் வரைந்து தருவதாக வாக்குறுதி அளிக்கிறார். தன் திறமைகள் அனைத்தையும் கொட்டி பார்த்துப் பார்த்து
செதுக்கி அதிகாரியிடம் காட்டுகிறார் அவர் சலனமேயில்லாமல் வெகுநேரம்
அமைதியாக பார்த்துவிட்டு புலவரிடம் கண்களில் நீர் கசிய சொல்கிறார். என் மகளை
எனக்கு மீட்டுத்தந்து விட்டீர்கள் என அணைத்துக்கொள்கிறார்.

அதுவரை ஓவியத்திற்கு விலையாக ஐம்பது ரூபாய் கொடுப்பார் என்று எண்ணியிருந்த புலவருக்கு மேலும் அதிர்ச்சி தரும் வகையில் தன் பணப்பையில் இருந்து
எண்ணாமலேயே அள்ளிக்கொடுக்கிறார். அதில் அறுநூற்று ஐம்பதுக்கும் மேலாக
பணம் இருக்கிறது. அந்தக்காலத்தில் அது மிகப்பெரிய பணம்.

புலவர் வாழ்நாள் முழுவது எதோவொரு குழப்பத்திலேயே வாழ்ந்து விட்டதாகவே வாசிக்கையில் தெரிகிறது. அல்லது வாழ்நாள் முழுவதும் மற்றவரின் விருப்பத்திற்காகவே வாந்ததுபோல என்று சொல்லலாம். தன் எதிர்கால வாழ்க்கைப் பற்றி தன் தந்தையே எல்லாவற்றையும் தீர்மானிப்பது. தன் திருமணம், அசைவத்தை விடவேண்டும் என்று நான்கைந்து முறை சபதமெடுத்து அவற்றில் தோல்வியடைவது, இல்லறவாழ்வில் வறுமையில் வாடுகையில் தன் தந்தை சொல்படி போலிஸ் உத்தியோகத்திற்கு சென்றிருந்தால் இந்த வருமை எட்டிப்பார்த்திருக்காது என வருந்துவது என நிறைய சொல்லலாம்.

இவரின் இளமைக்காலம் மிகுந்த சுவாரசியமுள்ளதாகவே தெரிகிறது. ஒருபாடம் தவிர
மற்ற எல்லாப்பாடங்களிலும் மிகுந்த ஞானம் கொண்டிருந்தார். அது கணிதம். இவருக்கு கணிதம் கற்பிக்க பல பிரயத்தனங்கள் செய்தும் பலன் அளிக்காமல் போகிறது. சிறந்த கால்பந்து வீரராகவும் இருந்திருக்கிறார். சுதந்திரத்துக்கு முந்திய இந்தியாவின் மூலை முடுக்கு ஒன்றுவிடாமல் சுத்தி வந்திருக்கிறார். ஒரு பயணத்திற்கு குறைந்தது ஆறுமாதங்கள். பாகிஸ்தானின் பெஷாவர் வரை சென்று வந்திருக்கிறார். அதுகுறித்த விவரமாக புத்தகத்தில் இடப்பெற்றிருக்கிறது. மிகுந்த சுவாரசியத்துடன் எழுதியிருக்கும் இப்பகுதியை இருமுறை வாசித்தேன்.

ராஜாஜி, வா.வே.சு ஐயர், பெரியார், காந்தி, பாரதி, பாரதிதாசன், என்று
அனைவருடனும் மிகுந்த நட்புடன் பழகி இருந்திருக்கிறார். தமிழகத்தில் காங்கிரசு வளர முக்கிய காரணிகளுல் ஒன்றாக இருந்திருக்கிறார். இவரது மேடைப்பேச்சினைக் காண
மக்கள் திரண்டிருக்கின்றனர். காங்கிரசின் ஆஸ்தான பேச்சாளர்களில் முதன்மையான ஒருவராக திகழ்ந்திருக்கிறார்.

பாரதியின் மேல் இவருக்கு ஒரு மிகப்பெரிய அபிமானம் இருந்திருக்கிறது. வெறி என்று
கூட சொல்லலாம். அந்தளவுக்கு அவரின் மேல் பற்று இருந்திருக்கிறது. அவரைக்கான புதுச்சேரிக்கு பலமுறை சென்றும் காணமுடியாமல் திரும்பியிருக்கிறார். ஒருமுறை தேவகோட்டைக்கு நண்பருடன் சென்றிருக்கும் புலவருக்கு பாரதி இங்கே வந்திருக்கிறார்
என தகவல் கிடைக்கிறது. மேலும் அதிகாலையில் அவர் கிளம்பிவிடுவார் என்றும்
தகவல் கிடைக்கிறது. ஏற்கனவே இரவு நெருங்கியிருந்தது ஆனால் சற்றும் யோசிக்காமல் அவரைக்காண புறப்படுகிறார். மாட்டுவண்டி கூட ஏற்பாடு செய்யாமல் வயல்வெளிகளில் சுற்றி நடந்தே பல மைல்கள் கடந்து செல்கிறார். கடைசியில் அங்கு
சென்றடையும்போது பாரதியார் நண்பர்களுடன் உலாத்தப்போயிருக்கிறார் என்று சொல்கின்றனர் உடனே அவரைத் தேடி அலைகிறார். இறுதியாக கண்டுகொள்கிறார்.
ஊருக்கு வெளியே காட்டில் நிலவொளியின் கீழ் நண்பர்களுடன் அமர்ந்து விவாதித்துக்கொண்டிருக்கிறார். அவர் அருகில் செல்லும்போது எனது உடல் நடுங்கியது. எவ்வளவு கட்டுப்படுத்தியும் தான் உணர்ச்சிவசப்படுவதை கட்டுப்படுத்த முடியவில்லை
என்று குறிப்பிடுகிறார்.

தலையில் முண்டாசு கட்டி கோட் அணிந்திருந்தார் பாரதி. நிலவொளியின் கீழ் அவர்
ஒரு ஓவியம் போல இருந்தார். அவரைக்காண்கையில் எனக்கு இரண்டு ஆசைகள்
இருந்தன. ஒன்று அவரை ஓவியம் தீட்டுவது, இரண்டாவது அவர்பாடக்கேட்பது.
தன்னை அறிமுகப்பத்துக்கொள்கிறார். பாரதி முன்பே இவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்
ஏனெனில் ஓவியத்திறைக்கு சான்றாக அவர் டெல்ல்லி வரை சென்று பதக்கம் பெற்று
திரும்பியிருந்தார். தானும் ஒரு கவி என்று சொல்லும்போது மரமதிர சிரித்த பாரதி
“நீர் ஒரு காவியக்கவிஞர் என்று சொல்லும்” என்று சிரித்தாராம். பாரதியின்
முன்னிலையில் தான் இயற்றியிருந்த பாடல்களை பாடினார் கவிஞர்.

பாடி முடித்ததும் வெகுநேரம் கைதட்டினாராம் பாரதி. பின்னர் வெகுநேரம் சுதந்திரம் குறித்தும், கவிதைகள் குறித்தும் பேசிக்கொண்டிருந்தனர். விடியல்காலை மூன்று மணி ஆகியது. ஆனால் தூக்கத்தின் அறிகுறிகள் எதுவும் அவரிடத்தில் தெரியவில்லை. புறப்படுகையில் பாரதியாரிடம் பாடும்படி கேட்டுக்கொண்டார் கவிஞர். கேட்கும்போதெல்லாம்
பாடமுடியாது எனக்குத்தோன்றும்போதுதான் பாடமுடியும் என்று சொல்லிவிட்டார்.
இதனால் வருத்தமடைந்த கவிஞர் ஓவியம் வரையவேண்டும் என்கிறார். அதற்கான
நேரம் வரும் என்று சொல்கிறார்.

பாரதி அதிகாலையில் பயணமாகி வேறு ஒரு இடம் செல்லவேண்டும் ஆகவே
கிளம்பலாம் நண்பர்களே என்று கிளம்புகின்றனர். அங்குள்ள ஒரு வீட்டில் பாரதி
தூங்குகிறார் அவருக்கு அருகில் கவிஞர். அதிகாலை நான்கு மணிக்கு அருகில் குறட்டை விட்டு உறங்கிக்கொண்டிருந்த கவிஞரை எழுப்பி “பாடல் வேண்டுமென்று கேட்டாயே
இப்பொழுது இப்பொழுது பாடட்டுமா என்று கேட்கிறார். சந்தோஷமிகுதியில் தலையாட்ட பாடத்துவங்குகிறார்.

கம்பீரமான குரலில் பாட ஆரம்பிக்கிறார் பாரதியார். அங்கே உறங்கியவர்கள் எழுந்து உட்கார்ந்து ஆர்வமாக கேட்க ஆரம்பிக்கின்றனர். கவிஞர் கண்களை மூடி பாடலில் லயிக்கிறார். தொடர்ந்து வெகுநேரம் பாடிக்கொண்டே இருக்கிறார். பயண ஏற்பாட்டாளர்கள் பயண நேரம் தாண்டிப்போனதால் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருக்கின்றனர்.
அவரோ நிறுத்துவதாக தெரியவில்லை. இறுதியில் கண்களைத்திறந்து பாடலை நிறுத்துகிறார். இப்போழுது திருப்தியா என்றவாறு புறப்படுகிறார் பாரதி. இவ்வாறு தான் பாரதியை சந்தித்ததை எழுதியிருக்கிறார் நாமக்கல் கவிஞர்.

நூலில் பல இடங்களில் சில வார்த்தைகள் புரியவில்லை. குறிப்பாக “அகஸ்மாத்தாக” என்று பல இடங்களில் உள்ளது. நாமக்கல் பகுதி நகராட்சி அலுவலகத்தில் இன்றும் அவரது ஓவியங்கள் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன் நாமக்கல் பகுதியில் உள்ளவர் கண்டிருந்தால் எப்படியிருக்கிறது என்று தெரியப்படுத்தலாம்.

அந்தக்கால கல்வி முறையில் படித்ததை விவரிக்கும்போது “ஐந்தாவது பாரம் படித்துக்கொண்டிருக்கையில்” “நான்காவது பாரம் படித்துக்கொண்டிருக்கையில்” என்று வருகிறது அது ஐந்தாம் வகுப்பா அல்லது வேறு எதாவதா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.


“கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” இந்த வரிகளை எழுதியது பாரதிதான்
என்று நினைத்திருந்தேன். ஆனால் எழுதியது நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை.
அற்புதமான வரிகள். பாரதியின் மறைவுக்குப்பின் அவரின் வெற்றிடத்தை இராமலிங்கம் அவர்களால் தான் நிரப்ப முடிந்தது என்று பல்வேறு சுதந்திர தியாகிகள் பல தருணங்களில் கூறியதை பதிவித்திருக்கிறார். அவருடன் ஒப்பிடுகையில் நான் எதையும் சாதிக்கவில்லை என்றும் பதிவித்துள்ளார்.

அனைவரும் வாசிக்கவேண்டிய நூல் இது. அந்தக்காலத்தில் எழுதியதால் சலிப்பு தரும் நடையில் இருக்கும் என்று எண்ண வேண்டாம். சாதாரண பேச்சு வழக்கிலேயே இதை எழுதியிருப்பதால் எந்தவித தடையும் இல்லாமல் சரளமாக வாசிக்க முடிகிறது.

எப்படி எழுதினாலும் எழுத்து நடை வாசிக்க சங்கடமில்லாமல் செல்வது எழுதவரவில்லை.
வெறும் தகவல்களின் தொகுப்பு போலதான் வருகிறது எனக்கு. இந்த அருமையான
புத்தகத்தை வெறும் தகவல்களின் தொகுப்பாகவே தருகிறேன்.
-
பி.கு: ஆரம்பத்தில் நூலக அங்கத்தினராக சேர வெறும் முப்பத்தி ஐந்தே ரூபாய்தான் கட்டணம். வருடத்திற்கு ஐந்து ரூபாய் சந்தா தொகை. இப்படி குறைந்த கட்டணத்தில் எத்தனைபேர் அங்கத்தினராக இருப்பார்கள் என்றால் நூற்றுக்கும் குறைவாகவே இருக்கின்றனர். வாசிக்கும் பழக்கம் நூற்றுக்கு ஐந்து சதவீதம் கூட இல்லை
என்பது வேதனைப்படவேண்டிய விஷயம்.

உள்ளே நுழைந்த உடன் முதலில் நான் கண்டெடுத்தது “மறைவாய் சொன்ன கதைகள்” வெகுநாளாக தேடிக் கொண்டிருந்த நூல். (அண்ணாச்சி வீட்டில் ஆட்டையை போடலாம் என்று நினைத்திருந்தேன் ஆனால் சிக்கவில்லை) அதை முதலில் எடுத்து மேசையில் வைத்ததும் பெண் நூலகர் ஒரு தினுசாக பார்த்தார்.

சிறப்பான பல புத்தகங்கள் மிகச்சிறிய நூலகத்திலேயே கிடைக்கின்றன. குறிப்பாக கிழக்கு, உயிர்மை, காலச்சுவடு புத்தகங்கள் அதிகமாக கிடைக்கின்றன. தொடர்ச்சியாக, மூன்று விரல், சுஜாதாவின் சில்வியா ப்ளாத், தாமரையின் சிறுகதை தொகுப்பு
என எடுத்து வந்து வாசித்தேன்.

எல்லா அரசு அலுவலகங்களும் ஞாயிறு அன்று விடுமுறை விடும்போது நூலகம் மட்டும் ஏன் வெள்ளிக்கிழமை அன்று அரசு விடுமுறை அளிக்கின்றனர்? யாருக்காவது தெரியுமா?

ஒருவேளை விடுமுறை நாளில் அனைவரும் பயபெறும் வகையில் இருக்குமா என்றால் அதுவுமில்லை அன்றுதான் எவருமே உள்ளே நுழைவதில்லை.

Sunday, July 13, 2008

சிறுவர்களின் உலகம் - ரத்த உறவு - யூமா வாசுகி

பேய் பிசாசுகள் அண்டாமல் இருப்பதற்காக மந்திரித்த தாயத்து ஒன்றை கருப்புக்
கயிறுடன் புஜத்தில் கட்டுவார்கள். அப்படிக்கட்டும்போது மந்திரித்தவர் சொல்வார்
"மண்ணுல படாம பாத்துக்க" தவறி பட்டுச்சோ "உலகம் அழிஞ்சி போயிடும்" என்று.
பிறகு கோலிக்குண்டு சண்டையிலோ, கில்லி சண்டையிலோ மண்ணில் புரண்டு
எழும்போது தாயத்து மண்ணில் பட்டிருக்கும். உலகம் அழியப்போகிறது என்று
கத்திக்கொண்டே ஒளிந்துகொள்ள இடம் தேடுவேன். ஆனால் இந்த உலகம் இன்னமும்
அழியவேயில்லை. ஆச்சரியமாக இருக்கும். உங்களுக்கு இருந்திருக்கிறதா?

சக நண்பர்களை காணாவிட்டால் அவர்களைத் தேடுவதற்கு ஒரு உபாயமொன்று
சிறுவயதில் உபயோகப்படுத்தியிருப்போம் ஞாபகமிருக்கிறதா? இல்லையென்றால்
சொல்கிறேன். வாயில் எச்சில் கூட்டி இடதுகையில் துப்பவும் கொத்தாக நுரையுடன்
இருக்கும் அதில் வலது கையால் பச்சக் என்று அடித்தால் எந்தப் பக்கமாக எச்சில்
தெறிக்கிறதோ அந்தப் பக்கம்தான் தேடும் ஆள் இருக்கிறான் என்று அர்த்தம்.
இந்த உபாயத்தை கையாண்டு இருக்கிறீர்களா?

