எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, November 01, 2008

நெடிதுயர்ந்த பனையின் நிழல்


நெடிதுயர்ந்த பனையின் நிழல் நகரும்
கதிரவனின் நகர்விற்கேற்ப
நகர்கிறோம் நானும் நீயும். நிரந்தரமென்றோ
தற்காலிகமென்றோ வரையிடமுடியாத
தனிமை. தனிமை சுகிக்கும் கணங்களாக
நான் குறிப்பிடுபவையாவன சிலது கேள்.
தொட்டாற்சிணுங்கி தொடு பின் தழை
விரியும் கணங்கள் காத்திரு.
அடர்மழை காண் அதன் கடைசித்துளி
ஓசை உற்று கேள்.
அடங்காக் காமத்தின் உச்சமாய் சுயபுணர்ச்சி
செய், உடலதிரும் குற்றவுணர்ச்சி உணர்.
சாந்த குணமும் விஷம் நிரம்பிய நாகம்
ஒன்றும் உன் முன் நிற்பதாக கற்பனை கொள்.
நிலைக்கண்ணாடி முன் உடல் வருடி
முழுநிர்வாணம் ரசி, காற்றுப்புக அனுமதி கொடு.
இவையாவும் நாளுக்கொன்றாய் உரு மாறும்
நிலாவாகவும்
அது தரும் தற்காலிக குளிர்மை போலவும்
சுகிக்கவில்லையெனில் எப்போதாவது ஒன்றின்
மற்றொன்று தொடர்ச்சியாய் நடக்கும்
விசேஷ கணத்திற்காய் காத்திரு.

மொக்கை குறிப்புகள்


தீபாவளி கொண்டாட்டத்திற்கு நண்பர் அழைத்திருந்தார். கடந்த மூணு வருடங்களாக
எந்த பண்டிகையையும் பார்க்கவே இல்லை. மாறுதலுக்காக சென்று வரலாம் என்று
சென்றேன். நல்ல சாப்பாடு போடுவார்கள் என்ற என் எண்ணம் பொய்யாகவில்லை
ஆனால் எல்லாரும் கூடி ஆளுக்கொரு பாட்டு பாடவேண்டும் என்று பீதி கிளப்பினர்.
பாடத்தெரியாதவனை பாடச்சொல்வது வன்முறையாகும் என்று சொன்னால் அடிக்க
வருவார்கள். கரோக்கியை ஒலிக்கவிட்டு திரையில் பாடல் வரிகள் தெரிய
அதைத்தொடர்ந்து பாடும் ஒரு விளையாட்டு. எல்லாரும் கட்டாயம் ஒருபாடலாவது பாடவேண்டும் என்றார்கள். முன்ன பின்ன மைக் பிடித்ததில்லை அதுவுமல்லாமல்
ஒரு முழுப்பாடலையும் தவறு இல்லாமல் பாடினால் அதற்கு மதிப்பெண் திரையில் தெரிகிறது. அதுதான் பெரிய சிக்கலே. என் முறை வந்தது. நான் பாட ரெடி ஆனா
எனக்கு முழுசா தெரிஞ்சது ஒரு பாட்டுதான் அந்த பாட்டு இருந்தா பாடுவேன் இல்லனா முடியாது என்றேன். எல்லாரும் ஆர்வமாக என்ன பாட்டு சொல்லு என்றார்கள்.


"தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்" இந்த பாட்டு இருக்குதா?
இருந்ததுன்னா அய்யா ரெடி... கடைசியில் அந்த பாட்டு இல்லையென்பதால் க்ரேட்
எஸ்கேப். எல்லாரும் சென்றபிறகு மறுநாள் தனியாக முயற்சி செய்து பார்த்தேன்.
இசையோடு கூடி பாடுவது எவ்வளவு சிரமம் என்று தெரிந்தது. என் குரல் எனக்கே
கன்றாவியாக இருந்தது. நல்லவேளை பாடாமல் எல்லாரையும் காப்பாற்றி விட்டேன்.

