கதிர்

எல்லையற்ற அன்பு கொள்வோம்

Wednesday, November 11, 2009

முதுமை ஒரு பொல்லாத விலங்கு. மரணத்தைக் கூட எதிர்கொள்ளும் சக்தி மனிதனுக்கு
உண்டென்றாலும் முதுமையை நேர்கொள்வது மிகக்கடினமாக இருக்கலாம். பெற்ற மக்கள்
தினமும் எப்போது கிழம் தவிரும் என்று தினமும் காலையில் ஊர்ஜிதம் செய்வதென்பது
கொலை செய்வதற்கும் சமமானதாக இருக்கலாம். மேலும் மரணம் கலைத்துப் போடும்
எவ்வித சலனமும் வீட்டில் நிகழாத ஒரு மரணமாக அது மாறலாம். எனக்குத் தெரிந்து
என் அம்மாவே கூட சாவென்பது சந்தோஷமாக வந்துவிடவேண்டும் மூப்பெய்தி தள்ளாடி
எழுந்து நிற்கக்கூட மற்றவர் உதவி நாடவேண்டும் என்ற நிலை வராத மரணமாக
இருக்க வேண்டும் என்று கூறுவார்.

தினமும் நான் என் கதவை திறந்து வெளிவரும்போது எதிர்வீட்டு திண்ணையில் ஒரு
பெரியவர் சாகக்கிடப்பதை காண்கிறேன். சாகக்கிடக்கிறார் என்று சாதாரணமாக சிறிய
வார்த்தையில் எழுதினாலும் அவர் படும் அவஸ்தைகளை நேரில் பார்க்கும்போது வேதனையை
தருகிறது. அவரின் மனைவி சமீபத்தில்தான் இறந்திருந்தார். ஆனால் அவரோ இவர்தான்
முதலில் சாவார் என்று சொல்லிக்கொண்டிருந்தார் ஏனெனில் பெரியவரின் உடல்நிலை
அப்படி இருந்தது. திடீரென்று அந்தப்பாட்டி இறந்தது அவரை மேலும் நிலைகுலைய
செய்துவிட்டது. நான் பார்த்தவரை இவர்களைப் போன்ற புரிதல் உள்ள தம்பதியை
வேறெங்குமே கண்டதில்லை.

கிட்டத்தட்ட கலைஞரின் வயது இவருக்கு இருக்கலாம். பால்யத்தில் நிறைய குடிப்பழக்கம்
இருந்ததினால் உடல் தளர்ந்துவிட்டது. வெயிலில் காய்ந்த செருப்பு சுருட்டிக்கொள்ளுமே
அதைப்போல அவரது கால்கள் வளைந்து விட்டன. காது கேட்கவில்லை. பேச்சு சரியாக
வரவில்லை. எழுந்துசென்று மூத்திரம் கழிக்க முடியவில்லை. பெற்றெடுத்த அரை டசன்
பிள்ளைகள் வெளியூரிலும் தேசத்திலும் வாழ கிட்டத்தட்ட தனிமையின் காட்டில் தனித்து
விடப்பட்டது போன்ற மனநிலை. மனிதவாழ்வில் ஆச்சரியப்படும் விதமாக சில விஷயங்கள்
நடக்கும் அதைப்போலவே ஒருவாரம் முன்பு இவரின் நினைவு தவறிவிட்டது.

அதனால் இயல்புக்கு மாறாக தினமும் நடந்துகொள்ள ஆரம்பித்தார். எழுந்து நடக்கவே
சிரமப்பட்ட இவர் நள்ளிரவில் தனியனாக இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று
கோமுகி நதிக்கரை பக்கம் வந்துவிட்டார். தெரிந்த ஒருவர் பார்த்து சந்தேகத்தில் எங்கே
செல்கிறீர்கள் என்று கேட்டபோது தன் மனைவி கைப்பிடித்து வந்ததாக கூறினார். ஆனால்
தெருவில் அவரைத்தவிர யாருமே இல்லை மேலும் அவர் மனைவி இறந்து நான்கு
மாதமாகிறது. ஆற்றில் இறங்கி சிறிது தூரம் சென்றிருந்தால் அவர் மனைவியை புதைத்த
இடத்திற்கே சென்றிருக்கலாம். ஒருவேளை யாருமே பார்க்கவில்லை என்றால் அங்குதான்
சென்றிருப்பார்.

விடிந்தபொழுது அவரிடம் கேட்டபோது அப்படியொரு சம்பவமே நடந்திராத தொனியில்
பேசினார். இரண்டொரு நாளுக்கு முன்பு ஒன்றரை மணிக்கு என்னறையின் கதவு தட்டும்
ஓசை கேட்டது. திறந்து பார்த்தால் சரியாக தெருவிளக்கு இவர் முகத்தில் விழ சிரித்தபடி
நின்றிருந்தார். அவருக்கு பூனைக்கண்கள் நெருப்புத்துண்டங்களைப்போல இருக்கும். மேலும்
தோல் சுருங்கி கோடுகள் விழுந்த அம்முகத்தை திடீரென்று பார்த்ததும் திகைத்து நின்று
விட்டேன். மெதுவாக சமாளித்தபடி என்ன தாத்தா என்றதும் வீட்டுக்குள்ள நாலு பேர் பூந்துகிட்டானுங்க யாருன்னே தெரியல என்னன்னு பாரு என்றார்
வீட்டில் குழந்தைகளும் மருமளும் மட்டுமே இருந்தனர். அவரும் வெளியே வந்து ஒருவாரமா
இப்படிதான் பண்றார் என அழ ஆரம்பித்துவிட்டார். நினைவுகள் மறந்து மூளையழிந்த
ஒருவரது மனநிலை என்னவாக இருக்கும் இந்த நொடியில் அவர் எதைப்பற்றி சிந்திப்பார்
என நினைத்துக்கொண்டிருந்தேன்.

நாஞ்சில் நாடன் சிறுகதையொன்றில் நகரத்தில் வாழும் மத்தியதர குடும்பத்தைச் சேர்ந்த
ஒருவனின் தாய் மூப்பில் படும் அவதியையும் அவரின் மருமகளே மாமியாரை கொல்லும்
கதையொன்றை நினைத்துக்கொண்டேன்.

விபரீதமாக அப்படியெல்லாம் ஒரு நிலை அவருக்கில்லை என்றாலும் மனது கிடந்து
தவிக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு என்னை கடைத்தெருக்கு அழைத்துச்செல்லும்படி
கேட்டார். அவருக்கு காது மந்தம் என்பதைவிட கேட்காது என்றே சொல்லலாம் மகன்
செவிட்டு மெசின் வாங்கிக் கொடுத்திருந்தாலும் அதை பொருத்திக் கேட்பதை அவர்
விரும்பவில்லை. நாம்தான் சிரமம் பாராமல் மிகக்குரலுயர்த்தி பேசவேண்டும். அப்படி
அவருடன் பேசுவது எனக்கே என்னை வினோதமாக காட்டியது. என்ன வேண்டும் என்று
கேட்டேன். மருந்து வாங்கவேண்டும் என்று கேட்டார். குடுங்க நானே வாங்கிட்டு வரேன்
என்றதும் மறுத்துவிட்டார். உனக்கு தெரியாது என்று சொல்லி என்னை எப்படியாவது
கூட்டிப்போ என்று அழ ஆரம்பித்துவிட்டார்.

கடைசியில்தான் தெரிந்தது அவர் வயதானவர்கள் இழுத்துக்கொண்டு கிடந்தால் சாகட்டும்
என்று ஒரு மருந்தை கடையில் விற்பார்களாம். அதை வாங்கவேண்டும் எனவும் தன்னால்
இனி எந்த வலியையும் தாங்க முடியாது எனவும் அழுதபடி கதறுகிறார். பார்த்துக்கிடந்த
எனக்கு எப்படிப்பட்ட பதிலை சொல்லவேணும் என்று கூட தெரியவில்லை.

முன்பே ஒருமுறை பேரனை சைக்கிள் எடுத்துவரச்சொல்லி அதில் பின்னால் உட்கார்ந்து
தள்ளிக்கொண்டே பாதி தூரம் சென்றுவிட்டார் அந்த மருந்தை வாங்கிவர. பாதி வழியில்
பேரன் வண்டி பாரம் தாங்காமல் கீழே விட விழுந்து விட்டார். அந்த வலி வேற.

தினமும் சிறிதளவு பிராந்தி குடுத்தால் மட்டுமே சற்று தெளிவாக பேசுகிறார். ஆகாரம்
எதுமில்லை சாப்பிட்டு நான்கு நாளாகுது. தொண்டையெல்லாம் புண். ஒண்ணுக்கு போக
மருமகளின் துணை வேண்டும் என்பதுதான் அவருக்கு வேதனை தரும் விஷயமாக
இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

எங்க அய்யாலாம் நூத்தியோரு வயசு வரை நல்லா வாழ்ந்துட்டு அலுங்காம செத்துப்
போனாரு. எனக்கு அப்படி வாழணும்னு இல்லன்னாலும் நிம்மதியான சாவு வரமாட்டேங்குதே
என்று தினமும் புலம்புகிறார்.

இவருடைய சகபாடி ஒருவர் கறுப்புத்தாத்தா என்பவர் இன்றும் கூட மாடுமேய்த்து
கொடிக்காலில் வெற்றிலை கிள்ளி விவசாயம் பார்க்கிறார். நல்ல தினகாத்திரமான கிழவர்.

இப்படியெல்லாம் நான் ஒரே பீலிங்ஸாக எழுதிவைத்து காத்திருந்தேன். ஜானெக்சா தந்த
தெம்பில் மறுநாளே எழுந்தமர்ந்து "என்னப்பா தம்பி ரொம்ப நாளா சுத்திகிட்டு இருக்கியே
ஒரு கட்டையோ முட்டையோ பாத்து கண்ணாலத்த பண்ணு ராசா" என்று கலாய்த்து
விட்டார்.

வந்தவனுக்கு தெரியும் போவதெப்படி என்று நினைத்துக்கொண்டேன்.




சம்பந்தமில்லாத பின்குறிப்பு

பருவமழை பெய்ததைத்தொடர்ந்து எங்க ஊர்ப்பக்கம் இருக்கற மலையில அருவிகள்
நிரம்பி வழியறதா செய்தி. இதே அருவிய இரண்டு வாரத்துக்கு முந்தி போட்டோ
எடுத்து இங்கே போட்டிருந்தேன் சின்ன பையன் உச்சா போற மாதிரி இருந்த இந்த
பெரியார் அருவி இப்போ கூட்டமா டைனோசர்கள் உச்சா போற அளவுக்கு வந்துடுச்சு.
இத விட மேகம் அருவின்னு ஒரு இடம் இருக்கு. அங்க போலாம்னு இந்த வாரம்
முடிவு பண்ணிருக்கோம். அங்க போகணும்னா இரண்டு மலை ஏறி இறங்கணும்
உடம்புல வலு உள்ளவங்க வரலாம்.வர விருப்பம் உள்ளவங்க இணைந்துகொள்ளலாம்.

Wednesday, October 21, 2009

பேராண்மை, காடு, மாரி சில குறிப்புகள்

மழையில் நனைந்த மோட்டாருக்கு காயில் கட்ட கடையில் கொடுத்துவிட்டு, கட்டும்
நேரத்தில் சினிமா பார்க்க வந்திருந்தார் எனக்கு பக்கத்து இருக்கைக்காரர். இருக்கையின்
நுனி வரை கொண்டு சென்றது என்ற பதத்திற்கான அர்த்தம் அவரிடம் கண்டேன்.
உற்சாகமாக கை தட்டிக்கொண்டும் விசில் அடித்துக்கொண்டும் கடைசி அரைமணி
நேரம் மிக அமைதியாகவும் பார்த்தார். படம் பார்த்து முடிந்ததும் செல்பேசி படம்
சூப்பர் என்று நண்பர்களுக்கும் சொன்னார். படம் பேராண்மை. அறிவியல்/ நாட்டை
அழிக்கும் நாசகும்பல், ராக்கெட் சைன்ஸ்(முத்துலிங்கம் கதையில் ராக்கெட் சைன்ஸ் என்று
ஒரு கதை வரும்) போன்ற விஷயங்களை பாமர மக்களுக்கும் புரியும் வகையில்
படமெடுத்த ஜனாவுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். எனக்குப் படம் மிகவும்
பிடித்திருந்தது. இணைய சுப்புடுக்கள் விமர்சனங்களையெல்லாம் பொருட்படுத்த
வேண்டாம் என்றே வர வர தோன்றுகிறது. பிரத்தியேக திரையிடலிலேயே
மடிக்கணினியோடு சென்று அங்கேயே "விமர்சனம்" என்ற போர்வையில் எழுதித்
தள்ளும் இணையசுப்புடுக்களின் இம்சை இப்போதெல்லாம் தாங்க முடியவில்லை.
யார் முதலில் எழுதுவது என்ற போட்டியே மேலோங்கி வருவதாகவும் தோன்றுகிறது.

முந்தின நாள் இரவில் ஜனநாதனின் நேரலையை பாலிமர் சேனல் ஒலிபரப்பியது
பொதுவாக நேரலையின் பாட்டு கேட்டு டெடிகேட் செய்யும் அபத்த கலாச்சாரத்தை
வெறுத்தாலும் தரமான இயக்குனர்களின் நேரலை சுவாரசியம் நிரம்பியதாகத்தான்
இருக்கிறது. நேரலையில் உற்சாகமாக பதிலளித்த ஜனநாதனின் மொழி முழுக்க
முழுக்க சென்னைத்தமிழ். குறிப்பாக இயக்குனர், நடிகைகளில் அலட்டலான
அந்நிய அணுகுமுறை முற்றிலுமாக இல்லாமல் பதிலளித்தது ரசிக்கும்படி இருந்தது.
பார்ப்பதற்கு குறுந்தாடி, மற்றும் கண்ணாடியுடன் விஞ்ஞானி தோற்றத்தில் இருந்தாலும்
பேசிய மொழி மிகுந்த நெருக்கத்தை அளிப்பதாக இருந்தது. இவரின் முந்தைய
படங்கள் பற்றிப் பேசும்போது அந்த சிறுகதையின் பாதிப்பில் எடுத்தது என்ற
அவரின் திறந்த பேச்சு முற்றிலும் புதியது. ஈ படம் கூட கான்ஸ்டன் கார்டனர்
போன்ற படங்களின் பாதிப்பில் உருவானது. இந்தப்படமும் கூட ஒரு கட்டுரையின்
தாக்கத்தால் உருவானது என்று குறிப்பிட்டிருந்தார். மிக சுவாரசியமான மனிதர்.


"காடு களை கட்ட" கிட்டத்தில் படத்தோடு இணைந்த மிக வேகமான, உக்கிரமான
பாடல் கேட்டறியவில்லை ஆனால் பேராண்மை படத்தில் காடு களை கட்ட என்ற
பாடல் அத்தனை உக்கிரமாக இருந்தது. இதையொற்றியே ஈ படத்தில் யேசுதாஸ்
பாடலொன்று வரும் "வாராது போல் வந்து வீழ்ந்தானடா" இதற்கு முன் பிதாமகன்
படத்தில் "அடடா அடடா அகங்கார அரக்க" பாடல் படத்தோடு இணைந்த உணர்ச்சிகரமான
பாடல். இப்பாடல் ஒலிக்கும் சமயத்தில் திரையரங்கில் படம் பார்ப்பவர்களின் முகத்தில்
வெறி குடிகொண்டிருக்கும். பக்கத்து இருக்கை லுங்கி நண்பர் அவ்வெறியுடன் பார்த்ததை
கவனித்தேன். அது எனக்கும் தொற்றிக்கொண்டது. எளிமையான சர்வதேசப்படமாக
இதைக்கருதலாம்.

--
"இஷ்டாங்கா ஒரு டீ போடு மாமே" என்றொரு வசனம் உன்னைப்போல் ஒருவனில்
வருவதைக்காணலாம். இதை இரா.முருகன் எழுதியிருக்க வாய்ப்பே இல்லை. சத்தியமாக
இத்தனை கேவலமாக முஸ்லிம்களை சித்தரிக்கும் போக்கை கமல்தான் செய்திருக்கவேண்டும்.
முன்பே தசாவதாரத்தில் நாகேஷ் தமிழ் பேசுவதை குறிப்பிட்டிருந்தேன். இன்னும் எத்தனை
காலத்துக்கு இதையே கமல் காண்பிக்க போகிறார் என்று தெரியவில்லை.