மழைக்காலங்களில் ஒருவித பூச்சி ஒன்று பறக்கும். அதை "மழ சொல்ற பூச்சி" என்போம்
அந்த பூச்சியானது வெட்டுக்கிளியை விட பெருசாக இருக்கும் அதே சமயத்தில் மிக
மெல்லியதாக இருக்கும். அப்பூச்சியைக் காண்பது மிக அரிது. கண்டால் அதனிடம்
"மழை எந்த திசையில் வரும்" என்று கேட்டால் எந்த பக்கமாவது திரும்பும். திரும்பிய
பக்கம் மழை வரும் என்று அந்த வயதில் நம்பியிருக்கிறேன். பிறகு மழை வந்த
நேரத்தில் எந்த திசை... அதுவும் மறந்துபோயிருப்பேன். நீங்கள் இதுபோல மழபூச்சி
சொன்னதை நம்பியிருக்கிறீர்களா?

ஓணானை அடித்துப் புதைத்தால் அது காசாக மாறியிருக்கும் என்று நம்பிருக்கலாம்.
சிறுவயதில் கற்பிக்கப்படும் இது அனேகமாக எல்லாரும் அறிந்ததுதான்.

அம்மா கொடுக்கும் தின்பண்டங்களின் ஒரு பகுதியை மிக வாஞ்சையுடன் பூமிக்கு
அளித்திருக்கிறீர்களா? அப்படி பூமிக்கு உணவளித்தால் பூமாதேவி உங்களை எந்த
ஆபத்தும் வராமல் காப்பாற்றுவாள். ஏதாவது ஆபத்து வரும் நேரத்தில் பூமாதேவிக்கு
உணவளித்த உரிமையில் நீங்கள் தாராளமாக அவளை உதவிக்கு அழைக்கலாம்.
தேவிக்கும் உணவிடுவதில் யார் பெரியவர் என்ற போட்டி எனக்கும் என் தம்பிக்கும்
பெரிய அளவில் நடந்திருக்கிறது. தேவி துணையிருப்பாள் என நம்பியிருக்கிறீர்களா?

எனக்கு விவரம் தெரியும் வயது வரை ஊரில் இருந்த பல மொட்டைக்கிணறுகளிலும்
பல மரங்களின் உச்சியிலும் கொடூரமான பேய்கள் வாழ்ந்து வந்தன. எப்படியோ பிற்பாடு
மாயமாயின. ஆனால் வேறு பெயர்களில் வேறு சிறுவர்கள் இன்னமும் அந்த இல்லாத
பேய்களுக்கு பயந்துதான் வாழ்ந்து வருகின்றனர். இப்படி பேய்க்கு பயந்து இருக்கிறீர்களா?

சாத்தியமே இல்லாவிட்டாலும் கூட பலவிதமான பொய்களை எந்த நிபந்தனையும் இன்றி
ஏற்றுக்கொள்ளும் வயது அந்த வயது.

இதுபோன்ற எண்ணற்ற நினைவுகளால் நிரம்பிய அந்த வயதை இப்போது ஒரு நாவல்
ஞாபகப்படுத்தியது. அது யூமாவாசுகியின் "ரத்த உறவு" சிறுவர் நாவல் என்று நினைத்து
விடவேண்டாம். தரமான சமூக நாவல் இது.

திடிரென்று காலம் பின்னோக்கி சென்று உங்களை நீங்கள் விரும்பும் பருவத்திற்கு
அழைத்துச்செல்லும் என்று வரம் கிடைத்தால் நான் நான்கிலிருந்து ஏழு வயதுக்குள்ளான
பருவத்திற்கு செல்லவே விரும்புவேன். கிடைக்கும்/பார்க்கும் அனைத்து பொருள்களையும்
ஆச்சரியமாக பார்க்கும் வயது அது. நிறைவேறும் அல்லது நிறைவேற சாத்தியம்
இல்லாத ஆசைகளில் இரண்டாவது வகையின் மேல்தான் எப்போதுமே ஈர்ப்பு
இருக்கலாம். சிறுவர்களின் உலகத்தை பெரியவர்கள் ஆன பிறகுதான் இழந்ததாக
உணர்கிறோம். இழந்ததாக உணர்ந்த ஒன்றின்மேல் ஈர்ப்பு வரத்தானே செய்யும்.
அவ்வகையான ஈர்ப்புகளை ஞாபகப்படுத்தும் அல்லது வாசிக்கும் புத்தகங்களில்
உள்ளவற்றைக் காணும்போதும் நாம் சிறுவயதிற்கு செல்வது போலவே தோன்றும்.
இன்றளவும் காமிக்ஸ், சாகச கதைகளை பருவம் தவறிப்போய் விரும்பி படிப்பது
கூட இப்படிப்பட்ட உணர்வின் வெளிப்பாடாகவே இருக்கலாம்.

உதாரணத்திற்கு சொல்லவேண்டும் என்றால் கூட "அவன் ஒரு கொழந்த மாதிரி"
என்று சொல்வார்கள். ஒரு மோசமான தகப்பனைக்கொண்ட குடும்பத்தில் பிறந்த
நான்கு சிறுவர்களில் ஒருவன் பார்வையில் கதை ஆரம்பித்து பல சிறுவர்களின்
வழியாக கதை சொல்லப்பட்டு முடிகிறது. கதை என்ற இரண்டு வார்த்தைகளால்
அடக்கிவிட முடிந்துவிட்டாலும் இதை வாசித்தபிறகு உங்களின் சிறுவயதின்
உணர்வுகளை பார்க்காமல் முடிக்கமுடியாது. அக்குடும்பத்தில் மூத்தவளான
அக்கா அவளுக்கு பிறகு இரு சகோதரர்கள் அண்ண, தம்பி என முழுக்க முழுக்க
உறவுப்பெயர்களால் மட்டுமே நாவல் முழுக்க வருகிறார்கள்.

சினிமா பார்த்தும் கூட இதுவரை அழுததாக நினைவில்லை. ஆனால் இந்த நாவலின்
சில பக்கங்கள் என்னை கலங்கச்செய்தன. கதை என்ன என்று இந்தப் பதிவில் சொல்ல
வேண்டும் என்ற உத்தேசம் இல்லை. வாய்ப்பு வரும் நேரத்தில் தவறவிடாமல்
வாசித்துப் பாருங்கள்.

நம் சிறுவயதின் அற்புதமான தருணங்கள் நம் அப்பாவின் மூலமோ, பெரும்பாலும்
அம்மாவின் மூலமோதான் நமக்கு அறியப்படும். வளர்ந்தபிறகுதான் தனிப்பட்ட
குணாம்சங்கள் அமைய வாய்ப்பிருக்கிறது. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு
நிகழ்வுகள் காலம் உள்ளவரை சொல்லியபடி இருப்பார்கள். தலைகுனிந்தே நடப்பது,
உள்ளங்கையின் மடிப்பில் மல்லிகையின் மொட்டுகளை அணைத்து வைப்பது,
கிழவிகளின் சுருக்கத்தை அதிசயமாக பார்ப்பது என்று எனக்கான பழக்கங்கள் என
பிற்காலத்தில் பலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் எனக்குத்
தோன்றும் இப்படியெல்லாம் இருந்திருந்த என்னால் ஏன் அந்நிகழ்வுகளை வளர்ந்த
பிறகு அதிகபட்சம் நினைவுகொள்ளக்கூட தவறிவிட்டேன் என்று.

பேசக்கற்றுக்கொண்ட காலத்தில் எதிர்த்த வீட்டுப்பெண் தீபாவுடன் தான் நிறைய
பேசினேன் என்று கூட சொல்வார்கள். அவள் வீட்டில் பீரோவுக்கும் தலையணைகள்
வைக்கும் இடத்திற்கும் நடுவில் இரண்டு சிறுவர்கள் மறைவாக அமரும் வகையில்
ஒரு இடம் உண்டு அந்த இடத்திலேதான் நாங்கள் இருவரும் பேசிக்கொள்வோம்
என்று தீபாவின் அம்மாவேகூட சொல்வார். அந்தக்கணத்தில் அவளுடன் என்ன
பேசியிருப்போம் என்று நினைத்தால்கூட உதட்டில் புன்னகை பரவும். நான்
எப்போதுமே நினைவுகொள்ள நினைக்கும் ஒரு தருணம் அது.

மோசமான குடிகாரனாக அப்பாவும், கீழ்த்தரமான எண்ணங்கள் உடைய பாட்டியும்
கொடுமைக்கார பெரியம்மா, சித்தி போன்றவர்களுடன் ஒன்றாக வசிக்கும் குடும்பத்தில்
இருந்து ஒரு சிறுவனின் பார்வையில் கதை சொல்லப்பட்டிருக்கிறது. கீழ்நடுத்தர
மோசமான குடிப்பழக்கத்தினை உடைய தந்தையினால் ஏற்படும் இன்னல்களை
இத்தனை துல்லியமாக பதிவு செய்திருக்கிறார். முன்பே யூமாவாசுகியின் படைப்புக்
களில் ஈர்க்கப்பட்டிருந்தேன். முக்கியமாக அவரின் கவிதைகளை. உதாரணத்திற்கு
இப்பதிவின் கடைசி இரண்டு கவிதைகளை வாசித்துப்பாருங்கள். குழந்தைகளின்மீது
அளவுகடந்த அன்பு வைத்திருப்பவர் குழந்தையாகத்தான் இருக்கமுடியும்.

பக்கத்து வீட்டு ஜனனி (கருவாச்சி) என் தம்பியிடன் பேசுவதைப்போல என்னிடம்
பேசுவதில்லை என்று எனக்கு வருத்தம் இருந்தது. அவளுக்கு என்னை பிடிக்கவில்லை
போலும் என்றுகூட நினைத்துக்கொள்வேன். பின்னொருநாள் என் தம்பி அவளுடன்
பேசிக்கொண்டிருந்தபோது ஒரு குழந்தையைப் போல உடல்மொழியுடன் பேசிக்கொண்டு
இருந்தான். அவளும் மிகுந்த சுவாரசியத்துடன் புருவத்தை உயர்த்தி கையை இடுப்பில்
வைத்து பெரிய மனுசி தோரணையுடன் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தாள்.
என்னுடன் கூட அப்படி பேசியதில்லை அவள். அந்தக்காட்சி கவிதையைப் போல
இருந்தது. சிறுவர்களிடம் சிறுவர்களைப் போலதான் பேசவேண்டும் என்பதைக்கூட
மறந்து போயிருந்தேன்.

நாவல் வாசித்து முடித்ததும் பல ஞாபகங்கள் வந்தன. நாவலில் என்னை பெரிதும்
கவர்ந்த ஒரு கதாபாத்திரம் என்றால் அது இரண்டு சிறுவர்களின் அக்கா என்ற பாத்திரம்.
அவளின் பெயர் வாசுகி

யூமா வாசுகியின் கவிதைகள் சில...


லொள் லொள் என்று நாய் மாதிரிக் குரைக்குமே
அது மாதிரி ஒண்ணு வரைந்து தா
என்று சொன்னாள் சிறுமி.
ரெண்டு கால் மாதிரி வைத்துக் கொண்டு
நடக்கிறமாதிரிப் போகிற
மனிதன் மாதிரியும் ஒன்று.
வால் மாதிரித் தொங்கவிட்டு
குரங்குமாதிரித் தாவுவது.
கடல் மாதிரிக் கிடப்பதிலே
நிற்கும் கப்பல் மாதிரி.
சேப்பு சேப்பா பூ மாதிரிப் பூக்குமே
அந்த மரம் மாதிரியும் ஒண்ணு
வரைந்து தா...
அவள் சிறுமி மாதிரி
என் முன்னால் அமர்ந்திருக்கிறாள்
நான் ஓவியன் மாதிரி
வரைந்து கொண்டிருக்கிறேன்.

ஒரு மனிதன் முயலாக
---------------------
ஸ்கர்ட்டின் கீழ்விளிம்பை கடித்தபடி
ஜட்டி தெரிய வாசலில் நிற்கிற
சிறுமி புவனா கேட்கிறாள்
'முயல் என்ன செய்கிறது?'
அவளைக் கவர்வதற்காக
அறையினுள் ரகசியமாக
ஒரு முயல் வளர்ப்பதாகச் சொல்லியிருந்தேன்.
'முயல் சாப்பிடுகிறது'
என்னும் பதிலில் திருப்தியுற்றவளாய்
விளையாடப் போனாள்
'எங்கே முயல்? காட்டு பார்க்கலாம்'
என்று அடுத்த நாள் வந்தாள்
ஆப்பிள் தின்றபடி.
'பெரிய முயல் கடித்துவிடும்' என்று சொல்ல
சந்தேகச் சிரிப்புடன் வெளியே போனாள்
அவள் சொல்லித்தான் நான் முயல் வளர்ப்பது
மற்ற சிறுவர்களுக்கும் தெரிந்தது
வாசலில் கூட்டமாய் வந்து நின்று
'என்ன செய்கிறது முயல்' என்பவர்களுக்கு
பல தடவைகள் அறைக்குள் எட்டிப் பார்த்து
முயல் பற்றிய நிலவரத்தை தெரிவித்தேன்
நாளாக,
அப்படியொரு முயல் இங்கே இல்லை
எனும் உண்மை புரிந்தாலும்
நான் வீட்டைப் பூட்டிப் புறப்படும்போது
என்னையே முயலாக்கி
புவனா கேட்கிறாள்,
'முயல் எங்கே போகிறது..?'
நீண்ட கைகளை ஆட்டி
பஞ்சு ரோமத்தைச் சிலிர்த்து
மிரண்ட விழிகளால்
குறுகுறுப்பாகப் பார்த்து
முயல் சொல்கிறது...

பின்குறிப்பு: இந்தப்புத்தகத்தைக் கொடுத்து வாசிக்கச் சொன்ன, குழந்தையைப் போன்ற, ஊரில் இருந்து நிறைய புத்தகங்கள் வாங்கி வந்திருக்கிற, அமீரகத்தின் ஒரே நல்ல
நல்லவர், பலகுரல் பாடல் மன்னன் ஆசிப் அண்ணாச்சிக்கு அன்போடு
இந்தப்பதிவை அர்ப்பணிக்கிறேன்.

தலைப்பு கப்பியிடம் இருந்து திருடியது.

Saturday, June 07, 2008

சில குறிப்புகள்.

பொதுவாக பட்டான் என்று அழைக்கப்படும் பாகிஸ்தானியர்களைப்பற்றி ஒரு விதமான
கருத்து உள்ளது. அதாவது நம்ம ஊர்ல இப்படி சொல்வாங்க. "இவளே இவ்ளோ
அழகா இருக்கான்னா இவ தங்கச்சி எப்படி இருப்பா" என்று. அதையே பட்டான்கள்
மாற்றி "இவளே இவ்ளோ அழகா இருந்தான்னா இவ தம்பி செமையா இருப்பான்"
என்று சொல்வார்கள். எனக்குத் தெரிந்து உண்மைதான். ஓரினச்சேர்க்கை விஷயத்தில்
கராராக இருப்பவர்கள் இவர்கள். வம்ச விருத்திக்கு மட்டுமே பெண்ணை நாடும்
குணம் உள்ளவர்கள். இதை எதற்கு சொல்கிறேன் என்றால் நாங்கள் தங்கி இருக்கும்
இடத்தில் ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத பிலிப்பினோ திருநங்கைகள் மூன்று
பேர் தங்கியிருக்கிறார்கள். பிலிப்பைன் நாட்டில் மட்டுமே இவ்வித குறைபாடுகள்
கொண்டவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். ஏன் என்று தெரியவில்லை. சரியாக
நூற்றுக்கு மூன்றுபேர் இவ்விதம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எங்கள் விடுதியில் பட்டான்
என்ற பாகிஸ்தானிய ட்ரைவர்கள் அதிகம் பேர். கனரக வாகனங்கள் ஓட்ட அவர்களை
விட்டால் சிறந்த இனம் ஒன்று இல்லை. இந்த பிலிப்பினோக்கள் மூவரும் வெளியில்
செல்லும்போதோ, வரும்போதோ இவர்களை விழுங்கும் தாபத்தோடு அனேக
பட்டான்கள் நோக்குவர். முதுகின் கீழ் துளைப்பது போன்ற பார்வை பின் எதாவது
கமெண்ட் அடிப்பது. அதில் எரிக் என்பவர் மட்டும் என் நண்பர். "இந்தியர்களாவது
போகும்போதும் வரும்போதும் கிண்டல் மட்டும்தான் செய்வார்கள். படான்களோ
ஒருபடி மேலேபோய் பாலியல் ரீதியான தாக்குதலில் ஈடுபடுகிறார்கள். தனிமனித
சுதந்திரம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்த ஆதியினம் என்பார் அந்த
நண்பர். அவர் சொல்வதும் சரியே.

லிவிங் ஸ்மைல் வித்யா பங்குபெற்ற இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியினை காண
நேர்ந்தவுடன் நம் இந்தியச்சமூகம் எவ்வளவோ தேவலாம் என்று தோன்றியது.

----

சென்ற வார குமுதம் இணையப் பதிப்பை பார்த்தவர்கள் பலருக்கு அதிர்ச்சி, ஆச்சரியம்
ஆவேசம் கிலேசம்னு நிறைய வந்திருக்கலாம். ஆனால் எனக்கு குஜாலாக இருந்தது
மேலும் எனக்குத் தெரிந்த நண்பர்களுக்கு போன் செய்து மேட்டர் சொன்னேன்.
அவர்களும் குஜாலாக பார்த்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தார்கள். மேட்டர்
என்னன்னா குமுதம் பெண்கள் சிறப்புப் பகுதியில் சேலை கட்டுவது எப்படி
என்று விவரணப்படம் போட்டிருந்தார்கள். விவரணப்படம் என்றால் விலாவாரியாக
என்று கொள்க. சவுகார்ப்பேட்டை ஆண்டி ஒன்று சேலை கட்டுவதை ஒளிவுமறைவு
இல்லாமல் கவர் செய்திருந்தார்கள். பெண்கள் சிறப்புப் பகுதியில புடவை கட்ட
சொல்லித்தரும் அளவுக்கு வந்தாச்சு போல. ஆனாலும் விவரணப்படம் சகிலாவுக்கே
சவால் விடும் தரத்திற்கு இருந்தது. வாழ்க வளர்க. அடுத்தவாரம் ஜட்டி போடுவது
எப்படி என்று சொல்லித்தருவாங்களா என்று அய்யனார் கேட்டார். அடப்ப்ப்பாவி...
இதுகூடுமா தெரியாது...

----

திரும்பத் திரும்ப புத்தகங்களை சிலாகித்துப்பேசுவது எனக்கே சலிப்பைத் தருகிறது
என்றாலும் வாசிப்பதை நிறுத்துவதில்லை. அதைப்பற்றி பேசுவதையும் நிறுத்துவதில்லை
அய்யனாரிடமிருந்து பறித்து வந்த "ஆதண்டார் கோயில் குதிரை" என்ற சிறுகதைத்
தொகுப்பை வாசித்தேன். முன்பே கண்மணி குணசேகரனின் "வெள்ளெருக்கு" என்ற
தொகுப்பை வாசித்து பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தேன். இந்த நூலிலும் தமிழின்
தரமான சிறுகதைகள் என்று நேர்மையாக சொல்லக்கூடிய கதைகள் இருக்கின்றன.
சிறந்த படைப்பாளன் என்பவன் தான் வாழ்ந்த சூழ்நிலையை, மக்களை, அவர்களின்
மொழியை, வட்டார வழக்கத்தை நியாயமாக பதிவிப்பவனே நேர்மையான படைப்பாளன்.
அந்த வகையில் கண்மணி குணசேகரன் தமிழின் முக்கியமான படைப்பாளி.
என் வாசிப்பு தளத்தில் நாஞ்சில் நாடனுக்குப் பிறகு வட்டாரவழக்கிலான படைப்புக்கு
அதிக முக்கியத்துவம் கொடுக்கும் படைப்பாளி.

மருதாணி என்பதை எங்கள் ஊரில் "அழவான" என்றே சொல்வார்கள். கிட்டத்தட்ட
கொத்தடிமையைப் போல மாடுமேய்த்து, சாணியள்ளி, தொழுவம் பெருக்கி என
எல்லா வேலைகளையும் செய்யும் சிறுவனின் உலகம் என ஆரம்பித்து அவனின்
அழவான வைத்துக்கொள்ளும் ஆசையினையும் அதைவிட அதிகாலையில் அழவான
உதிர்ந்து கையிலிருந்து வெளிப்படும் அந்த வாசனையை முகர்ந்துபார்க்க விரும்பும்
சிறுவன். அதற்காக அழவான செடியைத் தேடுகிறான். மிகுந்த தேடலுக்குப்பின்
அழவானையை கண்டு பெரும்பயத்தினூடே பறிக்கிறான். மறுநாள் அதிகாலையிலே
வருமாறும் "மாட்டை பொலிபோட" வேண்டும் என்று பலமுறை எச்சரித்து
சொல்கிறாள் சொந்தக்காரி. மருதாணி வாசம் முகரும் ஆர்வத்துடன் அக்காவிடம்
அரைக்கச்சொல்லி வைத்துக்கொள்கிறான். மறுநாள் சூரியன் சூத்தாமட்டையில்
அடிக்கும்போதுதான் விழிப்பு வருகிறது கூடவே முந்தின தினம் எச்சரிக்கை
செய்ததும் நினைவு வர உதறி விட்டு ஓடுகிறான். அவள் இவனைக் கண்டபடி
ஏசுகிறாள் மிகுந்த அச்சத்துடன் சாணி அள்ளி எருக்குழியில் போடுகிறான். திடீரென
கை உதறிக்கொண்டு அழவான வாசனையை முகரும் தன் ஆசையை அவனே
அறியாமல் மூக்கருகே கோண்டு செல்கிறான். சாணி நாத்தம்தான் அடித்தது.
வாசம் என்ற கதையும் அழகாக இதனை பதிவித்திருந்தார். ஒன்றுக்கொன்று
சம்பந்தமில்லாத அத்தனை கதைகளும் ஒருகிராமத்தின் வெவ்வேறு தளங்களில்
இயங்குகிறது.

----



சமீபத்தில் பார்த்த மிகச்சிறந்த திரைப்படம் "RAY" என்ற படம். டைட்டில் இசைக்காக
மறுபடியும் படம் பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது. படம் முழுக்க இசைதான்.
கண்தெரியாத ஒரு இசைமேதையின் வரலாற்றை சொல்லும் படம். வாய்ப்புக்
கிடைத்தால் பாருங்கள். இந்தப்படத்தில் வருவதுபோன்ற அற்புதமாக ப்ளாஷ்பேக்
காட்சிகள் வேறெந்தப்படத்திலும் கண்டதில்லை. ஒவ்வொரு ப்ரேமும் ஒரு
கவிதை. உண்மைக்கதை என்று போட்டிருக்கிறார்கள். ஒரு இசைக்கலைஞனின்
மிகச்சிறந்த பதிவு.

----

தமிழ்மணக்கவுஞ்சர்கள் கவிதை எழுதி வன்முறை செய்வதை தடுக்கும் விதமாக
அவர்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கும் வகையில் சட்டத்தில் வழிவகை உள்ளதா
என அடர்கானகப்புலி என்னிடம் கேட்டது, மேலும் இல்லையென்றால் எப்பாடுபட்டாவது
ஒரு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யவேண்டும் என்று துயரத்துடன் விம்மியபடி
கிட்டத்தட்ட அழுதபடி சொன்னார். மிகச்சிறிய அளவில் வன்முறை செய்தவன்
என்ற வகையில் கடக்கவேண்டிய தூரம் அதிகமிருப்பதால் இதில் கருத்துச்சொல்ல
ஈரிழைத் துவர்த்து அளவுக்குக் கூட எனக்கு உரிமை இல்லை.

ஆகவே தமிழ்மணக்கவுஞ்சர்கள் வன்முறையின் உச்சம் தொட்டு அடர்கானகப்புலியின்
படைப்புச்சுதந்திரத்திற்க்கு எதிரான அதிகார மய்யத்தினை கண்டிக்குமாறு கேட்டுக்கொண்டு
சிறந்த வன்முறைக்கவுஞ்சராக வைகை ராம் அவர்களையும் அவரின் கவுஜையை
பதிவிக்கிறேன்.

பெருவெளியின் காட்சியடைய
சாளரம் வழியும் எரிதழலின்
நிறமடைகிறது எனது அறை...
உந்தன் முதன்முறை வருகையை போலே...

Monday, May 05, 2008

ஞானக்கூத்து - மா.அரங்கநாதன்

அந்த பழைய புத்தக கடை பெண்கள் பள்ளிக்கும் காய்கறி மார்கெட்டுக்கும்
பின்புறம் இருந்தது. காய்கறிகளின் அழுகின வாடை. சுவருக்கு அந்தப்பக்கம்
பள்ளிப் பெண்களின் மனன கோஷம். புத்தக கடையை வெளியிருந்து பார்ப்பவர்
காயலான் கடை என்று சொல்லத்தகுந்த தோற்றம். அந்த வழியாக நடந்து
கடக்கும்போது உள்ளே நுழைந்து பார்க்க தோன்றியது. குறிப்பிட்ட சில
எழுத்தாளர்களின் பெயர் சொல்லி அவர்கள் எழுதிய புத்தகம் எதாவது இருக்குமா
என்று கேட்டேன். அவரோ யார் எழுதினது என்ற விவரமெல்லாம் தெரியாதுங்க.
ஆனால் எதோ சிலது இருக்கும் நீங்களே தேடி பாருங்க, கிடைச்சு பிடிச்சிருந்தா
எடுத்துகிட்டு போங்க என்றார்.

சுந்தர ராமசாமியின் "மேல்பார்வை" சிறுகதை ஒன்று உருப்படியாக கிடைத்தது.
ஓஷோ புத்தகம் ஒன்று (இன்னமும் பிரிக்கவில்லை) இரண்டு மூன்று கவிதை
புத்தகங்கள். பிரபலமே இல்லாத சிலரின் கவிதைகள். புகழ் என்ற வட்டம்
இருந்திருந்தாலோ, அல்லது பிரபலாமன ஒருவரின் பெயரில் வெளிவந்திருந்தால் புகழ்பெற்றிருக்கலாம் அவை. எங்கு பார்த்தாலும் மண்மலர், யவனராணிகளும்
இருந்தது. சாண்டில்யன் வாங்கிக்குங்க சார் அதான் "பாஸ்ட் மூவிங்" என்றார்.
அது இல்லன்னா இது எடுங்க என்று ராஜேஷ்குமார் க்ரைம் நாவல்களை காட்டினார்.
அது ஒரு மலைபோல் குவிந்திருந்தது. எவரும் படித்தவுடன் இங்கு வந்து போட்டுவிடுவார்களோ என்று கூட சந்தேகம் வந்தது.

புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த உலகச்சிறுகதைகள் ஒன்றை வாங்கினேன். எல்லாம்
முடிந்து காசு கொடுத்து புறப்படும்போது வாங்குபவர்களை தெம்பூட்டும் விதமாக
ஒரு புத்தகத்தை இனாமாக கொடுத்தார். "யாருமே வாங்கல சார் ரொம்ப நாளா
இருக்குது". அதுதான் மா.அரங்காநாதன் அவர்கள் எழுதிய ஞானக்கூத்து என்ற
சிறுகதை தொகுப்பு.

முன்பே கதாவிலாசத்தில் மா.அரங்கநாதனைப் பற்றிய சிறிய அறிமுகம் மட்டுமே
படித்திருந்தேன். எங்கு கிடைக்கலாம் இவை என்று யோசனையில் அவற்றை
வாங்கும் முயற்சியில் மட்டும் இருந்தேன். மேற்கொண்டு எதையும் செய்யவில்லை.

அப்புத்தகத்தின் முதல் பக்கங்கள் சில இல்லாததினால் அதை நாவல் என்று எண்ணியே
வாசிக்க ஆரம்பித்தேன்.வரிசை எண்களையும் அத்தியாயம் என்று நினைத்தேன்.
ஒவ்வொரு சிறுகதையிலும் பிரதான பாத்திரமாக முத்துக்கருப்பன் என்பவர் இருந்தார்.
ஆனால் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாது இருந்தது. இணையத்தில் மறுபடியும்
அரங்கநாதனைப் பற்றிய கதாவிலாசத்தை வாசித்தபோது சிறுகதை தொகுப்பு என்று
குறிப்பிட்டிருந்தது. ஒரே பெயர் அனைத்து சிறுகதையிலும் வந்தாலும் அனைத்தும்
தனித்துவம் கொண்ட சிறுகதைகள்.

அதிகம் கவனிக்கப்படாத எழுத்தாளர். மிக நுண்ணிய அவதானிப்புகளை தமிழ்ச்
சிறுகதை வரலாற்றின் ஆரம்பத்திலேயே எழுதியவர். இப்போது வாசிக்கும்போது கூட
பல விஷயங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. நகரத்தின் இயல்பை பிரதிபலிப்பதாகட்டும்
கிராமத்தின் நிகழ்வுகளை பிரதிபலிப்பதாகட்டும் என்று எல்லாமும் காட்சிப்படுத்த
முடிகிறது.

நீங்கள் எங்காவது வழிதெரியாத இடத்தில் சிக்கி தடுமாறி இருக்கிறீர்களா? ஆரம்ப
இடத்திலே கடைசியாக வந்து சேர்ந்து இருக்கிறீர்களா. அப்போது உங்கள் மனநிலை
என்னவாக இருக்கும். நகரத்து நெரிசலில், அனைத்து தெருக்களும் ஒன்று போலவே
காட்சியளிக்கும் குழப்பநிலையின்போது உங்கள் உணர்ச்சிகள் என்னவாக இருக்கும்.

ஒருமுறை அய்யனார் என் அறைக்கு வர வழிகேட்டார். அதற்கு முந்தின தினம் கூட்
வந்திருந்தார். இன்று வழிமறந்து விட்டது போலும். ஐந்துக்கும் அதிகமான முறை
செல்பேசியில் அழைத்து வழிகேட்டு சரியாக தவறான பாதையில் சென்று எங்கோ
சென்றுவிட்டார். மறுபடியும் அழைத்து "என்னை எப்படியாச்சும் இந்த குழப்பத்துல
இருந்து காப்பாத்துடா" என்று கதறி அழுவாத குறை. கருணையற்ற கோடையில்
வழிதெரியாது நிற்பவருக்கு அழுகையே வந்துவிடும் போல இருந்தது. நானே நேரில்
சென்று அழைத்து வந்தேன். நகரங்களின் அமைப்பு அப்படி. தினமும் சென்று
வந்தாலேயொழிய வேறு வழி இல்லை.

ஞானக்கூத்து நூலின் முதல் சிறுகதை இப்படிதான் ஆரம்பிக்கிறது. பிரம்மாண்டமான
நகரத்தின் எதோ ஓர் மூலையில் அபூர்வமான திரைப்படம் திரையிடப்பட்டிருப்பதாக
அறிந்து அதைக் காண புறப்படுகிறான் முத்துக்கருப்பன். செல்லும்போது பாதை
குறித்த குழப்பம். அவரவர் ஒரு வழி சொல்கிறார்கள். மிகுந்த சிரமத்துக்கிடையில்
திரை அரங்கினை அடைகிறான். சொற்பத்திலும் சொற்பமான பேர் ரசிக்கிறார்கள்.
படம் முடிந்து ரயில்நிலையம் செல்லும்போதும் குழப்பம். மறுபடியும் வழிகேட்டு
வழிகேட்டு நடக்கிறான். இறுதியாக தண்டவாளத்தை காண்கிறான். தண்டவாளத்தை
தொடர்ந்தபடி செல்கிறான். பேரிரைச்சலுடன் ரயில் வருகிறது பயந்து பின்வாங்கி
பக்கத்து தெருவில் நுழைகிறான். திரும்பவும் வழிதவறுகிறது, இருட்டு, ஆள்
இல்லாத நீண்ட தெருக்கள். தூரத்து சோடியம் விளக்கை நோக்கி கால்கள்
விரைகின்றன. நெருங்குகையில் சற்றுமுன் பார்த்த அதே திரை அரங்கின் வாசலில்
அவன் நிற்கிறான்.

மற்றொரு சிறுகதையான எலி என்ற சிறுகதையை அடக்குமுறையில்தான் வன்முறை
பிறக்கிறது என்ற தத்துவத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. இக்கதையும்
முத்துக்கருப்பனை சுற்றியே வரும். உயிர்களை துன்புறுத்துவதற்கு எதிரானவரான
முத்துக்கருப்பன் சிற்றறிவுடைய உயிரினங்களை கூட கொல்லத்துணிபவர் அல்ல
அவருடைய மனைவியும் மகளும்தான் வீட்டில் அதம் பண்ணும் எலிகளை
படீரென்று கொல்லும் நேரத்தில் வெளியில் நிற்பார். தன் நண்பனுடைய நிறுவனத்தில்
மகளுக்கான நேர்முக அழைப்புக்கு இவரும் வரவேண்டுமென மகள் சொல்கிறாள்.
அரைமனதுடன் செல்கிறார். அலுவலகத்தின் உள்ளே
"கொல்"
"இன்றே கொல்"
"விடாதே"

எலி பாஷாணம் முதலான பொருள்களை தயாரிக்கும் நிறுவனம் அது.

என்ற வாசகங்கள் இருக்கிறது. தன் தந்தையின் உதவி கிடைக்காது என்பதை அவளே
புரிந்துகொள்கிறாள். மவுனமாக மு.க வெளியேறுகிறார். தூரத்தில் பிரம்மாண்டமான
பிள்ளையாருடன் கூட்டமாக மக்கள் கூச்சலிட்டபடி வருகிறார்கள். பிள்ளையாரின்
காலுக்கருகில் பெரியதொரு எலி எதையோ தின்கிறது. அவருக்கு பின்பக்கம் ஒரு
அழகிய முகம்மதியர் பள்ளிவாசல் இருக்கிறது. அங்கும் கூட்டமாக சிலர்.

அக்கூட்டத்தில் அவரும் சிக்கினார். இப்படியாக முடிகிறது.

அடக்குமுறைக்கு எதிராகத்தான் வன்முறை பிறந்திருக்க வேண்டும்.

சிறுகதை ஆர்வமுள்ளவர்கள் படிக்க வேண்டிய புத்தகம். ரயிலில் செல்லும்போது
ஜன்னலினூடே மலையை ரசிப்பது, குழந்தை அழும் சத்தம், ஆங்கில புத்தகத்துடன்
ஏளனமாக மற்றவரை பார்ப்பவர், தயிர்சாத பொட்டலம், சூழ்நிலையை இத்தனை
நுண்ணிப்பாக கதையில் குறிப்பிடுவதுதான் வாசகரை ஆர்வத்துடன் வாசிக்க
செய்யும். வெறுமையான வார்த்தைகளை நிறைத்து புனையப்படும் கதைகளுக்கு
மத்தியில் உணர்வுகளை எழுத்தாக்குவது சாதனைதான்.

ராமகிருஷ்ணன் குறிப்பிட்டிருப்பது போலவே ஏடு தொடங்குதல் குறித்த கதை
என் தலைமுறையில் கூட இல்லை. இப்படி நிறைய விஷயங்களை தொலைத்து
விட்டுத்தான் இந்த நிலையை நாம் அடைந்திருக்கிறோம்.

வெகுஜன வாசகர் மத்தியில் அறியப்படாத படைப்பாளியாக இருப்பினும் இலக்கிய
வட்டத்தில் அறிமுகம் தேவைப்படாதவர் அரங்கநாதன். "முன்றில்" என்ற
இலக்கிய இதழின் ஆசிரியராக எல்லாராலும் அறியப்பட்டவர். இவரின் பல்வேறு
படைப்புகள் தேடிப்பார்த்தாலும் கிடைக்குமா என்று தேரியவில்லை. சில
எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டுமே முதல் வாசிப்பிலேயே அவரின் பிற
படைப்புகளையும் படிக்கவேண்டும் என்று தோன்றும். அந்த எண்ணமே இவரின்
படைப்புகளை வாசிக்கும்போதும்.

பறளியாற்று மாந்தர், காளியூட்டு என்ற நாவலும், காடன் மலை, வீடுபேறு,
ஞானக்கூத்து, என்ற சிறுகதை தொகுப்புகளும், பொருளின் பொருள் கவிதை
என்ற உரைநடை கவிதையும் படைத்திருக்கிறார்.

The old man and sea ஆங்கில நாவலை தமிழில் "கிழவனும் கடலும்" என்று
மொழிபெயர்த்த எம்.எஸ் என்று எல்லாராலும் அறியப்படும் எம்.சிவசுப்ரமணியம்
என்பவரின் சகோதரர் மா.அரங்கநாதன்.

Monday, March 10, 2008

பிராந்து - நாஞ்சில் நாடன்



பேய்க்கொட்டு (1994) சிறுகதை தொகுப்பு வெளியான பின்பு எழுதப்பட்ட கதைகள் இவை.
மொத்தம் பதினெட்டு சிறுகதைகள்.

"உலகத்தரத்திலான தமிழ்ச்சிறுகதையின் வரலாறு தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும்
காலப்பகுதியில் முன்னேர் அல்லாத, கழுத்தேர் அல்லாத, கடைசி ஏரும் அல்லாத
எனது சிறுகதைகள்" கால்நூற்றாண்டுகளுக்கு மேல் எழுதிக்கொண்டிருக்கும் இவரின்
எந்தவித தன்மிகை இல்லாத முன்னுரை மேலும் நம்மை ஈர்க்கிறது.

பிராந்து பிடித்துக் கொண்டிருக்கும் அல்லது ஏற்கனவே பிடித்து விட்டிருக்கும் காலக்
குறுக்கு வெட்டை கவலையோடு கவனித்துக் கொண்டிருப்பவன் கலைஞன். சுழன்று
சுழன்று கோட்டம் விழுந்து விட்டது போலும் பூமியின் அச்சில். இயற்கையின்
செயற்பாடுகளில், இயற்கையை அண்டியும் போராடியும் வாழும் மனித மனங்களின்
வெளிப்பாடுகளில் இந்த கோட்டம் வெளிப்படையாகக் காணக்கிடைக்கிறது.

"இனி மீட்சியே இல்லை எனத் தோன்றும்போது ஒப்பவும் மறுக்கிறது கலைஞனின்
மனம் நம்பிக்கை என்பதோ நம்பிக்கை இழப்பு என்பதோ கையிலிருக்கும் தீவட்டி
வெளிச்சத்தில் காண முயல்வதுதானா? என் தீவட்டி எப்போதும் என் மனத்தில்:
என் கரங்களில் அல்ல. அது எரிக்கும் ஒளி பாய்ச்சும். எண்ணையற்று கருகிப்
புகைந்தும் போகும்".

கால் நூற்றாண்டுக்கும் மேலாக எழுதிக்கொண்டிருக்கிறேன். தடம் பதித்து விட்டவனா
இல்லை தடம் தொலைத்து விட்டவனா என்பது புரிபடுவதில்லை பல சமயம்.
எல்லாத்தடங்களையும் அழித்துவிட்டுக் காடு செழிக்க வேண்டும் மறுபடியும்.
நம்பித் தொடர்ந்த தடங்களெல்லாம் தப்பாக தெரிகின்றன தற்போது.

- முன்னுரையிலிருந்து-

புனைவுகள் கற்பனைகள் என்ற வடிவங்கள் என்றுமே எழுத்தாளனின் மிகையுணர்ச்சி
மற்றும் கற்பனைத்திறனை சார்ந்து எழுதப்படுவது. வாசகனை ஈர்க்க வேண்டும்
என்ற யுக்தியுடன் எழுதப்படுபவை யாவும் எவரும் திறமை வளர்த்து எழுதலாம்.
ஆனால் உண்மையை/நிகழ்வை/வலியை எந்த வித மிகையும் இல்லாமல் பதிவிக்க
சிலரால் மட்டுமே முடியும். அந்த வகையில் நாஞ்சில் நாடனின் கதைகள் மிக
அபூர்வமானது.

சிறுகதைகள் சினிமா போல அல்ல. சினிமாவின் கதாநாயகர்கள் செய்யும் ஒரே
விதமான சாகசங்கள், காதல்கள், பாடல்கள் எதுவுமே இல்லாதது. எந்த
வித அலங்காரமுமில்லாது சம்பவத்தை பதிவித்தலே சிறுகதைகள். இப்போது
நிறைய சிறுகதைகள் வருகின்றன எல்லாவற்றையும் சிறுகதை என்று
ஒப்புக்கொள்ளமுடியாது. சினிமாவுக்கும் கதைக்கும் ஒரே ஒற்றுமை என்னவென்றால் பாத்திரங்களோடு தன்னையோ, பிறரையோ இணைத்து பின் உள்வாங்குதல்.
உங்களால் யாரையும் ஒப்பிட்டு பார்க்க முடியாத தருணத்தில் அந்த சிறுகதை/சினிமா உங்களை நெருங்காமலே சென்று விடும். நாஞ்சில் நாடனின் கதாநாயகர்கள்
சாகசங்கள் ஏதுமற்ற சாதாரண வாழ்வியல் மனிதர்கள். அதிகார/அலங்காரங்கள்
அற்ற பாத்திரங்கள் அவருடையது. பிராந்து என்றால் மனம்பிறழ்ந்த/பாதித்தவர்களை குறிப்பிடும் வார்த்தை. இச்சிறுகதைத் தொகுப்பின் ஒரு சிறுகதையாக பிராந்து
என்னும் சிறுகதையும் உண்டு. அதுவே இத்தொகுப்பின் தலைப்பாக வைத்திருக்கிறார். நாஞ்சிலின் தலைப்புகள் மீது எனக்கு தனி காதல் உண்டு உதாரணமாக


"என்பிலதனை வெயில் காயும்"
"எட்டுத்திக்கும் மதயானை"
"நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை"

"'நள்' என்று ஒலிக்கும் யாமம்"

எளிமையாகவும் அதே சமயம் வலிமையான அர்த்தம் கொண்ட தலைப்புகள். எட்டு
திக்கும் மதயானை தலைப்பிற்காக வெகுநாள் காத்திருந்தாராம். எதோ ஒருநாள்
அதிகாலை உறக்கத்தில் திடீரென்று உதயமானது என்று அவரே சிலாகித்திருக்கிறார்.

இதில் மனதை மிகவும் கலங்க வைத்த சிறுகதையாக "சாலப்பரிந்து" என்பதனை சொல்லலாம். படித்து முடித்த பின் சொல்லமுடியாத பாரம் வந்து தொற்றிக்
கொண்டது. எல்லாமே அனுபவத்திலும்/நேரிலும் கண்டதை எழுதும் நாஞ்சில்
சாலப்பரிந்து என்பதையும் எங்கோ கண்டு எழுதியிருந்தால் என்று தோன்றும்போதே
நெஞ்சை கனக்க செய்கிறது. கதையின் சுருக்கம் இதுதான் வயதான தாய் தனக்கும்
தன் குடும்பத்தினருக்கு உபயோகப் படாதபோது மகன், மருமகள் தன் மீது காட்டும்
உதாசீனம். ஒருகட்டத்திற்கு மேல் படுத்த படுக்கையாகி கிடக்கையில் இறந்து
விட்டாள் என்று கருதி ஊரெல்லாம் சொல்லப்போக அவள் இறவாமல் சீராக
மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறாள். "ஊரெல்லாம் செத்துட்டான்னு சொல்லியாச்சு
விடியறதுக்குள்ள மூச்சு அடங்கற மாதிரி தெரியல" பாத்ரூம்ல கொண்டு வச்சு
நாலு வாளி தண்ணி ஊத்துங்க சவம் அப்பவாச்சும் சாகுதான்னு பாக்கலாம்னு
மருமகள் சொல்கிறாள். மகனும் வேறு வழியின்றி காற்று போன பலூன் மாதிரி
இருக்கும் கிழவியை தூக்கி வந்து கழிவறையில் வைத்து தண்ணீர் ஊற்றுகிறான்.
"கிழவி சிரித்த மாதிரியே இறக்கிறாள்" இப்படி முடியும் கதையை யார்
படித்தாலும் அடுத்த பத்து நிமிடங்களுக்கு மனது அலைபாயும்.

வட்டார வழக்குகளில் மட்டும் எழுதி மொழியை சிதைப்பவர் என்ற குற்றச்சாட்டு
இவர் மீது உண்டு. அது மிகவும் தவறான குற்றச்சாட்டு வட்டார வழக்கிற்கும்
உருவம் உண்டு மொழியை சிதைப்பதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. கதையின்
தன்மைக்கு எது பொருந்துகிறது என்பதை படைப்பாளிதான் தேர்ந்தெடுக்கவேண்டும்
அந்த வகையில் தன் நிலைப்பாட்டின் மேல் உறுதியாக இருப்பது பாராட்டத்தக்கது.
இவர் தேர்ந்தெடுக்கும் சொற்கள் கூட சாதாரணமாக இருந்தாலும் அசாதாரண
தன்மை கொண்டவையாக இருக்கும்.

பேப்பர், பேனா, தபால் தலை, அஞ்சல் உறைக்கு கூட போதுமானதாக
இல்லாதவாறுதான் சிறுகதை படைப்பாளிக்கு சன்மானம் அளிக்கப்படும் சூழல்
நமது. உலகத்தரம் மிக்க படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழலில்
எத்தனையோ படைப்பாளிகளின் வாழ்க்கைத் தரம் இன்னமும் சிக்கலான
நிலையில்தான் இருக்கிறது. "நேர்காணல்" மற்றும் "காக்கைக்கு கூகை கூறியது"
போன்ற சிறுகதை எந்த மிகையுமில்லாமல் படைப்பட்டிருக்கிறது. நடப்பு
உலகத்தில் கூட உதாரணங்கள் கூறலாம் நல்லநாள் என்றில்லாமல் வேறு
எந்த நாளிலோ கூட நடிக,நடிகர்கள்,அரசியல்வாதி தவிர்த்து எந்த தொலைக்
காட்சியிலாவது எழுத்தாளனின் நேர்காணலை பார்த்திருக்கிறீர்களா? எந்த
எழுத்தாளனும் தொலைக்காட்சி நேர்காணலை எதிர்பார்த்து இல்லாவிட்டாலும்
குறைந்தபட்ச அங்கீகாரம் இல்லாவிட்டால் என்ன நிகழும் என்பதுதான்
நேர்காணலின் கதை.

சில விஷயங்கள் மிகவும் சாதாரணமாகவும் சில நல்லெண்ண முயற்சிகள்
அபாயகரமான விளைவுகளையும் தரக்கூடும். பேருந்தை தவற விட்டு வருகையில்
சில திருடர்கள் தேங்காய் களவாடுவதை பார்க்கிறான். புகார் சொல்லபோனால்
கண்டும் காணாமல் இருக்க கடைசியில் திருடனே அவனை கூப்பிட்டு இளநீர்
வெட்டி தருகிறான்.

சாகித்ய அகாடமி விருதை புறந்தள்ளும் கும்பமுனி என்கிற எழுத்தாளரின் வேதனை.
இக்கதையில் வரும் எள்ளல் அசாத்தியமானது.

சுய மதிப்பீடுகளின் சாயம் இழந்த விட்ட மனிதர்களை காணச்சகியாமல் அரசு
வேலையை ராஜினாமா செய்த மந்திரமூர்த்திக்கு ஊர் வைத்த பெயர் "பிராந்து"

கதைகளின் ஊடாக இவர் தரும் நகைச்சுவை மிகுந்த சிரிப்பை வரவழைக்க கூடியது.
இவருக்கு மட்டுமே சாத்தியமான நுண்ணிய நகைச்சுவை உணர்வு. பொதுவாக
தென்பகுதி எழுத்தாளர்களின் படைப்புகளில் இவற்றை காணலாம். இவரின் பாதை
தனித்து தென்படும்.

வாலி, சுக்ரீவன், அங்கதன் வதைப்படலம் கதையில் கல்லூரியின் பாடத்திட்டதில்
உள்ள எழுத்தாளன் அப்பல்கலைக்கழகத்து உரையாற்ற அழைக்கப்படுகிறான். போக
வர ஆகும் செலவு அறுநூறு ஆனால் அங்கே சன்மானமாக தரப்படுவதோ கவரின்
உள் மடித்து வைத்த பத்து பத்து ரூபாய் நோட்டுகள். சம்பளமில்லாத விடுப்பில்
பயணம் சென்று வரும் சன்மானம் இதுதான். படைப்பாளியின் அனுமதியின்றி
பாடத்திட்டத்தில் சேர்த்த கதையை யாரோ ஒருவர் தெரியப்படுத்துவதன் மூலம்
தெரிந்துகொள்வது என இக்கதை தமிழ்ச்சுழலை நினைவுபடுத்துகிறது.

தொகுப்பில் உள்ள அனைத்து மிகத்தரமான சிறுகதைகள்.

விஜயா பதிப்பகம்
விலை ரூபாய் 100
நன்றி Anyindian.com

Monday, January 21, 2008

நெகிழ்வுதரும் காட்சிகள், எழுத்துக்கள் மற்றும் ஒரு கவிதை

தனிமையின் வழி என்ற கட்டுரைத் தொகுப்பை அய்யனார் என்னிடம் கொடுக்கும்போதே
அருமையானது என்று சொல்லியே கொடுத்தார். வாங்கி இரண்டுமாதம் கழித்துதான்
அதை பிரித்து பார்க்க நேரம் வாய்த்தது. அவர் சொன்னதுக்கும் மேலாக இருந்தது.
இதை கட்டுரைத் தொகுப்பு என்று கூட சொல்லமுடியாது. தனியனின் வலி நிறைந்த
பயணம்தான் தனிமையின் வழி.

கதையைப் போல கற்பனையைப் போல எழுதிவிட முடியாதது தன்னைப் பற்றிய
குறிப்புகள். ஒவ்வொரு தலைப்பிலும் எழுதப்பட்ட கட்டுரைகளின் முடிவுகள் மிக
நெகிழ்ச்சியாக இருந்ததை இதற்கு முன் எப்போதும் கண்டதில்லை. எந்த ஒரு
வார்த்தையைக் கொடுத்தாலும் அந்த வார்த்தையைக் கொண்டு அழகான நினைவலைகளை
கட்டிவிடுவார் என்று தோன்றுகிறது. நாம் எழுதும்போதுகூட சுவையானவை
என்று கருதுவதை மட்டுமே எழுதுகிறோம். (இந்த எண்ணம் எனக்கு எப்போதுமே
உண்டு)வாசிப்பவர் நம்மீது சிறிதளவு பிரமிப்பாவது அடைய வேண்டும் குறைந்த
பட்சம் கவனிக்கப்படவாவது வேண்டும் என்ற முனைப்பு தெரியும்.

நான் எழுதிய சில பதிவுகள் நெகிழ்ச்சியாக இருந்ததாக வாசித்தவர் சிலர் சொல்லி
இருக்கிறார்கள். அதை நேரடியான எழுத்தின் மூலம் நான் அடைந்தது இந்த
கட்டுரைத் தொகுப்பில்தான். சுந்தர ராமசாமி, மணிக்கண்ணன், கிருஷ்ணமூர்த்தி
ஆகியவர்களுடன் தனது நட்பை விவரிக்கும் குறிப்புகளை படிக்கும்போது
அதிகாலைப் பொழுது. முனை மடித்து வைக்க முடியாமல் படித்து முடித்தேன்.
வாசித்து முடிக்கும்போது குரல் உடைந்துவிட்டதைப் போல உணர்ந்தது.
உண்மைகளைப் பற்றி எழுதும்போது அவை உண்மையாக இருப்பதே அபூர்வம்.
குழம்பிய நிலையில் இருப்பதாக நினைக்கும்போது சுகுமாரனின் குறிப்புகள்
ஒன்றை படிக்க வேண்டும்.

நூல் பெயர்: தனிமையின் வழி
ஆசிரியர்: சுகுமாரன்

-------

ஒம்பது ரூபாய் நோட்டு படம் பார்க்க நேர்ந்தது. முதலில் தங்கர் மீது
எனக்கு பயங்கர கொலைவெறி இருந்தது. என்ன காரணம் என்றே தெரியவில்லை.
அதை பழி தீர்க்கும் விதமாக சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், சிதம்பரத்தில்
அப்பாசாமி போன்ற படங்களை இன்னமும் பார்க்கவில்லை. சத்யராஜ் வாழ்க்கையில்
உருப்படியான இரண்டாவது படம் இது என சொல்ல வைக்க கூடிய கதை.
நாவல் வடிவத்தில் படிக்காது இருந்ததனால் இரண்டையும் ஒப்பிட்டு திருப்தியடையாத
மனநிலை என்பது இல்லவே இல்லை, தலைவர்களின் வரலாறோ, நாவலை
அடியொற்றி எடுக்கப்படும் படங்கள் மூலத்தை பிரதிபலிப்பதாக எவரும் சொல்லி
கேட்டதுமில்லை.

என்னைப்பொருத்த வரை தங்கரின் மேல் உள்ள கோபத்தின் அளவை வெகுவாக
குறைத்திருக்கிறது. அவரின் மற்ற படங்களை பார்ப்பதின் மூலம் தீர்த்துக்கொள்ளலாம்.
இறுதிக் காட்சிகளின் போது கமீலா, மாதவரய்யா மேல் காட்டும் வருத்தத்தை
மட்டும் வழக்கமான சினிமா விதிகளின் அடிப்படையில் அமைந்தது போல
ஒரு தோற்றம். படத்தின் இரண்டு காட்சிகள் மிகுந்த நெகிழ்வுகளை தந்தது.
நாசர் வீட்டுக்கு சத்யராஜ், அர்ச்சனா நிராதரவாக செல்லும் காட்சி மற்றும்
மாதவரய்யா இறந்த காட்சி. இவையிரண்டும் அடுத்த நெகிழ்வான காட்சிகள்
காணும் வரை மனதில் இருக்கும்.

நன்றி தங்கர்.

------------

என் மொழி புரியாத வெளி தேசத்தவர்களிடம் பேசுவதில் அலாதியான ஆசை
எப்போதுமே உண்டு. சொல்ல வருவதை நமக்கு புரிய வைப்பதில் அவர்களின்
முகத்தில் குழப்ப ரேகையுடன் கூடிய மெல்லிய பதைப்பு தெரியும். அவற்றில்
புதிய முகபாவங்கள் தென்படலாம். எனக்கும் இது பொருந்தும். அந்த வகையில்
நேற்று இரண்டு துருக்கியர்களை சந்தித்தேன். (இதுபோல சந்தித்தது பற்றி மட்டுமே
எழுதுவதாக சில விஷமிகள் பரப்புவதால் நீண்டநாள் கழித்து இப்போது எழுதுகிறேன்)
அவர்களுக்கு ஆங்கிலம் சுத்தமாக தெரியவில்லை, அரபியும் ஷோய ஷோய எனக்கு
எனக்கு அரபியும் சுத்தமாக வராது. ஞாயிற்றுக்கிழமை தூர்தர்ஷனின் செய்தி
வாசிப்பது போல பேசிக்கொண்டிருந்தோம். துருக்கி நாட்டு பெண்கள் மிக
அழகானவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் என்பதை விளக்கிச் சொல்ல ஐந்து
நிமிடம் பிடித்தது.

உடனே சிடி பேக்கிலிருந்து விதவிதமான சிடிக்களை எடுத்து கொடுத்தார்கள்.
எல்லாமே பார்த்து சலித்தவை. எதாவது திரைப்படம் இருக்கிறதா என்று சோதிக்க
ஐந்து நிமிடம் செலவழித்து எடுத்தது ஒரு இராக்கிய படம். பெயர் தெரியவில்லை.
ஆங்கிலத்திலோ, அல்லது இராக்கிய மொழியிலோ எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால்
துருக்கியில் டப்பிங் செய்திருந்தது. சப்டைட்டில் கூட இல்லை.



கதைக்களன் சதாமைத் தேடி அமெரிக்கப்படைகள் சுற்றும் மற்றும் அபு க்ரைப்
சிறையில் இராக்கியர்களுக்கு செய்த கொடுமைகள் பற்றி பேசும் படம். படத்தில்
பெரும்பாலான இடங்களில் வசனங்கள் இல்லாதது வசதியாக இருந்தது.
முக்கியமான ராணுவ தளபதியை (பாண்டம் மம்மி படத்தில் நடித்த மாயாவிதான் இவர். இரும்புக்கை மாயாவி காமிக்ஸ் தமிழில்)போட்டுத்தள்ள மூவர் படை கிளம்புகிறது
ஒவ்வொரு முறையும் தப்புகிறார். முடிவில் ஒரு பெண்ணின் குறுவால் மூலம்
மரணம் அடைகிறார். அப்பெண் திருமணத்தின் போது நடந்த விருந்தில் புதுக்
கணவன் கொல்லப்படுகிறார்.

சுற்றிலும் வீடுகள் நடுவில் மைதானம் போன்ற இடத்தில் அனைவருக்கும் தேநீர்
கொடுக்கப்படுகிறது. மணப்பெண் உட்பட பெண்கள் வீட்டின் மேலிருந்து ஆண்கள்
நடனமாடுவதை பார்க்கிறார்கள். எல்லாரும் மகிழ்ச்சியான இரவை அனுபவித்துக்
கொண்டிருக்கும்போது அமெரிக்க படைகள் வருகிறது. ஏதோ காரணம் சொல்லி
யாரையோ தேடுகிறது. நவீன ரக துப்பாக்கியுடன் இருக்கும் ஒரு வீரருக்கு அருகில்
சிறுவன் ஒருவன் அதிசயமாக துப்பாக்கியை பார்க்கிறான். விளையாட்டு சாதனம்
என்று நினைத்து குழலில் குச்சியை விடுகிறான். அந்த வீரன் கோபப்பட்டு சிறுவனை
ஒதுக்க மீண்டும் மீண்டும் குச்சியை விடுகிறான் சிறுவன். சலிப்படை வீரன்
மூன்றாவது முறை ஒதுக்கும்போது மூன்று குண்டுகளை வரிசையாக சிறுவனின்
இதயத்தில் செலுத்துகிறான். தொடர்ச்சியான இந்த காட்சியில் துப்பாக்கியிலிருந்து
குண்டு வெளியாவதை தவிர வேறு எந்த ஒலியும் இல்லை. கூட்டத்தில் சலசலப்பு
ஏற்படுகிறது. சிறுவனின் தந்தை பதைப்புடன் ஓட அவரையும் சுடுகிறார்கள்.
மாப்பிள்ளை கதறியபடி வர அவரையும் சுடுகிறார்கள். மணப்பெண் ஓடிவர
துப்பாக்கி முனையால் ஓர் அடி அவளும் மயக்கமாகிறாள். அப்பெண் அமெரிக்க
தளபதியை பழிவாங்க குறுவாளுடன் செல்லும் காட்சிகள் பரிதாபத்தை
வரவழைக்கிறது. அதே தளபதியை கொள்ள வரும் மூவருக்கு உதவி செய்கிறாள்.
கடைசியில் மரணமடைகிறார்.

இடையில் அபுகிரைப் சித்திரவதைகள், கைதிகளை நிர்வாணமாக்கி நாயை ஏவி
விடும் காட்சிகள், அமெரிக்க நிருபரை கடத்தி தலையை சீவ முயலும் தீவிரவாதிகள்
இடம் மதகுரு ஒருவர் மீட்டு நிருபரை அனுப்புவது(உண்மைச்சம்பவம்னு நினைவு)
ஊரையே காலி செய்யும் காட்சிகள் போன்றவை மனதைப் பிசைகிறது. இது எந்த
மொழிப்படம் என்பது தெரியவில்லை. தொழில்நுட்ப நேர்த்தியைப் பார்த்தால்
இராக், அல்லது துருக்கியர் எடுத்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.
இணையத்தில் தேடியதில் படத்தின் பெயர் kurtlar vadisi என தெரிந்து கொண்டேன்.

------

நிகழவோ அல்லது நிகழவே
சாத்தியமில்லாதவற்றைத்தான்
மனம் கற்பனை கொள்கிறது.
என் கற்பனை உலகம் மெய்யாகும்
தருணத்தில் முன் நிச்சயிக்கப்பட்ட
நிகழ்வுகள் நிகழலாம்.
என் கற்பனை உலகம் வெற்றிடம்
ஆகும்போது மனம் கவலை கொள்ளலாம்.
அக்கவலைகள் தீண்டாதிருக்கவே
மனம் கற்பனைகளை மீண்டும் மீண்டும்
புனைந்தும் ஏமாற்றியும் போகிறது,
எனினும் தேவதைகளுடனான கனவுகள்
மட்டுமே மிகுந்த கிளர்வுகளை
உண்டாக்குகிறது. அவை
தன் இயக்கத்தை நிறுத்தாமல்
பயணிக்கட்டும்.

