எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, December 17, 2022

குரோம்பேட்டை நினைவுகள் - 2

 டிசம்பர் பத்து 2020 ஆம் ஆண்டு குரோம்பேட்டை கன்னிகோயில் தெருவில் உள்ள 18அ என்னும் வீட்டில் குடிபுகுந்தேன். வீட்டின் உரிமையாளர்கள் வயதான தம்பதியினர். அந்த தாத்தா மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். பதினெட்டு பூர்த்தியாகும் முன்பே இங்கே கப்பலில் வந்திறங்கியவர். அப்போது வனாந்திரமாக கிடந்த குரோம்பேட்டையில் விவசாயம் செய்து வந்திருக்கிறார். கூடவே மாடு வளர்ப்பு. பால் வியாபாரம். அந்த காலத்தில் வாங்கிய இடம், இப்போதைய மதிப்பு சில கோடிகள். அவர் என்னிடம் சொல்லி சொல்லி மாய்ந்துபோகும் ஒரு விஷயம். எண்பதுகளின் இறுதியில் திருமண காரியம் ஒன்றுக்காக இப்போதிருக்கும் துரைப்பாக்கம் 200 அடி ரோடில் ஒரு ஏக்கர் நிலத்தை விற்றிருக்கிறார். அப்போதைய தேவை சில ஆயிரங்கள். அந்த நிலத்தின் இப்போதைய மதிப்பு 20 கோடிகள். நிலம் இவ்வளவு விலை போகுமென்று அவர் அறிந்திருக்கவில்லை. அந்த இடத்தில் பிரம்மாண்டமான கட்டிடத்தில் ஐடி நிறுவனம் இப்போது இருக்கிறது. 

குரோம்பேட்டை எனக்குப் பழக்கமான இடம்தான். ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு இதுவே எனக்கு புத்தம் புதிய இடமாக இருக்கிறது. வேலாயுதம் தெருவிலிருந்து பின் பக்க பெரிய சாக்கடையைத் தாண்டிச் சென்றால் ரயில்வே க்ராசிங் வரும். சரவணா ஸ்டோர்ஸ் இருக்கிறதே அந்த வழி. ரயில்வே லைனை ஒட்டியே சென்றால் கடைசியில் பல்லாவரம் பாலம், வலது புறம் திரும்பி ஓடிக்கொண்டே இருந்தால்  கிட்டத்தட்ட பள்ளிக்கரணை வரை ஏரிகள்தான். அத்தனை ஏரிகளும் இப்போது பெரும் குட்டைகள்.  அதுவும் பாலம் தாண்டி வந்தால் வலப்புறம் முழுக்க குப்பைகள் கொட்டி சமதளமாக்கி வீடுகள் கட்டி விட்டார்கள். 200 அடி ரோட்டுக்காக ஏரிகளை இரண்டாக பிளந்ததில் ஏரிகள் குட்டைகள் ஆயின. பிறகு குப்பைகளைக் கொட்டி அதை சமதளமாக்கிவிட்டார்கள். இரண்டு புறமும் பெரிய அடுக்குமாடி கட்டிடங்கள் வந்துவிட்டது. கோடிகளில் வீடு. முன்பு இந்த சாலையில்தான் ஜாகிங் ஓடுவேன். சிறிய சாலை. மரம் அறுப்பு பட்டறைகள், பழைய பொருட்களின் குடோன்கள் என இருந்த இடம் இப்போது இல்லை. வளர்ச்சி.

குரோம்பேட்டை வந்த புதிதில் எங்கு பார்த்தாலும் ரஜினி பட போஸ்டர்களே நீக்கமற நிறைந்திருந்தது. அப்போது அவர் அரசியல் ரேசில் இருந்தார். தாம்பரம் நுழைந்ததும் ஜிஎஸ்டி ரோடு நகரைக் கிழித்தபடி செல்லும் அப்படி செல்லும்போது சிட்லபாக்கத்திற்கு அடுத்த நிறுத்தம் குரோம்பேட்டை.  பொதுவாக குரோம்பேட்டை என்பது வலது புறம் ராதா நகர், வலது புறம் ரேலா மருத்துவமனை, பாலாஜி மருத்துவக்கல்லூரி அடங்கிய பகுதி. ராதா நகர் மெயின் ரோட்டிலிருந்து எங்கும் வளையாமல் ஒரு கிமீ தாண்டினால் கன்னிகோயில் தெரு. ஜிஎஸ்டி சாலையில் இருந்து வந்தால் பல்லாவரம் பாலத்தில் வலது திரும்பி வேல்ஸ் கல்லூரியில் இன்னொரு வலது எடுத்தால் கன்னிகோயில் தெரு. இந்த சுற்றுவட்டாரத்தில் எங்கு பார்த்தாலுமே ரஜினி முதல்வராக வேண்டும் என்ற போஸ்டர்கள் பில்லியன் கணக்கில் ஒட்டப்பட்டிருந்தன. அப்போதை குரோம்பேட்டை மாடுகளும், எருமைகளும் கொழுத்திருந்தன. தினமும் புதிது புதிதாக போஸ்டர்கள். நான் வழக்கமாக படவேட்டம்மன் கோயில் எதிரில் உள்ள டீக்கடையில் டீ குடிப்பதுண்டு. அங்கே எதிரே குப்பை கொட்டும் இடத்திற்கு அருகில் உள்ள சுவர்களில்தான் போஸ்டர்கள் ஒட்டுவார்கள். தினம் புதிது புதிதாக போஸ்டார் ஒட்டியிருப்பார்கள். தினமும் வெவ்வேறு வாசகங்கள் இடம்பெற்றிருக்கும். அடிப்படை ஒன்றுதான் ரஜினிதான் தமிழகத்தின் அடுத்த முதல்வர். 

அரசியல் புரிதல் ஓரளவுக்கு இருந்தபோதிலும் கூட நான் குழம்பிப்போனேன். ரஜினியைத் தவிர எல்லோருமே அவர் முதல்வர் ஆகிவிடுவார் என்றே நம்பினார்கள். நானும் கூட நம்பிவிடலாம் என்ற முடிவுக்கே வந்தேன். காலையில் ஒட்டுவார்கள், கூட்டமாக மாடுகள் வந்து நின்று வாசித்துவிட்டு தின்று செரிக்கும். மறுநாள் புதிய போஸ்டர்கள். டீக்கடைக்காரரிடம் கேட்டேன். "வாய்ப்பில்லங்க" என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டார். அவரே ஒரு ரஜினி ரசிகராம். அப்போது ஸ்டாலின் அவர்கள் சீனிலேயே இல்லை. எடப்பாடியார் கல்லூரி, பள்ளி மாணவர்களின் தேவதூதனாய் இருந்தார். எக்கச்சக்க விடுமுறை, ஆல்பாஸ், தேர்வுகள் இல்லை. எடப்பாடி என்று எழுதத்தெரியாத மாணவருக்கு கூட அவர் தலைவராக இருந்தார். ஒரு வருடம் கழித்து நடந்த தேர்தலில் காட்சிகள் எல்லாம் மாறின. ரஜினி அரசியல் இல்லை என அறிவித்துவிட்டார். அந்த செய்தி குரோம்பேட்டையில் பயங்கரமாக எதிரொலிக்கும் என நான் எதிர்பார்த்தேன். ஆனால் எந்த சுவடும் இல்லாமல் நகரம் அதன் இயல்பில் இருந்தது. அப்போ போஸ்டர் ஒட்டினவன் எல்லாம் யார் கோப்பால்? என்ற கேள்வி குடைய ஆரம்பித்தது. பிறகு வந்த நாட்களில் எடப்பாடியின் செல்வாக்கு குறைந்தது. ஸ்டாலின் அசுர பலம் பெற்று முதல்வரானார். காற்றிழந்த பலூன் போல ஆகியது எடப்பாடி தரப்பு. 

ஒன்று புரிந்துகொண்டது என்னவென்றால், முன்புபோல சினிமாக்காரர்கள் அரசாள முடியாது. அப்போதை உலகம் வேறு. அவர்களின் அந்தரங்கம் அந்தரங்கமாக இருந்தபோது அவர்களைப் பற்றிய செய்திகள் வெளியுலகை அடையும் முன்பே பெரிய இடத்திம் அமர்ந்திருப்பார்கள். ஆனால் இப்போதைய காலம் அப்படியல்ல, தீயை விட வேகமாக தகவர் பரவும் காலம். அதுவும் வதந்தி காட்டுத்தீ போல பரவும் தன்மையுடது. நடிகர்களால் கடவுள் அவதாரம் எடுக்க முடியாது. எம்ஜிஆரோடு முடிந்த விஷயம் அது. வெளிப்புறம் பார்க்க ரஜினி கோமாளி போலத் தெரிந்தாலும் உள்ளுக்குள் தன்னைப் பற்றி உணர்ந்திருப்பதால் அவருக்கு நேர இருந்த பெரும் சேதத்தை தவிர்க்க உதவியது. கமலுக்கு அப்படி அல்ல அவர் பெரும் குழப்பவாதி. 


தொடரும்; 


No comments: