எல்லையற்ற அன்பு கொள்வோம்

Friday, October 17, 2008

ஜனனி


வெள்ளை நிறத்திலானது அச்சிறுமியின் கண்கள்.
பிஞ்சுக்கை விரல்கள். பிங்க் நிறத்தினை ஒத்த
விரல்நுனிகள். கூடத்தில் நடைபயில்கின்றாள்.
இவ்வீட்டின் பொருட்கள், மனிதர்கள் மேல்
போர் தொடுப்பதாக எண்ணம். போர் என்பது
ஒரே ஒரு அடி மட்டுமே. பொருட்களின் மீது
கம்பு பட்டெழும் வினோதமான ஒலியை
ரசித்தவாறு முன்னேறுகிறாள். ஜடப்பொருட்கள்
யாவும் அவள் முன் மண்டியிட்டன. எதிர்ப்புகள்
இல்லாத இப்போரில் குதூகலம் அடைந்திருந்தாள்.
ராணியைப் போன்ற தோரணையுடன் என்னருகே
வருகிறாள். துயிலிலாழ்ந்து மேலெழும் முதுகில்
அடித்தபோது அவ்வினோதமான ஒலி இல்லை.
ஏமாற்றமடைந்தவள் பலம் கொண்ட மட்டும் கம்பை
வீசுகிறாள். துயிலகன்ற கோபத்தில் என் விழிகள்
அவளைப் பார்க்கிறது. சற்றுமுன்னிருந்த மகிழ்ச்சியின்
வேர்களனைத்தும் மண்ணுக்குள் புதையுண்டன.
இரு கீழிமையின் விளிம்புகளிலும் நீர்த்தேக்கம்.
எந்நேரமும் வெடித்துக்கிளம்பலாம்
என்ற அழுகை முகம். ஆதூரமாய் அணைக்கிறேன்
மார்பில் அவளின் இளஞ்சூடான கண்ணீர்த்துளிகள்.

Sunday, October 12, 2008

சினிமா கேள்வி பதில் - தொடர் விளையாட்டு

எனது சுயபுராணத்துக்கு அவசியமில்லாமல் நேரடியாக பதில்களுக்கு தாவி விடுகிறேன்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

நான்காம் வகுப்பு படிக்கும்போது முதல் முதல்ல சினிமா தியேட்டருக்கு
போனேன். ஆனால் நான் ட்யூசன் முடித்து வரும்முன்னரே சித்தப்பாவுடன்
அண்ணன், தம்பி, அக்கா எல்லாரும் கிளம்பி விட்டார்கள். அடித்து பிடித்து வந்தால் எல்லாம் போய்விட்டார்கள் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் அரங்கம் நோக்கி
ஓடினேன். டிக்கெட் வாங்கி உள்ளே போய்விட்டார்கள். எப்படியாவது எனக்காக
வருவார்கள் என்று தியேட்டரின் பெரிய கேட் அருகில் நின்று கொண்டே இருந்தேன்.
யாரும் வருவதாகவே தெரியவில்லை. என்னை திட்டமிட்டு தவிர்த்துவிட்டதாக
நினைத்து ஏமாற்றத்தில் அங்கேயே அழுதுகொண்டிருந்தேன். அழுகையின் உச்சமாக
கோபம் தலைக்கேறியதால் அங்கேயே படம் முடியும் வரை அமர்ந்திருக்க முடிவு
செய்து அப்படியே அமர்ந்திருந்தேன். தியேட்டரின் முன் மைதானம் போன்ற
தரையில் அமர்ந்திருந்தபோது பலரும் ஏன் அமர்ந்திருக்கிறாய் என்று கேட்டார்கள் வைராக்கியமாய் பதில் பேசாமல் அமர்ந்தே இருந்தேன். ஒருவர் மிட்டாய் வாங்கித்தந்து
யார் வீடுப்பா நீ என்று கேட்டார் அப்போதும் பேசவில்லை. படம் முடிந்து வெளியே
வந்தனர் அனைவரும். என்னைப்பார்த்து அக்கா, அண்ணா, தம்பி எல்லாரும்
விழுந்து விழுந்து சிரித்தனர். எனக்கு அழுகை தாங்கமுடியாமல் சித்தப்பாவைக்
கட்டிக்கொண்டு முகம் பொத்திக்கொண்டேன். வீட்டுக்கு வந்தவுடன் மறக்காமல்
அப்பாவிடம் வத்தி வைக்க அடுப்பூதும் ஊதாங்கோலால் எனக்கு தர்ம அடி
விழுந்தது. இரவு முழுக்க அழுதுகொண்டே இருந்ததில் அப்பா கரைந்துபோனார். அடுத்தவாரமே என்னை மட்டும் தர்மதுரை என்ற ரஜினி படத்துக்கு
அழைத்துக்கொண்டு போனார். அவரின் கரம் பிடித்தபடி சென்றது நன்றாக
நினைவிருக்கிறது. இடைவெளியின்போது தின்பண்டமெல்லாம் வாங்கித்தந்து
அசத்தினார். நான் முதலில் திரை அரங்கில்

சினிமா என்று பார்த்தது அதைத்தான். அப்பாவுடன் கடைசியாக பார்த்ததும் அது
ஒன்றுதான். தியேட்டர் சென்று படம் பார்ப்பதை அவர் விரும்புவதில்லை.

இப்போது நினைத்தால்கூட வெட்கப்படும்படி வரும் நினைவு இது. அன்று
தியேட்டர் முன் எதற்காக அமர்ந்திருந்தேன் என்று தெரியவில்லை. மறக்கவே
முடியாத சம்பவம் இது.

உணர்ந்தது என்னவென்றால் உருண்டையான பெரிய விழிகளைக்கொண்ட
பெண்ணைத்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று சபதம் எடுத்தேன்.
கவுதமியை எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

அபுதாபி வந்ததிலிருந்து அரங்கம் சென்று சினிமா பார்க்க அதிகம் வாய்ப்பு
கிடைக்கவில்லை. ஒருமுறை மலையாளி நண்பனை அழைத்துக்கொண்டு குசேலன் சென்றிருந்தேன். படம் முடிந்து வெளியே வந்ததும் என் மூஞ்சியில் காறி துப்பாத
குறையாக இனிமேல் என்னை தமிழ் சினிமாவுக்கு கூப்பிட்டேன்னா உன்ன
கொலபண்ணிட்டு ஜெயிலுக்கு போயிடுவேன் என்று சொன்னான். அவனுக்கு
எப்படியாவது நல்ல படத்தைக்காண்பித்து விடவேண்டும் என்று எண்ணியதால்
தாம் தூம் படத்துக்கு கூட்டிக்கொண்டு போனேன். இந்தப்படத்தையும் அவனுக்கு பிடிக்கவில்லை. ஆனால் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கடைசியாக அரங்கில்
பார்த்த படம் தாம் தூம் தான்.


3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

கடைசியாக எனது கணினியில் பார்த்த தமிழ்ப்படம் விஜயகாந்த் நடித்த அரசாங்கம்.
நண்பன் ஒருவன் பயங்கர சோகத்தில் இருந்தான். அவனுக்கு சந்தோஷம் வரவேண்டி இந்தபடத்தை எடுத்து வந்தானாம். “வேட்டையாடு விளையாடு ஸ்டைல்ல
எடுத்திருக்காங்க” என்று கமெண்ட் வேறு சொன்னதாலும் வட்டை அறையிலேயே விட்டுவிட்டுச்சென்றதாலும் அதை பார்க்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.