----------

இந்த வார இறுதியில் இந்தியாவுக்கு செல்கிறேன். இரண்டாண்டுகளுக்குப் பிறகு
முதல் பயணம். மகிழ்ச்சியாக உணர்கிறேன். சகோதரரின் திருமணத்திற்காக
அவசர பயணம். நண்பர்கள் அனைவரையும் சந்திக்க ஆவல். சந்திப்புகள்
இருந்தால் தெரியப்படுத்தவும். தொடர்பு கொள்ள 9944111050.

Tuesday, December 25, 2007

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை - நாஞ்சில் நாடன்

கதாநாயக நடிகனுக்கு படத்துக்கு மூன்று கோடி ரூபாய்
சம்பளம் தருகிறார்கள். பத்தாயிரம் ரூபாய் மாத சம்பளம்
வாங்கும் உயர்நிலை பள்ளி ஆசிரியன் அந்தத் தொகையை
ஊதியமாக பெற 300 ஆண்டுகள் பணி செய்ய வேண்டும்.
முன்னூறு நெடிய ஆண்டுகள், முப்பது பெரிய தலைமுறைகள்.
கூலிக்காரன் என்றால் ஆயிரம் ஆண்டுகள்
அழுகை வரவில்லையா உங்களுக்கு?
எனக்கு வருகிறது.
நடிகனைத் தொட்டு பார்க்க விரும்பியவர் நாம்,
நடிகையைக் கோயில் கட்டிக் கும்பிட்டவர் நாம்,
கவர்ச்சி நடிகை குடித்து மிச்சம் வைத்த எச்சில் சோடாவை
அண்டாவில் விட்டு நீர் சேர்த்து கலக்கி அரைகிளாஸ்
பத்து ரூபாய் எனப் பிரசாதம் வினியோகித்தவர் நாம்,
பச்சை குத்திக்கொள்ளவும் தீக்குளிக்கவும் செய்பவர் நாம்,
நடிகைக்கு தீண்டல் தாண்டிப்போனால்
பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்துபவர் நாம்,
மன்றங்கள் நடத்தி மாற்று மன்றத்தின்
பட்டினிக் குடலைக் கிழித்து மாலை போடுபவர் நாம்,
நம்மை நாம் என்ன பெயர் சொல்லி அழைப்பது?
ஏமாளி என்றா? மூடன் என்றா? மூர்க்கன் என்றா?
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே
வாலுடன் பிறந்த வாயப்பன் என்பதா?



நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை இத்தலைப்பே கட்டியம் கூறும்
இக்கட்டுரைத் தொகுப்பின் சாரத்தை. நான் மதிக்கும் எழுத்தாளர்களில்
முதன்மை இடம் தரும் நாஞ்சில் நாடனின் பல்வேறு தலைப்பிலான
கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். இதை நான் எழுதும்போது எனக்கும்
குற்றவுணர்ச்சியே மேலொங்கி நிற்கிறது. சத்தியமாக இந்நூலின் அறிமுக
பதிவாகவே படிப்பவர்கள் உணர வேண்டும் என்ற முனைப்பிலேதான்
ஒவ்வொரு எழுத்தையும் யோசித்து எழுத வைக்கிறது என்னை. அத்தனை
வீரியமுள்ள வீச்சு நாஞ்சில் நாடனுக்கு. ஆகவே இதை சிறுவனின்
மழைக்கால குதூகலத்தை போலவே எண்ணி வாசிக்கலாம் என்றுமே
இப்பதிவு இந்நூலின் விமர்சனமாக அமைந்து விடாது என்பதை உணர்வேன்.

இத்தனை நாள் வாழ்ந்தும் இதுவரை வாய்க்கப்பெற்ற அனுபவங்களும்
எனக்கு கற்றுத் தந்தவை யாவும் பொய்யென உணர்த்தி பயங்கொள்ள வைக்கும்
கட்டுரைகள். இக்கட்டுரை வணிக ரீதியிலான பத்திரிக்கையிலும் வரும் காலம்
இதுவாக இருந்தால் கண்டிப்பாக நம் சமூகத்தின் நிலை இன்று வேறாகயிருக்கும்.
மக்களை போகத்தில் ஆழ்த்தி மூழ்கடிக்கும் வணிக பருவ இதழ்களுக்கு மத்தியில் வாசிப்பனுபவம் உள்ளவன் இதை படிக்கும்போது மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாவான். அதைப்போலதான் நானும். ஒவ்வொருமுறை புத்தகத்தை பிரிக்கும்போதும்
குற்றம் செய்தவன் போலவே முனை மடித்து உறங்குகிறேன்.

கண்மணி குணசேகரனின் சிறுகதைகளை படித்தபோது திகைத்து போனேன்.
நம்மக்கள் சிறுகதை என்ற வடிவத்தை பேப்பர்களில் ஒருபக்க, அரை, முக்கால்,
ஒன்றரை பக்கங்களால எச்சில் படுத்தி வாசகர்களின் மீது எறிகிறார்கள்
என்று தோன்றியது.

மேற்கோல் காட்டப்பட்ட வரிகள் எனக்குள் ஏற்படுத்திய அதிர்வுகள் நிறைய.
வெந்ததை தின்று விதி வந்தால் சாவது என்ற கொள்கை மத்தியில் வாழும் மக்கள்
கூட்டத்தில் யார் வேண்டுமானாலும் தலைமை ஏறி மிதித்து வாழலாம். அப்படிப்பட்ட
சமூகத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மாற்று சிந்தனைகளுக்கும்
முயற்சிகளுக்கும் மதிப்பளிக்கும் காலம் வரும்போது எல்லாக்கதவுகளும் திறக்கும்.

படைப்பாளியின் பெயரைக் கொண்டே மொத்த படைப்பையும் எடைபோடும்
மனிதர்கள் இங்கு அனேகம். புறந்தள்ளுவதற்கும், உதாசீனப்படுத்தவும் நிறைய
காரணங்களை மடி மீதே வைத்து அலைகிறோம். தமிழில் ஏராளமான
இலக்கியவாதிகள் போலவே சர்ச்சைகளும் ஏராளம்.

தமிழ் வார்த்தைகளுக்கு அரசியல் பார்வை கொண்டு ஒதுக்கப்பட்டவையாக சில
வார்த்தைகளை கூறலாம். வழக்கொழிந்து போய்விட்ட காரணத்தினாலேயே அவை
கெட்ட வார்த்தைகளாக கற்பித்துக் கொண்டிருக்கிறோம். வெறும் அதிர்வுகளை
ஏற்படுத்த வேண்டி சேர்ப்பது அல்ல. வலியை பதிவிக்க சொந்த மொழியில்
உள்ள வார்த்தைகளை பயன்படுத்தவே இயலாத சூழல் நம் தமிழ்ச்சூழல் மட்டுமே.
அவ்வகையில் மங்கலம் குழூஉக்குறி இடக்கரடக்கல் என்ற கட்டுரையினை
தமிழ்மண சூழலில் உள்ள புனிதர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.

"மாங்கா மாங்கா ரெண்டு மாங்கா மார்க்கட்டு போகாத குண்டு மாங்கா"
என்றெழுதும் கவிச்சிற்றரசு, பேரரசு, இணையரசு, துணையரசு ஆகியோரின்
வம்சாவழியினர் எல்லாம் மாலதி மைத்ரிக்கும், குட்டி ரேவதிக்கும், சல்மாவுக்கும்,
கனிமொழிக்கும் உமா மகேஸ்வரிக்கும், க்ருஷாங்கினிக்கும், இளம்பிறைக்கும்
கவிதை எழுத பாடம் நடத்துகிறார்கள்.


கட்டுரைத் தொகுப்பு முழுவதும் எள்ளல் கலந்த கோப எழுத்துக்கள் நிறைந்து
காணப்படுகிறது ஒன்றையும் விடாது வாசிக்க வேண்டியவை. இலக்கிய அறிமுக
கொண்டவர், இல்லாதார் எவர் படைப்பையும் மிக நேர்மையாகவும் நேர்த்தியுடனும்
விமர்சித்திருக்கிறது. எல்லா இலக்கிய சர்ச்சைகளிலும் பங்கு கொண்டவராயினும்
எதிலும் நடுநிலையாக நின்று எவர்க்கும் பகையாளி என்றில்லாமல் இருக்கும்
ஒரே எழுத்தாளர்.

நாடு இவர்களுக்கு என்ன செய்யப்போகிறது என்ற கட்டுரையில் இடஒதுக்கீடு
பற்றியும் நம் கல்வி முறை பற்றியும் மிகச்சிறப்பான முறையில் எழுதியிருக்கிறார்.
"காலில் செருப்பின்றி நடப்பவன் குதிரை மீதேறி பறப்பவனுடன் போட்டியிட்டு
வெல்ல வேண்டியுள்ளது. ஸ்பார்டகஸ் போல. எத்தனை நியாயமற்றததொரு போர்?
வெறும் வார்த்தைகளை கொண்டு எழுதப்படாமல் பிரச்சினையின் ஆழம் தொடும்
அற்புதமான எழுத்து.

வாசச்சமையலும் ஊசக்கறியும் என்ற கட்டுரையில் நாஞ்சில் நாட்டு சமையல்
பற்றி மிக விரிவானதோர் கட்டுரை. வாசிக்கும்போதே பசியெடுக்கும் விதம்
அனுபவித்து எழுதியது. பசியுணர்ந்தவனுக்கு மட்டுமே ருசியின் அருமை தெரியும்
என்பது போல. தொலைக்காட்சியிலோ, முப்பது நாள் முப்பது கறி போன்ற
புத்தகங்களில் உள்ளது போல அல்ல.

நாவலாசிரியனுக்கு கட்டுரை, விமர்சன கட்டுரை என்பது தேவையில்லாத வேலை
என்கிறார்கள். பிறக்கும்போதே நாவலாசிரியனாக பிறக்கவில்லை. நாஞ்சில்
நாடனை பொருத்தவரை கட்டுரை வாசிப்பு என்பது சிறுகதை வாசிப்புக்கு
இணையான சுகத்தை தரவேண்டும். விஷயஞானம் உள்ள எவரும் எதையும்
எழுதலாம் என்கிறார். இவர் வைக்கும் வாதங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தாமல்
இல்லை மாறாக முனை மடிக்காமல் வாசிக்க தூண்டுகிறது. இலக்கிய நண்பர்களுடன்
அமர்வுகள் குறித்த கட்டுரை சுவாரசியமாக இருந்தாலும் பிற எழுத்தாளர்கள்
பற்றிய தெரிவு இல்லாததால் சலிக்க வைக்கிறது. தீவிர வாசிப்பு அனுபவம்
உள்ளவர்கள் எளிதாக புரிந்துகொள்ளலாம்.

கட்டுரை புத்தகங்கள் படிப்பதிலே இதுவரை சுணக்கம் இருந்தது. மாற்றிக்
கொள்ள வேண்டிய கருத்து இது.

எந்த வகையிலும் இப்பதிவு புத்தகத்தின் விமர்சனமாக ஆகாது. தொகுப்பின்
மொத்த சுவையையும் ஒரே பதிவில் கொண்டுவரமுடியாமைக்கு வருந்துகிறேன்.

Wednesday, November 21, 2007

அளம்

பொதுவாகவே பெண் எழுத்தாளர்கள் என்பவர்களின் இலக்கிய எல்லையாக இதுவரை
நான் கருதியது அவள் விகடன், கண்மணி, பாக்கெட்நாவல் போன்றவைதான். குடும்ப
உறவுகளை விட்டால் வேறெதுவும் எழுத தெரியாத உப்புசப்பில்லாத கதைகளின்
உற்பத்தியாளர்கள் என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன். அதற்கு ஏற்ப சிவசங்கரி
அனுராதாரமணன் போன்ற எழுத்தாளர்களின் வாசிப்பில் உணர்ந்ததுதான்.ஒவ்வொரு
எழுத்தாளர்களுக்கு ஒரு தனி அடையாளம், எழுத்து நடை இருப்பதை உணர்வது
போல அனைத்து பெண் எழுத்தாளர்களுக்கும் ஒரே நடையிலிருப்பதை உணரலாம்.
தொழில் ரீதியாக நாவல்களை எழுதுகிறார்களோ என்று கூட எண்ணியிருந்தேன்.
எழுத்து என்பது ஆத்ம திருப்திக்காக இருக்க வேண்டும் என்ற நாஞ்சில் நாடனின்
வார்த்தைகளை நம்புகிறேன்.

என்றாவது ஒருநாள் இக்குறைகளை தீர்ப்பது போல நம் பெண்கள் படைப்புகள்
இருக்கலாம் என்று உள்ளுக்குள் எண்ணியிருந்தேன். அதற்கு தீனி போடுவது
போல அமைந்த வாசிப்புதான் தமிழ்ச்செல்வியின் அளம். அளம் என்பது உப்பளத்தை
குறிப்பது. முதலில் குழம்பிப்போனேன். என் வட்டாரத்தில் அதிக புழக்கத்தில் இல்லாத
வார்த்தை இது.

"மாணிக்கம்", "அளம்", "கீதாரி", "கற்றாழை" என நாண்கு நாவல்களை தமிழுக்கு
அளித்திருக்கும் சு.தமிழ்ச்செல்வி சமகால பெண் எழுத்தாளர்களில் முக்கியமானவர்.
இவரது "மாணிக்கம்" நாவல் தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான விருதினைப்
பெற்றது. இவரது படைப்புகள் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

பொருள் தேட வெளிநாடு சென்ற கணவன் இறுதிவரை திரும்பாத நிலையில் தனது
மூன்று பெண் குழந்தைகளுடன் வாழ்வை எதிர்கொள்ளும் சுந்தராம்பாள் எனும்
எளிய தாயின் போர்க்குணத்தை காவியத்தன்மையுடன் விவரிக்கும் கதைதான்
"அளம்" வாசகர்களின் ஏகோபித்த ஆதரவினை பெற்று தற்போது இரண்டாம்
பதிப்பாக வெளிவந்திருக்கிறது,

சுந்தராம்பாள் என்ற தாய் வடிவாம்பாள், ராசாம்பாள், அஞ்சம்மாள் என்ற தனது
மூன்று மகள்களை தனியொருத்தியாக வளர்த்து ஆளாக்க என்னென்ன சிரமப்
படுகிறாள் என்பதுதான் மொத்தக்கதையும். பொதுவாகவே கதையின் உரையாடல்கள்
அம்மண்ணின் பேச்சு வழக்கில் அமைவதுதான் பெரும்பாலாக கதைகளின் வெற்றி.
அவ்வகையில் இந்நாவல் பூச்சுகளில்லாத அசல் கிராமத்து மண்ணின் வாசம்.

நாள் நட்சத்திரம் பார்த்து நமக்கு என்னதான் பெயர் வைத்திருந்தாலும் பெரும்பாலான
வீடுகளில் செல்லப்பெயரை வைத்துதான் கூப்பிடுவார்கள் அதைப்போல இந்நாவலின்
முக்கிய பாத்திரமான சுந்தராம்பாளின் மகள்களை பெரியங்கச்சி, நடுத்தங்கச்சி,
சின்னங்கச்சி என்றே கதை முழுக்க இந்த பாத்திரங்கள் அழைக்கப்படுகின்றன.
"ம்பாள்" என்றே எல்லா பெயர்களும் முடிவதால் வாசகர்களுக்கு எவ்வித குழப்பமும்
வந்துவிடக்கூடாது என்பதை தவிர்க்கவே இந்த உத்தி என்று நினைக்கிறேன்.
அப்படி இருந்தால் அதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே அர்த்தம். கவனமான
வாசிப்பிலும் முதலில் பெயர்க்குழப்பம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

"மோரயப்பாரேங் கரிப்பான சூத்துமேரி. வண்ணாஞ்சாலு கணக்கா தொப்பய மின்னாடி
தள்ளிகிட்டு நிக்கி சனியங்" என்று பெற்றவனே மகளின் மீது எந்நேரமும் வெறுப்பை
உமிழ்கிறான். இப்படி நாவல்முழுக்க அம்மண்ணின் பேச்சு வழக்கே நிறைந்திருப்பதால்
வாசிப்பதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை என்றாலும் அதுதான்
இந்நாவலின் ஜீவன்.