இன்னுமா முஸ்லிம்கள் இப்படி தமிழ் பேசுகிறார்கள்? அப்படியென்றால் எந்தப்பகுதி
முஸ்லிம்கள் இப்படி பேசுகிறார்கள்?

--
ச.தமிழ்ச்செல்வனின் சிறுகதைத் தொகுப்பொன்றை வாசித்துக்கொண்டிருந்தேன். முன்பே
சசியின் நேர்காணல் ஒன்றில் தமிழ்ச்செல்வனின் சிறுகதையொன்றை கருவாகக்கொண்டு
உருவான படம்தான் பூ என்பதை அறிந்திருந்தேன். "மாரி" என்ற அக்கதையினை
இத்தொகுப்பில் படித்தேன். சிறுகதையை சிதைக்காமல் அழகிய வடிவம் கொடுக்கப்பட்ட
திரைப்படம். மாரி என்ற அந்த நெகிழ்ச்சியான கதையை நினைக்கும்போதே ஆனந்தம்
ஏற்படுகிறது. இதுபோன்ற ஏராளமான சிறுகதைகள் படமாக எடுக்கலாம். முக்கியமாக
கண்மணி குணசேகரனின் கதைகளைக் குறிப்பிடலாம்.

--



ஜெயமோகனின் காடு நாவல் படிக்க காட்டுக்கே செல்லலாம் என்று நினைத்திருந்தேன்
நல்லவேளையாக ஊரில் இருக்கும் நேரம் நாவல் கைக்கு கிடைத்தது. கச்சிராயபாளையத்தில்
இருந்து வெள்ளிமலை செல்லும் பாதையில் பெரியார் அருவி என்ற சிற்றோடை ஒன்று உண்டு
அதுதான் நான் தேர்ந்தெடுத்த இடம். புத்தகத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.
வீட்டிலேயே மின்விசிறிக்கு அடியில் ஒய்யாரமாக படித்திருந்திருக்கலாம். காட்டில் நல்ல
வெயில் இருந்தது. பெரியார் அருவியில் சன்னமாக விழும் நீர் இருந்தது. பரவாயில்லை
என்று காட்டின் உள்நோக்கி ஒரு மைல் வரை பாறையில் நடந்து சென்றேன். குளிர்மையான
பாறைக்கடியில் சிற்றோடை சலசலக்க அமர்ந்து படித்தது வினோதமான அனுபவமாக
இருந்தாலும் ஒருவிதமான பயத்தோடுதான் படிக்க ஆரம்பித்தேன்.

காடு நாவலின் உள்ளே செல்ல முதலில் தடையாக இருந்தது அந்த மொழிதான். மலையாளத்தை
தமிழில் எழுதியது போல. பிறகு, ரெசாலம், குட்டப்பன், கிரி, அய்யர், கண்டன் புலையன்,
ராசப்பன், சினேகம்மை, நீலி, மாமி, ஆபெல், ராபி என்று ஒவ்வொருவராக உள்நுழைந்து வர
மெதுவாக நானும் காட்டினுள் நுழைந்துவிட்டேன். சற்று நேரத்தில் கண்ணயர்ந்தும் விட்டேன்.
எவ்வளவு நேரம் உறங்கினேன் என்று தெரியவில்லை. விழித்தபோது இருள் சூழ ஆரம்பித்தது.
மடத்தனமான காரியமொன்றை செய்துவிட்டோமென்ற எண்ணமும் வந்தது. கரடிகள் அதிகம்
சுற்றும் வனம் என்று அறியப்பட்ட வெள்ளிமலை, கரியாலூர் போன்ற வனப்பகுதிகள்.
பதறியபடி வெளிவந்துவிட்டேன்.

இந்நாவலில் வரும் நீலி, குட்டப்பன், ஆபெல், ராபி போன்ற கதாபாத்திரங்கள் எனக்கு
மிகுந்த நெருக்கத்தை உருவாக்கினார்கள். கதைச்சுருக்கமெல்லாம் எழுதமுடியாது. இது
ஒரு அனுபவம் நாவலைப் படித்தால் மட்டுமே உணரமுடியும்.

வன நீலி என்ற சொல்லை சொல்லும்போதே அதுகொடுக்கும் பரவச உருவகம் நாவலில்
அருமையான பகுதிகள். மற்ற எழுத்தாளர்களின் படைப்பைப் போல ஒரே அமர்வில்
வாசிப்பது போல காட்டை வாசிக்க இயலவில்லை. நானூற்றி எழுபது பக்கங்களில்
மொத்தமாக ஐம்பது முறையாவது முனை மடித்திருப்பேன். மேலும் கடந்த மூன்று
நாட்களாக கனவு கூட மலையாளத்தில்தான் வருகிறது. அங்கே மலையாளத்திலே
சம்சாரிப்பது போல வருவது இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது.

--

பவா செல்லத்துரை இல்ல விழாவிற்கு சென்று வந்த குறிப்பை பவா பாலுவுக்கு படித்துக்
காட்டினாராம். அதில் டப்பா லூமிக்சில் நம்மை படமெடுத்தால் ஒட்டுமொத்த புகைப்பட
உலகுக்கே அவமானம் என்றும், அவருடன் புகைப்படம் எடுக்க விருப்பப்பட்டது குறித்தும்
எழுதியிருந்தேன். என்கிட்ட சொல்லியிருந்திருந்தா தாராளமா எடுத்திருக்கலாமேப்பா...
என்று பாலு வருத்தப்பட்டதாக பவா சொன்னார். மறுபடியும் பெருமையாக இருக்கிறது.
(அய்ஸ் மிஸ் பண்ணிட்டோமேய்யா...) இணையத்தில் எழுதுவதினால் ஆன பயன்!

--

Thursday, October 15, 2009

அன்பினால் நிறைந்த வீடு

கடந்த வாரம் பவா செல்லத்துரையின் இல்லத்திறப்பு விழாவிற்கு சென்றிருந்தேன்.
அய்யனார் அழைப்பிற்கிணங்கவே சென்றிருந்தேன் முன்பாக பவாவின் வலைப்பூவை
மட்டுமே அறிந்திருந்தேன் மற்றும் அவரது ஷைலஜாவின் மொழிபெயர்ப்புகளைப்பற்றி
அறிந்திருந்தேன். எது என்னை அங்கே செல்ல வைத்தது என்று தெரியவில்லை ஆனால்
ஒரு நிறைவான விழாவினை கண்ட சந்தோஷம் மனத்தில். பவா, ஷைலஜாவின் உள்ளம்
முழுக்க அன்பினால் நிறைந்திருக்கிறது அந்த அன்பு அவர் வீடு முழுவதும் விரவியிருக்கிறது
வந்தவர்கள் அனைவருக்கும் சந்தோஷம் பகிர்ந்தளிக்கப்பட்டது. முழுக்க முழுக்க
கருங்கற்கல் கொண்டு கட்டப்பட்ட வீடு, விளக்கு மாடங்கள், ஓவியங்கள் என
ரசனையில்லாதவரையும் அமர்ந்து ரசிக்க வைக்கும் வடிவங்கள்.

முழுக்க முழுக்க கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்களைக் காணும்போதெல்லாம் மனம்
தனிமையை உணரும் சிறுவயதிலிருந்தே பழக்கப்பட்டிருப்பது அது. அதிகம் அடம்பிடித்தால்
உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி வழியில் அமைந்திருந்த ஒரு பள்ளியில் சேர்த்துவிடுவதாக
சொல்லி பயமுறுத்தியிருந்தார் அப்பா. முன்னதாக அங்கெ சென்று வந்த நாள் முதல் எனது
சேட்டைகளை மூட்டை கட்டியது நினைவிலிருக்கிறது. வீட்டை விட்டு விடுதியில் இருப்பதே
தாங்க முடியாததாக இருக்கும். மேலதிகமாக அவ்விடுதி முழுக்க முழுக்க எவ்வித அலங்காரமும்
அற்ற கருங்கற்களால் கட்டப்பட்டது. மிக உயரமான சுவர்கள் கொண்டது. பல சிறுவர்கள் களையிழந்த
முகங்களுடன் படித்துக்கொண்டிருப்பார்கள். கிட்டத்தட்ட சஷாங்க் ரிடம்ப்ஷன், க்ரீன் மைல்
படத்தில் வரும் சிறைச்சாலையை ஒத்திருக்கும். எனவே கற்களால் கட்டப்பட்ட வீட்டையோ
விடுதியையோ பார்த்தால் சிறைச்சாலையின் தனிமை பிம்பம் வந்துபோகும். இனிமேல் அது வரா.
பவாவின் அன்பு நிறைந்த இல்லமே ஞாபகம் வரும். பிற்காலத்தில் இதேபோன்றதொரு வீடு
கட்டவும் எண்ணமிருக்கிறது.



படத்தில் பாலுவும் கரிசலும்

இதுவரை பார்த்திராத புதுமையில் நடத்தினார். வீட்டில் முதலில் மாட்டை புக வைக்கும்
சம்பிரதாயமில்லை. மாறாக எழுத்தாளர்கள், எழுத்தை ரசிப்பவர்களால் இல்லம் நிரம்பியிருந்தது
சிகரம் வைத்தது போல தமிழ் சினிமா பெருமைப்படும் பாலுமகேந்திரா வந்திருந்தார்.
அவரை மிக அருகாமையில் சந்தித்ததே கனவினைப்போன்றதொரு தோற்றம் தந்தது.
த.மு.எ.ச வைச் சேர்ந்த கரிசல் குயில் கிருஷ்ணசாமி மற்றும் அவரது குழு இயற்றிய தமிழ்
பாடல்களை(சினிமா அல்ல) கிருஷ்ணசாமி பாட அவரைச்சுற்றிலும் அமர்ந்து அனைவரும்
கேட்டுக்கொண்டிருந்தோம். கேட்டுக்கொண்டே இருக்கலாம் போன்ற குரல். முன்னதாக
பாலுமகேந்திராவுக்கு பாடிக்காட்டிக்கொண்டிருந்தபோது அறையில் வெளியிலிருந்து
ஒட்டுக்கேட்டுக்கொண்டிருந்தேன். பிறகு அமர்வில் பாடும்போது தெளிவாக கேட்டேன்.



பாடலின் போது நண்பர்கள், வெண்சட்டையில் ஒய்யாரமாய் நின்றிருப்பவர் பவா.

பாடல் முடிந்ததும் பவா மற்றும் நண்பர்கள் சில நிமிடங்கள் பேசினார்கள். அனைவரும்
ஒருமித்த குரலாக பேசியது ஒன்றைத்தான். இவ்வீடானது இலக்கிய ஆர்வமுள்ள அனைத்து
பறவைகளுக்கும் வேடந்தாங்களாக அமையும் என்பது. அன்பால் நிறைந்த வீடு. வீடு என்ற
கனவைப்பற்றி பாலு பேசும்போது மிகுந்த நெகிழ்ச்சியாக இருந்தது. சிறு வயதில் தூர்தர்ஷனில்
வீடு படத்தை பார்த்த காட்சிகளும் நினைவுக்கு வந்தன. மனிதர்களில் அபூர்வமானவர் பாலு
அவரது பேச்சும் ரத்தினச்சுருக்கமாகவும் அழகாகவும் இருந்தது.

நம் இருவரையும் பாலு புகைப்படமெடுத்தால் எப்படியிருக்கும்? கேட்டுப்பாக்கலாமா என்று
அய்யனார் என்னிடம் கேட்டதை உடனடியாக நிராகரித்தேன். இந்த டப்பா லூமிக்சில் அதுவும்
நம்மை அவர் படமெடுப்பது ஒட்டுமொத்த புகைப்பட உலகுக்கே அவமானம் என்றேன்,

அங்கு செல்லும்போது அய்யனாரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தேன். இந்த ப்லாக்
எழுதறவன், பதிவு எழுதறவன்னு தயவு செய்து யார்கிட்டயும் அறிமுகப்படுத்த வேண்டாம்
என்பது. சாதாரண வாசகன்னு சொல்லு போதும் என்று. ஆனால் சொல்லிவைத்தது போல
இவர் ஒரு ப்லாக்கர் என்றே அறிமுகப்படுத்தினார். க.சீ.சிவக்குமார் என்னவெல்லாம் எழுதுவீர்கள்
என்று கேட்டார் சொல்வதற்கு விழிக்க வேண்டியதாயிருக்கிறது.

மூவாயிரத்தி சொச்சம் விமர்சகர்கள், ரெண்டாயிரத்தி சொச்சம் கவிஞர்கள், ஆயிரத்து சொச்சம்
கந்தசாமிகள், ஐநூத்தி சொச்சம் மொக்கைகள்.... இதெல்லாம் சொல்லவில்லை. சிவாவுக்கு
வலையுலகம் என்ற அபத்தமே தெரியாலிருப்பது சந்தோஷமான விஷயம் என்று அய்யனார்
அறிவுரை கூறினார்.

குமார சம்பவம் படித்துவிட்டீர்களா என்று கேட்டார். வாராந்தர தொடர்களில் ஆர்வமில்லை
ஒரே அமர்வில் படித்தாலும் மூளையில் நிற்காத அளவு நினைவுத்திறன் கொண்டவன் நான்
என்றேன். ஆனால் அவர் எழுதிய சிறுகதைகள் அடங்கிய பிடிஎஃப் கோப்பு
ஒன்றை அவரிடம் காட்டினேன். "அடப்பாவிகளா இதெல்லாம் இன்னும் பத்திரிக்கைக்கே
அனுப்பலியேஉங்க கைக்கு எப்புடிய்யா கெடச்சுது என்றார். இதில் எல்லாமே விகடனில்
வெளிவந்தவையா இருக்கலாம் எவராவது ஒருவர் வாராவாரம் திரட்டி இதுபோன்ற கோப்புகளாக
மாற்றி வெளியிடுவார். இது ஒன்றுமட்டுமல்ல உலகம் முழுக்க வெளிநாடு
வாழ் வாசகர்களுக்கு இம்மாதிரி கோப்புகள் மட்டுமே கிடைக்கும் சாத்தியம். இப்படித்தான் நான்
பல நாவல்கள் படித்தேன். அவருக்கே தெரியாமல் அவரது கதைகள், நேர்காணல்கள் எப்படி
வந்தது என்று தெரியவில்லையாம். இணைய உலகம். கடைசியாக ஒருவேண்டுகோள் விடுத்தார்
எனக்கொரு பிரதி அனுப்ப முடியுமா என்று.

சிவக்குமாரின் சிறுகதைகள் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவை அதே சமயம் அரசியலமைப்பு,
அதிகாரம் போன்றவற்றின் மீதான எள்ளல். இந்த எள்ளல் ஒவ்வொரு வரியிலும் இருக்கும்.
எனக்கு மிகவும் பிடித்திருந்தது உதாரணம்

"அகர முதல எழுத்தெல்லாம் கூடிமுயங்கப் பெறின்(முதல் நான்கெழுத்தின் சேர்க்கை வினோதம்!.)
கிடைக்கக்கூடிய கோடானு கோடி சாத்தியங்களில் ஒன்றாக ஆதிமங்களத்து விசேஷங்கள் நெர்ந்தது"

"ஈடில்லாததும் வீடில்லாததுமான அந்த நாய் கருப்பு வெள்ளை நிறமுடையது"

கவிதைகளும் அழகியல் உணர்வுடன் படைக்கப்பட்டிருக்கிறது. விகடனில் தவறவிட்டவர்கள்
கோப்பு வடிவில் வாசிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் தெரிவிக்கலாம். அனுப்புகிறேன்(அவரின் அனுமதியுடனே!)

எழுத மனம் நிறைய சந்தோஷமான அனுபவங்கள் இருந்தாலும் இத்தோடு முடித்துக்கொள்ளலாம்
என்று நினைக்கிறேன்.

இன்னொரு சந்தோஷமான விஷயம். தடாலடியாக பத்து, பனிரெண்டு என்று நூல் வெளியிடும்
எழுத்தாளர்களுக்கு மத்தியில் இணைய உலகில் இருந்து அய்யனாரும் அப்பட்டியலில் இணைகிறார்.
வம்சி வெளியீடாக, கவிதைகள், புனைவுகள், திரைப்படங்கள் என மூன்று நூலாக வெளிவருகிறது.
இணைய எழுத்துக்களில் தரமானவை அச்சில் வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி

Wednesday, August 12, 2009

அங்காடித்தெரு


உன்பேரை சொல்லும்போதே உள்நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர்வாழும் போராட்டம்
நீ பார்க்கும்போதே மழையாவேன் ஓ..ஓ
உன் அன்பில் கண்ணீர்த்துளியாவேன்

நீயில்லை என்றால் என்னாவேன் ஓ..ஓ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்

உன்பேரை சொல்லும்போதே உள்நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர்வாழும் போராட்டம்
நீயில்லை என்றால் என்னாவேன் ஓ..ஓ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்

நீ பேரழகில் போர்நடத்தி என்னை வென்றாய்
கண் பார்க்கும்போதே பார்வையாலே கடத்திச் சென்றாய்

நான் பெண்ணாக பிறந்ததற்கு வெட்கம் சொல்ல
முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்

என் உலகம் தனிமைக்காடு
நீ வந்தாய் பூக்களோடு
இனி தொடரும் கனவுகளோடு பெண்ணே பெண்ணே

நீயில்லை என்றால் என்னாவேன் ஓ..ஓ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்

உன்பேரை சொல்லும்போதே உள்நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர்வாழும் போராட்டம்
நீ பார்க்கும்போதே மழையாவேன் ஓ..ஓ
உன் அன்பில் கண்ணீர்த்துளியாவேன்

நீயில்லை என்றால் என்னாவேன் ஓ..ஓ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்

உன் கருங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உரையாடித்தான் ஜென்மம் தீரும்

உன் மாரோடு சாயும் அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்

உன் காதல் ஒன்றைத்தவிர என் கையில் ஒன்றுமில்லை
அதைத் தாண்டி ஒன்றுமே இல்லை பெண்ணே பெண்ணே

நீயில்லை என்றால் என்னாவேன் ஓ..ஓ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்

உன்பேரை சொல்லும்போதே உள்நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர்வாழும் போராட்டம்
நீ பார்க்கும்போதே மழையாவேன் ஓ..ஓ
உன் அன்பில் கண்ணீர்த்துளியாவேன்

நீயில்லை என்றால் என்னாவேன் ஓ..ஓ
நெருப்போடு வெந்தே மண்ணாவேன்

படம் : அங்காடித்தெரு
பாடியவர்: நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல்
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
இசை: கண்டிப்பாக ஜி.வி.பிரகாஷ்குமார் என்று நினைக்கிறேன். விஜய் ஆன்டனிக்கு
இன்னும் இந்த அளவுக்கு மெலடி கொடுக்கும் பக்குவமெல்லாம் வரவில்லை. அவர்
வேறு ரக இசையமைப்பாளர். இரண்டு பாடல்களுக்கு இசையமைத்து பின்னர்
படத்திலிருந்து ஜி.வி வெளியேறிவிட்டாராம் அந்த இரு பாடல்களில் இதுவும்
ஒன்றாக இருக்கவேண்டும்.

எதுவாக இருந்தாலும் உருகுதே மருகுதே பாடலைப்போல் இதுவும் இனிமையான
ஒரு பாடல்

Tuesday, July 21, 2009

வடக்கநந்தல் பேரூராட்சி துணை நூலகம் மற்றும் "என் கதை"

சரியாக ஏழாம் வகுப்பு படிக்கையில் நான் நூலகத்தினுள் நுழந்தது நினைவில்
இருக்கிறது. மரக்கட்டைகளின் அடியில் தப்பிவிட பறக்கும் தினசரிகளுக்கு அப்பால்
தனியான அறையில் நூலகர் இருப்பார். அங்கு உறுப்பினர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். ஏழாம் வகுப்பு படிப்பவர்க்கெல்லாம் நுழைய அனுமதி இல்லையாம். இடதுபக்க மூலையில்தான் சாமுத்திரிகா லட்சணம் பற்றிய புத்தகங்கள் இருப்பதாக செட்டியார்
வீட்டு பையன் சொன்னது நினைவில் இருக்கிறது. ஒரு பெண்ணின் முடியை
வைத்தே அவளது முகலட்சணங்களைக் கூட கண்டுபிடிக்க முடியுமாம். அப்பேர்ப்பட்ட புத்தகங்கள் இருக்குமிடத்தில்தான் எங்களை நுழைய அனுமதிக்கவில்லை. அதற்கு
பிறகு பத்தாம் வகுப்பு படிக்கையில் அரசு நூலகத்தில் அதிகாரப்பூர்வமாக அங்கத்தினராக சேர்ந்தபோது இனித்தது, ஆனால் முக்கியமாக நான் தேடிய புத்தகங்கள் எந்த மூலையில் தேடியும் கிடைக்கவில்லை. அப்போதைய நூலகம் வடக்கநந்தல் அரசுப்பள்ளிக்கு
அருகில் இருந்தது. நூலகத்தினுள் எப்போதும் காற்றாடியின் சப்தம் மட்டுமே கேட்கும். இப்போது பேரூராட்சி அலுவலகத்திற்கு அருகில் பஸ்நிலையம் பின்புறம், கார் ஸ்டேண்ட் என பரபரப்பான இடத்தில் இருப்பதால் அமைதியைக் காணவில்லை. முக்கியமாக
புத்தகங்கள் அடுக்கிய அறையினுள் அந்துருண்டையுடன் கூடிய புத்தகங்களின் வாசனை அறவே போய் ப்ளீச்சின் பவுடர் நாறல் அடித்தது.

