எல்லையற்ற அன்பு கொள்வோம்

Friday, March 06, 2020

பக்தி மார்க்கம் - அஷ்வகோஷ்

எழுத்தாளர் ராஜேந்திர சோழன் என்கிற அஷ்வகோஷ் அவர்களின் சில சிறுகதைகள் அந்த மொழிநடைக்காக பெரும் வாசகர்களைக் கவர்ந்திருக்கிறது. பெரும்பாலான வாசகர்கள் அவரின் புற்றில் உறையும் பாம்புகள், தனபாக்கியத்தோட ரவ நேரம், தற்செயல், சிதைவுகள் என குறிப்பிட்ட சில கதைகளையே சிலாகித்துப் பேசிக்கொண்டிருப்பார்கள். உண்மையில் அவருடைய சிறுகதைகளில் எல்லாமே எல்லா நேரத்திலும் வாசிக்கக் கூடியவையாக இருப்பது பேரதிசயம்.  அவர் கதைகளின் அடிப்படை பலமே அதன் எளிமைதான். எந்த விதமான ஜோடனைகளும் இன்றி
பூச்சுகள் இன்றி சராசரி மனிதர்களின் உரையாடல் இருக்கும். பாலியல் கதைகள் எழுதியிருக்கிறார் ஆனால் பாலியல் சொல்லாடல் ஒன்று கூட இருக்காது. பெரும்பாலான கதைகள் உரையாடல் வழிதான். எளிய நடுத்தர வர்க்கம், கிராமப்புற விவசாய சனங்கள் சந்திக்கக் கூடிய பிரச்சினைகள்தான் அவரின் கதைகள் பேசும். 

எனக்கு ஒவ்வொருமுறை எதை வாசிப்பது என்ற குழப்பம் ஏற்படும்போதெல்லாம் அஷ்வகோஷ் சிறுகதைத் தொகுப்பு நூலை எடுத்து எதாவது ஒரு பக்கத்தில் பிரித்து அக்கதையை வாசிப்பதை வழக்கமாக வைத்திருப்பேன். அதை ஏற்கனவே வாசித்திருந்தால் கூட மறுபடி வாசிக்கும்போது வேறொரு கோணத்தில் கதை வெளிப்படுவதை உணர்ந்திருக்கிறேன்.

அப்படி ஒரு கதையை நேற்று வாசித்து இரவு முழுக்கச் சிரித்துக்கொண்டிருந்தேன். அவ்வப்போது நினைத்துச் சிரிக்கும் அளவுக்கு அதில் ஓர் வரியை ஒளித்து வைத்திருந்தார். அதை நேற்றைய மீள் வாசிப்பில் கண்டுகொண்டேன்.

கதையின் பெயர் "பக்தி மார்க்கம்". பெயரைப் பார்த்ததும் ஆன்மீகக் கதை என்று நினைக்க வேண்டாம். கட்சிக்கதை. ஒரு கட்சியின் வட்டப்பேரவைக் கூட்டத்தில் கட்சியின் புதிய நிலைப்பாட்டை விவரிக்கும் நிகழ்வும் அதைத்தொடர்ந்து கட்சியின் நிலைப்பாட்டின் மீது தனக்கிருக்கும் சந்தேகத்தை ஒரு தோழர் எழுப்புகிறார். அந்த எளிய கேள்வியின் வழியாக நடக்கும் உரையாடலில் கடைசி வரை கேள்வி எழுப்பிய தோழருக்கு விடையே கிடைக்காது. மாறாக கேள்வி கேட்டவரையே குழப்பி கட்சியின் நிலைப்பாட்டுக்கு அவரை சம்மதிக்க வைத்துவிடுவார்கள்.

அந்தக்கதை இப்படி ஆரம்பிக்கும்.

"ஆகவே தோழர்களே இன்றைய காலகட்டத்தில், இப்போதுள்ள யதார்த்த நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாகப் பரிசீலனை செய்து, ஐந்தும் ஐந்தும் ஒன்பது என்ற, சரியானம் தெளிவான அரசியல் நிலைப்பாட்டிற்கு நமது கட்சி வந்துள்ளது, ஆகவே வரக்கூடிய காலகட்டங்களில் நடைபெற இருக்கிற... தேர்தலில்""

இப்படி ஆரம்பிக்கும் கதையில் ஒரு தோழருக்கு ஐந்தும் ஐந்தும் பத்துதானே வரும் எப்படி ஒன்பது வரும் என கேள்வி எழுப்புகிறார்.  அக்கேள்விக்கு இடைக்கமிட்டித் தோழர், மேல்கமிட்டித்தோழர் என ஒவ்வொருவராக வந்து வெவ்வேறு ஆங்கிளில் பதில் அளிக்கிறார்கள். சிரிக்காமல் இக்கதையைப் படிப்பது மிகச்சிரமம்.

அதில் வந்த ஒரு பத்தியில் சிரிப்பைக்கட்டுப்படுத்த முடியாமல் சிரித்துக்கொண்டிருக்கும்போது வீட்டம்மணி முறைத்தார். அப்பத்தியை அப்படியே கீழே தருகிறேன்.

போனதடவை அப்படிதான் அஞ்சும் அஞ்சும் பதனொண்ணுன்னு முடிவு பண்ணமே... அப்ப, எங்க போனாலும்.... என்னாங்க இது அஞ்சும் அஞ்சும் பத்துன்னுதான் ஆரம்பத்துல சொன்னீங்க. இவ்வளோ நாளும் அப்பிடியேதான் சொல்லிக்னு வந்தீங்க. இப்ப போய்த் திடீர்னு என்னாங்க பதனொன்னுன்னு சொல்றிங்க, எல்லாம் ஆரம்பத்துல நல்லாதான் சொல்றாங்க. அப்புறம் போவப் போவ எல்லாரும் மத்தவங்க மாதிரிதான் ஆயிடறாங்க... உங்க கட்சி அப்படி ஆவாதுன்னு பாத்தம். கடைசீல நீங்களும் அப்படி ஆயிட்டிங்களான்னு கேட்டாங்க. அதுவே நம்ம தோழர்களுக்கெல்லாம் ஒரு மாதிரியாயிருந்தது. அது போதாதுன்னு இப்ப வேற் அவங்ககிட்ட போய் அஞ்சும் அஞ்சும் ஒம்பதுன்னு சொல்லி அதுக்கு அவங்க விளக்கம் கேட்டாங்கள்னா என்னா பதில் சொல்றது. அதனாலதான் தோழர் இதெல்லாம் கேக்க வேண்டியதா இருக்குது இந்த சிக்கல் இல்லண்ணா ஏன் இதெல்லாம் கேக்கறோம்"

இதுல என்ன தோழர் சிக்கல். அப்ப நாம்ப பு.ந.கவோட கூட்டு வச்சிருந்தோம். பதனொண்ணுன்னு சொன்னோம். இப்ப பூ.ஊ.கவோட கூட்டு வச்சிருக்கறோம். அதனால ஒம்பதுன்னு சொல்றம்... இதுல என்ன தோழர் தப்பு என மேல்க்ககமிட்டி தோழர் பதில் சொல்கிறார்.

பு.ந.க,     பூ.ஊ.க.... யூகிக்க முடிகிறதா?

அதுக்குதான் விடிந்தும்கூட சிரித்துக்கொண்டிருந்தேன்.

No comments: