குளிர்காலத்திற்கும் பெண்களுக்கும் ஏதோ ஒரு ஆதியோடந்தமாய் தொடர்பிருப்பதாக
நினைப்பதுண்டு. குளிர்காலத்தில் ஏற்படும் நிகழ்வுகள் வெகுகாலத்திற்கு நினைவை
விட்டு அகலாமல் இருப்பதும் காரணம். ஒரு குளிர் காலத்தில்தான்
திருவண்ணாமலைக்கு பக்கத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் பணிமாற்றம்
செய்யப்பட்டார் என் தந்தை. எங்களுக்குள் பெரிய இடைவெளி எப்போதுமே
சூழ்ந்திருக்கும் அது விவரம் தெரிந்த நாள் முதலே உண்டானது அதை மாற்றிவிட
அவருக்கும் தோன்றவில்லை எனக்கும் தோன்றவில்லை.
கல்லூரியில் என் திறமையைக்கண்டு வியந்து "வந்தால் உன் பெற்றோருடன் வா"
என்று அனுப்பி இருந்தார்கள். பனி நிறைந்த இரவில் பேருந்து ஏறி அவரைக்
காண புறப்பட்டேன் விடியல்காலையில் நான்கு மணி சுமாருக்கு கதவைத்
தட்டி உள்ளே அறைக்கு சென்றேன்.என் பேச்சுலர் அறைக்கும் அவர்
அறைக்கும் பெரிய வித்தியாசங்கள் ஏதுமில்லை. வெளியே சென்று டீ வாங்கி
வந்தார். குளிக்க வெந்நீர் போட்டு தந்து பக்கத்திலுள்ள கோவிலுக்கு கூட்டிச்
சென்றார். இருள்கவிழ்ந்த கோயிலில் இருவருமாக உள்நுழைந்தோம்.
எங்களைத்தவிர யாரும் அந்த அதிகாலையில் வரவில்லை. கண்கள் மூடியபடி
வெகுநேரம் நின்றிருந்தார் நானும் சிறிதுநேரம் கண்கள் மூடி இருந்தேன். கண்
திறந்தபோது என் எதிரே ஒரு தாவணி அணிந்த பெண்ணும் அவளுக்குப்பின்னே
அவளது அம்மா, அப்பா, அண்ணன் தம்பிகள் என ஒரு படை சூழ வந்தாள்
அவளுக்குத்தான் பிறந்தநாளாக இருக்கக்கூடும், சற்றுமுன் அய்யர் மந்திரம்
சொல்லுமுன் ஏதோ ஒரு பெயரை கேட்ட ஞாபகம் அந்த நேரத்தில் பெயர்
முக்கியமல்ல என எண்ணி அவள் பின்னே பிரகாரச்சுற்றுக்குள் சென்று விட்டேன்
இரண்டாவது சுற்று வரும்போதுதான் அப்பா என்னையே முறைப்பது தெரிந்தது
மூன்றாவது சுற்றின் முடிவில் அனைவரும் வாசலுக்கு பக்கத்தில் உட்கார்ந்து
பேசிக்கொண்டு இருந்தார்கள். என் வயதோ என்னை விட ஒன்றிரண்டு வயதோ
அதிகமிருக்கலாம் அவளுக்கு. எதுவும் பேசாமல் அப்பாவின் பக்கத்தில் போய்
நின்றேன் ஏற்கனவே வைத்திருந்த விபூதியின் கீழ் குங்குமத்தை வைத்தார்.
பிறகு கார் ஏறி அந்த குடும்பம் பறந்து போனது. விடுமுறை எடுக்க முடியாத
காரணத்தால் முதல்வருக்கு கடிதம் எழுதி உறையுனுள் வைத்து தந்தார்.
அவள் முகம் கொஞ்சம் கொஞ்சமாக என்னுள் மறக்க ஆரம்பித்தாலும் அவள்
வண்டியில் ஏறி சென்ற காட்சி இன்றும் மனதினுள் அழியாமல் இருக்கிறது.
**************************
துபாயை போல கட்டிட நெரிசல்கள் அதிகம் இல்லாத நகரம் இது, மரங்களும்
மணல்வெளிகளும் நிறைந்த இடம் இதுவாகையால் எங்குமில்லாத வாட்டிடும்
குளிர் இங்கு. ஒருநாள் மாலை காலீத் என்ற சூடானியர் அவர் வீட்டு கம்பியூட்டரில்
இன்டெர்நெட் வேலை செய்யவில்லை என்றும் வந்து சரி பண்ணி தர முடியுமா
என்றும் கேட்டுக்கொண்டார். நான்கு மாதங்களுக்கு முன்பும் இதே போல
ஏதோ பிரச்சினை என்று அவர் வீட்டிற்கு சென்றுள்ளேன். அவர் வீட்டில் அழகான்
குட்டிப்பெண் இருக்கிறாள் பெயர் ஈலாஃப் என்று ஞாபகம். அந்த குட்டி மறந்து
போயிருப்பாள் என்று நினைத்தேன். ஒரு ஆப்பிரிக்க சிறுமி என்னிடம் இவ்வளவு
அன்பு வைத்திருப்பாள் என்று நினைக்கவேயில்லை. காலீத் வீட்டில் நுழையும்போதே
Mr.கதிர் என்றபடியே ஓடிவந்து கைகொடுத்தாள் வாழ்வின் மிக நெகிழ்ச்சியான
தருணம் அது. அவளின் நினைவாற்றலைக் கண்டு வியந்து போனேன்.
கம்ப்யூட்டரை சரி செய்த பின்னர் நான் தங்கியிருக்கும் இடத்துக்கே என்னை
கொண்டு வந்து விட காரை எடுத்தார் காலீத்.எடுக்கும்போது யாரோ காரின்
கதவை தட்டும் சத்தம் கண்ணாடி வழியே யாரும் தெரியவில்லை. கதவை
திறந்தால் ஈலாஃப் நிற்கிறாள். அவளையும் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு
புறப்பட்டோம். வழிநெடுக நிறைய பேசினேன் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை
அரபியை தவிர வேறெதுவும் தெரியாது, பள்ளியில் இன்னும் சேர்க்கவில்லையாம்.
நடு நடுவே அவள் பேசியது ஒன்றும் எனக்கு புரியவில்லை. நான் இறங்கும்
இடம் வந்ததும் தன் சிறிய உதடுகளை குவித்து கன்னத்தில் முத்தமிட்டாள்
ஈலாஃப் நான் பெற்ற முத்தங்களில் மிகச்சிறந்த முத்தம் அது. பனித்துண்டங்களை
ஒன்று சேர்த்து உதடு வடிவத்தில் செய்து பின் கன்னத்தில் ஒற்றியெடுத்ததுபோல.
காரின் பின் கண்ணாடி வழியே கையை அசைத்து போவது மங்களான பனியின்
புள்ளிகளுக்கு இடையே தெரிந்தது. நான் ஓவியனா இருந்தால் அந்தக்காட்சியை
வரைந்து வைத்து பின்னாளின் பார்த்து நினைவுகூர்ந்து கொள்ளலாம் என்று
தோன்றியது.
***************************
காதலை சொல்ல குளிர்கால காலைகள் உகந்ததல்ல என்பது அவளிடம் காதலை
சொன்னபோதுதான் தெரிந்தது. தினமும் காலையில் கோபால் நாயுடுவின் மரம்
போன்ற செம்பருத்திச்செடியில் பூக்கள் பறிப்பாள். முதல் நாள் பார்ப்பதுபோலவே
எல்லா நாளும் தோன்றிய நாட்கள் அவை. பள்ளியின் இறுதி பருவத்தின் இருந்த
காலம் அதுவாதலால் நயமாக என் ஆசையை தெரிவிக்க இயலாதவனாகிவிட்டேன்.
என்னை மறுத்தவள் நம் சரக்கல்ல என்று தோன்றியதால் காலப்போக்கில் அவளை
காதலித்ததிற்கான தடயங்கள் என் மனத்தில் அழிந்து போயிருந்தது. ஒரு குளிர்கால
அதிகாலை, திருச்சிக்கு போகும் வழியில் ஒரு கிராமத்து பேருந்து நிறுத்த
நிழற்குடையின் அருகில் முகப்பொலிவுகள் இழந்த ஒரு பெண் இரு குழந்தைகளுடன்
நின்றிருந்தாள். அவளேதான் முப்பது வயதை தாண்டியது போல அம்முகம்
மாறிவிட்டிருந்தது. பேருந்திலிருந்து இறங்கி அடுத்த பேருந்தில் வந்தடைந்தேன்.
நிழற்குடையில் பார்த்த அந்த பத்து நொடிகளை மறந்துவிடு என்றும், பூப்பறிக்கும்
அவள் முகத்தை மட்டும் நினைவடுக்குகளில் பதியவும் போராடி இரண்டுமே
இன்றுவரை என் நினைவில் இரண்டுமே நிலைத்திருக்கிறது.
*******************************
ஒரு குளிர்கால அதிகாலையில்தான் பள்ளியில் இருந்து தொலைவில் உள்ள கோமுகி
அணைக்கரை தாவடியம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்றான் என் நெருங்கிய
நண்பன். இன்றும் தெளிவாக நியாபகம் இருக்கிறது அது மலைப்பிரதேசத்தின்
அடிவாரத்தில் அமைந்த அம்மன் கோயில் அதன் நான்குபுறமும் பிரம்மாண்டமான
மூங்கில் மரங்கள் அடர்ந்து பெரிய வனம் போல காட்சி அளித்தது. இங்கு தினமும்
வந்து சாமி கும்பிடுவாள் என்றும் சொன்னான். மேலும் இன்று தன் காதலை
வெளிப்படுத்த போவதாகவும் சொன்னான். அவனை விட இரண்டு வயது மூத்தவள்
அவள், பத்தாவது தவறி இரண்டாண்டுகள் கழித்து தேறியவள். வழக்கமான கிராமத்து
பெண் அவள். நாசூக்கான மறுப்புகள் சொல்லத்தெரியாதவள். என்னவோ புணரத்தான்
அழைத்தது போல அவள் ஆர்ப்பாட்டம் செய்து செருப்பை நீட்டிவிட்டாள். மறுநாள்
குளிர்பிரிந்த காலையில் வயலின் நடுவே இருந்த மரத்தில் தொங்கிவிட்டான்.
இதிலென்ன அவமானம் இருக்கிறதென தெரியவில்லை.
********************************
அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்த்து ரசித்த பெண்ணொருத்தி குளிர் கால
விடியலில் என்னிடம் லிப்ட் கேட்டாள். அந்த நிகழ்வு எனக்கு சுவாரசியமானது.
ஒரு குளிர்காலத்தின் விடியலிள் அவள் பள்ளித்தோழிகளுடன் நடந்து
வந்துகொண்டிருந்தாள் உடன் இருவர் இருந்தனர். அப்போதுதான் புதிதாக சுசுகி வாங்கியிருந்தார்கள். யாருமில்லாத சாலையில் ஓட்டிப்பழக எடுத்துச்சென்றேன்.
பத்திருபது கிராமங்களை அணைத்து போகும் அந்த சாலை பல வளைவுகளை
கொண்டது. தோழிகளுடன் வந்துகொண்டிருந்தவள். ஏதோ உற்சாக மிகுதியில்
லிப்ட் கிடைக்குமா என்று கத்தி விட்டாள். சற்று தூரம் கடந்திருந்த நான் வண்டியை திருப்பினேன்.
அவளை நெருங்கியவுடன் அவள் இரண்டு தோழிகளுக்குப்பின் முகம்
மறைத்துக்கொண்டாள் சும்மா விளையாட்டுக்கு கேட்டேன், மன்னிச்சிடுங்க என்று
சொன்னாள். சிரித்துக்கொண்டே கிளம்பினேன். பிறகு பேருந்திலோ, கடைத்தெருவிலோ, தெருவை கடக்கையிலோ சின்னவெட்கத்துடன் கூடிய புன்னகையை உதிர்த்து முகம்
மறைக்க இடம் தேடுவாள்.
********************************
ஒரு குளிர்கால இரவில்தான் எங்கள் ஊரில் உள்ள கூந்தல் நீளமான பெண்ணொருத்தி
ஒன்பதாவது பெயிலானாள் என்று தீக்குளித்துக்கொண்டாள். அவளின் கூந்தல் எனக்கு
மிகவும் பிடித்தமான ஒன்று. இங்கே கூந்தல் நீளமான கேரளத்து சேச்சிகளை காணும்
போதெல்லாம் முத்துலஷ்மி என்ற அப்பெண்ணின் நினைவு வரும். பெயிலானதுக்கெல்லாம்
தீக்குளிக்க ஆரம்பித்தால் நான் பதினெட்டுக்கும் அதிகமான முறை தீக்குளிக்க வேண்டும்.
*******************************
குளிர்கால அதிகாலையில்தான் என்னை வளர்த்த பாட்டி இறந்து போனாள்.
ஒரு குளிர்கால இரவில்தான் வெளித்திண்ணையில் இருந்த நாய்க்குட்டி குளிரில்
விரைத்து செத்துப் போயிருந்தது.
ஒரு குளிர் நிரம்பிய இரவில் கல்லூரி விடுதியில் படுத்திருந்த சக மாணவனுக்கு
வலிப்பு வந்தது. அதன்பிறகு வலிப்பு வரும் காட்சியை பார்த்தாலே அந்த
நண்பனும் பின் குளிர் நிரம்பிய இரவும் நியாபகம் வரும்.
ஒரு குளிர் நிரம்பிய அதிகாலையில்தான் கொடைக்கானலின் லாட்ஜ் ஒன்றில் மிக
அதிகபட்சமாக குடித்திருந்தேன்.
குளிர் நிரம்பிய இந்த இரவில்தான் பாம்பே ஜெயஸ்ரி பாடிய பாரதியின் கவிதைகளை
கேட்டுக்கொண்டிருக்கிறேன். வரும்கால குளிர் இரவுகளில் பாரதியும் பின் ஜெயாவின்
குரலும் என் நினைவுக்கு வரலாம்.
வாழ்வின் மிகுந்த மகிழ்ச்சிகளையும், அதனினும் மிகுந்த துயரங்களை இந்த
குளிர்காலம் தந்திருந்தாலும் வெயிலைப்போல அத்தனை கொடுமையாக
இருக்கவில்லை. வெயில் கால நினைவுகளுடன் பிறகு வருவேன்.
(விடமாட்டோம்ல )