எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, March 30, 2009

நகரத்துப் பூக்கள்

காற்றடிக்கும்போதெல்லாம் என்னறையின்
வாசல்புற சாக்கடையில் பூக்கள் மிதந்து
வருகின்றன. பக்கத்து வீட்டின்
காம்பவுண்ட் சுவர்களுக்கப்பால் வளர்ந்த
பவழமல்லிகை கிளையொன்று
காற்றுடன் சல்லாபிக்கும் ஒவ்வொரு
தருணத்திலும் பூக்களை உதிர்க்கின்றது.
இத்தெருவிலே பல பூமரங்களுண்டு
அனைத்துமே சுவரைவிட்டு தள்ளியே
கிளைபரப்புகிறது. அனைத்துமே பூக்களை
உதிர்க்கின்றது பல வண்ணங்களில்
சாக்கடைப்பூக்கள். இந்த நகரத்திலே
பெண்கள் பூக்களை சூடுவதில்லை
சாக்கடைக்குதான் வாய்த்திருக்கிறது.

Monday, March 16, 2009

நாட்குறிப்பு போன்றவை 1

சென்ற வார இறுதியில் வாசுதேவநல்லூர் செல்வதற்காக அரசு விரைவுப்பேருந்தில்
ஏறி அமர்ந்திருந்தேன். மிகப்பெரும்பாலும் அது ஓட்டை ஒடிசலாக இருந்தாலும்
தொல்லைக்காட்சி பொட்டி இல்லையென்றால் அரசுப்பேருந்தில் மட்டுமே பயணம்
செய்யும் கெட்ட பழக்கம் எனக்கு உண்டு. இப்படி செல்லும்போதெல்லாம் எனக்கு
ஒரு சந்தேகம் வருவதுண்டு அது வீட்டிலிருந்து கிளம்பும்போதே இரண்டு தூக்க
மாத்திரையை வாயில் போட்டு சப்பிக்கொண்டே வருவார்களா என்பதுதான்.
இருக்கையில் அமர்ந்த மறுவினாடியில் குறட்டையை கெளப்புகிறார்கள். பலவருடங்களாக
ஒரு வியாதி என்னை பாடாய் படுத்துகிறது பேருந்து, விமானம், ரயில், இன்னபிற
எந்த வாகனங்களில் சென்றாலும் அது எத்தனை மணி நேரம் என்றாலும் இம்மி
அளவு தூக்கம் வராது. என்றாவது ஒருநாள் வந்தால் அது பேரதிசயம்.

எனக்கு பக்கத்து இருக்கை முன்பதிவு செய்தவர் தாம்பரத்தில்தான் ஏறுவார் என்றார்கள்
கோயம்பேட்டிலிருந்து தாம்பரத்துக்கு வர அந்த விரைவுப்பேருந்து எடுத்துக்கொண்டது
120 நிமிடங்கள். அதற்குள் குளிர்சாதனம் வேலை செய்யல, துண்டு குடுக்கல, சீட்டு
நாறுதுன்னு ஏகப்பட்ட புகார்கள். எனக்கு ஒரு புகாரும் இல்லை ஆனால் ஒரு வேண்டுதல்
இருந்தது. முன்பதிவு இருக்கையில் எதாவது ஒரு அகண்ட உருவமில்லாத ஆசாமி
மேலதிகமாக ஒரு சுமாரான பிகர் அமர்ந்தால் பயணம் சுகப்படுமே என்று வேடப்பாரிடம்
மனுப்போட்டபடி அமர்ந்திருந்தென். வேடப்பாருக்கு முந்தின வேண்டுதல்களே மூன்று
குவார்ட்டர்கள் பாக்கி உள்ளது. இதுவும் சேர்ந்ததென்றால் ஒரு ஃபுல்லாக வைத்து
விடலாம் என்று எண்ணத்தில் இருந்தபோது ஒரு சிவப்பான ஆள் வந்து உட்கார்ந்தார்.
குமாஸ்தா முகம். மண்ண போட்டுட்டியே நீயெல்லாம் ஒரு குலதெய்வமா என்று
மனதுக்குள் சபித்துக்கொண்டேன்.

வடகலையா தென்கலையா என்று பிரித்தரிவதில் நான் இன்னும் தேர்ச்சி பெறவில்லை.
பக்கத்தில் உட்கார்ந்த நபர் மேலே கைபட்டதும் அசூயையாக உணர்ந்தாரா என்னவோ
ஏளனமாக என்னைப்பார்த்தார். திரும்பி ஒருக்களித்துப்படுத்துக்கொண்டு குறட்டை விட
ஆரம்பித்தார். ஒருகட்டத்திற்குமேல் ஒன்று இரண்டாகி இரண்டு இருபதாகிப்போனது.
எனக்குப்பொறுக்கவில்லை. என் தொண்டையிலிருந்து அதிகபட்ச ஒலியினால் குறட்டை
விட ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட அது ஊளையினைப்போல இருந்திருக்கும்போல
அடித்து பிடித்து எழுந்துவிட்டனர் நான் ஒன்றுமே அறியாதவன் போல கண்ணை மூடி
அமர்ந்திருந்தேன்.

போகவர 24 மணி நேரப்பயணத்தில் நான் பேசிய வார்த்தைகள் என்னவென்று
யோசித்துப்பார்த்தேன். செல்பேசியில் பேசிய ஓரிருவார்த்தைகள் தவிர ஒருவார்த்தைகூட
பேசவில்லை.


கடந்த இரண்டு நாள் மழையில் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது
என்றார்கள். குற்றாலத்திற்கு நான் சென்றதே இல்லை போய்ப்பார்த்தேன். விக்ரமாதித்யன்
கவிதை நினைவுக்கு வந்தது. ஆசை தீர குளித்துமுடித்து வெளியேவந்தேன். சாலையில்
ஒருவர் டிவிஎஸ் அம்பதில் பதனி விற்றுக்கொண்டிருந்தார். குடிக்கலாம் என்று அருகில்
சென்றால் கள் இருக்குது குடிச்சி பாக்கறிங்களானே என்றார். தெய்வமே குடுங்க என்றேன்.
குடுத்தார் சர்க்கரைக் கரைசல் அது. எதுவும் சொல்லாமல் காசைக்கொடுத்துவிட்டு
"அண்ணே கள்ளுக்காரன காலைல எழுப்பி கூட்டிகிட்டே போய் கள்ளு குடிச்ச ஆளுங்க
நாங்க" என்றேன். காசுகுடுத்தாச்சில்ல எடத்த காலிபண்ணுடே என்கிறார்.


மனிதர்களுடன் சேர்ந்து குரங்குகளும் சிக்கன் சாப்பிட ஆரம்பித்துவிட்டன. அதுவும்
எலும்பை மரத்தின் மேலே எடுத்துபோய் கடித்து நம் தலையிலேயே குறிபார்த்து
எறியவும் தெரிகிறது அதற்கு. முத்துலிங்கத்தின் கட்டுரை ஒன்றுல் மேஜரது வளர்ப்பு
குரங்கு குறிப்பிட்ட நேரத்தில் பைப்பை திறந்து குளித்துவிட்டுப்போகும் என்று படித்த
ஞாபகம். வாசுதேவநல்லூர் அடுத்த தலையணை என்ற ஓடைக்கு நண்பர்களுடன்
சென்று அருவியில் குளித்துவிட்டு அங்கேயே சமையல் செய்து காட்டின் நடுவில்
உணவருந்தினோம். வழியில் சற்றுமுன்னர் யானை வந்துவிட்டுப்போன தடயங்கள்
இருந்தன. சூடான யானைச்சாணத்தை ஒருவர் பார்சல் கட்டி எடுத்துப்போனார்.
வாசுதேவநல்லூரில் பார்க்கும் வயல்களில் எல்லாம் மயில்களாக உள்ளது. ஒன்று
கூட தோகைவிரித்து ஆடவில்லை.

