எல்லையற்ற அன்பு கொள்வோம்

Showing posts with label உலக சினிமா. Show all posts
Showing posts with label உலக சினிமா. Show all posts

Tuesday, May 12, 2009

மூன்று படங்கள்

சென்னையின் அதிகபட்ச வெயில் நாட்கள் இவை. வெளியில் எங்கும் செல்லாமல்
வீட்டுக்குள் அடைந்துகிடக்க வேண்டிய நிலை. மின் விசிறிக்கு கீழே உட்கார்ந்திருப்பது
கூட அடுப்படியில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு. அதிகபட்ச வெயில் அடிக்கும்
அமீரகத்தில் கூட வெப்பத்தை உணர்ந்ததில்லை. எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இந்த
வெயில் ரொம்ப பிடிக்கலாம். ஆனால் நமக்கு அப்படியில்லை. சென்னையில்
வெப்பமென்றால் ஊரில் தினசரி நான்கு மணி நேரம் மின்வெட்டு. அதிகாலை மற்றும்
நன்பகலில் இரண்டு மணி நேரங்கள். அதிகாலையில் மின்சாரம் இல்லாமல் உறக்கம்
கலைவதென்பது முன் ஜென்ம சாபம். சில நாட்களில் பழகிவிட்டது. அப்போது
பார்த்த மூன்று படங்கள். மூன்றுமே கவர்ந்திருந்தன.

Brokeback Mountain (ப்ரோக்பேக் மவுண்டைன்)



படத்தின் கரு இரு இளைஞர்கள் காதலிக்கிறார்கள். தெளிவாக சொல்லவேண்டுமென்றால்
ஓரினச்சேர்க்கையாளர்கள். படத்தின் கதைச்சுருக்கத்தை படித்தபிறகு பார்க்கவேண்டுமா
என்று யோசித்து பிறகு பார்த்தேன். காதல் என்பது பெண் மீது மட்டுமே வர வேண்டும்
என்பதல்ல அது ஆண் மீது கூட வரலாம். அன்பு ஒன்றே அங்கே பிரதானமாக இருக்க
வேண்டும். இந்தப்படத்தில் இருவர் கொள்ளும் அன்புதான் அவர்களை கடைசிவரை
இணைக்கிறது.

கதை நிகழும் வருடம் 1963 இரு இளைஞர்கள் ஆடுமேய்க்கும் வேலைக்காக வ்யோமிங்
மலைப்பகுதிக்கு வருகிறார்கள். கூட்டம் கூட்டமாக ஆடுகளை மேய்ச்சலுக்கு இட்டுச்
செல்லும் வேலை. அங்கேயே தங்குவது. சாப்பிடத்தேவையான பொருட்களை
அவ்வப்போது எழுதி வாங்கிக்கொள்ளலாம். எனிஸ் எப்போதாவது பேசும் வகை.
ஜாக் எப்பொழுதும் பேசிக்கொண்டே இருக்கும் வகை. தனிமை சூழ்ந்த இயற்கை
அவர்களை ஒன்றிணைக்கிறது. இருவருமே ஏழ்மைப் பிண்ணனியில் இருந்து வந்தவர்கள்.
அதிகபட்ச குளிர் நாள் ஒன்றில் இருவரும் ஒன்றுகலக்கிறார்கள். விடியலில் அவரவர்
முகமும் குற்ற உணர்ச்சியால் நிரம்பியிருக்கும். பின்வரும் நாட்களில் தங்கள்
காதலிப்பதை உணர்கிறார்கள்.

இருவரும் காதலர்களைப்போல் இருப்பதை பார்க்கும் முதலாளி அடுத்தபருவத்தில்
இருவரையும் வேலைக்கு வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். அவரவர் சொந்த
ஊருக்கு செல்கிறார்கள். காலப்போக்கில் இருவருக்கும் திருமணம் குழந்தை என்று
ஆகிறது. அதேசமயம் கூண்டுக்குள் அடைபட்ட வாழ்க்கை இருவருக்குமே கசக்கிறது.
அவர்கள் இருவரும் சுதந்திரமாக, ஆடையில்லாமல், மலையின் புல்வெளிகளில்
இரண்டு ஆண்டுகள் வாழ்ந்த ஞாபகம் வர இருவரும் தொடர்பு கொள்கிறார்கள்.
நான்கைந்து வருடம் கழித்து மீண்டும் சந்தித்துக்கொள்ளும் அவர்களிடம் முன்பைவிட
காதல் பெருகுகிறது. எனிஸ் மனைவி இதை கவனிக்கிறாள். அப்போதுதான் அவளுக்கு
தன் கணவன் பின்புறம் புணர்வதை அதிகம் விரும்புவது ஏன் என்று புரிகிறது.

இருவரும் சேர்ந்து சுற்றுவது தொடர்வதால் எனிஸ் ன் மனைவி விவாகரத்து
கோருகிறாள். ஆழ்மனதில் தான் ஒரு ஓரினச்சேர்க்கை விருப்பமுடையவன் என்பதில்
வருத்தப்படுபவனாக எனிஸ் உணர்ந்தாலும் அன்பின் காரணமாக அதை தொடர்கிறான்.
ஆனால் ஜாக் தான் ஓரினச்சேர்க்கையில் விருப்பமுடையவன் என்பதை நம்புகிறான்.
ஒருமுறை எனிஸ் உடன் கருத்துவேறுபாடு ஏற்படும்போது ஓரினச்சேர்க்கை விடுதிக்கு
சென்று வேறு ஒருவனுடன் உடலுறவு கொள்கிறான்.

வேறுபாடு களைந்து மீண்டும் ஒன்று சேர்கிறார்கள். சுற்றுகிறார்கள். மறுபடி பிரிகிறார்கள்
பின்னர் விபத்து ஒன்றில் ஜாக் இறக்கிறான். தாமதமாக அறியும் எனிஸ் மிகவும்
உடைந்துபோகிறான். ஜாக்கின் பெற்றோரை சந்திக்க செல்லும்போது தாம் பனிமலையில்
சண்டைபோட்டுக்கொண்ட போது ஜாக்கின் சட்டையில் ரத்தகறை எற்பட்ட அந்த
சட்டையை பத்திரமாக வைத்திருப்பதைக் காண்கிறான். அந்த சண்டைதான் அவர்களை
ஒன்றிணைத்தது. படம் இப்படி முடிகிறது. இன்றைய நாகரீக உலகில் ஓரிணச்சேர்க்கை
அங்கீகரிப்பட்டதாக இருந்தாலும் படம் நடக்கும் காலத்தின் அது தவறான செயலாக
சமூகம் பார்த்தது. இருவருக்கு அது குறித்த குற்றவுணர்ச்சி படம் நெடுக இருக்கும்.
சிறப்பான ஒளிப்பதி மற்றும் நடிப்பின் மூலம் இப்படத்தை சிறப்பாக தந்திருக்கிறார்
இயக்குடன் ஆங் லீ. தைவானை பிறப்பிடமாக கொண்டாலும் அமெரிக்க சூழ்நிலையை
இயல்பாக படம்பிடித்த இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மிகப்பெரும்
சர்ச்சைகளை கிளப்பிய இந்த திரைப்படம் மூன்று ஆஸ்கார் விருதுகளை பெற்றது
குறிப்பிடத்தக்கது.

பின்குறிப்பு: தனிமையான சூழ்நிலையில் ஒன்றிணையும் இவ்வகை கதையை கல்லூரிக்காலத்தில் நான் கேட்டிருக்கிறேன். தோட்டவேலை, ஒட்டகம் மேய்க்க என்று
இந்தியாவில் இருந்து 60களில் வேலைக்கு சவுதிக்கு சென்ற ஒருவர் சொன்ன கதையது.
நான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர்தான் அவர். தான் இவ்விதம் செய்தது
சரி, தவறு என்று வாதம் செய்யாமல் அன்றைய சூழ்நிலையில் உடலுறவு கொண்டாக
வேண்டிய சூழ்நிலையில் செய்ததாக சொன்னார் அவர். மூன்று வருடங்களுக்கு
ஒருமுறை மட்டுமே மற்ற மனித முகங்களை பார்க்க வாய்ப்பிருக்கும் வேலை
அவருக்கு மற்ற நாட்களில் நகரத்திலிருந்து பலநூறு மைல்கள் தள்ளியிருக்கும்
தோட்டங்களில் வேலை செய்தவர் அவர். வருடத்திற்கு ஒரு விடுமுறை நாள்தான்.
கடிதம் ஒன்றே போக்குவரத்து அது வந்து சேரவே பல மாதங்களாகுமாம். இத்தகைய
சூழ்நிலையில் உடனிருக்கு எவருடனாவது ஓரல் செக்ஸ், மற்றும் ஓரினச்சேர்க்கை
வைத்துக்கொள்வது சகஜமான ஒன்று என்று சொன்னார். ஆனால் இவை எல்லாம்
ரகசியமாக வைத்திருப்பார்கள். எனக்கு அவர் இதைச் சொன்னபோது அவருக்கு
வயது 65 இருக்கலாம். நாற்பது வருடகாலங்கள் பாலைவனத்தில் கழித்திருக்கிறார்.
நாற்பது வருடங்களில் ஐந்து முறை மட்டுமே இந்தியா வந்து சென்றிருந்தார்.


Diving Bell and the butterfly



யாராவது கண்களால் ஒரு நாவலை எழுதி முடித்ததாக சொன்னால் நம்ப முடியுமா உங்களால்? ஆனால் நடந்திருக்கிறது. இந்தப்படம் ஒரு உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக
கொண்ட படம். ஜீன் டொமினிக் பாப் ஒரு பேசன் பத்திரிக்கை எடிட்டர். விவாகரத்தானவர்
வார இறுதிகளில் குழந்தைகளை சந்திக்கும் பாசமிகு தந்தை. திடிரென்று பாரலைஸ் என்று
சொல்லக்கூடிய உடலுறுப்புகள் செயலிழந்து போகும் நோயில் விழுகிறார். மூன்று வாரங்கள் கோமா நிலையில் இருக்கும் அவர் ஒரு நாள் மீள்கிறார். அது அவர் ஒப்புக்கொண்ட
நாவல் ஒன்றை எழுதுவதற்காக மட்டுமே. இருப்பினும் அவருக்கு ஒரு கண்ணும்
இரு காதுகள் மட்டுமே வேலை செய்கின்றன. மற்றபடி அவரின் உடலுறுப்புகள் ஒன்றுகூட
வேலை செய்யாது.



அவருடன் பேச வேண்டுமென்றால் அவரின் இடது கண்ணிற்கு நேராக சென்று குனிந்து
பேச வேண்டும் அவரால் திரும்ப பதிலளிக்க முடியாது. ஆனால் எழுத்துக்களை வரிசையாக
சொன்னால் குறிப்பிட்ட எழுத்து வரும்போது ஒருமுறை இடது கண்ணை திறந்து மூடுவார்.
இப்படி வரிசையாக சொல்லப்பட்ட எழுத்துக்களை ஒன்று கூட்டினால் உங்களுக்கான பதில்
கிடைக்கும். ஒன்று மற்றும் இரண்டு கண் சிமிட்டல்கள் மட்டுமே உங்களால் அவரிடமிருந்து
பெறக்கூடிய பதில். ஒருமுறை கண் சிமிட்டினால் ஆம் என்று அர்த்தம். இருமுறை கண்
சிமிட்டினால் இல்லை என்று அர்த்தம். இந்த முறையினால் அவரின் தெரபி மருத்துவரின்
உதவியோடு தான் எழுத ஒப்புக்கொண்ட நாவலை எழுதி முடிக்கிறார். நாவல் வெளியாகி
பெரும் விற்பனையாகிறது. ஆனால் நாவல் வெளிவரும் பத்து நாட்களுக்கு முன்பே
மரணமடைகிறார். விந்தையான இந்தக்கதையை படிக்கும்/பார்க்கும் அனைவருக்குமே
உணர்ச்சிமயமாக இருக்கும். இது நிஜ சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான
திரைப்படம்.

ப்ரெஞ்ச் மொழியில் வெளியான இத்திரைப்படம் நான்கு ஆஸ்கர் விருதுகளுக்கு
பரிந்துரைப்பட்டிருந்தது. நிஜ சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திரைப்படம்
எடுக்கும் இப்படத்தின் இயக்குனர் ஜூலியன் ஷெனபில் இன் இதற்கு முந்தைய இரண்டு
படங்களும் சுயசரிதைத் தன்மை கொண்டது இப்படமும் அதே. இப்படத்தின் திரைக்கதையை
எழுதிய ரொனால்ட் ஹார்வர்டிரின் குறிப்பிடத்தக்க திரைப்படம் தி பியானிஸ்ட்.

இதே போன்ற ஸ்பானிய மொழிப்படமான சீ இன்சைட் The Sea Inside இதே போன்றதொரு
சுயசரிதைத் தன்மை கொண்டதுதான். தனது மரணத்திற்காக போராடும் ஒருவரின் கதை
அதிலும் கதையின் நாயகன் ஆரம்பம் முதல் இறுதி வரை படுக்கையிலே இருப்பார்.
இதிலும் அதே. படத்தின் இறுதியில் இருவருமே இறந்து போவார்கள். நிஜ வாழ்க்கையில்
எவருமே ஒருநாள் இறந்து போவதைப் போல.

மூன்றாவது படமாக The legend of 1900 படம் பற்றி பிறகு எழுதலாம். இதுவே நீண்டு
விட்டது.

ஓட்டுரிமை உள்ள அனைவரும் ஓட்டு போடுங்கள்.

Tuesday, October 07, 2008

The Bridges of Madison County


clint Eastwood மேல் எனக்கு மிகப்பெரும் மரியாதை இருக்கிறது. அது அவருடையை
தோற்றத்திற்கும் அபாரமான நடிப்பிற்கும் செய்யும் மரியாதை. சென்றவாரம்
அவரின் படம் ஒன்றை மாலில் கண்டபோது எந்தவித யோசனையும் இல்லாமல்
வாங்கிப் பார்த்தேன். Bridges and his madison county என்ற படம். காதல் எந்த
வயதில் வேண்டுமானாலும் வரலாம். குடும்பம் என்ற அமைப்பில் உள்ள
பெண்ணிற்கும் வரலாம், கிழவனுக்கும் வரலாம். வந்தால் எப்படிப்பட்ட
பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள்/வேண்டும் என்பதை உணர்வுப்பூர்வமாக
உணர்த்திய படம். படத்தில் நான் பெரிதும் ரசித்த, ஈஸ்ட்வுட்
பயன்படுத்திய ஒரு வசனம்.

ஒரு காதல் வெற்றியடையும்போது மறுகாதலுக்கான வழியை அது
அடைத்துவிடுகிறது. இது குடும்பம் என்ற அமைப்பிற்கும் பொருந்தும்.

தான் இறந்தபிறகு தனது சொத்துக்கள் மற்றும் கடிதங்களை தனது இருபிள்ளைகளுக்கு
எழுதி வைத்துவிட்டு இறந்துபோகிறாள் ப்ரென்சாசெ. மேலும் தனது அஸ்தியை
காதலனை சந்தித்த பாலத்தின் மேலிருந்து கீழே தூவவேண்டும் என்றும் அதற்கான
காரணத்தை கடிதத்தில் எழுதி இருக்கிறார். அந்தக்கடிதத்தை படிக்கிறாள் மகள்.
அதில் தான் கணவரில்லாத வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்ததாக
எழுதியிருக்கிறது. தன் தாய் வேறொருவனுடன் சோரம் போனதை படிக்க மறுத்து வெளியேறுகிறான் மகன். அவள் கடிதத்தை தொடர்கிறாள், நமக்கு கதை
காட்சிகளாக விரிகிறது.

அழகான குடும்பம், அன்பான கணவன், 16 மற்றும் 14 வயது நிரம்பிய ஆண்
மற்றும் பெண் பிள்ளைகள். அவளைத்தவிர்த்து மற்ற அனைவரும் கண்காட்சி
ஒன்றிற்காக நகரம் செல்கிறார்கள். எல்லாருக்கும் கையசைத்து விடைகொடுக்கிறாள்.
வீட்டின் முன் பரந்த பசும்புல்வெளி. தூரத்தில் ஒரு வாகனம் வருகிறது
அதுதான் ஈஸ்ட்வுட்.

ஈஸ்ட்வுட் ஒரு புகைப்படக்காரர். natioanal geographic ல் வேலை செய்கிறார்.
கதையில் வரும் கிராமத்தில் மரத்தாலான ஒரு பாலத்தை புகைப்படம் எடுக்க
வருகிறார். அந்தப்பாலம் முழுக்க மரத்தால் ஆனது. கிட்டத்தட்ட வேட்டையாடு
விளையாடு படத்தில் உயிரிலே எனது உயிரிலே பாடலில் வருவது போல அழகாக
இருக்கும். உலகம் முழுக்க சுற்றி புகைப்படம் எடுப்பது இவரின் வேலை அதுவே பொழுதுபோக்கு. புகைப்படம் எடுக்கப்போகும் இடத்தைப்பற்றி அப்பெண்மணியிடம்
வழி கேட்கிறார். வழிசொல்வதில் தடுமாற்றமிருப்பதால் தானே உடன் வந்து
காண்பிப்பதாக சொல்லி இருவரும் பாலத்தை நோக்கி செல்கிறார். போகும்போது
பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொள்கிறார்கள். தான் பிறந்தது இத்தாலியில் பிறந்ததாக சொல்கிறாள். உலகம் சுற்றும் புகைப்படக்காரனாகிய ராபர்ட்(ஈஸ்ட்வுட்) தான் அந்த
இடத்தை அறிவதாகவும் அது அழகாக இருந்தமையால் போகின்ற வழியை
தவிர்த்துவிட்டு ரயிலில் இருந்து அங்கே இறங்கி தங்கியிருந்ததாகவும் சொல்கிறார்,
அங்கே ஆரம்பிக்கிறது ஆச்சரியம். அதிலிருந்து படம் முழுக்க ஆச்சரியம்தான்.



புகைப்படம் எடுக்க சாத்தியமில்லாத நேரத்தினால் மறுநாள் எடுப்பதாக ராபர்ட் முடிவெடுக்கிறார். இரவு உணவிற்கு அழைக்கிறாள் அவள். சம்மதிக்கிறார் ராபர்ட். பேசுகிறார்கள். ஒருவரின் உலகம் மற்றொருவரின் உலகத்தைத் தாண்டி ஒரேமாதிரி பிரதிபலிக்கிறது. நிறைய பேசுகிறார்கள். படத்தில் முக்கியமாக சொல்லவேண்டிய
விஷயம் இருக்கிறது. காட்சிகளுக்கேற்ப வானொலியிலோ அல்லது மதுவிடுதியிலோ காட்சிக்கேற்ற பாடல் ஒலிக்கிறது. சுப்ரமணியபுரம் படத்தில் வருவது போல.

மதுவருந்தியபடி தனித்த வீட்டில் பேசுகிறார்கள். பேச்சின் முடிவில் மனஸ்தாபம் உண்டாகிறது. உண்மையில் அந்த வருத்தம் அவளின் கனவுகளை அவன்
பிரதிபலித்ததால் உண்டாவது. அதை ஏற்க மறுக்கிறாள். வெளியேறுகிறார் ராபர்ட்.
தன் தவறு உணர்கிறாள் அவள். மிகுந்த மன வருத்தத்துடன் அந்த பாலத்தில்
புகழ்பெற்ற நாவலின் பிரிவுறுத்தும் வரிகளை தாளில் எழுதி பதிக்கிறாள். மறுநாள்
புகைப்படம் எடுக்கவரும் ராபர்ட் கடிதத்தினை வாசிக்காமலே யார் எழுதியது என்று புரிந்துகொண்டு தொலைபேசுகிறார். சந்திக்க நிகழ்ச்சிகள் முடிவாகின்றன.
சந்திப்பிற்கு பிரத்தியேகமாக தன்னை தயார்படுத்திக்கொள்கிறாள் அவள்.

சந்திப்பின் முடிவில் உடல் கலக்கிறார்கள். இரண்டு நாட்கள் உலகம் மறந்த
வயது முதிர்ந்த காதலர்களின் பயணம். பிரிவுணர்த்தும் காலம் வருகிறது.
வாய்க்கப்பட்ட உலகம், தனக்கு உள்ள பொறுப்புகளைக் களைந்து தன் காலம்
கடந்த காதல் நிமித்தம் ராபர்ட்டோடு வெளியேற மறுத்து தத்தமது காதலை
நினைவில் வைத்து இருவரும் பிரிகிறார்கள்.

மறுநாள் முதல் இருவரும் தங்களின் வழக்கமான நாளை சந்திக்கிறார்கள்.
மிகுந்த மனவலியுடனே தன் அடுத்த நாளை எதிர்கொள்கிறாள் அவள்.

காலங்கள் கரைகின்றன. கணவன் மரணப்படுக்கையில் சொல்கிறார். நான் என்
வாழ்நாள் முழுவதும் உன்னைப் பெரிதும் நேசித்தேன். உனக்கு வேறு கனவுகள்
இருந்தது என்று எனக்குத்தெரியும் ஆனாலும் உன்னைப் அதனிலும் பெரிது நேசித்தேன்
என்று சொல்லி மறைகிறார்.

ராபர்ட் மற்றும் அவளின் உறவுகள், சந்திப்புகள் சாட்சியாக அந்தப்பாலம் மட்டுமே
இருக்கிறது மற்ற எந்த தொடர்புகளும் இல்லை. ராபர்ட் இறந்தபிறகு அவளுக்கு
ஒரு பார்சல் வருகிறது. ராபர்ட்டின் கடைசி ஆசையாக அவரின் உடைமைகள் என்று
கருதப்படுகிற கேமிரா மற்றும் கடிதங்கள் அவள் வசம் சேர்ப்பிக்கவும் அவரின் அஸ்தி
அந்த பாலத்தின்கீழ் ஓடும் ஓடையில் தூவ வேண்டும் என்பதே அவரின் இறுதி ஆசை.

கடிதத்தைப் படித்ததும் நெகிழ்கிறாள் அவள். இருவருமே தாங்கள் இறக்கும் வரை
தத்தமது காதலை யாரிடமும் சொல்லாமலே இறக்கிறார்கள் கடைசியாக தன் உயிலின்
மூலம் தனது அஸ்தியை அதே பாலத்தின் அடியில் தூவ வேண்டுமாய் பிள்ளைகளுக்கு விண்ணப்பிக்கும் அந்த கடித்தத்தின் மூலமே பிள்ளைகளுக்கு தெரிகிறது.

இந்த இடத்தில் அவளின் மகள் உடனே தன் கணவருக்கு தொலைபேசி தன்
இதே வீட்டில் வசிக்கப்போவதாகவும் உங்களை மிகவும் நேசிக்கிறேன் என்றும்
கண்ணீர்ப்பெருக்குடன் சொல்கிறாள். அவள் மகன் தன் மனைவியை உடனே
சென்று பார்க்கிறான். புதிதாக பார்ப்பதுபோல.

ராபர்ட் நான்கு நாட்கள் என்ற பெயரில் எழுதிய புத்தகம் ஒன்றை எழுதி
அத்துடன் அனுப்புகிறார். அவளுடன் கழித்த அந்த அற்புத நான்கு நாட்களைப்
பற்றிய குறிப்புகள் அதில் உள்ளன. அந்த நூலின் முதல் பக்கத்தில் இருப்பது அவள்
எழுதி பாலத்தில் ஒட்டிய அந்த நான்கு வரி வாசகம். உண்மையில் இந்தக்
காட்சியில் சிலிர்த்துவிட்டது.

மேலோட்டமாய் பார்த்தால் ஒரு திருமணமான பெண் இன்னொரு ஆணிடம்
படுத்துக் கொள்வதாய் தெரிந்தாலும் உடல் சுகம் தவிர்த்த ஏதோ ஒன்று உணர்ந்ததினால் மட்டுமே தன்னை பறிகொடுக்கிறாள். ஈர்ப்புகள் எந்த வயதிலும் வரலாம் வயோதிகம்,
குடும்ப அமைப்புகள் அதற்கு ஒன்றும் தடையல்ல.

நீங்கள் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கும் இதே சமயத்தில்தான் உங்களது
கணவனோ/மனைவியோ வேறொரு உலகத்தை கற்பிதம் கொண்டு உங்களொடு வாழ்ந்துகொண்டிருக்கலாம். ஆக காதல் அல்லது ஒரு ஆண்/பெண் திருமணம்,
காதல் என்பவற்றைத் தாண்டி உலகில் வேறொரு எதிர்பாலினத்துடன் இணைய
ஏக சந்தர்ப்பங்கள் வாய்த்துக்கொண்டே இருக்கின்றன. இதை அனைவரும்
உணரவேண்டும்.

படம் பார்த்து முடித்தவுடன் தோன்றியது இதுதான். இந்தப்படம் பார்க்கையில்
ஒரு நாவலை படிப்பது போன்ற உணர்வைத்தந்தது. நம் சினிமாவைப் பொறுத்தவரை நாவலை படமாக்குவது என்பது நாவலுக்கு செய்யும் துரோகத்தைப்போன்றது.
(கிட்டத்தில் ரசித்தது ஒன்பது ரூபாய் நோட்டு மட்டுமே). ஆனால் இது அப்படியல்ல. இணையத்தில் தேடியபோது இந்தக்கதை உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில்
எழுதப்பட்ட பெரும் வெற்றியடைந்த நாவல். திரைப்படத்தின் பெயரிலேயே வெளி
வந்த நாவலை ஈஸ்ட்வுட் தயாரித்து இயக்கியிருக்கிறார்.

இதே சாயலில் மலையாளத்தில் ஒரு படம் உள்ளது ஒரே கடல். முற்றிலும் இதேமாதிரி இல்லாவிட்டாலும் கருவின் அடிநாதம் பிறன்மனை கவர்தல், கவர்தல்னு
சொல்றதைவிட காதல் என்று சொல்லலாம் காதல் அன்பென்றால்.

Friday, September 12, 2008

Jaane tu ya jaane na, Bashu


கடந்த ஒரு மாதமாக அறையில் மூன்று பாடல்கள் பல்லாயிரக்கணக்கான முறை
ஒலித்துக்கொண்டே இருந்தது. கபி கபி அதிதி சிந்தகி, கண்கள் இரண்டால், மற்றும்
ஐ மிஸ் யு மிஸ் யுடா எனைவிட்டுப் போகாதே. என்ற மூன்று பாடல்கள். இந்த
மூன்று பாடல்களும் பக்கத்தில் இருக்கும் ஜோர்டானியன் பையனுக்கும் கூட பரிச்சயம்
ஆகி அவனும் பாட ஆரம்பித்துவிட்டான்.

Jaane tu ya Jaane na



இந்தப்பாடலுக்காகவே படம் பார்க்கவேண்டும் என்று தோன்றியது. நேற்று கம்பெனி
இஃப்தார் நோன்பு விருந்து கொடுத்தார்கள். கேர்ள் ப்ரெண்ட் இல்லாத குறை நேற்றுதான்
தெரிந்தது. எல்லாரும் நவநாகரீக உடையில் ஜோடியாக வந்திருந்தனர். பகட்டான
இடம் அந்நிய உணர்வைத்தந்தது. சாப்பாட்டை நன்றாக வெட்டு வெட்டிவிட்டு கிளம்பி
திரையரங்கம் சென்றேன். போஸ்டரில் வர்தே ஒரு பாரியா என்று கோபிகா புடவையை உயர்த்தி பிடித்தபடி ஜெயராமை சபித்துக்கொண்டிருந்தார் மறுபக்கம் தெலுங்குப்பட
ரேஞ்சுக்கு மம்முட்டி பிட்டு கலர் துணிகளில் சட்டை போட்டபடி சிரித்துக்கொண்டிருந்தார்.
ஜானெ து யா ஜானெ நா, மும்பை மேரி ஜான் என இரண்டு இந்திப்படம். இங்கு வந்து மூன்று வருடங்களாகியும் இந்தி குன்றி மணி அளவுக்கு கூட பேசவராது. குன்ஸாக புரிந்துகொள்வேன். முன்பே ஒருமுறை தாரே சமீன் பர் இதே அரங்கில் பார்த்திருந்தேன்.
ஜானே துவில் வேறு ஜெனிலியா என்ற அ.ராட்சசியும் இருப்பதால் நிபந்தனையே
இல்லாமல் அதற்கே சென்றேன்.

படத்தின் அனைத்து கதாபாத்திரங்களுமே அழகினால் செய்யப்பட்டிருக்கிறது.
அதிதி என்ற அழகுப் பிசாசு
ஜெய் என்கிற குழந்தைமுகமும் பெண்மையும் கலந்த அழகன்
ஜெய் அம்மாவாக வரும் சாவித்திரி
ஜெய் அப்பாவாக வரும் நஸ்ருதின் ஷா
ஜெய்யின் காதலியாக வரும் மேக்னா
ஜெய்யின் நண்பி தெற்றுப்பல் தெரிய அழகாக சிரிப்பவள்
அதிதியின் ஓவியத்தம்பி
கவ் பாய் சகோதரர்கள்
"ஹேப்பி பர்த்டே டு மி" என்று சொல்லும் பரேஷ் ராவல்
கருப்பு முகமூடியிட்டபடி குதிரையில் செல்லும் கனவு

ஹனிமூன் சென்று திரும்பும் ஹெய் அதிதியை வரவேற்க விமான நிலையத்தில்
கூடுகிறார்கள். அதிலே புதிதாக வந்த பெண்ணிற்கு அவர்களின் காதலை கதையாக
சொல்வதாக படம் ஆரம்பமாகிறது. சுவாரசியமில்லாமல் கேட்க ஆரம்பிக்கும் பெண்
ஒவ்வொரு அத்தியாயமாக கதை செல்லும் ஓட்டத்தில் மிகுந்த சுவாரசியாமக் கேட்க
ஆரம்பிக்கிறாள். அவளைவிட படம் பார்ப்பவர்களுக்கு மிகுந்த ஆர்வம்.

ஆறு இணைபிரியா நண்பர்கள் அவர்களில் மியாவ் என்கிற அதிதி என்கிற ஜெனிலியாவும்
ராட்ஸ் என்கிற ஜெய் என்கிற இம்ரானும் காதலிக்கிறார்கள் என்ற கதைதான். அதையே
அவ்வளவு சுவாரசியமாக எடுத்திருக்கிறார்கள். ஜெயும், அதிதியும் பழகும் விதத்தைக்
கண்டு அதிதியின் பெற்றோர் திருமணம் நடத்தி வைக்கவும் அது சம்பந்தமாக பேசவும்
ஜெய்யை அழைக்கிறார்கள். ஆனால் இருவருமே காதலிக்கவில்லை என்றும் இருவரும்
இணைந்து வாழ்வதை கனவிலும் கூட நினைத்துப்பார்க்க முடியவில்லை என்றும்
சொல்கிறார்கள். ஆனால் இருவருக்கும் தெரியாமல் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள்.
இருவரும் கனவிலும் கூட வேறொருவருடன் வாழமுடியாது என்பதே உண்மை.
அதை பார்வையாளர்களுக்கு புரிய வைப்பதுதான் கதை.


நண்பர்களின் ஆலோசனைப்படி இருவருமே ஒருவருக்கு மற்றொருவர் ஜோடி தேர்வு செய்வதாக ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். ஜெய்யின் காதலியாக மேக்னாவை
அதிதி தேர்வு செய்வதும் அந்த கவ்பாய் சகோதரர்களிடம் இருந்து மேக்னாவை
காப்பாற்றும் காட்சிகள் சுவாரசியமான அழகு. ஜெய்யின் மீது காதல் கொள்கிறாள்
மேக்னா. இடையே ஜெனிலியாவுக்கு பெற்றோர் ஒரு மாப்பிள்ளை பார்க்கிறார்கள்.
இருவரும் சந்திக்க வாய்ப்பில்லாத சந்தர்ப்பங்களில் தங்களின் காதலை உணர்கின்றனர்.
அதைச் சொல்ல இருவருக்குமே தயக்கம்.

ராஜஸ்தான் ரதோர் வம்சத்துக்கே உரிய முரட்டுத்தனத்துடனும் தனது கணவரைப்போலவும்
தன் மகன் ஆகிவிடக்கூடாது என்று ஜெய்யை பொத்தி வளர்க்கும் சாவித்திரி.
ஒவ்வொரு ரதோர் வம்சத்து ஆண்மகனும் மூன்று தகுதிகளை வளர்த்துக்கொண்டால்
மட்டுமே அவன் ஆண். அவையாவன குதிரையேற்றம், அடிதடி, சிறைசெல்வது
இவை எல்லாவற்றையும் நம் மகனும் செய்வான் என புகைப்படத்தில் இருந்தபடியே
சவால் விடும் நஸ்ருதின். இந்தக்காட்சிகள் அருமையான கற்பனை.

நஸ்ருதின் சவால்படியே ஜெய் அதிதிக்கு பார்த்த மாப்பிள்ளையை அடிக்கிறார்.
சிறை செல்கிறார். இறுதியில் குதிரையில் ஏறி விமானநிலையம் சென்று அதிதியை
கைபிடிக்கிறார். விமானநிலைய காட்சிகளும் அருமை.

படத்தின் எல்லா காட்சிகளும் ஒன்றன்பின் ஒன்றாக சங்கிலிபோல வந்து இறுதியில்
வியப்பில் ஆழ்த்துகிறார்கள். அமீர்கான் மீதான பிரமிப்பு இப்படத்தின் மூலம் இன்னும்
அதிகமாகிறது லகான், தாரே சமீன் பர், ஜானே து ய ஜானே நா என தொடர்ச்சியாக
அவரின் தயாரிப்பில் வெற்றிப்படங்கள்.

பாஷு (bashu)


ஈரான் ஈராக் யுத்தத்தில் தாய், தந்தை, தமக்கை என அனைவரையும் கண் முன்னே இழக்கிறான் பத்து வயது சிறுவன் ஒருவன். உயிர்பிழைக்கவும் குண்டுச் சத்தத்தில்
இருந்து தப்பிக்கவும் ஒரு ட்ரக்கில் ஏறி பதுங்குகிறான், அப்படியே தூங்கியும்
போகிறான். ஈரானின் தெற்குப்பகுதியில் கிளம்புகிற ட்ரக் வடக்குப்பகுதிக்கு நிறுத்தமே
இல்லாமல் பயணமாகிறது. கண்விழிக்கிற சிறுவனுக்கு தான் பிறந்த இடமான
வறண்ட பாலைவனம் போல அல்லாமல் நந்தவனம் போல இருப்பதைக் கண்டு
அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். ட்ரக்கிலிருந்து இறங்குகிறான். பக்கத்தில் பாலம் கட்டும்
பணி நடைபெறுவதால் குண்டுவெடிக்கிறது தான் இன்னமும் யுத்தம் நடக்கும் இடம்
தாண்டி வரவில்லை என பயந்து காடுவழி ஓடுகிறான்.

பசும்நெல் வயல்கள் நடுவே ஒருகிராமம். எல்லாருமே வெள்ளையான மனிதர்கள்
இப்பகுதிமக்கள் எல்லாருமே வெள்ளை நிறத்தவர். இவனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
இரண்டு குழந்தைகளுடன் வயலில் வேலைசெய்துகொண்டிருக்கிறாள் ஒருத்தி. அவளின்
குழந்தைகள் விளையாடுகின்றன. அப்போது கருப்பாக இருக்கும் இவனைப்பார்த்து
பயந்து கத்தும்போது அத்தாய் வருகிறாள். அனைவரையும் கண்டு மிரள்கிறான் பாஷு
எனும் அச்சிறுவன். அவனது துரதிர்ஷடம் நிறத்திலிருந்து மொழிவரை வேறு வேறாக
இருக்கிறது. ஒன்றும் புரியவில்லை. ஆனால் அத்தாய்க்கு அவன் மீது பரிவு ஏற்படுகிறது.
உணவு பகிர்கிறாள், அவனைப் பிடித்து பயம்போக்கி உறங்க வைக்கிறாள்.

ஆரம்பத்திலிருந்து இந்தக்காட்சிகளான இருபது நிமிடங்களும் வசனமே கிடையாது.
பாலுமகேந்திரா படங்களைப்போல கேமரா மட்டும் பேசிய காட்சிகள். அபாரமான
உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சியமைப்பு.

மறுநாள் கிராமத்தில் உள்ள அனைவரும் வந்து அவனை வீட்டை விட்டு விரட்டுமாறு
ஆலோசனை சொல்கிறார்கள்.அனவரையும் புறக்கணித்து அவனை வீட்டில் வளர்க்கிறாள்
அவர்கள் பெற்றோர் வந்து அழைத்துச்செல்லும் வரை பாஷு பாதுகாப்பாக இருக்க
வேண்டும் என்பது அவள் விருப்பம். புதுஇடம் புதுமனிதர்கள் தந்த அதிர்ச்சியும்
மொழிபுரியாமலும் ஏகப்பட்ட எதிர்ப்புகளுடனும் அங்கு தங்குகிறான் பாஷு.

ரொட்டி சுடும் இடத்தில் நெருப்பைக் கண்ட பாஷு தன் தாய் தீப்பிடித்து எரிந்த காட்சி
கண்முன்னே வர தான் வந்த கதையை மொழி தெரியாத அத்தாயிடம் அவனது
மொழியிலேயே கண்ணீருடன் சொல்கிறான். முழுதும் அபிநயம் கலந்த மொழி
கண் மூடாமால் கண்ணில் நீர் வழிய கேட்கிறாள் அத்தாய். அவன் மீது மேலும்
பரிவுகொள்கிறாள்.

அதற்கடுத்த நாளே கடும் காய்ச்சல் வருகிறது பாஷுவுக்கு கிராமத்தில் யாருமே உதவிக்கு
வரத்தயாரில்லை. மறுநாள் பெரியவர் ஒருவர் உதவியால் மீள்கிறான். இடையில்
சிறு சிறு தொந்தரவுகள். பொருளீட்ட சென்ற கணவனுக்கு பாஷுவினை பற்றி
எழுதுகிறாள். சில நாட்களிலேயே அனைவரையும் கவர்ந்துவிடுகிறான் பாஷு.

கணவனிடமிருந்து கடிதம். உற்றார் உறவினர் என அனைவரையும் விசாரித்து
எழுதப்பட்ட அக்கடிதத்தில் பாஷுவினைப் பற்றி எந்த குறிப்புமில்லை. தன் குடும்பத்தில்
ஒருவனாகவே மாறிவிட்ட பாஷுவைக் குறித்து எழுதவில்லை. இருந்தாலும் எழுதியது
போல அவள் படிக்கிறாள். தன்னைக்குறித்தும் முகமறியா ஒருவர் அன்பொழுக
விசாரித்திருப்பதாக நினைத்து பூரிப்படைகிறான் சிறுவன். மிகுந்த நெகிழ்ச்சியான
கவிதை போன்ற காட்சி.

அவள் ஒரு வித்தியாசமானவள் ஒலிகள்தான் அவளது சைகைகள். பறவைப்போல
கழுகைப் போல, வாத்தைப்போல, குதிரையைப் போல ஒலிகள் எழுப்புவாள்.
வித்தியாசமான ஒலிகள் கேட்டால் உடனே அதுபோன்ற ஒன்றை தன் தொண்டையிலுருந்து
கொண்டுவருவாள். இது தானியங்கள் காக்கவும் வயல்வெளிகளில் பறவைகளை
விரட்டவும் காட்டுநரிகளிடம் இருந்து கோழிகளை காக்கவும் அவள் கொள்ளும் உபாயம்.
இதுவும் கவிதையைப் போல அங்கங்கே தூவப்பட்டிருக்கிறது. இந்த ஒலிகளால்
பாஷுவும் கவரப்படுகிறான். அவனும் ஒலிகளை தன்குரல் மூலம் பிரதியெடுக்கிறான்.

இரண்டாவது கடிதம் கணவனிடம் இருந்து வருகிறது. பாஷுவினை விருந்தினனாக
வைத்திருப்பது எனக்கு சம்மதமில்லை என. வழக்கமாக கடிதம் வாசிக்கும் ஊர்
பெரியவர் இதை வாசிக்கையில் பாஷு கேட்கிறான். மனமுடைந்து அங்கிருந்து
வெளியேறி வழிதெரிந்த போக்கில் செல்கிறான். பதைத்து தேடுகிறாள். மிகுந்த
தேடலுக்குப்பின் கிடைக்கிறான் நெகிழ்வான காட்சி அது.

இறுதியில் அவளின் கணவன் ஒரூ கையை இழந்து ஊர் திரும்புகிறான். பாஷுவினால்
கவரப்படுகிறான். நிபந்தனையற்ற அன்பினால் தன் மூன்றாவது மகனைப்போல்
வாழ்கிறார்கள். ஈரான் ஈராக் யுத்தத்தின்போது எடுக்கப்பட்ட முக்கியமான திரைப்படம்.
அன்பானது மொழி, நிலங்களைக் கடந்தது என்பதை வலியுறுத்தும் கதை.

பஹ்ரம் பெய்சய் ஈரானிய சினிமாவில் புதிய அலைகளை உருவாக்கிய முக்கியமான
படைப்பாளி.

Thursday, August 21, 2008

உறைந்த ரத்தங்கள் - சுப்ரமணியபுரம்

கொலை நடந்த பிறகு அந்த இடத்தைப் பார்ப்பதும் கொலையை நேரில்
பார்ப்பதற்குமே கூட அசாத்திய துணிச்சல் வேண்டும். நான் முதல் முதலாக
கொடூரமான கொலையைப் பார்த்தபோது எனக்கு வயது நினைவில்லை. அப்பொழுது ஏழாவது படித்துக்கொண்டிருந்தேன். என் வீட்டிலிருந்து சரியாக ஏழு வளைவுகளை கடந்துசென்றால் வரும் ஏழாவது முனை ஏரிமுனை. வளைவின் ஓரத்திலேயே பெரிய
கிணறு ஒன்று உண்டு. மிகுந்த போதையில் பைக் ஓட்டிச்சென்று நிதானம் தவறி வந்த வேகத்தில் தரை தேய்த்தபடி கிணற்றோரத்தில் வண்டியை நிறுத்தி உயிர்பிழைத்தவர்களும் உண்டு, தவறி விழுந்தவர்களும் உண்டு. எனவே அந்த முனை பிரசித்திபெற்றது மட்டுமல்லாது போதையில் வருபவர்களுக்கு மிகுந்த சவாலாக இருந்தது அம்முனை. அம்முனையை ஒட்டிய வீடுதான் கோபாலுக்கு கோபால் மிகச்சிறந்த குடிகாரன்.
குடித்தபிறகு யாரையாவது கொலைவெறியில் அடிப்பது அவனின் ஒருவகை
மனோவியாதி. பெரும்பாலும் வாயில்லாத ஜீவன்களை அடித்து சித்ரவதை செய்வான். அவன் மனைவியையும் ஒரு வாயில்லாத ஜீவன் என்று நினைத்து ஒருநாள்
மண்வெட்டியால் தலையை வெட்டிவிட்டான். தூக்கத்திலிருந்தவாறே கழுத்து
வெட்டப்பட்ட நிலையில் இறந்துபோனாள். வெட்டிய கணம் முதல் அவள்
சாவதற்கு மிகுந்த சிரமப்பட்டிருக்க வேண்டும். மண்வெட்டியானது கழுத்தை வெட்ட
சரியான ஆயுதமில்லை. கழுத்தின் பாதிவரை மட்டுமே அதன் கூர்மை செல்லுபடியானது போல கிணற்றை ஒட்டிய அவளின் தலை தொங்கிக் கொண்டிருந்தது. தலையின்
கணம் தலை எந்நேரமும் உடலிளிருந்து பிய்ந்து கிணற்றில் விழலாம் என்ற நிலையில்
அது தொங்கிக் கொண்டிருந்தது. ஆஸ்பத்திரிகளில் இரத்தம் ஏற்ற அல்லது அவசர
சிகிச்சைப் பிரிவு நோயாளிகளுக்கு மூக்கினுள் செல்லும் சிறிய குழாய் அமைப்பில் அக்கழுத்திலிருந்து நரம்புகள் அறுபட்டிருந்தன. அந்நரம்புகள் முனையில் ரத்தம் தொய்ந்திருந்தது.

மிகவும் கோரமான அந்தக்காட்சிகள் பார்க்கவே பயமாகவும் அறுவெறுப்பையும்
தருவதாக இருந்தாலும் அதை பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றியது.
அபூர்வமான படத்தின் "இன்றே இப்படம் கடைசி" காட்சியை பார்த்துவிடவேண்டும்
என்ற ஆவல் தோன்றுமே அப்படி. விட்டால் பிறகு இதுபோன்ற காட்சியை பார்க்க
முடியாது. அன்று நீல நிற சட்டை காக்கி ட்ரவுசரும் அணிந்திருந்தேன். இதெல்லாம்
பார்க்க கூடாது என்று அம்மா அடித்து இழுத்துக்கொண்டு போனாள். பிறகு அந்த நீலநிற
சட்டை போடும்போதெல்லாம் குரூரமான அல்லது அவஸ்தையான புன்னகையுடன்
ஒரு சிரிப்பு வரும். அறியாத வயது அது. ஆனால் அதற்கடுத்த வருடமே இன்னொரு
கொடூரமான கொலையை நேரில் பார்க்க நேர்ந்தது. அப்போது அந்த உடலில் தலையே
இல்லை. மேலும் முன்பு பார்த்ததை விட இந்த அறுந்த முண்டத்தில் நிறைய குழாய்கள்
பிய்ந்து தொங்கிக்கொண்டிருந்தன.

வெளிநாட்டுக்கு சென்று வந்திருந்த கணவன். ஆசையாக அணைத்தவனை மிளகாய்
கரைத்த தண்ணியை முகத்தில் ஊற்றி கொலைசெய்யப்பார்த்திருக்கிறாள். இடைப்பட்ட
நாளில் வேறொருவனுடன் உடலால் பழகிவிட்டதால் கணவனின் திடீர் வருகை
அவளுக்கு பிடிக்கவில்லை. பெண்களுக்கு ஆண்களைப் போல பலமில்லை. அவள்
வெட்டிய வேகம் உயிரைப் பறிக்கும் அளவுக்கு துல்லியமாக விழவில்லை. மாறாக
அதே அரிவாள்மனையாள் அவளின் கழுத்து அறுபட நேர்ந்தது. முன்பு
பார்த்தகொலைபோல நிதானமில்லாம வெட்டியது போல் அல்ல இந்தக்கொலை. நின்று நிதானமாக நேர்த்தியுடன் வெட்டியதுபோல இருந்தது. வாசல் படிக்கட்டில் சரிந்திருந்த
அந்த உடல் தலையே இல்லாமல் வினோதமாக இருந்தது.

பக்கத்தில் இருந்த நண்பர்கள் வாந்தியெடுத்தபடி விலகிப்போனார்கள். சிலநொடிகள்
ஆச்சரியமாக பார்த்துக்கொண்டே என் சட்டையின் நிறத்தைப் பார்த்தேன். நல்லவேளை
வெள்ளைச்சீருடை. இந்தக்கொலை அதிகாலையில் நிகழ்ந்திருக்கவேண்டும். நான்
பள்ளிக்கு செல்லும் சமயம் அந்த நிகழ்வின் மிச்சத்தைப் பார்த்தேன். கழுத்து அறுபட்ட நேரத்தில் எல்லாரும் உறங்கிகொண்டிருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
அவளின் கணவன் அவளின் தலையை உரச்சாக்கு ஒன்றில் முடிச்சு போட்டு குறிஞ்சி
ஓட்டலில் பரோட்டா தட்டும் டேபிளின் மேல் வைத்துக் கதவை தட்டியிருக்கிறான்.
அவன் வெளிநாடு செல்லும்போது அங்குதான் காவல்நிலையம் இருந்தது. பிறகு அங்கிருந்தவர்கள் வழிசொல்ல ஆத்தோரத்தில் உள்ள புதிய காவல்நிலையத்திற்கு
சென்றதாக ஓட்டல் வைத்திருப்பவரின் மகன் பள்ளியில் பரபரப்பான தகவலின் சாட்சியை
விரிந்த கண்களுடன் பரப்பிக்கொண்டிருந்தான்.

இந்த இரண்டு கொலைகளுக்குப்பிறகு நான் கல்லூரி செல்லும் வரை வேறு எந்த
கொடூரமான கொலையையும் கண்டிருக்கவில்லை.

அப்போது பெரம்பலூரில் படித்துக்கொண்டிருந்த சமயம். எங்கள் அறையின் பக்கத்தில்
குறவர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் இருந்தார். அவர்கள் இணத்திலேயே அதிகம் படித்தவர்.
கல்லூரிக்கு மூன்று மாதங்கள் சென்று பின் நின்றுவிட்டதாக சொன்னார். உறக்கம் வராத
சமயங்களில் அவரிடம் சென்று பேசுவேன். நான் குடியிருந்த வீட்டிற்கு எதிரிலே ஒரு
குடிசை போன்ற அமைப்பில் அவர் குடியிருந்தார். எப்பொழுதும் வெள்ளைச் சட்டை
அணிபவர் உள்ளுக்குள் சிவப்பு நிற பனியனின் நிறம் தெரியுமாறு அந்தச்சட்டை இருக்கும்.
அற்புதமான உடலமைப்பு அவருக்கு. தினமும் உடற்பயிற்சி செய்வார். அவருடன் பழக்கமானது விநோதமான சம்பவம். அவரின் வீட்டில் மின்சாரம் கிடையாது
தெருவிளக்கின் அடியில்தான் உட்கார்ந்து எதாவது எழுதிக்கொண்டிருப்பார். எப்போதாவது அந்தப்பக்கம் கடந்து செல்லும் நான் ஓர்நாள் அவரின் அருகில் சென்று என்ன எழுதுகிறார் என்று பார்த்தேன்.

ஓரங்கள் கிழிந்த நாற்பதுபக்க இரட்டை வரி நோட்டில் கவிதை எழுதிக்கொண்டிருந்தார்.
பக்கத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். சிரித்தபடியே நோட்டை என்னிடம்
கொடுத்தார். படித்துப்பார்த்தேன். ஒன்றுமே புரியவில்லை. எப்போதோ காதலித்தபோது கவிதை எழுதியது பிறகு நான் கவிதை என்று வாசிப்பது வாரமலரின் கடைசிப்பக்க
காதல் கவிதைதான். ஆனால் அவரின் கவிதை அதுபோல இல்லாததால் எனக்குப்
புரியவேயில்லை. சூப்பரா இருக்குது என்று நோட்டை எடுத்து அவரிடமே கொடுத்தேன். தெருவிளக்கு கம்பத்தின் அடியில் ஒரு கல்லைப் போட்டு அமரிந்திருந்த அவரின்
பக்கத்தில் ஒரு நீண்ட கம்பு இருந்தது.

வரி வரியாக கருப்புக்கோடுகள் போட்ட வழவழப்பான கம்பு அது. நீண்ட உபயோகத்திற்கு
பிறகே வரும் வழுவழுப்பு அது. அதை எடுத்து தேவர்மகனில் கமல் கம்பின் அளவு
பார்ப்பது போல நெற்றிக்கு நேராக வைத்து பார்த்தேன். "கம்பு சுத்த தெரியுங்களா சார்"
என்று கேட்டார். என்னை முதல் முதலில் சார் என்று கூப்பிட்டவர் அவர்தான்.
தெரியாதுங்க சார் என்றேன். ஆச்சரியமாக பார்த்தார். பிறகு சட்டையைக் கழற்றி என்னிடமிருந்த கம்பை வாங்கி சுழற்ற ஆரம்பித்தார். தேவர்மகன் கமலை விட நன்றாக சுழன்று ஆடினார்.

பொதுவாக இரவுநேரத்தில் குழல்விளக்கின் வெளிச்சத்தில் குச்சியை வேகமாக
சுழற்றினால் நீலமும் மஞ்சளும் சிவப்பும் கலந்த கோடுகள் நொடிப்பொழுது வேகத்தில் குச்சியின் சுழற்சிக்கு ஏற்ற வேகத்தில் வரும். சிறிய வயதில் முயற்சித்துப் பார்த்திருக்கிறீர்களா?

ஆம் என்றால் அதை நினைவுகொள்ளுங்கள். அவர் சுழன்ற வேகத்தில் நீலமும்,
மஞ்சளும் சிவப்பும் நொடிப்பொழுதில் மின்னி மறைந்துகொண்டிருந்தன. யாருமில்லாத தெருவின் விளக்கு வெளிச்சத்தில் அந்த சிலம்பாட்டம் என் ஒருவனுக்காக நிகழ்ந்துகொண்டிருந்தது. அவரின் மேல் மிகுந்த பிரமிப்பு ஏற்படுத்திய இரவு அது.

எனக்கும் கம்பு சுற்ற கற்றுத்தரும்படி கெஞ்சினேன். "நான் பத்து வயசுலருந்து
சுத்தறேங்க இருவது வருசம் ஆச்சு. இன்னமும் எனக்கு சரியா சுத்த வரல. தினமும்
அரை மணி நேரமாவது சுத்தறேன். எடுத்த உடனே கத்துகிட்டு ப்ளாக்பெல்ட் வாங்க இது கராத்தே இல்லங்க. சின்ன வயசுலருந்து உடல் வளையணும் என்று சொன்னார். கராத்தேவிலும் ப்ளாக் பெல்ட் வாங்கியவர் என்று பின்னர்தான் தெரிந்தது. இருந்தாலும்
என் பிடிவாதம் காரணமாக எனக்கு சொல்லித்தர முன்வந்தார். படிப்பில் நான் எப்படியோ அதேபோல கம்புசுத்துவதிலும் என் திறமை இருந்தது. உங்களுக்கு வராது என்று அவரே விலகிக்கொண்டார்.

பிறகு நேரம் கிடைக்கும்போதெல்லாம் பேசுவோம். ஓட்டலுக்கு சாப்பிடப்போகும்போதுகூட
அழைப்பேன். குழந்தைகள விட்டுட்டு என்னால வரமுடியாது. அப்படியே இருந்தாலும்
அவங்கள விட்டுட்டு சாப்பிடறமேன்னு தோணும். அதனால வரமுடியாது என்பார்.
நாளுக்கு நாள் அவரின் மதிப்பு என்னில் அதிகமாகிப்போனது.

ஒருநாள் மருந்துக்கடையில் எதோ மருந்து வாங்கிக்கொண்டிருந்தேன். படிக்கட்டு அருகில்
ஒருவர் பைக்கை ஸ்டார் செய்ய முயற்சித்துக்கொண்டிருந்தார். எங்கிருந்தோ ஒருவர்
புயல் வேகத்தில் வந்து அவரின் தலை வெட்டிவிட்டு சென்றார்.

சீற்றமாக வரும் குழாயில் தண்ணீரை அடைத்துப்பிடித்தால் நாலாபக்கமும் தண்ணீர்
வேகமாக சீறி அடிக்கும் பார்த்ததுண்டா? அதேபோல வெட்டப்பட்ட கழுத்திலிருந்து
ரத்தம் பீய்ச்சி அடித்துக்கொண்டிருந்தது. நொடிநேரத்தில் நிகழ்ந்துவிட்டது. முண்டா
பனியனை மேல் முடிச்சு போட்டு கண்களுக்கு சிறு இடைவெளிவிட்டு கீழே முடிந்து
விட்டதால் பார்ப்பதற்கு முகமூடி திருடன் போல் இருந்த ஒருவன் வெட்டிவிட்டு ஓடினான்.
கொலையுண்டவர் என்னிலிருந்து பத்தடி தூரம் துடித்துக்கொண்டிருந்தார். அதிர்ச்சியுடன்
ஓடியவனின் திசை பார்த்தேன். வெள்ளைச்சட்டை சட்டையை மீறி வெளித்தெரியும் நீல
நிற பனியன். எனக்குப் பழக்கமான, சீரான கட்டுடைய உடல்.

மறுநாள் செய்தித்தாளில் நக்கீரன் நிருபர் கொலை என்று இருந்தது. நேற்று கண்ட அதே
சம்பவம். பெரம்பலூர் போன்ற நகரத்தில் இதெல்லாம் சகஜம் என்று பேசிக்கொண்டார்கள்
நானும் இரண்டொரு மாதத்தில் மறந்தே போனேன். அந்த கம்பு சுற்றுபவரையும் காணவில்லை.

பின்பொருநாள் மருத்துவமனையில் இரத்தம் கொடுத்துவிட்டு வருகையில் அவரைச் சந்தித்தேன். அந்தக்கொலையை அவர்தான் செய்ததாக சொன்னார். விபத்தில்
சிக்கியதுபோல இருந்தார். அவரின் படுக்கைக்கு அருகில் நீண்ட கழியில் இரத்தம் ஏறிக்கொண்டிருந்தது. ஏன் என்று கேட்டேன். பதில் ஒன்றும் இல்லை. இரத்தவகை கேட்டேன். ஓ நெகட்டிவ் என்றார்.

என்னுடைய இரத்தவகையும் அதுதான். ஒருவேளை அது என்னுடைய ரத்தமாக கூட இருக்கலாம்.




இந்த மூன்று கொடூரமான சம்பவங்களுக்குப் பிறகு வேறு எந்த கொடூரமான
கொலைகளையும் பார்க்கவில்லை. ஆனால் நேற்று சுப்ரமணியபுரம் படம் பார்த்தேன்.

ஒவ்வொரு கொடூரமான கொலைகளுக்குப் பின்னாலும் துரோகம், தோல்வி, விசுவாசம், காதல், கள்ள உறவு, பழிக்குப்பழி என்ற எதோ ஒரு காரணம் இருந்துகொண்டேதான் இருக்கிறது.

சுப்ரமணியபுரம் படத்தையும் குரூரமான புன்னகையோடு ரசிக்கவே செய்தேன்.
நிகழ்பவைதானே கதையாக மாறுகிறது.

Saturday, July 26, 2008

தசப்படம்

ஒரேநாள்ல பத்துப்படம் பார்த்து சாதனை பண்ணவேண்டும்னு ரொம்பநாள் ஆசை. அத
கடந்த வெள்ளிக்கிழமை செஞ்சாச்சு (கலைப்படம் நீங்களாக). இப்படிலாம் மொக்கசாதனை பண்ணிதான் நம்ம திறமைய நிரூபிக்க முடியும். அஞ்சு தமிழ்ப்படம் அஞ்சு ஆங்கிலப்படம்னு முதல்ல முடிவு பண்ணேன். தமிழ்லருந்து ஆரம்பிக்கலாம்னு வேதா படத்தை முதல்ல பாத்தேன். சூப்பரா சொதப்பிருக்காங்க. விஜயகுமார் புள்ளைங்க ஒண்ணுகூட தேற முடியாதுன்ற விஷயத்தை மறுபடியும் அழுத்தம் திருத்தமா விஜய் அருண்
நிரூபிச்சிருக்கார். பத்துப் படம்ன்ற சாதனை பண்றதுக்கு பெரும்சவாலா இந்தப் படம் பார்த்ததைச் சொல்லலாம். படுத்துகிட்டு, உருண்டுகிட்டு, கண்ணமூடிகிட்டு, காதப்பொத்திகிட்டு, போர்வைய இழுத்து மூடியும் இந்த படம் முடியுற மாதிரி
இல்லாததால் இரண்டாவது CD ய பாக்கவேல்ல. உசுரே போனாலும் இனிமே அருண்
விஜய் நடிச்ச படத்தை பாக்ககூடாதுன்னு வேதா CD மேல இருந்த அருண் ஸ்டில் மேல
அடிச்சு சத்தியம் பண்ணேன்.

சொக்கம்பட்டிப்பய (SJ சூர்யாவோட மச்சானாம்) தமிழ்ப்படம் டிவிடி ஒண்ணு இருக்கு
பாக்கறீங்களாண்ணேன்னு கேட்டான். குடுடா பாக்கலாம்னு வாங்கிட்டு வந்தா
அதுல மதுரைப்பொண்ணு சென்னைப்பையன், மலரினும் மெல்லிய (எங்கருந்துடா
டைட்டில் புடிக்கறிங்க)விளையாட்டு ன்னு மொத்தம் மூணு படம். ம.பொ.செ.பை
எப்படியும் துள்ளுவதோ இளமை மாதிரி கில்பான்சியா இருக்கும்னு ஆர்வத்துல
பாத்தேன். அதுக்கு ஏத்தமாதிரி ஷர்மிளியும் சுந்தர்ராஜனும் ரெண்டு மூணு சீன்
லவ் பண்ணதோட சரி அப்புறம் காணவே காணும். கதைனு பாத்தா ம.பொண்ணும்
செ.பையனும் லவ்பண்றாங்க. மதுரப்பொண்ணுன்னாவே அவளுக்கு ஓலை கட்ன
வகைல ஒரு மாமன் கண்டிப்பா இருப்பான். அவன் கட்டை மீசை வச்சிருப்பான்.
முதுகுல அருவாள வச்சிருப்பான். வெள்ள சட்டை, வேட்டி கட்டிருப்பான்.....
கடைசில இளசுங்க காதலுக்கு அருவா தூக்கி பின்னாடி சேத்து வைப்பாங்க. இத
எதுக்குடா படமா எடுத்திங்க??

மலரினும் மெல்லிய டைட்டிலே சரியா இல்லன்றதுனால ரிஜக்ட்டட். அடுத்து விளையாட்டு
படம். காதல் படத்துல சந்தியாவுக்கு கொடுக்கா, கண்ணாடி போட்ட மாமி இருக்கும்ல
"உங்க போதைக்கு நாங்க ஊறுகாயான்னு" கேக்கும்ல அந்த பொண்ணு ஹீரோயின்
ஹீரோ நேஷனல் பர்மிட் லாரி ஓட்டுனர் மாதிரி செவப்பு கண்ணும் பத்துநாள் தாடியும்
கொலைவெறியோட வர்றார். பேர் தெரில ஆனா ரித்திஷ்கு சரியா போட்டியா வருவார்.



நிறைய காட்சிகள் இயக்குனர் ரசிச்சு எடுத்திருக்கார். அதுல ஒண்ணு ரெண்டு தேறுது.
இந்த படத்தோட பாட்டு எல்லாம் சூப்பர் ஹிட். ஜாஸி கிப்ட் இசையமைச்ச படம்னு
நினைக்கிறேன். ரெண்டு குத்துப்பாட்டும் ஒரு மெலடியும் சூப்பர். கதை ஒரு ரவுடியும்
(போதை மருந்து விக்கறவன்) அழகான பொண்ணும் லவ் பண்றாங்க. ரவுடிய அழகு
பொண்ணு திருத்தறாங்க. ரவுடியும் போதைபொருள் விக்கறது தப்புன்னு வேர் வரைக்கும்
உள்ள போய் பெரிய புள்ளிகள அழிச்சி கடைசில காதலியுடன் சேர்றதுதான் கதை.

படத்தோட கடைசில ஹோம் அலோன் படத்தை அப்படியே காப்பி அடிச்சிருக்காங்க.
என்ன இங்கிலிஷ்ல குழந்தை செய்ற கேரக்டர இங்க கதாநாயகி செஞ்சிருக்காங்க.
கதாநாயகியும் குழந்தையும் ஒண்ணுதான!

அறை எண் 305ல் கடவுள். சிம்புதேவன் படம் காமெடியா இருக்கும்னு பாத்தா சுத்தமா
காமெடி இல்ல. கஞ்சா கருப்பு அமீரின் ராம் படத்துக்கு அப்புறம் வேற எந்தப்படத்திலும்
சிறப்பா நடிக்கவேயில்ல. இந்தப்படத்திலும் அதே! (சுப்ரமணியபுரம் இன்னும் பாக்கல)
கொழந்திங்களுக்கு நீதிக்கதை சொல்ற மாதிரி இருக்கு படம் முழுக்க. அங்கங்க நிறைய
காட்சிகள் சுவாரசியமா இருந்தாலும் படத்துல ஏதோ ஒண்ணு ஒட்டவேல்ல. சந்தானத்த
அடக்கி வாசிக்க வைக்காம அவர் ஸ்டைல்ல நடிச்சிருந்தா கண்டிப்பா நல்லாருந்திருக்கும்.
என்னவோ தெரில காமெடி நடிகருங்க காமெடிய தவிர வேற எதுல நடிச்சாலும் அது
செம ட்ராஜடியா மாறிடுது. நான் பார்த்த தமிழ்ப்படங்கள்ல அஞ்சுக்கு இரண்டு படத்துல
க.கருப்பு கிட்டத்தட்ட இரண்டாவது கதாநாயகன் ரேஞ்சுக்கு இருக்கு நடிச்சிருக்கார்.
இரண்டுலயும் சிரிப்பே வரல.


அது ஒரு கனாக்காலம்



பாலுமகேந்திரா படத்துல யாருக்கும் மேக்கப் போடமாட்டாங்க
ஒரு சீன்லயாவது நாயகி சட்டை போட்டுகிட்டு கீழ ஒண்ணுமே போடாம வழ வழன்னு
காலை காமிப்பாங்க
பொன்மேனி உருகுதே மாதிரி செமத்தியான பாட்டு ஒண்ணு இருக்கும்
நாயக, நாயகியின் பக்கத்துவீட்டுக்காரங்க பெரும்பாலும் பாட்டியா இருப்பாங்க அவங்க
ரொம்ப நல்லவங்களாவும் இருப்பாங்க.
உதட்டோட உதடு முத்தக்காட்சி எப்படியாவது இருக்கும். ராமன் அப்துல்லான்னு ஒரு
படம். அதுல ஈஸ்வரி ராவுக்கு கண்டமேனிக்கு உதட்டுல முத்தம் கொடுத்துட்டே
இருப்பார் விக்னேஷ். (அந்தப்படம் பாக்கும்போது சினிமாவுல நடிச்சா பாலுமகேந்திரா
படத்துல மட்டும்தான் நடிக்கணும்னு நினைச்சதெல்லாம் இப்ப ஞாபகம் வருது)
கதை சென்னைல நடந்தாலும் எப்படியும் பின்பகுதி அல்லது படத்தின் முடிவு ஊட்டியிலோ
அல்லது மலைப்பிரதேசத்துலயோதான் நடக்கும்.
கேமரா எல்லாம் பொங்கல் சாப்பிட்ட மாதிரி மெதுவாதான் போகும் வரும் ஆனா அது
சக்கரைப்பொங்கல் மாதிரி செம டேஸ்டா இருக்கும்.

இப்படி பாலு படத்துல நிறைய ஒற்றுமைகள் இருக்கும். ஆனா இந்த ஒற்றுமைகள் நம்மை
சலிக்க வைக்காது இதுதான் அவரின் பலம்.

வீட்டுக்கு வரும் ப்ரியாமணிக்கு உதட்டில் முத்தம் கொடுத்து அரைவாங்கி பிறகு
வருந்துவார். மறுநாள் மன்னிப்பு கேட்கும்போது ப்ரியாமணி கண்ணீரோடு கட்டிப்
பிடிப்பார். அருமையான சீன். கவிதையான படம்.

The Holiday (ஹாலிடே)



இரு பெண்கள். அவர்கள் இருவரும் வெவ்வேறு ஆண்களால் ஏமாற்றப்பட்டு விரக்தி
அடைகின்றனர். இருவரும் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு இரண்டு வார
காலத்திற்கு எங்காவது வெளிநாடு சென்று தனிமையில் இருக்க விரும்புகிறார்கள்.
இப்படிப்பட்ட இரண்டு பெண்களும் சாட்டிங்கில் எதேச்சையாக சந்தித்து, உரையாடி
தத்தமது இடங்களை இருவாரங்களுக்கு மாற்ற திட்டமிடுகின்றனர். காமரூன் டயஸ்,
கேட் வின்ஸ்லட்தான் அந்த இருவரும். திட்டப்படி காமரூன் லண்டனில் உள்ள
கேட்டின் வீட்டிற்கும், கேட் அமெரிக்காவில் உள்ள காமரூன் வீட்டிற்கும் செல்கின்றனர்.
வந்த இடங்களில் இருவரும் இரு ஆண்களால் கவரப்படுகின்றனர். கடைசியில்
இணைகின்றனர்.

Shawshank Redamtion படம் பார்த்தவர்கள் அந்த படத்தில் குருவிக்கு உணவிலிருந்து
புழுவை எடுத்து ஊட்டும் கிழவரை மறந்திருக்க முடியாது. கிட்டத்தட்ட நாப்பது
வருடம் அந்தச்சிறையில் கைதியாக, நூலக காப்பாளராக, கடைசியில் விடுதலை
பெற்று வெளியில் வரும்போது நாப்பது வருட சிறைவாழ்க்கை அந்நியமாகி இருக்கும்
பிறகு ஒரு விடுதியில் தற்கொலை செய்துகொள்வார். அற்புதமான கதாபாத்திரம் அது
அதுபோலவே ஹாலிடே பத்திலும் ஒரு கிழவரின் பாத்திரம் அற்புதமாக படைக்கப்பட்டு
இருக்கிறது. மகிழ்ச்சியாக ரசிப்பதற்கு ஏராளமான காட்சிகள் இருக்கின்றன. jude Lawன்
மகளாக வரும் இரண்டு குழந்தைகளும் சில காட்சிகளே வந்தாலும் மனதில் அழுத்தமான
இடம் பிடிக்கிறது.

அருமையான படம். கிடைத்தால் பாருங்கள்.

The Covenant (கோவணாண்டி !)



நான்கு இளைஞர்களுக்கு எதோ ஒரு சக்தி கிடைக்கிறது. அதில் ஒருவன் அந்த சக்தியை
தவறாக பயன்படுத்துகிறான். நாயகன் அதைத்தடுக்கிறான். நாயகனுக்கு தலைமுறையாக
சக்தி இருக்கிறது என்றும் உதாரணத்துக்கு அடிக்கடி புருடாபுராணம் போன்ற புத்தகத்தை
புரட்டி புரட்டி உதாரணம் காட்டுகிறார்கள். சிறிது தள்ளாட்டத்துடன் பார்த்ததால் கதை
சுத்தமாக புரியவில்லை. ஆனால் இதில் வந்த ஒரு பெண் மிக அழகாக,
இந்தியமுகத்துடன்! இருந்தாள் அவளே இந்த மொக்கப்படத்தையும் முழுதாக பார்க்க
முழுமுதல் காரணம். பெயர் என்ன என்று விசாரித்ததில் ஜெசிகா லுகாஸ் jessica lucas என்று தெரிந்தது. கூகிளில் தேடினால் அவுட் ஆஃப் போகஸ் படங்களே கிடைக்கின்றன.
பார்க்க வேண்டும் என்றால் படத்தில் பாருங்கள் அல்லது நேரில் பாருங்கள். செமையாக
இருக்கிறார்.

