எல்லையற்ற அன்பு கொள்வோம்

Friday, August 31, 2007

கோயி

அவன் பெயர் கோவிந்தன் பொறக்கும்போது வச்ச பேர் அது. பெத்தவங்களுக்கும்
அந்த பேர் ஞாபகம் இல்ல, ஊர்ல உள்ள மக்களுக்கும் ஞாபகம் இல்ல. எல்லாரும்
கூப்பிடறது செவிட்டூமை சிலசமயம் கோயி. ஆனா எப்படி கூப்பிட்டாலும் திரும்பி
பாக்க மாட்டான் ஏன்னா அவனுக்குதான் காதே கேக்காதே.

குள்ளகுட்டியோட மகன்னு சிலபேர் சொல்லுவாங்க, சிலபேர் குள்ளகுட்டியோட
சாபம்னு சொல்லுவாங்க. குள்ளகுட்டின்றது பரம்பரை பேர் அவன் வம்சத்துலயே
அஞ்சடிக்கு மேல எவரும் வளர்ந்ததில்லை. கோயிந்தன் மட்டும் சற்று விதிவிலக்கு
மூன்று மகன்களில் இளையமகன் தான் கோயி என்கிற கோவிந்தன். கோயி அரை
லூசாக பிறந்துவிட்டான் என்பதற்காக அவனிடன் யாரும் ஈடுபாடு காட்டவில்லை.
வீட்டில் வளர்க்கும் மாடுகளுள் ஒன்றாகவே வாழ்கிறான். என்றாவது ஒருநாள்
வீட்டிற்குள் நுழையும்போது அவன் முதுகுகில் நான்கைந்து கோடுகள் போட்டு
வெளியே அனுப்புவாள் அவனை பெற்றவள். அதற்கு பிறகு இரண்டு மூன்று
மாதத்திற்கு உள்வாசல்படியை மிதிக்கவே தயங்குவான். தழும்பு மறையும்
நேரத்தில் மறுபடி உள்ளே நுழைந்து பார்க்கவேண்டும் என்ற ஆவல் மீண்டும்
பிறக்கும். மிகுந்த சேட்டைக்காரன்.

மனிதர்கள் மிக விசித்திரமானவர்கள் மனதிற்குள் நினைப்பவை எல்லாம்
உதட்டை விட்டு வெளிவந்துவிட்டால் ஒருமணி நேரத்தில் உலகமே சுடுகாடாக
மாற வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கோயிந்தன் விஷயத்தில் மட்டும் எவர்
வேண்டுமானாலும் நினைத்ததை நேராக சொல்லிவிடலாம் அந்தளவுக்கு
அவனையே அறியாமல் சுதந்திரம் வழங்கி இருந்தான்.


மாவாட்டி வேலுதான் அவனுடைய நண்பன், எதிரி, ஹீரோ, வித்தை காட்டுபவன்
எல்லாமே. வயது அறுபத்தி ஐந்தை தாண்டிருக்கலாம் தேகத்தை பார்த்தால்
அப்படி தெரியாது. ஒருகாலத்தில் வீடுவீடாக மாவரைத்து பிழைத்து வந்ததால்
மாவாட்டி என்ற பெயர் நிலைத்து விட்டது. கடந்த வருடம் சோத்துக்கு
செத்த ஒரு வீட்டில் இருந்து பதினெட்டு வயது குமரியை கல்யாணம் செய்து
வந்திருந்தார். கிழவனுக்கு முப்பது நாப்பது ஆடுகள் தேறும். மாசாமாசம்
குருவிக்கடை பாய் கொடுக்கும் ஆட்டுப்பணத்தை கட்டிலுக்கு அடியில் மறைத்து
வைத்திருப்பதாக ஊரெல்லாம் பேச்சு. அவருடைய ஒரே கவலை புதிய
மனைவியை கர்ப்பமாக்க முடியவில்லை என்பதுதான்.

பதினைந்து வருடமாக கோயியுடன் ஒரே ஏரிக்கரையில் மாடு மேய்ப்பதால்
சைகை மொழி நன்கு பரிச்சயமாகி இருந்தது. கோயியுடன் சைகை மொழியால்
பேசும் ஒரே ஜீவன் என்பதால் கோயிக்கும் கிழவன் மீது ஏகப்பட்ட பாசம்.

காலையில் பள்ளி செல்லும் பையன்களுக்கு எதிர்வரிசையில் மாடுகளை ஓட்டிக்
கொண்டு ஏரிக்கரைக்கு செல்வது தினப்படி வழக்கம். ஏறுக்கு மாறாக அவன்
சட்டை பொத்தான்கள், வாய் சற்று இடது பக்க இழுத்து விட்டது போல் இருக்கும்
அதனால் வாயை சரிவர இழுத்து மூடுவதில் சிக்கல் இருப்பதால் வழியும் எச்சில்
இடது பக்க சட்டைப்பைக்குள் நேராக இறங்கும் அதனால் எல்லா சட்டையிலும் நீக்க
முடியாத கரை ஒன்று இருக்கும் அதிலிருந்து ஊத்தநாத்தம் வருவதாக மாவாட்டி
அடிக்கடி குறைபட்டுக்கொள்வார். அவனின் கால்சட்டையின் பின்புற ஓட்டையில்
சிறுவர்கள் லட்டர் போட்டு விளையாடுவார்கள்.

பதிலுக்கு இவன் மாடுவிரட்டும் குச்சியால் எவனையாவது அடிக்க கூட்டத்தில்
ஒருவன் மாட்டை எதிர்த்திசைக்கு விரட்டி விடுவான் இதனால் நிலைகுலைந்து
போகும் திரும்ப மாடுகளை ஒன்றிணைத்து மேட்டுத்தெருவை கடக்கும்வரை
அல்லல்தான். ஒருவகையில் இந்த அல்லல் அவனுக்கு பிடித்திருந்தது. ஆனால்
ஞாயிற்றுக் கிழமைகளில்தான் அவனை சீண்ட எவருமே இல்லை.

மேட்டுத்தெருவை கடந்துவிட்டால் அவன் உற்சாகம் இருமடங்கை எட்டும்
ஏனென்றால் அங்குதான் மாட்டுக்கூட்டத்தோடு மாவாட்டியின் ஆட்டுக்
கூட்டமும் இணையும். என்றாவது ஒருநாள் ஏரித்தண்ணீரில் தள்ளி விட்டாலொழிய
உடல் நனைவதுதான் அவன் அறிந்து குளிப்பது இல்லையென்றால் ஒதுங்க
முடியாதபடி மழை வரும்போது குளிப்பதென்பது சாத்தியப்படலாம்.

கோயிக்கு மாவாட்டியை அடுத்து சந்தோஷம் தரும் ஒரே ஆள் மாடுகளுக்கு
லாடம் கட்டும் பெரியசாமி என்கிற பெருசுதான். மாடுகளுக்கு லாடம் கட்டும்
காட்சியும் எத்தாம் பெரிய மாடாக இருந்தாலும் சடாலென தரையில் வீழ்த்தி
கால்களுக்கு தாம்புக்கயிறால் எட்டு முடிச்சி போடுவான் பெருசு. அந்தக்
காட்சியை இமை கொட்டாமல் பார்த்து ரசிப்பான் கோயி. ஆணி எடுத்து
தருவது சுத்தியல் எடுத்து தருவது போன்ற உதவிகளை கோயி செய்ய
உதவுபவன் என்பதால் லாட வேலை இருந்தால் ஏரிக்கரையின் தெற்கு மூலையில்
இருக்கும் புளிய மரத்தடியிலிருந்து ஒரு விசில் சத்தம் பறக்கும் அதைக்கேட்டு
எங்கிருந்தாலும் அடித்து பிடித்து ஓடிவருவான் கோயி.

எந்த வகையில் உசத்தியாக இருப்பினும் எந்த வகையில் தாழ்ந்து இருப்பினும்
அவரவருக்கு ஏற்ற சந்தோஷங்களும் துக்கங்களும் இவ்வுலகில் நிறைந்து
இருக்கின்றன. ஆனால் அதை தேடிக்கண்டுபிடிக்கத்தான் சற்று சிரமப்பட
வேண்டும். கோயி எந்த சந்தோஷத்தையும் எதிர்பார்க்க முடியாதபடி
அமைந்துவிட்டதால் இதுதான் தனக்கு சந்தோஷமளிக்க கூடிய விஷயங்கள்
என்று எண்ணியிருந்தான்.


பதினெட்டு வயதை கோயி நெருங்கி விட்டதனால் முகத்திலும் கணுக்காலில்
இருந்து தொடையின் இறுதிப்பகுதி வரையிலும் மயிர்கள் செழித்து வளரத்தொடங்கின.
அரைக்கால் டவுசர் முழுதாக மூடமுடியவில்லை. தெருப்பெண்கலின் புகாரினால்
கோயியின் அண்ணன்கள் போட்டுக்கிழித்த குழாயில் இரண்டை குள்ளகுட்டி
போடச்சொல்லி கொடுத்தார். முதல்முதலாக குழாயினை போட்டு பார்க்கும்போது
அவன் முகத்தில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத சந்தோஷம் நிரம்பி இருந்தது.
ஆனால் முதலிரண்டு நாட்கள் ஏன் தன்னைப்பார்த்து நாய்கள் குரைத்தன என்று
தெரியாமல் குழம்பி போய்விட்டான். அதைவிட மாவாட்டியிடமிருந்து பெற்ற
பாராட்டு அவற்றையெல்லாம் மறக்கச்செய்து விட்டது.

அன்றிலிருந்து மூன்றாவது நாள் இரவு படுத்தபடியே மூச்சை நிறுத்தியிருந்தார்
மாவாட்டி. "கிழவன் சாவு நல்ல சாவு தூங்கின மாதிரியே செத்து போயிட்டான்"
எங்க வீட்டுக்கிழம் போவேனான்னு ரெண்டு மாசமா இழுத்துகிட்டு இருக்குது"
என்று தாட்டியான பெண்ணொருத்தி எழவு வீட்டில் அளந்து கொண்டிருந்தாள்.
கவலைகளை வலுக்கட்டாயமாக முகத்தில் இருத்தி வைப்பதாக எண்ணிக்கொண்டு
மாவாட்டியின் வயதையொத்த பெருசுகள் வாசலில் அமர்ந்திருந்தார்கள்.
அவர்களின் முகம் எழவு வீடு இப்படிதான் இருக்கும் இருக்கமுடியும் என்று
சொல்லும் விதமாய் இருந்தது.

வழக்கம்போல கோயி மாடுகளை ஓட்டிக்கொண்டு மாவாட்டி வீட்டு முன் நின்றான்.
"மாவாட்டி இறந்துட்டான் இனிமேல் நீ தனியாதான் மாடுமேய்க்க போகணும்
என்று சிலர் சைகை மொழியால் புரிவிக்க படாத பாடுபட்டுக்கொண்டிருந்தனர்.
இதெல்லாம் புரியாமல் மாடுகளை தெருவிலேயே விட்டுவிட்டு இழவு வீட்டில்
உள்ளே சென்று பிணைக்கப்பட்டிருந்த மாவாட்டியின் கால் கட்டை விரல்களை
பிடித்திழுந்து என்னோடு வா என்று சொல்லிக்கொண்டிருந்தான் கோயி.

அவனை இழுத்து வந்து வெளியே விட்டனர் நாலைந்து பலசாலிகள்.

"மாவாட்டி செத்துட்டாருடா கோயி" என்றார் ஒருவர்.

"மாவாட்டியே வந்து சொன்னால் நம்புவேன் என்பது அவன் மனநிலை.
அவனுக்கும் புரிகிற மாதிரி சொல்லத்தான் ஒரு ஆள் தேவையாக இருந்தது
கோயிக்கு.

"மேய்ச்சலுக்கு போகாம ஆடுகளுக்கு எலும்பு துருத்திகிட்டு தெரிய ஆரம்பிச்சிடுச்சி
நேத்தே குருவிக்கடை பாய் வந்து சத்தம் போட்டுட்டு போனான்" நாளையில
இருந்து ஆட்டை நீ பாத்துக்கோ வீட்டை நான் பாத்துக்கறேன் என்று மகளுக்கு
யோசனை கூறினாள் கிழவனின் வயதையொத்த கிழவனின் மாமியார்.

"இரண்டு மூன்று நாட்களில் கோயியுடன் ராசியாகிப்போனாள் திரும்பவும்
மேட்டுத்தெரு முகப்பில் கிழவனுக்கு பதிலாக அவரின் மனைவி காத்திருக்க
தொடங்கினாள்"

ஒரு மழைநாளின் இறுதிப்பொழுதின்போது ஊணாங்குச்சிகள் நிரம்பிய குகை
போன்ற அமைப்பினுள் கோயியை அழைத்துச்சென்றாள்.

"அன்றிலிருந்து மாராப்பு விலகிய பெண்களை அதிசயமாகவும் இமை கொட்டாமலும்
பார்க்க ஆரம்பித்தான் கோயி"

Thursday, August 30, 2007

வெற்றிகரமான 100வது பதிவு.

எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது தம்பியிடமிருந்து.

//வலையுலகத்துல எனக்கு ரோல்மாடலா எடுத்துகிட்டது உங்களத்தான்.// அப்படின்னு எழுதி என்னை உச்சி குளிர வச்சிருந்தான். அடடா!! எந்த மாதிரின்னு
நெனச்சு படிச்சா என்ன எழுதியிருந்தான் தெரியுமா?

//பதிவெழுத ஆரம்பிச்ச புதுசுல நான் எழுதின கன்றாவி கவுஜைக்கும் கமெண்ட்
போட்டு ஊக்கப்படுத்தியவர் நீங்கள்.//

அதாவது கண்றாவி கவுஜைக்கும் பின்னூட்டம் போடுற தறுதலைப் பயலுவ எல்லாமே
பதிவு போடுதானுவளே, நாம ஏன் எழுதக்கூடாதுன்னு நெனச்சிருக்கான். நல்லா இருடே!!

இதுதான் தம்பியோட எழுத்து மகிமைன்னு சொல்லலாம். எலி போல இருந்துக்கிட்டு
எருமை போல சாணி போடுறது'ன்னு சொல்லுவாங்க நம்மூருல. தம்பி கதிரும்
அப்படித்தான். ஒண்ணும் தெரியாத மாதிரி முகத்தை வச்சுக்கிட்டு ஊமக்குசும்பு
பண்றதுன்னா அல்வா திங்குற மாதிரி நம்ம பயலுக்கு.

நாமதான் எழுதுறோமே, நம்மளத்தான் வாசிக்கிறாங்களேன்னு நெனைக்க
ஆரம்பிச்சுட்டா சட்டில எல்லாம் தீர்ந்து போய் அகப்பையில ஒண்ணுமே வராமலேயே போயிடும். ஆனா தம்பி அப்படியில்ல. வாசிக்கணும், இன்னும் புதுசா தெரிஞ்சிக்கணும்,
தெரியாததை தெரியாதுன்னு சொல்லி கேட்டுத் தெரிஞ்சிக்கணும்கற ஆர்வம் அவன்
கிட்ட ரொம்பவே இருக்கு. (இல்லேன்னா 40 நிமிசம் நான் போடுற
மொக்கையையெல்லாம் தாங்கிக்க முடியுமா என்ன?) அந்த ஆர்வமும், வாசிப்பும்தான் எழுதணும்கற அவனோட முயற்சியை இப்ப மத்தவங்களும் கவனிக்க வைக்குற
அளவுக்கு வளர்த்திருக்குன்னு சொன்னா அதுல பொய்யில்லை.

எழுதுறவங்களுக்கு தன் எழுத்து மேல கொஞ்சமாவது நம்பிக்கை இருக்கணும். ஒரே
மாதிரியே எழுதிக்கிட்டிருக்காம பல விசயங்களையும் எழுத முயற்சிக்கணும்.
அதுக்கு தன் எழுத்து மேல நம்பிக்கை இருந்தா மட்டும்தான் முடியும். ரொம்ப
மொக்கை மட்டும் இல்லாம கவுஜை, கதை, வாசிப்பனுபவம், திரைப்பட
அனுபவம்னு வித்தியாசமா எழுதும்போதுதான் எழுத்து கொஞ்சமாவது
மேம்படும்.அப்படி நம்ம எழுத்து கொஞ்சமாவது தேறியிருக்கான்னு நமக்கே
வஞ்சகம் இல்லாம நாம கேட்டுக்கணும். அது ஒருவிதமான சுயபரிசோதனை.
நாம எழுதுற எழுத்து நமக்கே திருப்தி இல்லாம போகலாம்.ஆனா, அதை
உடைச்சு வெளிய வரதுக்குக் கொஞ்சம் பொறுமையும் முயற்சியும்
அவதானிப்பும் அவசியம். இதெல்லாம் தம்பி கிட்ட நான் பார்த்திருக்கேன்.

தன் எழுத்து தனது ஆரம்ப காலத்திலிருந்து வெகுவாக மாறியிருப்பதை அவராலேயே
உணர முடிவது ஆரோக்கியமான விசயம். முதல் தடவை பதிவர் சந்திப்பு
நடந்தபோது ஒன்றுமே பேசாமலிருந்தாலும் விசயங்களையும் விவாதங்களையும்
கூர்மையாக அவர் அவதானிக்கிறார் என்பதை அவரது உடல்மொழி உணர்த்தியது.
இந்த அவதானிப்பின் விளைவுகளைத்தான் இன்று தம்பியை வாசிக்கும் கூட்டத்தை அதிகப்படுத்தியிருக்கிறது என்று தைரியமாகச் சொல்வேன்.

மனிதர்களுக்கு அடுத்தவர்களின் ஊனங்கள் எப்பவும் கேலிப்பொருள்தான் அது
அத்தகைய மனித மனங்களில் தோற்றுவிக்கும் ரணங்களை எவரும் யோசிப்பதில்லை.
யோசிக்க வைக்கிறது பூனைகளுடன் உறங்கும் கோபால் கதை சிறுகதை
எழுதுவதென்பது அத்தனை எளிய விசயமல்ல. அதுவும் பதிவில் பத்துவரிக்கு மேல்
எழுதினால் எவரும் படிக்க மாட்டார்கள் என்ற உண்மை தெரிந்தும் வாசிக்க
வைக்க வேண்டுமென்றால் அந்த எழுத்தில் ஈர்ப்பு இருந்தாக வேண்டும். தம்பியின்
இந்தக் கதையில் அந்த ஈர்ப்பு இயல்பாக வந்து விடுகிறது. இதைத்தான் எழுத்தில்
தெரியும் மாற்றம் எனக்குறிப்பிட்டேன்

இராக் என்ற தேசமே சின்னாபின்னாமாகிக் கிடக்கிறது வல்லரசுகளின் ஏகாதிபத்திய சிந்தனைகளால். அங்கு வாழ்பவர்களின் அன்றாட வாழ்க்கை குறித்த நம் சிந்தனை செய்திகளோடு போய்விடுகிறது. பாதிக்கப்பட்டவரின் குரலிலேயே ஒரு பதிவிட்டிருப்பது
நன்றாக இருக்கிறது. அந்தப் பதிவின் மூலமாக எந்தக் கருத்தையும் உட்புகுத்தாமல் ஒரு யதார்த்தவாதியின் மௌனம் போல கதிர் தனது இயலாமையை
வெளீப்படுத்தியிருப்பதுதான் அழகு

//சினிமா பாத்தேன்னா விமர்சனம் எழுதற பழக்கமே இல்ல. ஏன்னா விமர்சனம்
பண்ற அளவுக்கு நம்ம பொதுஅறிவு கிடையாது. படத்துல நமக்கு பிடிச்ச
காட்சிகளையும் அதை பார்வையாளன் பார்வையில சொல்றதும்தான் எனக்கு
பிடிச்சது. // இப்படி சொல்ற கதிரை நம்ப முடியாது. வெயில் படத்துக்கு இவர்
எழுதியிருக்குற விமர்சனம் தேர்ந்த கலைரசிகனுடைய முத்ரிச்சியோடு
எழுதப்பட்டிருக்கிறது.

கிராமத்தில் வளர்ந்தவர்களுக்குச் சொல்வதற்கு ஏகப்பட்ட விசயங்கள் நினைவலைகளாக மனதிற்குள் ஒளிந்து கொண்டேயிருக்கும். நகரத்து மனிதர்களின்
இறுக்கமில்லாத இயல்பான மனிதர்களும், மண் வாசம் தொலைக்காத
கலைகளும், தங்களுக்கேயுரித்தான தனித்துவங்களுமாக இருக்கும் கிராமத்திலிருந்து
வருபவர்கள் சொல்லும் செய்திகள் எல்லாமே சுகம்தான். தெருக்கூத்து, தீபாவளி பதிவுகள் இம்மாதிரி நினைவலைகளைச் சுமந்து வருவது நல்ல
வாசிப்பனுபவமாக அமைகிறது.

இவரோட விசிசி கிரிக்கெட் கிளப் ஒரு அழகான நினைவோடை. கவுண்டமணி
மாதிரி அந்த நாய் இந்த நாய் என்று சொல்வதைத் தவிர்த்து எழுதியிருந்தால்
சுவையான நகைச்சுவை கட்டுரைதான். இம்மாதிரி கிரிக்கெட் கிளப்கள் இல்லாமல்
இன்றைக்கு கிராமங்களே கிடையாது. ஆனாலும் இம்மாதிரி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது அதீதமான கற்பனைகளை நகைச்சுவை என்ற பெயரில் கலந்து
விடும் அபாயம் இருக்கிறது. மாறாக, உள்ளதை அப்படியே எளிய புனைவோடு சொல்லும்போது இயல்பான நகைச்சுவை வந்துவிடுகிறது. நல்ல வேளையாக கதிர்
இதில் இரண்டாவது வகை

//
யாருடைய கருத்தையும் யாரும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத போது விவாதங்கள் நடத்துவதில் எந்த பிரயோஜனமும் இருப்பதாக தெரியவில்லை
// என்று அழுத்தமாகச் சொல்லி விட்டு கூடவே, இது முழுக்க முழுக்க என்னுடைய நிலைதான் யாருடைய நம்பிக்கைகளையோ பாதிப்பது போல் இருந்தால் மன்னிப்பு கேட்டுக்
கொள்கிறேன். என்று தடாலடியாக டிஸ்கி போட்டு தப்பிக்க நினைப்பது ஒருவித
தப்பித்தலாகவே தோன்றுகிறது. சொல்ல நினைப்பதை மட்டும் சொல்லிச் சென்றாலே போதுமானது. அடுத்தவர் மனம் புண்படுமென்றுபட்டால் அதை எழுதாமலே
இருப்பதுதானே சிறப்பு?!

வறட்டி அனுபவங்களும் சுவையான நினைவோடைதான். அதிலும் இதுபோன்றதொரு அனாவசியமான டிஸ்கி. குறிகளும் குறியீடுகளும்தான் எழுத்துக்களுக்கு ஜீவன் தருவதாக எண்ணும் காலகட்டத்தில் சாணி தட்டுவதை அதுவும் கிராமத்தின் ஆதாரமான ஒரு விசயத்தை 'உவ்வே' என்று சொல்வதென்னவோ தாழ்வுமனப்பான்மையாகவே தோன்றுகிறது. 'இப்படித்தான்யா எங்க கிராமத்தில..' என்று
அழுத்தமாகவும் பெருமையாகவும் சொல்லாததற்காக அவர் முதுகில் ரெண்டுநாளைக்கு
வறட்டி தட்டலாமா என்று யோசிக்கிறேன்.

ஓவ்வொரு விளம்பரப்படத்துக்குப் பின்னாலயும் ஒவ்வொரு ரகசியம் ஓளிஞ்சிருக்கலாம்.
அதை உருவாக்க ஒவ்வொருத்தரும் என்னென்னவோ கஷ்டப்பட்டிருக்கலாம். ஆனா
இனிமே ரஸ்னா விளம்பரம் பார்த்தாலே சிரிப்புதான் வரும்போல.
ஆனா, தேவையில்லாம இங்கயும் இது கவுச்சி பதிவுன்னு போட்டு ஏன் புனித பிம்ப
வேஷம் போடணும்னுதான் தெரியலை. என்னமோ யாருமே எம்ஜியாரைப்
பார்க்க போவாத மாதிரி.. இனிமே இப்படி ஒரு டிஸ்கி போட்டா கதிர்
கழுவுறதுக்கு வாழ்நாள் பூரா ரஸ்னாதான்.:-)))

'டயல்டு லிஸ்ட்டு' ன்னு ஒரு கவுஜை. 'சுழற்றப்பட்ட எண்கள்'னு கவிதையில
சொல்லத் தெரியுது? தலைப்புலயும அப்படியே சொன்னா என்னவாம்? இங்கிலிபீசு தேவைப்படுதோ? 'அகனாஸ்டிக்' னு தலைப்பு வச்சதை புரிஞ்சிக்க முடியுது.
இதுக்கான அவசியம்தான் புரியலை.

// சினிமா பாத்தேன்னா விமர்சனம் எழுதற பழக்கமே இல்ல. ஏன்னா
விமர்சனம் பண்ற அளவுக்கு நம்ம பொது அறிவு கிடையாது. படத்துல நமக்கு பிடிச்ச
காட்சிகளையும் அதை பார்வையாளன் பார்வையில சொல்றதும்தான் எனக்கு பிடிச்சது.//
விமர்சனம்னா வேற என்னன்னு தம்பி நெனச்சிருக்காருன்னு அவர்கிட்டதான் கேக்கணும். இப்படிச் சொன்னாலும் வெயில், Three Burials எல்லாம் நல்லாவே விமர்சனம் பண்ணியிருக்காரு தம்பி. குறிப்பா வெயில் திரைப்படம் பற்றி
எழுதும்போது வாழ்க்கையில் எல்லா நிலையிலும் தோற்றவனின் கதை என்ற
அவரது கோணம் எனக்கு வெகுவாகப் பிடித்திருந்தது.

ஊருக்கு ஊரு எது இருக்கோ இல்லையோ டீக்கடை தமிழகத்துல கட்டாயம்
இருக்கும். அந்த டீக்கடையை வச்சு நக்கலான பதிவு. சினிமா விளம்பரம்
மொத பக்கத்துல போடாட்டி என்னன்னு தம்பி கேட்டாலும், அப்புறம் பத்திரிகை
நடத்த தம்பியா காசு கொடுப்பார்னு பத்திரிகை நிர்வாகம் கேக்கும். சில
விசயங்களை நாம் கேள்வி கேக்கவே முடியாதுங்கறதை தம்பி மறந்துட்டாலும்
சுவாரஸ்யமான பதிவுதான்


வளைகுடா வாழ்க்கை சிலருக்கு சொர்க்கமாக இருந்தாலும் கட்டிடத் தொழிலாளர்களைப் போன்றவர்களுக்கு அது இன்னமும் தீர்க்கமுடியாத ஒரு சோகத்தின் எச்சம்தான்.
இதனை யார் எடுத்துச் சொன்னாலும் அதிலுள்ள யதார்த்தம் உறைக்கும்.
தம்பி சொல்லும்போதும் உறைக்கிறது

விரும்பி வந்தவர்களில்லையெனினும்
வெறுத்து ஒதுங்கிவிடவுமில்லை.
நாங்களும் வாழ்கிறோம்.


இதை சிறந்த கவிதை என்று சொல்ல முடியாவிட்டாலும் நேர்மையான உரைவீச்சாக ஒப்புக்கொள்ள முடியும்

இப்படிப் பரந்து கிடக்கிறது தம்பியின் பதிவுலக படைப்புகள். ஒரே திசையில் யோசித்துக்கொண்டு ஒரே மாதிரியான விசயங்களையே எழுதாமல்
எல்லாத்துறைகளிலும் கால் பதிக்க எண்ணும் தம்பியின் இந்த நூறு பதிவுகள் அவர்
எழுத்து மெருகேறியிருப்பதையே உணர்த்துகின்றன. எனது இந்த வாசிப்புரையின்
அவசியம் இல்லாமலேயே தம்பியின் பதிவை வாசிப்பவர்களுக்கு
இது நன்றாகப் புரியும்.

சொல்லுவதில் தெளிவும், லேசான எள்ளலும், வலிந்து மெனக்கெடாத நகைச்சுவையும்
தம்பியின் எழுத்துக்களின் சிறப்பாக நான் கருதுகிறேன்.இந்த எழுத்து மேலும்
வளம்பெறும் என நம்புகிறேன் - வாழ்த்துகிறேன்

இன்னும் சிறப்பான கதைகள் தம்பியிடமிருந்து வருமென்ற நம்பிக்கையும் இன்னும்
அதிகமான வாசிப்பனுபவம் அவரது எழுத்திற்கு மேலும் மெருகூட்டும் என்ற
நம்பிக்கையும் எனக்கிருக்கிறது - உங்களைப் போலவே

பண்புடன்
ஆசிப் மீரான்

Tuesday, August 21, 2007

Mid Week ஜொள்ளு.

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Wednesday, August 15, 2007

குண்டு வெடிக்கலன்னா போர் அடிக்கும்!

காலையில் எழுவது முதல் இரவு படுப்பது வரை ஏதோ ஒரு வேலை என்னை
இயக்கி கொண்டே இருக்கிறது. அதனிடத்தில் இருந்து விடுபட நான் எடுக்கும்
முயற்சிகளின் முடிவு சலிப்புகளின் எல்லையாக உள்ளது. இந்த சலிப்பினால் நாப்பது
வயதில் ஏற்படுகிற மன அயற்சி இப்போதே வந்து விடுமோ என்று எண்ணுகிறேன்.
தினமும் எதிர்கொள்ளும் முகங்களுக்கு எதிர்ப்புன்னகை கூட வறட்டுத்தனமாக இதழில்
பொறுத்த வேண்டியதாக இருக்கிறது.

சில பெண்களுக்கு எத்தனை வயதானாலும் குழந்தை குணம் மாறுவதே இல்லை.
குழந்தைகள் பொய்யானவற்றை தனது தாயிடம் விவரிக்கும்போது கைகளை
ஆட்டி முகத்தை கோணலாக்கி உதடு சுழித்து சொல்லும் அது உண்மையா
இல்லையா என்பது தவிர்த்து நாமும் நம்மையறியாமல் ரசிக்கத் தொடங்கி
விடுகிறோம். அது சொல்லப்படும் விஷயங்களைப் பொறுத்து சந்தோஷமும்
துக்கமும் நமக்கும் ஏற்படும் குழந்தையின் உடல் மொழி தெரிந்தவர்களுக்கு
புரியும். இந்த குணங்களை ஒத்த ஒரு ஈராக்கிய பெண் எங்கள் அலுவலகத்தில்
பணிபுரிகிறாள்.

லெபனான் அல்லது எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்த அலுவலகத்தில்
அதிகம் அவளும் அதுபோன்றொதொரு நாட்டைச் சேர்ந்தவளாக இருக்கக்
கூடும் என்ற நினைப்பில் இருந்தேன். இரண்டொரு தினங்களுக்கு முன் தான்
தெரிந்தது அவள் ஒரு ஈராக்கி என்று. பொதுவாகவே அரபுநாடுகளைச் சேர்ந்த
பெண்களுடன் அதிகம் பழகுவதில்லை அது ஏனோ பிடிப்பதே இல்லை. முக்கியமாக
அவர்களின் திரவிய மோகம், பகட்டு வாழ்க்கை. போலி புன்னகை. ஆனால் இந்த
ஈராக்கிய பெண்மணியிடம் ஒரு இனம்புரியாத ஈர்ப்பு. சில குணநலன்களில் எனது
தாயினை ஒத்திருபதாலோ என்னவோ தெரியவில்லை. சில வேளைகளில்
அவளை மம்மா என்று கூட என்னை மறந்து அழைத்திருக்கிறேன் பதிலுக்கு
அவள் புன்னகை புரிவது சற்று கூடுதலாக என்னைக் கவரும்.

ஈராக் பெரியநாடு, சதாம் என்ற சர்வாதிகாரி ஆண்ட நாடு தற்போது அங்கங்கே
குண்டுகள் வெடிப்பதாக செய்திகளில் படிப்பது என்பதைத் தவிர வேறொன்றும்
தெரியாது. தெரிந்துகொள்ளவும் ஆர்வம் இருப்பதில்லை என்பதைவிட எனக்காக
ஒதுக்கிக்கொள்ளும் சிலமணி நேரங்களை செலவிட விருப்பமில்லை என்பதே
உண்மை.

ஈராக்கின் தெற்குப்பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு சக்தி வாய்ந்த குண்டு
வெடித்ததில் 150க்கும் மேற்பட்டோர் இறந்து போனதாக சற்றுமுன் வலைப்பதிவில்
வாசித்திருந்தேன். ஓய்வாக இருக்கும் சமயத்தில் இதுகுறித்து அவளிடம் பேச
வேண்டும் ஒருவேளை அவள் அந்த பகுதியினை சேர்ந்தவளாக இருப்பின் அவர்
குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது காயமடைந்திருப்பார்களா என்று விசாரிக்க
வேண்டும் என்று மனதினில் குறித்துக்கொண்டேன்.

அலுவலகத்தில் அதிகம் வேலை இல்லாத மாலைநேரம் அனைவரும் வீட்டுக்கு
திரும்ப சில மணித்துளிகள் இருந்தன. ஏதோ ஒரு சந்தேகம் கேட்க என்னறைக்கு
வந்தவளிடம் கேட்டேன். இதற்காகவே காத்திருந்தது போல நிறைய பேசினாள்.

குண்டு வெடித்து 150 பேர் இறந்து விட்டார்களாமே என்று கேட்டேன்.

குண்டு வெடிக்கவில்லை என்றால் இப்போதெல்லாம் போர் அடிக்கிறது. தினமும்
வெடிப்பதால் சகஜமான ஒன்றாக ஆகிவிட்டது. இழப்புகள், சேதங்கள் அதிகமாகும்
போதுதான் மீடியாக்கள் பெரியகட்டம் கட்டி செய்தி வெளியிடுகின்றன. இருபது
முப்பது என்றால் மூக்குப்பொடி விளம்பரத்தின் மூலையில் சிறிய பெட்டிச் செய்தியாக
வெளியிடுவார்கள். நேற்று நடந்த வெடிப்புகூட எங்கள் பகுதியில் நடந்ததுதான்.

தொலை தொடர்புசாதனங்கள், மின்சாரம் கூட இல்லாத பகுதியாகிவிட்டது எங்களின்
வசிப்பிடம். நான்கு ஊர்களுக்கு தள்ளி குண்டு வெடித்தால் கூட எங்கள் பகுதியில்
குண்டு சத்தம் கேட்கும்.

ஒன்றரை வருடங்களுக்கு முன்பு நான் அங்கிருந்த போது என் வீட்டினுள்
குழந்தைகளை வைத்து பூட்டி விடுவேன் அனைத்து ஜன்னல்களையும் மூடிவிடுவேன்
இல்லையென்றால் வெடி சத்தத்தில் எனது குழந்தைகள் அழ ஆரம்பித்துவிடும்.
எல்லாரையும் உள்ளே வைத்து பூட்டிவிட்டு அவ்வப்போது தெருவழியாக செல்லும்
துப்பாக்கி ஏந்தியவர்கள் வீட்டினுள் யாராவது இருக்கிறார்களா என்று விசாரித்து
இழுத்துச் சென்று விடுவார்கள் அதனால் நான் மட்டும் வீட்டுக்கு வெளியே
நின்று யாருமில்லை என்று சொல்லிவிடுவேன். என்னைச் சுட்டால் கூட எனது
குழந்தைகளை காப்பாற்றிவிடுவேன் என்றார்.

நாங்களும் ஒருகாலத்தில் நன்றாகத்தான் இருந்தோம். இப்போதுதான் நிலைமை
மிக மோசமாக உள்ளது. விரைவில் இது தீரும் இன்ஷா அல்லாஹ். பேசிமுடிக்கும்
நேரத்தில் அவளது முகம் அழும் தோரணைக்கு வந்திருந்தது. அவள் பேசியது
தெளிவான ஆங்கிலமாக இல்லாமலிருக்கலாம். ஆனால் எனக்கு புரிய வைக்க
அவளது கைகளை ஆட்டியும், சோகமான முகபாவங்களை குழந்தைகளை போல்
வலுக்கட்டாயமாக முகத்தில் திணிக்கும்போதும் வார்த்தைகளால் உருவாக்க முடியாத
புரிதல்களை எனக்கு புரிய வைக்க முயற்சி செய்தாள். எனக்கும் நன்றாகவே புரிந்தது.

நேரம் முடிந்து அலுவலகத்தில் அனைவரும் வாகனங்களுக்கு செல்ல ஆயத்தமாகினர்.
அவளின் தோழிகள் நெடுநேரம் அழைத்தமையால் மீதியை நாளைக்கு சொல்கிறேன்
என்று சென்று விட்டாள். வலுக்கட்டாயமாக புன்னகையை உதட்டுக்கிழுத்து விடை
கொடுத்தேன்.

என்னுடன் பேசும் பழக்கமில்லாத யாவரும் சந்தோஷமாக ஆரம்பித்து
சோகநிலையிலேயே முடிக்கின்றனர். ஒவ்வொருமுறை இப்படி ஆகும்போதும்
எனக்குள்ளேயே குற்ற உணர்ச்சி தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

Friday, August 10, 2007

நானும் கவிஞர்தாங்க!!!

எந்த வேலைகளும் இல்லாத ஒருநாள் மாலை நேரம்.

ஆசிப் அண்ணாச்சியிடம் இருந்து போன்.

எப்படி இருக்கிங்க தம்பி அண்ணன்.

ஆஹா அண்ணாச்சி நல்லா இருக்கேங்க உங்க புண்ணியத்தில என்று சொனேன். எங்கே
இருக்கிங்க என்றேன்.

பேரணில இருக்கேன் தம்பி

என்னது துபாயில பேரணியா?!! என்ன சொல்றிங்க...

ஆமாய்யா முன்னால நூறு வண்டி பின்னால நூறு வண்டி நடுவில நானு இப்டி
போனா பேரணின்னுதான்யா சொல்லணும்.

அப்டின்னா தினமும் பேரணி காணும் தலைவர் நீங்க என்று சிரித்தேன்.

ஆமாம் துபாய்ல இருந்து ஷார்ஜா போற எல்லாருமே தினமும் பேரணி காணும்
தலைவர்கள்தான்.

இன்னிக்கு வழில பேச்சுத்துணைக்கு நீதான்யா சிக்கின. தினமும் அட்டவணை போட்டு
ஒவ்வொருத்தர்கிட்டயா பேசுவேன் இன்னிக்கு ஒன்னோட முறை என்று சொல்லி
கிட்டத்தட்ட நாப்பது நிமிடங்களுக்கு மேலாக பேசினார். இடையில் இரண்டு முறை
இணைப்பு தானாகவே துண்டித்துக்கொண்டது ஆனாலும் மனிதர் விடவேயில்லை
அடுத்த நொடியே மறுபடியும் அழைத்து பேசிக்கொண்டே இருந்தார்.

யாருடன் பேசினாலும் தனது உற்சாக நிலைக்கே கொண்டு வரும் சிறந்த
நகைச்சுவையாளர். அவ்வளவு நேரம் எப்படி பேசினேன் என்றே தெரியவில்லை.
நேரம் போனதே தெரியவில்லை அவ்வளவு உற்சாகம்.

யோவ் தம்பி போன வைய்யா விட்டா பேசிகிட்டே இருப்ப போலருக்கு. என் வீடு
வந்திடுச்சி என்று போனை வைத்துவிட்டார்.

துபாயில இருந்து ஷார்ஜாவுக்கு தினமும் போறவங்களுக்கு தெரியும் ட்ராபிக்கின் வலி.
காரை விட்டுட்டு நடந்து போனாவே அரை மணி நேரத்துல போயிடலாம் போலன்னு
தோணும். அப்படி ஒரு கொடுமையான விஷயம். அந்த நேரத்துல அவருக்கு போர் அடிக்ககூடாதுன்னு பேசினாராம். நல்லாருங்கப்பு என்று சொல்லி வைத்தேன்.

நானும் அய்யனாரும் ஒரு விழாவில் அண்ணாச்சியை சந்தித்தோம். விழாவுக்கு வந்த நண்பர்களிடம் இவர்தான் கவிஞர் தம்பி, இவர் பின்நவீனத்துவ கவிஞர் அய்யனார்
என்று கொஞ்சம் கூட சிரிக்காமல் அறிமுகம் செய்து வைத்தார். அறிமுகம் செய்து வைத்தவர்களில் ஒருவர் "நானும் கவிஞர்தாங்க" என்று கைகுலுக்கினார். எனக்கு
சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஏங்க இப்படி கவிஞர், கவிஞர்னு சொல்லி அறிமுகபடுத்தறிங்க என்றதற்கு, ஆமா
இல்லையா பின்ன? என்றார்.

கடந்த வாரம் அதிகாலை குறுஞ்செய்தியை படித்தபோது மனது கனத்துபோனது.
அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்புதான் ஜெஸிலா ஒரு பதிவிட்டிருந்தார். நான்
இறந்து போனால் எந்தளவுக்கு வருத்தப்படுவீர்கள் என்று கேட்டிருந்தார். விளையாட்டு
போல சொன்னேன் அஞ்சு பத்து நிமிசம் வருத்தமா இருக்குங்க அப்புறம் சரியா
போயிடும் என்று. ஆனால் அதுபோல இல்லை என்பதை உணர்ந்தேன்.

அபிஅப்பா போன் செய்து ஆசிப்பின் தொலைபேசி எண் கொடுத்தார். எந்த
தொனியில் பேசுவது என்று யோசித்து யோசித்து பார்த்து விட்டுவிட்டேன். எவ்வளவு யோசித்தும் நாடகபாணி ஆறுதல் வார்த்தைகள்தான் நினைவுக்கு வந்தன.
மட்டுமில்லாமல் நான் ஆறுதல் கூறி தேற்றும் நிலை அவருக்கல்ல என்று
நினைத்தேன்.

நல்ல பேச்சாளர், சிந்தனையாளர், நகைச்சுவை உணர்வுள்ளவர் தானாகவே இந்த
சோகத்திலிருந்து மீண்டு வருவார் என்று தெரியும்.

இரண்டு நாட்களுக்கு முன் மீண்டு(ம்) வருகிறேன் என்ற அவர் பதிவை பார்த்ததும்
மிகவும் சந்தோஷப்பட்டேன். ஆச்சரியப்படவில்லை.

*********************************************

அமீரகத்தில் இருக்கும் பதிவர்களுக்கு போரடித்தால் உடனே அய்யனாருக்கு போன்
செய்து கலாய்ப்பது வழக்கம். ரொம்ப போர் அடிக்கவே போன் செய்தேன்.

என்னய்யா சாயந்திரமாச்சின்னா கட்டிங் போடாம கைநடுங்கறதா கேள்விப்பட்டேன்
உண்மையா?

ஆமாய்யா இப்பலாம் வியாக்கிழமையாச்சுன்னா பனோரமா ராதிகாவ பாக்கலன்னா
ரத்தம் சூடாகிபோகுது.

ரொம்ப முத்திப்போச்சு சீக்கிரம் டிக்கெட்ட போட்டு நல்ல பீஸா பாத்து கல்யாணம் பண்ணிக்கறதுதான் நல்லது இல்லன்னா வேற மாதிரி ஆகிபோகும் பாத்துக்குங்க.

நாமள்லாம் ரிசர்வேஷன்பா. எவ்வளவு ஆட்டம் போட்டாலும் ஊர்ல ஒரு பீஸ்
நமக்காக ரிசர்வ் பண்ணி வச்சிருக்காங்க. தானாக முளைக்கும் கொம்புகளுக்காக
காத்திருப்பதை தவிர வேறொன்றும் இல்லை.

தம்பி ஒர் சந்தேகம் கேட்டா சொல்லுவியா?

நீ கேளு சாமி தெரிஞ்சா சொல்றேன். தெரிலன்னா லைன் சரியில்லன்னு கட் பண்றேன்,

நான் எழுதற எல்லா பதிவுகளும் பூங்காவில வந்திடுது. ஏன் தமிழ்மண நிர்வாகம்
என்னோட பதிவுகளுக்கு சிலபல டாலர்கள பரிசளிக்க கூடாது?.

தோ பார்றா... இது வேறயா நான் தமிழ்மண நிர்வாகிய பாத்தேன்னா இது குறித்து
பேசுகிறேன் என்று எஸ்கேப் ஆனேன். :-)

ஏதோ நல்லா இருந்தா சரிதான்.

**********************************************

கடந்த வாரம் அதி அற்புதமான கேள்வி ஒன்றை நம் குசும்பன் அவர்கள் கேட்டார்
(ஜெஸிலா வேண்டுகோளுக்கிணங்க குசும்பர் என்றே மரியாதையாக அழைப்போம்)
அதாவது குசும்பர் அவர்கள் கேட்ட கேள்வி "உலகிலேயே மிக விலை மதிக்க முடியாத
வைரம் எங்கே இருக்கிறதென ஸ்டேட்டஸ் மெசேஜில் கேள்வி எழுப்பி இருந்தார்.

நான் சொன்னேன். "உனக்குள்ளே வைரங்கள் இருக்கு அதை வெளியே தேடாதே" என்று.

என்ன புரிந்து கொண்டாரோ தெரியவில்லை."கருமம் புடிச்சவன்யா நீ" என்று ஓடிவிட்டார்.

**********************************************

கம்பெனியால் ஒதுக்கப்பட்ட அறையொன்றில் நானும் பங்களாதேஷை சேர்ந்த ஒரு
செக்யூரிடி ஆபிசரும் தங்கி இருக்கிறோம். ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமை நாளிலும்
ஏதோவொரு காரணம் சொல்லி அறையிலிருந்து எஸ்கேப் ஆகிவிடுவது வழக்கம்.

ஏனென்றால் ஒரு பியரை குடித்துவிட்டு அய்யனாருக்கும் மேலாக உளருவது அவன்
வழக்கம் அதிலிருந்து எஸ்கேப் ஆகவே வெள்ளிக்கிழமை எங்காவது வெளியில் சென்று
விடுவது வழக்கம். இந்த வாரம் எங்கு செல்லவும் விருப்பம் இல்லாததால்
அறையிலேயே இருந்தேன்.

மதிய சாப்பாட்டுக்கு முன் ஒரு பியரை குடித்து முடித்திருந்தான். (கடைசி வரை
அவ்ளோதான் குடித்திருந்தான் என்பது வேறு விஷயம்). : - )

kathir "I am very soft one beer kick me lot" என்று போதையில் உளர ஆரம்பித்தான்.
எலேய் இதுக்குதாண்டா நான் ரூம்லயே தங்குறதில்ல என்று சொல்லாமல் அவனிடம்
பேச ஆரம்பித்தேன்.

எங்க ஒரு பியர் குடு குடிச்சிதான் பாக்காலாம் எவ்வளவு போதை வருதுன்னு
பாப்போம் என்று அவனிடம் இருந்து ஒவ்வொன்றாக வாங்கி பேசிக்கொண்டே
முடித்து விட்டேன்.

பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு குடித்த போதையனைத்தும் இறங்கிவிட்டது.

மவனே இனிமே ஒரு பியருக்கெல்லாம் ஆட்டம் போட்டேன்னு வச்சிக்க இதுதாண்டி
நடக்கும்னு சொல்றதுக்கு முன்னாடியே ஆள் ப்ளாட் ஆயிட்டான்.

*********************************************
கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக பாவனா பெயரில் மெயிலும், மற்றுமொரு பதிவர்
பாவனா எனக்கு ராக்கி அனுப்புவது போலவும் மெயில் அனுப்பி இருந்தார்கள்.
அவர்களுக்கு எல்லாம் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். உலகத்தில் யார் வேண்டுமானாலும் எனக்கு அக்கா, தங்கச்சி ஆகும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால்
பாவனாவுக்கு மாத்திரம் அந்த உரிமை கிடையாது என்பதனை அவர்களுக்கு
சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

சொல்லிக்கொள்ளும்படியாக வேறொன்றும் அதிசயமாக கடந்தவாரத்தில் நிகழ்ந்து
விடவில்லை அதனால்தான் இந்த மேலதிக சேர்ப்புகள்.

Friday, August 03, 2007

பூனைகளுடன் உறங்கும் கோபால்

தான் சிறையில் இருப்பதாக என்றுமே நினைத்ததில்லை கோபால். ஏனென்றால்
ஊருக்குள் இருந்தாலும் யாருடனும் பழகாமல் தனித்தே இருந்து வந்ததால்
சிறையில் எந்த மாற்றத்தையும் அவன் உணரவில்லை. தன்னுடைய இந்த நிலைக்கும்,
முரட்டு குணத்திற்கும் காரணம் என்று தன்னை சுற்றியிருந்த சமூகத்தைத்தான்
நினைத்திருந்தான். வீட்டில் இருந்தபோது மனைவியிடம் ஓரிரு வார்த்தைகள் பிறகு
பூனைக்கூட்டத்திடம் மட்டுமே அவனது உலகம் என்று இருந்தது.

ஒரே விஷயத்துக்கு மட்டும்தான் கோபப்படுவான் அந்த ஒரே விஷயத்தைத்தான்
அனைவரும் விடாப்பிடியாக செய்து வந்தனர் அது அவனிடம் காணப்படும் மாறுகண்
குறைபாடு மட்டுமே.

அன்று கருப்பையன் கோவிலில் பஞ்சாயத்து. நிலத்தகராரு ஒன்றுக்காக பஞ்சாயத்தார்
முன்னிலையில் கைகட்டி நினிருந்த கோபாலை திட்டமிட்டே கூட்டத்தில் இருந்த
ஒருவன் குமரிமுத்து என்று கூவி விட்டான் தன் குறையை சொல்லி கிண்டல்
செய்ததற்காக அதே இடத்தில் இரண்டு கையையும் வெட்டி துண்டாக்கி சிறை
சென்று விட்டான்.

வீட்டிலிருந்த அவனை காவல்துறையினர் கைது செய்து கொண்டு செல்லும்போது
வாகனத்தின் பின்னே வழிநெடுக பூனைகள் பின் தொடர்ந்தன.

இன்றோடு சிறைக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. தனிச்சிறைதான்
இவனது குணத்துக்கு உகந்தது என்று ஜெயிலர்கள் கருதியதால் தனிச்சிறை.

நீராருங்கடலுடுத்த பாடும்போது மட்டுமே தனக்கு பேசும் சக்தி இருப்பது அவனுக்கு
தெரியும். மற்ற நேரங்களில் மவுனம் மட்டுமே இவனின் நன்னடத்தை காரணமாக ஏழு
வருட கடுங்காவல் தண்டனையை ஆறு வருடமாக மாற்றினார்கள் இன்னும் ஓரிருநாளில்
கோபாலுக்கு விடுதலை.

விடுதலையாகும் முன்பு கோபாலைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

கோபால் எல்லா குழந்தைகளை போலவே பிறக்கும்போது அழுதுகொண்டேதான்
பிறந்தான். எல்லா குழந்தைகளை போலவே பல கனவுகளுடன் பெற்றோரால்
வளர்க்கப்பட்டான். எல்லா குழந்தைகளைப் போலவே இரு கை, இரு கால்கள், இரு
காதுகள் மற்றும் ஏனைய உறுப்புகளுடன் பிறந்தான் ஆனால் கண்கள்தான் சற்று இடம்
மாறியிருந்தன. அது அவன் குழந்தைப்பருவம் தாண்டும் வரை அவனுக்கே தெரியாது.
வளர்ந்து பேசும் திறனை பெற்று, பள்ளி சென்று, அவன் வயது குழைந்தைகளுடனே
விளையாடி வரும்போதுதான் அறிந்துகொண்டான்.

பாவம் அவன் வயதையொத்த சிறுவர்கள்தான் இவனுக்கு மாறுகண் இருந்ததை
கண்டு கேலி செய்தார்கள். சில சமயங்களில் வாத்தியாரும் ஒன்றரை கண்ணா
வாடா என்று கூப்பிடுவார்.

எல்லாருக்கும் கண்கள் ஒரே மாதிரி இருக்க தனக்கு மட்டும் ஒரு பக்க கருவிழி
இடம்பெயர்ந்து கண்ணின் இடப்பக்கமாக இருந்ததுதான் குறையாக பட்டது.
அதைச்சொல்லி சொல்லியே அவனை கேலி செய்தார்கள்.

காலப்போக்கில் கோபால் என்று பெற்றோர் வைத்த பெயரை ஊராரும், பள்ளி
நண்பர்களும் குமரிமுத்து என்றே மாற்றி விட்டார்கள்.

"ஏம்மா என்னை ஒரு காலோ அல்லது ஒரு கையோ இல்லாமல் ஊனமா
"பெத்துருந்தா கூட சந்தோஷப்பட்டிருப்பேனே இப்படி ஒன்றரை கண்ணோட பெத்துட்டியேம்மா" என்று பள்ளி விட்டு வந்ததும் அம்மா மடியில் புதைந்து
அழுதிருக்கிறான்.

"மாறுகண்ணு குடும்பத்துக்கு அதிர்ஷ்டம்டா கோபாலு, மத்தவங்க கேலி பேசினா
கண்டும் காணாத இருந்துடு."