காதல் வைபோகமே பாடல் பார்த்தேன். நமீதா இல்லாவிட்டால் சரக்குகுமார், சுந்தர் சி
போன்றவர்கள் சினிமா அனாதைகள் ஆகிவிடுவார்கள் போல.

கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் கிட்டத்தட்ட வாசித்து முடித்தாயிற்று.
வாசித்து நிமிர்ந்து வலைப்பூ படிக்க ஆரம்பித்தால் ஸ்க்ரோல் பண்ணமட்டுமே முடிகிறது.
தலைப்புகூட மனதில் தங்குவதில்லை.

பின்குறிப்பு: தம்பினு இன்னொருத்தர் எழுதறாங்கண்ணே, என்ன ஏதுன்னு விசாரிங்க,
பகுமானமா இருந்துக்கப்பு, உம்பேர்ல வேற யாரோ பாத்தனே தம்பி, தம்பி... எங்கய்யா
ஆளையே காணும் கேப்புல உன்பேர்ல இன்னொருத்தர பாத்தனேப்பா நிஜார கெட்டியா
புடிச்சக்கப்பு என்று நண்பர்கள் சொன்னார்கள்.

எனக்கே நீண்ட நாளாக இதை மாற்றுவதில் எண்ணம் அதற்கான காரணங்கள் மூன்று.
என்னப்பா தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரன் மாதிரி பேர் வெச்சுகிட்டியா...?
மாதவன்னு நினைப்பா...?
முத்துன மாங்கா மாதிரி இருந்துகிட்டு தம்பினு பேர் வெச்சிருக்கியே என்னப்பா நியாயம்?

புதுசா வந்திருக்கும்(?) தம்பி என்ற நண்பருக்காகவும் ரொம்ப நாளா மனசுல இருக்கற என்
எண்ணத்துக்காகவும் நானே வெச்சுகிட்ட இந்த பேர மாத்தி என் பேரையே வெச்சுகிட
போறேன்.

சுயகுறிப்பு, சோறுபொங்கி சாப்பிட்டது, இன்னபிற குறிப்புகள் எழுதறத விடணும்னு
நினைச்சாலும் முடியல. எழுறதே இல்லையே ஏம்பா கதிரு என்னு கேட்ட அந்த
இரண்டு நல்ல(?) உள்ளங்களுக்கும் இந்தப்பதிவு சமர்ப்பணம்.

Monday, January 12, 2009

நாட்குறிப்பு போன்றவை

பொதுவாக தற்கொலை செய்துகொள்பவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
தீர்க்கமான முடிவுடன் தற்கொலை செய்துகொள்பவர் இவர் பிழைக்க வாய்ப்புகள்
இல்லாதவாறு சூழ்நிலையை அமைத்துக்கொள்வார். இரண்டாவது சுற்றத்தவரை
பயமுறுத்தவென்று தற்கொலை செய்துகொள்பவர் போல நடிப்பவர். மிகப்பெரும்பாலும்
இரண்டாவது வகையினர்தான் அதிகம். பல்வேறு பிரச்சினைகளால் தற்கொலை
முடிவு எடுப்பவர்கள் ஒருபுறம் என்றால் மறுபாதி காதல்தோல்வி என்ற காரணமே
பின்னால் இருக்கிறது (கள்ளக்காதலும் இதில் அடக்கம்).

இரண்டு வருடங்களுக்கு முன்பு பால்யகால சினேகிதன் ஒருவனின் அப்பா பூச்சிமருந்து
குடித்து தற்கொலை செய்துகொண்டார். வெற்றிலைத்தோட்டத்தில் வெற்றிலை திருடி
கையும் களவுமாக சிக்கிய அவமானத்தில் பூச்சிமருந்தை காதில் ஊற்றிக்கொண்டு
விட்டார். சில நிமிடங்களில் உயிர் பிரிந்துவிட்டது. பொண்டாட்டி வேறு ஒரு
ஆணுடன் படுத்ததால் தற்கொலை செய்துகொண்டார் என் பக்கத்துவீட்டுக்காரர்.
வினோதமான மருந்துநெடியுடன் முகம் மஞ்சள் நிறத்திற்கு மாறிப்போயிருந்தது
டவுசரை இறுக்கிப்பிடித்தபடி சேலைகளின் பின்புறத்தில் மறைந்திருந்து கண்ட
காட்சிகள் நினைவில் வருகின்றன. தேர்வில் தோல்வியடைவதால், கடன் தொல்லையால்,
சோரம் போனது தெரிந்துபோனதால், களவாடியதால் இப்படி நிறைய தற்கொலைகள்
சகஜம் இங்கே. வெளியூர் நண்பர் ஒருவர் சகநண்பர் பேசாமல் தன்னை உதாசீனப்படுத்துவதால் அதை தாங்கமுடியாது பூச்சி மருந்தைக் குடித்துவிட்டார்.

எப்படியோ அவசர அவசரமாக மருத்துவமனையில் சேர்த்து உயிர்பிழைக்க வைத்தனர்.
அவரைப் பார்த்து ஆறுதல் சொல்வதற்காக அம்மாவுடன் திருக்கோவிலூர் அரசு
மருத்துவமனைக்கு சென்றிருந்தேன், பழங்கால சுண்ணாம்பு சுவற்றுடனான ஓட்டுக்
கூரை கட்டிடம். சுவரெல்லாம் சுண்ணாம்பு உதிர்ந்துபோய் பரிதாபமான உணர்ச்சிகளை
மனதில் உருவாக்கியது. உள்புறம் தோற்றத்தில் சேதுபடத்தில் வரும் காட்சிகளை
நினைவுபடுத்துவது போல இருந்தது. சுவரோரங்களிலும், சில படுக்கைகளிலும்
நோயாளிகள் படுத்துக்கிடந்தனர். படுக்கை இல்லாததால் மூலையில் பாய் ஒன்றை
விரித்து அதில் படுக்க வைத்திருந்தனர் நண்பரை. சுவருக்குப் பின்னால் மூத்திரப்புரை
போல. நிற்கவே முடியவில்லை. பழங்களை அளித்துவிட்டு ஆறுதல் சொல்லிக்கொண்டு
இருந்தார். நான் சற்று நகர்ந்து மற்ற முகங்களை கவனிக்க ஆரம்பித்தேன். உலகத்தின்
துயரமான முகங்கள் தமிழக மருத்துவமனைகளில் மட்டுமே சாத்தியம் என்பதுபோல
இருந்தது. பல அலட்சியங்கள் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய அலட்சியமாக அதன் உருவம்
இருப்பது போல பட்டது. ஜன்னலின் ஓரத்தில் பச்சை நிறத்தில் பூச்சிக்கொல்லி
மருந்துக்குப்பி இருந்தது. அவர் குடித்ததாக இருக்கலாம் மேலும் இதுபோன்ற
கேஸ்களில் மருத்துவர் நோயாளி குடித்த வஸ்துவை பார்த்து அதற்கேற்றபடி மருந்து
தருவார். திறந்து முகர்ந்து பார்த்தேன் கூவமெல்லாம் பிச்சை வாங்கவேண்டும்.

