எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, December 19, 2022

குரோம்பேட்டை நினைவுகள் - 5

 சென்னையில் பல்லாயிரக்கணக்கில் பிரியாணிக்கடைகள் உண்டு. குறிப்பாக இந்த கோவிட் காலத்தின்போதும் அதற்குப் பிறகும் முளைத்த கடைகள் ஆயிரங்களைத் தாண்டு. அதில் 90 சதவீதம் ஆறே மாதங்களில் இழுத்து மூடப்படும். சில கடைகள் அதிகபட்சம் ஒருவருடம் தம் கட்டி ஓடும். எஞ்சுவதை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதுபோலவே பல்லாவரம் குரோம்பேட்டை பகுதிகளில் பிரபலமான பிரியாணிக்கடைகள் உண்டு, பல்லாவரம் யா மொஹிதீன், பாண்டியன், அரபிஸ்தான், ஆசிப், புஹாரி, தால்சினி, வெற்றி தியேட்டர் அருகில் உள்ள பிரியாணிக்கடைகள் என ஏராள புகழ்பெற்ற பிரியாணிக்கடைகள்.

மேல்சொன்னவற்றில் மொஹிதீன், ஆனால் போர்டில் யா முஹைதீன் என்றே எழுதியிருக்கிறது. பேச்சுவாக்கில் மொஹிதீன். இந்தக்கடை பிரியாணி பிறர் சொல்வது போல ஆஹா ஓஹோ என்ற ருசி கிடையாது. பிரியாணியின் ருசிக்கு முக்கிய காரணம் அது பிரியாணி அண்டாவிலிருந்து நமது தட்டிற்கு பத்து விநாடிகளுக்குள் பரிமாறப்பட வேண்டும். நீங்கள் பாக்கெட்டில் அடைத்து டெலிவரி செய்யப்படுவது பிரியாணிதான் ஆனால் அதன் முழு ருசியைப் பார்க்க முடியாது. யா மொஹிதீனில் பிரியாணியை டவர் போல டப்பாக்களில் அடைத்து வைத்திருப்பார்கள். அப்போதே பகுதி ஆறியிருக்கும், பிறகு  நீங்கள் வாங்கி வீட்டுக்கு வந்து பெட்டியைத் திறந்து உண்ண ஆரம்பிக்கும்போது அதன் ஒரிஜினல் சுவையில் முக்கால்வாசி காற்றோடு போயிருக்கும்.  புஹாரி கூட ஒப்பு நோக்கினால் விலையும் சுவையும் கூடுதல். புஹாரியில் பிரியாணி சாப்பிட்ட பிறகு கையை இரண்டு முறை சோப்பு போட்டு கழுவினாலும் வழவழப்பு போகாது. நெய்யாக இருந்தால் ஒருமுறை கழுவினாலே போதும். இது வேறு ரகம். க்ரீஸ் டப்பாவிற்கு கையை நுழைத்தது போல இருக்கும். மாதம் நான்கு முறை சாப்பிட்டால் ஆறு மாதத்தில் மாரடைப்பு உறுதி. மற்றபடி புஹாரி பிரியாணி அட்மாஸ்பியர், சர்வீஸ், போன்ற பிற காரணங்களுக்காக எப்போதாவது சாப்பிடலாம்.

எனக்குப் பிடித்தமானது பல்லாவரம் பாண்டியன் ஓட்டல் ஓரளவுக்கு மதுரையின் மட்டன் பிரியாணி சுவையை நினைவுபடுத்தும். மற்ற கடைகளான, தால்சினி, அரபிஸ்தான், இன்னபிற கடைகள் டோட்டல் வேஸ்ட். என் பள்ளிக்காலங்களில் பிரியாணி என்றால் அது பீஃப் பிரியாணி மட்டும்தான். சிக்கன், மட்டன் எல்லாம் பிற்பாடு கேள்விப்பட்டவைதான். எங்கள் வீடான வெங்கட்டாம்பேட்டை ரோட்டிலிருந்து வடக்கநந்தல் அரசு ஆண்கள் மேல்நிலைக்கு செல்லும் வழியில் ஒரு சிறிய வாய்க்கால் கோமுகி அணையிலிருந்து வரும். பேருந்துநிலையத்திற்கு செல்லும் வழியில் அந்த ஓடை ஓரத்தில் ஒரு பாய் பிரியாணிக்கடை வைத்திருந்தார். மதிய உணவுக்கு சைக்கிளில் செல்லும்போது அது என் வழி இல்லையென்றாலும் அந்தக்கடை வழியாகவே செல்வேன். அந்த வாசனையை சொல்லில் எழுதவே முடியாது. எப்படியாவது ஒருநாள் காசு சேர்த்து சாப்பிட வேண்டும் என்று நினைத்ததுண்டு, கால் ப்ளேட் பத்து ரூபாய்தான். ஆனால் அந்த பத்து ரூபாய் என்னிடம் எப்போதுமே இருந்ததில்லை. பிறகு நண்பர்களுடன் காசு சேர்த்து ஆளுக்கு இரண்டு ரூபாய் போட்டு ஒரு பார்சல் வாங்கலாம் என முடிவெடுத்தோம். அங்குதான் ஒரு சிக்கல், யாராவது மாட்டுக்கறி பிரியாணி வாங்குவதை பார்த்து வீட்டில் போட்டுக்கொடுத்தால் ஊதாங்கோலால் அடி விழும். ஆகவே யார் வாங்குவது என்று சீட்டெழுதி எடுத்து பிறகுதான் வாங்கினோம். நாந்தான் வாங்கிவந்தேன். சாணி மெழுகிய தரை, இரண்டே இரண்டு பெஞ்ச். வயதான இஸ்லாமியர். எனக்கு நன்கு தெரிந்த முகம். பள்ளி சீருடையிலேயே வாங்கினேன். வாய்க்கால் ஓரமாக சென்று பொட்டலத்தைப் பிரித்த மூன்றாவது நொடியே காலியாகிப்போனது. அதுவரை சுவைத்திராத சுவை. கறி நன்றாக வெந்து பூப்போல இருந்தது. கையைக் கழுவாமல் பள்ளிக்கூடம் வரை முகர்ந்து பார்த்துக்கொண்டே வந்தோம். 

ஆகவே எனக்கு பிரியாணி என்றால் அது பீஃப் பிரியாணி அதுவும் நான் சிறுவயதில் சுவைத்த அதே ருசியில் இருக்கவேண்டும் என்பது நெடுநாள் ஆசையாக இருந்தது. இங்கிருக்கும் கடைக்காரர் ஒருவர் ஜிம் பாடி. நன்றாக கறி சாப்பிடக்கூடியவர். அவரிடம் என் ஆசையை சொன்னபோது அவர் ஒரு கடையைக் காட்டினார். பல்லாவரம் பாலத்தின் அடியில் இடதுபுறம் செல்லும் சாலையில் ஒன்றரை கிலோமீட்டர் தாண்டினால் நாகல்கேணி வரும் சாலை ஓரத்திலேயே ஒரு கடை உண்டு. பீஃப் பிரியாணி மட்டும்தான் கிடைக்கும். 2 மணிக்குள்ள போகணும் இல்லன்னா கிடைக்காது என்றார். ஒருநாள் பார்த்து  போய் வாங்கிவந்தேன். சாப்பிட்டபிறகு பெரிய ஏமாற்றம். கறி வேகவில்லை. மிகவும் காய்ந்துபோய் இருந்தது. ஒன்றல்ல இரண்டல்ல மொத்த பீஸ்களும் வேகவில்லை. பல்லில் மாட்டி அவஸ்தையாக இருந்தது. பிறகு வேல்ஸ் நிறுத்தம் அருகே உள்ள பீஃப் பிரியாணி, தட்டுக்கடை பிரியாணி,  வைத்திலிங்கம் சாலை பிரியாணி என எங்குமே என் சுவைக்கு ஒத்துவரவில்லை. 

கிட்டத்தட்ட அப்படியொரு பிரியாணியை என் வாழ்நாளில் ருசிக்கப்போவதில்லை என்ற முடிவுக்கே வந்தநாளில் ஒரு அதிசயம் நடந்தது. பிள்ளைகளுக்கு வெள்ளி, சனி, ஞாயிறுகளில் இசை வகுப்பு, நடன வகுப்புகள் உண்டு வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும். ரயிலடி பக்கம் கனரா வங்கியின் மொட்டைமாடியில் இருந்தது. வகுப்பு முடிந்து திரும்பும்போதெல்லாம் ராதாநகர் ரோட்டில் மாலை ஆறு மணிக்கு ஒரு தள்ளுவண்டிக்கடையில் கூட்டமான கூட்டம் நின்றபடியே பிரியாணி சாப்பிட்டுக்கொண்டிருக்கும் " யார்ரா இவனுங்க நைட்டு நேரத்துல பிரியாணி திங்கிறானுங்க" என்று கடந்துவிடுவேன். ஆனால் வாசனை பட்டையைக் கிளப்பும். அந்தக்கடை திறப்பது மாலை ஆறுமணிக்குதான். அப்போதுதான் நாங்கள் வகுப்புக்குப் போவோம். திரும்பும்போது கூட்டம் அலையடிக்கும். ஒன்பது மணிக்கெல்லாம் கடை காலியாகிவிடும். வண்டியே இருக்காது. ஒவ்வொரு முறை அதைக் கடக்கும்போதும் வாசனை ஈர்த்தாலும் இரவு நேரத்தில் அதுவும் ரோட்டோரக்கடையில் பிரியாணி சாப்பிடுவது எனக்கு ஆரோக்கியமல்ல என்று நினைத்ததால் அதை முயற்சி செய்யவேயில்லை.  

ஒருநாள் ஆர்வம் தாங்கமுடியாமல் வாங்கிவிட்டேன். வீட்டுக்கு வந்து சாப்பிட அமரும்வரை கூட எனக்கு சலிப்பாகத்தான் இருந்தது. ஆனால் பிரித்தவுடன் வந்த வாசனையில் கிறங்கிப்போனேன். சுவைத்தால் எனக்கு நெஞ்சே அடைத்துக்கொண்டது. நான் சிறுவயதில் சாப்பிட்ட அதே சுவையில் அதே தரத்தில் ஒரு பிரியாணி. கறி ஒவ்வொன்றும் அத்தனை பதமாக வெந்திருந்தது. ஒரு பீஸை கையில் எடுத்து அழுத்திப் பார்த்தேன் தேன் கூட்டைப் பிழிவது போல இலகுவாக இருந்தது. இருவிரலில் கறித்துண்டை சுலபமாக பிரிக்க முடியுமானால் அதுதான் வாய்க்கு ஏற்ற பக்குவம். பல்லில் சிக்காது. நிறைய பீஸ்கள் ஒரு பக்கம் என்றால் அதன் சுவை என்னை மெய்மறக்கச் செய்தது. பிள்ளைகளுக்குக் கொடுக்காமல் முக்கால்வாசியை நானே தின்று தீர்த்தேன். அந்த வாசனை, குறிப்பாக பிரியாணியின் சூடு கொஞ்சம் கூட குறையாமல் பார்சல் கட்டித்தந்தார் அந்த பாய். வழக்கமாக பிற க்டைகளில் கண்ணாடி காயிதம், கவர்ச்சி டப்பா, ப்ளாஸ்டிக் பேப்பர் போன்றவற்றில் பார்சல் தருவார்கள். ஆனால் இவர் முதலில் இரண்டு டெப்ளாய்ட் சைஸ் பேப்பரை விரித்து அதன் மேல் ப்ளாஸ்டிக் தாள் வைத்து அதன் மேல் இலையை வைத்து பிரியாணி அண்டாவிலிருந்து மின்னல் வேகத்தில் பிரியாணியை வெட்டிக்கோதி எடுத்து அழகாக மடித்து நூலால் எட்டு சுற்று சுற்றுகிறார். இறுக்கமாக சுற்றப்படும் அந்த நூலினைத்தாண்டி சூடு வெளியே போகாது. குறைந்தது இருபது நிமிடங்கள் அந்த அண்டாவில் இருக்கும் அதே சூட்டோடு இருக்கும். தரமான பீஃப் பிரியாணி விரும்பிகள் தவறவே விடக்கூடாது. மற்ற கடைகளில் இதே பிரியாணி சாப்பிட்டிருந்தால் பல்லில் சிக்கி குச்சி வைத்து குடைந்து கொண்டே இருக்க வேண்டும். ஆனால் இந்தக்கடையில் ஒருநாள் கூட பல்லில் சிக்கி இம்சை கூட்டவில்லை. பேரதிசயம்.

அந்த பாய் இடதுகைக்காரர். பார்சல் கட்டும் வேகமும் நூல் சுற்றும் வேகமும் கூட என்னை மிகவும் கவர்ந்தது. வாரம் ஒருமுறையாவது அவர் கடையில் பிரியாணி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இப்போது தொடர்ந்து நான்காவது நாளாக அங்கே சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறேன். இன்னும் இரண்டுநாளில் சிங்கப்பூர் பயணம் அதற்குப் பிறகு சாப்பிட வாய்க்காது. விமானம் ஏறும் நாள் கூட இங்கே சாப்பிட்டுவிட்டுதான் ஏறலாம் என்றிருக்கிறேன். அந்தளவுக்கு அதன் சுவை என்னை ஈர்த்துவிட்டது. குரோம்பேட்டையில் கண்டெடுத்த முத்து அந்த பாய். ராதாநகர் மெயின் ரோடில் எஸ்பிஐ வங்கிக்கு அருகில் உள்ளது அக்கடை. இதைப் படிக்கும் யாராவது? போய் சுவைத்துப் பார்த்து எனக்கு எழுதுங்கள்.


தொடரும்....


Sunday, December 18, 2022

குரோம்பேட்டை நினைவுகள் - 4

 குரோம்பேட்டை என்றில்லை, சென்னை முழுக்கவே எனக்கு மட்டுமல்லாது பெரும்பாலானவர்களுக்கு தொல்லையாக இருப்பது மாடுகள்தான். அதிலும் குரோம்பேட்டை மாடுகள் விசித்திரமானவை. அவற்றின் உரிமையாளர் யார் எனத் தெரியாது. காலையில் கிளம்பி தெருத்தெருவாக சுற்றி அதன் இடத்திற்கு மாலையில் திரும்பிவிடும். நகர மாடுகள் தங்கள் வாழ்நாளில் மேய்ச்சல் நிலத்தைக் கண்டிருக்குமா என்பது கேள்விக்குறிதான். எங்கள் வீட்டு ஓனர் கூட மாடு வளர்க்கிறார். என் வீட்டுக்கு பின்புறத்தில்தான் அவர் வீடும் இருக்கிறது ஆனால் அந்த மாடுகளை ஓரிரு முறைதான் நான் கண்டிருக்கிறேன். அவ்வளவு ரகசியமாக ஒரு கொட்டகைக்குள் வாழ்ந்து வருகிறது. அதற்கு தீனி வைக்கோல் கொஞ்சம்தான், மீதியெல்லாமே மார்கெட்களில் வீசப்படும் காய்கறிக்கழிவுகள்தான், முட்டைக்கோஸ், காலிப்ளவர் இலைகள், கத்திரிக்காய், காரட், பழுத்த வாழை இலைகள் மற்றும் அன்றைய தேதிக்கு அதிக விளைச்சளால் மார்கெட் வரை வந்து வீணாய் போன அத்தனை காய்கறிகளும் மாடுகளுக்குதான் போய் சேருகிறது. மிக நிச்சயமாக நான் சொல்வேன், அந்தப் பசுக்கள் பசும்புல்லை தின்றிருக்க வாய்ப்பில்லை. எங்கே இருக்கிறது நிலம்? 

தெருக்களில் சுற்றித்திரியும் பசுமாடுகள் வேறொரு ரகம். நகர மனிதர்களுடனே வாழ்ந்து சலித்துப் போன மிருகங்கள் அவை. தனது வழக்கமான உணவு முறையிலிருந்து தள்ளிப்போன ஒரு உணவுமுறைக்கு வந்த பின்னர் உருவான இந்தப் பசுக்களுக்கு எருமை குணம் அல்லது அதற்கு மேலும் கூட பொறுமை வந்திருக்கிறது. விட்டேத்தியாக அதுபாட்டுக்கு சாலையில் நின்று வெகுநேரம் எதாவது யோசித்துக்கொண்டிருக்கும், அப்படியே நடுரோட்டில் அமர்ந்து அமைதியான முறையில் தர்ணா செய்யும். எருமைகள்தான் இவ்விதம் சேட்டை செய்யும். மெதுவாக ஊர்ந்து வந்துகொண்டே இருக்கும் திடிரென அதன் மூளையில் ஏதோ யோசனை வர சட்டென்று சாலையில் நின்றபடி யோசித்துக்கொண்டே இருக்கும். சீக்கிரத்தில் நகராது. இந்தப் பண்புகளை பசுக்களும் வரித்துக்கொண்டது. அதிலும் குரோம்பேட்டை பசுக்கள் எருமைகளை விட ஒருபடி மேலே போய் நாள் முழுக்க சாலையில் கணித சூத்திரத்தை மனனம் செய்யும் பள்ளி மாணவனைப் போல நின்றுகொள்ளும்.  எளிதில் நகராது. 

பசுக்களின் அடுத்த பிரச்சினை அதன் சாணம்தான். எங்கள் வீட்டில் நாங்களும் பசு வளர்த்திருக்கிறோம்  சாணம் வரிவரியாக உலர்ந்துபோய் புட்டு பதத்தில் இருக்கும். இரு கைகளையும் தரையோடு சேர்த்தால் அடியில் வாரி எடுத்தால் கொஞ்சம் கூட கையில் சாணம் ஒட்டாது. கையைத் தட்டிவிட்டு போய்விடலாம். ஆனால் இந்த குரோம்பேட்டை மாடுகள் போடும் சாணத்தை சாணம் என்று சொல்வது அதிகம். அது எந்த பதத்தில் இருக்கும் என்றால் சினிமா போஸ்டர்கள் ஒட்ட ஒரு பசை செய்வார்களே அதுபோன்ற பதத்தில் இருக்கும். அல்லது வெண்டைக்காயை விளக்கெண்ணை விட்டு மிக்சியில் அடித்தாற்போல ஒரு பதம். வேகமாக பைக்கில் போய்க்கொண்டிருக்கும்போது சரியாக ப்ரெஷ் சாணியில் டயர் படும்படி ஒரு ப்ரேக் அடித்தீர்கள் என்றால் எலும்பு டாக்டரிடம்தான் கண்விழிக்க நேரிடும். அத்தனை ஆபத்தான விஷயம் அது. எருமைகள் போடும் சாணியோ எப்போதும் ஒரே ரகம்தான். அது மோர் விட்டுக் கரைத்த கம்மங்கூழ் பதத்தில் இருக்கும், இன்னும் சரியாக சொல்வதென்றால் ஓட்டல்களில் ரவா தோசை செய்வதை பார்த்திருக்கிறீர்களா? அப்படியே ரவைக் கரைசலை தோசைக்கல் மேல் தெளிப்பார்கள் அப்படிதான் எருமையும் சாலையில் சாணமிடும்.

நான் ஒரு ஏழெட்டு முறை சாணத்தில் கால் வைத்திருக்கிறேன். என் புத்திக்கு எட்டியவரை சாணம் பச்சை நிறத்தில் இருக்கும் என்று மூளையில் பதிந்திருப்பதால் மணல்மேடு போல சாணமிடும் பசுக்களிடம் ஏமாந்துபோகிறேன். பார்ப்பதற்கு மண்குவியல் போல இருக்கும். மண்தானே என்று காலை வைத்தால் இழுத்து விடும். செருப்பில் ஒட்டிய சாணி எளிதில் போகாது. பெவிகால் போல ஒட்டி விடும். சாணியில் கால்வைத்த அடுத்த நொடியே கழுவ ஆரம்பித்தால் கூட சுத்தமாக அரைமணிக்கூர் ஆகும் . நீரில்லாத பகுதியில் மாட்டுனீர்கள் என்றால் அந்த சாணி செருப்பு பிய்ந்துபோகும் வரை கூட இருப்பதற்கு சாத்தியம் உண்டு. பசை அப்படிப்பட்டது.

ஏன் இப்படி என்ற ஆராய்ச்சியில் இறங்கியபோது எனக்குக் கிடைத்த தகவல்கள் ஆச்சரியமானவை. சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் ஓரளவுக்கு வசதி படைத்தவர்கள் தங்களுக்கு அரசால் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் அரிசி, கோதுமையை ஊர வைத்து மாடுகளுக்கு கொடுக்கிறார்கள். மாடுகளும் தங்களுக்குள் வீடுகளைப் பிரித்துக்கொண்டதுபோல மிகச்சரியாக தினசரி அந்த நேரத்தில் போய் வாசலில் நிற்கும். அவர்களும் ஊரவைத்த அரிசியையோ, கோதுமையையோ ஓட்டை குண்டானி வைத்துவிடுவார்கள் மாடுகளும் தரையில் பாதி வாயில் மீதி என தின்றுவிட்டு அந்த குண்டானை தெருவில் உருட்டிவிட்டு சென்றுவிடும். எவனாவது அதில் மோதி விழுவான். மக்கள் மாடுகளுக்கு நன்மை செய்வதாகவும் அதற்கு உணவிடுவதாகவும் நினைத்துக்கொண்டு இச்செயல்களில் மனமுவந்து செய்கிறார்கள். இவைதான் சாணத்தின் பசைத்தன்மைக்கு முக்கிய காரணம். அதிலும் ஊறவைத்த கோதுமையைத் தின்ற மாடுகளில் சாணத்தை மிதிப்பவர்களின் கோணல் முகத்தை நீங்கள் நேரில் பார்த்தால் உணர்வீர்கள்.

எல்லாமே வேகத்தில் நடக்கும் சென்னை போன்ற நகரங்களில் அமாவாசை தினத்தன்று விரதம் இருந்து படைத்து சாப்பிட்டுச் செல்ல நேரமிருப்பதில்லை. அக்குற்ற உணர்ச்சியை போக்கும் விதமாக யாரோ ஒரு அகத்திக்கீரை வியாபாரிதான் இப்புரளியைக் கிளப்பி விட்டிருக்க வேண்டும். அமாவாசை தினத்தன்று காய்கறிக்கடையில் ஒரு அகத்திக்கீரையை பைக்கில் அமர்ந்தவாறே வலதுகையால் காசு கொடுத்து வாங்கி அப்படியே அதை இடது கையால் மாட்டின் வாயில் திணித்துவிட்டு முறுக்கிக் கிளம்பி விடுவார்கள். விரதம் இருக்காமல் போன பாவத்தை அகத்திக்கீரைகட்டை மாட்டுக்கு கொடுத்ததன் மூலமாக சரிசெய்து விடலாமாம். அமாவாசை தினங்களில் எல்லா காய்கறிக்கடை முன்பும் வரிசையாக மாடுகள் நிற்கும். எருமைக்கு கொடுக்க மாட்டார்கள். பசுக்கு மட்டும்தான். அதுதான் புனிதமாச்சே.

அடுத்த ஒருமணி நேரத்தில் சாலை முழுக்க பச்சை பெயிண்ட் ஊற்றியது போல அகத்திக்கீரை சாணி நிறைந்திருக்கும். 

தொடரும்...

Saturday, December 17, 2022

குரோம்பேட்டை நினைவுகள் - 3

 சிங்கப்பூரில் பொதுமுடக்கம் திறந்த பிறகும் கூட விமானங்கள் இயங்கவில்லை. இந்திய அரசு வெளியேற விரும்பும், வெளியேறியே ஆக வேண்டிய இந்தியர்களை வரவழைக்கும் பொருட்டு சிறப்பு விமானங்களை இயக்கினார்கள். தூதரகத்தில் பதிவு செய்து காத்திருக்க வேண்டும். என் வேலைக்கான ஒப்பந்தகாலம் முடிந்து அடுத்த வேலை தேடிக்கொண்டிருக்கும்போதுதான் இந்தக் கொரோனா சனியன் வந்தது. வேறு வேலை தேடுவது அத்தனை சுலபமாயில்லை. வேலை கிடைத்தும் கூட அரசு புதிய வேலைக்கான ஒப்பந்த காலங்களை அனுமதிக்கவில்லை. எங்கும் நிலைமை அதுவே. முதல் அலையின் போது வேலைக்கான அனுமதிக்காலம் முடிந்தவர்கள், நிறுவனம் மாறுபவர்கள் எல்லோரும் சிரமப்பட்டார்கள். பிள்ளைகளின் படிப்பு, வீடு, பொருட்கள், நண்பர்கள், புத்தகங்கள், அழியாத நினைவுகள் என அப்படியே விட்டு விட்டு வரவேண்டிய சூழல் வந்தது. இப்படியொரு நிலை வரும் என என் கனவில் கூட நினைக்கவில்லை. சிங்கையில் இருந்தபோது சேகரமான நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை ஒரு சலூன் கடை நண்பரிடம் கொடுத்துவிட்டு வந்தேன். அவர் ஒரு இலக்கிய வாசகர். அவரிடம் இருப்பதுதான் சரி.

சிறுவயதில் என்னை பாதித்த பிரச்சினைகளில் ஒன்று, வேலை இடமாற்றம். அப்பாவுக்கு அரசு வேலை. அவர் எங்கெங்கு பணியாற்றுகிறாரோ அந்த ஊர்களில் இருப்போம். என்னைப்போல அரசு ஊழியர்களின் பிள்ளைகள் இதை எதிர்கொண்டிருப்பார்கள். ஒரு புதிய ஊருக்கு வந்து புதிய தெருவில் நுழைந்து, புதிய வீட்டில், புதிய பள்ளியில், புதிய நண்பர்களின் மத்தியில், என எல்லாமே புதிய விஷயங்களாக இருக்கும். அதைப்போலவே பழைய ஊரின் ஏக்கம், நண்பர்கள் என நினைவில் வருத்தும். இப்படி புதிய இடத்தில் பழகி, கலந்து வேறூன்றி இதுதான் நமக்கான ஊர் இங்கேயே இருக்கலாம் என்று இருக்கும்போது மறுபடி ஒரு மாற்றல் வரும். 

அப்படி ஒருமுறை சிங்காரப்பேட்டை என்ற ஊரில் குடியிருந்தோம். சிங்காரப்பேட்டை திருவண்ணாமலையில் இருந்து 55 கிமீட்டரில் ஊத்தங்கரை என்ற ஊருக்கு அருகில் உள்ள சிறிய ஊர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டமாக இருந்தது. அப்போது எனக்கு வயது 7 வயது இருக்கலாம். இரண்டோ மூன்றோ படித்துக்கொண்டிருந்தேன். அதற்கு முன்பு திண்டிவனத்தில் இருந்தோம். அந்த வேலை மாற்றலாகி சிங்காரப்பேட்டை வந்தோம். எனக்கு வயது குறைவாக இருந்ததால் எந்த மாற்றமும் பாதிக்கவில்லை. ஆனால் அண்ணனும் அக்காவும் 12 வயது தாண்டியவர்கள் குறிப்பாக அம்மாவுக்கு இந்த இடமாற்றங்கள் தந்த தொந்தரவுகள் ஏராளம். தட்டுமுட்டு சாமான்களை மூட்டை கட்டி எங்கள் நால்வரையும் சமாளித்து ஒவ்வொரு ஊராக அலைகழிந்த அவரது உழைப்பு சொல்லிமாளாது. எந்த ஊருக்கு சென்றாலும் கூட அந்த ஊரில் ஒரு குடும்பம் நெருக்கமான நட்பாகிவிடும். உயிரையே கொடுக்கும் அளவுக்கு அந்த நட்பில் இருக்கும் அப்படி ஒரு பிணைப்பு உருவாகும்போதுதான் அந்த ஊரை விட்டு வெளியேறும் சூழல் உண்டாகிவிடும். 

