எல்லையற்ற அன்பு கொள்வோம்

Tuesday, December 25, 2007

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை - நாஞ்சில் நாடன்

கதாநாயக நடிகனுக்கு படத்துக்கு மூன்று கோடி ரூபாய்
சம்பளம் தருகிறார்கள். பத்தாயிரம் ரூபாய் மாத சம்பளம்
வாங்கும் உயர்நிலை பள்ளி ஆசிரியன் அந்தத் தொகையை
ஊதியமாக பெற 300 ஆண்டுகள் பணி செய்ய வேண்டும்.
முன்னூறு நெடிய ஆண்டுகள், முப்பது பெரிய தலைமுறைகள்.
கூலிக்காரன் என்றால் ஆயிரம் ஆண்டுகள்
அழுகை வரவில்லையா உங்களுக்கு?
எனக்கு வருகிறது.
நடிகனைத் தொட்டு பார்க்க விரும்பியவர் நாம்,
நடிகையைக் கோயில் கட்டிக் கும்பிட்டவர் நாம்,
கவர்ச்சி நடிகை குடித்து மிச்சம் வைத்த எச்சில் சோடாவை
அண்டாவில் விட்டு நீர் சேர்த்து கலக்கி அரைகிளாஸ்
பத்து ரூபாய் எனப் பிரசாதம் வினியோகித்தவர் நாம்,
பச்சை குத்திக்கொள்ளவும் தீக்குளிக்கவும் செய்பவர் நாம்,
நடிகைக்கு தீண்டல் தாண்டிப்போனால்
பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்துபவர் நாம்,
மன்றங்கள் நடத்தி மாற்று மன்றத்தின்
பட்டினிக் குடலைக் கிழித்து மாலை போடுபவர் நாம்,
நம்மை நாம் என்ன பெயர் சொல்லி அழைப்பது?
ஏமாளி என்றா? மூடன் என்றா? மூர்க்கன் என்றா?
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே
வாலுடன் பிறந்த வாயப்பன் என்பதா?



நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை இத்தலைப்பே கட்டியம் கூறும்
இக்கட்டுரைத் தொகுப்பின் சாரத்தை. நான் மதிக்கும் எழுத்தாளர்களில்
முதன்மை இடம் தரும் நாஞ்சில் நாடனின் பல்வேறு தலைப்பிலான
கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். இதை நான் எழுதும்போது எனக்கும்
குற்றவுணர்ச்சியே மேலொங்கி நிற்கிறது. சத்தியமாக இந்நூலின் அறிமுக
பதிவாகவே படிப்பவர்கள் உணர வேண்டும் என்ற முனைப்பிலேதான்
ஒவ்வொரு எழுத்தையும் யோசித்து எழுத வைக்கிறது என்னை. அத்தனை
வீரியமுள்ள வீச்சு நாஞ்சில் நாடனுக்கு. ஆகவே இதை சிறுவனின்
மழைக்கால குதூகலத்தை போலவே எண்ணி வாசிக்கலாம் என்றுமே
இப்பதிவு இந்நூலின் விமர்சனமாக அமைந்து விடாது என்பதை உணர்வேன்.

இத்தனை நாள் வாழ்ந்தும் இதுவரை வாய்க்கப்பெற்ற அனுபவங்களும்
எனக்கு கற்றுத் தந்தவை யாவும் பொய்யென உணர்த்தி பயங்கொள்ள வைக்கும்
கட்டுரைகள். இக்கட்டுரை வணிக ரீதியிலான பத்திரிக்கையிலும் வரும் காலம்
இதுவாக இருந்தால் கண்டிப்பாக நம் சமூகத்தின் நிலை இன்று வேறாகயிருக்கும்.
மக்களை போகத்தில் ஆழ்த்தி மூழ்கடிக்கும் வணிக பருவ இதழ்களுக்கு மத்தியில் வாசிப்பனுபவம் உள்ளவன் இதை படிக்கும்போது மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாவான். அதைப்போலதான் நானும். ஒவ்வொருமுறை புத்தகத்தை பிரிக்கும்போதும்
குற்றம் செய்தவன் போலவே முனை மடித்து உறங்குகிறேன்.

கண்மணி குணசேகரனின் சிறுகதைகளை படித்தபோது திகைத்து போனேன்.
நம்மக்கள் சிறுகதை என்ற வடிவத்தை பேப்பர்களில் ஒருபக்க, அரை, முக்கால்,
ஒன்றரை பக்கங்களால எச்சில் படுத்தி வாசகர்களின் மீது எறிகிறார்கள்
என்று தோன்றியது.

மேற்கோல் காட்டப்பட்ட வரிகள் எனக்குள் ஏற்படுத்திய அதிர்வுகள் நிறைய.
வெந்ததை தின்று விதி வந்தால் சாவது என்ற கொள்கை மத்தியில் வாழும் மக்கள்
கூட்டத்தில் யார் வேண்டுமானாலும் தலைமை ஏறி மிதித்து வாழலாம். அப்படிப்பட்ட
சமூகத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மாற்று சிந்தனைகளுக்கும்
முயற்சிகளுக்கும் மதிப்பளிக்கும் காலம் வரும்போது எல்லாக்கதவுகளும் திறக்கும்.

படைப்பாளியின் பெயரைக் கொண்டே மொத்த படைப்பையும் எடைபோடும்
மனிதர்கள் இங்கு அனேகம். புறந்தள்ளுவதற்கும், உதாசீனப்படுத்தவும் நிறைய
காரணங்களை மடி மீதே வைத்து அலைகிறோம். தமிழில் ஏராளமான
இலக்கியவாதிகள் போலவே சர்ச்சைகளும் ஏராளம்.

தமிழ் வார்த்தைகளுக்கு அரசியல் பார்வை கொண்டு ஒதுக்கப்பட்டவையாக சில
வார்த்தைகளை கூறலாம். வழக்கொழிந்து போய்விட்ட காரணத்தினாலேயே அவை
கெட்ட வார்த்தைகளாக கற்பித்துக் கொண்டிருக்கிறோம். வெறும் அதிர்வுகளை
ஏற்படுத்த வேண்டி சேர்ப்பது அல்ல. வலியை பதிவிக்க சொந்த மொழியில்
உள்ள வார்த்தைகளை பயன்படுத்தவே இயலாத சூழல் நம் தமிழ்ச்சூழல் மட்டுமே.
அவ்வகையில் மங்கலம் குழூஉக்குறி இடக்கரடக்கல் என்ற கட்டுரையினை
தமிழ்மண சூழலில் உள்ள புனிதர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.

"மாங்கா மாங்கா ரெண்டு மாங்கா மார்க்கட்டு போகாத குண்டு மாங்கா"
என்றெழுதும் கவிச்சிற்றரசு, பேரரசு, இணையரசு, துணையரசு ஆகியோரின்
வம்சாவழியினர் எல்லாம் மாலதி மைத்ரிக்கும், குட்டி ரேவதிக்கும், சல்மாவுக்கும்,
கனிமொழிக்கும் உமா மகேஸ்வரிக்கும், க்ருஷாங்கினிக்கும், இளம்பிறைக்கும்
கவிதை எழுத பாடம் நடத்துகிறார்கள்.


கட்டுரைத் தொகுப்பு முழுவதும் எள்ளல் கலந்த கோப எழுத்துக்கள் நிறைந்து
காணப்படுகிறது ஒன்றையும் விடாது வாசிக்க வேண்டியவை. இலக்கிய அறிமுக
கொண்டவர், இல்லாதார் எவர் படைப்பையும் மிக நேர்மையாகவும் நேர்த்தியுடனும்
விமர்சித்திருக்கிறது. எல்லா இலக்கிய சர்ச்சைகளிலும் பங்கு கொண்டவராயினும்
எதிலும் நடுநிலையாக நின்று எவர்க்கும் பகையாளி என்றில்லாமல் இருக்கும்
ஒரே எழுத்தாளர்.

நாடு இவர்களுக்கு என்ன செய்யப்போகிறது என்ற கட்டுரையில் இடஒதுக்கீடு
பற்றியும் நம் கல்வி முறை பற்றியும் மிகச்சிறப்பான முறையில் எழுதியிருக்கிறார்.
"காலில் செருப்பின்றி நடப்பவன் குதிரை மீதேறி பறப்பவனுடன் போட்டியிட்டு
வெல்ல வேண்டியுள்ளது. ஸ்பார்டகஸ் போல. எத்தனை நியாயமற்றததொரு போர்?
வெறும் வார்த்தைகளை கொண்டு எழுதப்படாமல் பிரச்சினையின் ஆழம் தொடும்
அற்புதமான எழுத்து.

வாசச்சமையலும் ஊசக்கறியும் என்ற கட்டுரையில் நாஞ்சில் நாட்டு சமையல்
பற்றி மிக விரிவானதோர் கட்டுரை. வாசிக்கும்போதே பசியெடுக்கும் விதம்
அனுபவித்து எழுதியது. பசியுணர்ந்தவனுக்கு மட்டுமே ருசியின் அருமை தெரியும்
என்பது போல. தொலைக்காட்சியிலோ, முப்பது நாள் முப்பது கறி போன்ற
புத்தகங்களில் உள்ளது போல அல்ல.

நாவலாசிரியனுக்கு கட்டுரை, விமர்சன கட்டுரை என்பது தேவையில்லாத வேலை
என்கிறார்கள். பிறக்கும்போதே நாவலாசிரியனாக பிறக்கவில்லை. நாஞ்சில்
நாடனை பொருத்தவரை கட்டுரை வாசிப்பு என்பது சிறுகதை வாசிப்புக்கு
இணையான சுகத்தை தரவேண்டும். விஷயஞானம் உள்ள எவரும் எதையும்
எழுதலாம் என்கிறார். இவர் வைக்கும் வாதங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தாமல்
இல்லை மாறாக முனை மடிக்காமல் வாசிக்க தூண்டுகிறது. இலக்கிய நண்பர்களுடன்
அமர்வுகள் குறித்த கட்டுரை சுவாரசியமாக இருந்தாலும் பிற எழுத்தாளர்கள்
பற்றிய தெரிவு இல்லாததால் சலிக்க வைக்கிறது. தீவிர வாசிப்பு அனுபவம்
உள்ளவர்கள் எளிதாக புரிந்துகொள்ளலாம்.

கட்டுரை புத்தகங்கள் படிப்பதிலே இதுவரை சுணக்கம் இருந்தது. மாற்றிக்
கொள்ள வேண்டிய கருத்து இது.

எந்த வகையிலும் இப்பதிவு புத்தகத்தின் விமர்சனமாக ஆகாது. தொகுப்பின்
மொத்த சுவையையும் ஒரே பதிவில் கொண்டுவரமுடியாமைக்கு வருந்துகிறேன்.

Saturday, December 15, 2007

ரகசியத் தடங்களில் படிந்திருக்கும் மவுனங்கள்.


நான் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை.
எனக்கென்று எந்த கவலைகளும் இல்லாவிட்டாலும் கூட நீண்ட நாள் இந்த
தவறான புரிதல் சங்கடத்தை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும் போல
தோன்றியது. எங்கோ ஓர் இடத்தில் நான் அவனை கவர்ந்திருக்கலாம் ஆனால்
அந்த கணம் அவனால் மறக்க முடியாததாகவும் நான் நினைத்தேயிராத பல
மாற்றங்களை தரும் என்று நினைக்கவில்லை. வாழ்க்கையில் நான் எவற்றுக்கும்
கவலைப்பட்டதே இல்லை. எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் சில
மணித்துளிகளில் இயல்புக்கு திரும்பி விடுவதை என்னை அறிந்த நாள் முதல்
எனக்கு தெரியும். சில சமயங்களின் இதை வரமாக சிலர் கூறக்கேட்டிருக்கிறேன்.
சிலர் ஜடம் என்று சொல்லக்கேட்டிருக்கிறேன். எதுவாக இருப்பினும் நான்
நானாகவே இருந்து வருவதில் எனக்கு கர்வம் அதிகம். ஆனால் நேற்று நடந்த
சம்பவங்களும் முன் நடந்த சிறு சிறு நிகழ்வுகளும் என்னை மிகுந்த மன
உளைச்சலுக்கு தள்ளின. முன்னெப்போதும் இதுபோன்ற அவஸ்தை இருந்ததில்லை.

அவனை அலுவலகம் சேர்ந்த நாள் அன்றே கவனித்தேன். சிறு சிறு வேலைகளிலும்
நேர்த்தி தெரிந்தது. நட்பான முகம். கீழ் பணிபுரிபவர்களிடம் சாத்வீகமான முறையில்
பேசி வேலை வாங்கும் திறமை எல்லாம் அவனை மிகுந்த திறமையுள்ளவனாக
காட்டின. பாசாங்கில்லாத நேசமுகம் என்று முதல் சந்திப்பிலேயே உறுதி செய்து
கொண்டேன்.

எப்படி எங்களுக்குள் நட்பு ஆரம்பித்தது என்று நினைவில்லை. அதேபோல
எப்போது அவன் என்னை தன் துணை என்று மற்றவர்களிடம் கூற ஆரம்பித்தான்
என்றும் நினைவில்லை. அது எனக்கு தெரிய வந்தபோது சிறிதாக அதிர்ச்சி
தோன்றி மறைந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. அவன் சொல்லக்கேட்டவர்கள்
வந்து என்னிடம் சொன்னவர்களின் அறிவுரையாக "அவனிடம் பழகாதே அவன்
ஒரு மாதிரி" என்று லேசாக எச்சரித்தார்கள். என் அலுவலகத்தோழி கூட
என்னை மாறுகண் கொண்டு கண்ணடிப்பதை எவ்விதத்தில் சேர்ப்பது என்று
குழம்பிப்போனேன்.

அவனே என்னிடம் நேரில் வந்து சொல்லும்போது பதிலாக என்ன தருவது
என்பதை யோசித்தும் இருள் கவிழ்ந்த திரைகளே முன் தோன்றின. அதிக
எதிர்பார்ப்புகள்தான் இவையெல்லாவற்றுக்கும் காரணம். நட்பைத்தவிர
எவ்விதத்திலும் எனக்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை. அதேபோல அவன்
என்னிடம் எதிர்பார்ப்பது என்னவென்று புரியவில்லை.

எனக்கு அவனிடத்தில் பிடித்ததாக சில காரணங்கள் இருந்தன. அடர்ந்த மிருதுவான
படிய வாரிய கேசம், கடக்கும்போது வீசும் மெல்லிய நறுமணம். எல்லா செய்கையிலும்
தான் ஒரு நேர்த்தியாளன் ஒரு தேர்ந்த மனையாள் தன் கணவன் தேவையை முன்
கூட்டியே அறியும் வல்லமை பெற்றவள் போல முகபாவங்களை வைத்தே
வார்த்தைகளை அறியும் சக்தி அவனிடம் இருந்தது. அவனிருக்கும் இடத்தில் நிறைய
பேச்சுகள் இருக்காது. வந்த சிலநாட்களில் அவனிடமிருந்து பலரும்
இப்பயிற்சியை பெற்றிருந்தனர்.

என்னை என்னையன்றி யார் பார்த்துக்கொள்ள முடியும் என்ற வார்த்தையினை
தத்துவார்த்தமாக சொல்வதாக நினைத்துக்கொண்டு பலரிடம் பெருமையடித்துள்ளேன்.
அவ்வெண்ணத்தை தகர்த்தெறிவது போல நான் காய்ச்சலில் வீழ்ந்த நான்கு நாட்களில்
வீட்டுக்கே வந்து அத்தனை உதவிகள் செய்தபோதுதான் நட்பையும் மீறிய
ஏதோவொன்று வந்தது. நன்றி கூறவில்லை.

அதன்பிறகு எங்கள் நட்பு பலம்பெற்றது. எங்கு செல்கினும் துணை அவனே என்றாகிப்
போனது. பெரும்பாலும் சாப்பிடவோ, சாப்பிட்ட பிறகு வாக்கிங் செல்லவோ, ஆடை
வாங்கவோ என சென்றது. இதற்கிடையில் அலுவலகத்திலும், நண்பர்களுமே கூட
அவனே சொன்னதாக சொன்ன தகவல்கள்தான் என் அத்தனை ஏமாற்றங்களுக்கும்
காரணம். இது நிகழக்கூடிய ஒன்றாக நான் கற்பனை செய்யவில்லை. ஆனால் பிறர்
எச்சரித்ததனை கவனமெடுத்திருக்கலாம்.

பார்களுக்கு சென்று மதுவருந்துவதில் எனக்கு உடன்பாடில்லை தவிர ராப் இசை
ஒலிக்க பாலின பேதமின்றி ஆடும் ஆட்டம் மிகுந்த தலைவலியை கொடுப்பதாகவும்
மூன்றாவது முறை சென்ற போது உணர்ந்தேன். ஆகவே அவனை வீட்டிற்கு
அழைத்தேன். மிக நிறைய பேசினோம் என்பதை விட அதிகமாக குடித்தோம்
என்பதுதான் சரி. மிதமிஞ்சிய போதையில் உன் நட்பு எனக்கு சமீப கால
சந்தோஷங்களில் ஒன்று என்றான். பிரியும்போது என் உதடுகளில்
அழுந்த முத்தமிட்டான்.



அன்றே எனக்கு தெளிவாக புரிந்துவிட்டது. இவ்வித உறவில் தவறோ, சரியோ என்ற
விவாதத்தில் போகாமல் இதை நான் விரும்பவில்லை என்பதை அவனிடம் நான்
மிகுந்த கவனத்தோடு சொல்லவேண்டும். இதில் பரிகாசங்களுடனான வார்த்தைகள்
வந்து விழுந்து விடக்கூடாது என்று எனக்குள்ளே பல குறிப்புகள் எடுக்க துவங்கினேன்.
பிறர் நிராகரிப்பின் வலியைப்போல என்னுடைய விளக்கமும் அவனுக்கு அமைந்து
விடக்கூடாது என்பதை அடிக்கடி எனக்குள் சொல்லிக்கொண்டேன். பழையபடியிலான
நட்பை தொடரமுடியும் என்ற குழந்தைத்தனமான நம்பிக்கை மீது இப்போது எனக்கு
ஆச்சரியமாக இருக்கிறது.

ஒருநாள் அவனுடன் காபி சாப்பிடும்போது முத்தத்தை பற்றியும் அவன் தவறான
புரிதலைப் பற்றியும் மனக்குறிப்புகளின்படி வார்த்தைகளாக்கிக் கொண்டிருந்தேன்.
திடீரென எழுந்தவன் காபியை முகத்தில் எறிந்து விட்டு கெட்ட வார்த்தையொன்றை
உதிர்த்து விட்டுச்சென்றான். அவனின் ஏமாற்ற முகத்தை அன்று காண நேர்ந்தது.

அரசு உத்தியோகத்திற்காக மனுக்கள் எழுதிப்போட்டு வீட்டிலிருந்த காலம் அது.
தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியான சாலைவசதியை சிரமேற்படுத்தி
செய்துகொண்டிருந்தார் கனத்த முதலீடு செய்த எம்.எல்.ஏ. சாக்குப்பைகளும், டயர்
கால்களுமாக பலர் வேலையில் ஈடுபட்டிருந்தனர். ரோடு ரோலரில் தார் ஒட்டிவிடாமல்
இருக்க அதன் மீது தண்ணீரை ஊற்றியபடி வந்துகொண்டிருந்தாள் பெண்ணொருத்தி.
அவள் உடலுக்கு சற்றும் பொருந்தவில்லை அந்த புடவை. வேலையின் காரணமாக
உடல் கட்டித்துப் போயிருக்கலாம். கவனமின்றி பள்ளி நண்பனுடன் கடக்கையில்...

சேகர் அது நம்ம கூட படிச்ச வேலாயுதம் மாதிரி இல்ல? என்றேன். சேகர் எதையும்
கவனிக்காதது போல நடந்து கொண்டிருந்தான். அவனிடம் கேட்கவில்லை என்பது
போல முகத்தை எங்கோ செலுத்தி இருப்பதை கவனித்து விட்டு மீண்டும் அந்த
சேலைப்பெண்ணை பார்த்தேன்.

"கண்டிப்பாக என்னால் சொல்ல முடியும் அது வேலாயுதம்தான். என்னைப் பார்த்த
அவள் கண்களில் என்னால் உணர முடிந்தது. அவனின் கண்கள் மிக விசேஷமானவை
எதையோ எதிர்பார்க்கும் அவை. ஒரே வித்தியாசம் அவன் கண்கள் அவள் கண்களாகி
எனக்கு அந்நியப்படுத்தியது. நான், வாத்தியார் உட்பட ஏகப்பட்ட கிண்டல்கள்,
கேலிகளால் ஒன்பதாவதோடு நின்று போனான். பிறகு இப்போதுதான்
சேலை கட்டி பார்க்கிறேன்.

"தண்ணிய ஊத்துடா அங்க என்ன அவன மொறச்சி பாத்துகிட்டு இருக்க? அவன்
என்ன ஒம்மாமனா? என்றபடி அவளை ஏசினான் எம்.எல்.ஏ.

ரோலர் சத்ததையும் மீறி தட தடவென சிரித்தனர்.