குழப்பமான மனநிலைய உருவாக்குவதுபோல உணர்ந்ததால் கிளம்பலாம் என்று
அம்மாவுடன் கிளம்பினேன். மருத்துவமனை வாசலில் இடதுபுறம் ஒருதரம் திரும்பி
பார்த்தார் அம்மா. "அங்கேதாண்டா உன்னை பெத்தெடுத்தேன்" என்று சொன்னார்.
உன்ன மட்டும் இல்ல உங்க நாலு பேரையும் அங்கேதான் பெத்தேன் என்றும். உடனே
அங்கே சென்று பார்க்கவேண்டும் போல இருந்தது. கையைப்பிடித்து அழைத்துச்சென்றேன்.
அது ஒரு பெரிய ஓட்டுக்கூரையின் கீழ் அமைந்த கூடம். இரண்டாவது கட்டிலில்
சமீபத்தில் பிரசவித்த குழந்தையுடன் உறங்கிக்கொண்டிருந்தார் ஒருவர். அங்கேதான்
என்னையும் ஈன்றெடுத்ததாக அம்மா சொன்னார். நெகிழ்ச்சியாக உணர்ந்தேன்.
---

இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் திமுகவின் பொதுக்குழு கூடி
தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதை நேரடியாக ஒளிபரப்பின. கலைஞர் கருணாநிதி
பத்தாவது முறையாக மீண்டும் தலைவராகவும், பொருளாலராக ஸ்டாலினும் தேர்ந்து
எடுக்கப்பட்டதாக முடிந்தது. கருணாநிதி அமெரிக்காவின் தொழிளார் கட்சிக்கோ அல்லது
இங்கேயே இருக்கும் எதோ ஒரு கட்சிக்கோ தலைவராக தேர்ந்தெடுக்கப்படவில்லை
அவரது கட்சிக்குதான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாரே ஒழிய வேறொன்றும்
இல்லை. உயிருள்ளவரை திமுகவிற்கும் தமிழகத்திற்கும் அவர்தான் தலைவரும்
முதல்வரும் ஆவார். மேலும் எந்த வாரிசை தலைமைப்பீடத்திற்கு அமர்த்தப் போகிறார் என்பதற்கு ஆதிதான் இது. இதற்கு நேரடி ஒளிபரப்பு, பட்டாசு வெடிப்பு என இத்தனை ஆர்ப்பாட்டம். இன்று காலை தேர்தல் வாக்குகளின் முன்னணி நிலவரங்களை ஆர்வமாக நண்பர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். வேடிக்கையாக இருந்தது. குழப்பமான எதிர்க்கட்சிகள்
அதன் கோமாளித்தலைவர்கள் என போட்டிக்களத்தில் இருக்கும்போது வெற்றிவாய்ப்பு
ஆளுங்கட்சிக்கு மட்டுமே இருக்கலாம். சகோதரி நமீதா என்று விளித்த சரத்குமார்
கட்சியின் வாக்கு எழுநூற்று சொச்சமாம். இது அவருக்கு முன்பே தெரிந்துவிட்டது
அதனால்தான் "வெற்றி முக்கியமல்ல களம் கண்பதுதான் முக்கியம்" என்று அவரே
அறிக்கை விட்டுவிட்டார். இந்தக்கோமாளிகள் காஷ்மீர் பனிமலையில் நாயகியின்
இடை தடவுவதோடு விட்டு விடுவதே சிறந்தது.

---

இப்பொழுதும் கிராமப்புறங்களில் தேர்தலின் போது "உங்கள் வாக்குகள் யாருக்கு" என்று
கேட்டால் எம்ஜியார் கட்சிக்கு என்றுதான் சொல்வார்கள். அதைப்போலவே இன்றும்
எந்த தொலைக்காட்சி பார்ப்பீர்கள் என்று கேட்டால் அதுவும் சன் டீவி மட்டுமே.
இதனால் வீட்டுக்குள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் விளம்பர இடைவேளையில்
அதிகபட்ச ஒலிகளுடன் படிக்காதவன், தெனாவட்டு, திண்டுக்கல் சாரதி ஆகிய
விளம்பரங்களை மூன்று லட்சத்திற்கும் அதிகமான முறை காதாலும் கண்ணாலும்
பார்த்திருப்பேன். விதி. எந்திரன் எப்படியும் இரண்டு மூன்று வருடத்திற்கு டாப்
டென்னின் முதலிடத்தில் இருக்க வாய்ப்பிருக்கிறது.

---

எங்களூர் ஏரி நவம்பர் மாதவாக்கில் நிறைந்து காணப்படும். கோடி விழும் இடத்தில்
அருவி (நீர் வீழ்ச்சி அல்ல)போன்ற இடத்தில் நீர் வந்தால் நிறைந்துவிட்டது என்று
அர்த்தம். ஜனவர் மாதவாக்கில் அல்லி, தாமரை மலர்களால் நிரம்பும். தாமரை இலை
மற்றும் பூக்களால் நிறைந்து ஒருகட்டத்தில் அது மட்டுமே தெரியும். அதிகாலையில்
அல்லி, தாமரைகள் விரிய நீரிலிருந்து மெல்லிய புகைபோல ஆவி கிளம்பும் பார்த்துக்
கொண்டே இருக்கலாம். அதுவும் கக்கா போய்க்கொண்டே ரசிப்பதென்பது விசேஷமானது.

குறிப்பு: ஒருவாரத்திற்கும் முன்பு எழுதப்பட்டது இது. இணையத்தில் குழப்பம் வந்ததால்
தாமதமாக....

Saturday, January 10, 2009

எஸ்.ரா, சாரு, நாய்க்குட்டி

எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்து எப்போழுதுமே எனக்கு பிடித்தமானது. ஆவியில்
வந்த அவரின் துணையெழுத்து படித்து கல்லூரிக்காலத்தில் அவரின் மேல் பைத்தியமாக
இருந்தேன். சமீபத்திய அவரின் புத்தக வெளியீட்டுவிழாவில் நேரில் சந்தித்தது
மிக்க மகிழ்ச்சியைத்தந்தது. விழாவில் அவர் பேசியதுகூட அவ்வளவு அருமையாக
இருந்தது. எழுத்தைப்போலவே மிக மென்மையான மனிதர்.

விழா ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் சாருநிவேதிதா எனக்கு முன்னிருக்கையில்
வந்து அமர்ந்தார். பேசலாம் என்று நினைத்து எங்கே திட்டிவிடுவாரோ என்று
விட்டுவிட்டேன். அவர் வந்தவுடன் அனைவரும் அவரையே பார்த்தனர். சாரு
வந்த கொஞ்ச நேரத்தில் ஜெயமோகன் நான்கு பேர் புடைசூழ வந்தார். நேர் எதிர்
வரிசைகளில் இருவரும் அமர்ந்திருந்தார்கள். எதிர்பாராது சந்திக்க நேர்ந்தால் கவுண்டமணி
செந்தில் போல பேசிக்கொள்வார்களோ என்று எனக்குள் கற்பனை ஓடியதில் தனியாக
சிரித்துக்கொண்டிருந்தேன். மேடையில் எனக்கு பேசவராது ஸ்கிரிப் பேப்பர் இருந்தாதான்
பேசுவேன் ஆனா இப்ப எப்படி பேசப்போறன்னு எனக்கே தெரிலன்னு சொல்லிட்டு
அனைவரையும் பேச்சில் வியப்பிலாழ்த்தினார் நாடக/திரைப்பட/எழுத்தாள/ க.நா.சு
அவர்களின் மருமகனான பாரதிமணி. இவர் பேச்சை மிகவும் ரசித்தேன்.