பொதுவாக பத்துபேர் சுற்றிலும் இருக்கும்போது உரக்கப் பேசுவதே எனக்கு கைவராத
விஷயம். பாடவேண்டும் என்றால் கேவலமாக வழிவேன். கல்லூரி படிக்கையில்
இதேபோல சம்பவங்கள் நடந்ததுண்டு பெரும்பாலும் அந்நேரங்களில் எப்படியாவது
தப்பித்துவிடுவேன். அக்கணத்தை சந்தோஷமாக்கவே பாடுகிறோம் கச்சேரிக்காக
அல்ல எனினும் இந்த கூச்சசுபாவத்தை மாற்றவே முயற்சிக்கவில்லை. ஒருசிலர்
மட்டுமே எந்தவித கூச்சமும் இன்றி "நாலு பேர்" கவலை இல்லாமல் பாடுவார்கள்.
அப்படிப்பட்ட ஒரு நண்பன் எழிலரசன். கூட்டத்திலே கோயில் புறா, நான் ஏரிக்கரை
மேலிருந்து போன்ற பாடல்களை எப்பொழுதும் விருப்பமுடனும் உணர்ச்சியுடனும்
பாடுவான். நல்ல குரல்வளமும் கூட. எப்பொழுது பாடச்சொன்னாலும் உடனே
எழுந்து பாடுவான். என்னை வலுக்கட்டாயமாக பாடச்சொன்னபோது 7ஜி ரெயின்போ
காலனி "ராஜா... ராஜாதி ராஜனிந்த ராஜா" என்பது போல ஒரு பாடலைப் பாடினேன். எல்லாரும் சிரிப்பை நிறுத்த சில நிமிடங்கள் பிடித்தது. அன்று முதல் "நாலு பேர்"
முன் பாடுவது போல வாயைக்கூட அசைக்க கூடாது என்று முடிவெடுத்தேன்.

தீபாவளி விருந்தின்போது ஒரு பெண் சளைக்காமல் இந்தி, தமிழ், கன்னடம் என்று
மாறி மாறி பாடினார். குரல் மோசமில்லை என்றாலும் முயற்சிக்காக பாராட்டாமல்
இருக்கவே முடியவில்லை. கல்லூரியில் கூட ரம்யா என்ற நண்பி இதேபோல
நானாவிதக் கூச்சங்களை தவிர்த்துவிட்டு அடிக்குரலிலிருந்து உணர்ச்சிகரமாக
பாடுவார். நடுவில் இசைக்கோர்வைகளைக் கூட எழுப்புவார். அந்த இடத்தில்
இருப்பதே அசூயையாக நான் உணர்வேன். இப்பொழுது நினைத்தால் தவறு என
படுகிறது. பிறகு தொலைக்காட்சிகளில் நேயர் விருப்பப்பாடல்களை வழங்கினார்.
உற்சாகமான அதே பங்கேற்பு. பின்னாளில் தமிழின் பெரிய இயக்குனர் ஒருவரை
மணந்து சென்றுவிட்டார். சென்றவாரம் அவரின் புகைப்படம் குங்குமம் இதழில்
வந்திருந்தது. கணவரை அணைத்து உற்சாகமான அதே சிரிப்புடன்.

முதல் முதலாக வீட்டை விட்டு வெகுதொலைவில் தங்கி படிக்கவேண்டிய நேரம்
தனித்த அறை, விடுதி, வார்டன், அதிகாலைக்குளி,யல் வரிசையாக உட்கார்ந்து
நேரத்திற்கு சாப்பிடவேண்டும் போன்ற விதிமுறைகள் தற்கொலை எண்ணத்தை
தூண்டியது. பக்கத்து அறையில் காமராஜ் என்ற MCA படிக்கும் அண்ணன் இருந்தார்.
அவர் கல்லூரியிலே மிகவும் பிரபலம். எந்த நேரமும் பாடிக்கொண்டே இருப்பார்
அற்புதமான குரல்வளம் அவருக்கு. தொடர்ந்து மூன்று வருடங்களாக கல்லூரி
ஆண்டுவிழாவில் முதல் பரிசு பெற்றவர். தினம் இரவு உணவு முடிந்ததும்
மொட்டைமாடியில் எல்லாரும் கூடுவோம் காமராஜ் பாட எல்லாரும் அமைதியாக
கேட்டுக்கொண்டிருப்போம். தேர்ந்தெடுத்த பாடல்களை அழகான குரல்கொண்டு
பாடும்போது கேட்டுக்கொண்டே இருக்கலாம். "செவ்வானம் வெட்கம் கொண்டது
யாராலே" அவரின் விருப்பப்பாடல். இந்தப்பாடலை எப்பொழுது கேட்டாலும்
அவரின் நினைவுதான் வருகிறது.
---

A Wednesday படத்தைப்பற்றி நிறைய பதிவுகள். பரிந்துரைத்த படம் வேறு பக்கத்து
திரையரங்கில் ஓடுகிறது பார்க்கலாம் என்று சென்றால் படத்தை தூக்கி விட்டார்கள்.
ஏகன் ஓடிக்கொண்டிருக்கிறது பார்க்கலாம்தான். பார்த்தபின் வரும் எரிச்சலை என்ன
செய்வது. மேலும் படம் ஆரம்பிக்க இன்னும் இரண்டு மணி நேரம் காத்திருக்கவேண்டும்.
இதெல்லாம் வேலைக்காவாது வாடா போலாம் என்று கூப்பிட்டால் நண்பன் நயன்
போட்டோவை சைடிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான்.