சிங்காரப்பேட்டையில் முதலில் நாங்கள் குடிபுகுந்த வீடு ஒரு கூரை வீடு. நவாப்களின் கோட்டை நகரமாக திப்பு காலத்தில் இருந்த நகரம். இப்போது இடிபாடுகளுக்கு இடையில் இருக்கும் சிதிலமடைந்த கோட்டைக்கு அருகில் இருந்தது. பெரிய சதுர வீடு உள்ளே ஒரு ஆளுயர தடுப்பு சுவர் அந்தபக்கம் உடைகள் மாற்றலாம். படுக்கை எல்லாம் ஹாலில்தான். நாங்கள் ஆறுபேர் வரிசையாக படுத்திருப்போம். வெளியே மண் அடுப்பு. இடதுபுறம் தென்னையோலை மறைப்பில் குளியலறை. அந்த வீட்டின் உரிமையாளர் ஒரு இஸ்லாமியர். பொதுவாகவே சென்னைக்கு கிழக்கே போகப் போக இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகம். அவர் மிக இனிமையானவர். அவர் மேல் எப்போதும் அத்தர் வாசம் வீசிக்கொண்டே இருக்கும். சொந்தமாக விவசாய நிலங்கள் இருந்தது. அவர் விவசாயம், ஆடு, மாடு வளர்த்து வந்தார்.  எங்கள் கூரை வீட்டிற்கு எதிரில் இருந்த இன்னொரு கூரை வீடு அவர்களுடையது. அப்பாவின் அன்றைய வருமானத்தில் அப்படி ஒரு வீட்டில்தான் இருக்க முடிந்தது. 


அவருக்கு அப்போது ஐந்து பிள்ளைகள், மற்றும் பாய்விட்டம்மா வயிற்றில் ஒன்று. எங்கள் வீட்டில் நான்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கும். மெல்ல மெல்ல பாய்வீட்டம்மாவுக்கும் எங்கள் அம்மாவுக்கும் ஒரு நட்பு உருவானது. அது எப்படிப்பட்ட நட்பு என்றால் முப்பது ஆண்டுகள் கழிந்தும் கூட இன்றும் தொடரக்கூடிய நட்பாக இருக்கிறது. அந்த ஊரில் நாங்கள் இருந்தது இரண்டரை ஆண்டுகள்தான். ஆனால் இன்னமும் அவர்களுடனான நட்பு தொடர்கிறது. ஜீவனக்கஷ்ட காலங்களில் எங்கள் குடும்பத்துக்கு எவ்வளவோ உதவியிருக்கிறது அக்குடும்பம். பாய் கடுமையான உழைப்பாளி, அந்த ஊருக்கு சென்ற புதிதில் பாஷை ரொம்ப வித்தியாசமாக இருந்தது. பொதுவாகவே கிருஷ்ணகிரி மாவட்டத்து வட்டார வழக்கு வித்தியாசம், இவர்கள் உருது கலந்து பேசியது இன்னும் குழப்பமாக இருந்தது. அவர் வயல் உழும்போது கூட உதவிக்கு செல்வோம். அப்போது மோட்டர்கள் இல்லை, கமளத்தில்தான் தண்ணீர் இறைப்பார். கமளத்தில் தண்ணீர் இறைப்பது கொண்டாட்டமாக இருக்கும். இந்தகாலத்தில் கமள இறைப்பு பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். பொழுதுகள் மிக இனிமையாக பொறுமையாக நகர்ந்த காலம் அவை.

நாங்கள் அந்த ஊரில் இருந்தவரை அவருக்கு ஆறு குழந்தைகள். பிறகு இரண்டு என மொத்தம் எட்டு பிள்ளைகள். எல்லா நல்ல/கெட்ட காரியங்களுக்கு அவர்களும், நாங்களும் தவறாமல் கலந்துகொள்வதுண்டு. அக்காவின் திருமணம், அண்ணனின் திருமணம், புதுவீடு புகுவிழா, என எல்லாவற்றிலும் கலந்துகொள்வோம். இதில் என்ன சிக்கல் என்றால் எங்கள் தரப்பில் அப்பாவும், அவர்கள் தரப்பில் பாய் மட்டுமே கலந்துகொள்வார்கள். எனக்கு அந்த ஊரை அக்குடும்பத்தை பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் மனதில் அடியாழத்தில் இருந்துகொண்டே இருந்தது. முப்பது வருடம் கழித்துகூட நிறைவேறவில்லை. சென்ற வாரத்தில் ஒருநாள் ஒரு அழைப்பு வந்தது. முகநூலில் தேடி என்னைக்கண்டுபிடித்து ஒருவர் அழைத்திருந்தார். அவர் அண்ணா பல்கலையில் வேதியியல் பிரிவில் ஆராய்ச்சி மாணவர், முனைவர் பட்டம் பெறும் முயற்சியில் இருந்தார். பர்கதுல்லா. எனக்கு சுத்தமாக நினைவில்லை. அவரே சொன்னார். "நீங்க அந்த ஊர்ல இருந்து போகும்போது நான் கைக்குழந்தை, அம்மா உங்க குடும்பத்தை சொல்லி சொல்லி வளர்த்தார். எப்போதும் உங்கள் நால்வரையும் காணவேண்டும் என்ற ஏக்கம் எனக்கு இருந்தது. இவ்வளவு காலமும் கைகூடவில்லை. நான் உங்களைப் பார்க்க வரலாமா? என்றார்.

கண்டிப்பாக வரவேண்டும் என்றேன். அன்று மாலையே வந்திருந்தார். மிகச்சிறு பிராயத்தில்தான் நாங்கள் பார்த்திருக்கிறோம். பார்த்த நினைவே எனக்கு இல்லை, அவருக்கு வாய்ப்பே இல்லை ஆறு மாதக்குழந்தை. எது எங்களை இன்று சந்திக்க வைத்தது? எங்கள் குடும்பத்தில் அம்மாவும், அவர்கள் குடும்பத்தில் அவர் அம்மாவும் இரு குடும்பங்களுக்கிடையிலான நட்பை சொல்லி வளர்த்திருக்கிறார்கள். மதவெறி அரசியல் நடந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் இதுபோல ஆயிரக்கணக்கான நெகிழ்ச்சியுரும் கதைகள் ஏராளம் உண்டு இம்மண்ணில். இவருக்குப் பிறகு பிறந்த மூன்றுமே ஆண்பிள்ளைகள், ஒருவர் மிருகவைத்தியர், ஒருவர் வணிகமேலான்மை, கடைசித்தம்பியும் உயர்வகுப்பு படித்திருக்கிறார். ஏராளமாக பேசி விடைபெற்றோம். தலைமுறை தாண்டி தொடரும் இந்த நட்பு.


தொடரும்....

குரோம்பேட்டை நினைவுகள் - 2

 டிசம்பர் பத்து 2020 ஆம் ஆண்டு குரோம்பேட்டை கன்னிகோயில் தெருவில் உள்ள 18அ என்னும் வீட்டில் குடிபுகுந்தேன். வீட்டின் உரிமையாளர்கள் வயதான தம்பதியினர். அந்த தாத்தா மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். பதினெட்டு பூர்த்தியாகும் முன்பே இங்கே கப்பலில் வந்திறங்கியவர். அப்போது வனாந்திரமாக கிடந்த குரோம்பேட்டையில் விவசாயம் செய்து வந்திருக்கிறார். கூடவே மாடு வளர்ப்பு. பால் வியாபாரம். அந்த காலத்தில் வாங்கிய இடம், இப்போதைய மதிப்பு சில கோடிகள். அவர் என்னிடம் சொல்லி சொல்லி மாய்ந்துபோகும் ஒரு விஷயம். எண்பதுகளின் இறுதியில் திருமண காரியம் ஒன்றுக்காக இப்போதிருக்கும் துரைப்பாக்கம் 200 அடி ரோடில் ஒரு ஏக்கர் நிலத்தை விற்றிருக்கிறார். அப்போதைய தேவை சில ஆயிரங்கள். அந்த நிலத்தின் இப்போதைய மதிப்பு 20 கோடிகள். நிலம் இவ்வளவு விலை போகுமென்று அவர் அறிந்திருக்கவில்லை. அந்த இடத்தில் பிரம்மாண்டமான கட்டிடத்தில் ஐடி நிறுவனம் இப்போது இருக்கிறது. 

குரோம்பேட்டை எனக்குப் பழக்கமான இடம்தான். ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு இதுவே எனக்கு புத்தம் புதிய இடமாக இருக்கிறது. வேலாயுதம் தெருவிலிருந்து பின் பக்க பெரிய சாக்கடையைத் தாண்டிச் சென்றால் ரயில்வே க்ராசிங் வரும். சரவணா ஸ்டோர்ஸ் இருக்கிறதே அந்த வழி. ரயில்வே லைனை ஒட்டியே சென்றால் கடைசியில் பல்லாவரம் பாலம், வலது புறம் திரும்பி ஓடிக்கொண்டே இருந்தால்  கிட்டத்தட்ட பள்ளிக்கரணை வரை ஏரிகள்தான். அத்தனை ஏரிகளும் இப்போது பெரும் குட்டைகள்.  அதுவும் பாலம் தாண்டி வந்தால் வலப்புறம் முழுக்க குப்பைகள் கொட்டி சமதளமாக்கி வீடுகள் கட்டி விட்டார்கள். 200 அடி ரோட்டுக்காக ஏரிகளை இரண்டாக பிளந்ததில் ஏரிகள் குட்டைகள் ஆயின. பிறகு குப்பைகளைக் கொட்டி அதை சமதளமாக்கிவிட்டார்கள். இரண்டு புறமும் பெரிய அடுக்குமாடி கட்டிடங்கள் வந்துவிட்டது. கோடிகளில் வீடு. முன்பு இந்த சாலையில்தான் ஜாகிங் ஓடுவேன். சிறிய சாலை. மரம் அறுப்பு பட்டறைகள், பழைய பொருட்களின் குடோன்கள் என இருந்த இடம் இப்போது இல்லை. வளர்ச்சி.

குரோம்பேட்டை வந்த புதிதில் எங்கு பார்த்தாலும் ரஜினி பட போஸ்டர்களே நீக்கமற நிறைந்திருந்தது. அப்போது அவர் அரசியல் ரேசில் இருந்தார். தாம்பரம் நுழைந்ததும் ஜிஎஸ்டி ரோடு நகரைக் கிழித்தபடி செல்லும் அப்படி செல்லும்போது சிட்லபாக்கத்திற்கு அடுத்த நிறுத்தம் குரோம்பேட்டை.  பொதுவாக குரோம்பேட்டை என்பது வலது புறம் ராதா நகர், வலது புறம் ரேலா மருத்துவமனை, பாலாஜி மருத்துவக்கல்லூரி அடங்கிய பகுதி. ராதா நகர் மெயின் ரோட்டிலிருந்து எங்கும் வளையாமல் ஒரு கிமீ தாண்டினால் கன்னிகோயில் தெரு. ஜிஎஸ்டி சாலையில் இருந்து வந்தால் பல்லாவரம் பாலத்தில் வலது திரும்பி வேல்ஸ் கல்லூரியில் இன்னொரு வலது எடுத்தால் கன்னிகோயில் தெரு. இந்த சுற்றுவட்டாரத்தில் எங்கு பார்த்தாலுமே ரஜினி முதல்வராக வேண்டும் என்ற போஸ்டர்கள் பில்லியன் கணக்கில் ஒட்டப்பட்டிருந்தன. அப்போதை குரோம்பேட்டை மாடுகளும், எருமைகளும் கொழுத்திருந்தன. தினமும் புதிது புதிதாக போஸ்டர்கள். நான் வழக்கமாக படவேட்டம்மன் கோயில் எதிரில் உள்ள டீக்கடையில் டீ குடிப்பதுண்டு. அங்கே எதிரே குப்பை கொட்டும் இடத்திற்கு அருகில் உள்ள சுவர்களில்தான் போஸ்டர்கள் ஒட்டுவார்கள். தினம் புதிது புதிதாக போஸ்டார் ஒட்டியிருப்பார்கள். தினமும் வெவ்வேறு வாசகங்கள் இடம்பெற்றிருக்கும். அடிப்படை ஒன்றுதான் ரஜினிதான் தமிழகத்தின் அடுத்த முதல்வர். 

அரசியல் புரிதல் ஓரளவுக்கு இருந்தபோதிலும் கூட நான் குழம்பிப்போனேன். ரஜினியைத் தவிர எல்லோருமே அவர் முதல்வர் ஆகிவிடுவார் என்றே நம்பினார்கள். நானும் கூட நம்பிவிடலாம் என்ற முடிவுக்கே வந்தேன். காலையில் ஒட்டுவார்கள், கூட்டமாக மாடுகள் வந்து நின்று வாசித்துவிட்டு தின்று செரிக்கும். மறுநாள் புதிய போஸ்டர்கள். டீக்கடைக்காரரிடம் கேட்டேன். "வாய்ப்பில்லங்க" என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டார். அவரே ஒரு ரஜினி ரசிகராம். அப்போது ஸ்டாலின் அவர்கள் சீனிலேயே இல்லை. எடப்பாடியார் கல்லூரி, பள்ளி மாணவர்களின் தேவதூதனாய் இருந்தார். எக்கச்சக்க விடுமுறை, ஆல்பாஸ், தேர்வுகள் இல்லை. எடப்பாடி என்று எழுதத்தெரியாத மாணவருக்கு கூட அவர் தலைவராக இருந்தார். ஒரு வருடம் கழித்து நடந்த தேர்தலில் காட்சிகள் எல்லாம் மாறின. ரஜினி அரசியல் இல்லை என அறிவித்துவிட்டார். அந்த செய்தி குரோம்பேட்டையில் பயங்கரமாக எதிரொலிக்கும் என நான் எதிர்பார்த்தேன். ஆனால் எந்த சுவடும் இல்லாமல் நகரம் அதன் இயல்பில் இருந்தது. அப்போ போஸ்டர் ஒட்டினவன் எல்லாம் யார் கோப்பால்? என்ற கேள்வி குடைய ஆரம்பித்தது. பிறகு வந்த நாட்களில் எடப்பாடியின் செல்வாக்கு குறைந்தது. ஸ்டாலின் அசுர பலம் பெற்று முதல்வரானார். காற்றிழந்த பலூன் போல ஆகியது எடப்பாடி தரப்பு. 

