எல்லையற்ற அன்பு கொள்வோம்

Sunday, March 09, 2008

நடிப்பு சுனாமியின் அடுத்த படம் தயாராகிறது!!!

தமிழக மக்களுக்கு ஏற்கனவே பரபரப்பான அறிமுகம் தந்தவரும் "கானல் நீர்"
படத்தில் அதிரடியாக தோன்றி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தவருமாகிய
முகவை குமார் என்கிற JK ரித்திஸ் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை
விடுத்துள்ளார். தனது முதல் படம் தந்த அதிர்ச்சியிலிருந்து தமிழக மக்கள் மீளும்
முன்பே அடுத்த படத்தையும் அறிவித்துள்ளது கண்டு மக்கள் சோகத்தில்
ஆழ்ந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் என் பங்களிப்பு
கணிசமாக இருக்கவேண்டும் என்பதற்காக தொடர்ந்து படங்களில் நடிப்பேன்
என அறிவித்துள்ளதால் குழந்தைகள் முதல் பல்போன ஆயாவரை அனைவரும்
குலை நடுக்கத்தில் இருப்பதாக செய்திகள் குய்யோ முறையோ என்று
தெரிவிக்கிறது.

அவரது அடுத்தபடத்தின் தலைப்பே மிக வித்தியாசமாக அமைந்திருப்பதாக
அவரே குறிப்பிட்டு சிலாகித்தார்.
"பத்தாவது முடிச்சிட்டு சும்மாருக்கோம்" என்ற தலைப்பை
கேட்டவுடன் அவருக்கு பிடித்துவிட்டதாகவும் படத்தில் பத்தாவது படிக்கும் பையன்
வேடத்தில் நடிப்பதால் அதற்கேற்றவாறு முகத்தில் மேக்கப் அப்ப வேண்டும்
அதனால் கொட்டாம்பட்டி அருகிலிருந்து தெருக்கூத்து நடிகர்களுக்கு பவுடர்
போட்டு பளபளப்பாக்கும் மேக்கப் நிபுணர்களை ஸ்பெசலாக வரவழைப்பதாக
சொன்னார். படத்தின் அவரது மேக்கப் தனியாக தெரிய வேண்டும்
என்று இந்த ஏற்பாடாம்.

படம் வெகு ரகசியமாக எடுக்கப்படுவதால், சின்ன ஸ்டாம்ப் சைஸ் போட்டோ
கூட வெளிவரவில்லை. அதனால் அங்க இங்க பொறுக்கி பொறுக்கி எடுத்த
போட்டோக்கள்



பிகரின் பின்னால் கருஞ்சிறுத்தையென நிற்பவர்தான் ஜேகே ரித்திஸ், நன்றாக
உற்றூப்பாருங்கள். (என்ன கொடும்ம்ம சார் இதுனுலாம் புலம்ப கூடாது)

இங்கே ஜேகே ரித்திஸின் புஜபல
பராக்கிரமத்தை (அக்கிரமம்) காணலாம் மேலும் தனது அடுத்த ப்ராஜெக்ட் மற்றும்
அரசியல், சமூகம் குறித்த தனது பங்கையும் வெளிப்படுத்தியிருக்கிறார். ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் இணைய முகவரி அளித்திருக்கிறார். அவருக்கு
நீங்கள் மடல் செய்யலாம். உங்களுடைய சந்தேகங்களை அவர் தீர்ப்பார்.

பெயரிடப்படாத இன்னொரு படத்திலும் கையெழுத்திட்டிருக்கிறார். இரு
கதாநாயகர்களில் ஒருவராக இருந்தாலும் தனது எவர்சில்வர் பாத்திரத்துக்கு பங்கம்
வராமல் இருப்பதால் ஒத்துக்கொண்டிருக்கிறார். மேலும் இணைந்த கைகள், அக்னி
நட்சத்திராம், சின்னதம்பி பெரியதம்பி வரிசையில் இதும் மெகா வெற்றிப்படமாக
இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தாண்டு இறுதி வரை படப்பிடிப்பு இருப்பதால் தன்னுடைய கால்ஷீட், பெட்ஷீட் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வரை எதுவாக இருந்தாலும்
அடுத்த வருடம் மட்டுமே கிடைக்கும் என்றும் அறிவித்தார்.


ரித்திஸ் ரசிகராக என்னுடைய ஆசை ஒன்றே ஒன்றுதான் பேரரசு இயக்கத்தில்
விஜய டோ ராஜேந்தரும், ரித்திஸும் இணைந்து நடிக்க வேண்டும் என்பதே!

(கற்பனை பண்ணும்போதே உடம்பு சிலிர்க்குது)
பார்ப்போம் எம் கனவு பலிக்கிறதா என்று.

இப்படிக்கு உலக நடிப்பு சூறாவலி ரித்திஸ் ரசிகர் மன்றம்
அபுதாபி கிளை
கொல்லம்பாளையம் ரோடு
பொட்டிக்கடை சந்து
போஸ்டாபீஸ் எதிரில்
துபாய் 6003236568941115

Wednesday, February 27, 2008

இராமரும் முருகனும் பிற்சேர்க்கையாக சுஜாதாவும்



பஞ்சாயத்து செய்திகளை சொல்ல பறையடிப்பவர் தெருமுக்குகளில் நின்று
சொன்னதெல்லாம் இப்போது அடியோடு மறைந்து விட்டது. பறையடிக்கும்போது
மோளத்தை சூடு காட்ட வைக்கோலினை சிறிது எடுத்து தீயிட்டு காயவிடுவார்கள்.
அப்போதே சிறுவர் கூட்டம் கூடி பறை இசையை ரசிக்க கூடிவிடும். எப்போது
அடிப்பார்கள் என்று எங்களுக்குள் போட்டியே நடக்கும். திடீரென்று மழைபெய்வது
போல் அடிப்பார்கள். கேட்டதும் கையை காலை அசைக்க தூண்டும் அடி.
மழைவிட்டது போல அடி நிறுத்தும்போது ஒருவர் ஓங்கி குரலெடுத்து ராகத்தோடு
பாடுவார். அனைத்து வீட்டிலிருந்து தலைகள் எட்டிப் பார்த்து செய்தி வாங்கும்.
சிலர் நெருங்கி வந்து விசாரிப்பர். பெரும்பாலும் இவையணைத்தும் அதிகாலையிலோ
அல்லது இரவிலோ நடக்கும். இப்போதைய ராப், அதிரும் ட்ரம்ஸ் இசைக்கெல்லாம்
ஆதி எதுவென கேட்டால் நிச்சயமாய் பறைமேளத்தை சொல்வேன்.

பறைமேளம் மூலம் செய்தி சொல்லும் முறையை நவீனமாக்கிதான் முருகன்
வந்தார்.

முருகனுக்கு ஒருகண் பார்வை மட்டுமே மறுகண் எப்படி போனதென்று
தெரியவில்லை. ஊருக்குள் அவரைத்தெரியாத ஆள் இருக்கு முடியாது. திருமணம்,
மஞ்சள் நீர், மரணசெய்தி, தியேட்டரில் புதிய படம் போட்டால் செய்தி, அரசியல்
நிகழ்ச்சி என அனைத்துக்கும் இவர் உதவி தேவை. ஒரு ஆட்டோவில் மைக்செட்
ஸ்பீக்கர் சகிதம் இவர் நுழைந்து விட்டால் அனைத்து காதுகளும் கூர்தீட்டி நிற்கும்
என்ன செய்தி சொல்லபோகிறார் என்று. சில சிறுவர் கூட்டம் ஆட்டோவின் பின்னால்
நோட்டீஸ் வாங்க என்று ஓடும். நானும் என் டவுசர் காலத்தில் நோட்டீஸ்
வாங்க அவர் பின்னே ஓடியிருக்கிறேன். ஆரம்பத்தில் ஆட்டோ வைத்து
விளம்பரம் செய்யும் வசதி இல்லை என்பதால் சைக்கிளில் ஒருவர் மிதிக்க
இவர் பின் அமர்ந்து சென்று செய்தி சொல்வார். பெருமாலும் விளம்பரம் மட்டுமே
சொல்வதுண்டு. மரண செய்திகளுக்கென்றும், விளம்பரசெய்திக்கென்றும், திருமண
செய்திக்கென்றும் தனித்தனி அலைகளில் பேசுவதை தொடர்ந்து கேட்பவர் மட்டுமே
உணர முடியும்.

உங்கள் பொன்மலை / க்ரசண்ட்
திரை அரங்கில்
நாளைமுதல் தினசரி நான்கு காட்சிகளாக
சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த (உலகத்துலயே இரட்டை வேடங்கள்ல
அதிக முறை நடிச்சவர் இவராத்தான் இருக்க முடியும்)
நாட்டாமை திரைப்படம்.
முதல்நாள் முதல் டிக்கெட் எடுக்கும் டிக்கெட் எடுக்கும் பெண்மணிக்கு
படையப்பா நீலாம்பரி சேலை இலவசம் என்று அவர் பேசும் அழகு தனி.


இன்றும் முருகனுக்கென்று தனி ரசிகர் கூட்டம் உண்டு.

இப்போது முருகன் பாணியை விட நவீனாமாக லோக்கல் கேபிள் சேனல்களில்
ஐந்து நிமிட இடைவெளியில் நாளுக்கு 8756 முறை ஒரே செய்தியை தொலைக்காட்சியின்
அடிக்கோடியில் ஓட விடுகிறார்கள். யாரும் பார்க்கத்தான் ஆளில்லை.

கடந்த இருபது ஆண்டுகளில் எங்கள் ஊர் கிராமம் என்ற வட்டத்தை விட்டு வெளியே
வந்து நகரத்துடன் இணைந்திருப்பதுடன் பல அரிய விஷயங்களை சிதைத்து விட்டு
இவ்வுருவம் பெற்றிருக்கிறது.