சரி மச்சி இந்த வெங்காயப்படத்துக்கெல்லாம் எவனும் வரமாட்டான் அதனால டிக்கெட்
அப்புறம் வாங்கிக்கலாம் இப்ப ஊர் சுத்தலாம் வா என்று கூட்டிப்போனேன்.

சரியாக 10.20 க்கு செல்லும்போது இரண்டே இரண்டு டிக்கெட் இருந்தது. அதுவும்
முன்வரிசையின் முதல் இரண்டு சீட். நண்பனைப் பார்த்தேன்."நீ எதத்தாண்டா
உருப்படியா செஞ்சிருக்க" சரி எடுத்து தொலை. இவ்வளவு நேரம் தேவுடு
காத்ததுக்கு இதுவும் இல்லன்னா அசிங்கமா போவும் என்றான். டிக்கெட் வாங்கி
உள்ளே சென்றால் ஒரே "தலை" முழக்கம்.

நயன் தாராவின் நடிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது.அவரின்
அடுத்தப்படத்தில் மேல்கச்சையை கழட்டி விடுவார் என்றே நம்புகிறேன். ஏனென்றால்
திரைக்கு சமீபத்தில் அமர்ந்து பார்க்கும்போது எல்லாமே "பிரம்மாண்டாமாக" தெரிந்தது
மேலே முட்டிவிடுமோ என்ற அச்சமும் கூடவே.

புல் மப்பில் வந்திருந்த பின்னிருக்கை பிதாமகன் ஒருவர் வாந்தியே எடுத்துவிட்டார்.

நாசருக்கு இன்னும் எத்தனை படத்தில் போலிஸ்கார மகனின் போலீஸ்கார அப்பாவாக
நடிக்கும் வாய்ப்பு ஏற்படுமோ தெரியவில்லை.

எப்படியோ படம் முடிந்து வெளியே வரும்போது வெளியில் அடுத்தகாட்சி காண
பெரும் கூட்டம் காத்திருந்தது. "உங்களயெல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு"
என்று வடிவேலு பாணியில் எவரோ சொல்ல மொத்தக்கூட்டமும் சிரித்தது.
---

கோடை முடிந்து குளிர் எட்டிப்பார்க்கும் காலம் வந்துவிட்டதற்கான அறிகுறிகள்
அதிகாலை உறக்கத்தில் தெரிய ஆரம்பித்துவிட்டன. அலுவலகத்திற்கு நேரத்திற்கே
சென்றதால் வரும் பின்விளைவுகள் அறியாது சென்றுவிட்டேன். வரவேற்பறையில்
சீக்கிரமே வந்துவிட்ட தோழிகள் அரட்டை அடித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
நாக்கால் மூக்கைத்தொடும் விளையாட்டு இன்றைக்கு. பாரதிராஜா படம் பார்த்துவிட்டு
முயற்சித்திருக்கிறேன். மேலுதட்டுக்கு மேல் எட்டவேயில்லை. திடீரென்று நான்
உள்ளே நுழைந்ததும் என்னையும் தொடச்சொன்னார்கள்.

அழகழகான தட்டையான வெள்ளைப் பிலிப்பினோ மூக்குகள். தொட ஆசையாக இருந்தது
கிட்டே போய் தொட முயற்சிக்கையில் "உன் மூக்க தொடச்சொன்னேண்டா வெண்ணெ"
என்பது போல தள்ளிவிட்டுவிட்டனர்.

எப்படி என்பது போல பார்த்தேன். "இப்டிதான் என்றபடி நான்கு பேரும் ஒரு சேர நாக்க
மூக்க தொட்டனர்". எனக்கு நாக்க முக்க பாட்டு ஞாபகம் வந்தது. கூடவே பெண்களுக்கு
வாய் மட்டுமல்ல நாவும் நீளம் என்ற உண்மையும் புரிந்தது. இது அனைத்து தேசத்து
பெண்களும் பொருந்தும் என்பதுவும் தாமதமாக புரிந்தது.