ஒன்று புரிந்துகொண்டது என்னவென்றால், முன்புபோல சினிமாக்காரர்கள் அரசாள முடியாது. அப்போதை உலகம் வேறு. அவர்களின் அந்தரங்கம் அந்தரங்கமாக இருந்தபோது அவர்களைப் பற்றிய செய்திகள் வெளியுலகை அடையும் முன்பே பெரிய இடத்திம் அமர்ந்திருப்பார்கள். ஆனால் இப்போதைய காலம் அப்படியல்ல, தீயை விட வேகமாக தகவர் பரவும் காலம். அதுவும் வதந்தி காட்டுத்தீ போல பரவும் தன்மையுடது. நடிகர்களால் கடவுள் அவதாரம் எடுக்க முடியாது. எம்ஜிஆரோடு முடிந்த விஷயம் அது. வெளிப்புறம் பார்க்க ரஜினி கோமாளி போலத் தெரிந்தாலும் உள்ளுக்குள் தன்னைப் பற்றி உணர்ந்திருப்பதால் அவருக்கு நேர இருந்த பெரும் சேதத்தை தவிர்க்க உதவியது. கமலுக்கு அப்படி அல்ல அவர் பெரும் குழப்பவாதி. 


தொடரும்; 


Friday, December 16, 2022

குரோம்பேட்டை நினைவுகள் - 1

 குடும்பமாக குரோம்பேட்டைக்கு குடிவந்து இந்த மாதத்தோடு இரண்டு வருடங்கள் பூர்த்தியாகிறது.  திடிரென ஒரு இடமாற்றம் பெற்றவர்களையும் பிள்ளைகளையும் எந்தளவுக்கு பாதிக்கும் என அரசு ஊழியர்களின் பிள்ளைகள் நன்கறிவர். நானும் அதைப்போன்ற ஒரு பிள்ளைதான். ஒரு பள்ளியில் பயின்று நல்ல நண்பர்களை சம்பாதித்திருப்பேன். ஊரின் அத்தனை சந்து பொந்துகளும் சுற்றியிருப்பேன். அகன்ற கிணறுகளில் குளித்துக் களித்திருப்பேன், பள்ளித்தோழிகளின் வீடுகள், சினிமா அரங்கம், அக்கம் பக்கம் வீடுகளுடனான உறவுகள் என எல்லாவற்றையும் மாற்றி எழுதிப் போட்டுவிடும் அப்பா கொண்டு வரும் மாற்றல் கடிதம். பெட்டி படுக்கைகளுடன் அம்மக்களிடம் இருந்து விடைபெற்று புதிய ஊருக்குப் போவோம். இப்படி என் பால்யத்தில் வேறூன்ற் போகும் சமயத்தில் பிடுங்கி வேறொரு இடத்தில் நடப்பட்டிருக்கிறேன். ஒரு சிறுவனாக என் பார்வையில் தோன்றும் அதே பிரிவுகள் அம்மாவுக்கும் உண்டு, அப்பாவுக்கும் உண்டு. எல்லோருக்குமே சங்கடம் அளிக்கும் விஷயம்தான் அது.

அவ்வகையில் குரோம்பேட்டைக்கு முன்பு சிங்கப்பூரில் குடியிருந்தோம். பத்து வருடங்கள். என் அப்பாவுக்கு விதிக்கப்பட்ட அதே வாழ்க்கை அமைப்புதான், நிலம் மட்டும் வேறு. அவருக்கு என்ன விதிக்கப்பட்டிருந்தது? கைக்கும் வாய்க்குமான ஊதியம். அதற்குள்ளே வாழ்க்கை. அவர் பெரிதாக ஒன்றுக்கும் ஆசைகொள்ளாதவர். அவரைப் போலவே எனக்கும் அமைந்தது குணம். வாழ்க்கையும் கூட. ஆனால் கொண்டாட்டங்களுக்கும் மகிழ்ச்சிக்கும் குறையில்லாத வாழ்க்கை. பிறகு அங்கிருந்து வரும் சூழல் உருவானபோது எனக்குள் ஏற்பட்ட துயரம் சொல்லி மாளாது. நான் குடியிருந்த அத்தெருவை நேசித்தேன். அம்மனிதர்கள் எனக்கு மனதிற்கினிய மனிதர்களானார்கள். அத்தெருக் கடைகளில் பணிபுரிந்த பல்வேறு நாட்டவர்கள் நெருங்கிய நண்பர்கள். நடைபாதை, மரங்கள், புறாக்கள், பூனைகள், அப்பகுதிக்கே உரிய உணவுகள், பிள்ளையின் புதிய நட்பு. அப்போதுதான் பக்கத்து வீட்டு சிறுமியுடன் அவனுக்கு நட்பு உண்டானது. இவை எல்லாவற்றையும் பிரியும் சோகம் ஒரே நிலத்தில் வாழ்பவர்களுக்கு புரியுமா என்று தெரியவில்லை. 

இப்படிதான் நான் அங்கிருந்து குரோம்பேட்டை வந்து சேர்ந்தேன். குரோம்பேட்டை எனக்கு ஒன்றும் புதிதல்ல. இங்கு நான் ஏற்கனவே குடியிருந்திருக்கிறேன். ஆனால் அப்போது நான் பேச்சிலர். அதிகமல்ல, இடையில் பதினொரு ஆண்டுகள்தான் கடந்திருக்கின்றன. இந்த இடைவெளியில் என் வாழ்வில் என்னவொரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என எண்ணிப்பார்க்க உதவியது குரோம்பேட்டையின் மீள்வரவு. அப்போது ஐந்தாறு பேர்கள் ஒரு வீடெடுத்து ராதாநகர் வேலாயுதம் தெருவில் குடியிருந்தோம். முப்பதுக்கும் அதிகமான ஜன்னல் கதவுகள் வைத்த பழங்காலத்து வீடு. மழை வந்தால் ஜன்னல் சாத்துவதற்கே நேரம் போதாது. தரையில் அமர்ந்தபடியே கழுத்தை நீட்டாமல் தெருவில் என்ன நடக்கிறது என்பதை ஜன்னல் வழியாக காண முடியும். அந்தளவுக்கு ஜன்னலை இறக்கி வைத்திருப்பார்கள். இரண்டு படுக்கை கொண்ட அந்த வீட்டில் குறைந்த 70 ஜன்னல்களும் இரண்டு கதவுகளும் உண்டு.  கு.பே வந்த பிறகு மீண்டும் அந்த தெருவுக்கு சென்று பார்த்தேன். வீடுகள் முற்றிலும் மாறியிருக்கின்றன. அப்போதே புதிய வீடுகள் போலிருந்ததை இடித்து அடுக்குமாடி வீடு கட்டியிருக்கிறார்கள். அகலமான சாலை குறுகலாயிருக்கிறது. எவர் வீட்டின் முன்பும் சேர் போட்டு அமர்ந்து ஓய்வெடுக்கிற அமைப்பே இல்லை. காற்று கூட புக முடியாத இரும்பு கேட்களால் மூடியிருக்கிறார்கள். மரங்கள் காணாமல் போயிருந்தது. ஆனால் நான் குடியிருந்த அந்த வீடு மட்டும் அப்படியே இருந்தது. சுண்ணாம்பு கூட அடிக்கவில்லை. வீட்டு உரிமையாளரின் மகன்  மட்டும் வாலிபனாக மாறியிருந்தான். கண்ணாடி போட்டிருந்த அம்மாஞ்சி சிறுவன் உருண்டு திரண்டு நிற்பது ஒன்றுதான் நான் மாற்றமாக நினைவில் கொள்ள விரும்புகிறேன். அந்த வீடும்.

வேலாயுதம் தெருவுக்கு இன்னொரு சிறப்பு உண்டென்றால் அது, எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார் அங்குதான் குடியிருக்கிறார். வரும்காலத்தில் சினிமாவை ஆளப்போகும் ஒரு ஆளுமையாக உருவெடுக்க அனைத்து தகுதிகளும் உடையவர். கு.பே வந்த புதிதில் அவரிடம் இரண்டு புத்தகங்கள் இரவல் வாங்க்கியிருந்தேன். அதைத் திருப்பிக் கொடுக்கும் சாக்கில் மறுபடி வேலாயுதம் தெருவுக்கு சென்று வந்தேன். நாம் வாழ்ந்த ஓரிடத்தைக் காணுவதில் ஒரு மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. புத்தகத்தை திருப்பிக்கொடுப்பது என்பது என் அகராதியிலேயே இல்லாத ஒரு சொல். ஆனால் காலம் எப்படி மாற்றியிருக்கிறது பாருங்கள். லஷ்மியும் நானும் ஆலடிப்பட்டியான் கருப்பட்டி காபி கடையில் சந்திப்பதுதான் வாடிக்கை. நான் டீயும், அவர் காபியும் குடிப்போம். இரண்டுமே நன்றாக இருக்காது. உண்மையில் குரோம்பேட்டையில் நல்ல டீக்கடை இல்லை. சுமாரான டீக்கடை உள்ளது. ஆலடிப்பட்டியான் கருப்பட்டி என்பது வெல்லப்பாகில் பாலைக்கலந்து கொடுப்பார்கள். குடித்த கொஞ்ச நேரத்திலேயே உடல் இனிக்கும். பொதுவாகவே டீ குடிக்க ஏற்ற வேளை என்பது காலை ஐந்து மணி. கடை திறப்பதற்கு முன்பே அங்கே வந்து காத்திருந்து கடைக்காரர் அடுப்பை பற்ற வைத்து முதல் டீதூள் கொதிக்கும் அந்த நேரம் ஒரு வாசனை வரும். அதை முகர்ந்த பிறகு குடிக்கும் டீயே சிறந்த டீ. காத்திருந்து பெறவேண்டும் அதில்தான் ருசி அடங்கியிருக்கிறது. இப்போது அப்படியெல்லாம் குடிக்க சாத்தியமில்லை, எவருக்கும் நேரமில்லை. சொந்த ஊருக்குப் போகும் போது வாயில் பீடி புகை கசிய முக்காடு போட்டுக்கொண்டு முதல் டீக்கு காத்திருக்கும் பெருசுகளை பார்க்க முடிகிறது. கொடுத்து வைத்தவர்கள்.

 இந்த பத்து ப்ளஸ் ஆண்டுகள் என் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது என்பதை மனம் யோசிக்க ஆரம்பித்தது. ரத்த உறவின் மறைவுதான் பேரிடி,  எனக்கு திருமணம் ஆனது, சிங்கப்பூர் சென்றது, பிறகு மனைவியை அழைத்துக்கொண்டது , முதல் குழந்தை, மகிழ்ச்சி க்கொண்டாட்டம், ஒரு நடுத்தர வாழ்வினன் எதிர்கொள்ளும் அனைத்து சிக்கல்களும் எதிர்கொள்ள காலம் பழக்கிக் கொடுத்தது. ஒரு சலிப்பு வரும் அல்லவா, அந்த சலிப்பிலிருந்து நீங்க புத்தகங்களும் நண்பர்களும், குடியிரவு கொண்டாட்டங்களும் துணை வந்து சலிப்பு மேலிடாதவாறு பார்த்துக்கொண்டது. இப்படியாக இரண்டாவது ஒருவன் பிறந்தான். இவன் பிறந்த நேரம் நீ பெரிய உச்சங்களை தொடுவாய் என ஆருடம் சொன்னார்கள். ஆம், வானில் பறந்து உச்சம் தொட்டு குரோம்பேட்டை வந்தடைந்தேன். 

தொடரும்...

Wednesday, October 12, 2022

காக்கையும் குயிலும்

 அப்பா இன்னிக்கு காக்கா கதை சொல்லுப்பா...

சரி சொல்றேன். வழக்கமா காக்கா கதைனாவே, காக்கா வடை திருடுன கதை சொல்வாங்க. அது எல்லாருக்கும் தெரியும். நாம வேற ஒண்ணு சொல்வோம். சரியா?

ஒரு ஊர்ல ஒரு கோயில் இருந்தது. மிகப்பெரிய கோயில். எதோ ஒரு மன்னன் அந்தக்காலத்துல பிரம்மாண்டமா கட்டிட்டு போயிருக்கான். அந்தக்கோயில் வாசல்ல பெரிய கோபுரம், மரத்தால் ஆன கதவுகள் மூணு ஆள் உயரத்துக்கு இருந்தது. முழுக்க கற்களால கட்டியிருக்காங்க. கோபுரம் தாண்டி போகையில இரண்டு பக்கமும் திண்ணை இருக்கும். கல் திண்ணை. அதுல உக்காந்தா குளிர்ச்சியா இருக்கும். அங்க உக்காந்துதான் ஊர்க்கதை பேசுவார்கள் மக்கள். அதைத் தாண்டி போனோம்னா பெரிய விஸ்தாரமான இடம் ஆயிரம் பேர் நிக்கற அளவுக்கு பெரிய இடம். வலதுபக்கம் கோயில் குளம். இடது பக்கம் பூக்கள் நிறைஞ்ச சிறிய தோட்டம். அதைத்தாண்டி போனா மண்டபம். அங்கதான் கல்யாணம் நடக்கும். மண்டபம் முழுக்க கல்தூண்களால் கட்டப்பட்டிருக்கும். மண்டபம் பின்னாடிதான் கோயில் இருக்கும் அதுக்கு உள்ள கருவறை. அங்கதான் தெய்வம் இருக்கும். அந்தக் கோயிலுக்கு இடது புறம் பெரிய மாமரம் இருந்தது.

கோயிலை சுற்றி 12 அடி உயரத்துக்கு சுவர் இருக்கும். கோயில் உள்ளார இருக்கறது மாமரம். அந்த ஊர்லயே அந்த மரம்தான் பெரிய மரம். கோயிலுக்கு அந்தப்பக்கம் மக்கள் குடியிருக்கற தெருக்கள் இருந்தது. அந்தத் தெருவுலயும் ஒரு பெரிய மரம் இருந்தது. அந்த மரத்துல நிறைய காக்காய்கள் குடியிருந்துச்சு. கோயில் கோபுரம்னு சொன்னேன் இல்லயா, அந்த கோபுரத்துல நிறைய புறாக்கள் குடியிருந்துச்சு, வெண்புறா, மணிப்புறா, பழுப்பு நிறப்புறா, தங்க நிறத்துலன்னு அழகழகா நிறைய புறாக்கள். கோயிலுக்கு உள்ள இருந்த மரத்துல குயில்கள், கிளிகள் குடியிருந்துச்சு. 



கோபுரவாசலைத் தாண்டினா நிறைய இடம் இருக்கும்னு சொன்னேன்ல, அங்கதான் சாமி கும்பிட்ட பிறகு மக்கள் அமர்ந்திருப்பாங்க. அப்போ அங்க இருக்கற புறாக்களுக்கு மக்கள் தானியங்கள போடுவாங்க. புறாக்களும் அதை கும்பலா பறந்து வந்து கொத்தி கொத்தி சாப்பிடும். அது சாப்பிடற அழகை மக்களும் குழந்தைகளும் வேடிக்கை பாப்பாங்க. 

அந்த மரத்துல குயில்களும் கிளிகளும் இருந்துச்சு சொன்னேன்ல அதுல கிளிகள் மட்டும் கீழ வந்து தானியங்களை தின்னுமாம். குயில்கள் கீழ வரவே வராதாம். குயில்களுக்கு தான்தான் ரொம்ப அழகு. அதுவுமில்லாம தன்னால மட்டும்தான் அழகா கூவ முடியும். அது பாடல் போல இருக்கும்னு நினைப்பு. அதனால கர்வம் அதிகம். உங்களோட சரிக்கு சமமா சாப்பிட்டா அது எனக்கு கவுரவம் இல்லன்னு நினைக்குமாம்.



கோயில்லும் பின்புறம் உள்ள தெருவில் ஒரு மரம் இருக்கும்னு சொன்னேன்ல அந்த மரத்துப் பேரு புங்கை மரம். நல்ல அடர்த்தியான பெரிய மரம். அதுல எண்ணவே முடியாத அளவுக்கு காகங்கள் இருந்துச்சு. அந்தக் காகங்கள் கோயிலுக்குள்ள தானியம் தின்ன வரும்போதெல்லாம் மாமரத்துக் கிளிகளும் குயில்களும் சத்தம் போட்டு காட்டிக்கொடுக்குமாம். புறாக்கள் எல்லாம் சேர்ந்து காகங்கள கோயிலுக்குள்ள வரமுடியாதபடி விரட்டுமாம். 

காகங்கள் ஒருநாள் புறாக்கள் கிட்ட கேட்டுச்சாம். ஏன் நாங்க கோயிலுக்கு உள்ள வந்து தானியங்கள சாப்பிட விடாம தடுக்கறிங்க?

நீ ரொம்ப கருப்பா, அசிங்கமா இருக்கிங்க, அதுவுமில்லாம நீங்க கத்துனா காது கிழியற மாதிரி கத்தறிங்க, செத்த எலிய சாப்பிடறிங்க, போதாக்குறைக்கு எங்களவிட அதிகமான எண்ணிக்கைல இருக்கிங்க. நீங்க உள்ள வந்தா எங்களுக்கு அவமானம். மக்கள் எங்களோட அழகான தோற்றத்துக்காகவும் குரலுக்காகவும்தான் தானியங்கள் போடறாங்க. உங்களுக்காக இல்ல என்றதாம்.



கருப்பா இருக்கறது நாங்கள் தேர்ந்தெடுக்கறது இல்ல, அது இறைவன் கொடுத்தது. எங்களோட குரல் மோசமா இருக்கலாம் ஆனா நாங்க கத்துறது எங்களோட நண்பர்களை கூப்பிடவும், கிடைத்த உணவை அனைவரும் பகிர்ந்து உண்ணவும்தான் கத்துறோம். அப்படி கத்தும்போது அருகில் இருக்கிற எங்கள் சக காக்கைகள் வந்து உணவு உண்ணும். பகிர்ந்து உண்ணும் பண்பாடு எங்களோட வரம். அப்புறம் செத்த எலிகள நாங்க சாப்பிடலன்னா ஊரே நாறிடும். அந்த வகைல ஊரை சுத்தமா வச்சிக்கறதுல எங்களோட பங்கும் இருக்கு.  உங்கள மாதிரி கர்வம் பிடிச்சி தானே எல்லாத்தையும் அனுபவிக்கணும்னு எங்களுக்குத் தெரியாது என காக்கைகள் சொன்னதாம்.

நீங்க என்ன வேணா சொல்லுங்க, நீங்க கோயிலுக்குள்ள வந்தா சத்தம் போடுவோம். நீங்க வரக்கூடாது என்றதாம் கோயில் புறாக்கள்.

காலம் ஒருநாள் மாறும். அப்போ நாங்களும் கோயிலுக்குள்ள வருவோம் அதுவரைக்கும் காத்திருக்கிறோம் என்றதாம் காக்கைகள்.

சரி கெளம்பு கெளம்பு காத்து வரட்டும் என்று சிரித்ததாம் கிளிகளும், புறாக்களும். இதை மரத்தில் இருந்த குயில் மகிழ்ச்சியோடு பார்த்ததாம்.

காக்கைகள் அவமானத்தோடு தங்களோட புங்கை மரத்துக்கு திரும்புச்சாம்.

கொஞ்சநாள் கழிச்சி மாமரத்துக் குயிலுக்கு முட்டை இடும் காலம் வந்துச்சு. குயில் என்னதான் அழகா இருந்தாலும், அருமையா பாடினாலும் அதுக்கு கூடு கட்டத் தெரியாது. கூடு இருந்தாதான் அடை காக்க முடியும். அவயம் இருந்தாதான் முட்டைகள் பொறிஞ்சி குயில் குஞ்சுகள் வெளிய வரும். கூடு இல்லன்னா எப்படி குஞ்சு வரும். அதனால குயில் என்ன பண்ணுச்சாம் தெரியுமா? 

என்ன பண்ணுச்சு?

புறாக்கள்தாம் நம்ம நண்பர்களாச்சே, அவங்க கூட்டில முட்டை இடலாம்னு போய் அங்க முட்டையிட்டு வந்துடுச்சாம்.

பெண்குயில் ஆண்குயில்கிட்ட சொன்னுச்சாம். நான் புறாவோட கூட்டில் ரெண்டு முட்டையிட்டுட்டு வந்தேன். அது இன்னும் கொஞ்ச நாள்ல குஞ்சு பொரிச்சிடும். நம்ம குடும்பத்து ரெண்டு வாரிசு வரப்போறாங்க என்று மகிழ்ச்சியோடு சொன்னதாம். ஆண்குயிலும் அதக்கேட்டு மகிழ்ச்சியாயிடுச்சி.



ஆனா மறுநாள் குயிலுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்ததாம்.

என்ன அதிர்ச்சி?

புறா தன்னோட கூட்டில் இருந்த குயில் முட்டைகளை மட்டும் காலால தள்ளி விட்டுருச்சி. அதனால முட்டைகள் கீழ விழுந்து உடைஞ்சிடுச்சி.

குயில் முட்டைன்னு புறாவுக்கு எப்படி தெரியும்?

பொதுவா வெவ்வேறு வகை பறவைகளுக்கு வெவ்வேறு நிறத்தில முட்டைகள் இருக்கும். புறாக்களுக்கு வெள்ளையும், காபிபொடியும் கலந்த நிறத்தில் இருக்கும்.  குயில் முட்டைகள் இளநீல நிறத்தில் இருக்கும். இந்த நிறவேறுபாடு காரணமா தன்னோட முட்டை இல்லன்னு கீழ தள்ளி ஒடச்சிடுச்சி.

குயில் வந்து புறாகிட்ட கேட்டுச்சாம். ஏன் முட்டைகளை உடைச்ச?

உன் முட்டைகளை நீயே பொரிச்சுக்க, ஏன் என்கிட்ட குடுக்கற? என்றதாம் புறா

எனக்கு கூடு கட்ட தெரியலன்னுதான் உன்கிட்ட முட்டை வச்சேன். ஆனா நீ கீழ தள்ளி உடைப்பேன்னு எனக்கு தெரியல, அநியாயமா இப்படி உடச்சிட்டியேன்னு அழுதுச்சாம் குயில்.

என்கிட்டயே நாலஞ்சி முட்டை இருக்கு. நீயும் முட்டைய வச்சா அதிகமாயிடும் என் முட்டையால என் முட்டைகள் பொரிக்காம போயிடும் இனிமே நீ வேற எடம் பாத்துக்கன்னு புறா வெறுப்பா சொன்னுச்சாம்.

குயிலும் அழுதுகிட்டே மரத்துக்கு வந்து ஆண் குயில்கிட்ட சொன்னுச்சாம்.

சரி விடு அடுத்த முறை முயற்சி பண்ணலாம்னு சமாதானம் சொன்னுச்சாம் ஆண்குயில்.

இதயெல்லாம் தூரத்துல புங்கை மரத்துலருந்து பாத்துகிட்டுருந்துச்சாம் காக்கை. அந்த காக்கைக்கு ரொம்ப பாவமா இருந்துச்சாம்.

அங்கருந்து பறந்து வந்து குயில்கிட்ட பேச்சு குடுத்ததாம். குயில்களே... நடந்ததை எல்லாம் நான் பார்த்தேன். உங்களுக்கு உதவணும்னு எனக்குத் தோணுது என்றதாம் காக்கை.

எப்படி நீ எங்களுக்கு உதவி செய்வாய்?

அடுத்த முறை உனக்கு முட்டையிடும் பருவம் வந்ததும் நீ புறாவின் கூட்டில் முட்டை வைக்காதே, நேராக எங்கள் கூட்டில் முட்டை வைத்துவிடு. அதை உனக்காக நான் அவயம் காக்கிறேன் என்றதாம் காக்கை.

அதைக்கேட்ட குயில்களுக்கு மனம் இளகியது. என்னதான் நாங்க உங்கள அவமானப்படுத்தினாலும், கோயிலுக்குள்ள விடலன்னாலும், உணவு தர மறுத்தாலும் எனக்காக நீங்க செய்ய நினைக்கிறிங்க, உள்ளத்தால் உயர்ந்தவர்கள் நீங்கன்னு சொன்னுச்சாம் குயில். 

அடுத்த முறை நான் நேராக வந்து உங்கள் கூட்டில் முட்டையிடுகிறேன் சொன்னது குயில்.

இதையெல்லாம் கிளி ஒட்டுக்கேட்டு போய் புறாக்கூட்டத்திடம் சொன்னதாம். புறாக்களுக்கு கோபம் வந்துச்சாம். அந்த அவலட்சண காக்கைகளுடன் நட்பாக இருக்கும் குயிலை திட்டியது. சரியான நேரம் பார்த்து குயில்களை விரட்டணும்னு முடிவு பண்ணுச்சாம்.

அந்த நேரம் பார்த்து அந்த ஊருக்குள்ள ஒரு கிளி ஜோசியன் வந்தான். அவனுக்குத் தொழிலே கிளிய பிடிச்சி பழக்கி அத வச்சு கிளி ஜோசியம் பாக்கறதுதான். அவனிடம் நீண்ட காகம் இருந்த கிளி செத்துப்போனது. புதுக்கிளிய பிடிக்கறதுக்காக வந்திருந்தான். இந்த மாமரத்துல கிளிகள் நிறைய இருக்குன்னு கேள்விபட்டு கோயிலுக்குள் வந்தான். அவனும் மரத்தில் ஏறி கூட்டில் இருந்த சிறிய கிளியை பிடித்தான். உருவத்தில் சிறிய கிளிகளால் சத்தம்தான் போட முடிந்தது. ஜோசியனை விரட்ட முடியவில்லை. கூட்டமாக சேர்ந்து கத்தின. 

இதைப்பார்த்த காக்கைக் கூட்டம் உச்ச குரலெடுத்து கத்தியது. அது கத்தியதும் எங்கிருந்துதான் வந்ததோ தெரியாதது போல ஆயிரமாயிரம் காக்கைகள் வந்து மரத்தில் இருந்த ஜோசியனை தன் கூரிய அலகால் கொத்தியது. வலி பொறுக்க முடியாமல் ஜோசியக்காரன் குஞ்சு கிளியை மரத்திலேயே விட்டுவிட்டு கீழே குதித்து ஓட்டம் பிடித்தான்.

சரியான நேரத்தில் உதவிக்கு வந்த காக்கைகளுக்கு கிளிகள் நன்றி தெரிவித்தன. இனிமேல் நீங்கள் கோயிலுக்கு வரும்போது நாங்கள் கத்த மாட்டோம். நாம் நட்போடு இருப்போம் என்றது கிளிகள். காக்கைகளும் கிளிகளும் நட்பானார்கள்.

கொஞ்ச காலம் கழித்து குயிலுக்கு முட்டையிடும் பருவம் வந்தது. அது நேராக சென்று காக்கையின் கூட்டில் முட்டை வைத்தது. இந்த முட்டைகளை என் முட்டைகள் போல் நினைத்து அவயம் காத்து குஞ்சு பொரித்ததும் உங்களிடம் ஒப்படைப்பேன் என காக்கை வாக்கு கொடுத்தது.