உதாரணத்திற்கு என் பள்ளிப்பருவத்தில் முடிவெட்ட இராமர் என்பவர் வருவார்.
வெற்றிலை குதப்பிய வாயுடனும், சிவந்த முட்டைக்கண்கள் உடைய பார்க்க
அச்சமூட்டுபவர் போல தோன்றினாலும். வாய் திறக்கும்போது வெள்ளந்தியாக
தெரிவார். "வா கண்ணு ஏன் பயப்படுற? செத்த நிமிசம் உக்காருப்பா...
என்று கெஞ்சுவார். அவர் வரும் திசை தெரிந்தாலே இரண்டு தெரு தள்ளி நிற்பேன்.
வலுக்கட்டாயமாக தேடி இழுத்து வந்து மனையில் உக்கார வைப்பார் அப்பா.
தலையில் தண்ணீர் தெளித்து 'கரக்' 'கரக்' என்று வெட்ட ஆரம்பிப்பார்.
வெட்டும்போது கண்ணாடியை நாம்தான் கையில் பிடித்திருக்க வேண்டும். இது
ஒன்றுதான் எனக்கு பிடிக்காத விஷயம்.

பின் அவரது வாரிசுகள் என்று சொல்லிக்கொண்டு கடைத்தெருவில் சலூன்கடை
வைத்தார்கள். முன்னும் பின்னும் பார்க்க பெரிய பெரிய கண்ணாடிகள். எந்நேரமும்
சிலு சிலுவென்ற பாட்டுச்சத்தம். கத்தரி மறைந்து அரைமணிக்கொருதரம் கடைக்குள்
வந்து தலை சீவி தலையை திருப்பி திருப்பி பார்த்து திருப்தியுறாத இளந்தாரிகள்
என்று மாறிப்போனபோது இராமரிடம் ஊரில் உள்ள பல் பெயர்ந்த கிழவாடிகள்
மட்டுமே வாடிக்கையாளர்கள் என்றானார்கள்.

சமீபத்தில் ஊருக்கு சென்றிருந்தபோது இராமரை சந்திக்க நேர்ந்தது. முக்கத்தில்
முதுமை வரைந்த கோடுகள். ஆனால் அதே பெரிய சிவந்த கண்கள் இம்முறை
பயம்காட்டவில்லை. நீண்ட கழியின் முனையில் பண்ணருவா பாதி வளைத்துக் கட்டி ஆட்டுக்கு குழை ஒடித்துக்கொண்டிருந்தார். வீட்டில் ஆடு வளர்க்கிறாராம்.
எப்போதாவது வரும் தொழில் மீது நம்பிக்கை அற்றிருக்கலாம்.


இன்று மொத்தமாக பத்துக்கும் மேற்பட்ட சலூன்கள். அத்தனையிலும் ஆளுயர
கண்ணாடிகள். முடிவெட்டும் கோவிந்தனிடமும், கண்ணனிடமும், லவ்லியிடமும்
இராமரின் சாயல்கள் மறைந்திருந்தன.
---

பின்குறிப்பு: இன்னிக்கு ஏண்டா ரீல் சுத்திகிட்டு இருக்கன்னு தோணுச்சுன்னா அதுக்கான
காரணம். இன்று அதிகாலை உறக்கத்தில் முருகன் ஆட்டோவுக்கு பின்னால்
கலர் கலராக நோட்டீஸ் வாங்கி அருகிலுள்ள பசங்களிடம் நாந்தான் அதிகம்
நோட்டீஸ் வாங்கினேன் என்று பெருமையட்டி பின் அதை கப்பல் செய்து அனைவரும்
வாய்க்காலில் விட்டதுபோல ஒரு கனவு. அதான் கொஞ்சம் சுத்தியாச்சு.
ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்த கனவ பத்தி எழுதலாம்னு நினைச்சேன். ஆனா
அதுக்கு "A" சர்டிபிகேட் கிடைக்கும் அவ்வளவு வன்முறை. அய்யனார் சொன்னா
அதையும் எழுதிடலாம்.
---

சுஜாதாவை நேரில் சந்தித்த போது அவர் குறித்த எந்த விதமான ஆச்சர்யங்களும்
இருந்ததில்லை ஏனெனில் நமது வாசிப்பு அந்த தளத்தில் விரிவடையாமல் இருந்ததே
காரணம். ஆனால் இவர்தான் சுஜாதா என்று தெரியும். கல்லூரியின் இறுதி பருவத்தில்
ப்ராஜெக்ட் செய்வதற்காக கோடம்பாக்கத்தில் உள்ள பென்டாசாப்ட் நிறுவனத்தில்
இருந்தபோது தினமும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். பார்க்கும்போதெல்லாம் எனக்கு
தோன்றியது இதுதான் 'இவரால் எப்படி பாய்ஸ் படத்துக்கு வசனம் எழுத முடிந்தது"
என்று. நான் பார்த்தபோது வயோதிகம் முற்றியிருந்தது. சிறிய உதவியில்லாமல்
காருக்குள்ளிருந்து வெளியே வரவோ, படி ஏறவோ முடியாது.

கோடம்பாக்கம் என்பதால் அடிக்கடி எதாவது ஒரு நடிக பிரபலத்தையும் அவர் பின்
சிறு கூட்டங்களையும் காணலாம். பென்டாசாப்ட் எதிரில் உள்ள பொட்டிக்கடையில்
நின்று புகைக்கும்போது எப்போதாவது நீல நிற ஸ்கோடா கார் வந்து நிற்கும்
"டேய் சுஜாதாடா" வாங்கடா போய் பேசலாம் என்று அழைப்பேன். "டேய் உனுக்கு
வேலையே இல்லையா" என்று விலகிவிடுவார்கள். ரசிகனுடன் நடிகர்கள் கொள்ளும்
வசீகரத்துக்கு இணையாக எழுத்தாளருக்கும் இருப்பதை கண்டு வியந்திருக்கிறேன்.
வேலை முடிந்து கிளம்புவதற்கு முன்னர் எப்படியாவது சந்தித்து பேசவேண்டும்
என்று நினைத்திருந்தேன். ஒவ்வொரு சமயத்திலும் நழுவிக் கொண்டே சென்று
கடைசியில் இல்லையென்றாகிப் போன போது பெரிதாக நட்டமேதுமில்லை
என்றாலும் பேசியிருக்கலாம் என்ற எண்ணம் அடிக்கடி தோன்றும். இனி அது
தோன்றாது.

இன்றளவும் சுஜாதாவின் "என் இனிய இயந்திரா" தவிர வேறெதும் படித்ததில்லை.
அவர் மீது நான் கொண்டது சினிமா மோகமேயன்றி வேறெதுமில்லை.

Monday, February 25, 2008

புத்தகங்கள், வாசிப்பு, ரசனை மற்றும் கொஞ்சம் நையாண்டி

இங்கிருந்து கிளம்பும்போதே அய்யனார் ஒரு லிஸ்ட் கொடுத்து அதில் உள்ள
புத்தகங்களை வாங்கி வரச்சொன்னார். எங்கு தேடியும் கிடைக்காத வரிசை அவை.
நாஞ்சில் நாடன் நாவல்கள் தந்த ஈர்ப்பால் அவரின் மற்ற அனைத்து நாவல்களையும்
எப்படி அலைந்தாவது வாங்கிவிட முயற்சி செய்து அவற்றில் ஓரளவு வெற்றியும்
கிட்டியது. அவற்றை வாங்கும்போதும், வாங்கியபின்னர் படித்த அனுபவங்களுமே
இங்கு பேசப்போகிறேன்.

இந்தியா வந்ததும் மறக்காமல் சந்திக்க வேண்டும் என்று அன்புடன் சுரேகா கேட்டுக்
கொண்டார். திருச்சி சென்று அவரை பார்க்க முடிவானதும் அங்கேயே புத்தகங்களும்
வாங்க முடிவு செய்திருந்தேன். அவர் ஒரு பதிவர், உதவி இயக்குனர் என்ற
அளவிலேயே தெரியும் நயமாக பேசுவார் என்பது நேரில் சந்தித்த போதுதான்
தெரிந்தது. இடைவிடாது பேசிக்கொண்டே இருந்தார். திரையுலகம் சம்பந்தப்பட்ட
செய்திகள் வழக்கம்போலவே ஒவ்வாமையைத் தந்தது.

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக எனக்கு தனி மடல் இட்டு ஊக்கப்படுத்தியர்
திருச்சியை சேர்ந்த விஜயபாஸ்கர் என்பவர். அவரை சந்திக்க பி.எஸ்.என்.எல்
அலுவலகத்திற்கு சென்றோம் அங்குதான் அவர் வேலை செய்கிறார். அரசு
அலுவலகத்துக்கே உண்டான வாசனை, கோப்புகள், தடித்த கண்ணாடி அணிந்து
சிரமப்பட்டு தடிமனான நோட்டில் எதையோ எழுதும் பெருசுகள் என்று அனைத்து
லட்சணமும் பொருந்தின. என்னை கண்ணைக் கட்டிக்கொண்டு எதாவது ஒரு அரசுத்
துறை அலுவலகத்தில் நிறுத்தினால் அது எந்த மாதிரியான அலுவலகம் என்பதை
சரியாக சொல்லிவிடுவேன்.

பாஸ்போர்ட் வந்த புதிதில் அதைப் பெற்றுக்கொள்ள கிராம நிர்வாக அலுவலரிடம்
இருந்து ஒரு நற்சான்றிதழ் வாங்கி காவல் நிலையத்தில் கொடுக்க வேண்டும்.
அதற்கு அலுவலர்களே 50 ரூபாய் என நிர்ணயித்திருந்தார்கள். காலம் காலமாக
நடந்து வரும் இந்த பாரம்பரிய வழக்கத்தை அரசு ஊழியரான என் தந்தையே
மீற அவர் மனம் ஒத்துழைக்கவில்லை. கையில் அம்பது ரூபாய் தந்து "நீயே
போய் வாங்கி வா என்றார்".

சின்ன சின்ன வேலைகளிலும் ஒன்று, இரண்டு என்றே கமிஷன் அடித்து பழகியதால்
கையூட்டு கொடுக்க வைத்திருந்த ஐம்பதில் இருபதை ஆட்டையை போட்டேன்.
நிர்வாக அலுவலர் முன்பு நின்று 30 ரூபாயை நீட்டும்போது விலைவாசி நிலவரம்
தெரியுமா? உங்கப்பாவே இப்படி நடந்துக்கலாமா? என்று நியாயம் பேசினார்.
அல்லாம் தெரியும் பேப்பர குடுங்க சார் என்று வாங்கி வந்தேன்.

இப்படி பாரதிதாசன் பல்கலைக்கழகம், அரசு மருத்துவமனை, காவல் நிலையம்,
பஞ்சாயத்து அலுவலகம், நீதிமன்றம் என்று அரசின் அத்தனை அலுவலகத்தின்
வாசனையையும் பிரித்தறிய நாசி பழகிக் கொண்டது. விஜயபாஸ்கர் அலுவலகம்
சென்ற போது அத்தனையும் மனதின் முன் மீண்டும் எவ்வித மாற்றங்களும்
இல்லாமல் நிழலாடியது.

விஜயபாஸ்கர் என்னைப் பார்த்ததும் மிகவும் பதட்டமடைந்து விட்டார். இதைக்
கண்ட சுந்தருக்கு ஒன்றுமே புரியவில்லை. எனக்கே புரியவில்லை. கம்ப்யூட்டரை
தட்டுவதும் தொலைபேசியில் பேசுவதுமாக மதிய உணவு வரை இருந்தார்.
நானும் சுரேகாவும் அரசு அலுவலகம் என்றும் பாராமல் அலப்பறை கொடுத்துக்
கொண்டிருந்தோம். கொஞ்ச நேரத்தில் மதிய உணவாக தி இங்கிலிஷ் பேக்கரியில்
பொறை (பொறைகூட நல்லாருக்கும்) வாங்கி சாப்பிட்டு இடத்தை காலி செய்தோம்.

முன்பின் பழக்கமில்லாத, இணைய எழுத்துகளின் மூலம் அறிந்த ஒருவரை காணும்
போது ஒரு நண்பனிடம் பழகுவது போல பேசுவது, பழகுவது என்பது
அனைவருக்கும் சாத்தியமல்ல.

சத்திரம் பேருந்து நிலையம் வரும் வழியில் ஒரு புத்தகக்கடையை பார்த்தோம்.
உரிமையாளரை தட்டி எழுப்பி புத்தகம் வாங்க வந்திருப்பதாக சொன்னோம்.
சுவாரசியம் இல்லாமல் உள்ளே சென்று பார்க்குமாறு கையை காட்டி விட்டு
மறுபடியும் தூங்க சென்றார்.

ஊறுகாய் செய்வது எப்படி முதல் எந்த நேரத்தில் சாந்தி முகூர்த்தம் வைத்து
எந்த நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றால் புருசனுக்கு நல்லது
என ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருந்தன. ரேடியோ பழுது பார்ப்பது, டீவி
ரிப்பேர் செய்வது எப்படி போன்ற புத்தகங்கள் இல்லாமல் போனது மகிழ்ச்சி
அளித்தது. ஆயிரக்கணக்கான "எப்படி" புத்தகங்களுக்கு நடுவே தரமான நாவல்கள்
கட்டுரைத் தொகுப்புகளைக் காண சந்தோஷமாக இருந்தது. நாஞ்சில் நாடனின்
"தலைகீழ் விகிதங்கள்", ரமேஷ் ப்ரேமின் "ஆதியிலே மாம்சம் இருந்தது" மற்றும்
எம்.டி வாசுதேவன் நாயரின் காலம் நாவல் தந்த சுகத்தினால் அவரின் சிறுகதை
தொகுப்பு ஒன்றும் வாங்கினேன்.

சொல்ல மறந்த கதை படத்தினை இன்னும் பார்க்கவில்லை என்பதால் தலைகீழ்
விகிதங்கள் வாங்கினேன். பார்த்தாலும் வாங்கி இருப்பேன் அது வேறு விஷயம்.
தெப்பக்குளம் அருகில் சில புத்தக கடைகள் இருக்கும் அங்கு சென்றால் நாஞ்சில்
நாடன் புத்தகங்கள், கோபி கிருஷ்ணனின் டேபிள் டென்னிஸ் ஆகியவை கிடைக்கலாம்
என்று சுரேகா கூறவே சுவாரசியமில்லாமல் கிளம்பினேன். ஏனென்றால் கல்லூரிக்
காலத்தில் நூலகத்தில் இருந்து தலையணை சைஸ் கம்பியூட்டர் புத்தகங்களை
ஆட்டை போட்டு தெப்பக்குள புத்தக சந்தையில் பாதி விலைக்கு விற்றிருக்கிறேன்.
அங்கே என்ன கிடைக்க போகிறது என்ற நினைப்பில்தால் அந்த அசுவாரசியம்.

நினைத்ததற்கு எதிர்மாறாக அங்கே இதுவரை வாசித்திராத நாஞ்சில் நாடனின்
நான்கு (பேய்க்கொட்டு, மிதவை, என்பிலதனை வெயில் காயும், மாமிசப் படைப்பு)
நாவல்கள் கிடைத்தன. ஜெயமோகனின் திசைகளின் நடுவே மிகுந்த தயக்கத்திற்கு
பிறகு வாங்கினேன்.

"அது இருக்குதா"? "இது இருக்குதா"? என்று கடைக்காரரை காய்ச்சி எடுத்துக்
கொண்டிருந்த சமயம் இரண்டு சுமார் பிகர்கள் சாண்டில்யன் புத்தகங்களாக வாங்கி
குவித்துக் கொண்டு இருந்தார்கள். "பருவம்" "விருந்து" "இன்பலோகம்"
புத்தகங்களுக்கு அடுத்தபடியாக எங்கள் நண்பர் குழாமில் அதிகமுறை சுற்றிய
முக்கால்வாசி புத்தகங்கள் சாண்டில்யன் புத்தகங்களே. மருந்துக்கு கூட அந்த மாணவிகள்
பாட புத்தகங்களை வாங்காதது எனக்கு எந்த அதிர்ச்சியையும் தரவில்லை.



எல்லாம் ஒரு விளம்பரம்தான் கண்டுக்க கூடாது. ஆனா வழக்கம்போல போட்டோ
மேல கிளிக்கி பாத்துட்டா நான் பொறுப்புல்ல.

புத்தகம் வாங்கவே லட்சியத்தோடு வந்த என்னை விட சுரேகா அதிக புத்தகங்கள்
வாங்கினார். ஓஷோ புத்தகங்கள் படிப்பவர்களை எப்போதுமே நான் ஜந்துக்களை
பார்ப்பது போல ஏன் பார்க்கிறேன் என்பது எனக்கே தெரியவில்லை. உலகத்தில்
உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான உபதேச புத்தகங்கள் என்பது என்னவோ
செய்கிறது. என்னைப்பொறுத்தவரை ஓஷோ புத்தகங்களை படிக்கும் நிலை வரவில்லை.

இன்று காலைமுதல் மாலைவரை உங்கள் நேரத்தை வீணடித்து விட்டேன். மிகவும்
நன்றி என்று சொன்னபோது "எல்லாத்தையும் செஞ்சுபுட்டு என்ன கதிர் இது
டயலாக் என்று கலாய்த்து வழியனுப்பினார். பேருந்தில் புத்தக குவியல்களுடன்
உட்கார சென்றதும் எதோ "வாய்ப்பாடு விக்கவந்தவன் போலருக்கு" என்ற நினைப்பில்
இடம் தர மறுத்தனர். ஒரு கல்லூரி மாணவன் மட்டும் ஒதுங்கி இடம் கொடுத்தான்.
"ஏன் சார் குமுதம், விகடன் மாதிரி பொஸ்தகம் வாங்க மாட்டிங்களா"? எதுவுமே
புரிலயே சார் என்றேன்.

-----------

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகே குப்பை கொட்டும் இடத்திற்கு
மிக அருகில் புத்தக கண்காட்சி. நீண்ட நாள் தேடிக்கொண்டிருந்த எர்னஸ்ட் ஹெமிங்வே
(சும்மா பில்டப்பு) எழுதிய the old man and sea புத்தகத்தின் தமிழில் கடலும் கிழவனும்
கிடைத்தது. சி.சு செல்லப்பாவின் ஜீவனாம்சம் ஒன்றும் வாங்கினேன். காலச்சுவடு
பதிப்பகத்தை தவிர மற்ற அனைத்து பதிப்பகங்களும் புத்தக சந்தைக்கே உரித்தான
புதிய பெயர்களுடன் காணப்பட்டது. ஒருவேளை எனக்கு தெரியாமல் அப்படிப்பட்ட
அச்சகங்கள் நிறைய இருந்திருக்கலாம்.

ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், எழுதிய, பேருந்து நிலையங்களில் தொங்கி
கொண்டிருக்கும் மர்ம நாவல்களுக்கு பரம ரசிகையான என் அக்காவிடம் கடலும்
கிழவனும் புத்தகத்தை படிக்க கொடுத்தேன். "என்னடா இது டப்பிங் படம் பாக்கற
மாதிரி இருக்கு" என்று சொல்லி புத்தகத்தை தூக்கி எறிந்தாள்.

ஆர்வக்கோளாரில் கவிதை எழுதும் சித்திப் பையனும் இதே ரகம் அவனிடம்
மெர்க்குரிப்பூக்கள் நாவலை கொடுத்து படிக்க சொன்னேன். மறுநாள் என்னண்ணா
இது "செக்ஸ் புக்கு" மாதிரி இருக்கு என்று சொல்லி கொடுத்து விட்டான். ஆக
வாசிப்பு தன்னளவில் வளர்ச்சி அடைய வேண்டுமே தவிர யாரும் அதை திணிக்க
முடியாது. மேலும் அது ரசனையை பொறுத்து அமைவது.

Saturday, February 23, 2008

மாறாததும், மாறியதும்

சில பெருசுகள் மண்டைய போட்டுடுச்சு.

சில சிறுசுகள் ஓடிப்போச்சு.

சிகரெட் விலை ஏறி போச்சு.

சண்டை போட்ட பக்கத்து வீட்டு சனம் பாத்தவுடனே சிரிக்குது.
காலம் எல்லாத்தையும் தோசை மாதிரி திருப்பி போடும்ன்ற உண்மை உண்மைதான்.

மண்டபத்திலாவது எதும் தேறுமான்னு பாத்தேன், அங்கயும் ஒரு லோடு மண்.

ஒரு வீட்டுக்கு குறைந்தது இரண்டு மொபைல் போன் இருக்குது. எல்லாருமே
ரெண்டு மொபைலாவது வச்சிருக்காங்க. (ரேஷன்ல கூட தர்றாங்களாம்பா)

"இதெல்லாம் தேறும்னு" கணக்கு பண்ணி வச்சிருந்த பிகர்கள ஆட்டை
போட்டுட்டானுங்க.

துப்பாய்ல எங்க இருந்த? என்ற கேள்வியை அனைவரும் கேட்டு கேட்டு
சாகடித்தனர். யோவ் வடிவேலு உன்னய...

டீக்கடையில் டீ குடிச்சதும் கடைக்காரர் பத்திரமா டீகிளாசை வாங்கி
வைத்து நக்கல் சிரிப்பு சிரிக்கிறார்.

ஊர்ல உள்ள மக்கள விட அதிகமா ஒரு ரூபாய் தொலைபேசி பொட்டிகள் தொங்குது.

ஸ்கூல் பொண்ணுங்க கூட பக்கத்துல யார் வர்றாங்க போறாங்கன்னு கவனிக்காம
கை நிறைய ஒரு ரூபாய் வச்சிகிட்டு லொடக் லொடக்னு காச விட்டு கடல போட்டுகிட்டு இருக்குதுங்க. அப்படி போடற காச உண்டியல்ல போட்டா அத வச்சு ஒரு குடும்பமே
வாழலாம்.

எல்லா விலையும் ஏறினாலும் எங்க ஊர் தியேட்டர்ல இன்னமும் அஞ்சு ரூபாய்தான்
டிக்கெட் விக்கறாங்க. இடைவேளைல குடிச்ச டீ கூட அதே சுவை. முன்னல்லாம்
சூடா சமோசா போடுவாங்க. தட்டுல பரப்பி தியேட்டர் உள்ள வந்து விக்கறத
நிறுத்திட்டாங்க. தியேட்டர் பொட்டிக்கடைல ரஸ்னா பாக்கெட் அமோக விற்பனை.
ஆனா நான் ரஸ்னா குடிக்கறதை நிறுத்திட்டேன். :)

எவ்ளோ தாமதமா வீட்டுக்கு வந்தாலும் ஏன் எதுக்குன்னு எப்படின்னு ஒரு
கேள்வியும் இல்லாம கதவ திறந்து விடறாங்க. ரொம்ப ஏமாற்றமா இருந்தது.

ஆங்கிலப்படங்களுக்கு மிரட்டலான தமிழ் பெயர் வைக்கிறாங்க. உதாரணம்
சங்கிலிக்கருப்பன், பாதாள பைரவி.

எல்லார் வீட்டுலயும் கலைஞர் டீவிதான் பாக்கறாங்க.

ரெண்டு டீவி இருக்குற வீட்டுல மூணாவதா கலைஞர் டீவி கொடுத்துருக்காங்க.
கிட்டதட்ட எல்லா வீட்டுலயும் இதுதான்.

எல்லா ஊர்லயும் பிரம்மாண்டமான வினைல் போர்டுல பல்லாயிரக்கணக்கான
தலைகள் சிரிச்சிகிட்டும், செல்போன்ல பேசுற மாதிரியும், வணக்கம் வைக்கிற
மாதிரியும் போஸ் குடுத்துகிட்டு இருக்கறாங்க. புருடா புராணத்துல இதுக்கு
எதாச்சும் தண்டனை இருக்குதான்னு பாக்கணும் இல்லாட்டி உருவாக்கணும்.

ரூட் கிளியராயிடுச்சி, அப்ப அடுத்து உனக்குதான கல்யாணம் என்ற கேள்வியை
அனைவரும் வாயிலேயே வைத்திருந்தனர்.

பதிவர்களில் புலி மட்டும் கல்யாணத்திற்கு முதல் நாள் வந்து கொஞ்ச நேரம் உறுமி
விட்டு போனது. நான் புலிக்கு எதுமே செய்யலன்ற குற்றவுணர்ச்சி தினம் தினம்
என்னை கொல்லுது. துபாய் வா ராசா!

ரோட்டுல போற எதாச்சும் ஒரு பொண்ண ரெண்டு நிமிசம் தொடர்ந்தாப்புல
பாத்தம்னா அடுத்த அஞ்சாவது நிமிசத்துல ரெண்டு மூணு பேர் பைக்ல வந்து
"ஏன் பாத்த"ன்னு ஜோதிகா ரேஞ்சுல கேள்வி கேக்கறானுங்க.

ஒரு ஒயின்ஷாப் இருந்த ஊர்ல இப்ப அஞ்சு டாஸ்மாக் இருந்தும் கேட்ட
சரக்கு கிடைக்கவில்லை. என்ன கொடும இது...

ஒருநாளைக்கு மூணு என்ற வீதத்துல ஒவ்வொரு முறையும் ஒரு மணி நேரம்
மின்சாரத்தை நிறுத்தி வச்சிடறாங்க. முன்னாடி இதுபோல இல்ல. இப்ப மட்டும்
ஏன்னு தெரில. இங்கருந்து கர்னாடகாவுக்கு போகற மின்சாரத்துல எந்த
தடையுமில்லை.

முன்னவிட தினத்தந்தி சாணி பேப்பரின் தரம் குறைந்து சினிமா படங்களின்
விளம்பரங்களும், பிறந்தநாள் வாழ்த்து பக்கங்களாலும் நிறைந்திருக்கிறது.
இப்ப டீக்கடைய நம்பி பத்திரிக்கை நடத்துறாங்கன்னு யாரும் சொல்ல முடியாதுல்ல.

இப்பலாம் குங்குமத்துக்கு இனாமா எதுவும் கொடுக்கறதில்லயாம். என்ன ஏதுன்னு
கேட்டா இனாமா கொடுத்த பொருள் எதுவும் சந்தைக்கு வரும்போது காசு கொடுத்து
வாங்கறதில்லியாம். இத அடுத்த வாரம் இனாமா வாங்கிக்கலாம்னு விட்டுருப்பாங்க
போலருக்கு.

தாரே சமீன் பர் படத்தை அக்கா பசங்களுக்கு போட்டு காட்டணும்னு ஆவலோட
டிவிடி வாங்கி வந்து போட்டேன். அஞ்சாவது நிமிசத்துல "அட இதுவா மாமா
நான் ஏற்கனவே இந்த படத்தோட கதைய கேட்டுட்டேன்னு சொல்றான்.
அவங்க ஸ்கூல் மிஸ் சொன்னாங்களாம். மிஸ் பேர் என்ன? வயசு என்னன்னு
கேட்டதுக்கு "அய்யய்ய ஆய் மாமான்னு" சொல்லிட்டு தூங்கிட்டான்.

நிறைய பேர பாக்கணும்னு நினைச்சு பாக்கமுடில. எங்க ஊர்லருந்து சென்னை
போகணும்னா குறைந்தது 10 மணி நேரம் ஆகுது. பத்து மணி நேரம், பன்னெண்டு
மணி நேரம் ட்ராபிக் எல்லாம் சாதாரணம். ரோடு போடறாங்களாம். இதுக்காகவே
போகவில்லை.

பதிவர்களில் சந்தித்தது இரண்டு பேர்தான். சுரேகா மற்றும் ஜ்யோவ்ராம் சுந்தர்.
ரெண்டு பதிவர்களின் பேரும் சுந்தர். அப்புறம் என்னுடைய தீவிர ரசிகர்(?)
ஒருத்தரையும் பார்த்தேன். யோவ் அய்யனார் எனக்கும் ரசிகர் இருக்காங்க!

"பக்கத்து சீட்டுல பாட்டி உக்காராம பிகர் உக்காரணும்னு கடவுள்கிட்ட வேண்டிக்குங்க
அய்யனார்னு சொன்னேன். உனுக்குலாம் ஆயாதாண்டா பக்கத்துல உக்காரும்னு சாபம்
விட்டார். பத்தினன் சாபம்தான் பலிக்கும்னு நினைச்சேன்.

சினிமாக்கு போற வழில ஒரு ஆயா எலந்தபழம்னு கூவிகிட்டே போச்சு. ரெண்டு
ரூபாய்க்கு வாங்கி பேண்ட் பாக்கெட்ல போட்டு கடிச்சி தின்னுகிட்டே போனேன்.
"ஏண்டா நீ உண்மைலயே துபாய்லருந்துதான் வந்தியா"ன்னு கேட்டுட்டான்.

இல்லடா மச்சி, நான் அபிதாபி...

சும்மா இது ஒரு வருகைப் பதிவு மட்டும்தான்.

Monday, January 21, 2008

நெகிழ்வுதரும் காட்சிகள், எழுத்துக்கள் மற்றும் ஒரு கவிதை

தனிமையின் வழி என்ற கட்டுரைத் தொகுப்பை அய்யனார் என்னிடம் கொடுக்கும்போதே
அருமையானது என்று சொல்லியே கொடுத்தார். வாங்கி இரண்டுமாதம் கழித்துதான்
அதை பிரித்து பார்க்க நேரம் வாய்த்தது. அவர் சொன்னதுக்கும் மேலாக இருந்தது.
இதை கட்டுரைத் தொகுப்பு என்று கூட சொல்லமுடியாது. தனியனின் வலி நிறைந்த
பயணம்தான் தனிமையின் வழி.

கதையைப் போல கற்பனையைப் போல எழுதிவிட முடியாதது தன்னைப் பற்றிய
குறிப்புகள். ஒவ்வொரு தலைப்பிலும் எழுதப்பட்ட கட்டுரைகளின் முடிவுகள் மிக
நெகிழ்ச்சியாக இருந்ததை இதற்கு முன் எப்போதும் கண்டதில்லை. எந்த ஒரு
வார்த்தையைக் கொடுத்தாலும் அந்த வார்த்தையைக் கொண்டு அழகான நினைவலைகளை
கட்டிவிடுவார் என்று தோன்றுகிறது. நாம் எழுதும்போதுகூட சுவையானவை
என்று கருதுவதை மட்டுமே எழுதுகிறோம். (இந்த எண்ணம் எனக்கு எப்போதுமே
உண்டு)வாசிப்பவர் நம்மீது சிறிதளவு பிரமிப்பாவது அடைய வேண்டும் குறைந்த
பட்சம் கவனிக்கப்படவாவது வேண்டும் என்ற முனைப்பு தெரியும்.

நான் எழுதிய சில பதிவுகள் நெகிழ்ச்சியாக இருந்ததாக வாசித்தவர் சிலர் சொல்லி
இருக்கிறார்கள். அதை நேரடியான எழுத்தின் மூலம் நான் அடைந்தது இந்த
கட்டுரைத் தொகுப்பில்தான். சுந்தர ராமசாமி, மணிக்கண்ணன், கிருஷ்ணமூர்த்தி
ஆகியவர்களுடன் தனது நட்பை விவரிக்கும் குறிப்புகளை படிக்கும்போது
அதிகாலைப் பொழுது. முனை மடித்து வைக்க முடியாமல் படித்து முடித்தேன்.
வாசித்து முடிக்கும்போது குரல் உடைந்துவிட்டதைப் போல உணர்ந்தது.
உண்மைகளைப் பற்றி எழுதும்போது அவை உண்மையாக இருப்பதே அபூர்வம்.
குழம்பிய நிலையில் இருப்பதாக நினைக்கும்போது சுகுமாரனின் குறிப்புகள்
ஒன்றை படிக்க வேண்டும்.

நூல் பெயர்: தனிமையின் வழி
ஆசிரியர்: சுகுமாரன்

-------

ஒம்பது ரூபாய் நோட்டு படம் பார்க்க நேர்ந்தது. முதலில் தங்கர் மீது
எனக்கு பயங்கர கொலைவெறி இருந்தது. என்ன காரணம் என்றே தெரியவில்லை.
அதை பழி தீர்க்கும் விதமாக சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், சிதம்பரத்தில்
அப்பாசாமி போன்ற படங்களை இன்னமும் பார்க்கவில்லை. சத்யராஜ் வாழ்க்கையில்
உருப்படியான இரண்டாவது படம் இது என சொல்ல வைக்க கூடிய கதை.
நாவல் வடிவத்தில் படிக்காது இருந்ததனால் இரண்டையும் ஒப்பிட்டு திருப்தியடையாத
மனநிலை என்பது இல்லவே இல்லை, தலைவர்களின் வரலாறோ, நாவலை
அடியொற்றி எடுக்கப்படும் படங்கள் மூலத்தை பிரதிபலிப்பதாக எவரும் சொல்லி
கேட்டதுமில்லை.

என்னைப்பொருத்த வரை தங்கரின் மேல் உள்ள கோபத்தின் அளவை வெகுவாக
குறைத்திருக்கிறது. அவரின் மற்ற படங்களை பார்ப்பதின் மூலம் தீர்த்துக்கொள்ளலாம்.
இறுதிக் காட்சிகளின் போது கமீலா, மாதவரய்யா மேல் காட்டும் வருத்தத்தை
மட்டும் வழக்கமான சினிமா விதிகளின் அடிப்படையில் அமைந்தது போல
ஒரு தோற்றம். படத்தின் இரண்டு காட்சிகள் மிகுந்த நெகிழ்வுகளை தந்தது.
நாசர் வீட்டுக்கு சத்யராஜ், அர்ச்சனா நிராதரவாக செல்லும் காட்சி மற்றும்
மாதவரய்யா இறந்த காட்சி. இவையிரண்டும் அடுத்த நெகிழ்வான காட்சிகள்
காணும் வரை மனதில் இருக்கும்.

நன்றி தங்கர்.

------------

என் மொழி புரியாத வெளி தேசத்தவர்களிடம் பேசுவதில் அலாதியான ஆசை
எப்போதுமே உண்டு. சொல்ல வருவதை நமக்கு புரிய வைப்பதில் அவர்களின்
முகத்தில் குழப்ப ரேகையுடன் கூடிய மெல்லிய பதைப்பு தெரியும். அவற்றில்
புதிய முகபாவங்கள் தென்படலாம். எனக்கும் இது பொருந்தும். அந்த வகையில்
நேற்று இரண்டு துருக்கியர்களை சந்தித்தேன். (இதுபோல சந்தித்தது பற்றி மட்டுமே
எழுதுவதாக சில விஷமிகள் பரப்புவதால் நீண்டநாள் கழித்து இப்போது எழுதுகிறேன்)
அவர்களுக்கு ஆங்கிலம் சுத்தமாக தெரியவில்லை, அரபியும் ஷோய ஷோய எனக்கு
எனக்கு அரபியும் சுத்தமாக வராது. ஞாயிற்றுக்கிழமை தூர்தர்ஷனின் செய்தி
வாசிப்பது போல பேசிக்கொண்டிருந்தோம். துருக்கி நாட்டு பெண்கள் மிக
அழகானவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் என்பதை விளக்கிச் சொல்ல ஐந்து
நிமிடம் பிடித்தது.

உடனே சிடி பேக்கிலிருந்து விதவிதமான சிடிக்களை எடுத்து கொடுத்தார்கள்.
எல்லாமே பார்த்து சலித்தவை. எதாவது திரைப்படம் இருக்கிறதா என்று சோதிக்க
ஐந்து நிமிடம் செலவழித்து எடுத்தது ஒரு இராக்கிய படம். பெயர் தெரியவில்லை.
ஆங்கிலத்திலோ, அல்லது இராக்கிய மொழியிலோ எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால்
துருக்கியில் டப்பிங் செய்திருந்தது. சப்டைட்டில் கூட இல்லை.



கதைக்களன் சதாமைத் தேடி அமெரிக்கப்படைகள் சுற்றும் மற்றும் அபு க்ரைப்
சிறையில் இராக்கியர்களுக்கு செய்த கொடுமைகள் பற்றி பேசும் படம். படத்தில்
பெரும்பாலான இடங்களில் வசனங்கள் இல்லாதது வசதியாக இருந்தது.
முக்கியமான ராணுவ தளபதியை (பாண்டம் மம்மி படத்தில் நடித்த மாயாவிதான் இவர். இரும்புக்கை மாயாவி காமிக்ஸ் தமிழில்)போட்டுத்தள்ள மூவர் படை கிளம்புகிறது
ஒவ்வொரு முறையும் தப்புகிறார். முடிவில் ஒரு பெண்ணின் குறுவால் மூலம்
மரணம் அடைகிறார். அப்பெண் திருமணத்தின் போது நடந்த விருந்தில் புதுக்
கணவன் கொல்லப்படுகிறார்.

சுற்றிலும் வீடுகள் நடுவில் மைதானம் போன்ற இடத்தில் அனைவருக்கும் தேநீர்
கொடுக்கப்படுகிறது. மணப்பெண் உட்பட பெண்கள் வீட்டின் மேலிருந்து ஆண்கள்
நடனமாடுவதை பார்க்கிறார்கள். எல்லாரும் மகிழ்ச்சியான இரவை அனுபவித்துக்
கொண்டிருக்கும்போது அமெரிக்க படைகள் வருகிறது. ஏதோ காரணம் சொல்லி
யாரையோ தேடுகிறது. நவீன ரக துப்பாக்கியுடன் இருக்கும் ஒரு வீரருக்கு அருகில்
சிறுவன் ஒருவன் அதிசயமாக துப்பாக்கியை பார்க்கிறான். விளையாட்டு சாதனம்
என்று நினைத்து குழலில் குச்சியை விடுகிறான். அந்த வீரன் கோபப்பட்டு சிறுவனை
ஒதுக்க மீண்டும் மீண்டும் குச்சியை விடுகிறான் சிறுவன். சலிப்படை வீரன்
மூன்றாவது முறை ஒதுக்கும்போது மூன்று குண்டுகளை வரிசையாக சிறுவனின்
இதயத்தில் செலுத்துகிறான். தொடர்ச்சியான இந்த காட்சியில் துப்பாக்கியிலிருந்து
குண்டு வெளியாவதை தவிர வேறு எந்த ஒலியும் இல்லை. கூட்டத்தில் சலசலப்பு
ஏற்படுகிறது. சிறுவனின் தந்தை பதைப்புடன் ஓட அவரையும் சுடுகிறார்கள்.
மாப்பிள்ளை கதறியபடி வர அவரையும் சுடுகிறார்கள். மணப்பெண் ஓடிவர
துப்பாக்கி முனையால் ஓர் அடி அவளும் மயக்கமாகிறாள். அப்பெண் அமெரிக்க
தளபதியை பழிவாங்க குறுவாளுடன் செல்லும் காட்சிகள் பரிதாபத்தை
வரவழைக்கிறது. அதே தளபதியை கொள்ள வரும் மூவருக்கு உதவி செய்கிறாள்.
கடைசியில் மரணமடைகிறார்.

இடையில் அபுகிரைப் சித்திரவதைகள், கைதிகளை நிர்வாணமாக்கி நாயை ஏவி
விடும் காட்சிகள், அமெரிக்க நிருபரை கடத்தி தலையை சீவ முயலும் தீவிரவாதிகள்
இடம் மதகுரு ஒருவர் மீட்டு நிருபரை அனுப்புவது(உண்மைச்சம்பவம்னு நினைவு)
ஊரையே காலி செய்யும் காட்சிகள் போன்றவை மனதைப் பிசைகிறது. இது எந்த
மொழிப்படம் என்பது தெரியவில்லை. தொழில்நுட்ப நேர்த்தியைப் பார்த்தால்
இராக், அல்லது துருக்கியர் எடுத்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.
இணையத்தில் தேடியதில் படத்தின் பெயர் kurtlar vadisi என தெரிந்து கொண்டேன்.

------

நிகழவோ அல்லது நிகழவே
சாத்தியமில்லாதவற்றைத்தான்
மனம் கற்பனை கொள்கிறது.
என் கற்பனை உலகம் மெய்யாகும்
தருணத்தில் முன் நிச்சயிக்கப்பட்ட
நிகழ்வுகள் நிகழலாம்.
என் கற்பனை உலகம் வெற்றிடம்
ஆகும்போது மனம் கவலை கொள்ளலாம்.
அக்கவலைகள் தீண்டாதிருக்கவே
மனம் கற்பனைகளை மீண்டும் மீண்டும்
புனைந்தும் ஏமாற்றியும் போகிறது,
எனினும் தேவதைகளுடனான கனவுகள்
மட்டுமே மிகுந்த கிளர்வுகளை
உண்டாக்குகிறது. அவை
தன் இயக்கத்தை நிறுத்தாமல்
பயணிக்கட்டும்.

----------

இந்த வார இறுதியில் இந்தியாவுக்கு செல்கிறேன். இரண்டாண்டுகளுக்குப் பிறகு
முதல் பயணம். மகிழ்ச்சியாக உணர்கிறேன். சகோதரரின் திருமணத்திற்காக
அவசர பயணம். நண்பர்கள் அனைவரையும் சந்திக்க ஆவல். சந்திப்புகள்
இருந்தால் தெரியப்படுத்தவும். தொடர்பு கொள்ள 9944111050.

Sunday, January 13, 2008

எறும்புகளின் வாக்குமூலம்.



எறும்புகளில் ஏழாயிரத்து முந்நூற்று அறுபத்து நான்கு வகைகள் உள்ளது என
டிஸ்கவரி சேனலில் சேனலில் அறிமுகத்தோடு உங்களுக்கு அறிமுகப்படுத்தும்
நிகழ்ச்சி அல்ல இது. மாறாக உங்களுக்கு தெரிந்த, அல்லது உங்களை கடித்த
எறும்புகளின் குறிப்பாக இது அமையும் என்பது எங்கள் கருத்து. எந்த ஒரு முன்
முடிவுகளுக்கும் வந்துவிடாதீர்கள், ஆனால் சில குறிப்புகள் உங்கள் ஆழ்
மனதை பிரதிபலிப்பதாகவும் அமையலாம் ஆகவே சிறு அசுவாரசியத்தோடு
இதை படிக்க ஆரம்பித்தேயேர்களானால் எனக்கு கொஞ்சம் உதவியாக இருக்கும்.
இது ஆராய்ச்சிக்கட்டுரையின் நோக்கத்தோடு எழுதப்பட்டதன்று. ஆகாவேதான்
இத்தனை மன்றாடல்கள்.

அனேக சமயங்களில் நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போதோ, அல்லது
சுவாரசியமான சில சமயங்களிலோ சில எறும்புகள் உங்களைக் கடித்திருக்க
கூடும் நீங்களும் அனாயசமாக உங்களின் இடக்கை சுட்டு விரலால் அதை
நசுக்கி வெற்றிச் சிசிப்பு சிரித்தபடி உங்கள் அடுத்த கண சுவாரசிங்களில்
ஈடுப்பட்டிருக்கலாம். அப்படி உங்களால் சாகடிப்பப் பட்ட எறும்பு எதைத்
தேடி வந்ததென்று உங்களில் ஒருவர் யோசித்திருக்கிறீர்களா? அதைப் பற்றி
யோசித்ததனால் வந்ததுதான் இது. முன்பே சொன்னது போல நீங்கள்
ஆச்சரியப்படும் வகையில் இங்கே ஒன்றும் இல்லை என்பதை உங்களின்
தாழ்வான கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.


சாரணர் இயக்கம் கூட எங்களிமிருந்து கற்றுக்கு கொண்டதுதான் என அறிவியல்
பூர்வமாக நம்புங்கள். என்னவர்களின் முன்னோர்கள்தான் யுகம் யுகமாக பாம்புகளுக்கு
வசிப்பிடம் தயாரிக்கிறார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா? மாட்டீர்கள்,
எங்களிடம் சுரக்கும் உன்னத வாசனைதான் எங்களை விரட்டுகிறது. நாங்கள் கட்டும்
புற்றுக்களே எங்கள் வாழ்விடங்களாக இல்லாமல் போகும் சோகம் முன்
எப்போதோ எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.

உங்கள் வீட்டில் கோழி வளர்த்திருக்கிறீர்களா? வளர்த்திருந்தீர்கள் என்றால்
கோழிக்குஞ்சுகளுக்கு செல்லை இட்டிருப்பீர்கள். கழுத்தின் அடியில் அந்த
செல்கள் உருள்வதை உங்கள் கைகளால் தடவி உணர்ந்திருப்பீர்கள். அவையும்
எங்கள் வழித்தோன்றல்களே. உங்கள் வீட்டில் இனிப்பு பொருள்களை மூடி
வைப்பது எங்களைப் போன்ற நாசக்காரர்களால்தான் எங்களால் உங்களுக்கு
பெரிய இழப்பொன்றுமில்லை. ஆனால் மனிதருள் கோடியிலும் சிறிய உருவமான
எங்களைக் கண்டு உங்களுக்கு இளப்பம், மேலும் எங்களின் எண்ணிக்கையைக்
கண்டு உங்களுக்கு பயமாக இருக்கக் கூடும்.

உங்கள் வீட்டின் பருப்பும், சர்க்கரையும், எள்ளும் இன்ன பிற தானியங்களையும்
நாங்கள்தான் கொள்ளையடிக்கிறோம். வேண்டுமானால் இதை வெள்ளைத் தாளில்
எழுதிக் கொள்ளுங்கள். எழுதும் முன்பு ஏன் கொள்ளையடிக்கிறோம் என்று நீங்கள்
யோசிதிருக்கிறீர்களா? இல்லையென்றால் சொல்கிறேன். எங்கள் ராணியின் கட்டளைக்கு
ஏற்ப மழைக்கால சேமிப்பு கிடங்குகளுக்கே உங்கள் தானியங்கள் கடத்தப்படுகின்றன.
கமிஷன் வைத்து அலசினால் கூட எவ்வளவு காணாமல் போனது என்பதை கண்டு
பிடிக்க முடியாமல் போகும் அளவைத்தான் நாங்கள் உருட்டிச் செல்கிறோம்.
வழியில் தென்படும் ஒன்றிரண்டு உறும்புகளை நீங்கள் கொல்வதால் எங்களுக்கு
ஏராளமான தகவல்கள் வந்து சேராமல் போகின்றன, மேலும் அவ்வெறும்புகள்
என்னவாயின என்பதை தேட சிறு படையை அனுப்புகிறோம். உங்களைக்
காட்டிலும் அற்பமான உயிரினம் நாங்கள். அடுத்தமுறை எங்கள் படையினத்தின்
இடையூறுகளை மன்னித்து விடுங்கள், உங்கள் பலம்பொருந்திய மூச்சுக் காற்றினால்
ஊதுவீர்களேயானால் நாங்கள் பறந்து விடுவோம். தயவு செய்து நசுக்கியோ
தேய்த்தோ விடாதீர்கள்.

கொசுக்களைப் போல ஈனத்தனமான சத்தமிட்டோ அல்லது ஈக்களைப் போல
ரீங்காரமிட்டோ உங்களின் மகிழ்ச்சியை கெடுப்பதில்லை என்பதை நீங்கள்
நினைவு கொள்ளவேண்டும். உங்கள் வீட்டினில் கூட சுவரோரமாகவோ அல்லது
சுவற்றின் மேலோதான் எங்களின் படை அணிவகுத்துச் செல்லும் அவை
எல்லாமே தத்தமக்கு இட்ட கட்டளைகளின் போக்குக்கு செல்கின்றன அடுத்த
முறை கவனிக்கும்போது அவற்றை கலைத்து விடாதீர்கள். எங்களில் சில வகை
எறும்புகள் உங்களை கடித்து துன்புறுத்தியிருக்கலாம் அதை ஒப்புக் கொள்கிறோம்.
ஆனால் அது திட்டமிட்ட செயல் அல்ல என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள
வேண்டும். எதிர்ப்படும் உணவுப்பொருளின் சுவையறியவே அப்படி செய்கிறோம்.
எங்களுக்கு வாசனைதான் இயற்கை மூலமாக அறியப்பட்டதே தவிர
அதன் சுவை எங்களுக்கு தெரியாதது.

எங்கள் இன எறும்புகளில் கறுப்பு நிறத்திலும் உருவத்திலும் சிறியதாக இருக்கும்
இனங்களை நீங்கள் சாமி எறும்பு என்கிறீர்கள். கடிக்கும் எறும்புகளுக்கு என்ன
பெயர் என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று தெரியாது. என்னது? சித்தெறும்பு
என்னை கடிக்குது என்று பாட்டு கூட எழுதி இருக்கிறீர்களா? சரிதான் எங்களைக்
காட்டிலும் உருவத்திலும், கொடுக்கிலும் பெரிது வாய்க்கப்பெற்ற எறும்பைத்தான்
சொல்கிறீர்கள். ஆம் அவைகளுக்கு பற்கள் கொஞ்சம் நீளம்தான் அவைதான்
உங்களை துன்புறுத்துகின்றன என்றால் எங்களின் ராணி எறும்புக்கு ஒரு தகவலை
அனுப்பி விடுகிறோம். அவைகள் இனி எந்த யுகத்திலும் உங்களை துன்புறுத்தாது.
சித்தெறும்பு பற்றி பாடியதாக அறிந்தைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். அதே
சமயம் இன்னொன்றையும் உங்களுக்கு சொல்ல விருப்பம். எங்களின் ஆதிகால
முன்னோர்கள்தான் சித்தெறும்பை விட பன்மடங்கு பெரிதான உருவத்தில்
இருந்தார்கள். அவை கொட்டினால் நீங்கள் உடனடி மரணம் அடைவீர்கள்.
இன்றும் அடர்வனங்களின் ஏதாவதொரு மரப்பட்டையின் உள்ளே என் மூதாதையர்
வசித்திருக்க வாய்ப்புள்ளது. அதைப்பற்றிய கவலை வேண்டாம். அவை இப்போது
தன் வீரியம் இழந்திருக்கக் கூடும். ஒருவேளை வீரியமுள்ள எறும்பு கொட்டினால்
கூட உங்களின் மிஞ்சியிருக்கும் சுவடிகளில் ஏதாவதொன்றின் மூலையில் நிவாரண
குறிப்புகள் இருக்கக்கூடும். என்னது அலோபதி மருத்துவம் பார்க்கிறீர்களா?
கவலைப்படாதீர்கள் இயல்பாகவே நீங்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் இதன் பாதிப்பு
அதிகம் தெரியாது. எங்களின் சுபாவம் இரத்த ஓட்டத்தில் கலப்பதல்ல. எனவே
நீங்கள் தைரியம் கொள்ளலாம். இதனால் அதிர்ச்சி கொள்ள வேண்டால் அவ்வினம்
அழிந்துதான் நாங்கள் இவ்வுறு பெற்றோம். உங்களுடன் பல நூற்றாண்டு காலம்
வாழ்ந்தாயிற்று.

குழந்தைகளை கடித்ததால்தான் எங்கள் இனங்கள் மீது தாய்மார்கள் கடுஞ்சினம்
கொண்டுள்ளதாக தாமதமாக அறியப்பெற்றோம் ஆகவே ஒரு சுற்றறிக்கையும்
கூடவே மிருதுவான பொருள் எவற்றின் மீது உங்களின் பிரயோகம் இருக்க
வேண்டாம் என சுற்றரிக்கையும் அனுப்பினோம். இனி உங்கள் குழந்தை அழுதால்
இடுக்குகளில் எறும்பு கடித்திருக்கிறதா என தேடவேண்டாம் அவை பாலுக்காக
கூட அழலாம். எங்களுக்கும் கல்வியறிவு புகட்டி விட்டீர்களானால் நாங்களும்
பகுத்தறிந்து எங்கு எது உள்ளது என தேடிப்பெற்றுக்கொள்வோம்.

எங்களின் குரல்கள் உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்துபவனாக இருக்கும் என்று
நினைக்கிறேன். அதனால் ஒரு சுவாரசியமான சம்பவம் சொல்கிறேன். எங்களின்
கிழக்குப் பகுதி வீட்டில் ஒரு தனியன் வசிக்கிறான். காலையில் காபியும் மாலையில்
ஏதோ ஒரு திரவத்தையும் உட்கொண்டு உயிர்வாழ்பவன். அந்த பகுதியில் இருந்து
எங்களுக்கு வரும் தகவல்கள் வினோதமானவை. காலையில் அணிவகுத்துச்செல்லும்
எறும்புகள் சர்க்கரைத்துகள்களை சேகரித்தும் மாலையில் அணிவகுத்துச்செல்லும்
எறும்புகள் மடிந்துபாதியும் சித்தம் கலங்கி மீதியும் வருகின்றன
. எங்களுக்கு பெரிய
ஆச்சரியம். கமிட்டி அமைத்து விசாரித்து பார்த்ததில் அவன் காபியையும் மதுவையும்
ஒரே கோப்பையில் குடிப்பவனாக இருக்கிறான். அந்தநாள் முதல் எங்கள் இனங்களுக்கு
மது சம்பந்தப்பட்ட வாசனையை பிறித்தறிய விசேஷ பயிற்சிகள் கொடுத்து பழக்கினோம்.
இதனால் எங்களுக்கு ஏராளமான வீரர்கள் விரயமாகாமல் இருப்பது பின்பு ஒரு
எண்ணிக்கை கணக்கெடுப்பில் கண்டுபிடித்தோம்.

இன்று நவீன முறைகளில் எங்களை ஒழிக்க பல கருவிகள் வந்து விட்டன. பல
நிறுவனங்கள் கூட எங்களை நம்பி முதலீடு செய்திருப்பதாக அறிந்தோம். மகிழ்ச்சி.
அவர்கள் தற்காலிகமாக எங்களை ஒழிக்கவே சாதனம் கண்டுபிடித்துள்ளார்கள்
அவர்களால் உங்களுக்கு பூரணத்துவ விடுதலை கொடுக்க வாய்ப்பில்லை.
வேண்டுமானால் எங்களிடம் கேளுங்கள் நாங்கள் சொல்கிறோம்.

மொக்கைகளின் தந்தை செந்தழலாருக்கு சமர்ப்பணம்.

மொக்கை போட அழைத்த சத்யாவுக்கு என்னுடைய வருத்தங்கள். :)

Monday, January 07, 2008

குளிர், குமரிகள், குழந்தைகள்

குளிர்காலத்திற்கும் பெண்களுக்கும் ஏதோ ஒரு ஆதியோடந்தமாய் தொடர்பிருப்பதாக
நினைப்பதுண்டு. குளிர்காலத்தில் ஏற்படும் நிகழ்வுகள் வெகுகாலத்திற்கு நினைவை
விட்டு அகலாமல் இருப்பதும் காரணம். ஒரு குளிர் காலத்தில்தான்
திருவண்ணாமலைக்கு பக்கத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் பணிமாற்றம்
செய்யப்பட்டார் என் தந்தை. எங்களுக்குள் பெரிய இடைவெளி எப்போதுமே
சூழ்ந்திருக்கும் அது விவரம் தெரிந்த நாள் முதலே உண்டானது அதை மாற்றிவிட
அவருக்கும் தோன்றவில்லை எனக்கும் தோன்றவில்லை.

கல்லூரியில் என் திறமையைக்கண்டு வியந்து "வந்தால் உன் பெற்றோருடன் வா"
என்று அனுப்பி இருந்தார்கள். பனி நிறைந்த இரவில் பேருந்து ஏறி அவரைக்
காண புறப்பட்டேன் விடியல்காலையில் நான்கு மணி சுமாருக்கு கதவைத்
தட்டி உள்ளே அறைக்கு சென்றேன்.என் பேச்சுலர் அறைக்கும் அவர்
அறைக்கும் பெரிய வித்தியாசங்கள் ஏதுமில்லை. வெளியே சென்று டீ வாங்கி
வந்தார். குளிக்க வெந்நீர் போட்டு தந்து பக்கத்திலுள்ள கோவிலுக்கு கூட்டிச்
சென்றார். இருள்கவிழ்ந்த கோயிலில் இருவருமாக உள்நுழைந்தோம்.

எங்களைத்தவிர யாரும் அந்த அதிகாலையில் வரவில்லை. கண்கள் மூடியபடி
வெகுநேரம் நின்றிருந்தார் நானும் சிறிதுநேரம் கண்கள் மூடி இருந்தேன். கண்
திறந்தபோது என் எதிரே ஒரு தாவணி அணிந்த பெண்ணும் அவளுக்குப்பின்னே
அவளது அம்மா, அப்பா, அண்ணன் தம்பிகள் என ஒரு படை சூழ வந்தாள்
அவளுக்குத்தான் பிறந்தநாளாக இருக்கக்கூடும், சற்றுமுன் அய்யர் மந்திரம்
சொல்லுமுன் ஏதோ ஒரு பெயரை கேட்ட ஞாபகம் அந்த நேரத்தில் பெயர்
முக்கியமல்ல என எண்ணி அவள் பின்னே பிரகாரச்சுற்றுக்குள் சென்று விட்டேன்
இரண்டாவது சுற்று வரும்போதுதான் அப்பா என்னையே முறைப்பது தெரிந்தது
மூன்றாவது சுற்றின் முடிவில் அனைவரும் வாசலுக்கு பக்கத்தில் உட்கார்ந்து
பேசிக்கொண்டு இருந்தார்கள். என் வயதோ என்னை விட ஒன்றிரண்டு வயதோ
அதிகமிருக்கலாம் அவளுக்கு. எதுவும் பேசாமல் அப்பாவின் பக்கத்தில் போய்
நின்றேன் ஏற்கனவே வைத்திருந்த விபூதியின் கீழ் குங்குமத்தை வைத்தார்.
பிறகு கார் ஏறி அந்த குடும்பம் பறந்து போனது. விடுமுறை எடுக்க முடியாத
காரணத்தால் முதல்வருக்கு கடிதம் எழுதி உறையுனுள் வைத்து தந்தார்.
அவள் முகம் கொஞ்சம் கொஞ்சமாக என்னுள் மறக்க ஆரம்பித்தாலும் அவள்
வண்டியில் ஏறி சென்ற காட்சி இன்றும் மனதினுள் அழியாமல் இருக்கிறது.

**************************

துபாயை போல கட்டிட நெரிசல்கள் அதிகம் இல்லாத நகரம் இது, மரங்களும்
மணல்வெளிகளும் நிறைந்த இடம் இதுவாகையால் எங்குமில்லாத வாட்டிடும்
குளிர் இங்கு. ஒருநாள் மாலை காலீத் என்ற சூடானியர் அவர் வீட்டு கம்பியூட்டரில்
இன்டெர்நெட் வேலை செய்யவில்லை என்றும் வந்து சரி பண்ணி தர முடியுமா
என்றும் கேட்டுக்கொண்டார். நான்கு மாதங்களுக்கு முன்பும் இதே போல
ஏதோ பிரச்சினை என்று அவர் வீட்டிற்கு சென்றுள்ளேன். அவர் வீட்டில் அழகான்
குட்டிப்பெண் இருக்கிறாள் பெயர் ஈலாஃப் என்று ஞாபகம். அந்த குட்டி மறந்து
போயிருப்பாள் என்று நினைத்தேன். ஒரு ஆப்பிரிக்க சிறுமி என்னிடம் இவ்வளவு
அன்பு வைத்திருப்பாள் என்று நினைக்கவேயில்லை. காலீத் வீட்டில் நுழையும்போதே
Mr.கதிர் என்றபடியே ஓடிவந்து கைகொடுத்தாள் வாழ்வின் மிக நெகிழ்ச்சியான
தருணம் அது. அவளின் நினைவாற்றலைக் கண்டு வியந்து போனேன்.

கம்ப்யூட்டரை சரி செய்த பின்னர் நான் தங்கியிருக்கும் இடத்துக்கே என்னை
கொண்டு வந்து விட காரை எடுத்தார் காலீத்.எடுக்கும்போது யாரோ காரின்
கதவை தட்டும் சத்தம் கண்ணாடி வழியே யாரும் தெரியவில்லை. கதவை
திறந்தால் ஈலாஃப் நிற்கிறாள். அவளையும் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு
புறப்பட்டோம். வழிநெடுக நிறைய பேசினேன் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை
அரபியை தவிர வேறெதுவும் தெரியாது, பள்ளியில் இன்னும் சேர்க்கவில்லையாம்.
நடு நடுவே அவள் பேசியது ஒன்றும் எனக்கு புரியவில்லை. நான் இறங்கும்
இடம் வந்ததும் தன் சிறிய உதடுகளை குவித்து கன்னத்தில் முத்தமிட்டாள்
ஈலாஃப் நான் பெற்ற முத்தங்களில் மிகச்சிறந்த முத்தம் அது. பனித்துண்டங்களை
ஒன்று சேர்த்து உதடு வடிவத்தில் செய்து பின் கன்னத்தில் ஒற்றியெடுத்ததுபோல.
காரின் பின் கண்ணாடி வழியே கையை அசைத்து போவது மங்களான பனியின்
புள்ளிகளுக்கு இடையே தெரிந்தது. நான் ஓவியனா இருந்தால் அந்தக்காட்சியை
வரைந்து வைத்து பின்னாளின் பார்த்து நினைவுகூர்ந்து கொள்ளலாம் என்று
தோன்றியது.

***************************

காதலை சொல்ல குளிர்கால காலைகள் உகந்ததல்ல என்பது அவளிடம் காதலை
சொன்னபோதுதான் தெரிந்தது. தினமும் காலையில் கோபால் நாயுடுவின் மரம்
போன்ற செம்பருத்திச்செடியில் பூக்கள் பறிப்பாள். முதல் நாள் பார்ப்பதுபோலவே
எல்லா நாளும் தோன்றிய நாட்கள் அவை. பள்ளியின் இறுதி பருவத்தின் இருந்த
காலம் அதுவாதலால் நயமாக என் ஆசையை தெரிவிக்க இயலாதவனாகிவிட்டேன்.
என்னை மறுத்தவள் நம் சரக்கல்ல என்று தோன்றியதால் காலப்போக்கில் அவளை
காதலித்ததிற்கான தடயங்கள் என் மனத்தில் அழிந்து போயிருந்தது. ஒரு குளிர்கால
அதிகாலை, திருச்சிக்கு போகும் வழியில் ஒரு கிராமத்து பேருந்து நிறுத்த
நிழற்குடையின் அருகில் முகப்பொலிவுகள் இழந்த ஒரு பெண் இரு குழந்தைகளுடன்
நின்றிருந்தாள். அவளேதான் முப்பது வயதை தாண்டியது போல அம்முகம்
மாறிவிட்டிருந்தது. பேருந்திலிருந்து இறங்கி அடுத்த பேருந்தில் வந்தடைந்தேன்.
நிழற்குடையில் பார்த்த அந்த பத்து நொடிகளை மறந்துவிடு என்றும், பூப்பறிக்கும்
அவள் முகத்தை மட்டும் நினைவடுக்குகளில் பதியவும் போராடி இரண்டுமே
இன்றுவரை என் நினைவில் இரண்டுமே நிலைத்திருக்கிறது.

*******************************

ஒரு குளிர்கால அதிகாலையில்தான் பள்ளியில் இருந்து தொலைவில் உள்ள கோமுகி
அணைக்கரை தாவடியம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்றான் என் நெருங்கிய
நண்பன். இன்றும் தெளிவாக நியாபகம் இருக்கிறது அது மலைப்பிரதேசத்தின்
அடிவாரத்தில் அமைந்த அம்மன் கோயில் அதன் நான்குபுறமும் பிரம்மாண்டமான
மூங்கில் மரங்கள் அடர்ந்து பெரிய வனம் போல காட்சி அளித்தது. இங்கு தினமும்
வந்து சாமி கும்பிடுவாள் என்றும் சொன்னான். மேலும் இன்று தன் காதலை
வெளிப்படுத்த போவதாகவும் சொன்னான். அவனை விட இரண்டு வயது மூத்தவள்
அவள், பத்தாவது தவறி இரண்டாண்டுகள் கழித்து தேறியவள். வழக்கமான கிராமத்து
பெண் அவள். நாசூக்கான மறுப்புகள் சொல்லத்தெரியாதவள். என்னவோ புணரத்தான்
அழைத்தது போல அவள் ஆர்ப்பாட்டம் செய்து செருப்பை நீட்டிவிட்டாள். மறுநாள்
குளிர்பிரிந்த காலையில் வயலின் நடுவே இருந்த மரத்தில் தொங்கிவிட்டான்.
இதிலென்ன அவமானம் இருக்கிறதென தெரியவில்லை.

********************************

அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்த்து ரசித்த பெண்ணொருத்தி குளிர் கால
விடியலில் என்னிடம் லிப்ட் கேட்டாள். அந்த நிகழ்வு எனக்கு சுவாரசியமானது.
ஒரு குளிர்காலத்தின் விடியலிள் அவள் பள்ளித்தோழிகளுடன் நடந்து
வந்துகொண்டிருந்தாள் உடன் இருவர் இருந்தனர். அப்போதுதான் புதிதாக சுசுகி வாங்கியிருந்தார்கள். யாருமில்லாத சாலையில் ஓட்டிப்பழக எடுத்துச்சென்றேன்.
பத்திருபது கிராமங்களை அணைத்து போகும் அந்த சாலை பல வளைவுகளை
கொண்டது. தோழிகளுடன் வந்துகொண்டிருந்தவள். ஏதோ உற்சாக மிகுதியில்
லிப்ட் கிடைக்குமா என்று கத்தி விட்டாள். சற்று தூரம் கடந்திருந்த நான் வண்டியை திருப்பினேன்.

அவளை நெருங்கியவுடன் அவள் இரண்டு தோழிகளுக்குப்பின் முகம்
மறைத்துக்கொண்டாள் சும்மா விளையாட்டுக்கு கேட்டேன், மன்னிச்சிடுங்க என்று
சொன்னாள். சிரித்துக்கொண்டே கிளம்பினேன். பிறகு பேருந்திலோ, கடைத்தெருவிலோ, தெருவை கடக்கையிலோ சின்னவெட்கத்துடன் கூடிய புன்னகையை உதிர்த்து முகம்
மறைக்க இடம் தேடுவாள்.

********************************

ஒரு குளிர்கால இரவில்தான் எங்கள் ஊரில் உள்ள கூந்தல் நீளமான பெண்ணொருத்தி
ஒன்பதாவது பெயிலானாள் என்று தீக்குளித்துக்கொண்டாள். அவளின் கூந்தல் எனக்கு
மிகவும் பிடித்தமான ஒன்று. இங்கே கூந்தல் நீளமான கேரளத்து சேச்சிகளை காணும்
போதெல்லாம் முத்துலஷ்மி என்ற அப்பெண்ணின் நினைவு வரும். பெயிலானதுக்கெல்லாம்
தீக்குளிக்க ஆரம்பித்தால் நான் பதினெட்டுக்கும் அதிகமான முறை தீக்குளிக்க வேண்டும்.

*******************************

குளிர்கால அதிகாலையில்தான் என்னை வளர்த்த பாட்டி இறந்து போனாள்.

ஒரு குளிர்கால இரவில்தான் வெளித்திண்ணையில் இருந்த நாய்க்குட்டி குளிரில்
விரைத்து செத்துப் போயிருந்தது.

ஒரு குளிர் நிரம்பிய இரவில் கல்லூரி விடுதியில் படுத்திருந்த சக மாணவனுக்கு
வலிப்பு வந்தது. அதன்பிறகு வலிப்பு வரும் காட்சியை பார்த்தாலே அந்த
நண்பனும் பின் குளிர் நிரம்பிய இரவும் நியாபகம் வரும்.

ஒரு குளிர் நிரம்பிய அதிகாலையில்தான் கொடைக்கானலின் லாட்ஜ் ஒன்றில் மிக
அதிகபட்சமாக குடித்திருந்தேன்.

குளிர் நிரம்பிய இந்த இரவில்தான் பாம்பே ஜெயஸ்ரி பாடிய பாரதியின் கவிதைகளை
கேட்டுக்கொண்டிருக்கிறேன். வரும்கால குளிர் இரவுகளில் பாரதியும் பின் ஜெயாவின்
குரலும் என் நினைவுக்கு வரலாம்.

வாழ்வின் மிகுந்த மகிழ்ச்சிகளையும், அதனினும் மிகுந்த துயரங்களை இந்த
குளிர்காலம் தந்திருந்தாலும் வெயிலைப்போல அத்தனை கொடுமையாக
இருக்கவில்லை. வெயில் கால நினைவுகளுடன் பிறகு வருவேன்.
(விடமாட்டோம்ல )