எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, April 05, 2010

சிறுவனுக்கு உதவுங்கள்

நண்பர்களுக்கு

சில சம்பவங்கள் நடந்து முடிந்தவுடன் அய்யோ இது ஏன் இப்படி ஆனது காலம் திரும்பவம் ஐந்து நொடிகள் பின்னோக்கி நகர்ந்து முன்னோக்கி வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைப்பதுண்டு. சிலமாதங்களுக்கு முன்பு அப்படிப்பட்ட ஐந்து நொடிகளில் ஒரு சோகமான சம்பவம் நடந்து முடிந்திருந்தது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஒரு சிறுவனின் கைகளும் கால்களும் சில நொடிகளில் கருகி தூக்கி எறியப்பட்டான். பதறச்செய்த நொடிகள் அவை. எப்பாடுபட்டாவது அந்த ஐந்து நொடிகள் மட்டும் பின்னோக்கி பயணப்பட எந்தவிதமான செயலையும் செய்யும் நிலையிலிருந்தேன்.




எனது வீட்டிற்கு அருகில் சமீபத்தில் குடிவந்திருந்த ஒரு குடும்பம். அவர் வீட்டில் அந்தப்பையனையும் சேர்த்து மூன்று பேர் ஒரு அக்கா ஒரு தங்கை அவனுக்கு. எந்த நேரமும் எதாவதொரு குறும்பு செய்துகொண்டே இருப்பான். ஒரு நொடி கூட சும்மா உட்கார்ந்திருந்ததில்லை. ஆனால் இப்போது அவன் எழுந்து நடந்து நான்கு மாதங்களாகி விட்டன. காரணம் விபத்து. ஒரு விடுமுறை நாளின் காலையின் வீட்டின் மாடியில் குச்சி வைத்து விளையாடிக்கொண்டிருந்தபோது சக நண்பர்கள் உற்சாகப்படுத்த சுவர் அருகே ஆறடி தூரத்தில் அதிக மின்சக்திகளை தாங்கிச்செல்லும் மின் கம்பிகளை அந்த குச்சியால் தொட்டுவிட்டான். பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த பிஞ்சின் கை கால்கள் கருகத்தொடங்கிவிட்டன சுதாரிப்பதற்குள் முடிந்துவிட்டன. இப்போது அவனுக்கு தோல்பட்டை வரை ஒரு கையும் தொடை வரை ஒரு காலும் கருகிவிட்டன. மற்றொரு காலில் ஒரு விரல்கூட மிஞ்சவில்லை. மற்றொரு கையில் இரண்டு விரல்களில் மட்டுமே செயல்பாடு உள்ளது. ஆனால் அவனது முகத்தில் இருக்கும் பிரகாசம் மட்டும் குறையவே இல்லை. தனக்கு இப்படி ஆகிவிட்டது குறித்த கவலைகூட அவனுக்கு கிடையாது. மிகுந்த தன்னம்பிக்கை உடைய சிறுவன்.


கடந்த நான்கு மாதங்களில் தங்களது சக்திக்கும் மீறியே செலவு செய்து விட்டனர். தற்போது செயற்கைக் கை கால்கள் பொருத்த நிதி தேவைப்படுகிறது. இட்லிவடை பகுதியில் இதைப்போன்ற செய்திகள் முன்பே படித்திருக்கிறேன், உதவியும் இருக்கிறேன். இந்த செய்தியை தங்களது தளத்தின் வெளியிட்டு அந்த எளிய குடும்பத்திற்கு நிதி உதவி கிடைத்தால் மிகுந்த சந்தோஷமடைவேன். நண்பர்களே உங்களால் முடிந்த உதவியை செய்து அந்தக்குடும்பத்தில் ஒளியேற்றுங்கள்.



விபத்திற்கு முன்பும் விபத்திற்கு பின்பான அந்த சிறுவனின் புகைப்படங்களை இணைத்திருக்கிறேன்.

முதல் படம் தனது இரு சகோதரிகளுடன் சுமன் என்கிற சுரேந்தர். இரண்டாவது படம் விபத்திற்குப் பின்

இதை இட்லிவடையில் வெளியிட்டு உதவும் உள்ளங்களுக்கு தெரியப்படுத்திய இட்லிவடை நண்பர்களுக்கு நன்றி.

வங்கிக்கணக்கு விவரங்கள் கீழே

Bank name: Indian Bank
Acc num : 745331967
Account name : P.Madhavan
Branch : Kacharapalayam
city : Kallakurichi Taluk


முகவரி :

P.Madhavan
s/o pichamuthu
vedhakara theru
kachirapalayam post
kallakurichi tk
villuppuram dt


தொலைப்பேசி: 9791460680 கதிர்



அன்புடன்
கதிர்

Thursday, February 11, 2010

பூச்சிறுமி


னனிக்கு எதிலேயும் பூ வைத்து பார்ப்பதில்
பிரியம் அதிகம். நாய்க்கும் பூ வைப்பாள்
பள்ளிப்பேருந்திற்க்கும் பூ வைப்பாள்
வாசல்புறத்திலும் வாகனத்திலும்
எங்கேயும் எதிலும் பூ வைப்பதில் ஆனந்தம்
தங்கைக்கும் பூ வைப்பாள்
சாமிக்கென தனியே பூ கொய்வாள்
காலையில் செம்பருத்தி ரோஜாவும்
மாலையில் மல்லிகையும் சூடிக்கொள்வாள்
நேற்றிலிருந்து எனது கணினித்திரைக்கு
அடியிலும் சில பூக்களிட்டிருந்தாள்
இனி தினமும் வைக்கப்போவதாக
சொல்லியிருக்கிறாள்.

Sunday, November 22, 2009

பிரிதுயர்


வெட்டப்படாத நகங்களைப்போல உனது
நினைவுகள் அசௌகரியப்படுத்துகின்றன
குத்திக்கிழிக்க காத்திருப்பது போலவும்
வன்மம் கொண்டலைகின்றதது
ஒரு சிணுங்கள்கலோடு
ஒரு முத்தத்தோடு
ஒரு பொய்க்கிள்ளுதோடு
ஒற்றைப்புருவம் உயர்த்திய கோபத்தோடு
மென் மார்புகளின் வெம்மையோடு
இப்போதும் என்னுள் இருப்பதாய்
உணரும் ஒவ்வொரு கணத்திலும்
கசங்கிய புன்னகையை வலியுடன்
தவழவிடும் என் உதடுகளை
எதைக்கொண்டு மறைப்பது?

Wednesday, November 11, 2009

முதுமை ஒரு பொல்லாத விலங்கு. மரணத்தைக் கூட எதிர்கொள்ளும் சக்தி மனிதனுக்கு
உண்டென்றாலும் முதுமையை நேர்கொள்வது மிகக்கடினமாக இருக்கலாம். பெற்ற மக்கள்
தினமும் எப்போது கிழம் தவிரும் என்று தினமும் காலையில் ஊர்ஜிதம் செய்வதென்பது
கொலை செய்வதற்கும் சமமானதாக இருக்கலாம். மேலும் மரணம் கலைத்துப் போடும்
எவ்வித சலனமும் வீட்டில் நிகழாத ஒரு மரணமாக அது மாறலாம். எனக்குத் தெரிந்து
என் அம்மாவே கூட சாவென்பது சந்தோஷமாக வந்துவிடவேண்டும் மூப்பெய்தி தள்ளாடி
எழுந்து நிற்கக்கூட மற்றவர் உதவி நாடவேண்டும் என்ற நிலை வராத மரணமாக
இருக்க வேண்டும் என்று கூறுவார்.

தினமும் நான் என் கதவை திறந்து வெளிவரும்போது எதிர்வீட்டு திண்ணையில் ஒரு
பெரியவர் சாகக்கிடப்பதை காண்கிறேன். சாகக்கிடக்கிறார் என்று சாதாரணமாக சிறிய
வார்த்தையில் எழுதினாலும் அவர் படும் அவஸ்தைகளை நேரில் பார்க்கும்போது வேதனையை
தருகிறது. அவரின் மனைவி சமீபத்தில்தான் இறந்திருந்தார். ஆனால் அவரோ இவர்தான்
முதலில் சாவார் என்று சொல்லிக்கொண்டிருந்தார் ஏனெனில் பெரியவரின் உடல்நிலை
அப்படி இருந்தது. திடீரென்று அந்தப்பாட்டி இறந்தது அவரை மேலும் நிலைகுலைய
செய்துவிட்டது. நான் பார்த்தவரை இவர்களைப் போன்ற புரிதல் உள்ள தம்பதியை
வேறெங்குமே கண்டதில்லை.

கிட்டத்தட்ட கலைஞரின் வயது இவருக்கு இருக்கலாம். பால்யத்தில் நிறைய குடிப்பழக்கம்
இருந்ததினால் உடல் தளர்ந்துவிட்டது. வெயிலில் காய்ந்த செருப்பு சுருட்டிக்கொள்ளுமே
அதைப்போல அவரது கால்கள் வளைந்து விட்டன. காது கேட்கவில்லை. பேச்சு சரியாக
வரவில்லை. எழுந்துசென்று மூத்திரம் கழிக்க முடியவில்லை. பெற்றெடுத்த அரை டசன்
பிள்ளைகள் வெளியூரிலும் தேசத்திலும் வாழ கிட்டத்தட்ட தனிமையின் காட்டில் தனித்து
விடப்பட்டது போன்ற மனநிலை. மனிதவாழ்வில் ஆச்சரியப்படும் விதமாக சில விஷயங்கள்
நடக்கும் அதைப்போலவே ஒருவாரம் முன்பு இவரின் நினைவு தவறிவிட்டது.

அதனால் இயல்புக்கு மாறாக தினமும் நடந்துகொள்ள ஆரம்பித்தார். எழுந்து நடக்கவே
சிரமப்பட்ட இவர் நள்ளிரவில் தனியனாக இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று
கோமுகி நதிக்கரை பக்கம் வந்துவிட்டார். தெரிந்த ஒருவர் பார்த்து சந்தேகத்தில் எங்கே
செல்கிறீர்கள் என்று கேட்டபோது தன் மனைவி கைப்பிடித்து வந்ததாக கூறினார். ஆனால்
தெருவில் அவரைத்தவிர யாருமே இல்லை மேலும் அவர் மனைவி இறந்து நான்கு
மாதமாகிறது. ஆற்றில் இறங்கி சிறிது தூரம் சென்றிருந்தால் அவர் மனைவியை புதைத்த
இடத்திற்கே சென்றிருக்கலாம். ஒருவேளை யாருமே பார்க்கவில்லை என்றால் அங்குதான்
சென்றிருப்பார்.

விடிந்தபொழுது அவரிடம் கேட்டபோது அப்படியொரு சம்பவமே நடந்திராத தொனியில்
பேசினார். இரண்டொரு நாளுக்கு முன்பு ஒன்றரை மணிக்கு என்னறையின் கதவு தட்டும்
ஓசை கேட்டது. திறந்து பார்த்தால் சரியாக தெருவிளக்கு இவர் முகத்தில் விழ சிரித்தபடி
நின்றிருந்தார். அவருக்கு பூனைக்கண்கள் நெருப்புத்துண்டங்களைப்போல இருக்கும். மேலும்
தோல் சுருங்கி கோடுகள் விழுந்த அம்முகத்தை திடீரென்று பார்த்ததும் திகைத்து நின்று
விட்டேன். மெதுவாக சமாளித்தபடி என்ன தாத்தா என்றதும் வீட்டுக்குள்ள நாலு பேர் பூந்துகிட்டானுங்க யாருன்னே தெரியல என்னன்னு பாரு என்றார்
வீட்டில் குழந்தைகளும் மருமளும் மட்டுமே இருந்தனர். அவரும் வெளியே வந்து ஒருவாரமா
இப்படிதான் பண்றார் என அழ ஆரம்பித்துவிட்டார். நினைவுகள் மறந்து மூளையழிந்த
ஒருவரது மனநிலை என்னவாக இருக்கும் இந்த நொடியில் அவர் எதைப்பற்றி சிந்திப்பார்
என நினைத்துக்கொண்டிருந்தேன்.

நாஞ்சில் நாடன் சிறுகதையொன்றில் நகரத்தில் வாழும் மத்தியதர குடும்பத்தைச் சேர்ந்த
ஒருவனின் தாய் மூப்பில் படும் அவதியையும் அவரின் மருமகளே மாமியாரை கொல்லும்
கதையொன்றை நினைத்துக்கொண்டேன்.

விபரீதமாக அப்படியெல்லாம் ஒரு நிலை அவருக்கில்லை என்றாலும் மனது கிடந்து
தவிக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு என்னை கடைத்தெருக்கு அழைத்துச்செல்லும்படி
கேட்டார். அவருக்கு காது மந்தம் என்பதைவிட கேட்காது என்றே சொல்லலாம் மகன்
செவிட்டு மெசின் வாங்கிக் கொடுத்திருந்தாலும் அதை பொருத்திக் கேட்பதை அவர்
விரும்பவில்லை. நாம்தான் சிரமம் பாராமல் மிகக்குரலுயர்த்தி பேசவேண்டும். அப்படி
அவருடன் பேசுவது எனக்கே என்னை வினோதமாக காட்டியது. என்ன வேண்டும் என்று
கேட்டேன். மருந்து வாங்கவேண்டும் என்று கேட்டார். குடுங்க நானே வாங்கிட்டு வரேன்
என்றதும் மறுத்துவிட்டார். உனக்கு தெரியாது என்று சொல்லி என்னை எப்படியாவது
கூட்டிப்போ என்று அழ ஆரம்பித்துவிட்டார்.

கடைசியில்தான் தெரிந்தது அவர் வயதானவர்கள் இழுத்துக்கொண்டு கிடந்தால் சாகட்டும்
என்று ஒரு மருந்தை கடையில் விற்பார்களாம். அதை வாங்கவேண்டும் எனவும் தன்னால்
இனி எந்த வலியையும் தாங்க முடியாது எனவும் அழுதபடி கதறுகிறார். பார்த்துக்கிடந்த
எனக்கு எப்படிப்பட்ட பதிலை சொல்லவேணும் என்று கூட தெரியவில்லை.

முன்பே ஒருமுறை பேரனை சைக்கிள் எடுத்துவரச்சொல்லி அதில் பின்னால் உட்கார்ந்து
தள்ளிக்கொண்டே பாதி தூரம் சென்றுவிட்டார் அந்த மருந்தை வாங்கிவர. பாதி வழியில்
பேரன் வண்டி பாரம் தாங்காமல் கீழே விட விழுந்து விட்டார். அந்த வலி வேற.

தினமும் சிறிதளவு பிராந்தி குடுத்தால் மட்டுமே சற்று தெளிவாக பேசுகிறார். ஆகாரம்
எதுமில்லை சாப்பிட்டு நான்கு நாளாகுது. தொண்டையெல்லாம் புண். ஒண்ணுக்கு போக
மருமகளின் துணை வேண்டும் என்பதுதான் அவருக்கு வேதனை தரும் விஷயமாக
இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

எங்க அய்யாலாம் நூத்தியோரு வயசு வரை நல்லா வாழ்ந்துட்டு அலுங்காம செத்துப்
போனாரு. எனக்கு அப்படி வாழணும்னு இல்லன்னாலும் நிம்மதியான சாவு வரமாட்டேங்குதே
என்று தினமும் புலம்புகிறார்.

இவருடைய சகபாடி ஒருவர் கறுப்புத்தாத்தா என்பவர் இன்றும் கூட மாடுமேய்த்து
கொடிக்காலில் வெற்றிலை கிள்ளி விவசாயம் பார்க்கிறார். நல்ல தினகாத்திரமான கிழவர்.