வைதேகி காத்திருந்தால் முதல் அரசாங்கம் வரை விஜயகாந்தின் முறைப்பெண்கள் எல்லாரும் “கட்னா மாமனத்தான் கட்டிக்குவேன்” என்ற ஒரே வசனத்தைதான்
பேசுகிறார்கள். பளிங்கு போன்ற வெண்மையான நம்பியாருக்கு விஜயகாந்த்
பேரனாம். படத்தின் பெரும்பகுதி கனடாவில் எடுத்திருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. விஜயகாந்த் எவ்வளவுதான் இண்டலிஜெண்டலியாக படம் எடுத்தாலும் அது வேலைக்கு ஆகாது என்பதை என்னவென்று சொல்வது.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

மூன்றாம் பிறை. எவ்ளோ வயசான ஆளுங்க என்று ஸ்ரீதேவி சொல்லும்போதும்,
இறுதியில் கமலின் ஏமாற்றமும் மிகவும் தாக்கியது என்று சொல்லலாம்.

தவிர தேவர்மகன், சேது, பிதாமகன், சுப்ரமணியபுரம் போன்றவையின்
தாக்கம் அதிகம்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

படம் பார்த்து சில்க் ஸ்மிதாவை ரொம்ப பிடிக்கும் அவர் இறந்துபோனதில்
என்ன அரசியல் இருக்கிறது என்பது இதுவரை யாரும் அறிந்ததாக தெரியவில்லை.

ஸ்ரீதேவிக்கு அடுத்து மிகவும் அழகானவர் ஸ்மிதா, அதற்கடுத்து பானுப்பிரியா.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

பாசமலர். இதைப் பார்த்து அழாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் என்று அடிக்கடி
அப்பா சொல்வார். நான் அந்தப்படத்தை இன்னமும் பார்க்கவில்லை சில காட்சிகள்
மட்டும் பார்த்திருக்கிறேன் என்றாலும் சாவித்திரியை மிகவும் பிடிக்கும்.
அதேப்போல சந்திரபாபுவின் நகைச்சுவை மற்றும் பாடல்களும் மிகவும் பிடிக்கும். இருவருமே போதையின் பிடியில் சிக்கி அற்பாயுளில் இறந்து போனார்கள்.
இருவருமே சினிமாவிலும் சொந்தவாழ்விலும் நிறைய இழந்ததினால் தன்னை அழித்துக்கொண்டவர்கள். சமீபத்தில் இருவரைப் பற்றியும் ராமகிருஷ்ணன் விரிவாக
எழுதி இருக்கிறார். மனதை கரைய வைக்கும் வாழ்க்கை இருவருடையதும்.
கேள்விக்கும் பதிலுக்கும் சம்பந்தமிருப்பதாக எனக்கே தெரியவில்லை என்றாலும்
இதுதான் சட்டென்று மனதில் தோன்றியது.

6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

சாருவின் அலைந்து திரிபவனின் அழகியல் என்ற புத்தகம் படித்தேன். அதற்கு
முன்பு சினிமா தொடர்பாக வாசித்த நூல்கள் சுசி கணேசனின் வாக்கப்பட்ட பூமி,
சேரனின் டூரிங் டாக்கிஸ், ப்ரகாஷ்ராஜின் சொல்லாததும் உண்மை வாசித்திருக்கிறேன். வலைப்பூக்களில் பத்துக்கு எட்டு பதிவுகள் சினிமாவைப்பற்றிதான் வருகின்றன.

7.தமிழ்ச்சினிமா இசை?

தமிழ்சினிமா தவிர வேற இசை இருக்குதா என்ற கேள்விக்கு விடையெல்லாம்
தெரியாது. ஆனால் வீணையின் இசை மிகவும் பிடிக்கும். அடுத்ததாக சாக்சபோன்
பிடிக்கும். வீணையின் இசையில் கூட தமிழ்ப்பட பாடலின் வீணையிசை மட்டுமே பிடிக்கிறது. இளையராஜா மிகவும் பிடித்த இசையமைப்பாளர்.

" 8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

அதிகம் பார்ப்பதுண்டு. மிகவும் நெகிழ்வில் ஆழ்த்திய படங்களாக
டாமி லீ ஜோன்ஸின் three Buriels மற்றும் Clint Easteood ன் The Bridges of Madison county படமும். shawshank redumption, the way home, Spring Summer Autumn Winter சமீபத்தில் சுப்ரமணியபுரம். தமிழ் சினிமாவும் உலக சினிமாவில் ஒன்றுதானே!

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?


நேரடி மட்டுமல்ல மறைமுகத்தொடர்பு கூட இல்லை. எங்கள் ஊர் தியேட்டரில்
போஸ்டர் ஒட்டுகிற பணி செய்யும் தினகரன் என்பவர்தான் என் சினிமா நண்பர்.
அவருக்கு ஏராளமான சினிமாக்களைப் பற்றி தெரியும்.

கல்லூரி படிக்கும்போது இயக்குனராக வேண்டும் என்ற அசட்டு ஆசையெல்லாம்
இருந்தது. தமிழ்சினிமா மேம்பட பார்வையாளனாக மட்டுமே என்னால் செயல்பட
முடியும் என்பதை உணர்ந்தே இருக்கிறேன்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பிரகாசமாக இருக்கிறது.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

கழிவரையில் தண்ணீர் இல்லாவிட்டாலும் குமுதமோ ஆனந்த விகடனோ இல்லாமல்
உள்ளே செல்லவே முடியாத பழக்கம் எனக்கு. கடந்த இரண்டு வருடங்களாக ஒரு பத்து இதழ்கள் மட்டுமே அங்கே நிரந்தரமாக இருக்கிறது. அதையேதான் படித்து வருகிறேன். பழையது, புதியது என்பதிலெல்லாம் எனக்கு அக்கறையில்லை. எனக்கு வேலை ஆகவேண்டும். பொழுதுபோக்குக்கு புதிய சினிமா மட்டும்தான் இருக்கிறதா என்ன?
இதுவரை வந்த படங்களையெல்லாம் பார்த்து விடவும் இல்லை. எனவே இந்த ஒரு வருடத்தில் பார்க்காத மற்ற திரைப்படங்களை பார்த்துவிட்டால் போகிறது. பொழுதுபோக்குபவனாக எனக்கு நேரடி பாதிப்பு இல்லையென்றாலும் சினிமாவையே
நம்பி பிழைக்கும் தொழிலாளர்களின் நிலைதான் யோசிக்க வேண்டிய விஷயம்.

இப்படி ஒரு மொக்கை போட என்னை அழைத்த பரத்தை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. ப.தி.கொ போட்ட எழுத்தாளர்களின் வரிசையில் சாதாரண பதிவர்களுக்கும் எழுத அழைத்த உங்களுக்கு நன்றிகள்.

நான் அழைக்க விரும்பும் ஐந்து பேர்

ஆசிப் மீரான்
கோபிநாத்
கப்பி
சென்ஷி
ஜியா

Thursday, October 09, 2008

கண் நிறைக்கும் கனவுறக்கம்



வடக்கு வாரிக்கொண்டு போகும்
தெற்கு தேய்த்துக்கொண்டு போகும்
கிழக்கு கிழித்து விட்டுப் போகும்
மேற்கு மிதித்து விட்டாவது போகும்
உறங்குவதற்கு எதாவது ஒரு திசையை
தேர்ந்தெடுத்தே ஆகவேண்டும்.
முதலில் வடக்கு கிழக்காகத்தான் படுத்திருந்தேன்
நசுங்கிய "ட" வடிவில் உறங்குவதற்கு ஏற்றதாக இல்லை.
கிழக்கு தெற்காக முயற்சித்தபோது அதுவும் நசுங்கிய
"ட" என்ற வடிவிலே அமைந்துபோனது ஆச்சர்யம்.
ஒன்றிலிருந்து நூறு வரை உதடு குவித்ததில்
எண்களின் குழப்பம்...
மறுபடி மறுபடி முயற்சித்ததில் தோல்வி.
எட்டாவது முயற்சியில் நூறு சாத்தியமானது.
ஸ்ரீராமஜெயம்
அர்ஜுனா
இருட்டில் கண் அகல விரித்து எதையோ தேடுதல்
விருப்பப்பாடலை உரக்கப் பாடுதல்
பாட்டியின் மிதமான முதுகு தட்டல்
போன்ற முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இந்த இரவில் உறக்கம் சாத்தியமில்லை என்றானபோது
உன் நினைவு தந்தது
கண் நிறைக்கும் கனவுறக்கம்.

முன் தினம் பார்த்தேனே - வாரணம் ஆயிரம்


Hi Malini
i am krishnan
நான் இத சொல்லியே ஆகணும்
நீ அவ்வளவு அழகு
இங்க எவனும் இவ்ளோ அழகா ஒரு ப்ச்...
இவ்ளோ அழக பாத்துருக்க மாட்டாங்க
and i am in love with you

ஆ: முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போழ்தே என்னோடு வந்தாலென்ன‌
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன (இப்போழ்தே)
(முன் தினம் பார்த்தேனே..)

சரணம் 1
========
ஆ: காதலே.. சுவாசமே..

ஆ: துலாத் தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்காதோ பேரழகே

பெ: முகம் பார்த்துப் பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ ஆருயிரே

ஆ: ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகை போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி

பெ: முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே..
சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக

ஆ: oh my love

பெ: உன்னை நான் பாராமல்

ஆ: yes my love

பெ: எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே

சரணம் 2
========
பெ: கடல் நீலம் மங்கும் நேரம்
அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சுத்தம் ஆகாதா ஈரத்திலே

ஆ: தலை சாய்க்கத் தோளும் தந்தாய்
விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே

பெ: பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
உயிரெங்கும் உதயம் கண்டேன் நெருங்காமலே
உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே

ஆ: முன் தினம் பார்த்தேனெ பார்த்ததும் தோற்றேனே..

பாடகர்கள்: நரேஷ் ஐயர், பிரசாந்தினி

இப்போதிருக்கும் நடிகர்களில் மாதவனுக்கு அடுத்து மிகவும் வசீகரமான
குரலுக்கு சொந்தக்காரர் சூர்யா. கவர்ச்சியும் கம்பீரமும் இளகும் தன்மையும் ஒருசேர
அமைந்ததுவிட்டது. வாரணம் ஆயிரம் படத்தின் "முன் தினம் பார்த்தேனே" பாடலின்
வரிகள் மேலே உள்ளவை. மணிரத்னத்திற்கு பிறகு காதல் காட்சிகளில் தேர்ந்த
ரசனையை வெளிப்படுத்துவது கௌதம் மேனன் மட்டுமே.

இந்தப்பாடலிலும் பெண்ணை மயக்க வைக்க கவிஞர்கள் பல நூற்றாண்டுகளாக, நிலா,
பெண், பூ, போன்றவை இருந்தாலும் சூர்யாவின் குரல், பிரசாந்தினியின் குரல்
மற்றும் தாமரையின் கவித்துவமான வரிகள்.

"துலாத் தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்காதோ பேரழகே"

கண் திறந்தால் ஆல்ப்ஸ் மலை உச்சியிலோ அல்லது ஜெர்மனியின் ரோட்டோரங்களிலோ
இருபது முப்பது பேரை ஆட வைத்து பிரதானமாக நாயகன். நாயகிய அணைப்பது,
தடவுவது, முத்தமிடுவது, உரசுவது போன்றவை மட்டுமே உள்ளதுதான் பாடல்கள்.
நிஜவாழ்க்கையில் எந்தக் காதலரும் இப்படி செய்திருக்கவே வாய்ப்பில்லை. ஆனாலும்
கனவுப்பாட்டு இல்லாமல் 90 சத படமே இல்லை எனலாம். கூர்ந்து கவனித்தால்
உரையாடலுடனான பாடல்கள் பெரும்பாலானவர்களின் விருப்பப் பாடலாக அமைந்து
இருக்கிறது. "முன் தினம் பார்த்தேனே" கூட அந்த வகையில் சேர்க்கலாம். கீழே எனக்குப்
பிடித்த பாடல்கள்.

சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி
அரிதாரத்த பூசிக்கொள்ள ஆச... நான் அடவுகட்டி ஆட்டம்போட ஆச
ப்ரபா நீ என்னை தேடியிருப்பேன்னு தெரியும்
ஆலங்குயில் பாடுகையில் ஆரிரரோ எலே லேலோ யாவும் இசை ஆகுமடா
கண்மணி அன்போட காதலன் நான் எழுதும் லெட்டர்.
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி... நுமைச்சேர்த்த இரவுக்கொரு நன்றி...

இந்தப்பாடல்களில் எல்லாம் பாடுவது போல. பேசவும் செய்வதால் நிஜத்திற்கு
அருகிலே என சொல்லலாம்

அபூர்வமா வர்ற இந்தப்பாடல்கள்ல கூட கமலின் மூன்று பாடல் இருக்கறது ஆச்சரியம்.

.

Tuesday, October 07, 2008

The Bridges of Madison County


clint Eastwood மேல் எனக்கு மிகப்பெரும் மரியாதை இருக்கிறது. அது அவருடையை
தோற்றத்திற்கும் அபாரமான நடிப்பிற்கும் செய்யும் மரியாதை. சென்றவாரம்
அவரின் படம் ஒன்றை மாலில் கண்டபோது எந்தவித யோசனையும் இல்லாமல்
வாங்கிப் பார்த்தேன். Bridges and his madison county என்ற படம். காதல் எந்த
வயதில் வேண்டுமானாலும் வரலாம். குடும்பம் என்ற அமைப்பில் உள்ள
பெண்ணிற்கும் வரலாம், கிழவனுக்கும் வரலாம். வந்தால் எப்படிப்பட்ட
பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள்/வேண்டும் என்பதை உணர்வுப்பூர்வமாக
உணர்த்திய படம். படத்தில் நான் பெரிதும் ரசித்த, ஈஸ்ட்வுட்
பயன்படுத்திய ஒரு வசனம்.

ஒரு காதல் வெற்றியடையும்போது மறுகாதலுக்கான வழியை அது
அடைத்துவிடுகிறது. இது குடும்பம் என்ற அமைப்பிற்கும் பொருந்தும்.

தான் இறந்தபிறகு தனது சொத்துக்கள் மற்றும் கடிதங்களை தனது இருபிள்ளைகளுக்கு
எழுதி வைத்துவிட்டு இறந்துபோகிறாள் ப்ரென்சாசெ. மேலும் தனது அஸ்தியை
காதலனை சந்தித்த பாலத்தின் மேலிருந்து கீழே தூவவேண்டும் என்றும் அதற்கான
காரணத்தை கடிதத்தில் எழுதி இருக்கிறார். அந்தக்கடிதத்தை படிக்கிறாள் மகள்.
அதில் தான் கணவரில்லாத வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்ததாக
எழுதியிருக்கிறது. தன் தாய் வேறொருவனுடன் சோரம் போனதை படிக்க மறுத்து வெளியேறுகிறான் மகன். அவள் கடிதத்தை தொடர்கிறாள், நமக்கு கதை
காட்சிகளாக விரிகிறது.

அழகான குடும்பம், அன்பான கணவன், 16 மற்றும் 14 வயது நிரம்பிய ஆண்
மற்றும் பெண் பிள்ளைகள். அவளைத்தவிர்த்து மற்ற அனைவரும் கண்காட்சி
ஒன்றிற்காக நகரம் செல்கிறார்கள். எல்லாருக்கும் கையசைத்து விடைகொடுக்கிறாள்.
வீட்டின் முன் பரந்த பசும்புல்வெளி. தூரத்தில் ஒரு வாகனம் வருகிறது
அதுதான் ஈஸ்ட்வுட்.

ஈஸ்ட்வுட் ஒரு புகைப்படக்காரர். natioanal geographic ல் வேலை செய்கிறார்.
கதையில் வரும் கிராமத்தில் மரத்தாலான ஒரு பாலத்தை புகைப்படம் எடுக்க
வருகிறார். அந்தப்பாலம் முழுக்க மரத்தால் ஆனது. கிட்டத்தட்ட வேட்டையாடு
விளையாடு படத்தில் உயிரிலே எனது உயிரிலே பாடலில் வருவது போல அழகாக
இருக்கும். உலகம் முழுக்க சுற்றி புகைப்படம் எடுப்பது இவரின் வேலை அதுவே பொழுதுபோக்கு. புகைப்படம் எடுக்கப்போகும் இடத்தைப்பற்றி அப்பெண்மணியிடம்
வழி கேட்கிறார். வழிசொல்வதில் தடுமாற்றமிருப்பதால் தானே உடன் வந்து
காண்பிப்பதாக சொல்லி இருவரும் பாலத்தை நோக்கி செல்கிறார். போகும்போது
பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொள்கிறார்கள். தான் பிறந்தது இத்தாலியில் பிறந்ததாக சொல்கிறாள். உலகம் சுற்றும் புகைப்படக்காரனாகிய ராபர்ட்(ஈஸ்ட்வுட்) தான் அந்த
இடத்தை அறிவதாகவும் அது அழகாக இருந்தமையால் போகின்ற வழியை
தவிர்த்துவிட்டு ரயிலில் இருந்து அங்கே இறங்கி தங்கியிருந்ததாகவும் சொல்கிறார்,
அங்கே ஆரம்பிக்கிறது ஆச்சரியம். அதிலிருந்து படம் முழுக்க ஆச்சரியம்தான்.



புகைப்படம் எடுக்க சாத்தியமில்லாத நேரத்தினால் மறுநாள் எடுப்பதாக ராபர்ட் முடிவெடுக்கிறார். இரவு உணவிற்கு அழைக்கிறாள் அவள். சம்மதிக்கிறார் ராபர்ட். பேசுகிறார்கள். ஒருவரின் உலகம் மற்றொருவரின் உலகத்தைத் தாண்டி ஒரேமாதிரி பிரதிபலிக்கிறது. நிறைய பேசுகிறார்கள். படத்தில் முக்கியமாக சொல்லவேண்டிய
விஷயம் இருக்கிறது. காட்சிகளுக்கேற்ப வானொலியிலோ அல்லது மதுவிடுதியிலோ காட்சிக்கேற்ற பாடல் ஒலிக்கிறது. சுப்ரமணியபுரம் படத்தில் வருவது போல.

மதுவருந்தியபடி தனித்த வீட்டில் பேசுகிறார்கள். பேச்சின் முடிவில் மனஸ்தாபம் உண்டாகிறது. உண்மையில் அந்த வருத்தம் அவளின் கனவுகளை அவன்
பிரதிபலித்ததால் உண்டாவது. அதை ஏற்க மறுக்கிறாள். வெளியேறுகிறார் ராபர்ட்.
தன் தவறு உணர்கிறாள் அவள். மிகுந்த மன வருத்தத்துடன் அந்த பாலத்தில்
புகழ்பெற்ற நாவலின் பிரிவுறுத்தும் வரிகளை தாளில் எழுதி பதிக்கிறாள். மறுநாள்
புகைப்படம் எடுக்கவரும் ராபர்ட் கடிதத்தினை வாசிக்காமலே யார் எழுதியது என்று புரிந்துகொண்டு தொலைபேசுகிறார். சந்திக்க நிகழ்ச்சிகள் முடிவாகின்றன.
சந்திப்பிற்கு பிரத்தியேகமாக தன்னை தயார்படுத்திக்கொள்கிறாள் அவள்.

சந்திப்பின் முடிவில் உடல் கலக்கிறார்கள். இரண்டு நாட்கள் உலகம் மறந்த
வயது முதிர்ந்த காதலர்களின் பயணம். பிரிவுணர்த்தும் காலம் வருகிறது.
வாய்க்கப்பட்ட உலகம், தனக்கு உள்ள பொறுப்புகளைக் களைந்து தன் காலம்
கடந்த காதல் நிமித்தம் ராபர்ட்டோடு வெளியேற மறுத்து தத்தமது காதலை
நினைவில் வைத்து இருவரும் பிரிகிறார்கள்.

மறுநாள் முதல் இருவரும் தங்களின் வழக்கமான நாளை சந்திக்கிறார்கள்.
மிகுந்த மனவலியுடனே தன் அடுத்த நாளை எதிர்கொள்கிறாள் அவள்.

காலங்கள் கரைகின்றன. கணவன் மரணப்படுக்கையில் சொல்கிறார். நான் என்
வாழ்நாள் முழுவதும் உன்னைப் பெரிதும் நேசித்தேன். உனக்கு வேறு கனவுகள்
இருந்தது என்று எனக்குத்தெரியும் ஆனாலும் உன்னைப் அதனிலும் பெரிது நேசித்தேன்
என்று சொல்லி மறைகிறார்.

ராபர்ட் மற்றும் அவளின் உறவுகள், சந்திப்புகள் சாட்சியாக அந்தப்பாலம் மட்டுமே
இருக்கிறது மற்ற எந்த தொடர்புகளும் இல்லை. ராபர்ட் இறந்தபிறகு அவளுக்கு
ஒரு பார்சல் வருகிறது. ராபர்ட்டின் கடைசி ஆசையாக அவரின் உடைமைகள் என்று
கருதப்படுகிற கேமிரா மற்றும் கடிதங்கள் அவள் வசம் சேர்ப்பிக்கவும் அவரின் அஸ்தி
அந்த பாலத்தின்கீழ் ஓடும் ஓடையில் தூவ வேண்டும் என்பதே அவரின் இறுதி ஆசை.

கடிதத்தைப் படித்ததும் நெகிழ்கிறாள் அவள். இருவருமே தாங்கள் இறக்கும் வரை
தத்தமது காதலை யாரிடமும் சொல்லாமலே இறக்கிறார்கள் கடைசியாக தன் உயிலின்
மூலம் தனது அஸ்தியை அதே பாலத்தின் அடியில் தூவ வேண்டுமாய் பிள்ளைகளுக்கு விண்ணப்பிக்கும் அந்த கடித்தத்தின் மூலமே பிள்ளைகளுக்கு தெரிகிறது.

இந்த இடத்தில் அவளின் மகள் உடனே தன் கணவருக்கு தொலைபேசி தன்
இதே வீட்டில் வசிக்கப்போவதாகவும் உங்களை மிகவும் நேசிக்கிறேன் என்றும்
கண்ணீர்ப்பெருக்குடன் சொல்கிறாள். அவள் மகன் தன் மனைவியை உடனே
சென்று பார்க்கிறான். புதிதாக பார்ப்பதுபோல.

ராபர்ட் நான்கு நாட்கள் என்ற பெயரில் எழுதிய புத்தகம் ஒன்றை எழுதி
அத்துடன் அனுப்புகிறார். அவளுடன் கழித்த அந்த அற்புத நான்கு நாட்களைப்
பற்றிய குறிப்புகள் அதில் உள்ளன. அந்த நூலின் முதல் பக்கத்தில் இருப்பது அவள்
எழுதி பாலத்தில் ஒட்டிய அந்த நான்கு வரி வாசகம். உண்மையில் இந்தக்
காட்சியில் சிலிர்த்துவிட்டது.

மேலோட்டமாய் பார்த்தால் ஒரு திருமணமான பெண் இன்னொரு ஆணிடம்
படுத்துக் கொள்வதாய் தெரிந்தாலும் உடல் சுகம் தவிர்த்த ஏதோ ஒன்று உணர்ந்ததினால் மட்டுமே தன்னை பறிகொடுக்கிறாள். ஈர்ப்புகள் எந்த வயதிலும் வரலாம் வயோதிகம்,
குடும்ப அமைப்புகள் அதற்கு ஒன்றும் தடையல்ல.

நீங்கள் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கும் இதே சமயத்தில்தான் உங்களது
கணவனோ/மனைவியோ வேறொரு உலகத்தை கற்பிதம் கொண்டு உங்களொடு வாழ்ந்துகொண்டிருக்கலாம். ஆக காதல் அல்லது ஒரு ஆண்/பெண் திருமணம்,
காதல் என்பவற்றைத் தாண்டி உலகில் வேறொரு எதிர்பாலினத்துடன் இணைய
ஏக சந்தர்ப்பங்கள் வாய்த்துக்கொண்டே இருக்கின்றன. இதை அனைவரும்
உணரவேண்டும்.

படம் பார்த்து முடித்தவுடன் தோன்றியது இதுதான். இந்தப்படம் பார்க்கையில்
ஒரு நாவலை படிப்பது போன்ற உணர்வைத்தந்தது. நம் சினிமாவைப் பொறுத்தவரை நாவலை படமாக்குவது என்பது நாவலுக்கு செய்யும் துரோகத்தைப்போன்றது.
(கிட்டத்தில் ரசித்தது ஒன்பது ரூபாய் நோட்டு மட்டுமே). ஆனால் இது அப்படியல்ல. இணையத்தில் தேடியபோது இந்தக்கதை உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில்
எழுதப்பட்ட பெரும் வெற்றியடைந்த நாவல். திரைப்படத்தின் பெயரிலேயே வெளி
வந்த நாவலை ஈஸ்ட்வுட் தயாரித்து இயக்கியிருக்கிறார்.

இதே சாயலில் மலையாளத்தில் ஒரு படம் உள்ளது ஒரே கடல். முற்றிலும் இதேமாதிரி இல்லாவிட்டாலும் கருவின் அடிநாதம் பிறன்மனை கவர்தல், கவர்தல்னு
சொல்றதைவிட காதல் என்று சொல்லலாம் காதல் அன்பென்றால்.

Friday, September 26, 2008

சாரு, தாம்தூம், வசனங்கள்

சாருநிவேதிதா தனது குட்டிக்கதைகள் என்ற பெயரில் நல்ல நல்ல கதைகள் எழுதி
வருவது அனைவருக்கும்(?) தெரிந்தே இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த குட்டிக்கதையில் துபாய்
பார்களில் ஆடும் பெண் ஒருவரைப்பற்றி எழுதி இருக்கிறார். இதில் ஆச்சரியப்பட
என்னடா வெங்காயம் இருக்கிறது என்கிறீர்களா? அந்த அம்மையாருக்கு ராஸலீலா என்ற சாருவின் நாவலை தருவதாக ஒருவர் தலையில் அடித்து சத்தியம் செய்து
இருக்கிறாராம்.

பொதுவா ரம்ஜான் மாசத்துக்கு ஒரு வாரம் முன்னாடியே அமீரகத்தில் உள்ள அனைத்து
பார்களும் மூடிடுவாங்க. ஒருமாசத்துக்கு தாகசாந்திக்கு தடா அதனால டிஸ்கோ பார்
பெண்கள் எல்லாம் பொட்டி கட்டிக்கொண்டு ஊருக்கு போய்விடுவார்கள் என்று அமீரக
குடிமக்கள் அனைவருக்கும் தெரியும்.

எனக்குத் தெரிந்தவரையில் ராஸலீலா நாவலை இங்கு ஆசிப் அண்ணாச்சி மட்டுமே
வைத்துள்ளார். அமீரகத்தில் அண்ணாச்சி இலக்கியப்புரட்சி செய்துவருவதாக வெளிவந்த
வதந்திகளை நம்பாமல் இருந்தேன். சாருவின் குட்டிக்கதையை படித்தவுடன் புரட்சியை
கண்டு நம்பாமல் இருக்கமுடியவில்லை. இந்தசெய்தி குறித்து அவரிடம் தகவல் கேட்க
தொலைபேசியபோது சிக்னல் இல்லை என்று எஸ்கேப் ஆகிவிட்டார்.


---



தாம்தூம் படத்தில் வரும் கங்கனா ராவத்தை சப்பை பிகர் என்று எல்லாரும் சொன்னது
எனக்கு மனசு வலிக்கிறது. சப்பையாக இருந்தால் சப்பை பிகரா? நானும் படத்தை
இரண்டு முறை பார்த்தவகையில் அவர் கும் பிகர் என்று சொல்ல அத்தனை
தகுதியும் அவரிடம் இருக்கிறது. கிராமத்தில் இப்படி ஒரு வெளுத்த பெண்ணா என்று
கேட்கலாம். இப்போதெல்லாம் கிராமத்துப் பெண்கள் நுனிநாக்கு ஆங்கிலமும் ஜீன்ஸ்
ஸ்லிவ்லெசுமாக சுற்றுகிறார்கள். கிராமத்துப் பெண் என்றால் இன்னமும் தாவணி
கட்டிக்கொண்டு வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அப்படியே தாவணி போட்டால்
பொருந்தவேயில்லை என்று சொன்னாலும் சொல்வார்கள். அவரிடம் என்ன ஒரே
ஒருகுறை என்றால் நடிக்க தெரியவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.
போஸ் வெங்கட்டையும், சேத்தனையும் அநியாயத்திற்கு வீணத்திருக்கிறார்கள்
பேசாமல் அவர்களுக்கு ரஷ்ய போலிஸ் இலாகாவில் ஆபிசர் உத்தியோகம்
கொடுத்திருக்கலாம்.

---

சில வசனங்கள் நான் ரசித்தது... என்ன படம் என்பதை நீங்களே கண்டுபிடித்து
சொல்லலாம்.

"ஒருவேளை நீங்க உள்ள வரும்போது நான் புத்தகம் படிச்சிட்டோ, பாட்டு கேட்டுகிட்டோ
இருந்திருந்தேன்னா என்ன பண்ணிருப்பிங்க?

"கேவலமா சாரி கேட்டிருப்பேன்"
---

"வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆணுக்கு பின்னாலயும் ஓடிப்போய் ஒரு பொண்ணு சேந்துக்கறாங்க பாரு, அதான் அவங்களோட திறமை"

---

"தம்மாத்துண்டு இருந்துக்கினு தவ்லத்து மாரி பேசுது பாத்தியா... சார்ப்புடா"

---

"நான் அடிச்சா நீ செத்துருவ"

---

"நீங்க சாஃப்ட்வேரா?

"நானா? சாஃப்ட்வேரா, ஹார்டுவேர்ங்க... போலிஸ் ஆபிசர்"

---

"அடிச்சாதாண்டா எம்ஜியாரு, அடிவாங்குனா நம்பியாரு"

---

தெரியாதுடா... அதான் நூறுவாட்டி சொல்லிருக்கேன்ல. தெரியாது தெரியாது தெரியாது

---

call me an asshole one more time... இந்த படத்தை பேரரசுவின் தூரத்து உறவினர்
எடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். :)

---

I will love you my whole life. you and no other, forever. மெல் கிப்சன் அண்ணாச்சி ஒன்னுமே போடாத ஒரு சூப்பர் பிகரிடம் இந்த டயலாக் அடிப்பார்.

---

That there are things in this world
not carved out of gray stone. That
there's a small place inside of us
they can never lock away, and that
place is called hope.
---

சதீசு எப்படிரா மச்சான் மொதவாட்டி கேக்கற மாரியே எல்லா வாட்டியும் கேட்டுகிட்டுருக்க?

யார்ரா இவன்? என் நண்பன் டா... நீ சொல்லு மச்சி...
---

நீ ரொம்ப அழகா இருக்க, உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு... i like you
(இதே டயலாக் அப்டியே உல்டா பண்ணியும் இருவது வருஷம் கழிச்சு பெரிய ஹிட் ஆச்சு)

---

யாரோ லாபத்துக்கு யாரையோ கொல பண்றது ஒரு தொழிலு??
---



மூணு வாரத்துக்கு முன்னாடி எழுதி ட்ராப்ட்ல இருந்த ஐட்டங்கள் இவை.
எதுவும் இல்லன்னா எத வேணாலும் எழுதலாம்ன்றதுக்கு இது ஒரு உதாரணம்.

Wednesday, September 17, 2008

கோயில்களைப்பற்றி

கோயில்பற்றி நினைத்தாலே மனதுக்குள் ஒரு வாசம் தோன்றி மறையும் அதை
என் நாசி உணரும். வாசம் என்று சொல்வதை விட புழுக்கை மணம் என்று
சொல்வதுதான் சரியாக இருக்கும். வவ்வால்களின் புழுக்கையுடன் கற்பூரமும்
ஊதுவத்தியின் மணமும் கலந்த கலவையான மணம். இதை அனுபவித்தால்
மட்டுமே உணரமுடியும். சில மணங்களை எப்போது முகர்ந்தாலும் அது நம்மை
முந்தின காலத்திற்கு இட்டுச்செல்லும். முற்றிலும் கருங்கற்கள் கொண்டு கட்டிய
பழைய கோயில்களில் இந்த மணத்தை உணரலாம். கோயில் என்றவுடன்
சாமி கும்பிடும் இடமாக அல்லாது அது ஒரு விளையாடும் இடம் என்றுதான்
எனக்குத் தோன்றும். ஏனென்றால் நான் வளர்ந்தது பாட்டியிடம், பாட்டியின்
பின்கட்டு வீட்டின் பின் உள்ள தோட்டத்தில் பூக்களின் வாசம் நுகர்ந்தபடி
சென்றால் கடைசி சுவருக்கு அருகில் அழகிய வேலைப்பாடுகளுடன் உள்ள
கோயிலின் சுவருக்குப் பின்னால் சென்று விடும்.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கோயில் அது. பின்புறத்தில்
மிகப்பெரிய இரண்டு மாமரங்கள் உள்ளன. சுவற்றை ஒட்டி கோயிலில் மட்டுமே
காணப்படும் சாமிப்பூ மரங்கள், இதனை செடி என்று சொல்ல மனம் வரவில்லை.
எத்தனை பலம் கொண்டு கல்வீசினாலும் அதில் மாங்காயே விழுந்ததில்லை
அவ்வளவு உயரத்தில் இருக்கும் அவை. உலகிலேயே பெரிய மாமரங்கள் அவை
என்றே நினைத்திருந்தேன். இன்றுவரைகூட அதைவிட பெரிய மரங்களைப்
பார்த்திருந்தாலும் அதைவிட பெரிய மாமரத்தைக் கண்டதில்லை. அங்கே
காம்புகளில் காவிநிறமும் மல்லிகையைப் போன்ற வெண்மை நிறமும் கொண்ட
ஒரு பூமரம் இருந்தது இதையும் செடி என்ற சொல்வது சரியாக இருக்காது.
கோயில்கள் கட்டப்பட்டபோதே அவைகளை நட்டிருக்கவேண்டும். இல்லாவிட்டால்
செடி என்றும் அவ்வளவு பெரிய மரமாகாது.

அந்தப்பூக்களில் இருந்து ஒருவிதமான வாசம் வரும். அந்தவாசத்தை நுகர்ந்தால்
மெல்லிய சந்தோஷம் உண்டாவதுபோல எண்ணம். முலைப்பால்குடி மறக்காத
குழந்தையிடம் மட்டுமே அந்தவாசம் வரும். அந்தப்பூவின் பெயர் அறிய நிறைய
சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும் அதை அறிய வேண்டும் என்று எண்ணியதில்லை.
அழகான நினைவுகளுக்கு இட்டுச்செல்லும் மணம் என்று மட்டும் நினைவில்
இருக்கிறது.

தாத்தாவுடன் செல்லும்போது கோயிலில் நான் செய்யவிரும்பாத ஒரு காரியத்தை
செய்யச் சொல்லுவார். அது சாமிகும்பிடுவது. கோயில் என்பது சந்தோஷமாக அல்லது
குழப்பமாக இருக்கும்போது சுற்றிப்பார்த்துவிட்டு வரும் இடம். அவ்விடத்தில் கைகூப்பி
கன்னத்தில் இட்டு விழுந்து எழுவது என்பது பிடிக்காத விஷயம். தாத்தா முற்றிலும்
வேறானவர். கோயிலின் வெளிப்புறப்படிக்கட்டில் இருந்து ஐம்பது அடி தூரத்தில்
ஒரு சின்னக்கல் நட்டிருப்பார்கள். அந்தக்கல்லில் கற்பூரம் கொளுத்திய சுவடுகள்
இருக்கும். கோயிலில் உள்ளே சென்று தரிசிக்க நேரமில்லாதவர்கள் அவசரமாக
கும்பிட்டுச்செல்லும் இடம் அது. முதலில் அங்கே கற்பூரத்தை கொளுத்துவார் தாத்தா
சற்று குனிந்து பார்த்தால் தூரத்தில் தெரியும் கோபுரம், நந்தியின் தலை, பெரியமரம்
மணிகளால் செய்த பெரிய கதவு, கோயில் வெளித்தாழ்வாரம் தாண்டி மிகத்துல்லியமாக
பெருமாளின் முகம் தெரியும். அத்தனை கச்சிதமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
எப்படி கட்டியிருப்பார்கள் என்று தெரியவில்லை.

விளையாடும்போதும் அந்தவழி போய்வரும்போதும் எதையோ யோசித்தவன் போல
பெருமாள் தெரிகிறாரா என்று பார்ப்பேன். எப்படி பார்த்தாலும் தெரிகிறாரே என்று
ஆச்சரியம் தோன்றும். அங்கேயிருந்துதான் தாத்தா சாமி கும்பிட ஆரம்பிப்பார்.
நேரே நடந்து சென்று படிக்கட்டு அருகே செருப்பைக் கழட்டிவிட்டு படியில் ஒரு
குனிந்து கும்பிடு அப்புறம் பிள்ளையாரை முதல் தரிசனம். அங்கே ஆசனங்களில்
ஒன்றை செய்வார். அதற்கு அருகிலே ஒரு பெயர்தெரியாத கடவுள் அங்கிருந்து
கோயிலைச் சுற்றி சுமார் நூறு கடவுள்கள் இருப்பார்கள் அனைவருக்கும்
கைகூப்பல், கன்னம் ஒற்றுதல் போன்ற சடங்குகள் நடக்கும் நானும் அவரைப்
போல செய்கிறேனா இல்லை வெறுமனே வேடிக்கை பார்க்கிறேனா என்று
ஓரக்கண்ணால் ஒருபார்வை. சரியாக செய்யவில்லையென்றால் தலையில் ஒரு
குட்டு. மாமரத்திற்கு அருகில் செல்லும்போதுதான் மனம் சந்தோஷமாக இருக்கும்
அங்கேதான் ஆஞ்சநேயர் இருப்பார். கடவுளர் எல்லாம் மனைவி கடவுள்களை
அணைத்தவண்ணம் சாந்தமாக இருக்க ஆஞ்சநேயர் சிலை மட்டுமே மற்றவர்களைப்
போல அல்லாமல் கம்பீரமாக கதையை தோளில் சுமந்தபடி இருக்கும்.

அந்த கம்பீரம் என்ற ஒரு காரணத்துக்காக என்பதையும் தாண்டி பாட்டியின் கதைகள்
மூலம் ஆஞ்சநேயரிடம் நல்ல அபிப்பிராயம் இருந்தது. கிட்டத்தட்ட அது என் தோழனை
போல. ஆஞ்சநேயருக்குப் பின்னால்தான் புற்கள் அடங்கிய தரையில் அந்தப்பூமரம்
உள்ளது. அந்தப்பூவின் வாசம் ஆஞ்சநேயரைக் கடக்கையில் உணரலாம். நினைத்தால்
கூட நாசியில் உணரும் தன்மை கொண்டது அது. அதைத்தாண்டி பின்பக்கம் விக்கிரகம்
அபிஷேக நீர் வெளியேறும் கால்வாய் போன்ற அமைப்பு அதுவும் அழகிய வேலைப்பாடுகள்
கொண்டது. அங்கே எந்த நேரமும் தண்ணீர் வந்தபடி இருக்கும். அந்த தண்ணீரை தலையில்
கொஞ்சமாக தடவிக்கொள்வார். எனக்கும் கொஞ்சம் தடவிவிடுவார். எண்ணைப் பிசுக்கான
தண்ணீர் பாலும், சந்தனமும் கலந்து வரும். அதில் கூட ஒருவிதமான மணம் உண்டு.
எதைக் கொடுத்தாலும் அதை முகர்ந்துபார்க்கும் வியாதி எனக்கு. சிறுவயது முதலே
இந்த வியாதி. அப்படி முகர்ந்து முகர்ந்து ஆயிரக்கணக்கான வாசனைகளை மூளையில்
சேமித்திருக்கிறேன். ஒவ்வொரு வாசனைக்கும் ஒவ்வொரு நினைவுகள், காட்சிகள்
சிலவற்றுக்கு மட்டும் விசேஷமான தகுதிகள். அவைகளில் முதன்மை இடம் இக்கோயிலில்
வரும் வவ்வால், ஊதுவத்தி, கற்பூரம் ஆகியவை கலந்த மணம்.

எங்கெங்கோ சென்று விட்டேன். கோயிலின் இடப்புறமாக சென்று சுற்றி பின் வலப்புறம்
வந்து உள்நுழைகையில் பன்னிறு ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஏன் திருவள்ளுவருக்கு
கூட அங்கே ஒரு சிலை உண்டு. நவக்கிரகத்தைச் சுற்றி வருவது மிகவும் பிடித்தமான
விளையாட்டு. ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு சிலையின் தலையை மிகுந்த ஆசையோடு
தடவுவது. கிட்டத்தட்ட அந்த வயதில் அவை எனக்கு விளையாட்டு பொம்மையைப் போல.
அவற்றை ஒன்பது சுற்று சுற்றி வெளியே வந்தால் கிறு கிறு வென்று வரும் மயக்கம்.
இன்னொருமுறை சுற்றவேண்டும் என்று தோன்றும். இவை எல்லாம் முடிந்து பெருமாள்
குடியிருக்கும் உள்பிரகாரம் செல்லவேண்டும் உள்பிரகாரத்தை ஒரு சுற்று சுற்றி பின்புதான்
பெருமாளை தரிசிக்க வேண்டும். கிட்டத்தட்ட அரசாங்கத்தின் உயர் அதிகாரியை காணும்
முன்பு பல சிறிய ஆட்களை காணவேண்டுமே அதுபோல. அங்கேயும் இடப்புறம் ஆரம்பித்து
வலப்புறம் வந்து பின்பு சந்நிதிக்குள் நுழைய வேண்டும். அப்படி வரும்போது பின்பக்கத்தில்
அளவில் சிறிய ஒரு கிணறு உண்டு. தாத்தாவின் விரல்பிடித்தபடி செல்லும் நான் அந்த
இடத்தில் மட்டும் விலகி கிணற்றில் எட்டிப்பார்ப்பேன். பெரிய சைஸ் அண்டாவின்
அளவைப்போலத்தான் அது இருக்கும். எப்போதுமே இருட்டாக தண்ணீர் தெரியாது
அதில். சிறிய கல்லை எடுத்துப்போட்டால் சற்று நேரம் கழித்து க்ளக் என்று சத்தம்
வரும். அது இல்லாமல் முன்பொருமுறை எட்டிப்பார்க்கும்போது மிகச்சரியாக நிலா
தெரிந்தது அங்கே, வட்டமான நிலாவை கருமை சூழ்ந்த மர்மக்கிணற்றில் பார்க்கும்போது
அதிசயத்தைக் கண்டதுபோல சிரிப்பு வரும். அதை ஒரேஒருமுறை மட்டுமே பார்த்து
இருக்கிறேன். பின் எப்போதுமே பார்த்ததில்லை.

இவ்வளவு சடங்கையும் முடித்துவிட்டுச் சென்றால் பெருமாளை தரிசிக்கலாம்.
முற்றிய தேங்காயை உடைக்கும்போதுகூட ஒருவித வாசனை வரும். அதுவே பல
தேங்காய்கள் உடைபடும் இடத்தில் நன்றாக வரும். பெருமாளின் அருகில் வரும்போது
அந்த வாசனை தூக்கலாக வரும். பலநூறு வருடங்கள் கற்பூரமும், திரிவிளக்கும்,
ஊதுவத்திப்புகையும் அண்டிய கரிய கல்சுவர்கள் நான்கு புறமும். ஒருவிதமான
பயத்தை ஏற்படுத்தும். கைகள் நடுங்கியபடி கண்மூடி கைகுவித்து நிற்பேன். மந்திரங்கள்
முடிந்த பிறகு வெள்ளியிலான குடுவை ஒன்றை கையில் ஏந்தியபடி ஐயர் அருகில்
வருவார். இன்று கூட விபூதியை எந்தக்கையில் வாங்குவது என்ற திடீர்க்குழப்பம்
வரும் வழக்கம்போல வலது கைமேல் இடது கைவைத்து வாங்க நிற்பேன். கையைத்
தட்டிவிட்டு குனிந்து நெற்றியில் விபூதியும் குங்குமமும் வைப்பார். அந்த விபூதியிலும்
கூட மணம் இருக்கிறது. கடைசியாக தட்டில் இருந்து வெள்ளிக்குடுவையை என்
தலையில் ஒற்றி எடுப்பார். அந்த ஒரு நொடியில் பேரரசனைப்போல உணர்வேன்.
ஏனென்றால் அந்தக் குடுவை என்பது ராஜாவின் தலைக்கவசம் என்றுதான் நினைத்து
இருந்தேன். தேங்காய்த்தண்ணீரில் துளசி கலந்த தீர்த்தம் கையில் தருவார். அதையும்
முகர்ந்து பார்த்துப் பின்புதான் குடிப்பேன். சுவையான நீர் அது இன்னும் கொஞ்சம்
கிடைக்குமா என்று நிமிர்ந்து பார்ப்பதற்குள் அய்யர் நகர்ந்துவிடுவார். காற்றுகூட
இல்லாத அந்த இடத்தைத் தாண்டி வெளிப்பிரகாரம் வருகையில் புதிதாக பிறந்தது
போல உணர்வு வரும் இந்த உணர்வுதான் அந்தக்கோயிலுக்கு அடிக்கடி என்னை
அழைத்துச் செல்லும்.

எல்லாம் முடிந்தபின்பு கோயிலிலே எனக்கு மிகவும் பிடித்த இடத்தில் அமர்வோம்.
அது கோயிலின் குளம். படிகளின் இடையில் பசும்புற்கள் முளைத்த இடம் பசும்புல்லை
முகர்ந்துபார்த்தாலும் ஒரு வாசனை வரும். அந்தப்படிக்கட்டில் அமர்ந்து கீழே தெரியும்
குளத்தின் தண்ணீர் பார்த்தால் வானின் நட்சத்திரங்களும் நிலாவின் நிழலும் காணலாம்.
சிறிய கல்லை எடுத்துப்போட்டால் அவை பாம்பைப்போல நெளியும். பயத்துடன் நீச்சல்
பழகிய குளம். பச்சை நிறமான அந்தக்குளத்தின் நடுவே கிணறு ஒன்று உண்டு. குளம்
வற்றினாலும் கிணறு வற்றாது, அந்தக்கிணற்றில் உள்ளே சுரங்கப்பாதையின் வழி
சென்றால் தஞ்சாவூர் செல்லும் என்று சொல்வார்கள். அதையும் நம்பி இருக்கிறேன்.

கிளம்பும்போது பொங்கல் தருவார்கள், வெல்லம், பச்சரிசி, நெய் விட்டு அய்யர் வீட்டில்
செய்தது. அதற்கும் ஒரு மணம் உண்டு. எல்லாம் முடிந்து செருப்பில் கால் நுழைக்கும்போது
எதையோ பிரிந்ததுபோல ஒரு ஏக்கம் வரும்.

புறாக்களை பிடிக்காதவர்கள் எவருமே இருக்கமுடியாது. அந்தகோயிலின் ஒவ்வொரு
மாடத்திலும் புறாக்கள் வசிக்கிறது. கருமையான, வெண்மையான, பழுப்பு நிற, சாம்பல்
என்று பலநிறத்தில். புறாக்களை விட அது வீடடைந்து இரவில் எழுப்பும் சப்தம் என்பது
கேட்க மிக இனிமையானது. அந்தக்கோயிலில் இரவுநேரங்களில் சிரமப்பட்டு தூணின் மேல்
ஏறினால் அளவில் சிறிய புறாக்களை பிடித்துவிடலாம். அவ்விதம் பிடிப்பது சிரமம்
என்றாலும் பிடித்துவிட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். புறாவின் இறக்கைகளை
தடவியபடியே அதனுடன் பேசிக்கொண்டிருந்து சிறிது நேரம்கழித்து பறக்கவிடலாம்.
அவ்விதம் பேசிய புறா மறுநாள் நம்மை அடையாள கண்டு அருகில் வரும் என்று
அய்யர் வீட்டு சிறுமி சொல்லியிருந்தாள். ஆனால் எந்தப்புறாவும் என் அருகில்
வந்ததே இல்லை.

குளத்திற்கு நேர் எதிரே பெரிய இடம் உண்டு. அங்கே பல விளையாட்டுக்கள் விளையாடி
இருக்கிறேன். பாண்டி, திருடன் போலீஸ், நொண்டி, சடுகுடு, கண்ணாமூச்சி, என்று.
திருடன் போலிஸ் விளையாடும்போது ஒவ்வொருமுறையும் ஆஞ்சநேயரின் அருகில் உள்ள
பூமரத்தில்தான் ஒளிவேன். ஒவ்வொருமுறையும் என்னை சரியாக முதலில் கண்டுபிடிப்பாள்
அய்யர் வீட்டுச் சிறுமி. மிகப்பெரிய அந்தக்கோயிலில் திருடன் போலிஸ் விளையாடும்போது
அனைவரும் எங்கே ஒளிந்திருக்கிறார்கள் என்றே கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். சிலசமயம்
கண்டுபிடிக்க முடியவில்லையே என்று கோயிலின் நடுவே உட்கார்ந்து ஓவென்று கூட
அழுதிருக்கிறேன். அழுகைச்சத்தம் கேட்டவுடன் ஒவ்வொருவராக மறைவிலிருந்து வெளியே
வருவார்கள். சிரிப்பு மூட்டுவார்கள், வேற விளையாட்டு விளையாடலாம் என்று அழுகை
தேற்றுவார்கள் நானும் எல்லாரையும் கண்ட சந்தோஷத்தில் சிரிப்பேன்.

கடைசியாக பாட்டி வீட்டுக்கு சென்றேன். பாட்டி வீடு என்றுதான் பெயர் அங்கே பாட்டியும்
இல்லை தாத்தாவும் இல்லை. எப்போதோ சென்று சேர்ந்துவிட்டார்கள். கோயில் மட்டும்
சற்று சிதிலமடைந்து அப்படியே இருக்கிறது.

கோயில் பற்றிய நினைவுகளை எழுத நிறையக்கோயில்கள் இருந்தாலும் இந்த ஒரு கோயில்
நினைவுகளே பெரியதாகிவிட்டது, மேலும் பலவற்றை எழுதவேயில்லை. நேரம் கிடைத்து
நல்ல சூழ்நிலையும் கிடைத்தால் மீதம் உள்ளவற்றையும் எழுதலாம்.