திடுக்கிட்டவள் வெடுக்கென்று கழுத்தை வெட்டி இழுத்து "ம்ஹீம்" என்ற முனகலோடு
தண்ணீரை ரோலரில் ஊற்ற ஆரம்பித்தாள்.

எதற்கு இப்போது வேலாயுதம் முகம் நினைவுக்கு வந்தது என்று தெரியவில்லை.
காபித்தண்ணீர் முகத்தில் பிசுபிசுத்து என் முகம் மிகவும் விகாரமாகி விட்டதைப்
போல உணர்ந்தேன் துடைக்க மனமின்றி.

சர்வேசர் போட்டிக்காக

Friday, December 14, 2007

நீயா? நானா?

நம்ம பய ஒருத்தன் தினமும் போன் பண்ணி அரை மணி நேரமாச்சும்
பேசாம இருக்க மாட்டான். திடீர்னு ஒரு மூணு நாள் போன் பண்ணல.
எங்கிட்டாச்சும் எக்குதப்பா பேசி போலீஸ்ல மாட்டிகிட்டானா. இல்ல
ஒரேடியா பார்சல் பண்ணிட்டாங்களான்னு தெரிஞ்சிக்கலாம்னு ஒரு
நண்பனா ஆர்வம். அதனால ஆபிஸ்கு போன போட்டேன்.

ஹலோ கேன் இ ஸ்பீக் டூ கோபிநாத்?

விச் கோபிநாத் யூ வாண்ட் சார்!

ம்ம்... ஜஸ்டிஸ் கோபிநாத். எப்ப போன் பண்ணாலும் இவனுங்களே போன்
அட்டெண்ட் பண்றானுங்க. இந்த அரபுநாட்டுல போன் அட்டெண் பண்றதுக்குன்னே
பிறந்தவங்கன்னு பேரெடுத்த பிலிப்பைன்காரிகள போடாம ஏன் இவனுங்கள
போடறாங்கன்னு தெரில. அதுசரி நம்ம நண்பன் வேல செய்ற கம்பெனி
அது எப்படி உருப்படும்.

அவர் மூணு நாளா சிக் லீவ்ல இருக்கார்னு பதில் வந்தது.

படுபாவி உடம்பு சரியில்லன்னு போன் பண்ணி சொன்னா என்னவாம்னு
ஸ்ட்ரெய்ட்டா துரைக்கே போன் பண்ணேன்.

தம்பி: என்னப்பா உடம்பு சரியில்லயாமே? எனக்கு உடம்பு சரியில்லன்னு போன்
சொல்றதுக்கு என்ன?

கோபி: "ஆமாண்டா எனக்கு உடம்பு சரியில்லன்னு நானே உங்களுக்கு
போன் பண்ணி சொல்லணுமா?"

தம்பி: "ஏன் அதுக்கு வேற யாராச்சும் ஆள் வெச்சிருக்கியா?தமிழ்மணத்துல அதிக
நேரம் குடியிருக்காதன்னு சொன்னா கேட்டாதான! இப்ப பாரு உனக்கு
காய்ச்சல் வந்துடுச்சி.

கோ: இப்பல்லாம் நான் தமிழ்மணம் அதிகமா படிக்கறதுல்ல.

த: ஏன் சாமி,? நிறைய இலக்கிய கட்டுரைகள் வர்றதுல்லன்னு உனக்கும்
வருத்தமா?

கோ: அட அதுல்லப்பா மேட்டரு. முதல்ல எல்லாம் தரமான மொக்கைப்பதிவர்கள்
இருந்ததுனாலயும், சுவாரசியமான பதிவுகள் நிறைய வந்துகிட்டு இருந்ததினாலயும்
தமிழ்மணம் நல்லா இருந்துச்சு. இப்ப வர்றவங்களுக்கு மொக்கையே போட
வரல, எல்லாமே சக்கையா இருக்கு. நல்லாவும் எழுத வரல. நம்ம ஐஎஸ்ஓ
மொக்கை செந்தழலார் கூட இல்லாதது பெரும் இழப்பு. அதுவுமில்லாம நல்ல
பதிவுகள தேடி புடிச்சி படிக்கறதுக்குள்ள கண்ணு பூத்து போயிடுது. ஒன்றிரண்டு
பதிவுக்காக நாம நாள் பூரா அலைஞ்சி தேடியும் கிடைக்கலன்னா ஏமாற்றமாகிடுது.
அதனால அந்த பக்கம் போக்குவரத்து கம்மி பண்ணி என்னோட கவனத்தை
குமுதம், விகடன், வண்ணத்திரைன்னு போக ஆரம்பிச்சிட்டேன். அங்க இதவிட
நல்லா மொக்க போடறாங்கப்பா!

த: என்னலே வர வர ஒனக்கு எலக்கிய தாகம் அதிகமாயிடுச்சி. நம்ம தினமணி
புகழ் சரவணர் கூட நல்லா மொக்கை போடறாரே! அதையும் பாக்கறதில்லயா
நீயி?

கோ: அது என்ன தினமணி புகழ்?

த: அதான்யா இந்த ஆவி புகழ், தினமலர் புகழ், குமுதம் புகழ், அந்த மாதிரி.

கோ: ஓஹ் அப்படி சொல்றியா! இத அவரே சொன்னாரா? இல்ல நீயே சொல்றியா?

த: இத பத்திரிக்கை அடிச்சே சொல்லியாச்சு. அந்த மேட்டர விடு, பருவ மழை
பொய்த்தாலும் மாசத்துக்கு ஒரு பதிவு கண்டிப்பா உன்கிட்டருந்து வரும்.
உலகமே எதிர் பாத்துட்டு இருக்கற பதிவ எப்ப போட போற?

கோ: மவனே உனக்கு ஓவர் நக்கலாகிபோச்சுடா! நானும் எதையாச்சும் எழுதி
என்னோட ரசிகர்கள திருதிபடுத்தலாம்னு பாக்கறேன் எதுவுமே தோண
மாட்டேங்குது நீதான் எதாச்சும் ஒரு ஐடியா கொடேன்.

த: இப்படி கேட்டியே இது நியாயம். நீ தமிழ்மணத்த நல்லா மேயணும். அப்படி
மேய்ஞ்சின்னா ஒருநாளைக்கு மூணு பதிவு போடலாம். இப்ப உதாரணத்துக்கு
உன்ன மாதிரி ஆளுலாம் என்ன எழுதலாம்னு மண்டைய போட்டுகிட்டு
குழப்பிக்காம இருக்கறதுக்குதான் பிட்டு போட்டி, நஒக போட்டின்னு
வச்சி கதறடிச்சிகிட்டு இருக்காங்களே! அதுல எதுலயாச்சும் ஒண்ணுத்துல
கலந்துகிட்டு ஒருநாளைக்கு மூணு சிறுகதைகள் வீதம் எழுதினின்னா ஒரே
மாசத்துல சிறுகதை தொகுப்பே போடற அளவுக்கு பதிவுகள் வந்து
குமியும்ல, இந்த சிறுகதை எழுதறதுல எதாச்சும் டவுட்டுன்னு வந்துச்சின்னா
கோவியார்கிட்டயும், வினையூக்கி அய்யாகிட்டயும் விவரம் கேட்டுக்க
எனக்கு தெரிஞ்சு நூத்துக்கணக்கான சிறுகதைகள் எழுதுன ஆளுங்க
அவங்கதான்.

கோ: பிட்டு அடிக்கறதுக்கு போட்டி வேற வைக்கறாங்களா? அது என்ன நஒக?
எதுனாச்சிம் கெட்ட வார்த்தையா?

த: பிட்டு போட்டின்னா போட்டோ எடுத்து பதிவு போடறது. நஒகன்னா...

கோ: இரு... இரு... இரு... இந்த போட்டா புடிக்கற சமாச்சாரமெல்லாம்
நமக்கு வராதுப்பா.

த: லேய் போட்டோ எடுக்கறது பெரிய மேட்டருல்லப்பா உதாரணத்துக்கு நம்ம
குசும்பர் இருக்காரே அவங்க ஊர் உழவர் சந்தைல வாங்கின கேமரால
போட்டோ எடுத்து இதுவரைக்கும் முன்னூத்தி சொச்சம் பதிவு போட்டுட்டாரு
அதுல பாதி போட்டோ கடன் வாங்கி கோட்டு சூட்டு போட்டு எடுத்துகிட்டது.
இதுலாம் வெளில யாருக்கும் தெரியாது...

கோ: சரி அடுத்து நஒக ன்னா என்னன்னு தெளிவா சொல்லு!

த: அதுவும் ஒண்ணும் பெரிய மேட்டர் இல்ல! நச்சின்னு ஒரு கதை எழுதணும்.
அதை உன்னோட பதிவுல போட்டு நச்சின்னு லேபிள் போட்டினா நச்சு தயார்.
முக்கியமா நம்ம செல்லா அண்ணன் எழுதுவாரே அந்த மாதிரி நச்சின்னு
இருக்கணும் புரிஞ்சிதா?

கோ: என்னென்னமோ சொல்ற!

த: அப்படியும் உனக்கு பதிவு போட மேட்டருல்லன்னா பாருக்கு போய்
ரெண்டு பீர ஏத்து அப்படியே சூட்டோட சூட்டா உக்காந்து கவிதை எழுது.
அய்யனார் கவுஜ மாதிரி லெவல் பண்ணிடலாம். அதுவும் வரலன்னு வச்சிக்க
பில்லா படத்தை உல்டா பண்ணி ஒரு பல்லா, குல்லா, கல்லான்னு
தொடர்ச்சியா பதிமூணு பதிவு போடலாம். இப்பலாம் தொடர்கதை எழுதலன்னா
பதிவர்னே ஒத்துக்க மாட்டேங்கறாங்க தெரியுமா? அதுனால நாளைக்கே ஒரு
பதிவு தொடர்கதை எழுதிடு, கதைய பத்தி யோசிக்காத.

"கதை அருமை" "சூப்பர் டர்னிங் பாயிண்ட்" "முடிவை ஏற்கனவே யூகிக்க
முடிந்ததுன்னு" "சிறப்பான நடை" "வாழ்த்துக்கள்"னு எதுனாச்சும் கமெண்ட்
வந்துகிட்டே இருக்கும் நீயும் அதுக்கு பதில் பின்னூட்டம் போட்டுகிட்டே
இருக்கலாம்.

ஸ்டேட்டர் பார் கவுஜ எல்லாத்தையும் ஒரு பதிவா போடலாம். நம்ம
வைகைப்புயல் ராம் இருக்காரே ஸ்டேட்டர் பார் கவுஜை எழுதறதுல மன்னன்.
எங்கருந்தான் வார்த்தைகள புடிப்பாருன்னு தெரில. கவுஜ புரிலன்னு நீ விளக்கம்
கேட்டேன்னு வைய்யி அதுக்கு தனியா உரைநடைல அரை பக்கத்துக்கு விளக்கம்
கொடுப்பார் பாத்துக்க. அவர் எழுதுன ஹைக்கூவ படிச்சோம்னா புல் ஓல்டு மங்க
மிரிண்டாவுல கலந்து அடிச்ச மாதிரி ஒரு எபெக்ட் கிடைக்கும். அப்படியும் போர்
அடிச்சிதுன்னா ஒரு மணிக்கு ஒருமுறை புரொபைல் போட்டாவ மாத்திகிட்டே
இரு. உடனே "இந்த போட்டோ எங்க எடுத்தது?ன்னு சூப்பராருக்குன்னு
யாராச்சும் பிங் பண்ணுவாங்க.

கோ: நீ இப்படியே எல்லாத்தையும் நக்கலடிச்சிட்டு இரு ஒருநாள் உனக்கு எவனாச்சும்
ஆப்பு வைப்பான். எப்ப பாத்தாலும் தமிழ்மணம் பத்தியே பேசிட்டு இருக்க வேற
எதுனாச்சும் பேசு.

த: ஓம் ஷாந்தி ஓம் ட்ரெய்லர் பாத்தியா மச்சி? தீபிகா படுகோனேவ பாத்து நான்
படுகோணலாயிட்டேன்னா பாத்துக்க!

கோ: ஏண்டா அதுல ஷாருக்கான்னு ஒரு ஸ்டார் இருக்கறத நீ பாக்கவேல்லியா?

த: நாங்கள்லாம் அன்னப்பறவை வம்சம்டா தேவையானத மட்டும்தான் எடுத்துப்போம்.
லேட்டஸ்டா நம்ம காபி வித் அனு பாத்தேன்.
செம க்யூட்ரா அவங்க. அதுவும் அவங்க தலைய சாய்ச்சி உற்சாகத்தோட கேள்வி
கேக்கற அழகு இருக்கே சான்சே இல்ல மச்சி, கேள்வி மொக்கையா இருந்தாலும்
கேக்கற அழகுன்னு ஒண்ணு இருக்குல்ல அதான், அதத்தான் ஐ ரியலி லைக்.

கோ: பாவனா போய் அனுபுராணம் ஆரம்பிச்சிட்டியா? வேற எதுனா பேசு
இல்லன்னா போன வைய்யி இப்பதான் எனக்கு காய்ச்சல் விட்டுருக்கு.

த: சரி வேற மேட்டருக்கு வரேன். உம்பேர வச்சிகிட்டு பயங்கர புத்திசாலியா,
அழகா திறமையானவரா ஒருத்தர் இருக்காரே தெரியுமா ஒனக்கு?

கோ: இந்த பேர்ல இருக்கற எல்லாருமே ஆளப்பிறந்தவர்கள்தான், ஆமா நீ யார
சொல்ற?

த: நீயா? நானா? கோபிநாத்த சொல்றேன். நம்ம புலி பீதில போட்ட பதிவுனால
முழுசா அந்த நிகழ்ச்சிய இறக்கி பாத்தேன். உண்மைலயே இந்த மாதிரி
டாக் ஷோ நம்ம ஊருக்கு புதுசு. அதுலகூட ஒரு பொண்ணு லூசுத்தனமா
இந்த இனத்துல பொறந்ததுல ரொம்ப பெருமைப்படறேன்னு ஆரம்பிச்சி
இத்தன இன்ச்ச்ல இஞ்சினியர் மாப்ள வேணும்னு கேட்டதுலருந்து பெற்றோர்கள்
வரிசைல அமைதியா பதில் சொன்னது வரைக்கும் எல்லாமே சூப்பர்.
அதுல கூட பாத்தின்னா பெண்களுக்குதான் தனக்கு வரப்போற கணவன்
எப்படி இருக்கணும்னு அதிக எதிர்பார்ப்புகள், கனவுகள்னு இருக்கு ஆனா
நம்ம பசங்கதான் பூமிகா, மழை ஸ்ரேயான்னு வழக்கமா பதில் சொன்னாங்க.
மைக் முன் பிளிறிய அந்த பெண்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ற மாதிரி
ஆண்கள வேணும்னா அவங்களே மொத்தமா ஜப்பானின் யாமசாக்கி ரோபோ
தொழிற்சாலையில் ஆர்டர் கொடுத்துதான் செய்யணும். அந்த மாதிரி
சைஸ் வாரியா கேக்கறாங்கப்பா!

த: ஆமா உனக்கு இந்த மாதிரி எதுனா எதிர்பார்ப்பு இருக்குதா கோபி? ஏன்
கேக்கறன்னா என்னவிட ரெண்டு வயசு பெரியவன் என்னைவிட உலக
அனுபவம் உனக்கு ஜாஸ்தி அதனாலதான் கேக்கறேன்.

கோ: டேய் என்கிட்டவே லந்தா? நானே சதுரங்க குதிரை நாராயணன் வாழ்க்கை மாதிரி என் வாழ்க்கை ஆகிடுமோன்னு கவலபட்டுகிட்டு இருக்கேன்
நீ வேற வேதனைய கெளப்புற.

த: ஆனா எனக்குன்னு சில கண்டிஷன்ஸ் இருக்கு. என்னன்னு கேளேன்!

கோ:........

த: நீ கேளேன்....

கோ:........

த: சும்மா கேளேன் கோபி

கோ: நான் கேக்கலன்னா நீ சொல்லாமலா போயிட போற? சொல்லித்தொல!

த: அது... எனக்கு வர்ற பொண்ணு கண்டிப்பா படிச்சவளா இருக்க கூடாது.
கண்டிப்பா சிட்டில பொறந்து வளர்ந்துருக்க கூடாது. எதாவது ஒரு குக்கிராமத்துல,
பஸ் கூட போகாத ஊர்ல, ஈவன் பால்வண்டில போற வசதி கூட இல்லாத
ஊர்லதான் பொண்ணு எடுப்பேன். மேக்சிமம் அஞ்சாவதுதான் படிச்சிருக்கணும்.
கையெழுத்து போட தெரிஞ்சிருக்கணும் ஆனா தமிழ் படிக்க தெரிய கூடாது.
ஊர்லருந்து கடிதாசி வந்தா கூட நாந்தான் அவளுக்கு படிச்சி காமிக்கணும்.
மொதல்ல அந்த பொண்ண தாவணிலதான் பாக்கணும். உதாரணத்துக்கு ரெட்டை
வால் குருவி படத்துல மைக்மோகனுக்கு பிடிக்காத மனைவியா கம்பி ஜடை
பின்னி ஒரு நடிகை இருப்பாங்கல்ல அதே மாதிரி, இல்லன்னா தேவர்மகன் ரேவதி
மாதிரி, இல்லன்னா சின்னகவுண்டர் சுகன்யா மாதிரி இருக்கணும். ஆனா பொண்ணு
கருப்பா இருக்கணும். பின்னாடி கொசுவம் வச்ச சேலை கட்டியிருக்கணும்.....

கோ: எலேய்.. எலேய் நிறுத்து போதும். விவேக் சொன்னது சரிதான். நீ சொல்ற
மாதிரி பொண்ணு லெமூரியா கண்டத்தோட போயே போச்சு. இனிமே உன்கிட்டருந்து
போன் வந்துச்சின்னா ஆள் இல்லன்னு சொல்லி வச்சிடறேன்.
என்னால முடியாதுடா சாமி.

Monday, December 10, 2007

டேய் இன்னுமாடா திருந்தல நீங்க?



இல்ல நான் தெரியாமத்தான் கேக்கறேன் கல்யாண போஸ்டர்லயும் போன் பேசறிங்க,
காதுகுத்து போஸ்டர்லயும் போன் பேசறிங்க கட்சி போஸ்டர்லயும் பேசறிங்க.
எதுக்குடா இந்த விளம்பரம்? போன் பேசறமாதிரி இல்லன்னா இந்த போட்டோ
ஒழுங்கா வராதா? இல்ல அம்புட்டு பிசியா இருக்கிங்களா? கருமத்த கண்டுபுடிச்சி
பத்து வருசத்துக்கு மேல ஆகுது. ஆரம்பத்துலதான் அழிச்சாட்டியம் பண்ணிங்க
ஓகே மன்னிச்சிடலாம். இன்னும் ஏன் இந்த மாதிரி படம் விட்டுகிட்டு இருக்கிங்க?

போனவாரம் ஊர்லருந்து ஒரு கல்யாண டிவிடி வந்திருந்தது அதுல வீடியோ
அவங்க பக்கம் திரும்பும்போதெல்லாம் மொபைல எடுத்து சும்மனாச்சுக்கும்
காதுல வச்சு பேசறானுங்க. அட பந்தில கூட ஒருத்தன் பாக்கெட்ட கஸ்டபட்டு
துழாவி எடுத்து காதுல வைக்கிறான்.

போட்டோ எடுக்கறாங்கன்னு தெரிஞ்சா போதும் மொகத்துல அரை கிலோ
கோலமாவ அப்பிகிட்டு வந்து போன்ல பேசற மாதிரி போஸ் கொடுப்பிங்களே!
திருங்கய்யா மக்கா திருந்துங்க!

Friday, December 07, 2007

குறிப்புகள்.

என் பிறந்தநாள் டிசம்பர் மாதத்தில் வருவதில் மிகப்பெரிய சங்கடம் அந்த மாதத்தில்
வீசும் கடும் குளிர். அம்மா சொல்வாங்க விடிகாலைல எந்திரிச்சு குளிச்சி முருகன்
கோவிலுக்கு போய் வான்னு. மிக பிரயத்தனப்பட்டு குளிக்க வேண்டிய நாட்கள்
இவை. என் வீட்டில் உள்ளவர்களின் பிறந்தநாள் என்னிக்குன்னு எனக்கு தெரியாது
ஆனா என்னோட பிறந்தநாளுக்கு எல்லாரும் கண்டிப்பா வாழ்த்து சொல்வாங்க
திருப்பிச் செலுத்தனும்னு தோணியதேயில்லை. மறதிதான் என்பதைத் தவிர
வேறெதுவும் காரணமில்லை.

வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

*****************************

பிறந்தநாளை முன்னிட்டு அமீரக வாழ் மக்கள் அனைவருக்கும் விடுமுறை
அளிக்கப்பட்டது. சிறப்பு நிகழ்ச்சியாக அமீரக தமிழ் மன்றத்தினர் நடத்திய
கலைநிகழ்ச்சிகள் மக்களை கவர்ந்தன. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சேரன்
வந்திருந்தார். அபிஅப்பா, சுல்தான், முத்துக்குமரன் தவிர மற்ற அனைத்துப்
பதிவர்களும் வந்திருந்தனர். ஆனால் பேசமுடியாமல் போய் விட்டது.
நாங்கள் பேசாவிட்டால் என்ன எங்களுக்கெல்லாம் சேர்த்து ஆசிப் அண்ணாச்சி
நிறைய பேசினார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவரே அவர்தான். நாவில்
தமிழ் விளையாடுகிறது கூடவே நகைச்சுவையும். "இந்தாளு ரேடியோல
பேசிட்டு இருந்தவர்டா நல்லா பேசுவார் என்று பின்னால் இருந்தவர்கள்
பேசிக்கொண்டார்கள். ஆமாங்க அவர் ரொம்ப நல்லவர் என்று திரும்பி
அவர்களுக்கு பதில் சொன்னேன். (அண்ணாச்சி பேமண்ட் கரெக்டா வரணும்).

நிகழ்ச்சி வர்ணனை என்பது வெகு கவனமாக கையாளப்படவேண்டிய விஷயம்
அதைக் கூட அனாயசமாக கையாண்டார் அண்ணாச்சி. மன்றத்தின் மூத்த
தலைவர்கள் ஒரு குயர் பேப்பரில் எழுதி வைதிருந்ததை வாசிக்க நம்
அண்ணாச்சியோ வர்ணனையில் புதிய சாதனை படைத்தார் என்றே சொல்ல
வேண்டும் ஏனென்றால் நிகழ்ச்சி நிரல் முதல் கொண்டு மாறுதலுக்குள்ளான
நிகழ்ச்சிகள் வரை நடந்துகொண்டும் ஓடிக்கொண்டும் வர்ணனை செய்து
கொண்டிருந்தார். சிலசமயம் திரைமறைவில் இருந்து கொண்டு குரல் மட்டும்
கம்பீரமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

கூட்டம் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே வந்து விட்டது. நிகழ்ச்சி 6 மணிக்கு
என்று சொல்லி அதே நேரத்தில் ஆரம்பித்ததை குறிப்பிட்டே ஆகவேண்டும்.
தாமதமாக வந்த மாமாக்கள், மாமிக்கள் பட்டுப்புடவை சரசரக்க வந்தார்கள்.
பத்திரிக்கையில் நிகழ்ச்சி நேரத்தை பார்த்தார்களா இல்லையா என்றே தெரியவில்லை
7.30 க்கும் 8.30 க்கும் ரெண்டு இன்ச் பவுடர் அடித்துக்கொண்டு நிறைய பேர்
உட்கார இடம் இல்லாமல் ஆரம்பத்தில் உட்கார்ந்திருந்தவர்களை எழுப்பி விட்டு
தாங்கள் உட்கார்ந்து கொண்டார்கள். சினிமாவுக்குன்னா சீக்கிரமா போறாங்க,
இந்த மாதிரி நிகழ்ச்சிக்கு மட்டும் ஏன் தாமதமா வர்றாங்கன்னு தெரில. சீரியல்னா
கரெக்ட் டைமுக்கு குந்த வச்சி பாக்க தெரியற மக்களுக்கு ஏன் இது புரியலன்னு
தெரில. இந்தியாவிலருந்து வந்த சேரன் சீக்கிரமா வந்துட்டார். உள்ளூர்ல இருந்து
வர்றவங்களுக்கு என்ன பிரச்சினையோ தெரில.

**நேத்து ஒரு பேப்பர் துண்டு பாத்தேன் எதோ ஒரு மாவட்டத்தின் பகுதி
ஒன்றில் தினசரி இரவு 10 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு சிறிது நேரம்
கழித்து திரும்பவும் இணைப்பு கொடுக்கிறார்களாம். இது போன்ற தினசரி
துண்டிப்பால் சீரியல்கள் பார்க்க சிரமம் இருப்பதாக பெண்கள் எல்லாம் அணி
திரண்டு மின்சார அலுவலகம் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தி மனு
கொடுத்தார்களாம். வாழ்க வளர்க.

அரங்கம் சின்ன அரங்கம் அடுத்தமுறை இதை விட சிறப்பாக இருக்கும் என்று
எதிர்பார்க்கலாம். வழக்கம்போல சேரன் மனதில் பதியும் விதமாக பேசினார்.
விரைவில் அமீரகவாழ் மக்களின் துயர் கதையை திரைப்படமாக எடுக்கப்போவதாக
சொன்னார் அதற்கு தொழில்முறை நடிகர்களை நடிக்க வைக்காமல் இங்கிருந்தே
தேர்வு செய்யப்போகிறாராம். அவரின் லட்சியப்படம் என்று கூட சொன்னார்.

தமிழ்நாட்டுல இருந்து வர்ற நான் ஆங்கிலம் கலந்த தமிழ் பேசறேன். ஆனா
நிகழ்ச்சிய தொகுத்து வழங்கும் நண்பர் ஆசிப் தூய தமிழில் பேசி என்னை
வெட்கப்படவைக்கிறார். குற்றவுணர்ச்சியா இருக்கு எனக்கு என்று சேரன் பகிரங்கமாக
பாராட்டினார். அண்ணாச்சி அவர்கள் பேசுவதை விட நன்றாக பாடுவார் என்பது
ஏனோ சேரனுக்கு தெரியவில்லை. தெரியவில்லையா அல்லது தெரிவிக்காமல்
மறைத்து சதி செய்து விட்டார்களா என்று தெரியவில்லை. :) நல்லவேளை
அவர் பாடாமல் எங்கள் வயிற்றில் வடை வார்த்தார்.

விழாமலரின் அட்டைப்படம் வடிவமைக்க நம் குசும்பர் சரவணரிடம் உதவி
கேட்டு இருந்தார்களாம். என்ன கொடும சரவணர் இது???

குழந்தைகள் அச்சுப்பிச்சுன்னு ஆடினாலும் அழகாதான் இருக்கும். நிகழ்ச்சியில்
ஆடிய சிறுமிகள் மிகவும் கவர்ந்தார்கள்.

சிறப்பாக நடந்த நிகழ்ச்சி. அடுத்த விழாவில ஆசிப் தமிழுக்கு இன்னும் சில
ரசிகர்கள் கூடியிருப்பார்கள். (ஆசிப், இதுக்காகவாச்சும்...)

*****************************

கடந்த வாரத்தின் மந்தமான மாலையொன்றை பரபரப்பூட்ட போன்பூத் படத்தை
எத்தனையாவது முறை பார்த்தேன் என்று தெரியவில்லை, பார்த்தேன். எத்தனை
முறை பார்த்தாலும் சலிப்பை தராத படம். காலின் பெரல் நடிப்பு அற்புதமாக
இருக்கும். அந்த படம் முடிந்த பிறகு சற்று பரபரப்பாக உணர்ந்தேன். மீள
புத்தகம் படிக்கலாம் என்று யூமா வாசுகியின் மஞ்சல் வெயிலை கையில்
எடுத்தேன்.

தன் காதலிக்கு எழுதும் கடிதமாக கதை ஆரம்பமாகிறது இந்தக்கதையில் வரும்
கதாநாயகன் கதிரவனுக்கு முன்னால் இதயம் முரளி எல்லாம் துகளுக்கும் கீழ்.
அந்தளவுக்கு மென்மையான ஓவியர். தாழ்வு மனப்பான்மையுள்ள, கோழை,
பெண்களிடம் பேசுவதி தயக்கமுள்ள, வறுமையில் தவிக்கும் ஒரு சாதாரண
பத்திரிக்கை ஓவியன். தன் காதலியிடம் காதலை தெரிவிக்கவே இந்த
கடிதம் ஆனால் காதலிக்கல்ல. தனக்குத்தானே சொல்லிக்கொள்வது போல.
யூமா வாசுகியின் எழுத்து நடை பிரமிப்பான தனித்துவம் கொண்டது என்பதை
வாசிக்க ஆரம்பித்த உடனே புரிந்து கொண்டேன். தன் காதலியை பற்றிய
வர்ணனையாகவும் சந்தித்த வேளை இவற்றை விளக்கவே கிட்டத்தட்ட 80
பக்கங்கள் எழுதியிருக்கிறார். பத்தி பிரிக்காத பக்கங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசிக்க வாசிக்க நாம் கதிரவனுடன் இருப்பது போன்ற உணர்வு. அத்தனை
மென்மையான நாயகன் சில இடங்களின் "இவன் சொல்லுவானா சொல்றதுக்குள்ள
செத்துடுவானா" என்ற எரிச்சலை கிளப்பினாலும். ஒரு கதை கடிதமாக
எழுதப்பட்டுள்ளது ஆச்சரியமளிக்கிறது.

யூமா வாசுகியின் நடையில் உள்ள தனித்துவம் மிக சுலபமாக முதல் வாசிப்பிலேயே
கண்டுபிடிக்கலாம் அதுதான் கண நிகழ்வை இம்மி பிசகாமல் பதிவிக்கும் நடை.
மேம்போக்காக சம்பவங்கள் நடந்தன என்று சொல்லி கதை நகர்த்தாமல் நம் கை
பிடித்து நேராக கொண்டு செல்வது போன்றது. அதேபோல கதையின் இடையில்
வரும் ஓரிரு பாத்திரங்களும் மிக நல்லவர்கள் வாட்ச்மேன், நண்பர்கள். குறிப்பாக
பக்கத்து வீட்டு குழந்தைகள். மிக முக்கியமாக கான் முகம்மது சென்னைபோன்ற
நெருக்கடி நகரத்தில் ஏரியாவுக்கொரு கான் முகம்மதுவை காணலாம். இந்த
கான் முகம்மது பாத்திரத்தை நகல் செய்துதான் மொழி படத்தில் பாஸ்கர் செய்த
பாத்திரம் அச்சு அசலாக இந்தகதையிலும் வருகிறது சிறிய மாற்றங்களுடன்.
ராதாமோகன் இந்த நூலை வாசித்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது நகல் செய்வதில்
எந்த தவறும் இல்லை அதை ஒழுங்காக செய்யவேண்டும். மூலத்தை சிதைக்காமல்
திரையில் கொண்டு வந்ததால் ராதாமோகனுக்கு நன்றி சொல்லவேண்டும்.

புத்தகங்களில் வரும் பாத்திரங்களும் சம்பவங்களும் அப்படியே படத்திலும்
காப்பி அடிப்பது வழக்கம்தான் ஆனால் சில எதேச்சையாக நடந்ததும் உண்டும்.
புயலிலே ஒரு தோணி நாவலின் நாயகன் பாண்டியன் ஜப்பானியர் வசம் சிக்கிய
டச்சுப்படை தளபதிக்கு உதவி செய்வார். உலகப்போர் நடைபெற்ற சமயம்
டச்சுப்படை வசம் இருந்த இந்தோனேசியா ஜப்பானியர் வசம் வந்தபோது
டச்சுக்கதிகளை மணல் அள்ளும் வேலைக்கு எடுத்துச்செல்வர் அப்போது பரிதாபமாக
காட்சி அளிக்கும் அவருக்கு உதவி செய்வார். கதையின் கடைசியில் பாண்டியன்
இக்கட்டான மரண சூழ்நிலையில் இருக்கும்போது டச்சுத்தளபதியின் மகன்
பாண்டியனுக்கு உதவி செய்ய முன்வருவார். இதேபோன்ற காட்சி தி பியானிஸ்ட்
படத்தில் சற்று மாறுதல்களுடன் வரும். பு.தோணி உலகப்போர் முடிந்த சமயம்
எழுதப்பட்டது. பியானிஸ்ட் படம் சமிபத்தில் எடுக்கப்பட்டது. இரண்டுமே
உலகப்போரை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதுடன் சம்பவத்தின் கரு
ஒன்றேதான். கதையிலும் சரி காட்சியிலும் சரி நெகிழ வைக்கும் விதமாக
இருக்கும்.

**********************

நிகழ்ச்சி முடிந்து அய்யனாரும் நானும் பிற நண்பர்களும் காரில் வந்து கொண்டிருந்த
போது துபாய் ஷாப்பிங் பெஸ்டிவல் நடக்க போவத்ற்கான அறிகுறிகள் அங்கங்கே
தென்பட்டன. வண்ண விளக்குகள் தோரணங்கள், ஹோர்டிங்குகள் எல்லாம். இந்த
ஒரு மாதம் துபாய் களைகட்டும். இந்த மாதிரி விழாக்காலங்களில் எல்லாம் நம்
ஊர் போல இரட்டிப்பு சம்பளம் போனஸ் என்று எந்த எழவுமே இல்லாமல்
பொருள் வாங்க விழா எடுப்பது முட்டாள்தனமானது. என்ன மாதிரி ஆளெல்லாம்
எங்கருந்து வாங்கறது? என்று கேட்டேன்.

"அதுக்குதான் க்ரெடிட் கார்டு கொடுத்துருக்கானுங்கல்ல தேய்க்க வேண்டியதுதான"
என்று நண்பர் சொன்னார்.

என்னய்யா சுத்த விவரமில்லாதவனா பேசற! பின்னால அதுக்கும் நாந்தான
பணம் கொடுக்கணும் நான் சொல்ல வர்றது போனஸ். அதுவுமில்லாமல் இந்த ஊர்ல
க்ரெடிட் கார்டு தேய்ச்சோம்னோ நீ தேய்ஞ்சு கட்டெறும்பாக்கிதான் ஊருக்கு
அனுப்புவானுங்க. இந்த மாதிரி தேய்ச்சு வட்டி கட்டமுடியாம அசலும் கட்ட
முடியாம நிறைய பேரை பாத்திருக்கேன். இதுக்கெல்லாம் ஒரு முடிவு வரணும்னா
நம்ம கலைஞர இங்க கொண்டு வந்து அஞ்சு வருசம் உக்காத்தி வச்சம்னா
கடனை வட்டியோட தள்ளுபடி செய்ய ஆவண சட்டங்கள போடுவாருல்ல என்ற
அருமையான ஐடியாவை கொடுத்தேன். அப்படியே கலைநிகழ்ச்சிகளும் பேரரசு
போன்ற இயக்குனர்களுக்கு சிறந்த திரைக்கதாசிரியர் விருது போன்றவற்றை
கண்குளிர பார்த்துக்கொண்டிருக்கலாம். கூடவே நமீதா ஆட்டமும் போனசாக!!

*****************

பதிவு பெருசாகிட்டே போகுது அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

Saturday, December 01, 2007

பூம்பாவாய் ஆம்பல்...ஆம்பல்..

சிறில் அலெக்ஸ் எழுதிய முதல் ஆம்பல்
லக்கிலுக் எழுதிய இரண்டாவது ஆம்பல்
வினையூக்கி எழுதிய மூன்றாவது ஆம்பல்
ஜிரா எழுதிய நான்காவது ஆம்பல்
ஜி எழுதிய ஐந்தாவது ஆம்பல்

அதிக சிரமமின்றி அறையில் நுழைந்திருந்த சூரிய வெளிச்சம் சிகரெட் புகை வளையங்களை தனித்து அடையாளம் காட்டிக்கொண்டிருந்தது. விரலை சுடப்போகும் நெருப்புச்சாத்தானை பற்றிய பிரக்ஞை இல்லாமல் சுரேஷ் தன் சிந்தனைகளில் மாட்டிக்கொண்டிருந்தான்.

'சர்வசாதாரணமா ஆளாள்கிட்ட பொய் சொல்றவளுக்கு, தேடுபொறியில அவ பேர போட்டு தேடுனா இருக்குற ஆர்குட் லிஸ்ட் எல்லாத்தையும் காட்டிடும்ன்னு தெரியாமலா இருக்கும். சரி, இந்த விஷயத்த அவ ஏதோ ஜாலிக்காகவோ, இல்லை ஏமாத்தனும்ன்னோ செய்யறதா இருக்கட்டும். ஆனா அவளோட ப்ரொஃபைல்ல தன் மனைவி பெயர் எப்படி வந்தது. இப்போது ஏமாந்து கொண்டிருப்பது அவளா, நானா, இல்லை என் மனைவியா!
ஏன் ஆம்பல், சுரேஷ்ங்கற பெயர்ல இருக்கறவங்கள மட்டும் குறி வச்சிருக்கா? சுரேஷ்ங்கறவன் அவளை காதலிச்சு ஏமாத்திட்டானா.... இல்ல... இல்ல...'

ஆம்பல் யாரென்ற எண்ணத்தை விட தன் மனைவி எப்படி இதில் வந்தாள் என்ற விஷயம்தான் அவனுக்கு பிடிபடாமலே இருந்தது. மற்ற சுரேஷ்களிடம் இதைப்பற்றி மெயில் அனுப்பி விசாரிக்கவும் பயமாக இருந்தது. ஏனெனில் 5 நாட்களுக்கு முன்பு வரை ஆம்பலை பற்றி யாரென்ன சொன்னாலும் தானே நம்பியிருக்க மாட்டான்.. அல்லது தான் விசாரிப்பது ஆம்பலுக்கு தெரிந்து அதனால் வேறு ஏதேனும் பிரசினைகள் வரக்கூடும் என எண்ணினான்.

நினைக்கும்போதே தலையை வலிப்பதுபோன்ற உணர்வு ஏற்பட்டது. சுரீரென சூடு விரலை தொட சிகரெட் நழுவி தரையில் விழுந்தது. சற்று நேரம் அந்த சிகரெட்டையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தவன் இந்தியா கிளம்ப தயாராக வைத்திருந்த பெரிய ஏர் பேக்கை உருட்டிக்கொண்டு வெளியில் வந்து கார் பார்க்கிங்கை நோக்கி நடந்தான்.

அவனது பயணத்தில் விபரீதங்களையும் அழைத்துக்கொண்டு செல்கிறான் என்பது அப்பொழுது வரைக்கும் அவனுக்கு தெரியவில்லை.

@#$%^%^&**())__)(*&&^%$$##@!@#$%^%^&**())__)(*&&^%$$##@!@#$%^


பிரபுவின் வீட்டுக்குள் தூக்கம் கலைந்த கண்களுடன் நுழைந்தான் ராகவன். காமிக்ஸ் கதைப்புத்தகத்தில் ஒன்றிப்போயிருந்த பிரபு, ராகவனின் வருகையால் நிமிர்ந்தார்.

"என்ன சார், அர்ஜன்ட்டா வர சொல்லியிருந்தீங்க?"

"ஒரு சின்ன விஷயம் இப்பத்தான் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்லேந்து எனக்கு வந்தது. அதைப்பத்தி விஷயத்தை வெளியில விசாரிச்சுட்டு வர லேட்டாயிடுச்சு. அட ஏன் நிக்குறீங்க. உக்காருங்க"

"தேங்க் யூ சார்" என்றபடி சோபாவில் தளர்ந்தபடி அமர்ந்தான் ராகவன்.

"டீயா.. காபியான்னு கேட்டு போட்டு கொடுக்கற அளவுக்கு வீட்ல யாரும் இல்ல. அதனாலதான்" என்றபடி எழுந்தவர் அருகில் இருந்த ப்ரிட்ஜில் இருந்த பெப்சி டின்னை எடுத்து ராகவனின் அனுமதிக்கு காத்திராமல் நீட்டினார்.

பெப்சியின் மேல் விரலால் கோலம் போட்டபடி அமர்ந்திருந்த ராகவன், பிரபுவும் அமர்ந்ததும், "என்ன விஷயம் சார் அது!" ஆர்வம் தாங்க முடியாமல் கேட்டான்.

"இறந்த அந்த பொண்ணுக்கு இடது கையில் ஆறு விரல்ங்கறது ரிப்போர்ட்ல இருந்தது. ஆனா.."

"ஆனா..!" தவிப்பின் உச்சியில் இருந்தான் ராகவன்.

அவன் பதட்டத்தை பொருட்படுத்தாது பிரபு பொறுமையாக அமைதியான குரலில் கூறினார்.

"அந்த ஆறாவது விரல், அவளுக்கு ஆபரேஷன் செஞ்சு வச்ச போலி விரல்"

ராகவன் அதிர்ச்சியில் இருக்க, பிரபு தொடர்ந்தார்.

"பொதுவா ஆறாவது விரல் இருக்கறது அதிர்ஷ்டம்ன்னு நம்பறவங்க இன்னும் நம்ம நாட்டுல இருக்காங்க. ஆனா வாஸ்து கணக்கா விரலையே மாட்டி வச்சிருக்கற மொதோ பொண்ணு இவதான்னு நினைக்கிறேன்"

ராகவனின் தவிப்புகள் அதிகமானது.

@#$%^%^&**())__)(*&&^%$$##@!@#$%^%^&**())__)(*&&^%$$##@!@#$%^

அந்த பெரிய வீடு வெளிச்சத்தை சேகரித்து வைத்துக்கொள்ளாமல் இருளை விழுங்கி அமர்ந்திருந்தது. ஏதோ ஒரு மூலையில் ஒளிந்துகொண்டு ஒளிர்ந்த ஒரு நைட் லேம்ப் தன் சக்திக்கு ஏற்ற வகையில் இருளுடன் போர் புரிந்து தன் சக்தியை செலவிட்டது. அந்த வெளிச்சத்தின் கண்களில் பட்டுத்தெறித்தது அந்த சிறுமியின் புகைப்படம்.

ஆம்பல்

மலர்ந்தது:24/2/2000
உதிர்ந்தது:3/1/2006

அகில உலக ஆங்கில சினிமா விமர்சக சுப்புடு,
ஜாவா பாவலர்,
காலேஜ் குமரிகளின் கனவுக்கண்ணன்,
தற்போது அமெரிக்க கன்னிகளின் (?) இதயத்தில் மையம் கொண்டிருக்கும் புயல்,
தேன்கிண்ணத்தில் பால் வார்த்துக்கொண்டிருக்கும் அசல் இளைஞன்,
திரு கப்பி அவர்கள் அடுத்த பாகத்தை தொடர்வார்கள்...

Saturday, November 24, 2007

சூர்யா, முருகதாஸ், அனு மற்றும் நான்.

அனுஹாசனை மிகவும் பிடித்து விட்டதால் காபி வித் அனு நிகழ்ச்சியை ஒன்று
விடாமல் தரவிறக்கம் செய்து பார்த்து விடுவது. இந்த வாரம் இரட்டிப்பு மகிழ்ச்சியாக
சூர்யாவும் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களும் வந்திருந்தார்கள். எங்கள் ஊர்க்காரரான
முருகதாஸ் என்ன பேச போகிறார் எப்படி பேச போகிறார் என்ற ஆர்வம்.
ஆனால் கொஞ்சமாக பேசினார் நிகழ்ச்சி முழுக்க சூர்யாவே பேசினார். பொதுவாக தொலைக்காட்சி பேட்டிகளில் கழுத்தை சொறிந்து, முடியை கோதிவிட்டு பார்ப்பவர்களை எரிச்சலூட்டும் நடிக, நடிகையர் மத்தியில் சூர்யா ரொம்ப அமைதியாக கேள்விகளுக்கு கோர்வையாகவும் கலகலப்பாகவும் பேசினார். அனுவிடம் பேசினாலே எல்லாரும்
மிகவும் சந்தோஷமாக பேசுகிறார்கள் என்ற எண்ணம் எனக்கு உண்டு. முன்பே
சொன்னது போல அந்த தோழமையான அணுகுமுறை காரணமாக இருக்கலாம்.

பேட்டியின் இடையில் கார்த்திக்குடனான சிறுவயது சம்பவங்களை பகிர்ந்து கொண்டார்.
சின்ன வயசில அவனை போட்டு அடிச்சிகிட்டே இருப்பேன். ராத்திரில வேஷம்
போட்டுகிட்டு அவனை பயமுறுத்துவேன். அவனும் பயந்திடுவான். அவனை அடிக்காத
நாளே இருக்காது. ஒருமுறை அவன் அமெரிக்கா போனபோதுதான் அவனில்லாத
மாதிரி பீல் பண்ணேன். அப்ப யோசிச்சு பாத்தபோது ஒரு அண்ணனா உனக்கு
ஒண்ணுமே பண்ணதில்ல. உன்ன தட்டி தட்டி வச்சிட்டேன். ஒரு கான்பிடண்ட்
இல்லாம பண்ணிட்டனேன்னு பீல் பண்ணி ஒரு மெயில் அனுப்பினதாகவும். உடனே
தம்பி கார்த்தி அண்ணன்னா அப்படிதான் இருக்கணும், உன்ன மாதிரி ஆவனும்னுதான்
எனக்கு ரொம்ப ஆசை. நிறைய விஷயங்கள்ல உன்னதான் பாலோ பண்ணுவேன்.
உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்னேன்னு பதில அனுப்ப ஒரே செண்டிமெண்டா
ஆகிட்டாரு.

அப்பதான் நம்ம அனு முக்கியமான விஷயத்த சொன்னாங்க. நம்ம குடும்பங்கள்ல
சகோதர சகோதரிகளிடம் ஒரு இணக்கமான சூழ்நிலை இல்லவே இல்லை. சின்ன
சின்ன விஷயத்துக்கு பாராட்டற குணம் கிடையாது. தம்பிகள எப்பவுமே எதிரியாக
பார்க்கிற குணம் இந்த மாதிரியே வளர்ந்துட்டோம்னு. அப்ப யோசிச்சி பாக்காமலே
அனு சொன்னது சத்தியமான உண்மைன்னு எனக்கும் விளங்குச்சு. ஏன்னா சின்ன
வயசில நானும் அப்படிதான்.

நீங்களும் பார்த்திருப்பிங்க பேப்பர்ல வரப்பு தகராருல அண்ணன் தம்பி
சண்டைலருந்து இப்ப அம்பானி சகோதரர்கள் சண்டை வரைக்கும். அப்படியே
நானும் என்னோட பால்ய வயசுக்கு போய் யோசிச்சு பாத்தேன். ரொம்ப
கேவலமா என்னோட சொந்த அண்ணன் தம்பிகுள்ளயே கொலவெறில
சண்டை போட்டுருக்கேன்.

எனக்கும் என்னோட தம்பிக்கும் சண்டை வராத நாளே இருக்காது. நான் ஒரு
தெருல விளையாடியா அவன் அடுத்த தெருவிலதான் விளையாடனும். வீட்டுல
கொடுக்கற தீனில என்னை விட அளவுல கொஞ்சம் கம்மியாச்சின்னா அதுக்கும்
சண்டை. ஒருமுறை கோலிகுண்டு விளையாடும்போது ஒரு பிரச்சினை. விளாடிட்டு
இருக்கும் போது பேந்தால இருந்த குண்டையெல்லாம் தூக்கி முள்ளுத்தோப்புல
வீசீட்டு ஓடிட்டான். வந்த கொலவெறில ஒரு கல்ல எடுத்து அடிச்சேன் அவனை
பார்த்து என் கெட்ட நேரம் நேரா மண்டைல அடிச்சது, அடிச்ச வேகத்துல மண்டை
ஓட்டையே போட்டுகிச்சு சொம்புல ஊத்தற அளவுக்கு ரத்தம் தெருவெல்லாம்.
சும்மாவே ஓவர் சீன் விடுவான் ரத்தத்த பாத்தவுடனே அய்யோ அம்மான்னு
அலறிட்டான். எனக்கு டவுசர் கிழிஞ்சிடுச்சி ஆஹா இன்னிக்கு மாட்டிகிட்டம்டா
சாமி. அங்கருந்து எஸ்கேப் ஆகிட்டேன். அவன நாலஞ்சு பேர் ஆஸ்பத்திரி
தூக்கிட்டு போய் மண்டைல ரெண்டு மூணு தையல் போட்டுகிட்டு வந்தாங்க.

வீட்டுக்கு போனா பொதுமாத்து விழும்னு எனக்கு தெரியும், போகவும் தைரியம்
இல்ல, ராத்திரி வரைக்கும் போகவேயில்ல. பத்து மணிக்கு மேல தூக்கம், குளிர்னு
மாறி மாறி இம்சை பண்ண மெதுவா வீட்டுக்கு போனேன். எங்கப்பா எனக்காக
வாசல்லயே காத்திருக்கார். பக்கத்துலயே தலைல மப்ளர் கட்டின மாதிரி வெள்ளையா
கட்டு. என்னை பாத்தவுடனே தம்பி அழுவ ஆரம்பிச்சிட்டான். எங்க வீட்டுக்கு
முன்னாடி ஒரு நொனா மரம் இருந்துச்சு அதுக்கு பின்னாடி நின்னுகிட்டே
இருந்தேன். ஏண்டா அடிச்ச எதுக்கு அடிச்சேன்னுலாம் கேக்கல். வாசல்லயே
முட்டி போட வச்சிட்டு கதவ சாத்திகிட்டார் அப்பா. ரெண்டு நாளுக்கு அவனுக்கு
சாப்பாடு போடாதன்னு அம்மாகிட்ட சொல்லிட்டார்.

தம்பிக்கு ஏகப்பட்ட மரியாதை, பாலுதான் பழம்தான் என்னை வெறுப்பேத்திகிட்டே
சாப்பிடுவார். அப்பப்ப கிச்சனுக்கு போய் திருட்டுதனமா பொட்டுகடல தேங்காயும்
எடுத்து சாப்பிட்டுக்கறது. இந்தமாதிரி எப்பவுமே அவனை அடிச்சி அடக்கி
வைக்கறதே என்னோட வேலை. ஆத்துக்கு குளிக்க போனா தண்ணிக்குள்ள
புடிச்சி அமுக்கறது, டவுசர தூக்கி ஆத்துல போடறது, கிணத்துக்கு குளிக்க
போனா அங்கயும் அவனுக்கு ஆப்பு வைக்கிறதுன்னு அவனுக்கும் எனக்கும்
ஆகவே ஆகாது.

ராத்திரி சாப்பிட்ட உடனே அப்பா ஒரு தம் அடிப்பார். அப்ப வெளித்திண்ணைல
இருந்து ஒரு சத்தம் கேட்கும். "டேய் தீப்பெட்டி எடுத்துகிட்டு வாடா"ன்னு. சடார்னு
ஓடிப்போய் தீப்பெட்டி எடுத்துகிட்டு ஓடிப்போய் குடுப்பேன். தம்பியும் தேடி
எடுத்துகிட்டு வருவான். நான் முந்திகிட்டேன்னா அவ்ளோதான் அப்பாவ
சிகரெட் பத்த வைக்கவே விட மாட்டான். நான் குடுத்த தீப்பெட்டிய அப்பாகிட்டருந்து
பிடுங்கி வீட்டுக்குள்ள ஓடி நான் எடுத்த இடத்துலயே அத திரும்ப வச்சி மறுபடியும்
எடுத்துகிட்டு வந்து கொடுப்பான். அதாவது அவர்தான் அந்த வேலைய செஞ்ச
மாதிரி இருக்கணுமாம். நான் வளர்ந்து சிகரெட்னா என்னன்னு தெரிய ஆரம்பிச்சதும்
வீட்டுக்குள்ள சிகரெட் பிடிக்கறது, என்னைய கடைக்கி அனுப்பறது எல்லாத்தையும்
நிறுத்திட்டார். அவரோட கண்ணியமா இருந்தாலும் அதனால எனக்கு ரொம்ப
வருத்தம்.

நான், தம்பி, அண்ணன், அக்கா எல்லாரும் ஒரே பள்ளியில படிச்சதால அங்க
என்ன நடந்தாலும் உடனே வீட்டுல போட்டுகுடுத்துடுவான் தம்பி. உடனே வீட்டுல
பரேடு நடக்கும். ஒருநாள் ஸ்கூல் லேட்டாயிடுச்சி எங்கண்ணன் சைக்கிள்ல
போனாரு, என்னையும் கூட்டிகிட்டு போன்னா ரொம்ப லேட் ஆயிடுச்சின்னு
சொன்னேன். நடுந்து வாடான்னு சொல்லிட்டு போயிட்டாரு. அப்ப நான்
ஏழாவது அண்ணன் ப்ளஸ் டூ. ஸ்கூல ரீச் ஆகற நேரத்துல ப்ரேயர் முடிஞ்சி
பீ.டீ வாத்தியார் தடியோட வெளில லேட்டா வந்த பசங்கள அடிக்க ரெடியா
நின்னுட்டு இருக்கார். அவருக்கு பசங்கள அடிக்கறத தவிர வேற எதுவும்
தெரியாது. ரெண்டு கைலயும் நாலு அடி. பிஞ்சு கை கன்னி போச்சு. தூரத்துல
எங்கண்ணன் சைக்கிள்ல நாலுபேரோட சிரிச்சிகிட்டே போகுது. எனக்கு
கோவம் கோவமா வந்துச்சு அண்ணன் மேல. அதுலருந்து ஒரு நாலு வருஷம்
பக்கமா ஒரே வீட்டுல இருந்தும் எங்கண்ணன் கூட பேசவேல்ல. முகத்தை
பாக்ககூட இல்ல. என்கிட்ட இருந்த கெட்ட பழக்கங்கள்ல முக்கியமானது
ஒருத்தர பிடிக்கலன்னா சாகற வரைக்கும் அவங்க கூட பேசவே கூடாதுன்னு
முடிவு பண்ணிடுவேன். என்னோட அக்கா கூடயும் பேசாம ரெண்டு வருசம்
இருந்திருக்கேன்.

சாயந்திரம் ஆறுமணில இருந்து ஒம்பது மணிவரையும் எல்லாரும் வீட்டுல
கட்டாயமா படிக்கணும். அந்த நேரத்துல டீவிய போட்டு பாத்தோம்னா
யாராவது ஒருத்தர் அப்பாகிட்ட போட்டு கொடுத்துட்டாங்கன்னா ஒருவேளை
சாப்பாடு கட் ஆகிடும். ஒருமுறை அக்கா போட்டுகொடுத்துட்டதால வெறில
கூரான காம்பஸ்ல கோழி இறகு கட்டி மரத்துல குத்தி விளையாடறதுக்காக
வச்சிருந்தத காம்பசை அக்கா மேல வீசினேன் (5000 விளம்பரம்). கால்ல குத்தி
கொட கொடன்னு ரத்தம் வர ஆரம்பிச்சிடுச்சு. அப்ப தண்டனையா ரெண்டு
கைலயும் ரெண்டு செங்கல்ல வச்சி வெளில முட்டி போட வச்சிட்டாங்க. இந்த
மாதிரி தண்டனை நான் வாங்கும்போது தம்பிதான் சூபர்வைசிங் பண்ணுவான்.
சும்மா சொல்லக்கூடாது கொஞ்சம் ஆடுச்சின்னாலும் "அப்பா கல்ல கீழ
போட்டுட்டான்பான்னு அலறுவான். உடனே அப்பா வெளில வந்து ஒழுங்கா முட்டி போடறானான்னு
பாக்க வந்திடுவார்.

வீட்டுல அண்ணன தவிர யாரும் யாரையும் மரியாதையா கூப்பிடறதுல்ல.
ஸ்கூல்ல அக்கா ப்ரெண்சோட உக்காந்துட்டு இருக்கும்போது பேர சொல்லி
கூப்பிடுவேன். அவங்களுக்கு அது அவமானமா போயி புகார் பண்ணிட்டாங்க.
ஒருநாள் எல்லாத்தையும் அசெம்பிள் பண்ண சொல்லி. இனிமே நீ அக்காவ
பேர் சொல்லி கூப்பிட கூடாது, அக்கான்னுதான் கூப்பிடணும். என் தம்பிய
பார்த்து இனிமே நீ கதிரவனையும் அண்ணான்னுதான் கூப்பிடணும்னு சட்டம்
போட்டாங்க. அதுலருந்து ஒருத்தொருக்கொருத்தர் பேசிக்கறதையே குறைக்க
ஆரம்பிச்சாச்சி. இதுவரைக்கும் நானும் அக்காவ அக்கான்னு கூப்பிட்டதில்ல
தம்பியும் என்னை அண்ணன்னு கூப்பிட்டதில்ல.

இதெல்லாம் சின்ன வயசுல மட்டும்தான் வளர வளர பாசம் அதிகமாகிடுச்சி.
அதுகூட ஒரு பிரிவுல வந்ததுதான். ஒரு முழுப்பரிட்சை விடுமுறைல என்னை
சென்னைல இருக்கற மாமா வீட்டுல கொண்டு போய் விட்டாங்க. முழுசா
பத்தே பத்து நாள்ல என்னை வீட்டுல கொண்டு போய் விடுங்க மாமான்னு
ஓன்னு அழுதிட்டேன். என்னால தம்பி, அக்கா, நண்பர்கள், வீடு, அம்மா
யாரையும் பிரிஞ்சி இருக்க முடில. என்னடா பையன் நீன்னு மாமாவும்
வீட்டுல கொண்டு வந்து விட்டார். பத்து நாளுக்கப்புறம் வீட்டையும்
எல்லாரையும் பாத்ததுல வாசல்ல நின்னுட்டே அழுதுட்டேன். ஓடிப்போய்
அம்மாகிட்ட உக்காந்து அழுதுகிட்டே நான் இனிமேல் எங்கயும் போக
மாட்டேன்னு விசும்பிகிட்டே சொல்றேன். அப்பதான் வீட்டுல இருந்த
எல்லார் மேலயும் பாசம் அதிகமாச்சு. தம்பி தோள்மேல கைபோட்டுகிட்டே
கிரிக்கெட் விளையாட போனேன். அந்த வயசுல பத்துநாள் பிரிவு என்னால
தாங்கிக்க முடியாத ஓண்ணா இருந்துச்சு.

இதுவே வயசு ஆக ஆக எல்லாமே மாறிடுச்சி. சண்டை போட நேரமில்ல
இப்ப சின்ன வயசுல சண்டை போட்டதெல்லாம் நினைச்சு பார்த்தா ரொம்ப
கேவலமாவும் சிரிப்பாவும் இருக்கு.

கொஞ்சம் ஓவரா கொசுவத்தி சுத்திட்டேன்னு நினைக்கிறேன். எங்க வீட்டில
மட்டும் அந்த வயசுல நான் பார்த்த என்னோட நண்பர்கள் வீட்டுலயும்
தினமும் இதே சண்டைங்கதான். ஏன் இந்த மாதிரி யோசிச்சா பெற்றோர்கள்
சரியா பாசத்தை ஊட்டி வளர்க்கறதில்லயா? கடைக்குட்டி மேல ரொம்ப
பாசம் காட்டறதுனால வர்ற கோபமா, அல்லது தனக்கு வீட்டுல அதிக
முக்கியத்துவம் கொடுக்கறதினால வர்றதா இருக்குமான்னு யோசிச்சு
பார்த்தா ஒண்ணுமே புரியலை.

எது எப்படியோ இனி வளரும் தலைமுறையாச்சும் அதிக பாசத்தோட
சண்டை போடாமல். தம்பி, தங்கச்சிகளுக்கு அண்ணன் அக்காக்கள்
ஒரு வழிகாட்டி மாதிரி வளர்ற சூழ்நிலை வரணும்.

ஒரு பத்து பதிவுக்கு ஒரு கொசுவத்தி சுத்திக்கறனே. நானும் சுத்தி
ரொம்ப நாள் ஆச்சு. அதான் கொலவெறில சுத்திட்டேன். நீங்களும்
உங்க தம்பி, தங்கச்சி, அண்ணன்கள்ல காட்டுன வீர தீர பராக்கிரமத்த
இங்க பகிர்ந்துக்கலாம். அப்பதான் நான் மட்டும்தான் இந்த மாதிரியா
இல்ல எல்லாருமே சின்ன வயசில இப்படிதானான்னு தெரியும். :)

இந்த மாதிரி சிறுவயது சின்னத்தனமான விஷயங்கள ஞாபகபடுத்தினதுக்காக
சூர்யாவுக்கும் அனுவுக்கும் என்னோட செல்லமான கண்டனங்கள்.

Wednesday, November 21, 2007

அளம்

பொதுவாகவே பெண் எழுத்தாளர்கள் என்பவர்களின் இலக்கிய எல்லையாக இதுவரை
நான் கருதியது அவள் விகடன், கண்மணி, பாக்கெட்நாவல் போன்றவைதான். குடும்ப
உறவுகளை விட்டால் வேறெதுவும் எழுத தெரியாத உப்புசப்பில்லாத கதைகளின்
உற்பத்தியாளர்கள் என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன். அதற்கு ஏற்ப சிவசங்கரி
அனுராதாரமணன் போன்ற எழுத்தாளர்களின் வாசிப்பில் உணர்ந்ததுதான்.ஒவ்வொரு
எழுத்தாளர்களுக்கு ஒரு தனி அடையாளம், எழுத்து நடை இருப்பதை உணர்வது
போல அனைத்து பெண் எழுத்தாளர்களுக்கும் ஒரே நடையிலிருப்பதை உணரலாம்.
தொழில் ரீதியாக நாவல்களை எழுதுகிறார்களோ என்று கூட எண்ணியிருந்தேன்.
எழுத்து என்பது ஆத்ம திருப்திக்காக இருக்க வேண்டும் என்ற நாஞ்சில் நாடனின்
வார்த்தைகளை நம்புகிறேன்.

என்றாவது ஒருநாள் இக்குறைகளை தீர்ப்பது போல நம் பெண்கள் படைப்புகள்
இருக்கலாம் என்று உள்ளுக்குள் எண்ணியிருந்தேன். அதற்கு தீனி போடுவது
போல அமைந்த வாசிப்புதான் தமிழ்ச்செல்வியின் அளம். அளம் என்பது உப்பளத்தை
குறிப்பது. முதலில் குழம்பிப்போனேன். என் வட்டாரத்தில் அதிக புழக்கத்தில் இல்லாத
வார்த்தை இது.

"மாணிக்கம்", "அளம்", "கீதாரி", "கற்றாழை" என நாண்கு நாவல்களை தமிழுக்கு
அளித்திருக்கும் சு.தமிழ்ச்செல்வி சமகால பெண் எழுத்தாளர்களில் முக்கியமானவர்.
இவரது "மாணிக்கம்" நாவல் தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான விருதினைப்
பெற்றது. இவரது படைப்புகள் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

பொருள் தேட வெளிநாடு சென்ற கணவன் இறுதிவரை திரும்பாத நிலையில் தனது
மூன்று பெண் குழந்தைகளுடன் வாழ்வை எதிர்கொள்ளும் சுந்தராம்பாள் எனும்
எளிய தாயின் போர்க்குணத்தை காவியத்தன்மையுடன் விவரிக்கும் கதைதான்
"அளம்" வாசகர்களின் ஏகோபித்த ஆதரவினை பெற்று தற்போது இரண்டாம்
பதிப்பாக வெளிவந்திருக்கிறது,

சுந்தராம்பாள் என்ற தாய் வடிவாம்பாள், ராசாம்பாள், அஞ்சம்மாள் என்ற தனது
மூன்று மகள்களை தனியொருத்தியாக வளர்த்து ஆளாக்க என்னென்ன சிரமப்
படுகிறாள் என்பதுதான் மொத்தக்கதையும். பொதுவாகவே கதையின் உரையாடல்கள்
அம்மண்ணின் பேச்சு வழக்கில் அமைவதுதான் பெரும்பாலாக கதைகளின் வெற்றி.
அவ்வகையில் இந்நாவல் பூச்சுகளில்லாத அசல் கிராமத்து மண்ணின் வாசம்.

நாள் நட்சத்திரம் பார்த்து நமக்கு என்னதான் பெயர் வைத்திருந்தாலும் பெரும்பாலான
வீடுகளில் செல்லப்பெயரை வைத்துதான் கூப்பிடுவார்கள் அதைப்போல இந்நாவலின்
முக்கிய பாத்திரமான சுந்தராம்பாளின் மகள்களை பெரியங்கச்சி, நடுத்தங்கச்சி,
சின்னங்கச்சி என்றே கதை முழுக்க இந்த பாத்திரங்கள் அழைக்கப்படுகின்றன.
"ம்பாள்" என்றே எல்லா பெயர்களும் முடிவதால் வாசகர்களுக்கு எவ்வித குழப்பமும்
வந்துவிடக்கூடாது என்பதை தவிர்க்கவே இந்த உத்தி என்று நினைக்கிறேன்.
அப்படி இருந்தால் அதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே அர்த்தம். கவனமான
வாசிப்பிலும் முதலில் பெயர்க்குழப்பம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

"மோரயப்பாரேங் கரிப்பான சூத்துமேரி. வண்ணாஞ்சாலு கணக்கா தொப்பய மின்னாடி
தள்ளிகிட்டு நிக்கி சனியங்" என்று பெற்றவனே மகளின் மீது எந்நேரமும் வெறுப்பை
உமிழ்கிறான். இப்படி நாவல்முழுக்க அம்மண்ணின் பேச்சு வழக்கே நிறைந்திருப்பதால்
வாசிப்பதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை என்றாலும் அதுதான்
இந்நாவலின் ஜீவன்.

ஒருவேளைக்கும் போகாத சுந்தராம்பாளின் கணவன் சுப்பையாவின் வாழ்க்கையில்
கப்பல்கார ராமையாபிள்ளை என்பவர் சுந்தராம்பாளின் குடும்ப சிக்கலை
எண்ணி சிங்கப்பூர் அழைத்து செல்கிறார். அங்கு சென்று சுப்பையன் காணாமல்
போகிறான். கடைசிவரை அவன் ஊருக்கே திரும்பவில்லை. கப்பல்கார ராமையா
ஒவ்வொருமுறை ஊருக்கு வரும்போதும் தன் கணவன் பற்றிய தகவல் அறிய
செல்லும்போது நமக்கே எரிச்சலாக இருக்கும்.

இந்நாவலின் வாசிப்பின்போது வைரமுத்துவின் கருவாச்சியை நினைவு வருவதை
உணரலாம் ஆனால் கருவாச்சி காவியம் சினிமாத்தனமானது. ஒரு பெண் தனித்து
வாழும்போது சமூகம் அவளுக்கு கொடுக்கும் இன்னல்கள், குறைந்தது மூன்று
ஆண் கதாபாத்திரங்கள் முதல் ஊரே அவளுக்கு எதிராகவும் பல இன்னல்களும்
கொடுக்கும். அதையெல்லாம் சமாளித்து பின் ஊர் உணரும் புண்ணியவதி ஆவாள்
கருவாச்சி. எல்லாமே சுவாரசியங்களுக்காக திணிக்கப்பட்ட சம்பவங்களின்
கோர்வையாக கருவாச்சி காட்சியளிப்பாள். சுந்தராம்பாளின் வாழ்க்கைப் பாதையில்
துன்பங்களும், வருத்தங்களும் ஏராளமாக இருந்தாலும் எதுவுமே திணிக்கப்பட்டது
போல தோன்றவில்லை.

புயலும், புயலுக்கு பின் வரும் வறுமையும் ஒவ்வொருமுறை விதைக்கும்போதும்
இயற்கைக்கு பறிகொடுக்கும் சோகம் கதையாக இருந்தாலும் மனசு வேதனைப்பட
வைக்கிறது. நாவல் முழுக்க ஏமாற்றங்களும் சோகங்களும் நிறைந்து இருந்தாலும்
ஒருமுறை கூட சலிப்பை ஏற்படுத்தவில்லை.

மிகுந்த சிரமத்திற்கிடையில் மணமுடித்துக்கொடுத்த மூத்த பெண் வடிவாம்பாளின்
மணவாழ்க்கை ஒரே மாதத்தில் முடிந்துவிட வாழாவெட்டியாக வீட்டிற்கு வருகிறாள்.
இரண்டாவது மகளும் இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு கணவனால் துரத்தப்பட்டு
வீட்டுக்கு வருகிறாள். ஒரே வீட்டில் மூன்று திருமணமான வாழாவெட்டிகளால்
கடைசிப்பெண்ணான அஞ்சம்பாளுக்கு வரன் அமைவதில் சிக்கல். அவளுக்கும்
பூச்சிக்கும் மட்டுமே தெரிந்த நிறைவேறாத அந்த காதல் அழகு. காதல் என்ற
வார்த்தையைக் கூட உபயோகப்படுத்தவில்லை.

இக்கதையை வாசிக்கும் நேரத்தில் உங்களது எண்ணங்களும் சற்று பின்னோக்கி
அந்தக்கால கிராமமான கோயில்தாழ்விற்கு சென்று மக்களை நேரில் சந்திப்பது
போன்று உணர்வீர்கள். அழுத்தமான கதையை விரும்புவோர் தாராளமாக
ஒருமுறை வாசிக்கலாம்.

நூலின் பெயர்: அளம்
ஆசிரியர்: சு.தமிழ்ச்செல்வி
மருதா பதிப்பகம்
விலை இந்திய ரூபாய் 100.

வாசிக்க கொடுத்த அய்யனாருக்கு நன்றி
அய்யனாருக்கு கொடுத்த ஆசிப்புக்கும் நன்றி.

Monday, November 19, 2007

அலெக்ஸ்

அலெக்ஸ் இலங்கைத்தமிழர், தமிழை விட சிங்களம் நன்றாக பேசக்கூடியவர்.
தமிழையும் நன்றாக பேசிக்கொண்டிருந்தவர்தான் ஆனால் கடந்த ஒன்றரை
வருடமாக தமிழை பேச அதிக வாய்ப்பு இல்லாததால் பல வார்த்தைகளை
மறந்து விட்டிருக்கிறார். ஒவ்வொருமுறை பேசும்போது காற்றில் துழாவி
வார்த்தைகளை வரவழைக்கிறார் அவை வராதபோது தோற்றுப்போன
குழந்தையின் முகத்தினை ஞாபகப்படுத்துகிறது அவரது முகம்.

அலெக்ஸ் நாம் பார்க்கும் உலகத்திலிருந்து விலகி நிற்பவர். அவர் உலகத்தில்
அவரும் அவர் பூனை மட்டுமே பெரும்பாலான நேரத்தினை நிறைத்துக்
கொள்கின்றன. அதற்கு மேல் அவருக்கும் செய்வதற்கு ஒன்றுமில்லை.
எனக்கு அலெக்ஸை இப்போது மூன்று நாட்களாகத்தான் தெரியும். என் வருகை
அவரை மிக சந்தோஷத்தில் ஆழ்த்தியிருந்தது. வண்டியை விட்டு இறங்கியதும்
அவர் முகத்தில் தெரிந்த சந்தோஷம் அளவிட முடியாததாக இருந்தது. மிக
உணர்ச்சிவசப்படுகின்ற ஆள் என்று நினைத்துக் கொண்டேன்.

அலெக்ஸ் நகரத்திலிருந்து நூறு மைல் தள்ளி இருக்கிறார். அல் அய்னின்
நெடுஞ்சாலையிலிருந்து ஒரு மூன்று கிலோமீட்டர் உள்ளே நடந்து சென்றோமானால்
ஒரு காலத்தில் இயங்கிக்கொண்டிருந்த பாக்டரியை நீங்கள் காணலாம். அந்த
பாக்டரியின் எடுக்கமுடியாத எச்சங்களாக ஒரு சில இயந்திரங்களும் சில பொருட்களும்
இருக்கின்றன. அவற்றை பாதுகாக்கும் வாட்ச்மேன் பொறுப்பில்தான் அலெக்ஸ்
இருக்கிறார். மாதத்தின் ஐந்தாவது நாளில் சம்பளமும் அதற்கடுத்த நாள் நகரத்திற்கு
சென்று வீட்டுக்கு பணம் அனுப்பிவிட்டு அம்மாத சாப்பாட்டு தேவைக்கான பொருட்களை
வாங்கி வருவார் அந்த ஒருநாள் நகரப்பிரவேசம்.

சுற்றிலும் மொட்டை பாலைவனம். நாளுக்கு நாள் தோன்றி மறையும் மணல் மேடுகள்.
மணலிலேயே இரண்டு மைல் நடந்தால் பந்தயத்திற்கான ஒட்டகங்களை தயார்படுத்தும்
பண்ணை. அங்கு சில மனிதர்கள் வாழ்கிறார்கள். தான் இறந்த செய்தி கூட உலகிற்கு
தெரிய ஒரு மாத காலமாகலாம். இதற்கு நடுவிலே அந்த இடத்தில் கடந்த ஒன்றரை
வருடமாக பணியில் இருக்கிறாராம்.

வந்திறங்கியதும் இந்த இடத்தில்தான் நாம் நாலைந்து நாட்கள் தங்க வேண்டும் என்று
நினைக்கும்போதே வயிற்றை கலக்கியது. வெளி உலக தொடர்புகள் அறவே அற்ற
இடம் நினைத்துப்பார்க்கவே கொடுமையாக இருந்தது. என்ன சமைக்கலாம் என்று
கேட்டார். ஏதாச்சும் செய்ங்க என்றேன்.

மாலை நெருங்கி விட்டிருந்தது. அந்த இரவில் பாலைவன் பார்ப்பதற்கு மிக ரம்மியமாக
இருந்தது. இதமான குளிர், நிலா வெளிச்சம் மணல் குன்றுகள் எல்லாமே அழகுதான்
என்றாவது ஒருநாள் காணவேண்டிய அழகு அவை. தினமும் அங்கே இருந்தால்
அழகும் சீக்கிரம் சலித்துவிடும்.

அலெக்ஸ் கிட்டத்தட்ட உங்க வாழ்க்கை மாதிரியே ஆங்கிலத்துல ஒரு படம் வந்திருக்கு
தெரியுமா? பார்த்திருக்கிங்களா? என்றேன்.

கடைசியா பார்த்த படம் கில்லி என்று சொன்னார்.

" சிரித்துக்கொண்டே "கேஸ்ட் அவே" னு ஒரு படம் அந்த படம் முக்காவாசி ஒரே
கேரக்டர் ஒரு தீவுல மாட்டிக்கறதுதான். அது விபத்து இது வாழ்க்கை அவ்வளவுதான் வித்தியாசம்".

தனியா என்னதான் பண்ணுவிங்க?

இங்க என்ன வேலை இருக்கு பெருசா செய்யறதுக்கு? என்னை பாத்துக்கறதே
பெரிய வேலையா இருக்கு இதுல என்னங்க அதுவுமில்லாம சொல்லிக்கற மாதிரி
ஒருவேலையும் இல்ல அதான் உண்மை. அதான் நீங்க பாக்கறிங்கல்ல. எந்த நேரமும்
யாராச்சும் போன் பண்ணிகிட்டே இருப்பாங்க. அவங்க கூட பேசிட்டே இருப்பேன்,
அப்போதுதான் கவனித்தேன் அவர் போனில் கிட்டத்தட்ட அரைமணி நேரம்
பேசிவிட்டு வைக்கும்போது மறக்காமல் முத்தம் வைப்பதை.

யாருங்க அதெல்லாம்?

தெரிலங்க. ப்ரெண்ட் ஒருத்தன் ஒருநாள் ஒரு பொண்ணோட நம்பர் தந்தான்.
அதுக்கு போன் பண்ணி பேசினேன். மனசுக்கு இதமா இருந்துச்சு. அப்படி அதிலருந்து இன்னொண்ணு அதுகூட இன்னொண்ணுன்னு கிட்டத்தட்ட பத்து பதினஞ்சு
பொம்பளைங்க நம்பர் இருக்கு ஒண்ணு மாத்தி ஒருத்தரா போன் பண்ணிகிட்டே
இருப்பாங்க. ஜாலியா பேசிட்டு இருப்பேன் நேரமும் போறது தெரியாது. எல்லாருமே
அரபி வீட்டுல வேலை செய்றவங்க. யாரையும் நேர்ல பாத்தது கிடையாது.
அவங்களுக்கு தேவை அன்பான பேச்சுதான். எனக்கும் அதுதான் தேவையா இருக்குது.

இதுக்கு முன்னாடி இங்க யாரு வேலை பார்த்தது?

"அது ஒரு சோகமான கதைங்க சொன்னா கேவலம் இங்க இந்த மாதிரிலாம் நடக்கறத
பாக்கும்போது கடவுள் இருக்காரான்னு சந்தேகமா இருக்குங்க."

அப்படி என்ன நடந்தது?

எனக்கு முன்னாடி இங்க ஒரு நேபாளி வேலை பாத்தாங்க. பாக்கறதுக்கு ஆள்
லட்சணமா கைக்கு அடக்கமா செக்கச்செவுப்பேன்னு இருப்பான். இங்க பட்டான்னு
சொல்ற பாகிஸ்தானி ஆளுங்க பக்கத்துல இருக்கற தோட்டத்துல வேலை
பாக்கறானுங்க. இந்த பையன் இங்க தனியா இருக்கறத பாத்துட்டு நாலஞ்சு பேரா
வந்து வண்டில அள்ளி போட்டுகிட்டு போய் ரெண்டு நாள் கழிச்சிதான் கொண்டு
வந்து விட்டானுங்க.

"தூக்கிட்டு போய் என்ன பண்ணாங்க?"

என்னங்க கேள்வி இது? ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைபூ சக்கரை மாதிரி
பொம்பளைங்களயே பாக்காத அவனுவளுக்கு இவந்தான் பொம்பளை மாதிரி
தெரிஞ்சிருக்கான் போலருக்கு. பாவம் இவன் ஆபிஸ்லயும் சொல்லமுடியாம
வெளிலயும் சொல்ல முடியாம அவஸ்தைபட்டிருக்கான். அவனுங்க அடிக்கடி
வந்து தூக்கிட்டு போறதும் ரெண்டு நாள் கழிச்சு கொண்டு வந்து விடறதுமா
இருக்கவே இவன் பொறுக்க முடியாம மெயின் ஆபிஸ்க்கு போய் ட்ரான்ஸ்பர்
கேட்டுருக்கான் வேலைல சேர்ந்தே ரெண்டு மாசம்தான் ஆகுது அதெல்லாம் மாத்த
முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம்.

இங்க வந்து இதோ பக்கத்து ரூம்லதான் தூக்கு மாட்டிகிட்டான் என்று சொல்லி
அலெக்ஸ் சிரித்தார். நான் ஆள் பாக்கறதுக்கு கருப்பா கட்டையா இருக்கறேனா
அதனால பட்டானிங்க வந்து பாத்துட்டு இவன் வேலைக்கு ஆகமாட்டான்னு
போயிட்டாங்க. மறுபடியும் அதே சிரிப்பு.

இந்த மாதிரி இடத்தில அவனுங்கதாங்க சரி. நம்மளால எல்லாம் வேலை பாக்க
முடியாது ஏதோ காலக்கொடுமை இங்கலாம் வேலை பாக்க வேண்டியதா இருக்கு.

இப்படி ஒரு மேட்டர சொல்லு நம்மள தூங்கவிடாம பண்ணிட்டிங்களே அலெக்ஸ்.

தூக்கம் வரலன்னா இந்த ஆல்பத்த பாருங்க. இவர்தான் எங்க அப்பா சாகும்போது
எடுத்த போட்டோ. இது என்னோட மனைவி, அந்த சின்ன பொடியன் என்னோட
பையன்.

இது என்னோட பொண்ணுங்க. பசங்கள எல்லாம் ஸ்கூல்ல சேர்த்து படிக்க வைச்சிகிட்டு
இருக்கேன். அதுக்கேதான் மாசா மாசம் கனமா செலவாகுது.

Friday, November 02, 2007

நான் லீனியர் கனவுகள்.



வேகவேகமாய் ஓடிப்போய் கந்தசாமியண்ணன் மாட்டுவண்டியில் ஏறிக்கொண்டேன்.

"நாளைக்குதாம்பா ஊர்போய் சேரமுடியும் நீ பஸ்ல போயிக்கோ"

வீட்டுல இருக்க பிடிக்கல அதான் இன்னிக்கே கிளம்பிட்டேன். அங்க இருந்தாலும்
பசங்களோட ஜாலியா இருக்கலாம்னுதான் அப்படியே உங்க வண்டியில போனா
பொழுதுபோக்கா இருக்கும் ஒரு டூர் போனமாதிரியும் இருக்குமேன்னுதான் ஏறிகிட்டேன்.
கந்தசாமியண்ணன் தங்கச்சி கல்யாணத்துக்கு சீதனமா கொடுக்கபோறதா சொன்ன
மாட்டுவண்டியதான் ஓட்டிகிட்டு போறார் அவர்கூடவே இப்ப போயிட்டு இருக்கேன்.

சாயங்காலம்தாம்பா போய் சேரமுடியும் அதுவுமில்லாம வண்டில உன்னால்லாம்
வரமுடியாது சொன்னா கேளு.

"கயித்த குடுங்க பீடிய பத்தவச்சிகிட்டு பின்னாடி உக்காருங்க. வண்டி நான் ஓட்டறேன்"

"மாடு மெரளும் ஊர்தாண்டின பொறவு நீ ஓட்டு"

சரி.

அண்ணே போற வழில எங்கக்கா வீட்டுக்கு போவணும்னே லைட்டா வண்டிய
திருப்புனீங்கன்னா ஒரு எட்டு பாத்துட்டு வந்திருவேன்.

காலேஜி படிக்கற பையன் மாட்டுவண்டில ஏறிப்போறத இப்பதான் பாக்கறேன்.
அவனவன் பிகர தூக்கிட்டு மலைக்கு பின்னாடி போயிட்டு இருக்கான் நீ
என்னடான்னா மாட்டுவண்டி ஓட்டணுன்ற.

ஒரு பீடி குடுங்க.

இதுவேறயா? துண்டுல மடிச்சி வச்சிருக்கேன் பாரு எடுத்துக்க.

ம்

உங்க மாமா வர்றாரு பீடிய கீழ போட்றா!

சரிண்ணே!

மாப்ள வீட்டுக்கு வந்துட்டு போறது...

போறவழிதான் மாமா, பாத்துட்டு போறேன்.

டைம் ஆச்சு நான் ஆபிஸ் போறேன்.

சரிங்க மாமா.

பையனுக்கு கிறுக்கு புடிச்சிகிச்சுன்னு நினைக்கிறேன். நூறு மைல் இருக்கும் மாட்டு
வண்டில போறானாம். முட்டாப்பய. என்று நினைத்தபடியே கலவரமான முகத்துடன்
ஆக்சிலேட்டரை அழுத்தினார்.

வேலு ஒம்மாமன் மொகத்தை பாத்தியா!

பாத்தேன் பாத்தேன். அவங்களுக்கெல்லாம் இது புரியாது நீங்க போங்கண்ணே!

சாமியண்ணன் ஊர்க்கதை பேசிகிட்டே வண்டிய ஓட்டிகிட்டு வந்தார். அவர்
சொல்றது ஒண்ணு கூட நம்பற மாதிரி இல்ல. ஊர்ல உள்ள சரிபாதி பொம்பளைங்க
நடத்தை சரியில்லன்னு சொல்றாரு. பகல்லதாண்டா அவளுங்க பத்தினி வேசம்
போடறாளுங்க உனக்கு விவரம் பத்தாது. உங்கிட்ட இத பத்தி பேசறதே தப்பு
வா வந்து வண்டிய ஓட்டு நான் பின்னாடி படுத்துக்கறேன்.

ரெண்டு ஊர்தாண்டி அக்கா வீடு வந்தது.

என்னக்கா பசங்க எல்லாம் அதுக்குள்ள ஸ்கூல் போயிட்டாங்களா?

இப்பதான் வண்டியேத்தி அனுப்பினேன். நீ வரன்னு சொல்லியிருந்தா நிறுத்தி
வச்சிருந்துருப்பேன்.

வண்டில வந்தியா இல்ல பஸ்ல வந்தியா?

வண்டிலதான் வந்தேன். ஆனா மாட்டு வண்டி என்று சொல்லி சிரித்தேன்.

உனக்கு வர வர பைத்தியம் பிடிச்சிடுச்சின்னு நினைக்கிறேன். அதான் இப்படி
நடந்துக்கற. இன்னும் ரெண்டு மூணு நாள் இருக்குல்ல லீவ் அதுக்குள்ள என்ன
அவசரம்?

போர் அடிக்குதுக்கா அதான் சாமியண்ணன் கூடவே வண்டில கெளம்பிட்டேன்.

சரி நான் வரேங்கா...

காசு வேணுமா?

இல்ல.

என்னடா போனவேகத்துல வந்துட்ட?

இல்லண்ணே பசங்கலாம் ஸ்கூல் போயிட்டாங்களாம். அதுவுமில்லாம உங்களுக்கும்
நேரமாகுதுல்ல அதான்.

சரி கெளம்பலாம்.

அடுத்ததாக முத்து ஒயின்சில் வண்டியை நிறுத்தி மாட்டுக்கும் எங்களுக்கும் தண்ணி
காட்டிக் கொண்டோம்.

டேய் ஊமக்குசும்பன் மாதிரி இருந்துகிட்டு எல்லா வேலையும் செய்யிற இன்னும்
என்னென்ன பழக்கமெல்லாம் இருக்குதோ தெரில.

மையமாக சிரித்தேன்.

ஒரு கட்டத்துக்குமேல் பயணம் மிகுந்த வேதனையை தந்தது. குண்டும் குழியுமான
ரோட்டில் வண்டியும் குலுங்கி உடலையும் குலுக்கி பாகங்களை இடம்மாற
செய்தது.

நீ வேணா பஸ்ல ஏறி போயிக்கோ. நான் வண்டில வர்றேன் சாமியண்ணன்
சொன்னார்.

இல்லண்ணே இன்னும் கொஞ்ச தூரம்தான், போயிறலாம்.

விடாப்பிடியாக பஸ் ஏற்றி விட்டார்.

அண்ணாச்சி கடையில் இறங்கி ஒரு சிகரெட்டை பற்ற வைத்தேன். அவர்
ஆச்சரியமாக பார்த்தார்.

ஹாஸ்டலில் எவருமே இல்லை. வெறிச்சொடி இருந்தது. எவருமே இல்லாத
விடுதியை பார்ப்பது இதுவே முதல் முறை. ஒருவிதத்தில் கலக்கமாகவும்
சந்தோஷமாகவும் இருந்தது. உடல் அசதி வேறு படுத்தி எடுத்தது. அறையினுள்
நுழைந்து தாழிட்டுக் கொண்டேன்.

கனவுகளை மீட்டு அதை பத்திரப்படுத்துவது எப்படி என்று அவள்தான் கற்றுத்தந்தாள்.
முன்பெல்லாம் படுக்கையிலிருந்து எழுந்ததும் மசமசப்பான கனவுகள் என்னை விட்டு
தூரத்தில் செல்வது போலவும் அதை நான் துரத்தியபடியும் சென்று தோற்றுப்போய்
இறுதியில் மறுபடியும் உறங்கிவிடுவது போலவும் திரும்ப கண்விழிக்கும்போது அவள்
வந்து சொல்வாள் இதுபோலதான் தினமும் கனவுகளை மறந்துகொண்டிறேன் என்று.

ஒருசிலயோசனைகள் அன்று கூறத்துவங்கினாள் ஒவ்வொருமுறை கனவுகாணும்போது
அங்கு காண்பவர்களிடம் கேள்விகளை கேட்டுக்கொண்டே இரு விடியும்போது
ஏதோ ஒருகேள்வியில் துவங்கி மொத்தத்தையும் ஞாபகத்திற்கு கொண்டுவரலாம்
என்று கூறினாள். எதற்கு நான் கேள்வி கேட்கவேண்டும் என்றும் எதற்கு நான் மீண்டும்
எல்லாவற்றையும் ஞாபகத்திற்கு கொண்டுவரவேண்டும் எனக்கேட்டேன். அதற்கு
அவள் சொன்னாள். நீ தினமும் கனவுகளை நினைவிற்கு கொண்டு வர தவித்துக்
கொண்டிருப்பதை பார்த்துதான் உதவ வந்தேன்.

அவள் குரல் எனக்கு மிக பரிச்சியமானதாக இருந்தது. எங்கோ எப்போதோ
மிக நெருக்கத்தில் கேட்டிருக்கிறேன். மறக்க முடியாததாக இருக்கிறது. நான்
கேட்டேன் நீ என்னோடு இதற்கு முன்பு பேசியிருக்கிறாயா என்று. அதற்கு
அவள் சொன்னாள் உன்னோடு உறங்கியே இருக்கிறேன் நாம் இருவரும்
மிக நெருக்கமான தோழர்கள் எனவும் நாமிருவரும் பள்ளித்தோழர்கள்
என்றாள். அதற்கு மேலும் நமக்குள் ஒரு உறவுண்டு.

என்னால் ஒரு அவள் குரலைத் தவிர வேறெதுவும் நினைவில்லை. எப்படி
யோசித்து பார்த்தாலும் நினைவை மீட்க முடியவில்லை.

என் குழப்பமான முகத்தை பார்த்து அவள் சிரிக்க ஆரம்பித்தாள். அப்படி
சிரித்தது எனக்கு எரிச்சலை தந்ததாக அவள் எண்ணியிருக்கக் கூடும்.
சிரிப்பை நிறுத்திவிட்டு பேச்சினை தொடர்ந்தாள்.

நீ யார்னு கொஞ்சம் சொல்லேன்.

என்னடா என்னை மறந்துட்டியா? நான் சொல்லமாட்டேன் நீயா கண்டுபிடி.

எப்படி நான் கண்டுபிடிப்பேன்? குரல் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு.
ஆனா சரியா தெரில.

ப்ளீஸ் நீயே சொல்லேன்.

சரி. ஒரு தீபாவளி அன்னிக்கு முதல்நாள் நீ என்னோட கைல மருதாணி வச்சி
விட்ட, வச்சி முடிச்ச பிறகு என்னோட உதட்டுல முத்தமிட்டாய்..
நான் மருதானி கையாலே உன்னோட முகத்துல அறைஞ்சேன். உன்னோட
முகமெல்லாம் மருதாணி அப்பிகிச்சு. இப்பவாச்சும் ஞாபகம் வருதா?

சுகந்தி....

என்னால் ஆச்சரியத்தை அடக்கமுடியவில்லை. சந்தோஷத்தில் என்ன பேசுவதென்றே
தெரியவில்லை. ஏழு வருடங்களுக்கு முன்பு எட்டாவதோ ஒம்பதாவதோ இருக்கலாம்
ஒரே தெரு,ஒரே வீட்டின் மாடியில் அவள். ஒரே வகுப்பு. எல்லாம் ஒன்றுதான்.

தோழன், தோழி, காதலி, நண்பன் எல்லாமாக சேர்ந்து ஆண்டவன் எனக்கு
கொடுத்ததுதான் சுகந்தி.

பால்ய காலத்துக் காதல். என் முதலும் கடைசியுமான ஒரே காதலி.

பலவாறு சிந்தனைகள் ஓடியது கூடவே அழுகையும் வந்தது.

மவுனத்தை அவளே கலைத்தாள்.

ஏண்டா பேசமாட்டேங்கற? என் மேல கோவமா?

கிட்டே நெருங்கி வந்து என் கண்ணீரை துடைத்தாள். அவள் மேல் இதுவரை
உணர்ந்தரியாத ஒரு வாசனை வீச்யது அது என் அறை முழுக்க பரவி
சுகந்தமளித்தது.... சுகந்தி...

சுகந்தி உன்கிட்ட ஒரே ஒரு கேள்விதான் கேக்கணும் ரொம்பநாளா நினைச்சுகிட்டே
இருந்தேன். கேக்கட்டுமா?

என்கிட்ட ஏன் நாடக்கதனமா பேசற? தாராளமா கேளு.

ஏன் சுகந்தி நீ செத்து போன? அதுவும் உடம்புல மண்ணென்னை ஊத்திகிட்டு
உடம்பெல்லாம் கரியாகி... ச்சே நீ அப்படி செத்துருக்கவேணாம் சுகந்தி
உன்ன வாழையிலைல வச்சு பாக்கும்போது எப்படி இருந்துச்சு தெரியுமா?
அழுகை கேவலாக மாறி நிறுத்த முடியாத அளவுக்கு வந்துவிட்டது.

அவளும் மெல்லியதாக விசும்பினாள்.

ஏன் சுகந்தி நீ செத்துப்போன?

நான் காரணம் சொன்னா நீ தாங்க மாட்ட...

பரவால்ல சொல்லு.

ஒருநாள் எங்க வீட்டு கதவை திறந்து உள்ளே போனபோது உங்கப்பாவும்
எங்கம்மாவும் ஒரே கட்டில்ல... அதற்கு மேல் அவளால் பேசமுடியவில்லை.

எனக்கு என்ன பண்றதுன்னே தெரிலடா... அதுக்குபிறகு அம்மா என்னை
அடிச்சிட்டே இருந்தா. எனக்கு வாழவே பிடிக்கலடா வேற வழியும் தெரில
அதான் செத்துபோயிட்டேன்.

உடம்பெல்லாம் வியர்த்து ஊற்றியது உடைகள் ஈரமாகி விட்டது. நான்கு பேர்
என்னை வெள்ளைத்துணியில் சுருட்டி குழிக்குள் இறக்கியது போல இருந்தது.

எல்லாம் கலைந்து எழுந்தபோது இந்த உலகத்தில் யாருமே இல்லாதது போலவும்
என் அறை அந்தரத்தில் தொங்குவது போலவும் உணர்ந்தேன்.

எழுந்து சென்று ப்ரிட்ஜை திறந்து சில்லென்ற தண்ணீரை குடித்தேன்.

சத்தம் கேட்டு அம்மா விழித்துக்கொண்டாள். தலைமுடியை அள்ளி முடிச்சு
போட்டவாறே சுவற்றில் சுவிட்சை தேடி அழுத்தினாள்.

என் முகத்தை பார்த்ததும் கலவரமானாள். பேசாமல் சென்று படுக்கையில்
மீண்டும் விழுந்தேன்.

சாமியறையில் இருந்து விபூதியை அள்ளிவந்து நெற்றியில் பூசிவிட்டுச் சென்றாள்.

ஜன்னலின் வழியாக இரண்டு மூன்று கேள்விகள் சென்று கொண்டிருந்தன. ஏனோ
அவற்றை பின் தொடர்ந்து சென்று முழுக்கனவையும் நினைவுக்கு கொண்டு வர
முயற்சிக்க தோன்றவேயில்லை.

Monday, October 29, 2007

ஜொள்ளுக்குண்டோ அடைக்குந்தாழ்?

ஒரு பூவே பூவை சுமந்து கொண்டு நிற்கிறதே!!!

Photo Sharing and Video Hosting at Photobucket

ரெண்டு புன்னகைல எந்த புன்னகை அழகுன்னு ஒரே குழப்பமா இருக்கு :)

Photo Sharing and Video Hosting at Photobucket

ஏய்... எங்கிட்டயே உன் வேலைய காமிக்கறியா?

Photo Sharing and Video Hosting at Photobucket

பொய் சொல்லாம சொல்லுடா...

Photo Sharing and Video Hosting at Photobucket

அடிங்ங்...

Photo Sharing and Video Hosting at Photobucket

இப்ப சொல்லு...

Photo Sharing and Video Hosting at Photobucket

நீ பொய்தான சொல்ற?

Photo Sharing and Video Hosting at Photobucket

எங்க ஆயா மேல சத்தியமா சொல்றேன் நீங்க ரொம்ப அழகுங்க!

Photo Sharing and Video Hosting at Photobucket

நன்றி:விகடன்

Friday, October 26, 2007

தந்திரபூமி - இந்திரா பார்த்தசாரதி

இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துக்களை இதற்கு முன்பு படித்ததில்லை
அவருக்கென்று எந்த பிம்பங்களும் எனக்குள் பதிந்திருக்கவில்லை அதனால்
வாசிப்பின் போது ஏமாற்றமோ பிரமிப்போ எதுவும் ஏற்படவில்லை. கதையின்
முக்கியமான பாத்திரமான கஸ்தூரி பிழைப்பிற்காக டெல்லி வருகிறான்
ஆரம்பத்தில் அய்யராத்து அம்மாஞ்சி டெல்லி வரைவந்து ஏதோ வேலையில்
ஒட்டி பிறகு இருபது வருடங்களுக்கு முன்பு செட்டிலான வடகலையோ
தென்கலையோ ஏதோவொரு கலையை கட்டி காத்துவரும் அரசாங்க
ஊழியரின் மகளை ஏதேச்சையாக சந்தித்து காதல்வயப்பட்டு கல்யாணத்தில்
முடியும் போலிக்கிறது என்று முதல் பத்து பக்கங்களை படித்து முடித்தபிறகு
அனுமானித்தேன். இதை எதற்கு கதையாக எழுதவேண்டும் சின்னத்திரை
தொடர்களிலே இதைத்தானே காட்டுகிறார்கள் என்று சலிப்பு மேலிட
தொடரலாமா வேண்டாமா என்று யோசித்து பிறகு வேறு எதுவும் புத்தகங்கள்
இல்லாததால் இதையே தொடர்ந்தேன்.

ஆரம்பத்திலேயே சுவாரசியமில்லாமல் போனதற்கு சுஜாதாவின் முன்னுரையும்
ஒரு காரணம். என் குழந்தைத்தனமான முன் அனுமானங்கள் தவறு என்று படித்து
முடித்த பிறகு உணர்ந்தேன். சுவாரசியமானதாக இல்லாவிட்டாலும் வாசிப்பினூடே
நம்மையும் கதையில் இணைத்துக்கொள்கிற உத்தியை ஆசிரியர் நன்றாக
கையாண்டிருக்கிறார். தன் மேதாவித்தனங்கள் எல்லாம் ஒருபெண் முன் தவிடு
பொடியாக்கப்படுவது விரும்பாமல் சுற்றியலையும் மனம் கொண்டவனாக கஸ்தூரி
கதையில் அவன் பாத்திரத்தின் அதிநவீனமான முற்போக்கு சிந்தனைகள் கண்டு
ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை.

அரசாங்கத்தின் அத்தனை நெளிவுசுளிவுகளையும் கதைக்குள் எப்படி கொண்டு
வந்தாரேன்று வியப்பாக உள்ளது. கதையின் ஒவ்வொரு வரியிலும் எள்ளல்
இருப்பது ஒரு புன்னகையுடன் வாசிக்க வைக்கிறது. இத்தனை நகைச்சுவையான
எழுத்தை முன்பு வாசித்ததில்லை. அதுவும் எலியை எக்ஸ்போர்ட் செய்ய்யும் தொழில்
பற்றி விவரிக்கும்போது வாய்விட்டு சிரிக்கமுடிந்தது. அதிபுத்திசாலித்தனமான
உரையாடகளும் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளும் அங்கங்கே தூவியிருப்பது
இனிமை.

எல்லா இடத்திலும் எதார்த்தத்தை அப்படியே படம் பிடித்திருக்கிறார். கல்யாணம்
என்ற வியாபாரத்தில் நம்பிக்கை இல்லாத ஒருவன் தன் பிடியில் இருந்து மெல்ல
மெல்ல தன்னையறியாமல் விலகும் பெண்ணை கண்டு அச்சமுறும் கஸ்தூரி. முதலில்
ஆணாதிக்க சிந்தனை உள்ளவனாக இருப்பானோ என்றெண்ணியிருந்தேன். சடார்
சடாரென அவன் எடுக்கும் முடிவுகள் நமக்குள் பதை பதைப்பை ஏற்படுத்துபவையாகவும்
அதுவே பின் அப்பாத்திரத்தின் மேல் காதல் கொள்ளவும் வைக்கின்றன.

எந்தவிதமான இலக்கும் இல்லாமல் பயணிக்கும் வாழ்க்கை கஸ்தூரிக்கு எதிர்ப்படும்
எவரையும் தன் வலைக்குள் வீழ்த்தும் தொழில்நேர்த்தி வியாபாரத்தில் மட்டுமல்ல
பெண்கள் விஷயத்திலும். தன் சுயமரியாதைக்கு சிறிது கலங்கம் ஏற்பட்டாலும் அந்த
கணத்திலேயே வேலையை தூக்கியெறியும் அவனுக்கு ஒருசமயத்தில் போக்கிடம்
இல்லாமல் போகும்போது ஒருபெண்ணின் தயவால் முன்பு செய்த வேலையை விட்ட
அடுத்த நொடியிலேயே அடுத்த வேலை கிடைக்கிறது. அப்போது அவன் தனக்குள்
கேட்டுக்கொள்ளும் கேள்விகள் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் சுய அலசலாக
இருக்கலாம்.

கதையில் ஏராளமான கதாபாத்திரங்கள் வந்து போகின்றன அவைகளுக்குள் நடக்கும்
உரையாடல்கள் ஒரு திரைப்படத்தைப் போல நமக்குள் விரிவது அலுப்பில்லாமல்
வாசிக்க முடிகிறது. ஒவ்வொரு இடத்தில் கதாபாத்திரத்தின் முகபாவனை இப்படிதான்
இருந்திருக்குமோ என்று கூட எண்ணவைக்கும் அளவுக்கு உள்ளது. முக்கியமானது
இதன் நகைச்சுவை மிகவும் நுட்பமான இரண்டாவது வாசிப்பில்தான் புரிந்துகொள்ள
முடியும் என்பது போல அமைந்திருப்பது சிறப்பம்சம். எழுத்தாளருக்கு நிச்சயமாக
நகைச்சுவை உணர்வு இயல்பிலேயே இருக்கிறது.

கதையின் ஆரம்பம் அழகாகவும் பிறகு கஷ்டபட்டு முடிவில் சுபமாக முடிக்கும்
கதையாக இருக்கும் கதையின் பாத்திரங்கள் எல்லாம் மிகவும் நல்லவர்களாக
இருப்பார்கள் என்று எண்ணுவீர்களானால் எல்லாமே தவறாக இருக்கும் இதை
வாசித்தபிறகு. எவர் நல்லவர் எவர் கெட்டவர் என்றே தீர்மானமாக
எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. அவரவர் அவரவர் சந்தர்ப்பத்திற்கு
காத்திருக்கிறார்கள். மனிதன் எவ்வளவுதான் நவீனங்களுக்குள் புகுந்து நாகரீக
வேஷம் போட்டாலும் அவனின் ஆதிகுணம் என்பது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில்
வெளிப்பட்டே ஆகவேண்டும். அந்த வெளிப்பாடு வெற்றியிலா தோல்வியிலா
இயலாமையிலா எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதுதான் கதையின்
சாராம்சம். இத்தனை முற்போக்குவாதியாக காட்டப்பட்டிருக்கும் கஸ்தூரியின்
கதாபாத்திரம் மீனாவினால் தனக்கு ஏற்பட்ட அவ்வாறு கஸ்தூரியால் எண்ணப்படும்
தோல்வியை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவளை தன்வசமாக்கி
தன் தோல்வியை வெல்ல மீனாவின் கணவனை ராஜஸ்தானுக்கு அனுப்பும்போது
கஸ்தூரியின் மேல் வைத்திருந்த அத்தனை ஆச்சரியங்களும் காணாமல் போகின்றன.
அடுத்தவனின் மனைவியை அடைய துடிக்கும் அந்த நொடியில் அத்தனையும்
காணாமல் போகின்றன.

கஸ்தூரிக்கு அடுத்தபடியாக கதாநாயகி போன்ற பாத்திரமான மீனாவை எப்படி
புரிந்துகொள்வதென்றே தெரியவில்லை. கதையின் ஆரம்பத்தில் மேலிடத்து
அதிகாரியை வளைத்துபோடும் செகரட்டரி என்ற அளவில் அறிமுகமாகி பின்
நம்ப முடியாத அளவுக்கு முதிர்ச்சியை வெளிப்படுத்தும் அந்த பாத்திரத்தை
புரிந்துகொள்வது கடினம் அதனால்தான் கஸ்தூரி அவளிடம் தன் ஆணவத்தை
கைவிட்டு சரணடைகிறான். பெண் என்பவள் பெண்ணாலேயே புரிந்து கொள்ள
முடியாதவள் என்பது போல அமைந்த பாத்திரம். நல்லவளா, கெட்டவளா என்ற
இருவார்த்தைகளுக்கு அடக்க முடியவில்லை. அதையும் தாண்டி கஸ்தூரிக்கு
தான் எந்த விதத்திலும் சளைத்தவள் அல்ல என எண்ண வைக்கும் அளவுக்கு
அவளின் போக்கு இருக்கிறது. அதுவும் உண்மைதான்.

ஆரம்பமும் இல்லாத, முடிவும் இல்லாத கதை இது. வாழ்க்கையை அதன்போக்கில்
வாழவிரும்பும் ஒருவனின் வாழ்க்கையில் எதிர்படும் சவால்கள், தோல்விகள்,வெற்றிகள்
சந்தோஷங்கள் எல்லாம்தான் தந்திரபூமி. கதையின் முடிவாக எழுத்தாளர் என்ன
சொல்ல வருகிறார் என்பது வாழ்க்கை பெரியோர்கள் கட்டமைத்தபடி வாழ்ந்தால்தான்
இனிமையாக இருக்கும் என்பது போல எனக்கு பட்டது.

எல்லாம் வாசித்து முடித்தபிறகு சுஜாதாவின் முன்னரையை மறுபடியும் வாசித்தேன்.
முன்பே சொன்னது போல முன் அனுமானங்களுடன் ஒரு விஷயத்தை அலட்சியமாக
எண்ணினால் அது தவறாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. முதல் கோணல் முற்றிலும்
கோணல் என்பது தவறான பழமொழி என்பதை உணர்ந்தேன்.

வாசிக்க கொடுத்த அய்யனாருக்கு நன்றி.
அய்யனாருக்கு வாசிக்க கொடுத்தவருக்கும் நன்றி.

Wednesday, October 24, 2007

கிழிச்சதும்... கிழிச்சதும்...

போத்தீஸ்
சென்னை சில்க்ஸ் ஜிவல்லரி மார்ட்
ரீகன் ஹேர் வெர்டிலைசர்
just one bottle will do the magic
க்ரிஸ்டல் ஜட்டிகள்
விஜய் டீவி திறந்திடு சீசெம்
மந்திரத்தை சொல்லு பரிசுகளை அள்ளு
மிலானோ பைப் பிட்டிங்குகள், பாத்திங் லக்சரீஸ்
சாசெல் மல்டிமீடியா பாடமுறை
ராதா இண்டெர்நேஷனல் பைப் பிட்டிங்குகள்
கோட்டா ஜிவல்லர்ஸ்
பில்ராத் மருத்துவமனை
யெரா க்ளாசஸ்
பெண்களை கவர கடி ஜோக்ஸ் உதவாது
அடுத்த வார ஸ்பெசல் பெண்களை கவுக்க பல ஐடியாக்கள்
வாங்க மறந்து விடாதீர்கள்.
அஞ்சால் அலுப்பு மருந்து(இன்னுமாடா இருக்கு!!!)
வைகிங் ஜட்டி, வேட்டிகள், பாலியஸ்டர் சட்டைகள்
ட்யூரோப்ளக்ஸ் மெத்தைகள்.
ஜான்சன்ஸ் சட்டைகள்.
குமரன் ஸ்டோர்ஸ்
தீபாவளி ஸ்பெசலாக ஒரு புடவைக்கு பல முந்தானைகள் ஜிப் மேட்ச்.
க்ரீன் டீ உலக மக்களால் அதிகம் அருந்தப்படும் டீ.
(உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக மாதிரி போலருக்கு)
லோட்டஸ் நவீன லேப்பராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மையம்
சைக்கிள் ப்யூர் அகர்பத்திகள்.
ஹண்டே ஹாஸ்பிட்டல்
டீர்ம்லைன் கிச்சன்ஸ் & பெட்ரூம்ஸ்.
ஆல்ப்ரான் wheat flakes
ஆண்டுமுழுவதும் பயம் அறிய குருபெயர்ச்சி புத்தகத்தை வாங்குங்கள்
(புனித கங்கை நீர் சாஷே அன்பளிப்பு :)))))
ரிதம் வாட்சஸ்
ஜூனியர் ஹார்லிக்ஸ் 123
நாயுடு ஹால்



தீபாவளி ஸ்பெசல்னு ரெண்டு புத்தகமா கொடுக்கறாங்களேன்னு ஆறு திராம்ஸ்
கொடுத்து இந்த எழவ வாங்கிட்டு வந்தேன். வாங்கி பாத்தா ரெண்டு புத்தகமும்
முத்தாரம் சைஸ்ல இருக்குது. இப்பயே தீபாவளி எப்படிடா வந்துச்சுன்னு இந்த
சின்ன புத்தில உரைக்கல. நல்லவேளை 8 திராம்ஸ் கொடுத்து ஆவிய
வாங்கி பாவியாகாம விட்டேனே.

எல்லாமே முழுப்பக்க அல்லது இரண்டு பக்க விளம்பரங்கள். இவ்ளோ
விளம்பரம் சும்மாவா போடறாங்க. காசுவாங்கிகிட்டுதான போடறாங்க
அதுக்கு 9 ரூபாய் விக்கிறத அஞ்சுரூவாயா வித்தாதான் என்ன?
எல்லா விளம்பரமும் வழுவழுன்னு கண்ணை பறிக்கற மாதிரி இருக்கு
இந்த மாதிரி போட்டா எக்கச்சக்கமா செலவாகும் அந்த செலவை
வாங்கற மடையனுங்க தலையில கட்டிடலாம். விளம்பரத்துக்கு விளம்பரமும்
ஆச்சு, வருமானத்துக்கு வருமானமும் ஆச்சு.

நூத்து அம்பது பக்க விளம்பரத்துல ச்சி சாரி புத்தகத்த்துல பாதிக்கு பாதி
விளம்பரம் அடைச்சிகிட்டு இருக்கு மீதில சினிமா சின்னத்திரைன்னு இருக்கு
இதுல தமிழ்நாட்டுலயே அதிகம் விற்பனையாகும் நம்பர் ஒன் இதழாம்!!!
சிறப்பம்சம் டூபீஸ்ல நாயுடுஹால், சிங்கிள் பீஸ்ல வைகிங், ஜான்சன் விளம்பரம்
வேற. கொடுமடா சாமி.

ஒரு விஷயம்கூட நல்லவிஷயமே போடலியா புத்தகம் முழுக்க சினிமாவும்
விளம்பரமும்தான் இருந்துச்சான்னு நீங்க என்னை கேக்கலாம். என்னோட பதில்
கண்டிப்பா இருந்துச்சி. வெற்றி பெற்றவர்களின் கதை, தன்னம்பிக்கை கட்டுரை
இதெல்லாம் இருந்ததுதான் மறுப்பதற்கில்லை ஆனால் தமிழ்நாடு மக்கள்
கொடுக்கற 9 ரூபாயும் இங்க இருக்கற மக்கள் கொடுக்கற 6 திராம்ஸ் பணமும்
அதற்கு ஈடானது அல்ல. விழலுக்கு இறைத்த நீர்மாதிரி ஆகுதேன்னு என்
கவலை இதுல தமிழ்லயே அதிகம் விற்பனையாகும் ஒரே இதழ்னு டேக் வேற.

எதைஎதையோ படிச்சி கிழிக்கிற பாமரன் அய்யாவும் இதே பத்திரிக்கைலதான்
என்னத்தையோ கிழிச்சிகிட்டு இருக்காரு. இவரு கண்ணுக்கு எப்படி இதெல்லாம்
தெரியாம போகுதுன்னு தெரில.

இதை ஏண்டா படிச்சிட்டு எங்க உயிரை வாங்கிட்டு இருக்கன்னு கேக்கறிங்களா?
அதையும் சொல்றேன் கேளுங்க.

நம்ம நண்பர் ஒருத்தருக்கு அம்மை போட்டுருச்சி அதே இலங்கை நண்பர்தான்.
ஆங்கிலம் இந்தியும் தெரியாததினால நான் கூட போனேன். சரியா எட்டரைக்கு
மருத்துவமனைக்குள்ள போயிட்டோம். ஆனா டாக்டர பாக்கறதுக்கு இரவு ஒன்றரை
மணி ஆச்சு. அவ்ளோ கூட்டமெல்லாம் இல்லிங்க மொத்தமா இருவது பேர் இருப்போம்.
அதுக்கே அம்புட்டு நேரம். ரெஸ்டாரெண்ட்ல இருந்து பார்சல் கொடுக்க வந்தவங்கிட்ட
கூட முகத்த பாக்காம ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்டுக்கு உண்டான பேப்பரை கொடுத்து
லெப்ட்ல போயி ரைட்டுல போ அங்கதான் டெஸ்ட் பண்ற இடம் இருக்குன்னு
சொல்ற அரபி ரிசப்ஷனிஸ்ட்.

உடம்புக்கு முடியாம இங்க வந்தா இவளுங்க பண்ற அட்டகாசம் தாங்க முடில.
பிஸ்கட் திங்கும்போது லிப்ஸ்டிக் அழிஞ்சி போச்சான்னு நிமிசத்துக்கொருமுறை
கண்ணாடிய பாத்துகிட்டு இருக்கறது. வாடிக்கையாளர்கள் எதாச்சும் தகவல்
கேட்டா மூடிகிட்டு உக்காருடா வெண்ணேங்காரா மாதிரி பதில் சொல்றது.

ஹெல்த் கார்டு, இன்சூரன்சு மயிறு மண்ணாங்கட்டின்னு எடுத்தது என்னத்துக்குன்னு
தெரில. ஒரே ஒரு டாக்டர்தான் இருக்காரு நாங்க என்ன பண்றதுன்னு சத்தம்
போட்டவுடனே சொல்றா அந்த ரிசப்ஷனிஸ்ட். எங்க ஊர் கிராமத்துலகூட
எந்தநேரம் போனாலும் டாக்டரபாக்கலாம். அங்கல்லாம் டாக்டர பாக்கணும்னா
அரைமணி நேரத்துல பாக்கலாம். பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடு
உலகத்து பெரிய பெரிய கட்டிடங்கள் உள்ள நாடுன்னு இங்க வந்தா உசுர மட்டும்
எடுத்துகிட்டு உடம்ப ஊருக்கு அனுப்பிடுவானுங்க போலருக்கு.

ஒரு டாக்டர பாக்கவே அஞ்சு மணிநேரம் ஆகுதுன்றத என்னால பொறுத்துக்கவே
முடில அதனால கீழ போனேன் அங்க சேட்டன் கடையில குமுதம் தீபாவளி
ஸ்பெசல்னு ஒன்னுக்கு ரெண்டா தர்றானுங்களேன்னு வங்கிட்டு வந்து படிக்க
ஆரம்பிச்சேன் எரியற கொள்ளில எண்ணெய ஊத்துற மாதிரி இருந்துச்சு அத
படிக்கும்போது.

பேசாம அங்க தேமேன்னு திரிஞ்சிகிட்டு இருந்த மலையாள சேச்சிகளையாச்சும்
ரிசப்ஷன்ல உக்காத்தி வெச்சிருந்தானுங்கன்னா ஒழுங்கான பதிலும் கொஞ்சம்
பொழுதுபோக்காவும் போயிருக்கும். :(

அதனாலதான் இந்த மர்டர்வெறி.

கிட்டத்தட்ட கோவம்னா என்னன்னு மறந்து போயிருந்த நேரத்துல கொலவெறிய
கொண்டு வந்து சேத்துட்டானுங்க.

Wednesday, October 17, 2007

அவைகளை அப்படியே விட்டு விடுங்கள்



அதனால் யாருக்கொன்றும் தீங்கில்லை
அந்த "மற்றவர்"களால் ஒரு பயனுமில்லை
அப்பொழுதே விட்டிருக்கலாம்
நாளையும் விடப்போகலாம்
விடாமலும் போகலாம்
அவளோடு சேர்ந்திருந்திருக்கலாம்
வேறொருத்தியும் நயமாக கிடைக்கலாம்
நயமில்லாமலும் போகலாம்.
எதுவுமற்றும் யாராலும் இருக்க
முடியலாம்.
நம்பகத்தன்மை என்றுமே உங்களைச்
சார்ந்தே இருக்கலாம்.
இல்லாமல் போகும்போது
நீங்கள் இல்லாமலிருக்கலாம்
வாழ்க்கையில் ஏராளமான
"லாம்"கள் இருக்கின்றன.


வை

ளை


ப்

டி
யே

வி
ட்
டு

வி
டு
ங்

ள்.


நன்றி: முடியலத்துவம்.

Monday, October 15, 2007

சதுரங்க குதிரை


பிரம்மச்சரியம் என்பது பிரச்சினையில்லாத வாழ்க்கை என்று மேலோட்டமாக
பார்த்தால் தெரிவது ஆனால் இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாத ஒரு
பெண்ணுக்கு என்னென்ன சோதனைகளை இச்சமூகம் தருமோ அத்தனையும்
ஆணுக்கும் உண்டு. திருமணமே ஆணையும் பெண்ணையும் முழுமையாக்குகிறது
என்பது நம் சமூக கட்டமைப்பின் விதிகளை தளர்த்தும் இருபாலருக்கும் ஒரே
பொதுவாகும். ஏனோ பெண்ணிற்கு மட்டும் இழைக்கப்படுவது போல
மாயை உண்டாக்கியிருக்கிறார்கள்.

தந்தையில்லாத ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து படித்து சுயமாக சம்பாதித்து
திருமணம் என்ற பந்தத்தில் நுழைய சமயம் பார்க்கும்போது அரைக்கிழவனாக
மாறியிருக்கும் அதற்கு மேலும் திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டுமா
என்ற நினைப்பில் விட்டுவிட்டவர்களை எண்பதுகளில் அனேகம் பேரை காணலாம்.
இன்றையை வாழ்க்கைக்கும் சற்றேறக்குறைய இது பொருந்தும்.

இந்நாவலில் வரும் நாராயணனின் கதையும் இதுதான். கிராமத்து குடும்ப
பிண்ணனியில் வளர்ந்து பம்பாய்க்கு வேலைக்கு செல்லும் நாராயணனின் கதையும்
இதுதான். வாழ்வின் அனேக நேரங்களில் தனக்குள் மட்டும் உரையாடிக் கொண்ட
மனிதனின் கதை.



"எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல
வேள்வி அல்ல, பிரசவ வேதனை அல்ல
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ
அல்ல. பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல
பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல.
வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி
என் சுயத்தை தேடும் முயற்சி."


இக்கதையை படித்து முடித்ததும் மனித மனங்களை ஓரளவு புரிந்துகொள்ளும்
அனுபவத்தை நீங்கள் பெறுவீர்கள். ஏராளமான கதைகளும் திரைப்படங்களையும்
நாம் பார்த்திருக்கலாம் ஒரே கதாபாத்திரத்தை மட்டும் வைத்துக் கொண்டு
கதையை சுவாரசியமாக்கும் முயற்சியை அனைத்திலும் பிரதானமாக காணலாம்.
ஆனால் இந்நாவலில் ஒரே கதாபாத்திரமான நாராயணனை சுற்றி மட்டும்
கதை செல்கிறது சுழித்து செல்லும் நதியை போல அதன் போக்கில் செல்கிறது
எத்தனை தடைகளை, எத்தனை சோதனைகளை அனைத்தும் தாண்டி திருமணம்
என்ற பந்தத்தில் சேராமலே அதன் பயணம் முடிகிறது.

"கரும்பு வண்டியின் மேல் அமர்ந்து, கரும்பைக் கடித்து துப்பிக் கொண்டே போன
பதினான்கு வயது பெண், கால் முட்டில் வைத்து ஒடித்த மறுபாதிக் கரும்பை அவனை
நோக்கி வீசி எறிந்த கணம் வாழ்க்கையை சுவாரசியமுள்ளதாக்கி விட்டுப்போனது."

மூன்று செட் பனியன், ஜட்டி, கர்ச்சிப், சாக்ஸ், ஒரு லுங்கி, ஒரு துண்டு, விரிப்பு
போர்வை, தலையணை உறையுடன் பேண்டும் சர்ட்டும் ஆறேழு ஜோடிகள்
இருக்கும். மாற்றி மாற்றிப் போட்டுக்கொள்ள. எல்லாம் பாலியஸ்டர் விவகாரங்கள்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் எடுத்தது முதல் போன மாதம் எடுத்தது வரை.
பழையவை தையல் விடும். நிறம் மங்கி வெளிறும். கிழிவது கிடையாது. மிகவும்
சலித்து போனால் யாருக்காவது கொடுத்து விடுவது. சேர்த்து வைக்க இடம் பற்றாது.
உள்ளாடைகள் ஒன்றூ கிழிந்தால் மட்டுமே மாற்றூ வாங்குவது.

இதை தவிர ஆஸ்தி என்ன?

பேனா, பைஃபோகல் கண்ணாடி, பெல்ட், ஒரு ஜோடி ஷூ ஒரு ஜோடி தோல்செருப்பு.
ஒருஜோடி மழைக்கால ரப்பர் சாண்டக், மடக்கு குடை, அட்ரஸ்-டெலிபோன் எண்கள்
கொண்ட டயரி, கல்விச்சான்றிதழ்கள், வேலை செய்த கம்பெனிகளின் அனுபவ
சான்றிதழ்கள்,பாஸ்போர்ட், வங்கிக்கணக்கு புத்தகம்.

மூன்று மணி நேர முன்னறிவிப்பில் இடம்பெயர முடியும் எனும் தயார்நிலை வாழ்க்கை.
எல்லைப் போர்வீரனை போல கடிதங்களுக்கு பதில் எழுதிப்போட்டதும் கிழித்துப்
போட்டுவிடுவது. "நலமாக இருக்கிறேன், எல்லாரும் சுகமாக இருக்கிறீர்களா?
உங்கள் கடிதம் கிடைத்தது. என்பவற்றுக்கு மேல் நான்காவது வார்த்தைக்கு போராட
வேண்டியிருந்தது. சிலசமயம் தேதி போடாமல் அஞ்சலட்டைகளை அச்சிட்டு
வைத்துக்கொள்ளலாமா என்று கூடத் தோன்றும்

இதுபோன்ற எத்தனையோ அர்த்தமுள்ள நிகழ்வுகளை கதை நெடுக காணலாம்.
பிரம்மச்சரியத்தை விரும்பி ஏற்றுக் கொண்டவனல்ல, வாழ்க்கையின் பாதையில்
தானாக வந்து ஒட்டிக்கொண்டது ஒருவகையில் அவனுக்கு சந்தோஷத்தையே
தந்தது. வாழ்வின் அடுத்தநொடி தரும் ஆச்சரியங்கள் ஏராளம். நாராயணனின்
வாழ்க்கையில் இதுபோன்ற அடுத்தநொடி ஆச்சரியங்களே அதிகமிருந்தன.
அவையில்லாத அடுத்த நொடிகள் யுகங்களாக.

கல்யாணமாகாதவன் என்றால் ஆயிரம் இளக்காரம். சமூகம் பல பெயர்களை நமக்கு
கொடுக்கும். நாராயணனுக்கு அவனைப்போன்றே கடைசி வரை திருமணம் செய்து
கொள்ளாத ஒருவன் நண்பன் குட்டினோ இக்கதையில் வரும் முக்கியமான பாத்திரம்.
ஆனால் அறுபதாவது வயதில் துணையை தேடிக்கொள்ளும் அதுவும் ஆதரவற்ற
பிள்ளைகளால் கைவிடப்பட்டவள்.

"கட்டிலில் வந்து விழுந்தாலும் கவனம் பக்கத்து அறையின் சப்தங்களில் சென்று
நிலை கொண்டவவாறு இருந்தது. சற்று நேரத்தில் கதவு திறந்து அடைபடும் ஓசை.
மூன்றாவது ஆள் வெளியேறுகிறான் போலும். உரத்த சத்தம் நின்று விட்டது.
மறுபடியும் எழுந்து கதவிடுக்கின் வழியாக உற்றுப்பார்த்தான் நாராயணன்.
தனக்கு நாற்பத்தைந்து வயதாகிறது என்பது ஞாபகம் வந்தது. நெருக்கடியான
பஸ்களில் ஸ்தனம் இடிப்பதையும் விட இது ஒன்றும் கௌரவமான செயலில்லை.
இருபத்தைந்து வயதுக்கு உட்பட்ட வாலிபன் எடுத்துக்கொள்ளும் அற்பத்தனமான
சுதந்திரங்களை தானும் எடுத்துக்கொள்வது ஈனமானது என்று எண்ணினான்.
ஆனால் மனித மனம் எந்த வயதிலும் கேவலமானதாக இருக்க முடியும் போலும்.
போர்த்துக்கொண்டுள்ள கௌரவ சட்டைகள் ஈனங்களை மறைத்தும் நாற்றங்களை
மூடியும் வைத்து விடும்."

இதேபோன்றுதான் கதையின் மற்ற கதாபாத்திரங்களுடன் உரையாடுவதை
காட்டிலும் தனக்குள், தன் மனவிகாரங்கள், பண்புகள், கோபங்கள், துயரங்கள்
என அனைத்தையும் தனக்குள் மட்டும் பேசிக்கொள்ளும் ஒரு பாத்திரம்.
ஒருவகையில் இந்த புத்தகம் சுயபரிசோதனையாக கூட வாசிப்பவருக்கு
அமையலாம். தனியனின் பயணம்தான் சதுரங்க குதிரை ராணியை நெருங்க
முடியாத குதிரை.

ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு கணத்தில் தனித்து விடப்படலாம் அப்போது
அத்தனிமையின் பயணத்தில் யாருடைய வருகையும் இல்லாமல் கூட போகலாம்
தென்றலோ புயலோ எதுவுமே தீண்டாத சூன்யப்பெருவெளியின் இறுதி வரை
நிகழலாம். அப்பயணத்தின் இறுதியாக நீங்கள் கண்டவை எதுவாக இருக்கும்?
மற்றவருக்கு அவ்வாழ்க்கை எப்படியான புரிதலாக இருக்கும். நினைத்துப் பார்க்க
இயலாத கொடுமையாக இருக்குமென்றால் பிறந்ததின் அடையாளம் என்னவாக
இருக்கும்?

கதையை படித்து முடித்ததும் உங்களை அதுவே ஆக்கிரமித்திருக்கும். புயலிலே
ஒரு தோணி நாவலுக்கு அடுத்ததாக என்னை உளவியல் ரீதியாக பரிசோதிக்க
உதவிய புத்தகமாக இதைக் காணுகிறேன்.

நூல் பெயர்: சதுரங்க குதிரை
ஆசிரியர் பெயர்: நாஞ்சில் நாடன்.
விஜயா பதிப்பகம்
விலை ரூபாய் 70.00

*வண்ண எழுத்துக்களில் உள்ளவை புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

**புத்தகத்தை வாசிக்க கொடுத்த அய்யனாருக்கு நன்றி!
அய்யனாருக்கு கொடுத்த அண்ணாச்சிக்கு நன்றி! நன்றி!!

***நன்றி anyindian.com

புத்தகம் படிச்சின்னா அதபத்தி எழுது அப்பதான் உன்னோட அருமை பெருமைய
எல்லாரும் தெரிஞ்சிக்க முடியும்னு என்னை ஊக்குவித்த(??) அண்ணாச்சியை
இப்போது பெருமையோடு பார்க்கிறேன்.

சேகர், உமா, சாலமன், அனு

ஒருபோட்டிக்கு ஒருத்தர் அதிகபட்சமா எத்தனை முறை நடுவரா வரலாம்னு தெரியல
ஆனா விஜய் டீவில வர்ற கலக்க போவது யாரு நிகழ்ச்சிய நான் பார்க்க ஆரம்பிச்ச
நாள்ல இருந்து சேகர் தம்பியும் உமா பாப்பாவும்தான் நடுவரா இருக்காங்க. ஒருவருச
காண்ட்ராக்ட் போட்டுட்டாங்களோ என்னவோ???

ஆனா அந்த உமா பாப்பா சிரிக்கிற ஸ்டைல் இருக்கே அடட்டா காதுல கடப்பாரைய
விட்டு நோண்டற மாதிரி இருக்குன்னு சொன்னோம்னா ஏன் பெண்கள சிரிக்க கூட
விடமாட்டிங்களான்னு பெண்ணிய குரல்கள் எழும்ப வாய்ப்பிருப்பதால் அதைப்பற்றி
என் கருத்து "சிரிக்கறதே பெரிய விஷயம் அதுவும் பெருஞ்சிரிப்பு சிரிக்கறதுன்றது
வாங்கி வந்த வரம்" அதனால நோ கமெண்ட்ஸ்.

நல்ல நல்ல நகைச்சுவை துணுக்குகள் சொல்லி நம்மளை சிரிக்க வைக்கும் தென்கச்சி
சுவாமிநாதன் மாதிரி நம்ம சேகர் தம்பியும் மாறிட்டாருன்னு தோணுது. மனுசன்
கிச்சு கிச்சு மூட்டுனா கூட சிரிக்க மாட்டேங்கறாரு.

எனக்கு தெரிஞ்சி இந்த மாதிரி நிகழ்ச்சிகள்ல மிமிக்ரி பண்ணனும்னா நடிகர்கள்
குரலை விட்டா ஆளே இல்லியா. அதுவும் விஜயகாந்த ஏன் குறிவச்சு எல்லா
மிமிக்ரி ஆர்டிஸ்டும் வெளுக்கறாங்கன்னு புரியல. அவர் குரல வச்சுதான் எல்லாரும்
பயிற்சி எடுப்பாங்க போலருக்கு.

டீ.ஆர் வகையறாவுக்கும் தொலைக்காட்சி பேட்டிக்கும் அப்படியொரு ராசி. என்ன
ராசின்னு கேக்கறிங்களா இந்த ரெண்டு மண்டையனுங்ககிட்ட மைக்க கொடுத்தொம்னு
வைங்க கண்ணுல தண்ணி காட்டாம கீழ வைக்கவே மாட்டானுங்க. மொக்கையான
மேட்டருக்கெல்லாம் எப்படி அழுவறதுன்னு இவங்க ரெண்டு பேர கேட்டாவே
போதும்.

சர்ச்சைக்குரிய, இதுல எனக்கு பெரிய டவுட்டே இருக்கு விஜய் டீவியே ப்ளான்
பண்ணி அடிச்சிருப்பாங்களோன்னு ஏன்னா என்னமோ பொங்கள் நிகழ்ச்சி நிரல
பத்து நிமிசத்துக்கு ஒரு முறை போடற மாதிரி ஓவரா போட்டாங்க.

"ஆடவே இல்ல" இந்த ஒரு வார்த்தைய சொன்னதுக்காக மட்டும் பிரிதிவிராஜ்
வெளிநடப்பு செஞ்சாருன்னு சொல்றது தப்பு. கூட ஆடின உமா பாப்பாவை
எக்சலண்ட் பர்பாமென்ஸ், சூப்பர், பிரமாதம்னு சொல்லிபுட்டு இந்தாள பாத்து
நீ ஆடவேல்லன்னு சொன்னதத்தான் அவரால தாங்கிக்க முடில.

ஒண்ணுமில்லாத இந்த மொக்கை பிரச்சினைல விஜய் டீவிக்கு டீஆர்பி ரேட்டிங்
அதிகமா வந்ததுதான் லாபம்.

பிரிதிவிராஜும் லூசுத்தனமாதான் பேசி இருக்கறாரு, இல்லயா பின்ன?? இத்தன
வயசாகியும் உலகத்த புரிஞ்சிக்கலயே... இந்த உலகம் யாருக்கு சாதகமா பேசும்னு
கூடவா தெரியாது.

இதுவே சிம்பு உமா பாப்பாவ பாத்து நீ "ஆடவேல்ல, நீ ஆடறதுக்கு சும்மாவே
இருக்கலாம்"னு சொல்லியிருந்தார்னு வைங்க, ஓசை செல்லா சிம்புவோட குறிய
அறுத்து காக்காய்க்கு போட்டுருப்பாரு. நான் சீரியசாதாங்க சொல்றேன்.

அட இந்த கொடுமைய விடுவோம்.

இந்த தீபாவளி, பொங்கல் பட்டி மன்ற வியாபாரியான நம்ம சாலமன் பாப்பையா
அய்யாவ அசத்த போவது யாரு நிகழ்ச்சிக்கு கூப்பிட்டு இருந்தாங்க. அசத்தறதுக்கு
இல்லிங்க நடுவரா இருக்கறதுக்குதான். விஜய் டீவிலயாச்சும் பங்கேற்கற ஆளுகள
வாராவாரம் மாத்தி போடறாங்க ஆனா சன் டீவில "அரைச்ச மாவ அரைப்போமா"
டைப்புதான்.

அதுவும் அந்த பொம்பள வேஷம் போட்டு ஒருத்தன் வாராவாரம் தவறாம
கலந்துக்குவான் அவன் அங்க அசைவுகள பார்த்ததும் கோவம் வராத எனக்கே
கோவம் வருது. ங்கொய்யால அவன நேரல பாத்தன்னா ஒரு எத்து விடணும்
போலருக்கு.

படுபயங்கரமான ஆபத்துகளுக்கு இடையிலயும் இந்த டீவி புரொக்ராம்கள இறக்கி
பாத்ததுல கடுப்பு வந்ததுதான் மிச்சம். ஆனா ஒண்ணு காப்பி வித் அனு மட்டும்
என்னால குறை சொல்லவே முடில. சின்ன வயசுல நடந்த நிகழ்ச்சிகள சொல்லி
பேட்டிய கலகலப்பா கொண்டு போகறதிலகாட்டும், கேள்வி கேட்கும்போது
அவங்க முகபாவமாகட்டும் கைகோர்த்து நடக்கும் தோழியை போன்ற தோழமை.

பர்சனலி ஐ லைக் அனு... ஆனா கமலுக்கு அம்மாவா நடிச்சதுதான் என்னால
தாங்கிக்க முடில.

Tuesday, October 02, 2007

சுழற்சியின் உச்சங்கள்


வாரத்தின் ஆறுநாட்களும் ஏழாவது நாளை நோக்கியே
நகர்ந்து கொண்டிருக்கின்றன. அன்று செய்வதற்கென்று
நிறைய இருந்தாலும் மனம் யாருடன் சேர்ந்து பீர்
குடிக்கலாம் யாரைப்பற்றி புறம் பேசலாம், பார்த்த
படத்தை பீற்றிக்கொள்ளலாம் என்றே சிந்திருக்கிறது.
அந்த ஒருநாளை வாழ்ந்து தீர்ப்பதற்குள் என்னை
கடத்திக் கொண்டு போய் சுழற்சிக்கான முதல் நாளில்
உட்கார வைத்துவிடுகிறது இந்த சுழற்சியின் உச்சத்தில்
ஓர்நாள் என் மனமும் பிறழ வாய்ப்பிருப்பதாக
தோன்றுகிறது. ஒற்றை வாழ்க்கைக்கு மாற்றாக இருந்திருந்தால்
சுவாரசியமாக இருந்திருக்குமா என்று தெரியவில்லை.
எந்த கணத்தில் வாழ்க்கை சுவாரசியமாககூடும்
என்ற எதிர்பார்ப்பு சலிப்படைந்து வருகின்ற
நாட்கள் இவை வரும்காலத்தில் நம்பிக்கையற்றும்
போகலாம் யாருக்கு தெரியும்.!
குடிக்க யாரும் முன்வராத வாரயிறுதியின் அடுத்த
நாளாவது ஆயிரம்காலத்து பயிரை மேய மனம்
பாயலாம் இதுவும் யாருக்கு தெரியும்.!

Saturday, September 29, 2007

பாவனா ஒரு கேள்விக்குறி!!!

சமிபத்தில் (ஒரு வாரத்துக்கு முன்னாடி)என் நலம் விரும்பி ஒருவர் பாவனாவின்
சமீபத்திய (அதுவும் இப்பதான்னு நினைக்கிறேன்)பேட்டி ஒன்றை மடல் அனுப்பி
இருந்தார். வெகு நாட்களுக்கு அப்பால் பாவனாவை பார்க்க போகிற ஆவலில்
தரவிறக்கம் செய்து இரண்டு மூன்று முறை பார்த்தேன்.

வழக்கமான ஊறுகாய் நாயகிகள் போல அல்ல பாவனா என்பது ஓரிரண்டு
படங்களை தவிர்த்து பார்த்தால் தெளிவாக புரிந்து விடும். (கி.க.சா, ஆர்யா,
கூடல் நகர் இதெல்லாம் சேர்த்தி இல்லிங்க). வழக்கமான நடிகைகளின் பேட்டி
மாதிரி இல்லாமல் தோழியுடன் பேசுவது போல ஒரு உணர்வு.(ஓவரா இருக்குதோ)

பேட்டி கண்டவரின் மொக்கைத்தனமான கேள்விகளுக்கு வழக்கமாக நடிகைகள்
தரும் போலிப்புன்னகைள் பதிலைப்போல இல்லாம நிஜமாகவே பதில் அளித்தது
போல இருந்தது. அந்த முடிக்கற்றைகளை ஒதுக்குவதிலும், சிரிக்கும்போது வாயை
பொத்துவதையும் தவிர்த்து பார்த்தால்(எல்லா நடிகைகளும் அதத்தான செய்றாங்க)
நல்லாவே பேசி இருக்காங்க.

காதலைபத்தி கேள்வி கேட்டதும் அவங்க சொன்ன பதில் உண்மையாகவே இன்றைய
பெண்களின் மனதை பிரதிபலிப்பது போல இருந்தது. நிறைய டப்பு உள்ள
பையனைத்தான் காதலிப்பாங்களாம், கல்யாணம் பண்ணிப்பாங்களாம். யாருக்குதான்
இந்த எண்ணம் இல்ல? :)

எந்த சூட்டிங் போனாலும் ரத்த காயம் ஆச்சுன்னா அந்த படம் சூப்பர் ஹிட்
ஆகிடுமாம் அத தெரிஞ்சிகிட்ட ஒரு துபாய் சேட்டன் ஒரு பொட்டி நிறைய
பேண்டேஜ் அனுப்பினாராம் சிரிச்சிகிட்டே சொன்னாங்க. யாருப்பா அந்த சேட்டன்?

மேலே சொன்னது போல வாழ்க்கைக்கு உபயோகமாக பல விஷயங்களை தெரிஞ்சிக்க
முடிஞ்சது.

இந்த பேட்டியை வளரும் சிறுவர்களும், வளர்ந்த பெரியவர்களும் காண சிபாரிசு செய்கிறேன்.

வெள்ளெருக்கு

அய்யனாரும் பிற பதிவர்கள் சிலரும் ஏற்படுத்திய முன்விவரணைகள் மூலமாக
அந்நூல் எனக்கு பரிச்சயமானது. பக்கங்கள் அதிகம் நீளும் நாவல்களில்
அதிகம் விருப்பமில்லை. பொட்டுதெறித்தது போல சிறுகதைகள் ஏற்படுத்தும்
சிலிப்புகளே அதிகம் என்னை ஈர்த்தது. நிறைய சொற்களை உள்ளடக்கிய
நாவல்களை விட வாழ்க்கையை ஆதாராமாக சிறு உரையாடல்கள் மூலம்
வெளிப்படுத்தும் சிறுகதைகள் ஏராளம் இருக்கின்றன. அந்த வரிசையில் அமைந்து
விடாமல் வெள்ளெருக்கின் அனைத்துக்கதைகளும் எதற்கும் பொருந்தாமல்
இருக்கின்றன. தமிழில் அதிகம் தெற்கைபற்றிய சிறுகதைகளே அதிகம்
எழுதப்பட்டிருக்கின்றன, புனையப்பட்டிறுக்கின்றன. நான் வாசித்த வரையில்
தென்னாற்காட்டின் வாழ்க்கைமுறையை எவரும் பதித்ததில்லை. இச்சிறுகதை
தொகுப்பு அதனை பூர்த்தி செய்கிறது.

முதன்முறையாக வெள்ளெருக்கை கையில் எடுத்தபொழுது எனக்குள் எதிர்
பார்ப்புகள் அதிகமாக இருந்தன. அவை எவற்றையும் பொய்யாக்காமல்
அத்தனையும் திரைக்காட்சிகள் போல வாசிக்கையில் என் முன் நிழலாடியது
போன்ற ஒரு உணர்வு.

பொதுவான இடத்தில் நமது பேச்சுக்கள் தலைவர்களின் மேடைப்பேச்சு போலதான்
அழகுற அமைந்திருக்கிறது. அதைத்தான் உலகமும் நம்புகிறது. ஆனால் அது
உண்மையல்ல. எந்த ஒரு சம்பவத்தையுமே நேரில் பார்த்தவன் எழுதும்போதுதான்
அதைப்பற்றிய பிம்பம் வாசிப்பவனுக்குள் முழுமையாக நிழலாட சாத்தியமுண்டு
என்பதை ஆழமாக நம்ப வைத்திருக்கிறது இந்த தொகுப்பு.

குறிப்பிட்டு சொல்லும்படியாக இத்தனை சிறுகதைகள்தான் என ஒரு முடிவுக்கும்
வரமுடியாமல் குழப்பத்தில் ஆழ்ந்து விட்டேன். அத்தனை எதார்த்தமான
வெளிப்பாடுள்ள கதைகள். கதைகள் என்பதை விட நடந்தவை என்றுதான் சொல்ல
முடியும். எவரும் இதை கதை என்று ஒப்புக்கொள்ளவே மறுப்பர்.

ஒரு விஷயம் உங்களை ஆச்சரியப்படுத்துகிறது என்றால் அது அரிதாக நடக்கும்
ஒன்றாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. அதுபோலவே இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும்
வார்த்தைகளும், நம்பிக்கைகளும் இக்காலத்தில் காணவே முடியாதபடி மாறிவிட்டிருக்கிறது.
ஒருகாலத்தில் நடந்தவை நான் சிறுவயதில் தூண்மறைவில் நின்று பார்த்திருக்கிறேன்
என்ற விஷயங்களை எழுத்தில் பார்க்கிற போது ஒரு உற்சாகம். இதுவரை யாரும்
எழுதவில்லையே என்ற ஆதங்கமும் ஒன்று சேர்ந்து என்னை சந்தோஷப்படுத்தியது.

இச்சிறுகதை தொகுப்பில் ஒவ்வொரு கதையிலும் என்னைப் பொருத்திப் பார்க்கும்
படியாக ஒரு கதாபாத்திரம் கண்டிப்பாக காண முடிந்தது. நான் இல்லாவிட்டாலும்
நான் பார்த்த மனிதர்கள் எழுத்தில் தெரியும்போது நூலிற்கும் எனக்குமான நேரடி
உரையாடலாகவே இந்த வாசிப்பனுபவம் எனக்கு தந்தது.

இச்சிறுகதைகளின் மிகப்பெரிய பலம் கிராமத்து மனிதர்களின் எள்ளல் பேச்சு
படிச்சிட்டு சிரிக்காம இருக்கவே முடியாது.

இந்நூலை வாசித்து முடித்த பிறகு இதுவரை எத்தனையோ சத்தில்லாத குப்பைகளை
படித்து தொலைத்து வீணடித்திருக்கிறோம் என்னும் மெல்லிய குற்ற உணர்ச்சி
என்னை தாக்கியது.

சிறுகதைப் பிரியர்கள் தவற விடக்கூடாத தொகுப்பு இது.

வெள்ளெருக்கு
கண்மணி குணசேகரன்
தமிழினி பதிப்பகம்.
விலை ரூபாய் 70

பறவையே எங்கு இருக்கிறாய்?



என் வாழ்க்கைல வந்தது மூணே மூணு லெட்டர்
Still i rememnber my first letter
ப்ரபா நீ என்னை தேடியிருப்பேன்னு எனக்கு தெரியும்
நானும் அம்மாவும் இங்க மகாராஷ்ட்ராவில தூரத்து மாமா வீட்டுல இருக்கறோம்
நீ வர்றதுக்கோ லட்டர் எழுதறதுக்கோ ஏதும் சமயம் வர்றப்ப நான் சொல்றேன்

நேரத்துக்கு சாப்பிடு
வாரத்துக்கு மூணு நாளாவது குளி
அந்த சாக்ச தொவைச்சு போடு
நகம் கடிக்காத
கடவுள வேண்டிக்கோ...

-ஆனந்தி

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே...

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே...

அடி என் பூமி தொடங்கும் இடம் எது நீதானே
அடி என் பாதை இருக்கும் இடம் எது நீதானே
பார்க்கும் இசைகளிலெல்லாம் பாவை முகம் வருதே
நீங்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ
கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ

நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக
அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே...

உன்னோடு நானும் போகின்ற பாதை
இது நீளாதோ தொடு வானம் போலவே
கதை பேசிக்கொண்டே வா காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும் உன் மவுனங்கள் போதும்
இந்த புல் பூண்டும் பறவை யாவும் போதாதா?
இனி பூலோகம் முழுதும் அழகாய் போகாதா?
முதல் முறை வாழப்பிடிக்குதே
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே
முதல்முறை கதவு திறக்குதே
முதல்முறை காற்று வருகுதே
முதல்முறை கனவு பலிக்குதே... அன்பே...

ஏழை காதல் மலைகள்தனில் தோன்றுகின்ற ஒரு நதியாகும்
மண்ணில் விழுந்தும் ஒரு காயமின்றி உடையாமல்
உருண்டோடும் நதியாகிடுவோம்
இதோ இதோ இந்த பயணத்திலே
இதுபோதும் கண்மணி வேறென்ன நானும் கேட்பேன்
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்

இந்த நிகழ்காலம் இப்படியேதான் தொடராதா?
என் தனியான பயணங்கள் இன்றுடம் முடியாதா?

முதல்முறை வாழப்பிடிக்குதே
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே
முதல்முறை கதவு திறக்குதே
முதல்முறை காற்று வருகுதே
முதல்முறை கனவு பலிக்குதே... அன்பே...

பாடலைக் கேட்க (மூணாவது பாட்டு க்ளிக் பண்ணி கேளுங்க. டைரக்ட் லிங்க் குடுக்க போயி டவுசர் கிழிஞ்சிடுச்சி.)

தமிழ் MA படத்தில் இளையராஜா பாடியிருக்கும் பாடல்தான் மேலிருப்பது.
எனக்கென்னவோ அவரின் இசையத்தவிர மகன்களின் இசையில் பாடும்
பாடல்கள்தான் மிகவும் பிடிக்கிறது. உதாரணத்துக்கு
எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
யாரோ யார் யாரோ யாரோடு யாரோ
அறியாத வயசு புரியாத மனசு
வரிசையில் இந்த பாடலும் மனதில் ஆழமாக பதிகிறது.

சோகத்திற்கென மீட்டப்படும் கருவிகளில் ஒன்றாக ராஜாவின் குரல்
இருக்கிறதோ என்று கூட எனக்கு சந்தேகம் இருக்கிறது.

இந்த பாடலில் வரும் பெண்ணின் குரலைக் கேட்கும்போது நமக்கிது போல
யாரும் இல்லையே என ஆதங்கப்பட வைக்கிறது. வரிகளுக்கு போட்ட
இசையைவிட அந்த பெண்ணின் குரல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.