Rocky Balboa (ராக்கி பெல்பொ)



சில்வெஸ்டர் ஸ்டொலன் நடிப்பில் வந்த படம். ஹெவிவைட் குத்துச்சண்டையிலிருந்து
ஓய்வுபெற்று அமைதியாக ஒரு உணவகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார். அவர் காதல்
மனைவியின் கல்லறைக்கு தினமும் சென்று மலர் அஞ்சலி செலுத்துகிறார். இரும்பு
மனிதனுக்குள்ளே அழகான காதல் இருக்கிறது. (உடனே தமிழ்ப்படத்தில் வருவதுபோல
முகத்தில் பவுடர் அடித்து இளமையாக காண்பித்து ப்ளாஷ்பேக்கில் லவ்ஸ்டோரி
எல்லாம் போடவில்லை. அவருக்கு ஒரு மகன். தன் தந்தையின் நிழலில் வாழ விருப்பம்
இல்லாதவன். தன் தந்தையிடம் இருந்து தனிமையில் இருக்கிறான்.

தினமும் மாலை தன் உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தன் கடந்தகால
குத்துச்சண்டைக் கதைகளை பகிர்ந்துகொள்கிறார். ஒவ்வொரு இருக்கைக்கும் சென்று
தினமும் தன் அனுபவங்களை வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். முதல்
மரியாதை சிவாஜி போல காலம் கடந்தும் அவருக்கு ஒரு பெண்மணி மீது காதல்
வருகிறது. கூடவே தன் வாழ்வின் கடைசி முறையாக ஒரு குத்துச்சண்டை போட்டியில்
கலந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணமும் கூடவே வருகிறது.

உடல்தகுதியில் தேர்ச்சி பெற்றாலும் கமிட்டி தலைவர்கள் அனுமதிக்க மறுக்கின்றனர்.
வாதிடுகிறார் ஸ்டொலன் இறுதியாக சம்மதிக்கிறார்கள். உடனே மகன் வந்து சண்டை
போடுகிறான். "நீ இந்த வயசுல சண்டை போட்டு என்ன பண்ணப்போற" என்ற மகனுக்கு
தன் ஆசையை விவரிக்கிறார். பிரிந்திருந்த தந்தையும் மகனும் ஒன்று சேர்கிறார்கள்.
தமிழ்ப்படத்தில் வருவதுபோலவே ஒரே பாடலில் பயிற்சிகள் அனைத்தையும் முடிக்கிறார்.
நாடே உற்சாகம் தருகிறது. அந்தப்பெண்மணியும் உற்சாகம் தருகிறார். ஆனால் அவரை
எதிர்த்து மோதப்போவது உலகஹெவிவெய்ட் குத்துச்சண்டை வீரர்.

போட்டி நடக்கும்போது பயங்கர விறுவிறுப்பு. மோதுகிறார்கள் மோதுகிறார்கள் இருவரும்
சமமாக மோதுகிறார்கள். முதல் மூன்று ரவுண்டுகளில் சரமாரியாக குத்துவாங்கி முகம்
கிழிந்துபோகிறார் ஸ்டொலன். அரங்கமே அமைதியாகி விடுகிறது. அந்தப்பெண்மணி
கண்ணீரோடு தனது ஆதரவை தெரிவிக்கிறார். உடனே வீறுகொண்டு எழுந்து அடுத்த
மூன்று ரவுண்டுகளில் அவனை சாய்த்து விடுவார் என்று நினைத்தீர்களானால் நீங்கள்
புத்திசாலி. ஆமாம் ஆறாவது ரவுண்டில் எதிராளியின் முகம் கிழிந்து ரத்தம் கொட்டுகிறது.
இடைவேளைக்குப் பின் மீண்டும் மோதுகிறார்கள். கொலைவெறியுடன் மோதுகிறார்கள்.
மறுபடியும் சமமாய் ஆகிறது. கட்டக்கடைசியில் போட்டி யாரும் வெற்றி பெறாமல் எவ்வித
முடிவும் இன்று முடிகிறது. இந்த சண்டைக்காட்சி மில்லியன் டாலர் பேபி அளவுக்கு
சிறப்பாக இல்லையென்றாலும் அதே சுவாரசியம் உண்டு.

போட்டி முடிந்ததும் உலகத்தின் தலைசிறந்த வீரன் நீ என எதிராளியை பார்த்து
சொல்கிறார். படம் முழுக்க ஸ்டொலனின் ஆதிக்கம். படம் ஆக்சன் படம் என்றே
போட்டிருந்தது. படமும் ஆக்சனாகவே இருந்தது. ஆனால் இங்கே பேரரசுவு ஒரு
ஆக்சன் இயக்குனர் என்று சொல்கிறார்கள். பழனி, குருவி எல்லாம் ஆக்சன் படமாம்.

The Sting (தி ஸ்டிங்)



1973ல் வெளிவந்த இந்தப்படம் ஏழு ஆஸ்கார் விருது பெற்றது. இரண்டு நண்பர்கள்
திருடர்களாக இருக்கின்றனர். ஒருமுறை நகரின் மிகப்பெரிய திருடனிடம் திருடி
விடுகிறார்கள். அந்த மிகப்பெரிய திருடன் இருவரில் ஒருவரை கொன்றுவிடுகிறான்.
இன்னொருவன் அவனை பழிவாங்குகிறான். பழிவாங்குவதென்றால் சாதாரணமாக
இல்லை அப்படியே அவனை திட்டம்போட்டு ஏமாற்றுவது. அந்தத்திட்டம்தான்
படத்தின் கதை. தப்பித்த இன்னொருவன் (rabert redford) மிகப்பெரிய கிரிமினலை
பழிவாங்க Paul Newman இடம் செல்கிறான். திட்டம் போடுகிறார்கள். முதலில்
சீட்டாட்டம் போல ஏதோ விளையாடுகிறார்கள். மங்காத்தா வகைபோல. அதில்
சூழ்ச்சி செய்து பெரும்பணத்தை அவனிடமிருந்து கொள்ளையடிக்கிறார்கள். பால்
நியுமென் சீட்டுக்கட்டில் செய்யும் மாயாஜாலங்கள் பிரமிக்க வைக்கும். உதாரணத்திற்கு
பிதாமகன் படத்தில் சூர்யா செய்வாரே அதுபோல. முதலில் விட்டு பிறகு முழுதாக
வில்லனுக்கு ஆப்படிக்கிறார். அதில் காய்ந்துபோகும் வில்லனை இன்னும் காயவிட்டு
இன்னொரு திட்டம் போடுகின்றனர்.

குதிரை ரேஸ் நடப்பதுபோலவே ஒரு சூதாட்டவிடுதியை ஆரம்பித்து வில்லனை நம்ப
வைக்கிறார்கள். இந்த அரங்கத்தில் வர்ணனை செய்வது முதல் பந்தயம் கட்டுவது வரை
பால் நியுமெனின் ஆட்கள். இதிலும் முதலில் வில்லனை ஜெயிக்கவிட்டு பிறகு
மொத்த பணத்தையும் ஆட்டையை போடுகிறார்கள். பலமில்லியன் டாலரை கத்தியின்றி
ரத்தமின்றி மிகச்சிறந்த திட்டமிடலின் மூலம் திருடனிடமிருந்தே திருடுகிறார்கள்.

அந்த டிவிடியின் அனைத்துப்படங்களுமே கேங்ஸ்டர் ரவுடிகளின் படம். காட்பாதர்
முதல் ப்ரெஞ்ச் கனெக்சன் வரை. ஆனால் காட்பாதரை என்னால் முழுதாக பார்க்க
முடியவில்லை. ஆனால் கண்டிப்பாக பிறகு பார்ப்பேன். அப்படியே ஒரு பதிவெழுதியும்
பீற்றிக்கொள்வேன்.

சிறப்பான ஒளிப்பதிவு சிறப்பான திரைக்கதை சிறப்பான நடிப்பு இந்த மூன்றுமே
படத்தின் பிரம்மாண்டம். காமிக்ஸ் நாவலின் ஐந்து அத்தியாங்கள் போல படத்தை
ஐந்து பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு அத்தியாயம் ஆரம்பிக்கும்போதும் முடியும்போதும்
பல முடிச்சுகளுடன் காமிக்ஸ் நாவலின் கடைசி அத்தியாயத்தில் எல்லா முடிச்சுகளும்
அவிழ்வதுபோல மிகத்திறமையாக முடித்திருக்கிறார் இயக்குனர்.

Midnight Cowboy (மிட்நைட் கவ்பாய்)



டைட்டிலே கில்பான்சியாக இருப்பதுபோல படமும் "அந்த" மாதிரிதான். 1969ல்
வெளிவந்த இந்தப்படம் மூன்று ஆஸ்கர் விருது பெற்றது. நெகிழ வைக்கும் நட்புதான்
படத்தின் மையக்கருத்து. "அந்த" மாதிரி மேட்டர் எல்லாம் மாயை என்று சொல்லும்படம்.

ஜோ பக் டெக்சாசிலிருந்து நியூயார்க் வருகிறார். ஆன் விபச்சாரன் தொழில் செய்து
நிறைய சம்பாதிக்கலாம். ஜாலியாக இருக்கலாம் என்று வருகிறார். அந்தக்காலத்திய
ஆட்கள் ரேடியோ புழக்கத்துக்கு வந்த புதிதில் பலர் ரேடியோவும் கையுமாக திரிந்து
என் சிறு வயதில் பார்த்திருக்கிறேன். எனக்குத்தெரிந்து சைக்கிளில் சென்று வளையல்
விற்கும் பெரியவர் ஒருவர் இருந்தார். அவரின் சைக்கிளில் எப்போதுமே ரேடியோ
பாடியபடி இருக்கும்.

சைக்கிள் காரியரில் வளையல்பெட்டியுடன் காற்றடிக்கும் பம்ப் பொருத்தப்பட்டிருக்கும்
ஹேண்ட்பாரின் இருபக்கமும் பைகள் தொங்கும் அந்த பைகளில் ஒன்றில் ரேடியோ
கதறியபடி இருக்கும். அவர் இறக்கும்வரை வியாபாரம் செய்துகொண்டே இருந்தார்
அந்த ரேடியோ இன்னமும் உள்ளது.

படத்தின் நாயகன் வாயில் சுயிங்கமும் கையில் ரேடியோவுமாக அறிமுகமாகிறான்
மிக உற்சாகமாக நியூயார்க் நகரில் நுழைகிறான். நகரங்கள் எப்போதுமே புதியவர்களுக்கு
நரகங்கள்தான். அவன் நினைத்தது போல பெண்களுடன் படுத்தால் பெரும்பணம்
கிடைக்கும் என்பது பொய்யாகிறது. மாறாக இவனிடமிருந்தே பணத்தைப்
பிடிங்கிக்கொண்டு போகிறார்கள். அந்தச்சமயத்தில் ராட்சோ ரிசோவின் அறிமுகம்
ஜோவிற்கு கிடைக்கிறது.

ஆனால் ராட்சோ அவனுக்கு உதவுவதாக சொல்லி இருக்கும் பணத்தை எல்லாம்
ஆட்டையைப் போட்டுவிடுகிறான். பிறகு அவனைக் கண்டுபிடிக்கும்ம் ஜோ தன்
பணத்தைக் கேட்டு அவனை நச்சரிக்கிறான். ஒரு கால் குட்டையாக இருப்பதால்
ராட்சோவால் மனிதர்களைப் போல நடக்க முடியாது. குதித்துக் குதித்துதான் நடக்க
முடியும். தங்குவதற்கு கூட இடமில்லாத ஜோ, ராட்சோவுடன் செல்கிறான்.
அவனோ பாழ்டைந்த வீட்டில் குப்பைகளுக்கிடையில் தங்கி இருக்கிறான். படத்தில்
காலத்தை ஒரு குறியீடு போல காண்பித்திருக்கிறார்கள். ஜோ நியூயார்க் வரும்போது
பனிகாலம் ஆரம்பிக்கிறது எப்பொழுதுமே வசந்தகாலத்தின் ஆரம்பம் மிக இனிமையாக
இருக்கும். அடர்ந்த பனிக்காலம் வரும்போது விளிம்பு மக்களின் திறந்த வாழ்விடம்
குளிரில் முற்றிலும் உறைந்திருக்கும். அதுபோலவே பாழடைந்த அந்தக்கட்டிடத்தில்
தங்கும் அவர்கள் குளிர் உச்சமடையும் காலத்தில் அங்கிருந்து விரட்டப்படுகிறார்கள்.
ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்த ராக்சோவின் உடல்நிலை மோசமடைகிறது.
குளிரின் தீவிரம் மூர்க்கமாக தாக்கும்போது தீவிரமாக புகலிடம் தேடுகிறார்கள்.