சொன்னது போலவே கொஞ்சநாளில் அழகிய இரு குயில் குஞ்சுகள் முட்டையிலிருந்து வந்தன. அதனை காகம் குயில்களிடம் கொடுத்தது.

குயில் குடும்பம் ஆனந்தத்தில் கூத்தாடியது. நம் குடும்பம் காக்கைகளின் உதவியால் பெருகியது. நாம் என்றென்றைக்கும் காக்கைகளுக்கு நன்றியோடு இருப்போம் என்றது குயில்.

ஆம், காக்கைகள் குணத்தால் நம்மைவிட உயர்ந்தவர்கள் என்றது அங்கிருந்த கிளிகள்.

கோயிலில் மக்கள் பறவைகளுக்கு தானியங்களை வீசும்போதெல்லாம் மாமரத்துக் கிளிகளும் குயில்களும் சப்தமெழுப்பவில்லை. அதனால் காகங்களும் வந்து தானியங்களை மகிழ்ச்சியோடு சாப்பிட்டன.

புறாக்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. பிறகு வேறு வழியில்லாம ஏற்றுக்கொண்டன.

பிறகு வந்த காலங்களில் அக்கோயிலின் தானியங்களை புறாக்களும், காகங்களும், கிளிகளும், குயில்களும் இன்ன பிற பறவைகளும் பகிர்ந்து உண்டு மகிழ்ச்சியோடு வாழ்ந்தன.





Tuesday, October 11, 2022

சுறாக்குடும்பமும் வாட்ச்மேன் ஆமையும்

 இன்னிக்கு என்ன கதை வேணும்?

ஷார்க் கதை?

ஷார்க்னா என்ன?

அதுவா... அது ஒரு பெரிய மீனு.

அப்படியா, ஷார்க்னா தமிழ்ல சுறா என்று அர்த்தம். சுறா மீன். இதோட பற்கள் பயங்கர கூரா இருக்கும். ரொம்ப ஆபத்தான கடல்வாழ் உயிரினம். இந்த மீன வச்சு நிறைய ஹாலிவுட் படங்கள் வந்திருக்கு. நீங்க ரெண்டு பேரும் இன்னும் கொஞ்சம் பெரியவன் ஆனதும் பாக்கலாம்.

சரி ஓகே. இன்னிக்கு கதையோட பேரு வந்து "சுறாமீன் குடும்பமும் வாட்ச்மேன் ஆமையும்"


சுறாமீன் குடும்பமும் வாட்ச்மேன் ஆமையும். 


அது ஒரு பெரிய கடல். நல்ல ஆழமான கடல். ஆழமான கடல்லதான் சுறா மீன் நிறைய இருக்கும். அந்தமாதிரி ஆழமான ஒரு கடலில் ஒரு சுறாமீன் குடும்பம் இருந்தது. அந்த சுறா மீன் குடும்பத்துல புதுசா ரெண்டு சுறாக்குட்டிகள் பிறந்துச்சு. அது ரொம்ப அழகா பயங்கர சுட்டி சுறாக்களா இருந்துச்சு. ஆழமான கடல்ல ஆபத்துகளும் நிறைய இருக்கும் இல்லையா அதனால தன்னோட குட்டிகள பாதுகாக்க ஒரு நல்ல இடம் தேடுச்சாம் பெரிய சுறா. 



அப்படி ஒருநாள் தேடும்போது ஒரு நல்ல இடம் கிடைச்சுதாம். அந்த இடத்துல ஒரு பெரிய போர்க்கப்பல் மூழ்கி இருந்தது. அந்தக்கப்பல் இரண்டாம் உலகப்போர்ல நடந்த சண்டைல மூழ்கிய ஒரு கப்பல். ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி மூழ்கியதால அது ரொம்ப பாழடைஞ்சி இருந்தது.  அந்த பாழடஞ்ச கப்பல்ல ஒரு கண்ணாடி அறை இருந்தது. அது பாக்க நம்ம வீடுகள் இருக்கற மீன் தொட்டி மாதிரி இருந்துச்சு. இந்த இடம் பாதுகாப்பா இருக்கும்னு நினைக்கிறேன்னு அப்பா சுறா சொன்னது. 



ஆமாங்க இந்த இடம் பாதுகாப்பா இருக்கும் என்று அம்மா சுறா சொன்னது. 

அப்போது அந்தக்கப்பலில் இருந்து ஒரு வயதான ஆமை அவர்களை வரவேற்றது.

ஆமையாரே நீங்க இங்கதான் தங்கி இருக்கிங்களா?

ஆமாம், கடந்த ஐம்பது வருஷத்துக்கு மேல் இங்கதான் இருக்கேன்.

ஏன் நீங்க இங்கயே இருக்கிங்க?



என்னை ஒரு சுறா ரொம்ப வருஷத்துக்கு முன்னர் கடித்துவிட்டது. அதனால் பின்புறம் எனக்கு ஒரு கால் இல்லை. அதனால் வேகமாக நீந்த முடியாது. பாதுகாப்பாக இருக்கும் என்று இங்கயே தங்கிட்டேன் என்றது ஆமை.

சுறா இனத்தின் சார்பாக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். என்றது அப்பா சுறா.

மன்னிப்பெல்லாம் வேண்டாம் சுறா. மிக வயதாகிவிட்டதான் முன்பு போல இரை தேடி வெளியில் செல்ல முடிதில்லை என்றது ஆமை.

எங்களுக்கு இரண்டு பிள்ளை சுறாக்கள் உள்ளது. அவை பெரிதாக வளரும் வரை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இடம் தேடி வந்தோம். இந்த கப்பல் பாதுகாப்பாக இருக்கும்போல தோன்றுகிறது. எங்களுக்கு இடம் கொடுப்பீர்களா ஆமையாரே?

இந்தக்கடல் எல்லோருக்கும் சொந்தமானது. தாராளமாக இங்கே தங்கிக்கொள்ளலாம் என்றது ஆமை.

ரொம்ப நன்றி ஆமையாரே. நாங்கள் இரை தேடி வெளியே சென்று திரும்பும் வரை எங்கள் பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுடைய பசியை நாங்கள் போக்குகிறோம் என்றது சுறா.



மகிழ்ச்சி சுறாவே. இன்றிலிருந்து நான் உங்கள் பிள்ளைகளுக்கு வாட்ச்மேன் போல பாதுகாப்பாக இருப்பேன். பத்திரமாக அந்தக்கண்ணாடி அறைக்கும் பிள்ளைகளை விடுங்கள் என்றது ஆமை.

அந்தக்கண்ணாடி அறை இரண்டு சிறிய சுறாக்கள் நீந்தும் அளவுக்கு இடவசதியுடன் இருந்தது. தாழிட ஒரு கதவும் இருக்கிறது. எனவே இது குட்டிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நிம்மதியடைந்தன பெரிய சுறாக்கள்.

உள்ளே மகிழ்ச்சியுடன் நீந்திக் களித்தன சுட்டி சுறாக்கள். 

ஆமையாரே நாங்கள் இருவரும் இரை தேடிச் செல்கிறோம். நீங்கள் எங்கள் பிள்ளைகளை பத்திரமாக பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்று வேண்டியது.

நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் தைரியமாக கிளம்புங்கள் என்றது ஆமை.

இரண்டு பெரிய சுறாக்களும் இரை தேடச்சென்றன. அன்று கடலில் இரை கிடைப்பது பெரிய சாதனையாக இருந்தது. மிக நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந்தது. 

அதேநேரம் இங்கே கப்பலிந் அருகில் வசித்து வந்த கெட்டசுறா ஒரு திட்டம் தீட்டியது. புதிதாக வந்த இந்த குட்டி சுறாக்களை தின்றுவிட திட்டம் போட்டது. 



கப்பலின் அருகே சென்று சுறாக்களை தின்ன முயற்சித்தது. கண்ணாடி அறையினை முட்டிப் பார்த்தது. உறுதியான கண்ணாடி அறையினை அந்த கெட்ட சுறாவால் உடைக்க முடியவில்லை. உள்ளே இருந்த குட்டி சுறாக்கள் பயந்து அழுதன. சத்தம் கேட்டு வெளிய வந்த ஆமை கெட்ட சுறாவினைப் பார்த்து சொன்னது.

"இங்கே இருந்து சென்று விடு", இவை இரண்டும் எனது பாதுகாப்பில் உள்ளது. இவற்றைக் காக்கும் பொறுப்பும் உள்ளது என்னைத் தாண்டிதான் நீ செல்ல வேண்டும் முடிந்தால் செய்து பார் என்றது ஆமை.

கெட்ட சுறா பயங்கரமாக சிரித்தது, நீ பாதுகாப்பா? உனக்கே ஒரு கால் இல்லாம இங்கயே தங்கி இருக்க, இந்தக் கண்ணாடி அறை இல்லன்னா இந்நேரம் நான் இந்தக் குட்டிக்கள தின்னு ஏப்பம் விட்டுருப்பேன். என்றது

முடிஞ்சா செஞ்சி பார் என்றது ஆமை.

கோபம் வந்த கெட்ட சுறா, தூரத்திலிருந்து வேகமாக நீந்தி வந்து கண்ணாடி மீது மோதியது. ஆனால் கண்ணாடி உடையவில்லை. பதிலாக கெட்ட சுறாவின் மூக்குதான் உடைந்து ரத்தம் ஒழுகியது.

உள்ளே இருந்த குட்டி சுறாவும் ஆமையும் அதைப்பார்த்து சிரித்தன.

என்ன பாத்தா உங்களுக்கு சிரிப்பு வருதா, நான் போய் என் தலைவன கூட்டிட்டு வரேன். அவன் வந்த உடனே உங்க சிரிப்பு எங்க போகுது பாருங்க, அவன் வாலால உங்கள அடிச்சி தின்னுடுவான் என்று சொன்னவாறு அங்கிருந்து கிளம்பியது.

போய் யாரவேணாலும் கூட்டிட்டு வா என்று ஆமை நக்கலடித்தது.

இப்படி சொன்னாலும் ஆமைக்கு உள்ளுக்குள் கொஞ்சம் பயம் இருந்தது. இந்த கெட்ட சுறா யாரைக் கூட்டிக்கொண்டு வரும் என்று கணக்குப் போட்டது. கப்பலில் இருந்து கொஞ்ச தூரத்தில் ஒரு பெரிய நீலத்திமிங்கிலம் வசித்து வருகிறது ஒருவேளை அதைக் கூட்டி வந்தால் இந்தக்கப்பலையே புரட்டிப்போடும் பலம் அதற்கு உண்டு. நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்ன செய்யலாம் என யோசித்தது.



இது போர்க்கப்பல் இங்கே வெடிக்காத குண்டுகள் சில இருந்தது நினைவுக்கு வந்தது. கப்பலின் கீழ் அறைக்கு சென்று ஆமை பார்த்தது. அங்கே வெடிக்காத குண்டுகள் நிறைய இருந்தன.  ஆமையின் அளவின் உள்ள ஒரு குண்டை கஷ்டப்பட்டு நகர்த்தி வந்தது. அந்தக்  குண்டின் மேல் ஆமை போலவே படம் வரைந்தது. யாராவது அந்தக் குண்டைப் பார்த்தால் ஆமை என்றே நினைக்கும் அளவுக்கு அந்தக்குண்டு ஆமை வடிவத்தில் இருந்தது.

அந்த ஆமை குண்டை நகர்த்தி வந்து தான் அமரும் இடத்தில் வைத்துவிட்டு கண்ணாடி அறையின் பின்புறம் மறைந்துகொண்டது.

இங்கிருந்து கோபத்தோடு கிளம்பிச்சென்ற கெட்டசுறா நேராக திமிங்கிலத்திடம் சென்று முறையிட்டது. திமிங்கிலமும் பசியோடு இருந்தது. அதனிடம் எனக்கு சுவையான இரண்டு குட்டி சுறாக்கள் இருக்கும் இடம் தெரியும். அதை நான் உங்களுக்கு காட்டுகிறேன். ஆளுக்கு ஒன்றாக சாப்பிடலாம் என்று ஆசை காட்டியது. ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது என்று கொக்கி போட்டது.

என்ன சிக்கல் என்று திமிங்கிலம் கேட்டது.

அந்த குட்டி சுறாக்கள் இரண்டும் கண்ணாடி அறைக்குள் இருக்கிறது. என்னால் உடைக்க முடியவில்லை. நீங்கள் வந்தால் சுலபமாக உடைக்கலாம். அதுவுமில்லாமல் அங்கே கால் உடைந்த ஆமை பாதுகாப்புக்கு இருக்கிறது.

சரி அதற்கென்ன என்றது திமிங்கிலம்.

அந்த ஒரு கால் உடைந்த ஆமை என்னைப் பார்த்து சவால் விட்டது. அதை மீறி குட்டி சுறாவை தின்ன முடியாதாம். 

அப்படியா, அந்த ஆமையை அப்படியே விழுங்கிவிடுகிறேன். வா போகலாம் என்று புறப்பட்டது திமிங்கிலமும் கெட்ட சுறாவும்.

முன்னரே திட்டமிட்டபடி ஒளிந்திருந்த ஆமை. இவை இரண்டும் எதோ திட்டத்தோடு வருகிறது என்று புரிந்துகொண்டது. 

கப்பலின் அருகே வந்த திமிங்கிலத்திடம் "அங்கே ஒண்ணுந்தெரியாத மாதிரி உக்காந்திருக்கான் பார் அவன முதல்ல முழுங்கிடுங்க திமிங்கிலம் சார்" என்றது கெட்டசுறா.

நேராக ஆமை இருக்குமிடம் சென்று அதை ஒரே வாயில் முழுங்கியது திமிங்கிலம்.

என்னமோ சவால் விட்ட? உன் கத இதோட முடிஞ்சி போச்சு ஆமையாரே. இப்ப நாங்க ரெண்டு பேரும் ஆளுக்கொரு சுறாவ சாப்பிடப் போறோம். என்று நக்கலாக சொன்னது கெட்ட சுறா.

அந்த நொடியில் மறைந்திருந்த இடத்தில் இருந்து வெளியே வந்த ஆமை. "உன்னால் ஒருநாளும் என்னை வெல்ல முடியாது" என்றது

கெட்டசுறாவும், திமிங்கிலமும் விழித்தது. இவனத்தான் முழுங்கிட்டோமே எப்படி திரும்ப வந்தான் என இரண்டும் குழப்பமடைந்தது.

"ரொம்ப முழிக்காத, நீ முழுங்குனது என்னையில்ல, அணுகுண்டு முழுங்கியிருக்க, இவன மாதிரி கெட்ட சுறாவோட பழக்கம் வச்சிகிட்டா இதான் உனக்கு கதி என்றது ஆமை.

இதைக்கேட்ட திமிங்கிலம் பதறியது, அடப்பாவி சும்மா இருந்த என்னைக் கூட்டி வந்து இவ்வளவு பெரிய ஆபத்துல சிக்க வச்சிட்டியே என்று கதறிய திமிங்கிலம் பக்கத்தில் இருந்த கெட்ட சுறாவை லபக்கென முழுங்கி அங்கிருந்து ஓடியது.

கொஞ்ச தூரம் சென்றவுடன் திமிங்கிலத்தின் வயிற்றில் இருந்த குண்டு வெடித்தது. கடலே அதிர்ந்துபோகும் அளவுக்கு பயங்கர சத்தம். நீல நிறக்கடல் செந்நிறமாக மாறியது. உள்ளே இருந்த கெட்டசுறாவும் வெடித்து செத்தது.

கண்ணாடி அறையில் இருந்த குட்டி சுறாக்கள் பயந்து நடுங்கின. யாரும் பயப்பட வேணாம். இனிமேல் நமக்கு ஆபத்தில்ல என்றது ஆமை.

அந்த நேரம் இரை தேடிச்சென்ற பெரிய சுறாக்கள் திரும்பி வந்தன. அங்கே எல்லாமே சிவப்புற நிறத்தில் இருந்தததும் குட்டிகளுக்கு எதோ ஆபத்து போல என்று நினைத்து அழுதுகொண்டே ஓடி வந்தன். ஆனால் அங்கே குட்டிகள் பாதுகாப்பாக இருப்பதைக்கண்டு நிம்மதியடைந்தன.

என்ன ஆச்சு ஆமையாரே? ஏன் இவ்வளவு ரத்தம்?

நடந்த கதையை சொன்னது ஆமை. 

சுறாக்கள் இரண்டும் ஆமையைக் கட்டிப்பிடித்து நன்றி சொன்னது. எங்கள் வாழ்நாள் பூராவும் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம் என்றது.

என்னுடைய கடமை. அதைத்தான் நான் செய்தேன். குட்டிகள் எல்லோரும் பசியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு கொடுங்கள் என்றது ஆமை.

போதுமான அளவு உணவு உள்ளது, வாருங்கள் ஆமையாரே நாம் அனைவரும் பகிர்ந்து உண்ணுவோம் என்றது பெரிய சுறாக்கள்.

கண்ணாடி அறைக்குள் சென்று அவர்கள் அனைவரும் பசி தீர உண்டனர்.

நீண்ட காலம் ஆமையும் சுறாக்களும் நட்போடும், மகிழ்ச்சியோடும் அந்த கப்பலில் வாழ்ந்தனர்.


Monday, October 10, 2022

கரடியின் கருணையும் எலியின் கைமாறும்.

தினமும் இல்லையென்றாலும் அவ்வப்போது பிள்ளைகளுக்கு கதைகள் சொல்வது வழக்கம். என்ன கதை சொல்லவேண்டும் என்று அவர்களிடமே கேட்பேன். யானை, பூனை, காக்கா, ஸ்பைடர் மேன், ஸ்னோ மேன், கரடி, என எதையாவது சொல்வார்கள். அந்த வார்த்தையில் ஆரம்பித்து அப்படியே வாய்க்கு வந்ததை சொல்லி முடிக்கும்போது தூங்கியிருப்பார்களா என்றால் இல்லை, அதற்குப் பிறகு கேள்வி பதில் பகுதிக்கு செல்வார்கள். ஓய்ந்து விடும். பல நாட்களில் பெரியவன் கேட்பான், நீ சொல்ற கதையெல்லாம் எங்க படிச்ச? அது தானாக அவிழ்வதுதான் என்ன கதை வேண்டும் என நீங்கள்தானே முடிவு செய்கிறீர்கள், அந்த நொடியிலிருந்துதான் கதைகளை உருவாக்குகிறேன் என்பேன். 


அது எப்படிப்பா சுவாரசியமா சொல்ற, உன்னோட கதைய அப்படியே எங்க க்ளாஸ்ல நான் சொல்லுவேன். நல்லா கத சொல்ற நீன்னு மேடம் சொல்வாங்க என்றான். எனக்கே கூட இந்த ஆச்சரியம் அவ்வப்போது ஏற்படுவதுண்டு. எல்லா கதைகளிலும் நட்பை, பாசத்தை, நன்றியை, சகோதரத்துவத்தை மையமாக வைத்து சொல்வதுதான். குழந்தைகளுக்கு அதுதானே தேவை.  எதோ ஒரு சொல்லில் இருந்து கதையை ஆரம்பித்து அதை முடிக்கும்போது ஒரு திருப்தி ஏற்படுவதை உணர்ந்திருக்கிறேன். இதையெல்லாம் மறக்காம இருக்க சொல்லும்போதே எழுதி வச்சிக்கப்பா, பின்னாடி யூஸ் ஆகும் என்பான்.

வேண்டுமளவு குழந்தை எழுத்தாளர்கள் நிறைய உண்டு என்றாலும் ஒவ்வொரு வீட்டிலும் கதைக்கு சாத்தியப்படுவதில்லைதானே. அதனால் அன்றன்று சொல்லும் கதைகளை இங்கே எழுதி வைக்கலாம் என்று ஒரு யோசனை தோன்றியது. 


கரடியின் கருணையும் எலியின் கைமாறும்.



அது ஒரு பெரிய காடு. அந்தக்காட்டுல ஒரு எலிக்குடும்பம் வாழ்ந்து வந்துச்சு. எலி வளையானாலும் தனி வளை வேணும்னு பழமொழி இருக்கு. அதுமாதிரி அந்த எலிக்குடும்பத்துக்குன்னு ஒரு வளை இருந்துச்சு. வளைன்னா வீடுன்னு புரிஞ்சிக்கணும். அது எப்படி இருக்கும்னா நிலத்துல சின்னதா ஒரு ஓட்டை போட்டு எலி மட்டும் போய் வரமாதிரி இருக்கும். அதைத்தான் வளைன்னு சொல்வாங்க, அந்த வளை உள்ள போகப்போக பெரிதாவும் இருக்கும் சின்னதாவும் இருக்கும் இல்லன்னா அந்த வளையில இருந்து இன்னொரு வளைக்கு தொடர்ச்சியா போகலாம். 

அந்த பழமொழிக்கு என்ன அர்த்தம்பா?

சிறிய வீடாக இருந்தாலும் சொந்தத்துல ஒரு வீடு இருக்கணும், நமக்குன்னு ஒரு இடம். அதான் அதுக்கு அர்த்தம். 

அந்த எலிக்குடும்பத்துல மொத்தம் ஆறு பேர். அம்மா எலி, அப்பா எலி, நாலு குட்டி எலி. அவங்க எல்லாரும் அந்த வளைல ரொம்ப சந்தோஷமா வாழ்ந்துட்டு இருந்தாங்க. போதுமான அளவுக்கு அவங்களுக்கு உணவு தாராளமாவே கிடைச்சது. பாம்புகள் இல்லாத இடத்துல வளை இருந்ததால அவங்க ரொம்ப பாதுகாப்பாவே இருந்தாங்க. 

ஒருநாள் திடீர்னு அந்தக் காட்டுல அடை மழை பேய்ஞ்சது. மழைன்னா அப்படி ஒரு மழை எதிர்ல யாரு என்னன்னு கண்ணு தெரியாத அளவுக்கு மழை அடிச்சு ஊத்துது. குளம், குட்டை, ஆறு எல்லாமே நிரம்பி வழியிது. அந்த எலிக்குடும்பத்தால வெளில போகமுடியல. அதனால குட்டி எலிகளுக்கு உணவு இல்லாம பசியோட இருந்தாங்க. மழை விட்ட வெளில போய் அப்பா எலி எதாவது உணவு கொண்டு வருவார். ஆனா மழை விடவேல்ல, ரெண்டு மூணு நாளாகவே தொடர்ந்து பேய்மழை பேய்ஞ்சது.

அப்பா எலிக்கு ஒரே வருத்தம். இப்படியே மழை பேய்ஞ்சதுன்னா இந்த வளை மூழ்கிடும். இதவிட இன்னும் மேடான பகுதிக்கு போனாதான் பிழைக்க முடியும்னு அதுக்கு தோணுது. மெதுவா வளைய விட்டு வெளில வந்து பாக்குது. அப்போ அதுக்கு பயங்கர அதிர்ச்சி. மழை விடல அதுபாட்டுக்கும் பேய்ஞ்சிட்டே இருக்கு. வளைக்கு பக்கத்துல சிறிய ஆறுபோல பெருக்கெடுத்து ஓடுது மழைநீர். இப்படியே போச்சுன்னா வளைக்குள்ள தண்ணி வந்துடும். நாம் சீக்கிரமா இங்கிருந்து தப்பிக்கணும்னு அப்பா எலி முடிவு பண்ணுது. 

உடமே அம்மா எலிகிட்ட வந்து சொல்லுது அப்பா எலி. இன்னும் கொஞ்ச நேரத்துல வளைக்குள்ள தண்ணி வந்துடும், அதுக்குள்ள நாம கிளம்பணும்னு சொல்லும்போதே லேசா வளைக்குள்ள தண்ணி வர ஆரம்பிக்குது. நேரமில்ல என்னோட வாலை நீ பிடிச்சிக்க, உன்னோட வாலை பிள்ளைங்க ஒவ்வொண்ணா பிடிச்சிக்குங்க எக்காரணத்தைக்கொண்டும் பிடிய விடாதிங்க, நல்லா இறுக்கமா பிடிச்சிக்குங்க. எதிர்ல வேகமா தண்ணி வரும். தைரியமா என் பின்னாடி வாங்க எறும்புக்கூட்டம் வரிசையா போறத பாத்திருக்கிங்க இல்லையா அதுபோல தொடர்ந்து வரணும் சரியா என்று சொன்னபடி எலி வளைக்கு வெளியே செல்ல ஆரம்பித்தார். நீரின் வேகம் அதிரிகரித்திருந்தது. பெரிய போராட்டத்திற்குப் பிறகு வளையை விட்டு வெளியே வந்தார்கள்.

அப்போதும் மழை பெய்து கொண்டிருந்தது. அப்பா எலி எங்கு போவதென்றே தெரியாமல் முழித்தது. குட்டி எலிகளுக்கு மழையில் நனைந்து குளிரில் நடுக்கமெடுத்தது. எப்படி பிழைத்து பிள்ளைகளை காப்பாற்றுவது என்று திகைத்தபோது திடீரென அருகில் இருக்கும் குன்றும் அதற்குள்ளே இருக்கும் சிறிய குகையும் நினைவுக்கு வந்தது. அங்கே ஒரு பெரிய கரடி அண்ணன் வாழ்ந்து வருகிறார். சரி அங்கே போனால்தான் தப்பிக்க முடியும். உதவி கேட்போம் என முடிவு செய்தது. 

மறுபடி எறும்பு ஊர்வதுபோல ஒருவர் பின் ஒருவராக கடினமான பாதையில் ஏறி குன்றை அடைந்தார்கள்.

அங்கே கரடியண்ணம் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார்.



மழை மேல் படாதவாறு அம்மா எலியும் குட்டி எலிகளும் ஒதுங்க வைத்துவிட்டு அப்பா எலி மட்டும் பயத்தோட கரடியண்ணன் அருகில் சென்று அண்ணே, அண்ணே என்று கூப்பிட்டது.

யார்ரா இந்த நேரத்துல என்னை எழுப்பறது என்று கோபத்துடன் எழுந்தது கரடி.

யார்ரா நீ என்றது கரடி

அண்ணே நாந்தான் எலி. இங்க பக்கத்துலதான் குடியிருக்கேன். மழை பேய்ஞ்சு வளைக்குள்ள தண்ணி வந்துடுச்சு எப்படியோ பொழச்சு மேல வந்துட்டேன். 

அதுக்கு என்ன இப்போ என்று கொட்டாவி விட்டபடி கேட்டது கரடி.

இந்த மழ விடறமட்டும் நானும் என் குடும்பமும் இந்த குகையில தங்கிக்கறம்ணே. கொஞ்சம் உதவி பண்ணுங்க அண்ணே என்றது.

அதெல்லாம் முடியாது. நீயும் உன் குடும்பமும் குட்டி எலிங்கணும் நாள் பூரா கிரீச், க்ரீச்னு கத்திட்டே இருப்பிங்க பெரிய தொந்தரவா இருக்கும். என்னால நிம்மதியா தூங்கவே முடியாது. வேற எடம் பாத்துக்க ராசா என்றது கரடி.

அண்ணே உங்க தூக்கத்துக்கு ஒரு தொந்தரவு வராது. ஒரு சின்ன சத்தம் கூட வராம நான் பாத்துக்கறண்ணே. சின்ன சத்தம் வந்தாலும் எங்கள தொரத்திடுங்க. கடவுள் மாதிரி உங்கள நம்பி வந்திருக்கேன். என்னையும் என் குடும்பத்தையும் காப்பாத்துங்கண்ணே நல்லாருப்பிங்க நீங்க என்றது அப்பா எலி.

