எல்லையற்ற அன்பு கொள்வோம்

Wednesday, March 04, 2020

கொரோனா

கொரோனா பாதிப்பு இந்தியாவில் துவங்கிவிட்டதாக செய்திகளிலிருந்து அறிய முடிகிறது. முதல் கட்டமாக கேரளாவில் வுஹானிலிருந்து திரும்பிய மூன்று மாணவர்களுக்கு அறிகுறி தென்பட்டு சிகிச்சையிலிருந்து மீண்டு விட்டார்கள். இதுவே மிகப்பெரிய ஆச்சரியம். அந்த மூன்று பேரிலிருந்து வேறு எவருக்குமே பரவாமல் தடுத்திருப்பது மிகப்பெரிய சாதனைதான். கேரள அரசு உண்மையிலேயே மெச்சத்தக்கது. சிறந்த உள்கட்டமைப்பைக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் அரசு நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துமே இன்னும் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறி வருகிறார்கள். சிங்கப்பூரின் இன்னொரு சாதக அம்சம் இங்கு இருக்கும் வெயில்தான். வெப்பம்தான் இந்தக் கிருமித்தொற்று பரவுவதைத் தடுக்கிறது. இன்றைய நாளில் வுஹானின் வெப்பநிலை 10 டிகிரி செல்ஷியஸ். ஊட்டியை விட ஆறேழு டிகிரி குறைவு. இந்தக்காலநிலையில் வைரஸ்கள் எளிதில் சாவதில்லை, தொடுதல் மூலமோ, ஒரே அறைக்குள் பயணப்பட்டாக வேண்டிய சூழலோ எதுவானாலும் எளிதில் பரவிவிடும் வாய்ப்புள்ளது. இன்று சிங்கப்பூரில் 28 டிகிரி செல்ஷியஸ். இங்கு அதிகமாக பரவாததற்கு இதுவும் ஒரு காரணமாகச் சொல்லலாம்.

இருந்தாலுமே கூட பொதுமக்களும், அரசாங்கமும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறது. மக்கள் கூடுமிடங்களைத் தவிர்க்க வேண்டுமாய் அறிவுறுத்துகிறார்கள், தொட்டுப் பேசுவதை தவிர்க்கச் சொல்கிறார்கள். எல்லா வங்கி, அரசு,பள்ளிகள், கல்லுரிகள்,  தனியார் நிறுவனங்களிலும் வேலைக்குச் செல்லும் ஒவ்வொருவரையும் வாசலிலேயே வைத்து உடல் சூட்டைச் சோதிக்கிறார்கள். கொஞ்சம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் அவரை தனிமைப்படுத்தி, அவருடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எச்சரிக்கை செய்கிறார்கள். பொதுப்போக்குவரத்தில் எந்நேரமும் கிருமி நாசினி கொண்ட திரவங்களை வைத்து அழுந்தத் துடைத்தபடியே இருக்கிறார்கள். லிப்ட் பட்டன்கள், எஸ்கலேட்டர் கைப்பிடி, பேருந்தின் கம்பிகள், ரயில் பெட்டி நின்ற ஐந்து நிமிடத்தில் ஒவ்வொரு கம்பார்ட்மெண்டிலும் ஒரு குழு சென்று சுத்தமாக துடைத்து அனுப்புகிறார்கள். முன்னரே தீர்மானிக்கப்பட்ட கூட்டங்கள், தொழில் சந்திப்புகள், எதுவாக இருந்தாலும் தவிர்க்கச்சொல்லி வலியுறுத்துகிறார்கள்.

வைரசை விட போலிச்செய்திதான் மிகப்பெரிய அபாயம். அப்படி போலிச் செய்திகளைப் பரப்புபவர்களை மிகக்கடுமையான தண்டனைக்கு ஆளாகலாம் என எச்சரிக்கிறார்கள். ஓரிருவர் தண்டிக்கப்பட்டதாக தகவல்கள் வந்தன. வெளிநாட்டு ஊழியராக இருக்கும்பட்சத்தில் அவரின் வேலை உரிமத்தை ரத்து செய்து நாட்டுக்குள் நுழைய முடியாதபடி தடை செய்ய முடியும் என அறிவித்திருக்கிறார்கள். வைரஸ் தொடர்பான போலிச் செய்திகள் பரவுவதை முற்றிலுமாக தடுத்துவிட்டது அரசின் மிகப்பெரிய சாதனை.

சிங்கப்பூரில் இன்றைய நிலவரப்படி 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட போதிலும் உயிரழப்பு என்பது இல்லை என்பது  கவனிக்க வேண்டிய விஷயம். மிக உயர்ந்த சிகிச்சையை வழங்கி உயிரைக் காப்பாற்றி அனுப்புகிறார்கள். 70க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று முற்றிலும் வைரஸ் நீங்கி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது அரசு. ஒருவரியில் சொல்வதென்றால் இமாலய சாதனை. சிங்கப்பூர் போன்ற மக்கள் அடர்த்தி மிக்க தீவில் மிக எளிதாக பரவி பலிவாங்கக்கூடிய வைரஸ் காய்ச்சலை ஒரு உயிரழப்பு கூட இல்லாமல் தடுத்திருப்பது நிச்சயமாக சாதனைதான்.

இப்போது இந்தியாவுக்கு வருவோம். வட இந்தியாவில் 28 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இது இரண்டே நாட்களில் பத்து மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. நம் ஆட்சியாளர்கள் அப்படி. மக்களை பீதியடைய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறார்கள். எச்சரிக்கைச் செய்திகளை வெளியிடுவதற்குப் பதிலாக மாட்டு மூத்திரத்தைக் குடிக்கச் சொல்லும் கூட்டம் வடநாட்டில் உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களே மேடைதோறும் முழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.  டெல்லியில் இன்னும் கோடை தொடங்கவில்லை, குளிர்காலத்தின் இறுதிக்கட்டம், வுஹான் நகரத்தை விட ஐந்து டிகிரி அதிகம்தான். இருந்தாலுமே கூட ஒரு நாளில் 28 பேருக்கு பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. டெல்லி இந்தியாவில் தலை என்றால் மற்ற நகரங்களுக்கு மிக எளிதாக பரவுவதற்கு வாய்ப்புள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களான, கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூரு என எல்லாமே மக்கள் நெரிசல் மிக்க நகரங்கள்தான். இங்கெல்லாம் பரவினால் தடுக்க கடவுளாலும் முடியாது. அப்படி ஆகாது என வேண்டிக்கொள்ளலாம்.

ஆனால் மாட்டு மூத்திரம் குடிக்கச்சொல்லும் கூட்டமும், மருந்து கண்டுபிடித்துவிட்டதாக சொல்லும் கப்சா கும்பலும், நமக்கெல்லாம் வராது பாஸ் எனச் சொல்லும் ஆட்களும் இருப்பதுதான் பயத்தைக் கொடுக்கிறது.


No comments: