எல்லையற்ற அன்பு கொள்வோம்

Sunday, April 20, 2008

நாய்களைப்பற்றி....

நகுலனின் நாய்கள் நாவலை சமீபத்தில் படித்து முடித்தேன். வேறொரு நாளில்
நாய்கள் பற்றி என்ன எழுதியிருந்தார் என்று நினைவுகொள்ள விரும்பியபோது
மனத்திரையில் வெள்ளைத்தாள்களே தோன்றின. அப்படிப்பட்ட புகமுடியா உலகம்
நகுலனது. அப்படி மீண்டும் உலகிற்குள் போகவிரும்பினால் நீங்கள் ஒரு மனம்பிறழ்ந்தவராகவோ அல்லது தனக்குள் பேசிக்கொள்பவராகவோ இருந்தால்
கூடுதல் தகுதி.

எங்கள் வீட்டில் ஒரு பூனை வளர்த்தோம். பூனை என்றாலே அழகுதானே... பக்கத்து
வீட்டு சிறுமி ஒருத்தி அந்த பூனையை வாஞ்சையுடன் தூக்கி முத்தமிட்டாள். இந்த
பூனைக்கு பேர் என்ன? என்று கேட்டாள்.

அப்போதுதான் பெயரின் அவசியத்தை உணர்ந்து அந்த நொடியிலிருந்து பூனைக்கு ஒரு
பெயர் வைக்க யோசித்தேன். அது பெண் பூனையாக இருந்தது. யோசித்ததில் எந்த
பெயரும் பொருந்தவில்லை. இறுதியாக அதற்கு "பூனை" என்றே பெயர் வைத்தேன்.

மறுபடியும் அச்சிறுமியை அழைத்து "இந்தப்பூனைக்கு பேர் வைத்து விட்டேன்" என்று
சொன்னேன்.

சிறுமி மிக்க ஆவலுடன் என்ன பேர் என்று கேட்டாள்.

"பூனை" என்றேன்.

அவளும் சிரித்தபடியே பூனை என்று அழைக்கத் தொடங்கினாள். இன்று அப்பூனை
வளர்கிறது.

இன்று எதேச்சையாக கதாவிலாசத்தில் ராமகிருஷ்ணனின் நகுலன் குறித்த
கட்டுரையினை வாசித்தேன். ஏற்கனவே வாசித்ததுதான் இருந்தாலும் ராமகிருஷ்ணனின் எழுத்தும் நகுலனையும் பிடிக்கும் என்று மறுபடியும் வாசித்தேன்.

அங்கேயும் இதே போல நகுலன் பூனைக்கு பூனை என்றே பெயர் வைத்திருப்பதாக
எழுதி இருந்தார். என்றோ படித்தது என் ஞாபக அடுக்குகளில் படிந்திருக்கிறது
சமயத்தில் அது வெளிப்பட்டுருக்கிறது. இப்படித்தான் எவர் எவரையோதான் நாம்
வாழ்நாளில் கடைபிடிக்கிறோம்.

ஏன் நவீனனை நாய் என்று அழைக்கக்கூடாது? என்று அடிக்கடி நவீனன் டைரியில்
வருகிறதென்று தெரியவில்லை.

நாம் நாயைப்பற்றி அல்லவா பேசிக்கொண்டிருந்தோம்.

பள்ளிக்கூட நாட்களில் எனக்கென்று ஒரு நாய் வளர்த்துக்கொள்ள ஆசை இருந்தாலும்
வீட்டின் அனுமதி கிடைக்கவில்லை. என் வீட்டிலிருந்து தொலைதூரத்தில் நண்பர்
ஒருவர் இருந்தார். அவர் ரஜினியின் தீவிர எதிரி. ஒவ்வொரு நாய்க்கும் ரஜினியின்
படங்களையே பெயராக இட்டு மகிழ்ந்தார். அப்படித்தான் அந்த நாய்க்கு "முத்து" என்று
பெயரிட்டு அழைத்தார். ஏற்கனவே அவர் வீட்டில் "வீரா" என்ற நாய் இருந்தது.

ஒவ்வொரு வார இறுதியிலும் அந்த நண்பர் வீட்டுக்கு சென்று விடுவேன். போகையில்
ஒரு ரூபாய்க்கு தவிட்டு பிஸ்கெட் என்று அழைக்கப்படும் அந்த வட்டமான
பிஸ்கெட்களை ஒரு ரூபாய்க்கு வாங்கிக்கொள்வேன். ஒரு ரூபாய்க்கு இருபது
தருவார்கள். டவுசரின் பையில் போட்டுவிட்டு வேகமாக கரும்புக்காடு, நெல்வயல்,
பருத்தி தோட்டங்களை தாண்டி நடந்து செல்வேன். அவரின் வீடு வயல்களுக்கு நடுவே மஞ்சள் சுண்ணாம்புடன் தனித்து அடையாளம் தெரியும்.

அப்போதுதான் அவர் சொன்னார் "முத்து" என்றொரு நாயை ராஜபாளையத்தில்
இருந்து வாங்கி வந்திருப்பதாக. வீராவுக்கு பத்து முத்துவுக்கு பத்து என்று
பிஸ்கெட்டுகளை பிரித்து கொடுத்தேன். நான் கண்ட நாய்களிலே மிகச்சிறப்பான நாய் "முத்து"தான். கோபமாக பேசினால் சாப்பிட மறுக்கும். எத்தனை நாளானாலும்
தட்டில் சாதம் கூட அப்படியே இருக்கும். சமாதானமாக பேசினால் மட்டுமே
சமாதானமாகும்.

உதாரத்திற்கு ஒரு கோழிக்காலை எடுத்து வாசல்படிக்கு உள்பக்கம் வைத்தால் அது
வெளியே உட்கார்ந்திருக்கும் கூப்பிட்டாலும் உள்ளே வராது. அவ்வளவு ஒழுக்கமாக
வளர்த்து இருந்தார்கள்.

தொடந்தது போல நான்கைந்து மாத ஞாயிறுகளையும் பார்த்துவிட்ட முத்துவுக்கு
என்னோடு வந்துவிடவேண்டும் என்று ஆசை. ஒருநாள் அங்கிருந்து திரும்பி
வரும்போது எனக்கு தெரியாமல் என்னோடே வந்துவிட்டது. பிறகு நான்கைந்து
முறை திருப்பிக் கொண்டு விட்டும் திரும்பி எங்கள் வீட்டுக்கே வந்துவிட்டது.
அவர்களுக்கே சலிப்பாகி விட்டதைப் போல அங்கயே வளரட்டும் என்று விட்டு
விட்டார்கள். அன்றிலிருந்து எங்கள் வீட்டிலேயே வாழ்ந்து வந்தது. மிகச்சிறந்த
பாதுகாப்பை அது எங்கள் வீட்டிற்கு அளித்தது. வெற்று ஆள் ஒருவர் கூட
உள் நுழைய முடியாது. நாய்கள் மிகுந்த ஞாபகசக்தி கொண்டது. எத்தனை வருடம்
கழித்து வந்தாலும் வாசனை மூலம் யார் என்று அறிந்துகொள்ளும்.

அந்த ஊரின் எல்லையில் அமைந்துள்ள கடைசி வீடு எங்கள் வீடு. இரவில் அதிக
நடமாட்டம் இருக்காது. பழகிய வாசனை அல்லாத எவரும் எங்கள் வீட்டைத் தாண்டி
சுலபத்தில் போய்விட முடியாது ஆனால் நான் இரவு எத்தனை தாமதமாக வந்தாலும்
தூரத்தில் வரும்போதே தலைதூக்கிப் பார்க்கும். என் காலடியோசை கூட அதற்கு
அத்துபடி. என் நடை எப்படி இருந்தாலும்.

எப்படி ஒழுக்கமாக இருந்தாலும் அந்த முத்துவுக்கு காமத்தை மட்டும் கட்டுப்படுத்தவே
முடியவில்லை. ஒரே தெருவில் சலித்து போய் அடுத்தடுத்த தெருக்களுக்கு சென்று
ஆட்டையை போட்டு வந்தது. முத்துவுக்கு எதிராக மற்ற எல்லா நாய்களும் ஒன்றுபட்டு
முத்துவின் காம ஆட்டத்தை அழிக்க திட்டம் போட்டு கடிக்க ஆரம்பித்தன. முதலில்
சிறு சிறு காயங்கள் பிறகு பெரிய காயங்கள், சிலநாள் ஓய்வுக்குப்பிறகு மறுபடியும்
அதேபோல வேட்கைப்பயண விழுப்புண்கள். ஓய்வு பெறும் வயது வந்தது கூட
நினைவில்லாமல் தொடர்ந்து தெருத்தெருவாக போய் கடைசியாக அதன் காமத்தை
அதன் போக்கில் விட்டு விட்ட பின்னர் எப்போதாவது வரும் போகும்.

கொஞ்சநாள் கழித்து அடையாளம் தெரியாத அளவுக்கு அடிவாங்கி வந்து தோட்டத்தில்
படுத்திருக்கும் தெம்பு வந்தவுடனே திரும்பி செல்லும் பிறகு வரும். எதோ ஒரு
சண்டையில் ஒரு சொறிநாய் கடித்துவிட்டது போல. இதற்கும் சொறி வந்து விட்டது.
தெருவாசிகள் சொறிநாயை விட்டுவைக்க கூடாது என்று முறையிட்டபின்னர் ஒரு
சுபயோக சுபதினத்தில் தூக்கிலிட்டு கொன்றாயிற்று.

இப்படித்தான் முத்துவின் கதை முடிந்தது.

என் பள்ளிக்கால நண்பனின் வீட்டில் ஒருநாய் வளர்த்தார்கள். அவனின் அப்பா இவனிடம்
பேசியதைவிட லட்சக்கணக்கான வார்த்தைகள் அதிகமாக மணி என்ற அந்த நாயிடம்
பேசியிருப்பார். மணியிடம் மட்டுமல்ல அவர் தெருவில் உள்ள நாய்களிடம் கூட
நின்று நிதானமாக பேசிவிட்டுதான் போவார். தெருநாய்களிடன் பேசும்போது மட்டும்
போதையில் இருப்பார். அவரும் அப்படிதான் குடியை விடமுடியாமல் மறுவாழ்வு
மையம் சென்று வந்தார். எல்லா பழக்கமும் காணாமல் போனது. ஆனால் நாயுடன்
பேசுவது மட்டும் முன்பிருந்ததை விட அதிகமானது. இப்போதெல்லாம் அவர்
நாயுடன் மட்டும்தான் பேசுவார். நாய்தான் எதுவும் இவரிடம் பேசுவதில்லை.

கண் திறவாத நாய்க்குட்டிகள் முலைதேடும் காட்சியை யாராவது பார்த்திருக்கிறீர்களா?


நெகிழ்ச்சியாக இருக்கும் அடுத்த முறை வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள். முடிந்தால்
தூக்கி கொஞ்சி பாருங்கள். வினோதமான வாடையுடன் கத கதப்பை உணரலாம்



நாய் குட்டி போட்டவுடன் எவராவது அதன் அருகில் போயிருக்கிறீர்களா?

கண்டிப்பாக போகமுடியாது. நான் பலமுறை முயன்று தோல்வியை தழுவியிருக்கிறேன்.
ஏதோ ஒரு நாயுடன் கலவி கொண்டு பெற்றதாயினும் குறிப்பிட்ட காலம் வரை
குட்டிகளிடம் யாரையும் அண்ட விடுவதில்லை. பிறந்த நாய்க்குட்டிகள் கண்ணை
திறக்காமல் அரை போதையில் இருக்கும்போது அதனிடமிருந்து ஒரு வாசனை வரும். (நாற்றம் என்று கூட சொல்லலாம்) அதை முகர எனக்கு அப்போது பிடிக்கும்
ஆனால் தாய்நாய் வந்துவிட்டால் பெரிய பிரச்சினையாகிவிடும்.

என் கல்லூரி நண்பன் ஜெயக்குமாருக்கு நாய்கள் என்றாலே ஆகாது. நாய்கள் இருப்பதாக
சொன்னால் அந்த தெருவில் நடப்பதற்கே பரிசீலனை செய்பவன். சிறிய வயதில்
எதாவது ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கலாம். ஆனால் அவன் வீட்டு நாய்க்கு கூட
பயம். கையில் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு ச்சூ ச்சூ என்றபடியேதான் போவதும்
வருவதும். அவனிடம் உங்கள் வீட்டில் நாய் இருப்பதாக சொன்னால் முடிந்த வரை
உங்கள் வீட்டுக்கு வருவதை தவிர்ப்பான். சினிமாவில் வருவதுபோல கோரமாக
எதாவது ப்ளாஷ்பேக் இருக்கலாம்.

ஐந்தாவது வரை நானும் என் உடன் பிறந்த தம்பியும் ஒன்றாகத்தான் டியூஷன்
செல்வோம் அப்படியொருநாள் செல்லும்போது வாத்தியார் வீட்டின் எதிர்வீட்டில் இருந்த
நாயை கொஞ்சிக்கொண்டே வந்தான். நாய் என்ன நினைத்ததோ தெரியவில்லை. எகிறி
வந்து முகத்திலே கடித்து விட்டது. சரியாக மேல் உதட்டில் ஒரு ஓட்டை. அழுது
கொண்டே வீட்டுக்கு ஓடினோம். பிறகு அந்த வாத்தியாரிடம் செல்வதை நிறுத்தி
விட்டோம்.

சமீபத்தில் ஒருநாய் மூன்று குட்டிகள் இட்டிருந்ததை பார்த்தேன். அருகில் சென்று
பார்க்கலாம் என்று போனபோது உர்ர் என்று உறுமும் சத்தம். பின்வாங்கினேன்.

எல்லா ஊர்களிலும் நாய்கள் ஒரே குணத்தைதான் கொண்டிருக்கிறது.

நாய்க்காரப்பாட்டி


எங்கள் பள்ளிக்கு எதிரே வடை சுடும் பாட்டி
ஒருத்தி இருந்தாள். நிலவில் வடை
வடை சுட்டவள் இவளாகத்தான் இருக்குமோ
என்ற ஐயம் கூட எனக்கு உண்டு.
என் வாத்தியார் அதே பள்ளியில் படித்த
போதுகூட இவள் பாட்டியாகவும், வடை
சுடுபவளாகவும், தனிமைக்காரியாகவும்
இருந்தாள். ஆனால் அவளுக்கு ஆறு
கால்கள்.
ஆம்
அவளுடன் ஒரு கிழட்டு நாயும் இருந்தது.
இப்போது எத்தனை என்று தெரியவில்லை.
ஆனால் அந்த நாய்க்கு நான்குதான்.

7 comments:

ILA (a) இளா said...

etho pinnoottam poda nenacha, ethuvum thonamal .... kaaranam irukku..:(

வல்லிசிம்ஹன் said...

ஆம்
அவளுடன் ஒரு கிழட்டு நாயும் இருந்தது.
இப்போது எத்தனை என்று தெரியவில்லை.
ஆனால் அந்த நாய்க்கு நான்குதான்.//??

முத்துவுக்குப் பிறகு வேற நாய் வளர்க்கலியாமா..
''நல்லவரைத் திட்டாதே''.
''நாய்களைத்திட்டாதே என்று சொல்''. பிரபோ நன்றியுள்ளது நாய் மட்டும்தான்''
வீரபாண்டியக் கட்டபொம்மன் வசனம் தான் நினைவு வந்தது.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

திண்ணைப்பக்கம் ஒதுங்கி வெசாவின் எழுத்தைப் படித்துக் கடுப்பாகிவிட்டு இந்தப் பக்கம் வந்தால், இந்த இடுகை மூலம் மனதை இதமாக்கிவிட்டிருக்கிறீர்கள்.

நன்றி கதிர்.

-மதி

கோபிநாத் said...

நல்லாருக்கு...;)

கப்பி | Kappi said...

+ + +

கதிர் said...

என்ன காரணம் இளா?

கதிர் said...

வாங்க வல்லியம்மா!
-
நாயிடம் எதிர்பார்ப்பதைப் போல மனிதரிடம் எதிர்பார்த்தால் ஆகுமா?
-
நன்றிங்க மதி, கோபி, கப்பி
-