க.நா.சு இறந்தபோது அவரின் உடைமைகள் யாவையும் ரயிலில் டெல்லிக்கு
அனுப்பினார்களாம் ஆயிரக்கணக்கான புத்தகங்களுக்கு மத்தியில் சாகித்திய அகாதமி
விருதையும் சேர்த்து. அவற்றை பெற்றுக்கொண்ட பாரதிமணி அவரின் காரில் மிகுந்த
சிரமத்துக்கிடையில் அடைத்து விட்டாராம். ஓட்டுனர் இருக்கை தவிர அனைத்து இடங்களிலும்
புத்தகமே இருந்திருக்கிறது. அதில் புகுந்த திருடன் டாஷ்போர்டில் இருந்த ஆயிரம் ரூபாய்
மதிப்பிலான சிகரெட் பைப்ப திருடிவிட்டானாம். இந்தி தெரிந்த திருடன் சாகித்திய அகாதமி
விருதை தூக்கி தூரப்போட்டுவிட்டு போயிருக்கிறான். (விருதுகள் குறித்து அவர் சொன்னது இது)

இரண்டு நாள் கழித்து அதே பாரதிமணியை சாருவின் விழாவில் சந்தித்தேன். பைப்பை
எடுத்து புகைக்க ஆயத்தமாகிக்கொண்டிருந்தார். "உங்க பைப்ப பத்திரமா பாத்துக்கோங்க
சார்" என்றேன். "என் பைப்ப எவன்யா திருடப்போறான்" என்று சிரித்தபடி சொன்னார்.
இதில் என்ன உள்குத்து என்றே புரியவில்லை.

சிறப்பு அழைப்பாளராக வந்த ஒருவர் (பெயர் கவனிக்கவில்லை)ஒரு குயர் பேப்பரின்
அனைத்துப்பக்கங்களிலும் எதையோ எழுதிவந்து வாசித்து இம்சித்தார். மொத்தக்கூட்டத்தில்
அவர் பேச்சு மட்டுமே சுவாரசியமற்றதாக இருந்தது. அவர் பேசிக்கொண்டிருந்தபோது
ஜெயமோகன் அருகில் அமர்ந்திருந்த அவரது நண்பர்களிடம் பேசிக்கொண்டேஏஏஏ இருந்தார். எனக்கு என்னவோ போல இருந்தது வெளியில் சென்று விற்பனை செய்துகொண்டிருந்த புத்தகங்களை பார்த்துக்கொண்டிருந்தேன் எஸ் ராமகிருஷ்ணனின் சிறுகதைத்தொகுப்பு
ஒன்றை வாங்கி மெதுவாக புரட்டிக்கொண்டிருந்தேன். சாரு மெதுவாக வெளியே வந்தார்.
சிறிதுநேரம் அரபி இசை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். நூலின் முதல்பக்கத்தில்
அவரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டேன்.அவரின் பத்துநூல்கள் வெளியீட்டு விழாவுக்கு
வருமாறு அழைத்தார். எங்கே நடக்கிறது என்று வாய்தவறி கேட்டுவிட்டு பிறகு
மன்னிச்சுடுங்க எசமான் ரெண்டுமுறை அழைப்பிதழ படிச்சும் மறந்துபோய்
கேட்டுவிட்டேன் என்றதும் சிரித்துவிட்டார். கைகுலுக்கிவிட்டு நேராக ஜெயமோகனிடம்
சென்று கையெழுத்து போடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொண்டேன். அவரும் வாங்கி
முதல் பக்கத்தில் சாருவின் கையெழுத்துபார்த்து திகைத்து யோசித்து பின் அவரும்
கையெழுத்து போட்டார். பிறகு அதேபக்கத்தில் ராமகிருஷ்ணனிடமும் கையெழுத்து
வாங்கினேன். எல்லாவற்றுக்கும் கீழே கொட்டை எழுத்தில் (அண்ணாச்சி கவனிக்க) என் பெயரை எழுதிக்கொண்டேன்.

--

இரண்டுநாள் கழித்து சாருவின் பத்து நூல்கள் ஒரே சமயத்தில் வெளியிடும் விழா
கொட்டும் மழைக்கு இடையில் இனிதே நடந்து முடிந்தது. பத்து நூலினைப்பற்றியும்
பேச பத்து விருந்தினர். தொகுத்து வழங்கியவர் தவிர ஏனைய அனைவரும் நன்றாக
பேசினர். கடைசி நேர இழுபறியில் முரளிகண்ணனை பலிகடாவாக்கியிருந்தார்கள்.
குறிப்பாக இந்திராபார்த்தசாரதியின் பேச்சு சந்தோஷப்படுத்தியது. மனிதர் தள்ளாடும்
முதுமையில் இருந்தாலும் பேச்சு கணீரென்று தடையில்லாமல் வந்தது. அனுபவம்.
அமீர், சசி, தமிழச்சி மூன்று பேரும் மேடையில் பின்னிருக்கையில் அமர்ந்து
கடலை போட்டுக்கொண்டிருந்தனர். சினிமா சினிமா நூல் குறித்து மதன் பேசுகையில்
சாருவை ஒரு காட்டு காட்டிவிட்டார். ஆனால் பின்னால் வந்த பிரபஞ்சன் பெரிய
ஆப்பாக மதனுக்கு வைத்துவிட்டுப்போனார். முந்தைய விழாவில் பாரதிமணி
கலக்கினாரென்றால் இந்த விழாவில் பிரபஞ்சன் கலக்கினார்.

மேடையில் எப்படி இயல்பாக ஒரு தோழனிடம் பேசுவதைப்போல பேசவேண்டும்
என்பதை எழுத்தாளர் சிவகாமியிடம் கற்கலாம். அவ்வளவு தெளிவாக, அழகான
உச்சரிப்போடு அவர் பேசியது ஆச்சரியமாக இருந்தது. எழுதும்போதுகூட அவரின்
அமைதியான முகம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. இதற்கு நேர் எதிராக தமிழச்சி
தங்கபாண்டியன் அவர்களின் பேச்சு அமைந்திருந்தது. சாலமன் பாப்பையா பட்டி
மன்றத்தில் பேசுவதைப்போல "பேசிவிட்டு ஓரிரு நொடி அமைதியாக ரசிகர்களின்
நாடியறிய இடைவெளி விடுவதுப்பேசினார்". மூடுபனிச்சாலையை வாங்கவேண்டும்
என அவர் பத்துநிமிடம் கோரிக்கை விடுத்தார்.

சுரேஷ் கண்ணன் அவர்களை சந்தித்தேன். மொத்தமாக இரண்டு மூன்று வார்த்தைகளே
பேசியிருப்போம். விழா மும்முரத்தில் அதிகம் பேசவில்லை.

விழாவின் முடிவாக நீண்ட உரை ஒன்றை நிகழ்த்தினார் சாரு நிவேதிதா. வழக்கம்போல
கூபா, சீலே, கரப்பானுக்கு ஏது நாடு, ப்ரான்சு, கேரளா, மாத்யமம், தமிழ் இலக்கியம்,
அதன் வாசகர்கள் என பிரித்து மேய்ந்தார். அரங்கே அமைதியாக அவர் பேச்சைக்கேட்டது.
நானும் ரசித்துக் கேட்டேன்.

விழா முடிந்ததும். கண்ட்ரி கிளப்பில் விருந்து. நல்ல பையனாக நாலு டம்ளர் தண்ணியும்
லக்கி, அதிஷா, நர்சிம், சாரு என அனைவரிடமும் நான்கு வார்த்தை பேசிவிட்டும்
வெளியில் வந்தேன்.

சாலையை மழை சுத்தமாக துடைத்து விட்டிருந்தது. அதிகாலை மூன்று மணியிருக்கும்
அங்கிருந்து குரோம்பேட்டை அடைவது எப்படி என்றே தெரியவில்லை. யாருமில்லாத
சாலையில் நீண்ட தூரம் நடந்து ஆட்டோபிடித்து வந்தது மறக்க முடியாதது.

--

இருவாரம் முந்தைய நாள் ஒன்றின் அதிகாலைக்குளிரில் வெடவெடத்தபடி ஒரு குட்டி கருப்புநாய் வீட்டின் திண்ணை ஓரம் தஞ்சமடைந்திருந்தது. சிறிது பால் ஊற்றி
அதன் பசியாற்றியதன் நன்றி மறவாமல் வீட்டையே சுற்றி சுற்றி வந்ததால் அதனை
வளர்க்கலாம் என்று முடிவானபோதுதான் தெரிந்தது அது பெட்டை நாய். வீட்டைச்
சுற்றி குட்டிபோடும் என்பதால் வேண்டாம் என மறுத்தார்கள். தினமும் காலையில்
எழுந்ததும் திண்ணையிலிருந்து இறங்கி வந்து காலைச்சுற்றி விளையாடும்.
விளையாட்டாக காலை உதறும்போது பயத்தில் கடித்துவிட்டது. கடித்தநாய்
கண்டிப்பாக உயிரோடு இருக்கவேண்டும் என்பதால் கட்டாயமாக கண்பார்வையில்
இருந்தே ஆகவேண்டும் என அக்கம் பக்கம் வசிக்கும் இலவசமருத்துவர்கள்
ஆலோசனை கூறினார்கள். ராஜ உபச்சாரத்துடன் அது வளர்ந்துகொண்டிருக்கிறது. குட்டிநாயால் எப்போதுமே நேராக ஓடமுடியாது. குழந்தை எப்படி எப்படி தத்தி தத்தி நடக்கிறதோ அதேபோல தத்தி தத்தி சரக்கடித்தைப்போல ஓடிவரும் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். தினமும் பொழுதுபோக்கே அதுதான்.

Friday, January 02, 2009

அண்ட பிரம்மாண்ட கோடி அகில பரிபாலனா


பாடல் வெளியாகும் அன்றே இணைத்திலிருந்து தரவிறக்கி கேட்கும் மனோபாவம்
தொடர்ந்தபடி இருப்பதால் அது தவறு என்பதே மறந்து விட்டிருக்கிறது. இணைய
காலத்தில் இதெல்லாம் சகஜமப்பா என்றாலும் அவ்வப்போது தோன்றுகிறது.
கோழித்தலையை அறுக்கும் நேரத்தில் ச்ச்சோ என்றாலும் அடுத்தநொடி குழம்பை
நினைத்து நாக்கு உச்சு கொட்டும். சேது படம் பார்த்து பாலா மீது பிரமித்திருந்தேன்.
நான் முதல் முதலாக காசு கொடுத்து ஆடியோ கேசட் வாங்கியது பாலாவின் நந்தா.
மற்றபடி ரேடியோவிலோ, நண்பர்களின் வீட்டிலோ மட்டும்தான் பாடல்களைக் கேட்கும்
வழக்கம். மெனக்கெட்டு வாங்கி ரசிக்கும் அளவுக்கு என் ரசனை இல்லை. ஆனால்
சேதுவின் பாடல்கள் எல்லாமே மிகவும் தேர்ந்த வரிகளைக்கொண்ட அற்புதமான
பாடல்கள். அதனாலேயே நந்தா பாடல் கேசட்டை வாங்க என்னைத்தூண்டியவை.

எங்களூரில் உள்ள ஒரு மியூசிக் சென்டரில் தினமும் சென்று நந்தா பாடல்
வந்துவிட்டதா என்று கேட்கும் அளவுக்கு என்னை மாற்றி விட்டிருந்தது. ஒருநாள்
அதிகாலையில் வந்தேவிட்டது. வாங்கிவந்து கைகள் நடுங்க டேப்ரிக்கார்டரில்
போட்டுக்கேட்டேன். கேட்டுக்கொண்டே இருந்தேன். எனக்குப் பிடித்த பாடல்களை
திகட்டும் அளவுக்கு கேட்டுக்கொண்டே இருப்பேன். தொடர்ந்தபடி ஒருவாரமெல்லாம்
ஒரே பாடலை ஆயிரக்கணக்கான முறை கேட்டிருக்கிறேன். அப்படி நந்தாவில் மிகவும்
பாதித்த ஒரு பாடல் "எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில்" எத்தனை முறை
கேட்டிருப்பேன் என்றே தெரியாது.

அதேபோல பிதாமகன் படத்தின் "அடடா அடடா அகங்கார அரக்க கைகளில் உலகிங்கே"
பாடலை கோடிக்கணக்கான முறை கேட்டிருப்பேன். ஒலியாகவும், ஒளியாகவும்
சிறப்பாக இந்தப்பாடல் இருக்கும். இந்த பாடலை எப்படி சாந்தக்குரல் ஜேசுதாசிற்கு
கொடுத்தார்கள் என்று முதலில் நினைத்தேன் பிறகு இவரைத்தவிர வேறு எவரும்
இவ்வரிகளுக்கு நியாயம் செய்திருக்க முடியாது இளையராஜாவின் தேர்வு எப்போதுமே
சரியானதாக இருக்கும்.

இன்று முழுக்க எனது கணிணியில் நான் கடவுள் பாடல்கள் மட்டும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

நான் கடவுளிலும் திரும்ப திரும்ப கேட்கும் ஒரு பாடல். "அண்ட பிரம்மாண்ட கோடி அகில பரிபாலனா" எனும் வரிகளைக்கேட்கும்போது நாடி நரம்பெங்கும் புதுரத்தம் புகுந்தோடுவது போல உணர்வு. அடடா அடடா அகங்கார பாடலைப்போலவே மிக அழுத்தமானதாக இருக்கலாம்.


சில நாட்களுக்கு முன்பு வார இதழில் பாலாவின் பேட்டி ஒன்றினைப் படிக்க நேர்ந்தது.

"இது கடவுள் இருக்காரா, இல்லையாங்கிற ஆத்திகநாத்திக விளையாட்டு இல்லை. பக்திப் படம் எடுப்பது என் வேலை இல்லை. எவருடைய நம்பிக்கை களையும் காயப்படுத்தக் கூடாது என்பது என் இயல்பு. அந்த அடிப்படை நாகரிகத்தில் நான் எப்போதும் தெளிவா இருக்கேன். இது விளிம்பு நிலை மனிதர்களின் உலகம். ஒரு எளிய கேள்வியை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன். படம் பார்த்தால் பதில் கிடைக்கும். என்னை, உங்களை, நம்மை, நம் உலகத்தை அது இன்னும் தெளிவாக்கும்!"


''ஊர்ல உலகத்தில் எவ்வளவோ பிச்சைக்காரங்க இருக்காங்க. எதிர்ப்படுற எல்லா பிச்சைக்காரங்களுக்கும் நாம் உதவுவதில்லை. பாவப்பட்டோ, இரக்கப்பட்டோ, புண்ணியத் துக்கோ, நாம போடுற சில சில்லறைக் காசுகளோட, அவங் களை ஒதுக்கிடுறோம். 'அய்யா தர்மதொர, அம்மா மகராசி!'ன்னு ஒரு வாய் சோத்துக்காக நம்மிடம் கையேந்தி நிக்கிற பாவப்பட்ட மனிதர்களைப் பத்தி யோசிச்சி ருக்கோமா? பிச்சை எடுக்கிறது என்ன குலத் தொழிலா? அவங்க எப்படிப் பிச்சையெடுக்கிற நிலைமைக்கு வந்தாங்க?

பெத்த பிள்ளைங்களால விரட்டி அடிக்கப்பட்டு, வீதிக்கு வந்த துக்கம் தாங்க முடியாம, காவி வேட்டிக் கட்டி கௌரவமா பிச்சையெடுக்கிறது எவனோன்னு போறோம்... அவன், நம்ம அப்பனா இருந்தா? மானத்தைக் காப்பாத்திக்க வழி தெரியாம, பிச்சையெடுக்கிற அவமானத்தோட அலையுற பொம்பளை, நம்ம அம்மாவா, அக்காவா இருந்தா? அப்பனோ, ஆத்தாவோ உடம்புத் திமிர்ல யாரோடவாவது ஓடிப் போக, ஆதரவுக்கு யாருமில்லாம, எச்சி இலையை நக்கித் திங்கிறது நம்ம புள்ளையா இருந்தா? அப்பத் தெரியும்ல அந்த வலி!


இப்படி சொல்லியிருந்தார்

நெடுஞ்சாலைப் பிணியாளர்கள் என்று ஒரு ஜாதியே நம் நாட்டில் உண்டு இவர்களுக்கென்று
இரக்கப்படவோ, ஆதரவளிக்கவோ எவரும் இல்லை. இந்தியப் பிரஜைகளாய் இருந்து
பின் தூக்கியெறியப்பட்டவர்கள். இவர்கள் குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள் என்பதை
விட மக்களால் கைவிடப்பட்டவர்கள் எனலாம். ஏன் இப்படி சொல்கிறேன் என்றால்
சில நாட்களுக்கு முன்பு அதிகாலைக்குளிரில் பவானியில் திருமணத்திற்கு செல்லும்
வழியில் நான் கண்டவையே. கிட்டத்தட்ட பதினேழுக்கும் மேற்பட்ட சித்தம்
கலங்கிய நிலையில் சாலை ஓரங்களிலும் மரங்களின் அடியில் அழுக்குச்சட்டை
பரட்டைத்தலையுடனும் நான் கண்டவர்களின் எண்ணிக்கை. அதைவிட கூடுதுறை
கோயில் வாசல்புறத்தில் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். சபரிமலைக்கு
செல்லும் சாமிகள், தரிசிக்க வந்த பக்தர்கள், திருமணத்திற்கு வந்தவர்கள் என
அனைவருமே மறக்காமல் கோயில் உண்டியலில் சாமிக்கு சில்லறைகளாகவும்
நோட்டுகளாகவும் கடவுளுக்கு கருணை காட்டினார்கள். அருகிள் அனாதைகளாக
நிற்கும் சக மனிதர்களுக்கு எவரும் மறந்தும் கூட எதையும் தந்துவிடவில்லை.
இந்தியாவில் உள்ள நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் இப்படி சித்தம் கலங்கிய நிலையில்
திரிபவர்களைக் கணக்கெடுத்தால் கூட சில லட்சங்கள் தேறலாம்.

அங்கிருந்த ஒரு டீக்கடையின் அருகில் நான் சில நண்பர்கள் டீ சாப்பிட்டுக்கொண்டிருக்கையில்
அடர்ந்த தாடி, சிக்குத்தலை, பின்புறம் சுத்தமாய் கிழிந்த கால்சட்டை மட்டும் அணிந்திருந்த
ஒருவர் பக்கத்தில் வந்து நின்றார். அவருக்கும் சேர்த்தே டீ சொல்லி சாப்பிட்டோம்.
ஒரு சலாம் வைத்துவிட்டு அருந்தினார். பழக்கப்பட்டுவிட்டார் போல. டீ சாப்பிட்டவுடன்
இருவர் மட்டும் புகைக்க ஆரம்பித்தோம். அவர் காதோரத்திலிருந்து ஒரு பீடியை எடுத்து
பற்ற வைக்க கடைக்கு சென்றார். ஈரமாக இருந்த அந்த பீடி பற்றவே இல்லை. இரண்டு
மூன்று என தீக்குச்சியின் எண்ணிக்கை அதிகமாகவே கடைக்காரர் தீப்பெட்டியை பிடுங்கி
வைத்துக்கொண்டார். அவர் நெருப்புக்காக என் முகத்தை பார்க்க ஆரம்பித்தார்.
என்னிடமோ தீப்பெட்டி இல்லை ஆனால் லைட்டர் இருந்தது. ஆனால் அதைக்கொடுப்பதிலோ
பற்ற வைப்பதிலோ விருப்பம் இல்லை. ஏனென்றால் அது ஏற்கனவே ரிப்பேராகி அளவுக்கதிகமாக நெருப்பு வருகிறது. முகமூடி அணிந்தத்தைப்போல முடி அடர்ந்த அவரின்
முகத்தில் உதட்டில் பொருத்தி பற்ற வைக்கும்போது கணிசமான முடி எரிந்துவிட
வாய்ப்பிருக்கிறது.

ஒருவழியாக தயக்கத்துடன் கொடுத்தபோது திருப்பி திருப்பி பார்த்து பற்றே இல்லாமல்
என்னிடம் கொடுத்துவிட்டார். பிறகு நானே பற்றவைத்தபோது இரண்டு மூன்று முடிகள்
கருகிவிட்டன. வாய்நிறைய புகை கக்கியபடி சென்றுகொண்டே இருந்தார் மக்கள்கூட்டம்
அவருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றன.

ஏழாம் வகுப்பு படிக்கையில் ஓர்நாள் மதியம் பள்ளியிலிருந்து சற்றுத்தள்ளி ஒதுக்குபுறத்தில்
ஒரு மின்மாற்றி உள்ளது அதன் அருகில்தான் அனைவரும் சென்று மூத்திரம் பெய்வோம்.
நீண்ட தூரம் பீய்ச்சி அடிப்பதில் தினமும் எங்களுக்குப் போட்டி. அப்போது புதரின் அருகில்
கருத்த நிறத்தில் தோல்கள் சுருங்கிய கிழவி ஒருத்தி உயிரை விட்டுக்கொண்டிருந்தாள்.
அவளின் உடைகள் ஒருகாலத்தில் வெள்ளை நிறமாய் இருந்திருக்கலாம். பார்த்த
மாத்திரத்தில் பயந்துபின்வாங்கி பிறகு பார்த்தோம். பள்ளியே திரண்டு வந்து பார்த்தது. அங்கே எலந்தப்பழம், இன்னபிற தின்பண்டங்கள் விற்ற கிழவிகள் கூட ஓடி வந்து
பார்த்து பயந்து பின் வாங்கினார்கள் நானும் இன்னொருவனும் ஓடிப்போய் தண்ணீர் வாங்கிவந்து வாயில் ஊற்றினோம். சிறிது குடித்து மீதம் எல்லாவற்றையும் வெளியில் விட்டாள். மணி அடிக்கவே மனதே இல்லாமல் கிளம்பினோம். சூனியக்காரக்கிழவி என்றார்கள் அவளைப்பார்த்தால் பரிதாபமாக இருக்கிறாளே ஒழிய சூனியம் வைப்பவளைப்போல தெரியவில்லை. வகுப்பில் இப்படியே நினைத்துக்கொண்டு இருந்தேன். பள்ளிவிட்டது ஓடிப்போய் பார்த்தால் வாய், மற்றும் கண் ஓரங்களில் எறும்புகள் மேய்ந்துகொண்டிருந்தன. அழுகையே வந்துவிட்டது. தெருவில் நாய் அடிபட்டால் கூட ரோட்டிலிருந்து இழுத்து ஓரமாய் விடும் மக்கள் ஒரு சக மனித உயிர் இறந்துவிட்டால்
பதுங்கி நழுவி விடுகிறது. கிட்டத்தட்ட ஏழுமணி கழித்து பேருராட்சி குப்பை அள்ளும்
வண்டி வந்துதான் அதை ஏற்றிச்சென்றது.

சாலை ஓரங்களில் திரிபவர்களை அப்போதிலிருந்தே கவனித்து வருகிறேன். சில சமயம்
உரையாடவும் செய்திருக்கிறேன். ஒரு சமயம் பளாரென்று அறையே வாங்கி இருக்கிறேன்.
அப்போது கல்லூரியின் உணவு இடைவேளையின்போது அருகில் இருந்த அண்ணாச்சி
கடைக்கு புகைக்கச்செல்வோம். தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் கல்லூரி
அது. ஊருக்கு சற்று தள்ளியே இருக்கும். கல்லூரி வாசலின் இருபுறத்திலும் புளிய
மரங்கள். ஒன்றின் அடியில் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தார் பலநாள் குளிக்காததினால்
உடல் அழுக்கேறி இருந்தது. கவனித்தபடியே சென்று விட்டேன். கல்லூரியின் பின்புறமே
விடுதி என்பதால் இரவு உணவு முடிந்ததும் மறுபடி சாலைக்கு வருவோம். அப்படி
திரும்ப வரும்போது அவர் அங்கே அமர்ந்திருந்தார். பலநாள் சாப்பிடாததின் வருத்தம்
முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. உடனே விடுதியின் சமையலறைக்கு சென்று
தட்டு நிறைய சோறு, குழம்பு ஊற்றி தண்ணிர் புட்டியுடன் வந்தேன். சிறிது தயக்கத்துடனே
அவரின் அருகில் சென்று தட்டையும் தண்ணீரையும் வைத்து சாப்பிடச்சொன்னேன்.
அவ்விடம் கொஞ்சம் இருட்டாக இருந்தது. எவ்விதமான பாவனையும் இல்லாமல் தட்டை
நகர்த்தி வைத்துவிட்டார். சிறிது நேர யோசனைக்குப் பிறகு சாப்பிட ஆரம்பித்தார்.
சாப்பிட்டதும் தண்ணீரை எடுத்து தட்டில் கை கழுவினார் பிறகு கழுவிய தண்ணீரையே
எடுத்துக்குடித்தார் பிறகு பாட்டில் தண்ணீரையும் குடித்துவிட்டு வைத்தார். இருவரும்
அருகிலிருந்த அண்ணாச்சி கடையில் சிகரெட் வாங்கி புகைத்தோம். நீண்ட நேரத்திற்கு
பிறகு வாய்திறந்து பேசினார். ஆனால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கிட்டத்தட்ட
இரண்டரை மணிநேரம் கேட்டுக்கொண்டிருந்தேன். பல முகபாவங்கள். அழுகை, சிரிப்பு,
ஏமாற்றம், மகிழ்ச்சி என மொழிக்கு அப்பாற்பட்ட மொழிகள் மட்டும் புரிந்தன.அவர் பேசிய பேச்சில் இருந்து அவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது. மற்ற எதுவுமே புரியவில்லை. எப்படி இங்கு வந்திருப்பார் என்றுகூட தெரியவில்லை. ஆனால் நம்மைப்போலவே எதோ ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருப்பார் என்று மட்டும்
தெளிவாக புரிந்தது.

எங்கோ படித்தது "மூளையழிவதும் கூட்டுக்குள் திரும்புவதும் ஒன்றே"

Friday, December 26, 2008

மொக்கை குறிப்புகள்

தொடர்ச்சியாக வீட்டிலிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. சில இடங்கள், பல
முகங்களில் பழையதை தேடி தினமும் தோற்றுப்போகிறேன். எல்லாமே மாறி
விட்டிருக்கின்றன. முதல் இரண்டு வாரங்கள் அடர்மழையும் தேநீருமாக ரம்மியமாக
இருந்தது, கடந்த இரண்டு வாரங்களாக கடும் குளிர். மழையானாலும் குளிரானாலும்
நம் பழக்க வழக்கங்கள் எதையும் மாற்றிக்கொள்வதே இல்லை. இதுபோன்ற எதிர்
குணங்களால் உடல்நிலையில் பருத்த மாற்றம்.

சிலம்பாட்டம், சேவல், தெனாவட்டு, காதலில் விழுந்தேன் என்று அனைத்துப் புதிய
திரைப்படங்களுக்கும் நண்பர்கள் வலுக்கட்டாயமாக மாலைகளில் இழுத்துச்சென்றார்கள்
நான்கு அற்புதமான மாலைகள் வீணாகிய வருத்தமில்லை என்றாலும் இதுபோன்ற
படங்களையெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக எப்படி சகித்துக் கொள்கிறார்கள்
என்று தோன்றியது. சொன்னதையே திரும்பச்சொல்லும் கற்பனை வறட்சி மிக்க
இயக்குனர்களின் படங்களைப் பார்ப்பதைவிட தொலைக்காட்சி சீரியல்களை
பார்க்கலாம். குறிப்பாக சிலம்பாட்டம் படம் பார்க்கையில் நெரிசல் மிக்க பேருந்து
நிலையத்தின் கழுவாத கழிவறைக்குள் நுழைந்த உணர்வு ஏற்பட்டது.

பொம்மலாட்டம் பார்க்க நேரத்திற்கு கிளம்பியும் அரங்கம் சென்றடைய தாமதம்.
டிக்கெட் கிழிப்பவரிடம் "உக்காரதுக்கு இடம் இருக்குங்களா அண்ணே" என்றேன்.
அவர் "படுத்துகிட்டே பாக்கலாம் சார்" என்றார். மொத்தக்குத்துகளையும் வைத்து
அவர் சொன்ன பதில் எனக்குப் பிடித்திருந்தது. முதல் பாதி சொக்கியது. இரண்டாம்
பாதியில் இமயத்தின் புலிப்பாய்ச்சல். படம் பார்க்கையில் இமயமே அவரைப்பற்றிப்
படமெடுக்க எதற்கு நானாபடேகர் என்று மனம் நினைத்தது ஆனால் முடிக்கையில்
அவரைப்பற்றி கொஞ்சமாகவும் மற்றும் சுதந்திரமான, நேர்த்தியான படைப்பாளியின்
நிலையை தெளிவாக விளக்குகிறது. இந்தப்படத்திலும் அர்ஜுன் வெளிநாட்டுக்கு
சென்று ஹீரோயினின் குண்டியை தடவுகிறார். விலுக் விலுக்கென்று ஆடுகிறார்.

இதுபோன்ற வெளிநாட்டு பாடல்காட்சிகள் பார்க்கும்போதெல்லாம் மனது மிகுந்த
அசௌகரியமாக உணர்கிறது. எதற்கு இந்த கோமாளி நடனங்கள்? இவர்கள்
இப்படி ஆடுவதைத்தான் மக்கள் ரசிக்கிறார்களா? அர்ஜுன், சிம்பு போன்றவர்கள்
நாயகியிடம் செய்யும் சில்மிஷங்களுக்குப் பதிலாக புணர்ச்சியே செய்துவிடலாம்.

நண்பர்களிடமிருந்தும், சொந்தமாகவும் இருபது நகைச்சுவை டிவிடிக்கள், இருபது
சினிமா நடிகர்கள், நடிகைகளின் சினிமா ஆடல், பாடல்கள் அடங்கிய டிவிடிக்கள் உள்ளது. இருபத்தி நான்குமணி நேர நகைச்சுவைச்சேனலும், பாடல் ஒலிபரப்பும் சேனலும்
ஆரம்பிக்கும் எண்ணம்கூட உள்ளது. கெக்கே பிக்கே என்று பேசி பாடல் ஒலிபரப்பலாம்.
அருக்கானி பிகர்கள் நிறையவும் உள்ள ஊர் என்பதால் நிறைய விளம்பரங்கள் வரலாம்.
நிறையக் கேணையர்கள் போன் செய்து விருப்பப் பாடலைக் கேட்பார்கள். அதைத் தன்
நண்பர்களுக்கு "டெடிகேட்" செய்து பரவசப்பட்டுக்கொள்வார்கள். இதெல்லாம் கூட
கொடுமையில்லை அடங்காத நிஷா ஆடிய ஆட்டத்தில் தமிழகமே துண்டாகிக்கிடந்த
காலையில் சன் மியூசிக்கில் ஒரு ஜந்து "happy Rainy day" என்று மெசெஜ்
அனுப்புகிறது அதையும் சேனல் வெளியிட்டு வாழ்த்துகிறது. உண்மையிலேயே
யாராவது அனுப்புகிறார்களா அல்லது சேனலே இப்படியா.... ரொம்ப ஆராய்ஞ்சிட்டெ
போனால் பெரிய அரசியல் தலைவர்களின் மகன்களின் குசுநாத்தம் அடிக்கிறது.
அதற்க்குப் பாடலையே பார்த்துவிடலாம்.

"திருவண்ணாமலை படம் பார்த்தவர்களுக்கு நேரடி ஒளிபரப்பில் பேரரசு ஆறுதல் சொல்லிக்
கொண்டிருந்தார்." அதில் ஒரு அப்பாவி ரசிகன் கேள்வி.

அ.ர: "சார் உங்க அடுத்த படம் எப்ப சார்?

பே: என்னோட அடுத்த படம் திருத்தணி. திருவண்ணாமலை ஆக்சன் ஜோதின்னா, திருத்தனி
ஆக்சன் அவதாரம்.

அ.ர: "ஏன் சார் தொடர்ந்து ஆக்சன் படமே எடுக்கறிங்க?

"மக்களுக்கு அதான் சார் புடிக்கிது" மக்கள் சந்தோஷமா இருக்கற ஒரே இடம் தியேட்டர்
தான் அதனால அவங்கள தொடர்ந்து சந்தோஷப்படுத்தறதுதான் என் சந்தோசம்.

பேரரசு ஆக்சன், ஜேகே ரித்திஸ் ஆக்சன், விஜயகாந்த் ஆக்சன், ரஜினி ஆக்சன், விஜய்
அஜித், சொம்பு, என்று ஒரே ஆக்சன் அதிரடிகளால் கோடம்பாக்கம் நிரம்பி இருக்கிறது.

இப்படியெல்லாம் பார்க்கப்போய் கொடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டி
இருப்பதால் டிஸ்கவரியையும், நேஷனல் சேனலையும் பார்க்கிறேன். "நாலு புலி சேர்ந்து
ஒரு காட்டெருமைய உயிரோட கடிச்சி திங்குறத பாக்குறியே அப்டினா உனக்கு எவ்ளோ
கல்நெஞ்சமா இருக்கும்டா" என்று பெற்ற தாய் திட்டுகிறார்.

இணைய இணைப்பு கிடைப்பதில் பெரிய தாமதம் ஏற்பட்டுவிட்டபடியால் வலை உலகில்
என் ஐம்பது நாள் இல்லாமல் போய்விட்டது(:))). இத்தனை நாட்களுக்குப் பிறகு
ரீடரைத்திருந்தால் ஆயிரத்தி சொச்சம். ஜெயமோகன் இருப்பதிலேயே டாப். 72 பதிவுகள்.
சும்மாவா சூறாவலி என்று சொல்கிறார்கள். இணையத்தில் எழுதுபவையையும் கெட்டி
அட்டையில் பதிப்பித்துவிடுவார் அப்போது படித்துவிடலாம் என்று அனைத்தையும்
படித்துவிட்டதாக காண்பிக்கும்படி ரீடரார் இடம் வேண்டிக்கொண்டேன். ஆனால் நண்பர்கள்
பரிந்துரைத்த மத்தகம் குறுநாவலை மட்டும் மென்நூலாக மாற்றிக்கொண்டேன்.
அதை வாசிக்க ஒரு நல்ல பொழுது வாய்க்கும் அதுவரை பொறுத்திருக்கலாம்.
இரண்டாவதாக R.P.ராஜநாயகத்தின் சுருக்கமான 60 பதிவுகள் நிச்சயமாக அனைத்தையும்
படித்தேன்.

அமீரகத்தில் வேலையின்போது நிறைய உபரி நேரம் சும்மா இருக்காமல் எதையோ எழுதி
கிழித்துக்கொண்டிருந்தேன். ஊரில் சும்மா இருக்கும்போது நேரமே கிடைப்பதில்லை.
நான்குபுறமும் நண்பர்களின் அழைப்பு என சென்றுவிடுகிறது. ஆனால் இன்னும் ஒரு
பதிவரைக்கூட சந்திக்கவில்லை(!)

கள்ளக்குறிச்சி நகர வீதிகளில் பதிமூன்று நாய்கள் ஒன்றாகவே சுற்றுகின்றன. அவை
பிரிவதே இல்லை. பரபரப்பான வீதியில் மனிதக்கூட்டங்களுக்கு நடுவே நுழைந்து
செல்கின்றன. திடீரென்று அவை அனைத்தும் திசைக்கொன்றாக பார்க்கின்றன.
நிற்கும் திசையில் பார்வையை கூர்மையாக கவனிக்கின்றன. எதோ ஒரு தாக்குதலுக்கு
வியூகம் அமைப்பது போல. ஆனால் அடுத்த நொடியும் கிளம்பி விடுகின்றன.
யாருக்கும் தொந்தரவு தருவதில்லை. "அதிகம் விற்பனையாகும்" நாளிதழ்களிலும்
செய்தி வெளியிட்டிருக்கின்றன. நானும் இரண்டு முறை அந்தக்காட்சியை பார்த்தேன்.
ஒன்றையும் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இரண்டு முறையும் எண்ணிக்கையை
சரிபார்த்தேன். சரியாக பதிமூன்று நாய்கள். அமைதி ஊர்வலம் போல செல்கிறது
வருகிறது, திடிரென நிற்கிறது பிறகு செல்கிறது.

நாய்களுக்கு உள்ள பொதுவான குணம் "எங்க ஏரியா உள்ள வராதே" என்பதுதான்.
அதையும் மீறி இவை பதிமூன்றும் நட்புகொள்ள எது காரணமாக இருக்கும்?
இதன் பிண்ணனியை ஆராய்ந்தால் சுவையான சம்பவம் எதாவது ஒன்று இருக்கலாம்.

Thursday, December 18, 2008

இரவின் இசை


இருபுறத்திலும் மரங்கள் அடர்ந்த யாருமற்ற
சாலையின் நள்ளிரவு சப்தங்களை
கேட்டுக்கொண்டிருந்தேன்.
முன்பே பலமுறை கேட்டு கவனித்திராத
சப்தங்கள் வினோதனமான நினைவலைகளை
உணர்த்தின. உன்னதமான ஒரு தருணத்தை பதிவிக்கும்
கலைஞனின் கவனத்தோடு அதனை
மன அறைகளில் பதிவிக்க ஆரம்பித்தேன்.
முதலில் ஆதியின் நிசப்தம். பின்பு தவளைகளின்
கூட்டுச்சப்தத்தோடு சீரான இடைவெளியில்
ஆந்தையின் கொஞ்சல். எங்கோ தொலைவில்
கிழவியின் ஒற்றை ஓலம். பெரிய
ஆற்றின் குறுக்கே ஓடையின் சலசலப்பு.
உறக்கம் தொலைத்த கிழவனின் முணுமுணுப்பு
வண்டுகளின் ரீங்காரம் என
எல்லாமும் சேர்த்தே பதிவித்தேன்.
விடியலில் பதிவித்ததை கேட்க முயற்சிக்கையில்
நகரத்தின் இரைச்சலில் இரவின்
இசை கலைந்து விட்டிருந்தது.