இப்படியெல்லாம் நான் ஒரே பீலிங்ஸாக எழுதிவைத்து காத்திருந்தேன். ஜானெக்சா தந்த
தெம்பில் மறுநாளே எழுந்தமர்ந்து "என்னப்பா தம்பி ரொம்ப நாளா சுத்திகிட்டு இருக்கியே
ஒரு கட்டையோ முட்டையோ பாத்து கண்ணாலத்த பண்ணு ராசா" என்று கலாய்த்து
விட்டார்.

வந்தவனுக்கு தெரியும் போவதெப்படி என்று நினைத்துக்கொண்டேன்.




சம்பந்தமில்லாத பின்குறிப்பு

பருவமழை பெய்ததைத்தொடர்ந்து எங்க ஊர்ப்பக்கம் இருக்கற மலையில அருவிகள்
நிரம்பி வழியறதா செய்தி. இதே அருவிய இரண்டு வாரத்துக்கு முந்தி போட்டோ
எடுத்து இங்கே போட்டிருந்தேன் சின்ன பையன் உச்சா போற மாதிரி இருந்த இந்த
பெரியார் அருவி இப்போ கூட்டமா டைனோசர்கள் உச்சா போற அளவுக்கு வந்துடுச்சு.
இத விட மேகம் அருவின்னு ஒரு இடம் இருக்கு. அங்க போலாம்னு இந்த வாரம்
முடிவு பண்ணிருக்கோம். அங்க போகணும்னா இரண்டு மலை ஏறி இறங்கணும்
உடம்புல வலு உள்ளவங்க வரலாம்.வர விருப்பம் உள்ளவங்க இணைந்துகொள்ளலாம்.

Wednesday, October 21, 2009

பேராண்மை, காடு, மாரி சில குறிப்புகள்

மழையில் நனைந்த மோட்டாருக்கு காயில் கட்ட கடையில் கொடுத்துவிட்டு, கட்டும்
நேரத்தில் சினிமா பார்க்க வந்திருந்தார் எனக்கு பக்கத்து இருக்கைக்காரர். இருக்கையின்
நுனி வரை கொண்டு சென்றது என்ற பதத்திற்கான அர்த்தம் அவரிடம் கண்டேன்.
உற்சாகமாக கை தட்டிக்கொண்டும் விசில் அடித்துக்கொண்டும் கடைசி அரைமணி
நேரம் மிக அமைதியாகவும் பார்த்தார். படம் பார்த்து முடிந்ததும் செல்பேசி படம்
சூப்பர் என்று நண்பர்களுக்கும் சொன்னார். படம் பேராண்மை. அறிவியல்/ நாட்டை
அழிக்கும் நாசகும்பல், ராக்கெட் சைன்ஸ்(முத்துலிங்கம் கதையில் ராக்கெட் சைன்ஸ் என்று
ஒரு கதை வரும்) போன்ற விஷயங்களை பாமர மக்களுக்கும் புரியும் வகையில்
படமெடுத்த ஜனாவுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். எனக்குப் படம் மிகவும்
பிடித்திருந்தது. இணைய சுப்புடுக்கள் விமர்சனங்களையெல்லாம் பொருட்படுத்த
வேண்டாம் என்றே வர வர தோன்றுகிறது. பிரத்தியேக திரையிடலிலேயே
மடிக்கணினியோடு சென்று அங்கேயே "விமர்சனம்" என்ற போர்வையில் எழுதித்
தள்ளும் இணையசுப்புடுக்களின் இம்சை இப்போதெல்லாம் தாங்க முடியவில்லை.
யார் முதலில் எழுதுவது என்ற போட்டியே மேலோங்கி வருவதாகவும் தோன்றுகிறது.

முந்தின நாள் இரவில் ஜனநாதனின் நேரலையை பாலிமர் சேனல் ஒலிபரப்பியது
பொதுவாக நேரலையின் பாட்டு கேட்டு டெடிகேட் செய்யும் அபத்த கலாச்சாரத்தை
வெறுத்தாலும் தரமான இயக்குனர்களின் நேரலை சுவாரசியம் நிரம்பியதாகத்தான்
இருக்கிறது. நேரலையில் உற்சாகமாக பதிலளித்த ஜனநாதனின் மொழி முழுக்க
முழுக்க சென்னைத்தமிழ். குறிப்பாக இயக்குனர், நடிகைகளில் அலட்டலான
அந்நிய அணுகுமுறை முற்றிலுமாக இல்லாமல் பதிலளித்தது ரசிக்கும்படி இருந்தது.
பார்ப்பதற்கு குறுந்தாடி, மற்றும் கண்ணாடியுடன் விஞ்ஞானி தோற்றத்தில் இருந்தாலும்
பேசிய மொழி மிகுந்த நெருக்கத்தை அளிப்பதாக இருந்தது. இவரின் முந்தைய
படங்கள் பற்றிப் பேசும்போது அந்த சிறுகதையின் பாதிப்பில் எடுத்தது என்ற
அவரின் திறந்த பேச்சு முற்றிலும் புதியது. ஈ படம் கூட கான்ஸ்டன் கார்டனர்
போன்ற படங்களின் பாதிப்பில் உருவானது. இந்தப்படமும் கூட ஒரு கட்டுரையின்
தாக்கத்தால் உருவானது என்று குறிப்பிட்டிருந்தார். மிக சுவாரசியமான மனிதர்.


"காடு களை கட்ட" கிட்டத்தில் படத்தோடு இணைந்த மிக வேகமான, உக்கிரமான
பாடல் கேட்டறியவில்லை ஆனால் பேராண்மை படத்தில் காடு களை கட்ட என்ற
பாடல் அத்தனை உக்கிரமாக இருந்தது. இதையொற்றியே ஈ படத்தில் யேசுதாஸ்
பாடலொன்று வரும் "வாராது போல் வந்து வீழ்ந்தானடா" இதற்கு முன் பிதாமகன்
படத்தில் "அடடா அடடா அகங்கார அரக்க" பாடல் படத்தோடு இணைந்த உணர்ச்சிகரமான
பாடல். இப்பாடல் ஒலிக்கும் சமயத்தில் திரையரங்கில் படம் பார்ப்பவர்களின் முகத்தில்
வெறி குடிகொண்டிருக்கும். பக்கத்து இருக்கை லுங்கி நண்பர் அவ்வெறியுடன் பார்த்ததை
கவனித்தேன். அது எனக்கும் தொற்றிக்கொண்டது. எளிமையான சர்வதேசப்படமாக
இதைக்கருதலாம்.

--
"இஷ்டாங்கா ஒரு டீ போடு மாமே" என்றொரு வசனம் உன்னைப்போல் ஒருவனில்
வருவதைக்காணலாம். இதை இரா.முருகன் எழுதியிருக்க வாய்ப்பே இல்லை. சத்தியமாக
இத்தனை கேவலமாக முஸ்லிம்களை சித்தரிக்கும் போக்கை கமல்தான் செய்திருக்கவேண்டும்.
முன்பே தசாவதாரத்தில் நாகேஷ் தமிழ் பேசுவதை குறிப்பிட்டிருந்தேன். இன்னும் எத்தனை
காலத்துக்கு இதையே கமல் காண்பிக்க போகிறார் என்று தெரியவில்லை.

இன்னுமா முஸ்லிம்கள் இப்படி தமிழ் பேசுகிறார்கள்? அப்படியென்றால் எந்தப்பகுதி
முஸ்லிம்கள் இப்படி பேசுகிறார்கள்?

--
ச.தமிழ்ச்செல்வனின் சிறுகதைத் தொகுப்பொன்றை வாசித்துக்கொண்டிருந்தேன். முன்பே
சசியின் நேர்காணல் ஒன்றில் தமிழ்ச்செல்வனின் சிறுகதையொன்றை கருவாகக்கொண்டு
உருவான படம்தான் பூ என்பதை அறிந்திருந்தேன். "மாரி" என்ற அக்கதையினை
இத்தொகுப்பில் படித்தேன். சிறுகதையை சிதைக்காமல் அழகிய வடிவம் கொடுக்கப்பட்ட
திரைப்படம். மாரி என்ற அந்த நெகிழ்ச்சியான கதையை நினைக்கும்போதே ஆனந்தம்
ஏற்படுகிறது. இதுபோன்ற ஏராளமான சிறுகதைகள் படமாக எடுக்கலாம். முக்கியமாக
கண்மணி குணசேகரனின் கதைகளைக் குறிப்பிடலாம்.

--



ஜெயமோகனின் காடு நாவல் படிக்க காட்டுக்கே செல்லலாம் என்று நினைத்திருந்தேன்
நல்லவேளையாக ஊரில் இருக்கும் நேரம் நாவல் கைக்கு கிடைத்தது. கச்சிராயபாளையத்தில்
இருந்து வெள்ளிமலை செல்லும் பாதையில் பெரியார் அருவி என்ற சிற்றோடை ஒன்று உண்டு
அதுதான் நான் தேர்ந்தெடுத்த இடம். புத்தகத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.
வீட்டிலேயே மின்விசிறிக்கு அடியில் ஒய்யாரமாக படித்திருந்திருக்கலாம். காட்டில் நல்ல
வெயில் இருந்தது. பெரியார் அருவியில் சன்னமாக விழும் நீர் இருந்தது. பரவாயில்லை
என்று காட்டின் உள்நோக்கி ஒரு மைல் வரை பாறையில் நடந்து சென்றேன். குளிர்மையான
பாறைக்கடியில் சிற்றோடை சலசலக்க அமர்ந்து படித்தது வினோதமான அனுபவமாக
இருந்தாலும் ஒருவிதமான பயத்தோடுதான் படிக்க ஆரம்பித்தேன்.

காடு நாவலின் உள்ளே செல்ல முதலில் தடையாக இருந்தது அந்த மொழிதான். மலையாளத்தை
தமிழில் எழுதியது போல. பிறகு, ரெசாலம், குட்டப்பன், கிரி, அய்யர், கண்டன் புலையன்,
ராசப்பன், சினேகம்மை, நீலி, மாமி, ஆபெல், ராபி என்று ஒவ்வொருவராக உள்நுழைந்து வர
மெதுவாக நானும் காட்டினுள் நுழைந்துவிட்டேன். சற்று நேரத்தில் கண்ணயர்ந்தும் விட்டேன்.
எவ்வளவு நேரம் உறங்கினேன் என்று தெரியவில்லை. விழித்தபோது இருள் சூழ ஆரம்பித்தது.
மடத்தனமான காரியமொன்றை செய்துவிட்டோமென்ற எண்ணமும் வந்தது. கரடிகள் அதிகம்
சுற்றும் வனம் என்று அறியப்பட்ட வெள்ளிமலை, கரியாலூர் போன்ற வனப்பகுதிகள்.
பதறியபடி வெளிவந்துவிட்டேன்.