இடையில் நடக்கும் சம்பவங்கள் இருவருக்கிமிடையில் அழகான நட்பை உண்டாக்கி
விடுகிறது. ஒரு பெண்ணை கரெக்ட் செய்து திருப்திபடுத்துவதன் மூலம் பெரும்
பணத்தை சம்பாதிக்கிறான் ஜோ. நண்பனை மருத்துவரிடம் அழைத்துச்செல்ல
ஜோ முனையும்போது ராக்சோ தன் கனவை சொல்லுகிறான். எப்படியாவது என்னை
ப்ளோரிடா கொண்டு சேர்த்துவிடு. அங்கே சென்றதும் எல்லாம் சரியாகிவிடும் என்று
சொல்கிறான். மருத்துவரிடம் வரமுடியாது என பிடிவாதமும் பிடிக்கிறார். பின்னர்
இருவருமாக ப்ளோரிடாவுக்கு பயணமாகிறார்கள். பல ஆசைகளுடன் பயணிக்கும்
ராக்சோ உறங்கிய நிலையிலே மரணமடைவதுடன் படம் முடிகிறது.

பத்துப்படங்களில் மிகவும் பிடித்த படமாக மிட்நைட் கவ்பாயும் ஹாலிடேயும்தான்
சொல்லமுடியும்.

இங்கே திருட்டு வீசிடி விற்கும் இடத்திற்கே சென்று ஜே.கே.ரித்திஸ் நடித்த
நாயகன் படத்தைக் கேட்டபோது அப்படியொரு நடிகரையே தெரியாது என்று அவர்
சொன்னார். கேட்டபோது மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. யாராவது நாயகன் பட விசிடி
வைத்திருந்தால் துபாய் குறுக்கு சந்திற்கு பார்சல் அனுப்பவும்.

சனிக்கிழமை காலை அலுவலகத்தில் நுழையும்போது எல்லாரும் என்னை பேயடித்த
மாதிரி ஏன் பார்த்தார்கள் என்று தெரியவில்லை.

Tuesday, March 13, 2007

Blood Diamond

கடைசியாக நான் பார்த்த இரண்டு ஆங்கிலப்படங்களின் கதைக்களன் ஆப்பிரிக்க
தேசத்தை பற்றியது. இதற்கு முன் ஆப்பிரிக்க தேசத்தை பற்றியோ, மக்களை
பற்றியோ கேள்விப்பட்டிராதவன். அதிகபட்சமாக விளையாட்டு போட்டிகளில் கண்டிருக்கிறேன்.மற்றபடி அது ஒரு நாடு நம்மைப்போல மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்றளவே எனது எண்ணங்கள் இருந்தன. இந்த இரண்டு திரைப்படங்களை
பார்த்த பின் இத்தனை ரத்த சேதம் அடைந்த ஒரு நாடு, அதன் கருப்பு பக்கங்கள், இனக்கலவரங்கள் போன்றவை நடந்தது என்பது படத்தை பார்த்த பின்புதான்
தெரிகிறது.

ஹோட்டல் ருவாண்டா, ப்ளட் டையமண்ட் இதுதான் அந்த இரண்டு படங்கள்
மிகவும் உணர்ச்சிகரமான

கதைகள் இரண்டுமே. முதலாவது இனக்கலவரத்தில் தனியாளாக மக்களை
காப்பாற்றும் ஒருவரின் கதை. ஆங்கிலப்படத்திற்கு உரிய எந்தவித ஜிகினாக்களும்
இல்லாத கதாநாயகன். இந்த கதையை பற்றி ஏற்கனவே அண்ணாச்சி எழுதிவிட்டார் என்பதால். அடுத்த படமான ரத்த வைரம் அதாங்க ப்ளட் டையமண்ட்
படத்தை பற்றிய என் பார்வை

உலகிலேயே அதிக வைரங்கள் கிடைக்கும் நாடுகளில் ஆப்பிரிக்க தேசம் முதலிடம்
வகிப்பது அனைவருக்கும் தெரியும். அந்த வைர வியாபாரத்தின் பிண்ணனியில்
இருக்கும் பயங்கரங்களை பற்றி சொல்வதே இப்படம். நாம் சர்வ சாதாரணமாக பார்க்கும்வைரத்தின் பின்னால் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா என்று
அதிர்ச்சி படம் பார்க்கும்போது வரும். இந்த வைரக்கடத்தலை தவிர ஒரு குடும்பம்
பிரிந்து இணைவது மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.

மீன்பிடிக்கும் தொழிலாளியாக சாலமன் வாண்டி (Solomon Vandy) உண்மையில்
கதை இவரை சுற்றிதான் நடக்கிறது. மனிதர் நன்றாக நடித்திருக்கிறார். மகனை
டாக்டராக்க வேண்டும் என்று சாலமன் தன் மகனை பள்ளிக்கு இட்டுச்செல்வதில்
ஆரம்பிக்கிறது படம் அங்கிருந்து துப்பாக்கி சத்தம் படம் நெடுகிலும் காணப்படும்.
ஏதோவொரு இயக்கத்தின் பெயர் சொல்லி மக்களை கண்மூடித்தனமாக சுடுகிறார்கள்.
கை காலை வெட்டுகிறார்கள் மனம் பதறுகிறது பார்க்கும்போது. அங்கிருக்கும் பெரும்பாலானாவர்களை சுட்டுவீழ்த்தி சிறுவர்ளையும், வாட்டசாட்டமாக இருக்கும்
சிலரையும் பிடித்து இழுத்து செல்கிறார்கள். சாலமனின் மனைவி மக்கள் கலவரத்தில்
பிரிந்து ஓடுகின்றனர். சாலமன் மட்டும் கூட்டத்திடம் சிக்கிக் கொள்கிறார்.

அனைவரையும் காட்டிற்கு அழைத்து சென்று குளம், குட்டைகளில் வைரம் தேட
விடுகிறார்கள். சிறுவர்களுக்கு துப்பாக்கி பயிற்சி கொடுத்து மக்களை கொல்லச்
சொல்லி கட்டளையிடுகின்றனர். இப்படி தேடிக் கிடைக்கும் வைரங்களை சொற்ப
விலைகொடுத்து அதிகவிலைக்கு விற்கின்றனர். பணத்துக்கு பதிலாக ஆயுதமாகவும்
சப்ளை நடக்கிறது. இது போன்ற வைரங்களை வாங்கி கடத்தும் வேலைக்கு வருகிறார்
நாயகன் லியனார்டோ டிகாப்ரியோ.

இதற்கிடையில் அளவில் பெரிய, அபூர்வமான பிங்க் நிற வைரம் ஒன்று சாலமன்
கைக்கு சிக்குகிறது அப்போது ராணுவப்படை ஒன்று புகுந்து அங்கிருந்த அடிமைகளை
காப்பாற்றி சிறைக்கு அழைத்து செல்கிறது. அவசரத்துக்கு அந்த வைரத்தை அங்கேயே புதைத்துவிட்டு வருகிறார். வில்லனுக்கு இது தெரியவர சிறையில்
சாலமனிடம் விசாரிக்கும்போது லியனார்டோ ஒட்டுக்கேட்க அந்த வைரத்தை
எப்படியாவதுமடக்கி எடுத்து லண்டனுக்கு அனுப்ப எடுக்கும் முயற்சிகளே படம்
முழுக்க சொல்லியிருக்கிறார்கள். இடையில் சாலமனின் குடும்பத்தை தேடுகிறார்கள்
இதுதான்கதை. ஒரு நொடி கூட கொட்டாவியை வரவழைக்கும் காட்சிகள் இல்லை.
மனம் பதறுகிறது இப்படியெல்லாம் மக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்று
நினைக்கும்போது வைரத்தின் மீது வெறுப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை.

மேல்நாடுகள் பணமும் கொடுத்து ஆயுதங்களும் கொடுத்து மக்களை எப்படி மூளை
மழுங்கடித்து வேலை வாங்கியிருக்கிறார்கள் என்ற உண்மை படம் பார்த்து முடிக்கையில் தெளிவாக புரிகிறது.

என் குடும்பத்தை காப்பாற்ற உதவி செய்தால் மட்டுமே அந்த வைரத்தை உனக்கு
காட்டமுடியும் என்கிறார் சாலமன். ஆகவே அவர் குடும்பத்தை தேடும்பணியில்
ஈடுபடுகிறார் டிகாப்ரியோ. வைரக்கடத்தலை பற்றி பத்திரிக்கையில் கட்டுரை எழுத வரும் கதாநாயகி. அவரின் உதவியுடன் பல அகதி முகாம்களில் தேடுவதற்காக ஒரு
ஒப்பந்தத்துடன் கருப்பரான சாலமனை கேமராமேன் என்று சொல்லி அழைத்துச்
செல்கிறார்கள்.

அப்போது அருமையான காட்சி வரும்...

சாலையில் இவர்கள் கார் பயணித்துக் கொண்டிருக்கும் அப்போது எதிரே வரும்
ஒரு வாகனத்தில் குண்டு வெடிக்கும். இந்த வண்டியில் வரும் பத்திரிக்கையாளர்கள்
அனைவரும் உடனே போட்டோ எடுப்பார்கள். அப்போது சாலமன் மட்டும் துடித்துக்கொண்டிருக்கும் உயிர்களை காப்பாற்ற அவர்களை தூக்கி அவசர அவசரமாக
வண்டியில் ஏற்றுவார். அப்போது அங்கிருக்கும் பத்திரிக்கையாளர்கள் சாலமனை
திட்டுவார்கள். அந்த காட்சியில் மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
ஒரு அசாதாரண சம்பவம் நடக்கும்போது அதை பார்ப்பவrகளின் உணர்ச்சி
எப்படியிருக்கும் என்பதை அழுத்தமாக சொல்லும்.

ஒருவழியாக அகதிகள் முகாமில் தன் குடும்பத்தை சந்திக்கிறார் சாலமன். பின்னர்தான் டிகாப்ரியோவுடன் செல்ல ஒத்துழைக்கிறார். வைரத்தை தேடும் இடத்தில் தன்
மகனும் அந்த கொலைகார கூட்டத்துடன் இருப்பதை கண்டு பதறும் சாலமன் தன்
மகனை எப்படியாவது அங்கிருந்து மீட்டு வர முயற்சிக்க மகனோ இவர் என் அப்பா
இல்லையென்று சொல்லுகிறான். அவனின் மூளை சலவை செய்யப்பட்டுவிட்டது.

அந்த கூட்டத்தை அழித்து மகனை காப்பாற்றுகிறார் டிகாப்ரியோ. இறுதியில்
டிகாப்ரியோவை சிறுவன் சுட முயற்சிக்கும் காட்சியில் மூவரின் நடிப்பும் பிரமாதமான
ஒன்று குறிப்பாக தந்தைக்கும் மகனுக்கும் கடைசி ஐந்து நிமிட காட்சி
குறிப்பிடவேண்டிய ஒன்று. அந்த காட்சியிலேயே குண்டு ஒன்று துளைத்து விட
டிகாப்ரியோ வைரத்தை சாலமனிடம் கொடுத்து லண்டனுக்கு அனுப்புவதாக படம்
முடிகிறது.

மனதை தொடும் காட்சிகளும், கனக்கச்செய்யும் காட்சிகளும் நிறைந்த திரைப்படம்.