எல்லையற்ற அன்பு கொள்வோம்

Tuesday, July 21, 2009

வடக்கநந்தல் பேரூராட்சி துணை நூலகம் மற்றும் "என் கதை"

சரியாக ஏழாம் வகுப்பு படிக்கையில் நான் நூலகத்தினுள் நுழந்தது நினைவில்
இருக்கிறது. மரக்கட்டைகளின் அடியில் தப்பிவிட பறக்கும் தினசரிகளுக்கு அப்பால்
தனியான அறையில் நூலகர் இருப்பார். அங்கு உறுப்பினர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். ஏழாம் வகுப்பு படிப்பவர்க்கெல்லாம் நுழைய அனுமதி இல்லையாம். இடதுபக்க மூலையில்தான் சாமுத்திரிகா லட்சணம் பற்றிய புத்தகங்கள் இருப்பதாக செட்டியார்
வீட்டு பையன் சொன்னது நினைவில் இருக்கிறது. ஒரு பெண்ணின் முடியை
வைத்தே அவளது முகலட்சணங்களைக் கூட கண்டுபிடிக்க முடியுமாம். அப்பேர்ப்பட்ட புத்தகங்கள் இருக்குமிடத்தில்தான் எங்களை நுழைய அனுமதிக்கவில்லை. அதற்கு
பிறகு பத்தாம் வகுப்பு படிக்கையில் அரசு நூலகத்தில் அதிகாரப்பூர்வமாக அங்கத்தினராக சேர்ந்தபோது இனித்தது, ஆனால் முக்கியமாக நான் தேடிய புத்தகங்கள் எந்த மூலையில் தேடியும் கிடைக்கவில்லை. அப்போதைய நூலகம் வடக்கநந்தல் அரசுப்பள்ளிக்கு
அருகில் இருந்தது. நூலகத்தினுள் எப்போதும் காற்றாடியின் சப்தம் மட்டுமே கேட்கும். இப்போது பேரூராட்சி அலுவலகத்திற்கு அருகில் பஸ்நிலையம் பின்புறம், கார் ஸ்டேண்ட் என பரபரப்பான இடத்தில் இருப்பதால் அமைதியைக் காணவில்லை. முக்கியமாக
புத்தகங்கள் அடுக்கிய அறையினுள் அந்துருண்டையுடன் கூடிய புத்தகங்களின் வாசனை அறவே போய் ப்ளீச்சின் பவுடர் நாறல் அடித்தது.

இப்போது நூலகத்தினுள் நுழையும்போது கூட அங்கமுத்து சக்கரையின் மீதான
பயத்தினால் சற்றே பின்வாங்கினேன். ஏனென்றால் உறுப்பினராக சேரும்போது
அடம்பிடித்து சேர்ந்த நான் நாளடைவில் புத்தகங்கள் திருப்பித்தராமல் டபாய்க்கத்துவங்கினேன். சிலநாள் என் பின்னாலேயே சுற்றினார் அ.மு சக்கரை.
நான் பிடிபடவேயில்லை. கல்லூரி, மறுபடி கல்லூரி, வெளிநாடு என்று சுற்றி விட்டு இப்போழுது வந்தால் இப்போழுதும் அதே நூலகரே இருப்பாரோ, அடையாளம் கண்டுகொள்வாரோ என்று பயம் அதனாலே இங்கு வந்தநாள் முதல் நூலகம் பக்கம் தலைகாட்டவில்லை. சென்ற வார இறுதிக்கொண்டாட்டத்தின்
உச்சமாக எனது டயர் பஞ்சராகியது அதை நான்கு மைல் தள்ளி வந்து நல்லாத்தூர் என்னுமிடத்தில் ஒட்டக்கொடுத்துவிட்டு உட்கார்ந்திருந்தேன். சரியாக பஸ்நிறுத்தத்திற்கு
எதிரே அமைந்துள்ளது அந்தக் கடை. இரண்டு புளியமரங்களுக்கிடையில் ஒரு கடை
அதற்கு ஒரு நிறுத்தம். சிகரெட் கூட கிடைக்காத ஒரு இடத்தில் மாட்டிக்கொண்டதை நினைத்து வெந்தபடி கல்திண்டில் அமர்ந்திருந்தேன். ஒரு பேருந்து வந்தது. அதில்
இருந்து ஒருவர் இறங்கினார். சில முகங்களைப் பார்க்கும்போது பழகிய முகம் ஆனால்
மறந்து போயிருக்கும் ஞாபகத்தில் வராதவரை மூளையை போட்டு கசக்கிப்போட்டு பிழிந்தெடுத்து வாட்டிக்கொண்டிருக்கும்போது “சக்கர சார் என்ன பென்சன் நாளா...”
என்று கேட்டபோதுதான் எனக்கு உரைத்தது, அது பலவருடங்களாக என்னை
வலைவீசி தேடிக்கொண்டிருக்கும் அங்கமுத்து சக்கரை என்ற வடக்கநந்தல் சிறப்புநிலை பேரூராட்சியில் துணை நூலகத்தின் நூலகர் என்று. உடனே பயமும் பிடித்துக்கொண்டது என்னை ஒருவேளை அடையாளம் கண்டுகொண்டால்? திருட்டுப்பயலே உன்னால நான் எவ்ளோ அலைஞ்சேன் தெரியுமா..., நீ அந்த புக்கு திரும்பக்குடுக்காத பையன் தான?
தம்பி உன் பேர் கதிரவன் தான? மொத்தம் மூணு புக்கு திருப்பி தரல என் காச போட்டு கட்டினேன் ஏழு வருச வட்டி போட்டாக்கூட ஆயிரம் தொடும் ஒழுங்கா காச குடு...
இப்படி ஏதாவதொன்றை சொல்வார் என்று எதிர்பார்த்தேன் ஆனால் எதுவும்
சொல்லவில்லை. என்னை அடையாளம் தெரியவில்லை. பெரிய சந்தோஷம்.

என் கதை - நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை



சாருவின் எழுத்துத் தொனிக்கும் நாமக்கல் கவிஞரின் எழுத்துத் தொனிக்கும் ஆறு வித்தியாசங்களை கண்டுபிடித்துவிடலாம். அதனால்தான் சாருவின் வலைப்பக்கத்தில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது என்று கருதுகிறேன். இரண்டு பேருக்குமே தனிப்பட்ட வாழ்க்கையிலும் பொதுவாழ்க்கையிலும் நிறைய ஒற்றுமைகள் உள்ளதை வாசிக்கும்போது உணர முடிந்தது. குறிப்பாக கட்டை மீசையுடன் கம்பீரமான தோற்றம், புலவன் வறுமை (இதைப்பற்றி பெரிய அத்தியாயமே உள்ளது), இரண்டு திருமணங்கள், தன் மனைவியை தெய்வத்திற்கு சமமான ஒன்றாக முன்வைத்து அவர் எழுதும் பல உதாரணங்களுடன் சில பக்கங்கள், புலவரின் இல்லறவாழ்வு வறுமையால் வாடியபோது அவரது நண்பர்களே உதவுவது. குறிப்பாக உனது எழுத்துவேலையை நீ தொடர்ந்து செய் உனது
குடும்பம் பற்றி கவலைப்படாதே அதற்கான நிரந்தர வருமானத்தை உருவாக்கித்தர
நாங்கள் இருக்கிறோம் என. அதிலும் பல சிக்கல்கள் நிலம் எழுதித்தர முடிவு செய்யும்
நண்பர் ஒருவர் இறந்துவிடுவது, அல்லது எதோவொரு காரணத்தால் தடைபடுவது என.
கடைசியாக பாரதியார் மேல் கொண்டிருந்த அபரிதமான அன்பு. அவரை நேரில் சந்திக்க நடந்தே செல்வது என சொல்லிக்கொண்டே போகலாம்.

நாமக்கல் கவிஞரின் இளமைக்காலத்தை விவரிக்கும் இடங்களில் வெள்ளைப்படம்
பார்ப்பது போன்ற உணர்வைத் தந்தது. குறிப்பாக அவரது ஓவியத்திறமை. காவல்
துறை ஏட்டான அவரது தந்தையோ படம் வரையும் தொழில் சுத்தமாக பிடிக்கவில்லை.
தன் மகன் தன்னைப்போலவே காவல்துறையில் அதிகாரியாக வேண்டும் என்று ஆசை. பிரிட்டிஷ் உயர் அதிகாரி ஒருவரின் செல்லமகள் இறந்து போகிறாள் அவளுடைய
புகைப்படம் கூட ஒன்று இருப்பதாகவும் ஆனால் அது மிகச்சிறிய வயதில் எடுத்தது.
நான் சொல்லும் குறிப்புகளை வைத்து படம் வரைந்து தரமுடியுமா எனக்கேட்கிறார். அதுவரை தன் ஓவியத்திறமைக்கு எவருமே ஆதரவாக இல்லை என்ற குறை அவருக்கிருந்தது அதனால் உடனே சம்மதிக்கிறார். புகைப்படத்தை வாங்கிக்கொண்டு
அவர் சொல்லும் குறிப்புகளை எழுதிக்கொண்டு பதினைந்து நாளில் வரைந்து தருவதாக வாக்குறுதி அளிக்கிறார். தன் திறமைகள் அனைத்தையும் கொட்டி பார்த்துப் பார்த்து
செதுக்கி அதிகாரியிடம் காட்டுகிறார் அவர் சலனமேயில்லாமல் வெகுநேரம்
அமைதியாக பார்த்துவிட்டு புலவரிடம் கண்களில் நீர் கசிய சொல்கிறார். என் மகளை
எனக்கு மீட்டுத்தந்து விட்டீர்கள் என அணைத்துக்கொள்கிறார்.

அதுவரை ஓவியத்திற்கு விலையாக ஐம்பது ரூபாய் கொடுப்பார் என்று எண்ணியிருந்த புலவருக்கு மேலும் அதிர்ச்சி தரும் வகையில் தன் பணப்பையில் இருந்து
எண்ணாமலேயே அள்ளிக்கொடுக்கிறார். அதில் அறுநூற்று ஐம்பதுக்கும் மேலாக
பணம் இருக்கிறது. அந்தக்காலத்தில் அது மிகப்பெரிய பணம்.

புலவர் வாழ்நாள் முழுவது எதோவொரு குழப்பத்திலேயே வாழ்ந்து விட்டதாகவே வாசிக்கையில் தெரிகிறது. அல்லது வாழ்நாள் முழுவதும் மற்றவரின் விருப்பத்திற்காகவே வாந்ததுபோல என்று சொல்லலாம். தன் எதிர்கால வாழ்க்கைப் பற்றி தன் தந்தையே எல்லாவற்றையும் தீர்மானிப்பது. தன் திருமணம், அசைவத்தை விடவேண்டும் என்று நான்கைந்து முறை சபதமெடுத்து அவற்றில் தோல்வியடைவது, இல்லறவாழ்வில் வறுமையில் வாடுகையில் தன் தந்தை சொல்படி போலிஸ் உத்தியோகத்திற்கு சென்றிருந்தால் இந்த வருமை எட்டிப்பார்த்திருக்காது என வருந்துவது என நிறைய சொல்லலாம்.

இவரின் இளமைக்காலம் மிகுந்த சுவாரசியமுள்ளதாகவே தெரிகிறது. ஒருபாடம் தவிர
மற்ற எல்லாப்பாடங்களிலும் மிகுந்த ஞானம் கொண்டிருந்தார். அது கணிதம். இவருக்கு கணிதம் கற்பிக்க பல பிரயத்தனங்கள் செய்தும் பலன் அளிக்காமல் போகிறது. சிறந்த கால்பந்து வீரராகவும் இருந்திருக்கிறார். சுதந்திரத்துக்கு முந்திய இந்தியாவின் மூலை முடுக்கு ஒன்றுவிடாமல் சுத்தி வந்திருக்கிறார். ஒரு பயணத்திற்கு குறைந்தது ஆறுமாதங்கள். பாகிஸ்தானின் பெஷாவர் வரை சென்று வந்திருக்கிறார். அதுகுறித்த விவரமாக புத்தகத்தில் இடப்பெற்றிருக்கிறது. மிகுந்த சுவாரசியத்துடன் எழுதியிருக்கும் இப்பகுதியை இருமுறை வாசித்தேன்.

ராஜாஜி, வா.வே.சு ஐயர், பெரியார், காந்தி, பாரதி, பாரதிதாசன், என்று
அனைவருடனும் மிகுந்த நட்புடன் பழகி இருந்திருக்கிறார். தமிழகத்தில் காங்கிரசு வளர முக்கிய காரணிகளுல் ஒன்றாக இருந்திருக்கிறார். இவரது மேடைப்பேச்சினைக் காண
மக்கள் திரண்டிருக்கின்றனர். காங்கிரசின் ஆஸ்தான பேச்சாளர்களில் முதன்மையான ஒருவராக திகழ்ந்திருக்கிறார்.

பாரதியின் மேல் இவருக்கு ஒரு மிகப்பெரிய அபிமானம் இருந்திருக்கிறது. வெறி என்று
கூட சொல்லலாம். அந்தளவுக்கு அவரின் மேல் பற்று இருந்திருக்கிறது. அவரைக்கான புதுச்சேரிக்கு பலமுறை சென்றும் காணமுடியாமல் திரும்பியிருக்கிறார். ஒருமுறை தேவகோட்டைக்கு நண்பருடன் சென்றிருக்கும் புலவருக்கு பாரதி இங்கே வந்திருக்கிறார்
என தகவல் கிடைக்கிறது. மேலும் அதிகாலையில் அவர் கிளம்பிவிடுவார் என்றும்
தகவல் கிடைக்கிறது. ஏற்கனவே இரவு நெருங்கியிருந்தது ஆனால் சற்றும் யோசிக்காமல் அவரைக்காண புறப்படுகிறார். மாட்டுவண்டி கூட ஏற்பாடு செய்யாமல் வயல்வெளிகளில் சுற்றி நடந்தே பல மைல்கள் கடந்து செல்கிறார். கடைசியில் அங்கு
சென்றடையும்போது பாரதியார் நண்பர்களுடன் உலாத்தப்போயிருக்கிறார் என்று சொல்கின்றனர் உடனே அவரைத் தேடி அலைகிறார். இறுதியாக கண்டுகொள்கிறார்.
ஊருக்கு வெளியே காட்டில் நிலவொளியின் கீழ் நண்பர்களுடன் அமர்ந்து விவாதித்துக்கொண்டிருக்கிறார். அவர் அருகில் செல்லும்போது எனது உடல் நடுங்கியது. எவ்வளவு கட்டுப்படுத்தியும் தான் உணர்ச்சிவசப்படுவதை கட்டுப்படுத்த முடியவில்லை
என்று குறிப்பிடுகிறார்.

தலையில் முண்டாசு கட்டி கோட் அணிந்திருந்தார் பாரதி. நிலவொளியின் கீழ் அவர்
ஒரு ஓவியம் போல இருந்தார். அவரைக்காண்கையில் எனக்கு இரண்டு ஆசைகள்
இருந்தன. ஒன்று அவரை ஓவியம் தீட்டுவது, இரண்டாவது அவர்பாடக்கேட்பது.
தன்னை அறிமுகப்பத்துக்கொள்கிறார். பாரதி முன்பே இவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்
ஏனெனில் ஓவியத்திறைக்கு சான்றாக அவர் டெல்ல்லி வரை சென்று பதக்கம் பெற்று
திரும்பியிருந்தார். தானும் ஒரு கவி என்று சொல்லும்போது மரமதிர சிரித்த பாரதி
“நீர் ஒரு காவியக்கவிஞர் என்று சொல்லும்” என்று சிரித்தாராம். பாரதியின்
முன்னிலையில் தான் இயற்றியிருந்த பாடல்களை பாடினார் கவிஞர்.

பாடி முடித்ததும் வெகுநேரம் கைதட்டினாராம் பாரதி. பின்னர் வெகுநேரம் சுதந்திரம் குறித்தும், கவிதைகள் குறித்தும் பேசிக்கொண்டிருந்தனர். விடியல்காலை மூன்று மணி ஆகியது. ஆனால் தூக்கத்தின் அறிகுறிகள் எதுவும் அவரிடத்தில் தெரியவில்லை. புறப்படுகையில் பாரதியாரிடம் பாடும்படி கேட்டுக்கொண்டார் கவிஞர். கேட்கும்போதெல்லாம்
பாடமுடியாது எனக்குத்தோன்றும்போதுதான் பாடமுடியும் என்று சொல்லிவிட்டார்.
இதனால் வருத்தமடைந்த கவிஞர் ஓவியம் வரையவேண்டும் என்கிறார். அதற்கான
நேரம் வரும் என்று சொல்கிறார்.

பாரதி அதிகாலையில் பயணமாகி வேறு ஒரு இடம் செல்லவேண்டும் ஆகவே
கிளம்பலாம் நண்பர்களே என்று கிளம்புகின்றனர். அங்குள்ள ஒரு வீட்டில் பாரதி
தூங்குகிறார் அவருக்கு அருகில் கவிஞர். அதிகாலை நான்கு மணிக்கு அருகில் குறட்டை விட்டு உறங்கிக்கொண்டிருந்த கவிஞரை எழுப்பி “பாடல் வேண்டுமென்று கேட்டாயே
இப்பொழுது இப்பொழுது பாடட்டுமா என்று கேட்கிறார். சந்தோஷமிகுதியில் தலையாட்ட பாடத்துவங்குகிறார்.

கம்பீரமான குரலில் பாட ஆரம்பிக்கிறார் பாரதியார். அங்கே உறங்கியவர்கள் எழுந்து உட்கார்ந்து ஆர்வமாக கேட்க ஆரம்பிக்கின்றனர். கவிஞர் கண்களை மூடி பாடலில் லயிக்கிறார். தொடர்ந்து வெகுநேரம் பாடிக்கொண்டே இருக்கிறார். பயண ஏற்பாட்டாளர்கள் பயண நேரம் தாண்டிப்போனதால் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருக்கின்றனர்.
அவரோ நிறுத்துவதாக தெரியவில்லை. இறுதியில் கண்களைத்திறந்து பாடலை நிறுத்துகிறார். இப்போழுது திருப்தியா என்றவாறு புறப்படுகிறார் பாரதி. இவ்வாறு தான் பாரதியை சந்தித்ததை எழுதியிருக்கிறார் நாமக்கல் கவிஞர்.

நூலில் பல இடங்களில் சில வார்த்தைகள் புரியவில்லை. குறிப்பாக “அகஸ்மாத்தாக” என்று பல இடங்களில் உள்ளது. நாமக்கல் பகுதி நகராட்சி அலுவலகத்தில் இன்றும் அவரது ஓவியங்கள் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன் நாமக்கல் பகுதியில் உள்ளவர் கண்டிருந்தால் எப்படியிருக்கிறது என்று தெரியப்படுத்தலாம்.

அந்தக்கால கல்வி முறையில் படித்ததை விவரிக்கும்போது “ஐந்தாவது பாரம் படித்துக்கொண்டிருக்கையில்” “நான்காவது பாரம் படித்துக்கொண்டிருக்கையில்” என்று வருகிறது அது ஐந்தாம் வகுப்பா அல்லது வேறு எதாவதா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.


“கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” இந்த வரிகளை எழுதியது பாரதிதான்
என்று நினைத்திருந்தேன். ஆனால் எழுதியது நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை.
அற்புதமான வரிகள். பாரதியின் மறைவுக்குப்பின் அவரின் வெற்றிடத்தை இராமலிங்கம் அவர்களால் தான் நிரப்ப முடிந்தது என்று பல்வேறு சுதந்திர தியாகிகள் பல தருணங்களில் கூறியதை பதிவித்திருக்கிறார். அவருடன் ஒப்பிடுகையில் நான் எதையும் சாதிக்கவில்லை என்றும் பதிவித்துள்ளார்.

அனைவரும் வாசிக்கவேண்டிய நூல் இது. அந்தக்காலத்தில் எழுதியதால் சலிப்பு தரும் நடையில் இருக்கும் என்று எண்ண வேண்டாம். சாதாரண பேச்சு வழக்கிலேயே இதை எழுதியிருப்பதால் எந்தவித தடையும் இல்லாமல் சரளமாக வாசிக்க முடிகிறது.

எப்படி எழுதினாலும் எழுத்து நடை வாசிக்க சங்கடமில்லாமல் செல்வது எழுதவரவில்லை.
வெறும் தகவல்களின் தொகுப்பு போலதான் வருகிறது எனக்கு. இந்த அருமையான
புத்தகத்தை வெறும் தகவல்களின் தொகுப்பாகவே தருகிறேன்.
-
பி.கு: ஆரம்பத்தில் நூலக அங்கத்தினராக சேர வெறும் முப்பத்தி ஐந்தே ரூபாய்தான் கட்டணம். வருடத்திற்கு ஐந்து ரூபாய் சந்தா தொகை. இப்படி குறைந்த கட்டணத்தில் எத்தனைபேர் அங்கத்தினராக இருப்பார்கள் என்றால் நூற்றுக்கும் குறைவாகவே இருக்கின்றனர். வாசிக்கும் பழக்கம் நூற்றுக்கு ஐந்து சதவீதம் கூட இல்லை
என்பது வேதனைப்படவேண்டிய விஷயம்.

உள்ளே நுழைந்த உடன் முதலில் நான் கண்டெடுத்தது “மறைவாய் சொன்ன கதைகள்” வெகுநாளாக தேடிக் கொண்டிருந்த நூல். (அண்ணாச்சி வீட்டில் ஆட்டையை போடலாம் என்று நினைத்திருந்தேன் ஆனால் சிக்கவில்லை) அதை முதலில் எடுத்து மேசையில் வைத்ததும் பெண் நூலகர் ஒரு தினுசாக பார்த்தார்.

சிறப்பான பல புத்தகங்கள் மிகச்சிறிய நூலகத்திலேயே கிடைக்கின்றன. குறிப்பாக கிழக்கு, உயிர்மை, காலச்சுவடு புத்தகங்கள் அதிகமாக கிடைக்கின்றன. தொடர்ச்சியாக, மூன்று விரல், சுஜாதாவின் சில்வியா ப்ளாத், தாமரையின் சிறுகதை தொகுப்பு
என எடுத்து வந்து வாசித்தேன்.

எல்லா அரசு அலுவலகங்களும் ஞாயிறு அன்று விடுமுறை விடும்போது நூலகம் மட்டும் ஏன் வெள்ளிக்கிழமை அன்று அரசு விடுமுறை அளிக்கின்றனர்? யாருக்காவது தெரியுமா?

ஒருவேளை விடுமுறை நாளில் அனைவரும் பயபெறும் வகையில் இருக்குமா என்றால் அதுவுமில்லை அன்றுதான் எவருமே உள்ளே நுழைவதில்லை.

Wednesday, July 08, 2009

கேக்குறாங்கய்யா கேள்விகள...

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

தாத்தா வெச்சது. ரொம்ப

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

Into the wild படத்துல ஹீரோ உலகத்த வெறுத்து காட்டுக்குள்ள போயிடுவாரு அப்போ ஆனந்தசுதந்திரமா ஓடி விளையாடும் மான்கள பாக்கும்போது அவர் கண்ல தண்ணி வரும் அப்போ எனக்கும் வந்துச்சு.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

மொத ரெண்டு லைன் புடிக்கும் அதுக்கு மேல காது

4. பிடித்த மதிய உணவு என்ன?

முருங்கக்கா சாம்பார் + சோறு

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

அதெப்படி முடியும்

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா....அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

பாத்ரூம் தவிர எங்க குளிச்சாலும் புடிக்கும்

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

எல்லாத்தையும், உதட்ட முதல்ல பாக்குறது வழக்கம்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

தண்ணி போட்டா ரொம்ப பேசறது. ரொம்ப பேசறது

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

ஆள கண்டுபுடிச்ச உடனே பாக்கணும்

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அப்டிலாம் இல்லயே ரொம்ப யோசிச்சா தாத்தா வர்றார்.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

இல்ல

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

டிவி. ஓடி ஓடி விளையாடு ஓடி ஓடி விளையாட வாடி... இதத்தான் போடறானுங்க எப்பயுமே எல்லாத்துலயும்

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கறுப்பு

14. பிடித்த மணம்?

வெற்றிலை, காரணத்த விரிவா மறைவா சொன்ன கதைகள்ல படிக்கலாம்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

ராஜேஷ். நண்பர், நல்லா எழுதுவார்

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு

எ.நி.ச.அறை

17. பிடித்த விளையாட்டு?

திருடன் போலீஸ்

18. கண்ணாடி அணிபவரா?

இல்ல

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்

கலைப்படம். "கலை"ப்படங்களைப் பார்க்க ஆர்வமளித்த அண்ணாச்சிக்கே எல்லா புகழும்

20. கடைசியாகப் பார்த்த படம்?

நாடோடிகள்.

21. பிடித்த பருவ காலம் எது?

கடும் வெயில் கோடைக்காலம் அல்ல

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

என் கதை - நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்களின் வரலாறு

23. உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?



இந்த படத்தைத்தான் ரொம்ப நாளா வெச்சிருக்கேன். மோகன் தாஸ் எடுத்ததுன்னு நினைக்கிறேன்.
இதை வைத்தநாள் முதல் மாத்தல. பொதுவா நான் அடிக்கடி மாற்றுகிறவன் அல்ல.

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

ஓடை நீர் சலசலக்கும் சத்தம். குழந்தை அழும் சத்தம் சுத்தமா பிடிக்காது

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்சத் தொலைவு?

அமீரகம்

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

தெரிஞ்சா சொல்லுவம்ல

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

யாருக்காச்சும் தனியா காத்திருக்கறது.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோவம்

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

கொடைக்கானல்

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

நல்லாவே இருக்கணும்னு

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

தெரில

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

அட சரியா தெரிலங்க.

எழுதறதுக்கான அமைப்புகள் சரியா இல்லாத காரணத்தால் எழுதறதில்ல. எப்பவாச்சும் எழுதற இந்தமாதிரி பதிவுகள்லயும் ஓரிரு வார்த்தைகளில் எல்லா பதில்களையும் எழுதிட்டேன். விரிவா எழுதுனாலும் வாசிக்கறதுக்கு ஆள் இல்லைங்கறது தெரிஞ்ச விஷயம்தான். அழைத்த அய்யனாருக்கு நன்றி. என்கிட்ட இருக்க எவ்வளவோ நல்ல குணங்கள்ல இருந்து எதையாச்சும் ஒண்ணை சொல்லிருக்கலாம். அத விட்டுபோட்டு நல்லா குடிப்பேன்னு சொன்ன உன் நல்ல உள்ளத்துக்கு தக்க நேரம் கிடைக்கும்போது கைம்மாறு செய்வேன் ஜாக்கிரத.

Sunday, May 31, 2009

குயில்


பறவைகள் பல கண்டிருந்தும் குயிலைக்
கண்டதேயில்லை என் கண்கள்
தினசரி நான்கு மணிக்கு எதிர்வீட்டுச்
சிறுமியொருத்தி குயில் போலக்கூவுகிறாள்
குயிலும் ஆமோதிப்பதுபோல கூவுகிறது
மறுதினம் கூவுவதெப்படி என்று எனக்கு
அச்சிறுமி பயிற்சியளித்தாள் பிறகு
தினசரி நாங்களிருவரும் குயிலிடம்
கூவிக்கொண்டிருந்தோம் ஒருநாள்
உன் அக்கா பெயரென்ன என்று
கேட்டேன் முறைத்துப் பார்த்தவள்
வயிற்றில் குத்திவிட்டு சென்றுவிட்டாள்
அதற்கடுத்த நாட்களில் குயில் தனியாக
கூவிக்கொண்டிருந்தது.

Thursday, May 28, 2009

நினைவுகளின் நீள்கரங்கள்


உனது நினைவுகளின் நீள்கரங்கள்
என்னை சதா துரத்தியபடி வருகின்றன
உனது நேசத்தின் எல்லைகள் தாண்டிய
இடங்களைத் தேடி ஒளிகிறேன்
கண்ணாடி தம்ளர்கள் வழிந்து முடிந்த
மறுநொடி துரோகத்தின் கதவுகள்
அடைபடுகின்றன வழக்கம்போல்
பொங்கும் காமத்திற்கப்பால்
காதலென்பது பொய்யென
உனக்கு எப்போது புரியும்...
உன்னதமான ஒன்று இல்லவே இல்லை
முடிவில்லாத உன் அன்புகளை
தயவுசெய்து நிறுத்திக்கொள் தோழி

Tuesday, May 12, 2009

மூன்று படங்கள்

சென்னையின் அதிகபட்ச வெயில் நாட்கள் இவை. வெளியில் எங்கும் செல்லாமல்
வீட்டுக்குள் அடைந்துகிடக்க வேண்டிய நிலை. மின் விசிறிக்கு கீழே உட்கார்ந்திருப்பது
கூட அடுப்படியில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு. அதிகபட்ச வெயில் அடிக்கும்
அமீரகத்தில் கூட வெப்பத்தை உணர்ந்ததில்லை. எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இந்த
வெயில் ரொம்ப பிடிக்கலாம். ஆனால் நமக்கு அப்படியில்லை. சென்னையில்
வெப்பமென்றால் ஊரில் தினசரி நான்கு மணி நேரம் மின்வெட்டு. அதிகாலை மற்றும்
நன்பகலில் இரண்டு மணி நேரங்கள். அதிகாலையில் மின்சாரம் இல்லாமல் உறக்கம்
கலைவதென்பது முன் ஜென்ம சாபம். சில நாட்களில் பழகிவிட்டது. அப்போது
பார்த்த மூன்று படங்கள். மூன்றுமே கவர்ந்திருந்தன.

Brokeback Mountain (ப்ரோக்பேக் மவுண்டைன்)



படத்தின் கரு இரு இளைஞர்கள் காதலிக்கிறார்கள். தெளிவாக சொல்லவேண்டுமென்றால்
ஓரினச்சேர்க்கையாளர்கள். படத்தின் கதைச்சுருக்கத்தை படித்தபிறகு பார்க்கவேண்டுமா
என்று யோசித்து பிறகு பார்த்தேன். காதல் என்பது பெண் மீது மட்டுமே வர வேண்டும்
என்பதல்ல அது ஆண் மீது கூட வரலாம். அன்பு ஒன்றே அங்கே பிரதானமாக இருக்க
வேண்டும். இந்தப்படத்தில் இருவர் கொள்ளும் அன்புதான் அவர்களை கடைசிவரை
இணைக்கிறது.

கதை நிகழும் வருடம் 1963 இரு இளைஞர்கள் ஆடுமேய்க்கும் வேலைக்காக வ்யோமிங்
மலைப்பகுதிக்கு வருகிறார்கள். கூட்டம் கூட்டமாக ஆடுகளை மேய்ச்சலுக்கு இட்டுச்
செல்லும் வேலை. அங்கேயே தங்குவது. சாப்பிடத்தேவையான பொருட்களை
அவ்வப்போது எழுதி வாங்கிக்கொள்ளலாம். எனிஸ் எப்போதாவது பேசும் வகை.
ஜாக் எப்பொழுதும் பேசிக்கொண்டே இருக்கும் வகை. தனிமை சூழ்ந்த இயற்கை
அவர்களை ஒன்றிணைக்கிறது. இருவருமே ஏழ்மைப் பிண்ணனியில் இருந்து வந்தவர்கள்.
அதிகபட்ச குளிர் நாள் ஒன்றில் இருவரும் ஒன்றுகலக்கிறார்கள். விடியலில் அவரவர்
முகமும் குற்ற உணர்ச்சியால் நிரம்பியிருக்கும். பின்வரும் நாட்களில் தங்கள்
காதலிப்பதை உணர்கிறார்கள்.

இருவரும் காதலர்களைப்போல் இருப்பதை பார்க்கும் முதலாளி அடுத்தபருவத்தில்
இருவரையும் வேலைக்கு வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். அவரவர் சொந்த
ஊருக்கு செல்கிறார்கள். காலப்போக்கில் இருவருக்கும் திருமணம் குழந்தை என்று
ஆகிறது. அதேசமயம் கூண்டுக்குள் அடைபட்ட வாழ்க்கை இருவருக்குமே கசக்கிறது.
அவர்கள் இருவரும் சுதந்திரமாக, ஆடையில்லாமல், மலையின் புல்வெளிகளில்
இரண்டு ஆண்டுகள் வாழ்ந்த ஞாபகம் வர இருவரும் தொடர்பு கொள்கிறார்கள்.
நான்கைந்து வருடம் கழித்து மீண்டும் சந்தித்துக்கொள்ளும் அவர்களிடம் முன்பைவிட
காதல் பெருகுகிறது. எனிஸ் மனைவி இதை கவனிக்கிறாள். அப்போதுதான் அவளுக்கு
தன் கணவன் பின்புறம் புணர்வதை அதிகம் விரும்புவது ஏன் என்று புரிகிறது.

இருவரும் சேர்ந்து சுற்றுவது தொடர்வதால் எனிஸ் ன் மனைவி விவாகரத்து
கோருகிறாள். ஆழ்மனதில் தான் ஒரு ஓரினச்சேர்க்கை விருப்பமுடையவன் என்பதில்
வருத்தப்படுபவனாக எனிஸ் உணர்ந்தாலும் அன்பின் காரணமாக அதை தொடர்கிறான்.
ஆனால் ஜாக் தான் ஓரினச்சேர்க்கையில் விருப்பமுடையவன் என்பதை நம்புகிறான்.
ஒருமுறை எனிஸ் உடன் கருத்துவேறுபாடு ஏற்படும்போது ஓரினச்சேர்க்கை விடுதிக்கு
சென்று வேறு ஒருவனுடன் உடலுறவு கொள்கிறான்.

வேறுபாடு களைந்து மீண்டும் ஒன்று சேர்கிறார்கள். சுற்றுகிறார்கள். மறுபடி பிரிகிறார்கள்
பின்னர் விபத்து ஒன்றில் ஜாக் இறக்கிறான். தாமதமாக அறியும் எனிஸ் மிகவும்
உடைந்துபோகிறான். ஜாக்கின் பெற்றோரை சந்திக்க செல்லும்போது தாம் பனிமலையில்
சண்டைபோட்டுக்கொண்ட போது ஜாக்கின் சட்டையில் ரத்தகறை எற்பட்ட அந்த
சட்டையை பத்திரமாக வைத்திருப்பதைக் காண்கிறான். அந்த சண்டைதான் அவர்களை
ஒன்றிணைத்தது. படம் இப்படி முடிகிறது. இன்றைய நாகரீக உலகில் ஓரிணச்சேர்க்கை
அங்கீகரிப்பட்டதாக இருந்தாலும் படம் நடக்கும் காலத்தின் அது தவறான செயலாக
சமூகம் பார்த்தது. இருவருக்கு அது குறித்த குற்றவுணர்ச்சி படம் நெடுக இருக்கும்.
சிறப்பான ஒளிப்பதி மற்றும் நடிப்பின் மூலம் இப்படத்தை சிறப்பாக தந்திருக்கிறார்
இயக்குடன் ஆங் லீ. தைவானை பிறப்பிடமாக கொண்டாலும் அமெரிக்க சூழ்நிலையை
இயல்பாக படம்பிடித்த இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மிகப்பெரும்
சர்ச்சைகளை கிளப்பிய இந்த திரைப்படம் மூன்று ஆஸ்கார் விருதுகளை பெற்றது
குறிப்பிடத்தக்கது.

பின்குறிப்பு: தனிமையான சூழ்நிலையில் ஒன்றிணையும் இவ்வகை கதையை கல்லூரிக்காலத்தில் நான் கேட்டிருக்கிறேன். தோட்டவேலை, ஒட்டகம் மேய்க்க என்று
இந்தியாவில் இருந்து 60களில் வேலைக்கு சவுதிக்கு சென்ற ஒருவர் சொன்ன கதையது.
நான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர்தான் அவர். தான் இவ்விதம் செய்தது
சரி, தவறு என்று வாதம் செய்யாமல் அன்றைய சூழ்நிலையில் உடலுறவு கொண்டாக
வேண்டிய சூழ்நிலையில் செய்ததாக சொன்னார் அவர். மூன்று வருடங்களுக்கு
ஒருமுறை மட்டுமே மற்ற மனித முகங்களை பார்க்க வாய்ப்பிருக்கும் வேலை
அவருக்கு மற்ற நாட்களில் நகரத்திலிருந்து பலநூறு மைல்கள் தள்ளியிருக்கும்
தோட்டங்களில் வேலை செய்தவர் அவர். வருடத்திற்கு ஒரு விடுமுறை நாள்தான்.
கடிதம் ஒன்றே போக்குவரத்து அது வந்து சேரவே பல மாதங்களாகுமாம். இத்தகைய
சூழ்நிலையில் உடனிருக்கு எவருடனாவது ஓரல் செக்ஸ், மற்றும் ஓரினச்சேர்க்கை
வைத்துக்கொள்வது சகஜமான ஒன்று என்று சொன்னார். ஆனால் இவை எல்லாம்
ரகசியமாக வைத்திருப்பார்கள். எனக்கு அவர் இதைச் சொன்னபோது அவருக்கு
வயது 65 இருக்கலாம். நாற்பது வருடகாலங்கள் பாலைவனத்தில் கழித்திருக்கிறார்.
நாற்பது வருடங்களில் ஐந்து முறை மட்டுமே இந்தியா வந்து சென்றிருந்தார்.


Diving Bell and the butterfly



யாராவது கண்களால் ஒரு நாவலை எழுதி முடித்ததாக சொன்னால் நம்ப முடியுமா உங்களால்? ஆனால் நடந்திருக்கிறது. இந்தப்படம் ஒரு உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக
கொண்ட படம். ஜீன் டொமினிக் பாப் ஒரு பேசன் பத்திரிக்கை எடிட்டர். விவாகரத்தானவர்
வார இறுதிகளில் குழந்தைகளை சந்திக்கும் பாசமிகு தந்தை. திடிரென்று பாரலைஸ் என்று
சொல்லக்கூடிய உடலுறுப்புகள் செயலிழந்து போகும் நோயில் விழுகிறார். மூன்று வாரங்கள் கோமா நிலையில் இருக்கும் அவர் ஒரு நாள் மீள்கிறார். அது அவர் ஒப்புக்கொண்ட
நாவல் ஒன்றை எழுதுவதற்காக மட்டுமே. இருப்பினும் அவருக்கு ஒரு கண்ணும்
இரு காதுகள் மட்டுமே வேலை செய்கின்றன. மற்றபடி அவரின் உடலுறுப்புகள் ஒன்றுகூட
வேலை செய்யாது.



அவருடன் பேச வேண்டுமென்றால் அவரின் இடது கண்ணிற்கு நேராக சென்று குனிந்து
பேச வேண்டும் அவரால் திரும்ப பதிலளிக்க முடியாது. ஆனால் எழுத்துக்களை வரிசையாக
சொன்னால் குறிப்பிட்ட எழுத்து வரும்போது ஒருமுறை இடது கண்ணை திறந்து மூடுவார்.
இப்படி வரிசையாக சொல்லப்பட்ட எழுத்துக்களை ஒன்று கூட்டினால் உங்களுக்கான பதில்
கிடைக்கும். ஒன்று மற்றும் இரண்டு கண் சிமிட்டல்கள் மட்டுமே உங்களால் அவரிடமிருந்து
பெறக்கூடிய பதில். ஒருமுறை கண் சிமிட்டினால் ஆம் என்று அர்த்தம். இருமுறை கண்
சிமிட்டினால் இல்லை என்று அர்த்தம். இந்த முறையினால் அவரின் தெரபி மருத்துவரின்
உதவியோடு தான் எழுத ஒப்புக்கொண்ட நாவலை எழுதி முடிக்கிறார். நாவல் வெளியாகி
பெரும் விற்பனையாகிறது. ஆனால் நாவல் வெளிவரும் பத்து நாட்களுக்கு முன்பே
மரணமடைகிறார். விந்தையான இந்தக்கதையை படிக்கும்/பார்க்கும் அனைவருக்குமே
உணர்ச்சிமயமாக இருக்கும். இது நிஜ சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான
திரைப்படம்.

ப்ரெஞ்ச் மொழியில் வெளியான இத்திரைப்படம் நான்கு ஆஸ்கர் விருதுகளுக்கு
பரிந்துரைப்பட்டிருந்தது. நிஜ சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திரைப்படம்
எடுக்கும் இப்படத்தின் இயக்குனர் ஜூலியன் ஷெனபில் இன் இதற்கு முந்தைய இரண்டு
படங்களும் சுயசரிதைத் தன்மை கொண்டது இப்படமும் அதே. இப்படத்தின் திரைக்கதையை
எழுதிய ரொனால்ட் ஹார்வர்டிரின் குறிப்பிடத்தக்க திரைப்படம் தி பியானிஸ்ட்.

இதே போன்ற ஸ்பானிய மொழிப்படமான சீ இன்சைட் The Sea Inside இதே போன்றதொரு
சுயசரிதைத் தன்மை கொண்டதுதான். தனது மரணத்திற்காக போராடும் ஒருவரின் கதை
அதிலும் கதையின் நாயகன் ஆரம்பம் முதல் இறுதி வரை படுக்கையிலே இருப்பார்.
இதிலும் அதே. படத்தின் இறுதியில் இருவருமே இறந்து போவார்கள். நிஜ வாழ்க்கையில்
எவருமே ஒருநாள் இறந்து போவதைப் போல.

மூன்றாவது படமாக The legend of 1900 படம் பற்றி பிறகு எழுதலாம். இதுவே நீண்டு
விட்டது.

ஓட்டுரிமை உள்ள அனைவரும் ஓட்டு போடுங்கள்.

Sunday, May 10, 2009

புறாக்களை பார்ப்பவனின் கதை

மூன்று மாதங்களுக்கு முன்பு தாய்மாமாவின் வீட்டிற்கு சென்ற போது மாமா தனது
மகன் சரியாக படிப்பதில்லை என்று குறைபட்டுக்கொண்டார். தன்னைப்போலவே
டீக்கடையில் டீ ஆத்துகிற வேலை செய்யாமல் கொஞ்சமாவது படிக்க வைக்கலாம்னு
நினைச்சா அத புரிஞ்சிக்காம எந்த நேரமும் எதையாச்சும் வாங்கிட்டு வந்து வளக்கறேன்னு
சொல்லிகிட்டே இருக்கான். போனமாசம் சேத்துவெச்சிருந்த காசையெல்லாம் எடுத்துகிட்டு
மீன் தொட்டி, கலர் மீன், மீனுக்கு தீனின்னு முன்னூறு ரூபாயை செலவு பண்ணிட்டு
வந்தான். இந்தமாசம் நாலு புறாவை வாங்கிட்டு வந்து எந்த நேரமும் அதையே
பாத்துகிட்டு இருக்கான். இன்னிக்கு எங்கயிருந்தோ மூணு பூனைய தூக்கிட்டு வந்துட்டான்.
எல்லாமே ரவ ரவ பூனை. அவனுக்கு எது குடுத்தாலும் முழுசா தான் வளக்கறதுக்கு
செலவு செஞ்சிடறான். பிராணிகள் மேல இருக்கற அக்கறை கொஞ்சமாச்சும் படிக்கறதுல
இருந்தா உருப்படலாம். இந்த வருசம் பத்தாவது தேறுவானான்னு சந்தேகமா இருக்கு.
இப்படி குறைபட்டுக்கொண்டார்.

மாமா பையனான முரளிக்கு படிப்புமேல எந்தவிதமான அபிப்ராயமும் இல்லை. அது
தனக்கு வரவில்லையே என எந்த கவலையும் இருப்பதாக கூட தெரியவில்லை. எனக்கு
அவனை சிறுவயதுமுதலே தெரியும். அறிவுரை சொன்னாலும் புரிந்துகொள்ளும் பக்குவம்
கிடையாது. அமைதியாக எதையும் கேட்டுக்கொள்வான். அடுத்தநொடி சொல்வதற்கு
எதிராக செய்துகொண்டிருப்பான். கண்டித்தால் கூட சிரித்துவிட்டு நாம் மறந்து சிறிது
நேரம் கழித்துப்பார்த்தால் புறாவையே பார்த்துக்கொண்டிருப்பான்.

மாமா பூனைகளை இரவோடு இரவாக எங்கேயோ கொண்டுபோய் விட்டார். மீன்
தொட்டியை யாருக்கோ கொடுத்துவிட்டார். அதிகாலையில் கிளம்பிய என்னிடம் நான்கு
புறாக்களை பெட்டியில் அடைத்துக் கொடுத்துவிட்டார். கலங்கிய கண்களுடன் என்னையே
பார்த்துக்கொண்டிருந்தான் முரளி. அந்த புறாக்களை எடுத்துப்போக எனக்கு துளியும்
விருப்பமில்லை. எனினும் எதிர்வரும் முழுத்தேர்வில் தேர்ச்சியாகவேண்டுமெனில்
கொஞ்சமாவது படிக்கவேண்டும் என்ற காரணத்தால் நான் எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்.

புறாக்களை எடுத்துவந்துவிட்டே ஒழிய அதை எங்கே வைப்பது என்று தெரியவில்லை.
நல்ல கூண்டு ஒன்றை செய்யவேண்டும். இதற்கே எனக்கு இரண்டுநாள் ஆனது. புறாவுக்கு
என்ன தீனி போனவேண்டும் என்பதை முரளி அழுதுகொண்டே சொன்னது நினைவுக்கு
வந்தது. கம்பு, கேழ்வரகு, ஒவ்வொரு கிலோ அதுகூட நூறுகிராம் பொட்டுக்கடலை
சேத்து கலந்து ஒரு டப்பாவுல வெச்சுக்கோங்க மாமா. காலைல ரெண்டு கை, மாலைல
ரெண்டு கை வாசல்ல தூவுனிங்கன்னா ஒவ்வொன்னா பொறுக்கி தின்னும். சிமெண்ட்
அள்ளுற பாண்டு வீட்டுல இருக்கா? இருந்ததுன்னா அதுல நிறைய தண்ணி ஊத்தி
வாசல்ல வெச்சிருங்க. அதுல தண்ணி குடிச்சிக்கும். வெயில் வேற அதிகமா அடிக்குதுல்ல
மதியத்துல அதுல குளிச்சிக்கும். மார்கெட் பக்கம் போனா காய்கறி அடைச்சு வெச்சிருக்க
மரப்பெட்டி கிடைக்கும் அதை வாங்கி நம்ம வீட்டுக்கு முன்னாடி மல்லிகைப் பந்தல்
இருக்குல்ல அதுமேல வெச்சிடுங்க. அப்பப்போ துடைப்ப குச்சிய ஒடச்சி தீனி போடற
எடத்துல போட்டிங்கன்னா அது கூடுமாதிரி ஒண்ணு ரெடி பண்ணிக்கும். முட்ட
வெச்சிதுன்னா பதினஞ்சி நாள்ல பொறிஞ்சிடும். மூச்சு விடாமல் சொல்லி முடித்தான்
முடிக்கும்போது அவனது அழுகை காணாமல் போயிருந்தது.

கிளம்பும்போது அருகில் வந்தான். "மாமா அடுத்த மாசம் நான் லீவ் விட்ருவாங்க
அங்க வந்துருவேன். மஞ்ச தடவிடாதிங்க என்று கேட்டுக்கொண்டான்". எவ்ளோ
அழகா இருக்கு இத போய் யாராச்சும் அடிச்சு சாப்பிடுவாங்களா... ஒழுங்கா படி
என்று சொல்லிக் கிளம்பினேன். பத்து மாத்திரை கொண்ட அட்டை ஒன்றை நீட்டி
"இது நியூரோபின் மாத்திரை இத தண்ணில கலந்து வெச்சிட்டிங்கன்னா ஒரு
நோயும் வராது" என்று கையில் வைத்து அழுத்தினான்.

பாட்டி வீட்டுக்கு விடுமுறையில் செல்லும்போதெல்லாம் வீட்டின் பின்புறம் உள்ள
கோயிலில் புறாக்களை பார்த்துக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. அங்கிருந்தவை
எல்லாம் பழுப்பு நிற புறாக்கள். இவை அழகான வெள்ளைப் புறாக்கள்.

சிறுவயதில் பயணம் செய்யும்போதெல்லாம் ஒரு எலுமிச்சை பழத்தை வாங்கித்தருவார் அப்பா. வாந்தி வராமல் இருக்க அது உதவுதாக சொல்வார். மேலதிகமாக இரு பாலிதீன்
பைகளையும் என் கையில் கொடுப்பார் அதை உபயோகிக்காமல் கர்மசிரத்தையாக யார்
மடியிலாவது வாந்தி எடுத்து வைப்பேன். ஆனால் விவரம் தெரிந்தபிறகு பேருந்து
பயணங்களில் தலைசுற்றல், வாந்தி போன்றவை நின்று விட்டது. இன்னமும்
முரளிக்கு வாந்தி வியாதி நிற்கவில்லை போல. தேர்வு முடிந்த மறுநாள் தனியனாக
பேருந்தில் ஏறி எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டான். வருவதற்கு முன்னிரவும் காலையும்
ஆகாரம் எடுத்துக்கொள்ளாமல் பேருந்தில் ஏறி இருக்கிறான். அதனால் வாந்தி தலை
சுற்றல் இல்லை.

வந்த முதல் வேலையாக புறாக்களை பார்க்க ஆரம்பித்தவன் நாளின் தூங்கும் நேரம்
போக மற்ற நேரங்களில் திண்ணையில் அமர்ந்துகொண்டு மல்லிகைக்கொடி பந்தலின்
மேல் உள்ள மரப்பெட்டியையே பார்த்துக்கொண்டிருப்பான். வாழைமரத்தில் சிறிது
நேரம், மாமரத்தில் சிறிது நேரம் தரையில் தானியங்கள் பொறுக்கியபடி சிறிது நேரம்
என புறாக்கள் இருந்தது.

ஒருமுறை திண்ணையில் முரளியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். வழக்கம்போல
புறாக்களை பார்த்துக்கொண்டிருந்தான். அவை கூறையின் மத்தில் ஏறி அங்கேயும்
இங்கேயும் நடந்துகொண்டிருந்தன.

மாமா அங்க பாருங்க கால்ல முடி இருக்கறது பெண் புறா கொஞ்சம் தள்ளி இருக்குதே
அது ஆண்புறா அது ரெண்டும் ஒரு ஜோடி. இந்தப்பக்கம் கூறையில இருக்கறது ஒரு
ஜோடி. இப்ப பாருங்க அந்த பெண்புறாவ அந்த ஆண்புறா மெறிக்கும் பாருங்க.

"மெறிக்கறதுனா என்னடா?"

"ஏறி அழுத்தும்பாருங்க"

"ஏறி அழுத்தறதுனா... என்னடா?"

"அதான் மாமா... அது... அப்பதான் புறா முட்ட போடும்"

"ஓஹ் அதுவா... சரி எத்தன நாள்ல முட்ட போடும்?

அது சரியா தெரியல ஆனா கொஞ்ச நாள்ல முட்ட போடும். ரெண்டே ரெண்டு முட்டதான்
போடும். அது முட்ட போடறதுக்கு ஒருவாரம் முன்னாடி கூடுகட்ட ஆரம்பிச்சிடும்.
அப்போ ஆண்புறா என்ன செய்யும்னா அங்க இங்க அலஞ்சு சின்ன சின்ன குச்சிகள
தூக்கிட்டு வந்து போடும். அத வெச்சு பெண் புறா சின்ன மேடை மாதிரி செய்யும்.
அதுலதான் முட்டய போடும். அப்போ யாரும் கூண்டுப்பக்கம் போவகூடாது. அப்படி
போய் முட்டய பாத்துட்டிங்கன்னா அவ்ளோதான் அது முட்டய அதுவே கீழ தள்ளி
ஒடச்சிடும்.

"ஏண்டா அப்டி பண்ணுது... ?

அது அப்டிதான் மாமா...

ஒரு தடவ அப்டிதான் என் ப்ரெண்டு ஒருத்தன் ஆசையா முட்டைய எடுத்து பாத்தானா
அந்த புறா முட்டைய கீழ தள்ளி ஒடச்சிடுச்சி.

"ஏண்டா அப்டி?

அது அப்டிதான்னு சொல்றேன்ல. மனுசங்க கை பட்டா அது கூழ் முட்டையாகிடும்னு
நினைக்கிறேன்.

"புறான்னா உனக்கு அவ்ளோ இஷ்டமா?

"ஆமாம்"

"இதுல காட்டற அக்கறைய படிப்புல காமிச்சா நீ பாஸ் ஆகிடலாம் தெரியுமா"

"அதான் எனக்கு வரமாட்டேங்குதே மாமா... என்ன செய்ய?"

"நீ மட்டும் பத்தாவது அப்புறம் பன்னிரண்டாவது பாஸ் பண்ணிட்டேன்னு வையி...
பறவைகள பத்தி ஆராய்ச்சி செய்றதுக்குன்னே ஒரு படிப்பு இருக்கு அதுக்கு பேர்
ஆர்னித்தாலஜி அத படிக்கலாம்". உலகம் முழுக்க இருக்கற பறவைகள பாத்துட்டே
இருக்கலாம். அதபத்தியும் படிக்கலாம் என்ன சொல்ற?

"நெஜமாவா மாமா"

"ம்ம்... படிப்பியா"?

பாக்கலாம் என்றபடி மறுபடி புறாக்களை பார்க்க ஆரம்பித்துவிட்டான். படிப்பு சம்பந்தமான
விஷயங்களை அவனிடம் பேச ஆரம்பித்தால் அவமானத்தில் குறுகி நிற்கும் மனிதனைப்
போல முகம் மாறிவிடுகிறது. இதனாலேயே அவனிடத்தில் படிப்பைப் பற்றி மட்டும்
பேசுவதில்லை.

இப்படித்தான் அவனிடம் பேச அமர்ந்தால் புறாவில் ஆரம்பித்து அங்கேயே முடிப்பான்.
கொஞ்ச நேரத்தில நாமும் அப்படியே மாறிவிடவும் வாய்ப்பிருக்கிறது.

ஒரு சுபயோக சுபநாளில் ஆண்புறா சிறு சிறு குச்சிகளை சேகரிக்க ஆரம்பித்தது.
பரபரப்பாக மாறினான் முரளி. தென்னந்துடைப்பத்தில் உள்ள குச்சிகளை ஒவ்வொன்றாக
உருவி புறா இருக்குமிடங்களில் எல்லாம் போட்டான். அதற்காக அத்தையிடமிருந்து
திட்டு வாங்கினான்.

"தொடப்பக்குச்சிய ஒடச்சி போட்ட அப்புறம் அத்தாலயே அடி வாங்குவ நீ..."

வேப்பமரத்தின் காய்ந்த கொப்புகளை உடைத்து அந்தச்சிறிய குச்சிகளை சேகரித்து
வந்து அதற்கு மாற்றாக தூவினான. பிறகு திண்ணையில் வந்து அமர்ந்தான்.

"மாமா இப்ப பாருங்க குச்சி பொறுக்கும்..."

அவன் சொன்னது போலவே புறா தயக்கமாக நடந்து வந்து அலகில் கொத்தியவாறு
பறந்து சென்று கூண்டுக்குள் வைத்தது. நாள் முழுக்க சேகரித்து மறுநாள் பார்த்தபோது
அங்கே தட்டுபோன்ற அமைப்பில் கூடு உருவாகியிருந்தது.

அடைகாக்குற நேரத்துல பெண்புறா வெளியவே போவாது மாமா... இப்போ மத்தியானம்
உள்ள போச்சுன்னா அவ்ளோதான். மறுநாள் மதியானமாத்தான் வெளிய வரும் அதுவும்
அதிகம்போனா ஒருமணிநேரம்தான். அந்த ஒருமணி நேரந்தான் ஆண் புறா அடைகாக்கும்.
மத்தபடி எல்லாமே பெண்புறாதான் செய்யனும். அது ரொம்ப பாவம் மாமா.

புறாக்களைப் பற்றியே பேசுவது எனக்கே எரிச்சலாகத்தான் இருந்தது.

முட்டை வைத்த மறுநாள் இங்கு கிளம்பி வந்திருந்தேன். இரண்டு வாரங்கள்
கழித்து தொலைபேசியபொழுது முரளி பேசினான்.

"மாமா இன்னிக்கு காலைல ரெண்டு முட்டையும் பொரிஞ்சிடுச்சி". ரெண்டு குட்டிப்புறா
இப்போ இருக்கு. மொத்தமா ஆறுபுறா இருக்கு நம்மகிட்ட...

இந்த வித்யா தொத்தாகிட்ட சொல்லுங்க மாமா. அடிக்கடி குட்டிப்புறாவ தொட்டுப்பாக்கறாங்க
எதாச்சும் ஆயிடும்னு சொன்னா கேக்க மாட்டேங்கறாங்க. நீங்க கொஞ்சம் சொல்லுங்க
மாமா...

"ம் சொல்றேண்டா போன குடு"

இப்போ குட்டிப்புறாவுக்கு பெண் புறாதான் எல்லாமே கொடுக்கும். குட்டிப்புறா
ஆ னு வாயபொளந்துட்டு இருக்கும் அது உள்ள தீனிய போடும்.

சரிடா போன வைக்கிறேன்.

போனை வைத்தபிறகு கிம் கி டுக்கின் Isle படத்தின் ஒரு காட்சி நினைவுக்கு வந்தது. அப்படத்தின் நாயகி ஒரு தவளையைப் பிடித்து அதைத் தரையில் அடித்து சாகடிப்பாள். பிறகு தவளையின் தொடைக்கறியை நாயகன் வளர்க்கும் பறவைக்கு தின்னக்கொடுப்பாள். அப்போது அவளது உதடுகள் குவிந்திருக்கும்
பார்ப்பதற்கு புறாவினைப்போலவே வெள்ளையாக இருப்பாள்.

Saturday, April 11, 2009

வாத்தியார் அண்ணன்

இங்கு வந்து மூன்று நாட்களாகின்றன. இதற்கு முன் நாட்கள் அதன் தொடர்ச்சியில் செல்வதுபோலத்தான் இருந்தது. இங்கு வந்த இந்த மூன்று நாட்கள் தனித்தனியான வெவ்வேறு நாட்களாக தெரிகின்றன. முற்றிலும் புதுமையான உலகம் அதே பழைய முகங்களில் காண்கிறேன். அயல்தேசம் என்பதன் அர்த்தம் இப்போது புரிகிறது. அவரவர் வேலையில் அவரவர். வேலைவிட்டு வரும்போதும் போகும்போதும் ஒரு புன்னகையோடு எல்லாமும் முடிந்துவிடுகிறது. பகல்வேளைகளில் என்னை தனிமை தின்னத்தொடங்கியது. எல்லோரும் வேலையோடு வரும் இந்த தேசத்தில் வேலைதேடி வந்தது என் தவறுதான் என்று முதல்தினமே உணர்ந்திருந்தேன்.

நகரத்தின் பிரதான இடத்தில் அமைந்திருந்த இந்த அறையில் பன்னிரண்டு பேர் தங்கியிருந்தார்கள் இரண்டு அடுக்குகள் கொண்ட நான்கு படுக்கைகள். கட்டிலுக்கு
அடியிலும் ஒருவர். டிவி சாப்பாடு வைக்கும் இடம் போக ஒரு ஆள் படுக்கக்கூடிய இடத்தில்தான் இப்போது நான் தங்கியிருக்கிறேன். இரவில் அனைவரும் உறங்கிய
பின்னரே அந்த இடத்தை நான் சுதந்திரமாக ஆளமுடியும். மற்ற நேரத்தில் அது
பொதுஇடம். பகல் வேளைகளில் வாத்தியார் அண்ணன் மட்டும் இருப்பார். அவருக்கு
பேச்சு வராது என்றே நினைத்திருந்தேன். ஆனால் வெள்ளிக்கிழமை அன்று மட்டும்
தன் மனைவியிடம் ஓரிரு வார்த்தைகள் பேசியதை கேட்டிருந்தேன். மீதமுள்ள
நேரங்களில் ஒரு தத்துவஞானியைப்போல அமைதிகாப்பார். இந்த உலகத்தின்
மேல் பற்றில்லாத வாழ்க்கையை அவர் வாழ்ந்துவருகிறார் என்று நினைத்திருந்தேன். அபூர்வமாக எப்போதாவது குறுநகை வெளிப்படும். அறையே வெடித்துச்சிதறும்
அளவுக்கு சிரிப்பொலி கேட்டுக்கொண்டிருக்கும்போது இவர் சலனமே இல்லாமல் டிவி பார்த்துக்கொண்டிருப்பார்.

அந்த அறையிலேயே ஆகக்குறைந்த வயதினன் நான் மட்டுமே அதனால் அனைவருக்கும் தம்பி ஆகிப்போனேன். அந்த வகையில் வாத்தியார் அவர்களையும் அண்ணன் என்றே அழைப்பேன். அதாவது வாத்தியார் அண்ணன் தூங்குகிறார், சாப்பிடுகிறார் என்பதை
வேறு யாராவது ஒருவரிடம் சொல்லும்போது மட்டும். அவருடன் பேசவேண்டும்
என்று நினைத்தாலும் அதற்கான வாய்ப்பை அவர்தான் தரவேண்டும். ஆகவே அவரைப்போலவே தத்துவ ஞானியைப்போல நான் காத்துக் கொண்டிருந்தேன்.
மற்றவர்களிடம் வாத்தியார் அண்ணனைப்பற்றி சில தகவல்கள் கேட்டும் பார்த்தும்
தெரிந்து கொண்டிருந்தேன். அவருக்கும் பன்னாட்டும் கம்பெனிகளில் அழகுக்காக வைத்திருக்கும் செடிகளை பராமரிக்கும் வேலை. அமீரகத்தின் எட்டுத்திசைகளிலும்
சென்று இலை துடைக்கும் மனிதர். இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் எனக்கு
மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இலை துடைப்பதற்கு கூடவா சம்பளம் தருகிறார்கள்
என்று. இவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இவர் பொறுப்பாக சில அலுவலகங்களை ஒதுக்கியிருந்தார்கள். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அந்தந்த பகுதிகளுக்கு சென்று
பழுத்த இலைகளை ஒதுக்கிவிட்டு இலைகளை துடைக்கவேண்டும் தேவையானால்
உரம் போடவேண்டும். பிறகு தண்ணீர் விட்டுவரவேண்டும். இந்த வேலைகளை
செய்து வரும் ஒரு இந்திய நிறுவனத்திலேதான் அவர் வேலை செய்துவந்தார்.

தவிர அவருக்கு எந்த எண் கொண்ட பேருந்து எந்த திசையில் எந்தெந்த நேரத்தில் பயணிக்கும் குறிப்பாக ஒரு இடத்திற்கு செல்லவேண்டும் என்றால் எந்த பேருந்தை பிடிக்கவேண்டும் என்று தெளிவாக தெரியும். நேர்முகத்திற்கு செல்லும்போதெல்லாம் அவரிடமே வழிகேட்பேன். என் முகத்தை பார்க்காமலே பதில் சொல்வார். சொல்லி முடித்துவிட்டு எழுதியும் கொடுப்பார். அதில் எந்த இடத்தில் இறங்கவேண்டும்
அவ்விடத்தின் குறிப்பு, பேருந்து எண் எல்லாமே இருக்கும். கழட்டிபோட்ட
உள்ளாடையை எங்குவைத்தோம் என்றுகூட மறக்கும் என்போன்ற மறதிக்காரனுக்கு
இவை ஆச்சரியத்தை அளிக்கும் விதமாக இருந்தது. மேலும் அவர் வாங்கும் 1200 திர்காமுக்கு ஒவ்வொரு மாதமும் துள்ளியமாக செலவுக்கணக்கு எழுதி வைப்பார்.
இதற்கென ஒரு தனி நாட்குறிப்பை உபயோகித்துவந்தார். தின நிகழ்வுகளுடன் செலவுக்கணக்கை எழுதிவைத்துக்கொள்வார். அதில் 25 பைசா கூட கூடவும் செய்யாது குறையவும் செய்யாது. மொத்தத்தில் அவர் கணக்கு பார்க்கும் மென்பொருளை விட சிறப்பாக அவர் கணக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.


இவரிடமிருந்து செலவுக்கணக்கை எழுதும் பழக்கத்தை எப்படியாவது தத்தெடுத்துக்கொள்ள
வேண்டும் என்ற என் ஆசை இன்னமும் பேராசையாகவே இருக்கிறது. ஒரு விடுமுறை தினத்தில் வாத்தியார் அண்ணனுக்கு ஏன் வாத்தியார் என்ற பெயர் வந்தது என்று விசாரித்துக்கொண்டிருந்தேன் அப்போது நண்பர் சொன்னது. சின்ன வயசுலயே படிப்புல ரொம்ப சுட்டியாதான் இருந்தான். அம்மாவோட மரணம் பிறகு சித்தியோட வருகை
அவரது நிராகரிப்புகள் போன்ற பலவிஷயங்கள் வெகுவாக பாதித்திருந்தன.
இயல்பிலேயே அவனுக்கு வாத்தியார் ஆகி பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டும்
என்ற ஆவல் இருந்தது. அதற்கேற்பவே ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து
படித்து சான்றிதழ் பெறும் நிலையில் அவர் பயிற்சி பெற்ற நிறுவனம் அரசின் ஒப்புதல் இல்லாமல் மூடவேண்டிய நிலை. வேலைபெறுவோம் என்ற நம்பிக்கை பொய்த்து போனசமயத்தில் இங்கே வந்திருக்கிறார். வாத்தியார் ஆகவேண்டும் என்ற கனவு
கனவாகவே போய்விட்டது. ஒருவேளை அப்படி ஆகியிருந்தால் ஒருநாளில் நிறைய
வார்த்தைகள் பேசியிருப்பாரோ என்னவோ.

ஒருவர் அடையமுடியாத லட்சியத்தை ஒவ்வொரு முறையும் அதன் பெயர் கொண்டு விளிப்பது கத்தியால் குத்துவது போன்றே கருதுகிறேன். அவரை எந்த பெயர்
சொல்லியும் அழைப்பதில்லை. ஒருநாள் கத்திரி வெயில் கொளுத்திய பிற்பகல்
வேளையில் வழக்கம்போல நான் தனித்திருந்தேன். வழக்கம்போலவே வாத்தியார்
அண்ணன் வந்தார், வழக்கம்போல உடுப்பு களைந்து உடல் கழுவி வந்தார். ஆனால்
வழக்கம்போல தட்டு நிறைய சோறுபோட்டு சாப்பிடவில்லை. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சிறிது நேரம் சுவற்றையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு
விரக்தியான குரலில் இந்த உலகத்துல கடவுளே இல்ல கதிரு என்று ஆரம்பித்தார்.
அவர் அப்படி பேசுபவரல்ல. இதுபோன்ற சமயங்களில் ஆறுதல் கூற என்னிடம்
வார்த்தைகள் இருக்காது. மிகுந்த தர்மசங்கடமாக உணர்ந்ந்திருந்தேன். "என்னண்ணே
ஆச்சு" என்றேன்.

வாரத்திற்கு மும்முறை சென்று செடிகளை பராமரிக்கும் பன்னாட்டு வங்கியில் ஒரு
ஈரானிய விதவைப் பெண்மணியும் வேலை செய்கிறார். உயர்ந்த பதவியில் இருக்கும் அவருக்கு ஒரே மகன். வங்கி ஒரு உலகம் என்றால் மகன் இன்னொரு உலகம். அவர் வீட்டிலே கூட சில அழகுச்செடிகள் வைத்திருக்கிறார். அவற்றை பராமரிப்பதன் மூலம் எனக்கு சிறிய தொகை ஒன்றையும் கொடுப்பார். மிகவும் தன்மையானவர்
அதிகம் பேசமாட்டார். திருமணமும், கணவரின் இறப்பும் காரணமாக இருக்கலாம்.
என்னிடம் கொஞ்சம் நன்றாக பழகுவார். எங்கள் சம்பாசனைகளில் மொழி ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை. எனக்கு கொஞ்சம் அரபி தெரியும். அவருக்கு
கொஞ்சம் ஆங்கிலம் தெரியும் ஆனால் இவற்றை தெரிந்து வைத்திருப்பதால்
அதிக பிரயோஜனம் இல்லை.

அவர் தன் மகனுடன் நேற்று ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் இரவு உணவு சாப்பிட்டிருக்கிறார்கள். உணவே விஷமாகி மகனை கொன்றிருக்கிறது. உறங்கிய நிலையிலேயே உடல் நீலம் பாரித்து இறந்திருக்கிறான். உணவே விஷமாக
உருமாறும் அதிசயம் ஐந்து நட்சத்திர விடுதிகளில் மாத்திரமே சாத்தியம். என் கல்லூரி வாழ்க்கை முழுக்க சாக்கடை ஓர தள்ளுவண்டிகளில் இட்லி, பரோட்டா சாப்பிடுவதை மட்டுமே விரும்புவேன். குளிரூட்டப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகள்தான்
நஞ்சாக மாறுவதை இந்த விஞ்ஞானமும் அறிவியலும் கண்டுபிடித்திருக்கின்றன.
அதன் மூலம் கடைசியாக இந்த உலகத்தில் அவருக்கிருந்த ஒரு உயிரும் நேற்றோடு முடிவுக்கு வந்திருக்கிறது இன்று அந்த அலுவலகம் சென்று பார்த்தபோது சொன்னார்கள்.


அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்திருந்தது. வாத்தியார்
அண்ணனுக்கு திருமணமாகி ஐந்தாறு வருடங்கள் இருக்கும். இன்னும் குழந்தையில்லை. இல்லாத குழந்தைக்கு ஏங்கும் ஒருவர். இருக்கும் மகனை இழந்த ஒருவர். கடவுள் கண்ணயர்ந்திருக்கிறார் போல.

சில மாதங்கள் கழித்து ஒருநாள் தன் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துவிட்டு நாடு திரும்பிவிட்டார். முன்பே என்னிடம் அதை என்னிடம் கூறியிருந்தார். காலப்போக்கில்
நானும் இடம்பெயர்ந்து சில ஆண்டுகள் ஓடிவிட்டதால் சுத்தமாக மறந்துவிட்டிருந்தேன். ஒருநாள் தொலைபேசினார். எனக்குத் தெரிந்து அயல் தேசத்தில் மொபைல் போன் இல்லாமல் பத்து வருடங்களைக் கழித்த ஒரே மனிதர் அவராகத்தான் இருப்பார். ஏன்
என்று ஒருமுறை கேட்டிருக்கிறேன். எதற்கு என்று அவர் பதில் கூறினார். அதோடு
முடிந்து போனது அந்த கேள்வி. தான் திரும்ப வேலைக்கு வந்திருப்பதாக சொன்னார்.
எப்படி இருக்கிறீர்கள் என்றேன். மிகவும் சந்தோஷமாக இருப்பதாக
சொன்னார். மூன்று வருடங்களில் தனக்கு ஒரு பெண்குழந்தை பிறந்திருப்பதாகவும்
குடும்ப சூழ்நிலை கருதி திரும்பவும் வந்திருக்கிறார். கோடி கொடுத்தாலும் இந்த
தேசத்திற்கு வரமாட்டேன் என்று சொல்லிச்சென்றவர். என் மனம் மௌனமாக
பிரார்த்தனை செய்துகொண்டது.