இந்நாவலில் வரும் நீலி, குட்டப்பன், ஆபெல், ராபி போன்ற கதாபாத்திரங்கள் எனக்கு
மிகுந்த நெருக்கத்தை உருவாக்கினார்கள். கதைச்சுருக்கமெல்லாம் எழுதமுடியாது. இது
ஒரு அனுபவம் நாவலைப் படித்தால் மட்டுமே உணரமுடியும்.

வன நீலி என்ற சொல்லை சொல்லும்போதே அதுகொடுக்கும் பரவச உருவகம் நாவலில்
அருமையான பகுதிகள். மற்ற எழுத்தாளர்களின் படைப்பைப் போல ஒரே அமர்வில்
வாசிப்பது போல காட்டை வாசிக்க இயலவில்லை. நானூற்றி எழுபது பக்கங்களில்
மொத்தமாக ஐம்பது முறையாவது முனை மடித்திருப்பேன். மேலும் கடந்த மூன்று
நாட்களாக கனவு கூட மலையாளத்தில்தான் வருகிறது. அங்கே மலையாளத்திலே
சம்சாரிப்பது போல வருவது இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது.

--

பவா செல்லத்துரை இல்ல விழாவிற்கு சென்று வந்த குறிப்பை பவா பாலுவுக்கு படித்துக்
காட்டினாராம். அதில் டப்பா லூமிக்சில் நம்மை படமெடுத்தால் ஒட்டுமொத்த புகைப்பட
உலகுக்கே அவமானம் என்றும், அவருடன் புகைப்படம் எடுக்க விருப்பப்பட்டது குறித்தும்
எழுதியிருந்தேன். என்கிட்ட சொல்லியிருந்திருந்தா தாராளமா எடுத்திருக்கலாமேப்பா...
என்று பாலு வருத்தப்பட்டதாக பவா சொன்னார். மறுபடியும் பெருமையாக இருக்கிறது.
(அய்ஸ் மிஸ் பண்ணிட்டோமேய்யா...) இணையத்தில் எழுதுவதினால் ஆன பயன்!

--

Thursday, October 15, 2009

அன்பினால் நிறைந்த வீடு

கடந்த வாரம் பவா செல்லத்துரையின் இல்லத்திறப்பு விழாவிற்கு சென்றிருந்தேன்.
அய்யனார் அழைப்பிற்கிணங்கவே சென்றிருந்தேன் முன்பாக பவாவின் வலைப்பூவை
மட்டுமே அறிந்திருந்தேன் மற்றும் அவரது ஷைலஜாவின் மொழிபெயர்ப்புகளைப்பற்றி
அறிந்திருந்தேன். எது என்னை அங்கே செல்ல வைத்தது என்று தெரியவில்லை ஆனால்
ஒரு நிறைவான விழாவினை கண்ட சந்தோஷம் மனத்தில். பவா, ஷைலஜாவின் உள்ளம்
முழுக்க அன்பினால் நிறைந்திருக்கிறது அந்த அன்பு அவர் வீடு முழுவதும் விரவியிருக்கிறது
வந்தவர்கள் அனைவருக்கும் சந்தோஷம் பகிர்ந்தளிக்கப்பட்டது. முழுக்க முழுக்க
கருங்கற்கல் கொண்டு கட்டப்பட்ட வீடு, விளக்கு மாடங்கள், ஓவியங்கள் என
ரசனையில்லாதவரையும் அமர்ந்து ரசிக்க வைக்கும் வடிவங்கள்.

முழுக்க முழுக்க கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்களைக் காணும்போதெல்லாம் மனம்
தனிமையை உணரும் சிறுவயதிலிருந்தே பழக்கப்பட்டிருப்பது அது. அதிகம் அடம்பிடித்தால்
உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி வழியில் அமைந்திருந்த ஒரு பள்ளியில் சேர்த்துவிடுவதாக
சொல்லி பயமுறுத்தியிருந்தார் அப்பா. முன்னதாக அங்கெ சென்று வந்த நாள் முதல் எனது
சேட்டைகளை மூட்டை கட்டியது நினைவிலிருக்கிறது. வீட்டை விட்டு விடுதியில் இருப்பதே
தாங்க முடியாததாக இருக்கும். மேலதிகமாக அவ்விடுதி முழுக்க முழுக்க எவ்வித அலங்காரமும்
அற்ற கருங்கற்களால் கட்டப்பட்டது. மிக உயரமான சுவர்கள் கொண்டது. பல சிறுவர்கள் களையிழந்த
முகங்களுடன் படித்துக்கொண்டிருப்பார்கள். கிட்டத்தட்ட சஷாங்க் ரிடம்ப்ஷன், க்ரீன் மைல்
படத்தில் வரும் சிறைச்சாலையை ஒத்திருக்கும். எனவே கற்களால் கட்டப்பட்ட வீட்டையோ
விடுதியையோ பார்த்தால் சிறைச்சாலையின் தனிமை பிம்பம் வந்துபோகும். இனிமேல் அது வரா.
பவாவின் அன்பு நிறைந்த இல்லமே ஞாபகம் வரும். பிற்காலத்தில் இதேபோன்றதொரு வீடு
கட்டவும் எண்ணமிருக்கிறது.



படத்தில் பாலுவும் கரிசலும்

இதுவரை பார்த்திராத புதுமையில் நடத்தினார். வீட்டில் முதலில் மாட்டை புக வைக்கும்
சம்பிரதாயமில்லை. மாறாக எழுத்தாளர்கள், எழுத்தை ரசிப்பவர்களால் இல்லம் நிரம்பியிருந்தது
சிகரம் வைத்தது போல தமிழ் சினிமா பெருமைப்படும் பாலுமகேந்திரா வந்திருந்தார்.
அவரை மிக அருகாமையில் சந்தித்ததே கனவினைப்போன்றதொரு தோற்றம் தந்தது.
த.மு.எ.ச வைச் சேர்ந்த கரிசல் குயில் கிருஷ்ணசாமி மற்றும் அவரது குழு இயற்றிய தமிழ்
பாடல்களை(சினிமா அல்ல) கிருஷ்ணசாமி பாட அவரைச்சுற்றிலும் அமர்ந்து அனைவரும்
கேட்டுக்கொண்டிருந்தோம். கேட்டுக்கொண்டே இருக்கலாம் போன்ற குரல். முன்னதாக
பாலுமகேந்திராவுக்கு பாடிக்காட்டிக்கொண்டிருந்தபோது அறையில் வெளியிலிருந்து
ஒட்டுக்கேட்டுக்கொண்டிருந்தேன். பிறகு அமர்வில் பாடும்போது தெளிவாக கேட்டேன்.



பாடலின் போது நண்பர்கள், வெண்சட்டையில் ஒய்யாரமாய் நின்றிருப்பவர் பவா.

பாடல் முடிந்ததும் பவா மற்றும் நண்பர்கள் சில நிமிடங்கள் பேசினார்கள். அனைவரும்
ஒருமித்த குரலாக பேசியது ஒன்றைத்தான். இவ்வீடானது இலக்கிய ஆர்வமுள்ள அனைத்து
பறவைகளுக்கும் வேடந்தாங்களாக அமையும் என்பது. அன்பால் நிறைந்த வீடு. வீடு என்ற
கனவைப்பற்றி பாலு பேசும்போது மிகுந்த நெகிழ்ச்சியாக இருந்தது. சிறு வயதில் தூர்தர்ஷனில்
வீடு படத்தை பார்த்த காட்சிகளும் நினைவுக்கு வந்தன. மனிதர்களில் அபூர்வமானவர் பாலு
அவரது பேச்சும் ரத்தினச்சுருக்கமாகவும் அழகாகவும் இருந்தது.

நம் இருவரையும் பாலு புகைப்படமெடுத்தால் எப்படியிருக்கும்? கேட்டுப்பாக்கலாமா என்று
அய்யனார் என்னிடம் கேட்டதை உடனடியாக நிராகரித்தேன். இந்த டப்பா லூமிக்சில் அதுவும்
நம்மை அவர் படமெடுப்பது ஒட்டுமொத்த புகைப்பட உலகுக்கே அவமானம் என்றேன்,

அங்கு செல்லும்போது அய்யனாரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தேன். இந்த ப்லாக்
எழுதறவன், பதிவு எழுதறவன்னு தயவு செய்து யார்கிட்டயும் அறிமுகப்படுத்த வேண்டாம்
என்பது. சாதாரண வாசகன்னு சொல்லு போதும் என்று. ஆனால் சொல்லிவைத்தது போல
இவர் ஒரு ப்லாக்கர் என்றே அறிமுகப்படுத்தினார். க.சீ.சிவக்குமார் என்னவெல்லாம் எழுதுவீர்கள்
என்று கேட்டார் சொல்வதற்கு விழிக்க வேண்டியதாயிருக்கிறது.

மூவாயிரத்தி சொச்சம் விமர்சகர்கள், ரெண்டாயிரத்தி சொச்சம் கவிஞர்கள், ஆயிரத்து சொச்சம்
கந்தசாமிகள், ஐநூத்தி சொச்சம் மொக்கைகள்.... இதெல்லாம் சொல்லவில்லை. சிவாவுக்கு
வலையுலகம் என்ற அபத்தமே தெரியாலிருப்பது சந்தோஷமான விஷயம் என்று அய்யனார்
அறிவுரை கூறினார்.

குமார சம்பவம் படித்துவிட்டீர்களா என்று கேட்டார். வாராந்தர தொடர்களில் ஆர்வமில்லை
ஒரே அமர்வில் படித்தாலும் மூளையில் நிற்காத அளவு நினைவுத்திறன் கொண்டவன் நான்
என்றேன். ஆனால் அவர் எழுதிய சிறுகதைகள் அடங்கிய பிடிஎஃப் கோப்பு
ஒன்றை அவரிடம் காட்டினேன். "அடப்பாவிகளா இதெல்லாம் இன்னும் பத்திரிக்கைக்கே
அனுப்பலியேஉங்க கைக்கு எப்புடிய்யா கெடச்சுது என்றார். இதில் எல்லாமே விகடனில்
வெளிவந்தவையா இருக்கலாம் எவராவது ஒருவர் வாராவாரம் திரட்டி இதுபோன்ற கோப்புகளாக
மாற்றி வெளியிடுவார். இது ஒன்றுமட்டுமல்ல உலகம் முழுக்க வெளிநாடு
வாழ் வாசகர்களுக்கு இம்மாதிரி கோப்புகள் மட்டுமே கிடைக்கும் சாத்தியம். இப்படித்தான் நான்
பல நாவல்கள் படித்தேன். அவருக்கே தெரியாமல் அவரது கதைகள், நேர்காணல்கள் எப்படி
வந்தது என்று தெரியவில்லையாம். இணைய உலகம். கடைசியாக ஒருவேண்டுகோள் விடுத்தார்
எனக்கொரு பிரதி அனுப்ப முடியுமா என்று.

சிவக்குமாரின் சிறுகதைகள் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவை அதே சமயம் அரசியலமைப்பு,
அதிகாரம் போன்றவற்றின் மீதான எள்ளல். இந்த எள்ளல் ஒவ்வொரு வரியிலும் இருக்கும்.
எனக்கு மிகவும் பிடித்திருந்தது உதாரணம்

"அகர முதல எழுத்தெல்லாம் கூடிமுயங்கப் பெறின்(முதல் நான்கெழுத்தின் சேர்க்கை வினோதம்!.)
கிடைக்கக்கூடிய கோடானு கோடி சாத்தியங்களில் ஒன்றாக ஆதிமங்களத்து விசேஷங்கள் நெர்ந்தது"

"ஈடில்லாததும் வீடில்லாததுமான அந்த நாய் கருப்பு வெள்ளை நிறமுடையது"

கவிதைகளும் அழகியல் உணர்வுடன் படைக்கப்பட்டிருக்கிறது. விகடனில் தவறவிட்டவர்கள்
கோப்பு வடிவில் வாசிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் தெரிவிக்கலாம். அனுப்புகிறேன்(அவரின் அனுமதியுடனே!)

எழுத மனம் நிறைய சந்தோஷமான அனுபவங்கள் இருந்தாலும் இத்தோடு முடித்துக்கொள்ளலாம்
என்று நினைக்கிறேன்.

இன்னொரு சந்தோஷமான விஷயம். தடாலடியாக பத்து, பனிரெண்டு என்று நூல் வெளியிடும்
எழுத்தாளர்களுக்கு மத்தியில் இணைய உலகில் இருந்து அய்யனாரும் அப்பட்டியலில் இணைகிறார்.
வம்சி வெளியீடாக, கவிதைகள், புனைவுகள், திரைப்படங்கள் என மூன்று நூலாக வெளிவருகிறது.
இணைய எழுத்துக்களில் தரமானவை அச்சில் வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி

Wednesday, August 12, 2009

அங்காடித்தெரு


உன்பேரை சொல்லும்போதே உள்நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர்வாழும் போராட்டம்
நீ பார்க்கும்போதே மழையாவேன் ஓ..ஓ
உன் அன்பில் கண்ணீர்த்துளியாவேன்

நீயில்லை என்றால் என்னாவேன் ஓ..ஓ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்

உன்பேரை சொல்லும்போதே உள்நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர்வாழும் போராட்டம்
நீயில்லை என்றால் என்னாவேன் ஓ..ஓ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்

நீ பேரழகில் போர்நடத்தி என்னை வென்றாய்
கண் பார்க்கும்போதே பார்வையாலே கடத்திச் சென்றாய்

நான் பெண்ணாக பிறந்ததற்கு வெட்கம் சொல்ல
முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்

என் உலகம் தனிமைக்காடு
நீ வந்தாய் பூக்களோடு
இனி தொடரும் கனவுகளோடு பெண்ணே பெண்ணே

நீயில்லை என்றால் என்னாவேன் ஓ..ஓ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்

உன்பேரை சொல்லும்போதே உள்நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர்வாழும் போராட்டம்
நீ பார்க்கும்போதே மழையாவேன் ஓ..ஓ
உன் அன்பில் கண்ணீர்த்துளியாவேன்

நீயில்லை என்றால் என்னாவேன் ஓ..ஓ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்

உன் கருங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உரையாடித்தான் ஜென்மம் தீரும்

உன் மாரோடு சாயும் அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்

உன் காதல் ஒன்றைத்தவிர என் கையில் ஒன்றுமில்லை
அதைத் தாண்டி ஒன்றுமே இல்லை பெண்ணே பெண்ணே

நீயில்லை என்றால் என்னாவேன் ஓ..ஓ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்

உன்பேரை சொல்லும்போதே உள்நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர்வாழும் போராட்டம்
நீ பார்க்கும்போதே மழையாவேன் ஓ..ஓ
உன் அன்பில் கண்ணீர்த்துளியாவேன்

நீயில்லை என்றால் என்னாவேன் ஓ..ஓ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்

படம் : அங்காடித்தெரு
பாடியவர்: நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல்
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
இசை: கண்டிப்பாக ஜி.வி.பிரகாஷ்குமார் என்று நினைக்கிறேன். விஜய் ஆன்டனிக்கு
இன்னும் இந்த அளவுக்கு மெலடி கொடுக்கும் பக்குவமெல்லாம் வரவில்லை. அவர்
வேறு ரக இசையமைப்பாளர். இரண்டு பாடல்களுக்கு இசையமைத்து பின்னர்
படத்திலிருந்து ஜி.வி வெளியேறிவிட்டாராம் அந்த இரு பாடல்களில் இதுவும்
ஒன்றாக இருக்கவேண்டும்.

எதுவாக இருந்தாலும் உருகுதே மருகுதே பாடலைப்போல் இதுவும் இனிமையான
ஒரு பாடல்