முடியலமா, அழுகையா வருது.

"உன்னை யாராச்சும் மாறுகண்ணான்னு கூப்பிட்டா அப்படி கூப்பிட வேணாம் என்
பேர் கோபால்னு சொல்லு, மீறி சொன்னாங்கன்னா கன்னத்துல அடி. அப்புறம்
எவனும் கூப்பிட மாட்டான். இந்த வார்த்தைகள் அவனுக்கு நம்பிக்கையை தந்தன.

ரௌத்ரம் பழக பெற்ற தாய் சொல்லிக்கொடுத்தாள் அந்த ரௌத்ரமே பின்னாளில்
அவனது அடையாளமாகிப்போனது.

ஒருநாள் வழக்கம்போலவே எண்ணையிட்டு தலை சீவி, மஞ்சள் பையில் சிலேட்டை
வைத்து பள்ளிக்கு அனுப்பினாள் அவன் தாய்.அதுதான் அவனது கடைசி பள்ளி நாள்.

அன்று பள்ளியில் குமரிமுத்து என்று கேலி செய்தவனிடம் தன் பெயர் கோபால் என்று
அறிமுகப்படுத்திக் கொண்டான். இரண்டாவது முறை அவன் குமரிமுத்து என்று
சொல்லும்போது சொன்னவனின் கன்னத்தோல் கிழிந்து காதோரம் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

"என்ன திமிருடா உனக்கு ஒன்றரைக் கண்ணா என்று கையில் பிரம்புடன் கேட்ட
கணக்கு வாத்தியாருக்கும் அதே கதி.

சற்று அதீதமான கோபம் கண்டு அவனது பெற்றோரே அதிர்ந்து விட்டதில் ஆச்சரியம்
இல்லை. பள்ளி செல்வதை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்த ஆடு மாடுகளை மேய்க்க
விட்டு விட்டனர் அவனது பெற்றோர். பள்ளி செல்வதை விட மாடு மேய்ப்பது
அவனுக்கு அதிகமான சந்தோஷத்தை தந்தது.

அன்றிலிருந்து மனிதர்களுடன் பேசுவதை நிறுத்தி விட்டான். அவனது பேச்சுகள் ஆடு,
மாடு, பூனைகளிடம் மட்டுமே. அவனுக்கென்னவோ பூனைகளை ரொம்ப பிடித்து விட்டது.

பூனைகள் மட்டுமே அவனிடம் எந்த குறைகளும் சொல்லாமல் விளையாடின. அதனால்
பூனைகளிடம் தன் பெற்றோரை விட அதிக பாசம் அவனுக்கு. தெருவிலே பூனையை
கண்டால் வீட்டுக்கு தூக்கி வந்து விடுவது அவன் தாய்க்கு எரிச்சலை கிளப்பியது. ஆடு மாடுகளுக்கு பட்டியை போல பூனைக்கு பட்டி வைக்கும் அளவுக்கு பெருகிப்போனது.

பச்சைப் பசேல் என இருபுறமும் விரியும் நெல் வயல்களுக்கிடையிலான வரப்பில்
இவன் நடந்து சென்றால் கருப்பும், வெள்ளையும் இன்ன பிற வண்ண பூனைகளும்
இவன் பின்னால் நடப்பது கொள்ளை அழகாக இருக்கும். வரப்பில் வரிசையாக வால்
தூக்கிய பூனைகள் நடந்து சென்றால் அழகாக இருக்காதா என்ன.

தப்பித்தவறி தன் குறை பற்றி எவராவது பேசினால் கூட வெளுத்து விட்டுதான்
மறுவேலை என்ற எண்ணம் அவனையறியாமலே அவனிடத்தில் நிரந்தரமாக
குடிகொண்டுவிட்டது.

இளமைப்பருவத்தை அவன் அடைந்தபோது ஊரே மிரளும் முரடனாக இருந்தது
பெற்றோருக்கு மிகுந்த வேதனையை தந்தது. தன் மகனால் எவருடமும் சகஜமாக பழகமுடியாமல் போனதற்கு இன்னதுதான் காரணம் என்று அறிந்துகொள்ள முடியவில்லை.

கல்யாணம் செய்து வைக்கலாமென்றால் எவரும் பெண் தர விரும்பவில்லை.
தனிமையே தனக்கு பாதுகாப்பானது என்று கருதி திருமணமே வேண்டாம் என்று இருந்துவிட்டான். தந்தையில் மரணப்படுக்கை அவனது சற்றே மாற்றி அமைத்தது.

அவசர அவசரமாக ஒரு கல்யாணத்தை முடித்தனர். பின்னர் தங்கள் கடமை முடிந்து
விட்டதாக கருதி ஒருவர் பின் ஒருவராக கண்மூடினர். தாய் தந்தை இறந்ததற்கெல்லாம்
அவன் கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. தான் வளர்த்து வந்த பூனைகளில் ஒன்று இறந்துபோனால் கவலைப்படும் அளவுக்கும் கூட தாய், தந்தையின் இறப்புக்கு
அந்தளவுக்கு வருந்தவில்லை.

இந்த நிலையில்தான் அவன் சிறைக்கு செல்ல நேர்ந்தது.

இன்று விடுதலையாகி வருகிறான். ஐந்தாறு வருட சிறை வாழ்க்கை அவனை
வெகுவாக மென்மையுள்ளவனாக மாற்றியிருந்தது.

மனைவி சற்று பருத்திருக்கிறாள், குழந்தை சற்றே வளர்ந்து சிறுமி ஆகியிருக்கிறாள்.
அதே வீடு அதே ஊர், அதே மக்கள். எந்த மாற்றமும் இல்லை. இவனிடத்தில் மட்டும்
சிறிது மனிதத்தன்மை கூடியிருந்தது.

அவனது குழந்தை வினோதமாக இவனை பார்க்கும்போதுதான் வேதனைப்பட்டான். மேலும்
"இதுதான் புது அப்பாவா" என்று அம்மாவிடம் கேட்டவளை அவசரமாக வாயைப்
பொத்தினாள் அவள் அம்மா.

இரவு சாப்பிட்ட பிறகு வேப்பமரத்தடியில் கயிற்றுக் கட்டில் உறக்கம். சிலுசிலுவென்று
அடித்த காற்றில் தன்னை மறந்து உறங்கியே போனான்.

அதிகாலை நாலுமணி.

நல்லூர் காவல்நிலையம் தூக்கத்தில் மிதந்து கொண்டிருந்தது. ஏட்டையாவின்
சன்னமான குறட்டை ஒலி காவல் நிலையத்தை உயிர்ப்போடு வைத்திருந்தது.

கதவு திறந்து யாரோ சாக்குப்பையுடன் உள்நுழையும் சத்தம்.

"ஏட்டையா எவனோ வந்திருக்கான் என்னான்னு பாருங்க"

பாதி தூக்கத்தில் இருந்த ஏட்டையா திடிரென்ற ஒருவனின் வருகையால் எரிச்சலுடன்
நிமிர்ந்து பார்த்தார்.

"வாய்யா கோபாலு, நேத்துதான் ரிலீசான போலருக்கு. வெடிகாலைல என்னடா
டேசனுக்கு வந்துட்ட?

ஏட்டையாவின் மேஜை மீது கொண்டு வந்திருந்த சாக்குப்பையை வைத்து ஓரமாக
கைகட்டி நின்றான் கோபால்.

வயல்களுக்கு உரமிடும் வெள்ளை நிற சாக்குப்பையில் அங்கங்கே சிகப்பு நிற திரவம்
பிசுபிசுத்தது. அதன் உள்ளே அவன் மனைவியின் தலையும், பக்கத்து வீட்டுக்காரனின்
இரு கைகளும் இருந்தன.