ஒருவேளைக்கும் போகாத சுந்தராம்பாளின் கணவன் சுப்பையாவின் வாழ்க்கையில்
கப்பல்கார ராமையாபிள்ளை என்பவர் சுந்தராம்பாளின் குடும்ப சிக்கலை
எண்ணி சிங்கப்பூர் அழைத்து செல்கிறார். அங்கு சென்று சுப்பையன் காணாமல்
போகிறான். கடைசிவரை அவன் ஊருக்கே திரும்பவில்லை. கப்பல்கார ராமையா
ஒவ்வொருமுறை ஊருக்கு வரும்போதும் தன் கணவன் பற்றிய தகவல் அறிய
செல்லும்போது நமக்கே எரிச்சலாக இருக்கும்.

இந்நாவலின் வாசிப்பின்போது வைரமுத்துவின் கருவாச்சியை நினைவு வருவதை
உணரலாம் ஆனால் கருவாச்சி காவியம் சினிமாத்தனமானது. ஒரு பெண் தனித்து
வாழும்போது சமூகம் அவளுக்கு கொடுக்கும் இன்னல்கள், குறைந்தது மூன்று
ஆண் கதாபாத்திரங்கள் முதல் ஊரே அவளுக்கு எதிராகவும் பல இன்னல்களும்
கொடுக்கும். அதையெல்லாம் சமாளித்து பின் ஊர் உணரும் புண்ணியவதி ஆவாள்
கருவாச்சி. எல்லாமே சுவாரசியங்களுக்காக திணிக்கப்பட்ட சம்பவங்களின்
கோர்வையாக கருவாச்சி காட்சியளிப்பாள். சுந்தராம்பாளின் வாழ்க்கைப் பாதையில்
துன்பங்களும், வருத்தங்களும் ஏராளமாக இருந்தாலும் எதுவுமே திணிக்கப்பட்டது
போல தோன்றவில்லை.

புயலும், புயலுக்கு பின் வரும் வறுமையும் ஒவ்வொருமுறை விதைக்கும்போதும்
இயற்கைக்கு பறிகொடுக்கும் சோகம் கதையாக இருந்தாலும் மனசு வேதனைப்பட
வைக்கிறது. நாவல் முழுக்க ஏமாற்றங்களும் சோகங்களும் நிறைந்து இருந்தாலும்
ஒருமுறை கூட சலிப்பை ஏற்படுத்தவில்லை.

மிகுந்த சிரமத்திற்கிடையில் மணமுடித்துக்கொடுத்த மூத்த பெண் வடிவாம்பாளின்
மணவாழ்க்கை ஒரே மாதத்தில் முடிந்துவிட வாழாவெட்டியாக வீட்டிற்கு வருகிறாள்.
இரண்டாவது மகளும் இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு கணவனால் துரத்தப்பட்டு
வீட்டுக்கு வருகிறாள். ஒரே வீட்டில் மூன்று திருமணமான வாழாவெட்டிகளால்
கடைசிப்பெண்ணான அஞ்சம்பாளுக்கு வரன் அமைவதில் சிக்கல். அவளுக்கும்
பூச்சிக்கும் மட்டுமே தெரிந்த நிறைவேறாத அந்த காதல் அழகு. காதல் என்ற
வார்த்தையைக் கூட உபயோகப்படுத்தவில்லை.

இக்கதையை வாசிக்கும் நேரத்தில் உங்களது எண்ணங்களும் சற்று பின்னோக்கி
அந்தக்கால கிராமமான கோயில்தாழ்விற்கு சென்று மக்களை நேரில் சந்திப்பது
போன்று உணர்வீர்கள். அழுத்தமான கதையை விரும்புவோர் தாராளமாக
ஒருமுறை வாசிக்கலாம்.

நூலின் பெயர்: அளம்
ஆசிரியர்: சு.தமிழ்ச்செல்வி
மருதா பதிப்பகம்
விலை இந்திய ரூபாய் 100.

வாசிக்க கொடுத்த அய்யனாருக்கு நன்றி
அய்யனாருக்கு கொடுத்த ஆசிப்புக்கும் நன்றி.

Friday, October 26, 2007

தந்திரபூமி - இந்திரா பார்த்தசாரதி

இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துக்களை இதற்கு முன்பு படித்ததில்லை
அவருக்கென்று எந்த பிம்பங்களும் எனக்குள் பதிந்திருக்கவில்லை அதனால்
வாசிப்பின் போது ஏமாற்றமோ பிரமிப்போ எதுவும் ஏற்படவில்லை. கதையின்
முக்கியமான பாத்திரமான கஸ்தூரி பிழைப்பிற்காக டெல்லி வருகிறான்
ஆரம்பத்தில் அய்யராத்து அம்மாஞ்சி டெல்லி வரைவந்து ஏதோ வேலையில்
ஒட்டி பிறகு இருபது வருடங்களுக்கு முன்பு செட்டிலான வடகலையோ
தென்கலையோ ஏதோவொரு கலையை கட்டி காத்துவரும் அரசாங்க
ஊழியரின் மகளை ஏதேச்சையாக சந்தித்து காதல்வயப்பட்டு கல்யாணத்தில்
முடியும் போலிக்கிறது என்று முதல் பத்து பக்கங்களை படித்து முடித்தபிறகு
அனுமானித்தேன். இதை எதற்கு கதையாக எழுதவேண்டும் சின்னத்திரை
தொடர்களிலே இதைத்தானே காட்டுகிறார்கள் என்று சலிப்பு மேலிட
தொடரலாமா வேண்டாமா என்று யோசித்து பிறகு வேறு எதுவும் புத்தகங்கள்
இல்லாததால் இதையே தொடர்ந்தேன்.

ஆரம்பத்திலேயே சுவாரசியமில்லாமல் போனதற்கு சுஜாதாவின் முன்னுரையும்
ஒரு காரணம். என் குழந்தைத்தனமான முன் அனுமானங்கள் தவறு என்று படித்து
முடித்த பிறகு உணர்ந்தேன். சுவாரசியமானதாக இல்லாவிட்டாலும் வாசிப்பினூடே
நம்மையும் கதையில் இணைத்துக்கொள்கிற உத்தியை ஆசிரியர் நன்றாக
கையாண்டிருக்கிறார். தன் மேதாவித்தனங்கள் எல்லாம் ஒருபெண் முன் தவிடு
பொடியாக்கப்படுவது விரும்பாமல் சுற்றியலையும் மனம் கொண்டவனாக கஸ்தூரி
கதையில் அவன் பாத்திரத்தின் அதிநவீனமான முற்போக்கு சிந்தனைகள் கண்டு
ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை.

அரசாங்கத்தின் அத்தனை நெளிவுசுளிவுகளையும் கதைக்குள் எப்படி கொண்டு
வந்தாரேன்று வியப்பாக உள்ளது. கதையின் ஒவ்வொரு வரியிலும் எள்ளல்
இருப்பது ஒரு புன்னகையுடன் வாசிக்க வைக்கிறது. இத்தனை நகைச்சுவையான
எழுத்தை முன்பு வாசித்ததில்லை. அதுவும் எலியை எக்ஸ்போர்ட் செய்ய்யும் தொழில்
பற்றி விவரிக்கும்போது வாய்விட்டு சிரிக்கமுடிந்தது. அதிபுத்திசாலித்தனமான
உரையாடகளும் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளும் அங்கங்கே தூவியிருப்பது
இனிமை.

எல்லா இடத்திலும் எதார்த்தத்தை அப்படியே படம் பிடித்திருக்கிறார். கல்யாணம்
என்ற வியாபாரத்தில் நம்பிக்கை இல்லாத ஒருவன் தன் பிடியில் இருந்து மெல்ல
மெல்ல தன்னையறியாமல் விலகும் பெண்ணை கண்டு அச்சமுறும் கஸ்தூரி. முதலில்
ஆணாதிக்க சிந்தனை உள்ளவனாக இருப்பானோ என்றெண்ணியிருந்தேன். சடார்
சடாரென அவன் எடுக்கும் முடிவுகள் நமக்குள் பதை பதைப்பை ஏற்படுத்துபவையாகவும்
அதுவே பின் அப்பாத்திரத்தின் மேல் காதல் கொள்ளவும் வைக்கின்றன.

எந்தவிதமான இலக்கும் இல்லாமல் பயணிக்கும் வாழ்க்கை கஸ்தூரிக்கு எதிர்ப்படும்
எவரையும் தன் வலைக்குள் வீழ்த்தும் தொழில்நேர்த்தி வியாபாரத்தில் மட்டுமல்ல
பெண்கள் விஷயத்திலும். தன் சுயமரியாதைக்கு சிறிது கலங்கம் ஏற்பட்டாலும் அந்த
கணத்திலேயே வேலையை தூக்கியெறியும் அவனுக்கு ஒருசமயத்தில் போக்கிடம்
இல்லாமல் போகும்போது ஒருபெண்ணின் தயவால் முன்பு செய்த வேலையை விட்ட
அடுத்த நொடியிலேயே அடுத்த வேலை கிடைக்கிறது. அப்போது அவன் தனக்குள்
கேட்டுக்கொள்ளும் கேள்விகள் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் சுய அலசலாக
இருக்கலாம்.

கதையில் ஏராளமான கதாபாத்திரங்கள் வந்து போகின்றன அவைகளுக்குள் நடக்கும்
உரையாடல்கள் ஒரு திரைப்படத்தைப் போல நமக்குள் விரிவது அலுப்பில்லாமல்
வாசிக்க முடிகிறது. ஒவ்வொரு இடத்தில் கதாபாத்திரத்தின் முகபாவனை இப்படிதான்
இருந்திருக்குமோ என்று கூட எண்ணவைக்கும் அளவுக்கு உள்ளது. முக்கியமானது
இதன் நகைச்சுவை மிகவும் நுட்பமான இரண்டாவது வாசிப்பில்தான் புரிந்துகொள்ள
முடியும் என்பது போல அமைந்திருப்பது சிறப்பம்சம். எழுத்தாளருக்கு நிச்சயமாக
நகைச்சுவை உணர்வு இயல்பிலேயே இருக்கிறது.

கதையின் ஆரம்பம் அழகாகவும் பிறகு கஷ்டபட்டு முடிவில் சுபமாக முடிக்கும்
கதையாக இருக்கும் கதையின் பாத்திரங்கள் எல்லாம் மிகவும் நல்லவர்களாக
இருப்பார்கள் என்று எண்ணுவீர்களானால் எல்லாமே தவறாக இருக்கும் இதை
வாசித்தபிறகு. எவர் நல்லவர் எவர் கெட்டவர் என்றே தீர்மானமாக
எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. அவரவர் அவரவர் சந்தர்ப்பத்திற்கு
காத்திருக்கிறார்கள். மனிதன் எவ்வளவுதான் நவீனங்களுக்குள் புகுந்து நாகரீக
வேஷம் போட்டாலும் அவனின் ஆதிகுணம் என்பது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில்
வெளிப்பட்டே ஆகவேண்டும். அந்த வெளிப்பாடு வெற்றியிலா தோல்வியிலா
இயலாமையிலா எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதுதான் கதையின்
சாராம்சம். இத்தனை முற்போக்குவாதியாக காட்டப்பட்டிருக்கும் கஸ்தூரியின்
கதாபாத்திரம் மீனாவினால் தனக்கு ஏற்பட்ட அவ்வாறு கஸ்தூரியால் எண்ணப்படும்
தோல்வியை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவளை தன்வசமாக்கி
தன் தோல்வியை வெல்ல மீனாவின் கணவனை ராஜஸ்தானுக்கு அனுப்பும்போது
கஸ்தூரியின் மேல் வைத்திருந்த அத்தனை ஆச்சரியங்களும் காணாமல் போகின்றன.
அடுத்தவனின் மனைவியை அடைய துடிக்கும் அந்த நொடியில் அத்தனையும்
காணாமல் போகின்றன.

கஸ்தூரிக்கு அடுத்தபடியாக கதாநாயகி போன்ற பாத்திரமான மீனாவை எப்படி
புரிந்துகொள்வதென்றே தெரியவில்லை. கதையின் ஆரம்பத்தில் மேலிடத்து
அதிகாரியை வளைத்துபோடும் செகரட்டரி என்ற அளவில் அறிமுகமாகி பின்
நம்ப முடியாத அளவுக்கு முதிர்ச்சியை வெளிப்படுத்தும் அந்த பாத்திரத்தை
புரிந்துகொள்வது கடினம் அதனால்தான் கஸ்தூரி அவளிடம் தன் ஆணவத்தை
கைவிட்டு சரணடைகிறான். பெண் என்பவள் பெண்ணாலேயே புரிந்து கொள்ள
முடியாதவள் என்பது போல அமைந்த பாத்திரம். நல்லவளா, கெட்டவளா என்ற
இருவார்த்தைகளுக்கு அடக்க முடியவில்லை. அதையும் தாண்டி கஸ்தூரிக்கு
தான் எந்த விதத்திலும் சளைத்தவள் அல்ல என எண்ண வைக்கும் அளவுக்கு
அவளின் போக்கு இருக்கிறது. அதுவும் உண்மைதான்.

ஆரம்பமும் இல்லாத, முடிவும் இல்லாத கதை இது. வாழ்க்கையை அதன்போக்கில்
வாழவிரும்பும் ஒருவனின் வாழ்க்கையில் எதிர்படும் சவால்கள், தோல்விகள்,வெற்றிகள்
சந்தோஷங்கள் எல்லாம்தான் தந்திரபூமி. கதையின் முடிவாக எழுத்தாளர் என்ன
சொல்ல வருகிறார் என்பது வாழ்க்கை பெரியோர்கள் கட்டமைத்தபடி வாழ்ந்தால்தான்
இனிமையாக இருக்கும் என்பது போல எனக்கு பட்டது.

எல்லாம் வாசித்து முடித்தபிறகு சுஜாதாவின் முன்னரையை மறுபடியும் வாசித்தேன்.
முன்பே சொன்னது போல முன் அனுமானங்களுடன் ஒரு விஷயத்தை அலட்சியமாக
எண்ணினால் அது தவறாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. முதல் கோணல் முற்றிலும்
கோணல் என்பது தவறான பழமொழி என்பதை உணர்ந்தேன்.

வாசிக்க கொடுத்த அய்யனாருக்கு நன்றி.
அய்யனாருக்கு வாசிக்க கொடுத்தவருக்கும் நன்றி.

Monday, October 15, 2007

சதுரங்க குதிரை


பிரம்மச்சரியம் என்பது பிரச்சினையில்லாத வாழ்க்கை என்று மேலோட்டமாக
பார்த்தால் தெரிவது ஆனால் இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாத ஒரு
பெண்ணுக்கு என்னென்ன சோதனைகளை இச்சமூகம் தருமோ அத்தனையும்
ஆணுக்கும் உண்டு. திருமணமே ஆணையும் பெண்ணையும் முழுமையாக்குகிறது
என்பது நம் சமூக கட்டமைப்பின் விதிகளை தளர்த்தும் இருபாலருக்கும் ஒரே
பொதுவாகும். ஏனோ பெண்ணிற்கு மட்டும் இழைக்கப்படுவது போல
மாயை உண்டாக்கியிருக்கிறார்கள்.