உன்ன பாத்தாலும் பாவமாதான் இருக்கு. இந்த மழையும் இப்ப நிக்கிற மாதிரி தெரியல, குட்டி எலிங்களுக்காக உனக்கு உதவி பண்றேன். ஆனா என் தூக்கத்துக்கு எதாவது தொந்திரவுன்னு எல்லாரையும் அப்படியே நசுக்கிருவேன், புரிஞ்சுதா? என்றது கரடி.

ஒரு சத்தம் கூட வராது. எங்கள நம்பி இடம் கொடுங்கண்ணே என்றது எலி.

சரி, நேரா போய் இடதுபக்கம் திரும்புனா சின்னதா ஒரு இடம் இருக்கும். அங்க தங்கிக்குங்க, ஆனா மழை விட்டதும் ஓடிரணும், சரியா?

சத்தியமா மழை விட்டதும் போயிடறோம் அண்ணே என்றது எலி.

சரி போய் குட்டிங்கள கூட்டிட்டு உள்ள போ...

ரொம்ப நன்றிங்க கரடி அண்ணே.

ம்ம் இருக்கட்டும்.

அப்பா எலி மெதுவான குரலில் "எல்லாரும் என் பின்னாடி வாங்க, சத்தம் போடாம" என்றது.

எல்லோரும் போய் உள்ளே அமர்ந்தன. கரடி அண்ணன் பெரிய மனசு வச்சு நம்மளுக்கு இடம் குடுத்துருக்காரு. அவரு தூக்கத்த கெடுக்கற மாதிரி சின்ன சத்தம் கூட வரக்கூடாது புரிஞ்சுதா குட்டிங்களா.

புரிஞ்சது அப்பா என்றது நான்கு குட்டி எலிகளும்.

கொஞ்ச நேரம் கழித்து குட்டிகளுக்கு குளிரில் உடல் நடுங்கியது. மெதுவாக அம்மா எலி அப்பா எலியிடம் சொன்னது. பிள்ளைங்க குளிர்ல நடுங்கறாங்க பாருங்க. ராத்திரி முழுக்க இப்படியே நடுங்கினா பிழைக்க மாட்டாங்க எதாச்சும் பண்ணுங்க என்றது.

என்ன பண்ணலாம் என்றது அப்பா எலி.

கொஞ்சம் நெருப்பு மூட்டினா கதகதன்னு இருக்கும் என்றது அம்மா எலி. கரடி அண்ணங்கிட்ட கேட்டுப் பாருங்க.

சரி கேட்டுப்பாக்கறேன். 

மெதுவான குரலில் கரடி அண்ணனின் நெருப்பு கொஞ்சம் பத்த வச்சிக்கறேன் அண்ணே, பிள்ளைங்க குளிர்ல நடுங்குது என்றது.

அய்யய்யோ நெருப்பா, நெருப்பு எனக்கு ஆகாது. அதுமட்டும் வேணாம் என்றது கரடி.

பிள்ளைங்களுக்காக கேக்கறேன். என கெஞ்சியது அப்பா எலி.

சரி சரி, போய்த்தொலை, ஆனா பெரிய  நெருப்பு வச்சிராத, கொஞ்சமா வைக்கணும். புரிஞ்சுதா?

சரிங்கண்ணே

சரி, போய் சமையலறைல தீப்பெட்டி இருக்கும். கொஞ்சமா விறகு எடுத்து யூஸ் பண்ணனும்.

சரிங்கண்ணே. ரொம்ப நன்றி அண்ணே என்று சமையலறை பக்கம் ஓடியது எலி.

டேய் எலி, நில்லு, எல்லாரும் சாப்டிங்களா?  

சாப்டு ரெண்டு நாளாச்சிண்ணே, என்று கண்கலங்கியது அப்பா எலி.

அங்க கிச்சன்ல ஒரு சாலமன் மீன் இருக்கு. நேத்துதான் ஆத்துல பிடிச்சிட்டு வந்தேன். அதுல ஒண்ணே ஒன்னு மிச்சம் இருக்கு. அத எடுத்து நெருப்புல காட்டி சாப்புடுங்க, நீயே தின்னுடாத பிள்ளைங்களுக்கும் குடு.



எவ்வளவு நல்ல மனசுண்ணே உங்களுக்கு. என்று நெகிழ்ந்து போனது அப்பா எலி.

தீப்பெட்டியும் விறகும் எடுத்து வந்து நெருப்பு மூட்டி எல்லா எலிகளும் நெருப்பு முன் அமர்ந்தன. உடம்பிலிருந்து குளிர் மெல்ல விலகி சுறுசுறுப்பானது எலிகள். குட்டி எலிகள் எல்லாம் சேர்ந்து "பசிக்கிறது அப்பா" என்றன.

சமையலறை போய் சால்மன் மீனை எடுத்து வந்து அதே நெருப்பில் காட்டி அந்த எலிக்குடும்பமே சேர்ந்து உண்டது.

உணவு உள்ளே போனதும் சிறிது நேரத்தில் தூக்கம் வந்து அனைவரும் தூங்கிவிட்டனர்.

காலையில் எழுந்து பார்த்தபோது மழை விட்டிருந்தது. சூரியன் உதித்து தரையெல்லாம் காயத்தொடங்கியது. காட்டில் இருள் அகன்று வெளிச்சம் வந்திருந்தது. 

அப்பா எலி எல்லாரையும் எழுப்பிவிட்டு வெளியில் கூட்டிக்கொண்டு வந்தது.

கரடி அண்ணன் தூங்கிக்கொண்டிருந்தார். தூக்கத்தை கெடுக்காம போயிடலாமா என்றது அப்பா எலி. 

அது எப்படிங்க சொல்லாம போக முடியும், நமக்கு மிகப்பெரிய உதவி செஞ்சிருக்கார். சொல்லாம போனா மரியாதையா இருக்காது. எழுப்பி நன்றி சொல்லுங்க. அப்படியே அவருக்கு எதாவது நம்மளால உதவ முடியுமானு கேட்டு பாருங்க என்றது அம்மா எலி.

மெதுவாக சென்று கரடி மூக்கில் சுறண்டியது அப்பா எலி.

தூக்கத்திலிருந்து விழித்த கரடி கொட்டாவி விட்டது. விடிஞ்சிருச்சா? 

ஆமாங்கண்ணே, வெயில் விழ ஆரம்பிச்சிடுச்சி அப்படியே நாங்க கிளம்பறோம். நீங்க உதவி பண்ணலன்னா இந்த குடும்பமே இப்போ இல்ல. உயிர் உள்ளவரை நன்றியா இருப்போம் கரடி அண்ணே என்றது அப்பா எலி.

சரி, சரி போய்ட்டு வா, நல்ல மேடான இடமா பாத்து வளைய தோண்டனும் அப்பதான் மழை உள்ள வராம பாதுகாப்பா இருக்க முடியும் சரியா என்றது கரடி.

ரொம்ப நன்றி கரடி அண்ணே! உங்களுக்கு எதாவது உதவி செய்யணும்னு எனக்கு தோணுது. எங்களால உங்களுக்கு ஆக வேண்டியது எதாவது இருந்தா சொல்லுங்க அண்ணே என்றது அப்பா எலி.

கொஞ்ச நேரம் யோசித்தது கரடி. உன்னால அது முடியாது. நீ உன் வழிய பாத்துப் போ என்றது கரடி.

அப்படிலாம் சொல்லாதிங்கண்ணே, என்ன உதவின்னு சொல்லுங்க எங்களால முடியுமான்னு பாக்கறோம் என்றது.

அது ஒண்ணும் இல்லடா எலிப்பயலே, எனக்கு தேன் சாப்பிடணும் போல இருக்கு. தூரமா ஒரு மரத்துல பாத்தேன். நல்ல பெரிய தேன்கூடு. ஆனா ரொம்ப ரொம்ப உயரத்துல இருக்கு. உன்னால அவ்ளோ உயரம் போக முடியாது.

அட... எவ்வளவு பெரிய மரமா இருந்தாலும் நான் ஏறிடுவேன். எங்கள கூட்டிட்டு போங்கணே நான் தேன் எடுத்து தரேன் என்றது கரடி

அப்படியா சொல்ற?.. சரி வா போகலாம். என்றது கரடி.

மகிழ்ச்சியுடன் கரடி பின்னால் சென்றன எலிகள். வழியெல்லாம் சேரும் சகதியுமாக இருந்தது. எலிகள் சிரமப்பட்டன. வழியில் ஒரு காட்டாறு ஓடியது. ஆற்றை கடந்தால் அந்தப்பக்கம் இருக்கிறது மரம்.

இந்த தண்ணில இறங்கினா அடிச்சிகிட்டு போயிடுவிங்க, என்னோட முதுகுல ஏரி கெட்டியா முடிய புடிச்சிக்குங்க, பிடிய விடக்கூடாது. விட்டேன்னா ஆத்தோட போயிடுவிங்க என்றது கரடி.

எலிகள் முதுகில் ஏறிக்கொண்டன. குட்டி எலிகளுக்கு கொண்டாட்டமாக இருந்தது. கரடியின் முதுகில் பஞ்சு மெத்தை போல முடிகள் இருந்தது. நன்றாக இறுக்கிப்பிடித்துக்கொண்டன.

ஆற்றைக்கடந்தது ஒவ்வொன்றாக குதித்து நடக்க ஆரம்பித்தன. சிறிது தூரத்தில் அந்தப் பெரிய மரத்தைக்கண்டனர்.

அவ்வளவு பெரிய மரத்தை வாழ்நாளில் கண்டதில்லை எலிகள். வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருந்தன.

பாத்தியா, இதுல ஏற முடியுமா உன்னால? மேலருந்து விழுந்தின்னா சட்னி ஆயிடுவ, முடிஞ்சா பாரு இல்லன்னா ஏற வேணாம் என்றது கரடி.

உங்களுக்காக கண்டிப்பா ஏறிடுவேன். இன்னும் கொஞ்ச நேரத்துல பாருங்க உங்க கைல தேனடை இருக்கும் என்றது அப்பா எலி.

மரத்தில் ஏற ஆயத்தமானது எலி.

டேய் எலி, நில்லு. இப்படியே போனா தேனீக்கள் உன்ன கடிச்சிடும். இந்தா நெருப்பட்டி. நெருப்ப காட்டினா தேனி பறந்துடும் அப்புறமா உன்னோட பெரிய பல்ல கத்திரிக்கோல் மாதிரி யூஸ் பண்ணி அறுக்கனும். அப்படி பண்ணா அது கீழ விழும். அப்படியே நான் பிடிச்சிக்கறேன். புரிஞ்சுதா என்றது கரடி.

நல்லவேல இப்பவே சொன்னிங்க. மேல போயிருந்தன்னா அப்படியே மேல போயிருப்பேன் என்றபடி தீப்பெட்டியை வாங்கிக்கொண்டு மேல ஏற ஆரம்பித்தது.

ஏற ஏற உயரம் கூடிக்கொண்டே போனது. கையெல்லாம் வலியெடுத்தது. பெரிய பெரிய எறும்புகள் தொல்லை செய்தது. அங்கங்கே ஓய்வெடுத்து ஒருவழியாக தேனடை அருகே சென்றது. ஒரு கிளைய ஒடித்து அதிலே தீ வைத்து தேனடை பக்கம் காட்டியதும் தேனீக்கள் பறந்து ஓடின.

தன் கூரிய பற்களால் ஒரு பக்கமிருந்து மறுபக்கமாக கடித்துக்கொண்டே சென்றது. பாதி தூரத்திலேயே பாரம் தாங்காமல் தேனடையின் ஒரு பகுதி கீழே விழுந்தது.

கரடி சரியாக மண்ணில் படாமல் அதை பிடித்து சாப்பிட ஆரம்பித்தது. குட்டி எலிகளும் தேனை நக்கிப்பார்த்தன. புதுசுவையாக இருந்ததால் தேனை விரும்பி சாப்பிட்டன குட்டி எலிகள்.

கரடிக்கு வயிறு நிறைந்தது. மேலே அண்ணாந்து பார்த்தது. மரத்தில் இன்னும் கொஞ்சம் தேன் இருந்தது.

டேய் எலிப்பயலே, அதையும் கடிச்சி கீழ போடு என்று கத்தியது.

கரடியண்ணே, நாம எல்லாத்தையும் சாப்பிட்டா பாவம் தேனீக்கள் திரும்ப வந்து பாத்து ஏமாந்து போயிடும். பாவம்ணே, இன்னொரு நாள் வந்து சாப்பிடலாம். என்றது அப்பா எலி.

நீ சொல்றதும் சரிதான். கீழ இறங்கி வா என்றது.

ஏறுவதை விட இறங்குவது சுலபமாக இருந்ததால் எலி சீக்கிரமே கீழே வந்து விட்டது.

ரொம்ப மகிழ்ச்சிடா எலி. இவ்வளவு ருசியான தேனை சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு. நல்ல தேன் சாப்பிட்டா அருமையான தூக்கம் வரும்னு சொல்வாங்க. எனக்கு இப்ப நல்ல தூக்கம் வருது. இந்த மரத்துக்கு அடியிலயே தூங்க போறேன். நீங்களும் தூங்கி ஓய்வெடுங்க என்றது.



உங்களுக்கு உதவி செஞ்சதுல ரொம்ப மகிழ்ச்சி அண்ணே என்றது அப்பா எலி.

சரி, நீங்க எல்லாரும் என்கூடவே வந்து தங்கிடுங்க, அதான் குட்டிகளுக்கு பாதுகாப்பு. பாம்பு தொல்லை இருக்காது. மழைநீர் உள்ள வராது, பத்திரமா இருக்கலாம் என்றது.

எலிக்குடும்பம் மகிழ்ச்சியுடன் சம்மதித்தன. கரடியும் எலிக்குடும்பமும் அந்தக்குகையில் நீண்ட நாட்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தன.