தந்தையில்லாத ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து படித்து சுயமாக சம்பாதித்து
திருமணம் என்ற பந்தத்தில் நுழைய சமயம் பார்க்கும்போது அரைக்கிழவனாக
மாறியிருக்கும் அதற்கு மேலும் திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டுமா
என்ற நினைப்பில் விட்டுவிட்டவர்களை எண்பதுகளில் அனேகம் பேரை காணலாம்.
இன்றையை வாழ்க்கைக்கும் சற்றேறக்குறைய இது பொருந்தும்.

இந்நாவலில் வரும் நாராயணனின் கதையும் இதுதான். கிராமத்து குடும்ப
பிண்ணனியில் வளர்ந்து பம்பாய்க்கு வேலைக்கு செல்லும் நாராயணனின் கதையும்
இதுதான். வாழ்வின் அனேக நேரங்களில் தனக்குள் மட்டும் உரையாடிக் கொண்ட
மனிதனின் கதை.



"எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல
வேள்வி அல்ல, பிரசவ வேதனை அல்ல
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ
அல்ல. பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல
பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல.
வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி
என் சுயத்தை தேடும் முயற்சி."


இக்கதையை படித்து முடித்ததும் மனித மனங்களை ஓரளவு புரிந்துகொள்ளும்
அனுபவத்தை நீங்கள் பெறுவீர்கள். ஏராளமான கதைகளும் திரைப்படங்களையும்
நாம் பார்த்திருக்கலாம் ஒரே கதாபாத்திரத்தை மட்டும் வைத்துக் கொண்டு
கதையை சுவாரசியமாக்கும் முயற்சியை அனைத்திலும் பிரதானமாக காணலாம்.
ஆனால் இந்நாவலில் ஒரே கதாபாத்திரமான நாராயணனை சுற்றி மட்டும்
கதை செல்கிறது சுழித்து செல்லும் நதியை போல அதன் போக்கில் செல்கிறது
எத்தனை தடைகளை, எத்தனை சோதனைகளை அனைத்தும் தாண்டி திருமணம்
என்ற பந்தத்தில் சேராமலே அதன் பயணம் முடிகிறது.

"கரும்பு வண்டியின் மேல் அமர்ந்து, கரும்பைக் கடித்து துப்பிக் கொண்டே போன
பதினான்கு வயது பெண், கால் முட்டில் வைத்து ஒடித்த மறுபாதிக் கரும்பை அவனை
நோக்கி வீசி எறிந்த கணம் வாழ்க்கையை சுவாரசியமுள்ளதாக்கி விட்டுப்போனது."

மூன்று செட் பனியன், ஜட்டி, கர்ச்சிப், சாக்ஸ், ஒரு லுங்கி, ஒரு துண்டு, விரிப்பு
போர்வை, தலையணை உறையுடன் பேண்டும் சர்ட்டும் ஆறேழு ஜோடிகள்
இருக்கும். மாற்றி மாற்றிப் போட்டுக்கொள்ள. எல்லாம் பாலியஸ்டர் விவகாரங்கள்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் எடுத்தது முதல் போன மாதம் எடுத்தது வரை.
பழையவை தையல் விடும். நிறம் மங்கி வெளிறும். கிழிவது கிடையாது. மிகவும்
சலித்து போனால் யாருக்காவது கொடுத்து விடுவது. சேர்த்து வைக்க இடம் பற்றாது.
உள்ளாடைகள் ஒன்றூ கிழிந்தால் மட்டுமே மாற்றூ வாங்குவது.

இதை தவிர ஆஸ்தி என்ன?

பேனா, பைஃபோகல் கண்ணாடி, பெல்ட், ஒரு ஜோடி ஷூ ஒரு ஜோடி தோல்செருப்பு.
ஒருஜோடி மழைக்கால ரப்பர் சாண்டக், மடக்கு குடை, அட்ரஸ்-டெலிபோன் எண்கள்
கொண்ட டயரி, கல்விச்சான்றிதழ்கள், வேலை செய்த கம்பெனிகளின் அனுபவ
சான்றிதழ்கள்,பாஸ்போர்ட், வங்கிக்கணக்கு புத்தகம்.

மூன்று மணி நேர முன்னறிவிப்பில் இடம்பெயர முடியும் எனும் தயார்நிலை வாழ்க்கை.
எல்லைப் போர்வீரனை போல கடிதங்களுக்கு பதில் எழுதிப்போட்டதும் கிழித்துப்
போட்டுவிடுவது. "நலமாக இருக்கிறேன், எல்லாரும் சுகமாக இருக்கிறீர்களா?
உங்கள் கடிதம் கிடைத்தது. என்பவற்றுக்கு மேல் நான்காவது வார்த்தைக்கு போராட
வேண்டியிருந்தது. சிலசமயம் தேதி போடாமல் அஞ்சலட்டைகளை அச்சிட்டு
வைத்துக்கொள்ளலாமா என்று கூடத் தோன்றும்

இதுபோன்ற எத்தனையோ அர்த்தமுள்ள நிகழ்வுகளை கதை நெடுக காணலாம்.
பிரம்மச்சரியத்தை விரும்பி ஏற்றுக் கொண்டவனல்ல, வாழ்க்கையின் பாதையில்
தானாக வந்து ஒட்டிக்கொண்டது ஒருவகையில் அவனுக்கு சந்தோஷத்தையே
தந்தது. வாழ்வின் அடுத்தநொடி தரும் ஆச்சரியங்கள் ஏராளம். நாராயணனின்
வாழ்க்கையில் இதுபோன்ற அடுத்தநொடி ஆச்சரியங்களே அதிகமிருந்தன.
அவையில்லாத அடுத்த நொடிகள் யுகங்களாக.

கல்யாணமாகாதவன் என்றால் ஆயிரம் இளக்காரம். சமூகம் பல பெயர்களை நமக்கு
கொடுக்கும். நாராயணனுக்கு அவனைப்போன்றே கடைசி வரை திருமணம் செய்து
கொள்ளாத ஒருவன் நண்பன் குட்டினோ இக்கதையில் வரும் முக்கியமான பாத்திரம்.
ஆனால் அறுபதாவது வயதில் துணையை தேடிக்கொள்ளும் அதுவும் ஆதரவற்ற
பிள்ளைகளால் கைவிடப்பட்டவள்.

"கட்டிலில் வந்து விழுந்தாலும் கவனம் பக்கத்து அறையின் சப்தங்களில் சென்று
நிலை கொண்டவவாறு இருந்தது. சற்று நேரத்தில் கதவு திறந்து அடைபடும் ஓசை.
மூன்றாவது ஆள் வெளியேறுகிறான் போலும். உரத்த சத்தம் நின்று விட்டது.
மறுபடியும் எழுந்து கதவிடுக்கின் வழியாக உற்றுப்பார்த்தான் நாராயணன்.
தனக்கு நாற்பத்தைந்து வயதாகிறது என்பது ஞாபகம் வந்தது. நெருக்கடியான
பஸ்களில் ஸ்தனம் இடிப்பதையும் விட இது ஒன்றும் கௌரவமான செயலில்லை.
இருபத்தைந்து வயதுக்கு உட்பட்ட வாலிபன் எடுத்துக்கொள்ளும் அற்பத்தனமான
சுதந்திரங்களை தானும் எடுத்துக்கொள்வது ஈனமானது என்று எண்ணினான்.
ஆனால் மனித மனம் எந்த வயதிலும் கேவலமானதாக இருக்க முடியும் போலும்.
போர்த்துக்கொண்டுள்ள கௌரவ சட்டைகள் ஈனங்களை மறைத்தும் நாற்றங்களை
மூடியும் வைத்து விடும்."

இதேபோன்றுதான் கதையின் மற்ற கதாபாத்திரங்களுடன் உரையாடுவதை
காட்டிலும் தனக்குள், தன் மனவிகாரங்கள், பண்புகள், கோபங்கள், துயரங்கள்
என அனைத்தையும் தனக்குள் மட்டும் பேசிக்கொள்ளும் ஒரு பாத்திரம்.
ஒருவகையில் இந்த புத்தகம் சுயபரிசோதனையாக கூட வாசிப்பவருக்கு
அமையலாம். தனியனின் பயணம்தான் சதுரங்க குதிரை ராணியை நெருங்க
முடியாத குதிரை.

ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு கணத்தில் தனித்து விடப்படலாம் அப்போது
அத்தனிமையின் பயணத்தில் யாருடைய வருகையும் இல்லாமல் கூட போகலாம்
தென்றலோ புயலோ எதுவுமே தீண்டாத சூன்யப்பெருவெளியின் இறுதி வரை
நிகழலாம். அப்பயணத்தின் இறுதியாக நீங்கள் கண்டவை எதுவாக இருக்கும்?
மற்றவருக்கு அவ்வாழ்க்கை எப்படியான புரிதலாக இருக்கும். நினைத்துப் பார்க்க
இயலாத கொடுமையாக இருக்குமென்றால் பிறந்ததின் அடையாளம் என்னவாக
இருக்கும்?

கதையை படித்து முடித்ததும் உங்களை அதுவே ஆக்கிரமித்திருக்கும். புயலிலே
ஒரு தோணி நாவலுக்கு அடுத்ததாக என்னை உளவியல் ரீதியாக பரிசோதிக்க
உதவிய புத்தகமாக இதைக் காணுகிறேன்.

நூல் பெயர்: சதுரங்க குதிரை
ஆசிரியர் பெயர்: நாஞ்சில் நாடன்.
விஜயா பதிப்பகம்
விலை ரூபாய் 70.00

*வண்ண எழுத்துக்களில் உள்ளவை புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

**புத்தகத்தை வாசிக்க கொடுத்த அய்யனாருக்கு நன்றி!
அய்யனாருக்கு கொடுத்த அண்ணாச்சிக்கு நன்றி! நன்றி!!

***நன்றி anyindian.com

புத்தகம் படிச்சின்னா அதபத்தி எழுது அப்பதான் உன்னோட அருமை பெருமைய
எல்லாரும் தெரிஞ்சிக்க முடியும்னு என்னை ஊக்குவித்த(??) அண்ணாச்சியை
இப்போது பெருமையோடு பார்க்கிறேன்.

Saturday, September 29, 2007

வெள்ளெருக்கு

அய்யனாரும் பிற பதிவர்கள் சிலரும் ஏற்படுத்திய முன்விவரணைகள் மூலமாக
அந்நூல் எனக்கு பரிச்சயமானது. பக்கங்கள் அதிகம் நீளும் நாவல்களில்
அதிகம் விருப்பமில்லை. பொட்டுதெறித்தது போல சிறுகதைகள் ஏற்படுத்தும்
சிலிப்புகளே அதிகம் என்னை ஈர்த்தது. நிறைய சொற்களை உள்ளடக்கிய
நாவல்களை விட வாழ்க்கையை ஆதாராமாக சிறு உரையாடல்கள் மூலம்
வெளிப்படுத்தும் சிறுகதைகள் ஏராளம் இருக்கின்றன. அந்த வரிசையில் அமைந்து
விடாமல் வெள்ளெருக்கின் அனைத்துக்கதைகளும் எதற்கும் பொருந்தாமல்
இருக்கின்றன. தமிழில் அதிகம் தெற்கைபற்றிய சிறுகதைகளே அதிகம்
எழுதப்பட்டிருக்கின்றன, புனையப்பட்டிறுக்கின்றன. நான் வாசித்த வரையில்
தென்னாற்காட்டின் வாழ்க்கைமுறையை எவரும் பதித்ததில்லை. இச்சிறுகதை
தொகுப்பு அதனை பூர்த்தி செய்கிறது.

முதன்முறையாக வெள்ளெருக்கை கையில் எடுத்தபொழுது எனக்குள் எதிர்
பார்ப்புகள் அதிகமாக இருந்தன. அவை எவற்றையும் பொய்யாக்காமல்
அத்தனையும் திரைக்காட்சிகள் போல வாசிக்கையில் என் முன் நிழலாடியது
போன்ற ஒரு உணர்வு.

பொதுவான இடத்தில் நமது பேச்சுக்கள் தலைவர்களின் மேடைப்பேச்சு போலதான்
அழகுற அமைந்திருக்கிறது. அதைத்தான் உலகமும் நம்புகிறது. ஆனால் அது
உண்மையல்ல. எந்த ஒரு சம்பவத்தையுமே நேரில் பார்த்தவன் எழுதும்போதுதான்
அதைப்பற்றிய பிம்பம் வாசிப்பவனுக்குள் முழுமையாக நிழலாட சாத்தியமுண்டு
என்பதை ஆழமாக நம்ப வைத்திருக்கிறது இந்த தொகுப்பு.

குறிப்பிட்டு சொல்லும்படியாக இத்தனை சிறுகதைகள்தான் என ஒரு முடிவுக்கும்
வரமுடியாமல் குழப்பத்தில் ஆழ்ந்து விட்டேன். அத்தனை எதார்த்தமான
வெளிப்பாடுள்ள கதைகள். கதைகள் என்பதை விட நடந்தவை என்றுதான் சொல்ல
முடியும். எவரும் இதை கதை என்று ஒப்புக்கொள்ளவே மறுப்பர்.

ஒரு விஷயம் உங்களை ஆச்சரியப்படுத்துகிறது என்றால் அது அரிதாக நடக்கும்
ஒன்றாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. அதுபோலவே இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும்
வார்த்தைகளும், நம்பிக்கைகளும் இக்காலத்தில் காணவே முடியாதபடி மாறிவிட்டிருக்கிறது.
ஒருகாலத்தில் நடந்தவை நான் சிறுவயதில் தூண்மறைவில் நின்று பார்த்திருக்கிறேன்
என்ற விஷயங்களை எழுத்தில் பார்க்கிற போது ஒரு உற்சாகம். இதுவரை யாரும்
எழுதவில்லையே என்ற ஆதங்கமும் ஒன்று சேர்ந்து என்னை சந்தோஷப்படுத்தியது.

இச்சிறுகதை தொகுப்பில் ஒவ்வொரு கதையிலும் என்னைப் பொருத்திப் பார்க்கும்
படியாக ஒரு கதாபாத்திரம் கண்டிப்பாக காண முடிந்தது. நான் இல்லாவிட்டாலும்
நான் பார்த்த மனிதர்கள் எழுத்தில் தெரியும்போது நூலிற்கும் எனக்குமான நேரடி
உரையாடலாகவே இந்த வாசிப்பனுபவம் எனக்கு தந்தது.

இச்சிறுகதைகளின் மிகப்பெரிய பலம் கிராமத்து மனிதர்களின் எள்ளல் பேச்சு
படிச்சிட்டு சிரிக்காம இருக்கவே முடியாது.

இந்நூலை வாசித்து முடித்த பிறகு இதுவரை எத்தனையோ சத்தில்லாத குப்பைகளை
படித்து தொலைத்து வீணடித்திருக்கிறோம் என்னும் மெல்லிய குற்ற உணர்ச்சி
என்னை தாக்கியது.

சிறுகதைப் பிரியர்கள் தவற விடக்கூடாத தொகுப்பு இது.

வெள்ளெருக்கு
கண்மணி குணசேகரன்
தமிழினி பதிப்பகம்.
விலை ரூபாய் 70