இப்போது நூலகத்தினுள் நுழையும்போது கூட அங்கமுத்து சக்கரையின் மீதான
பயத்தினால் சற்றே பின்வாங்கினேன். ஏனென்றால் உறுப்பினராக சேரும்போது
அடம்பிடித்து சேர்ந்த நான் நாளடைவில் புத்தகங்கள் திருப்பித்தராமல் டபாய்க்கத்துவங்கினேன். சிலநாள் என் பின்னாலேயே சுற்றினார் அ.மு சக்கரை.
நான் பிடிபடவேயில்லை. கல்லூரி, மறுபடி கல்லூரி, வெளிநாடு என்று சுற்றி விட்டு இப்போழுது வந்தால் இப்போழுதும் அதே நூலகரே இருப்பாரோ, அடையாளம் கண்டுகொள்வாரோ என்று பயம் அதனாலே இங்கு வந்தநாள் முதல் நூலகம் பக்கம் தலைகாட்டவில்லை. சென்ற வார இறுதிக்கொண்டாட்டத்தின்
உச்சமாக எனது டயர் பஞ்சராகியது அதை நான்கு மைல் தள்ளி வந்து நல்லாத்தூர் என்னுமிடத்தில் ஒட்டக்கொடுத்துவிட்டு உட்கார்ந்திருந்தேன். சரியாக பஸ்நிறுத்தத்திற்கு
எதிரே அமைந்துள்ளது அந்தக் கடை. இரண்டு புளியமரங்களுக்கிடையில் ஒரு கடை
அதற்கு ஒரு நிறுத்தம். சிகரெட் கூட கிடைக்காத ஒரு இடத்தில் மாட்டிக்கொண்டதை நினைத்து வெந்தபடி கல்திண்டில் அமர்ந்திருந்தேன். ஒரு பேருந்து வந்தது. அதில்
இருந்து ஒருவர் இறங்கினார். சில முகங்களைப் பார்க்கும்போது பழகிய முகம் ஆனால்
மறந்து போயிருக்கும் ஞாபகத்தில் வராதவரை மூளையை போட்டு கசக்கிப்போட்டு பிழிந்தெடுத்து வாட்டிக்கொண்டிருக்கும்போது “சக்கர சார் என்ன பென்சன் நாளா...”
என்று கேட்டபோதுதான் எனக்கு உரைத்தது, அது பலவருடங்களாக என்னை
வலைவீசி தேடிக்கொண்டிருக்கும் அங்கமுத்து சக்கரை என்ற வடக்கநந்தல் சிறப்புநிலை பேரூராட்சியில் துணை நூலகத்தின் நூலகர் என்று. உடனே பயமும் பிடித்துக்கொண்டது என்னை ஒருவேளை அடையாளம் கண்டுகொண்டால்? திருட்டுப்பயலே உன்னால நான் எவ்ளோ அலைஞ்சேன் தெரியுமா..., நீ அந்த புக்கு திரும்பக்குடுக்காத பையன் தான?
தம்பி உன் பேர் கதிரவன் தான? மொத்தம் மூணு புக்கு திருப்பி தரல என் காச போட்டு கட்டினேன் ஏழு வருச வட்டி போட்டாக்கூட ஆயிரம் தொடும் ஒழுங்கா காச குடு...
இப்படி ஏதாவதொன்றை சொல்வார் என்று எதிர்பார்த்தேன் ஆனால் எதுவும்
சொல்லவில்லை. என்னை அடையாளம் தெரியவில்லை. பெரிய சந்தோஷம்.

என் கதை - நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை



சாருவின் எழுத்துத் தொனிக்கும் நாமக்கல் கவிஞரின் எழுத்துத் தொனிக்கும் ஆறு வித்தியாசங்களை கண்டுபிடித்துவிடலாம். அதனால்தான் சாருவின் வலைப்பக்கத்தில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது என்று கருதுகிறேன். இரண்டு பேருக்குமே தனிப்பட்ட வாழ்க்கையிலும் பொதுவாழ்க்கையிலும் நிறைய ஒற்றுமைகள் உள்ளதை வாசிக்கும்போது உணர முடிந்தது. குறிப்பாக கட்டை மீசையுடன் கம்பீரமான தோற்றம், புலவன் வறுமை (இதைப்பற்றி பெரிய அத்தியாயமே உள்ளது), இரண்டு திருமணங்கள், தன் மனைவியை தெய்வத்திற்கு சமமான ஒன்றாக முன்வைத்து அவர் எழுதும் பல உதாரணங்களுடன் சில பக்கங்கள், புலவரின் இல்லறவாழ்வு வறுமையால் வாடியபோது அவரது நண்பர்களே உதவுவது. குறிப்பாக உனது எழுத்துவேலையை நீ தொடர்ந்து செய் உனது
குடும்பம் பற்றி கவலைப்படாதே அதற்கான நிரந்தர வருமானத்தை உருவாக்கித்தர
நாங்கள் இருக்கிறோம் என. அதிலும் பல சிக்கல்கள் நிலம் எழுதித்தர முடிவு செய்யும்
நண்பர் ஒருவர் இறந்துவிடுவது, அல்லது எதோவொரு காரணத்தால் தடைபடுவது என.
கடைசியாக பாரதியார் மேல் கொண்டிருந்த அபரிதமான அன்பு. அவரை நேரில் சந்திக்க நடந்தே செல்வது என சொல்லிக்கொண்டே போகலாம்.

நாமக்கல் கவிஞரின் இளமைக்காலத்தை விவரிக்கும் இடங்களில் வெள்ளைப்படம்
பார்ப்பது போன்ற உணர்வைத் தந்தது. குறிப்பாக அவரது ஓவியத்திறமை. காவல்
துறை ஏட்டான அவரது தந்தையோ படம் வரையும் தொழில் சுத்தமாக பிடிக்கவில்லை.
தன் மகன் தன்னைப்போலவே காவல்துறையில் அதிகாரியாக வேண்டும் என்று ஆசை. பிரிட்டிஷ் உயர் அதிகாரி ஒருவரின் செல்லமகள் இறந்து போகிறாள் அவளுடைய
புகைப்படம் கூட ஒன்று இருப்பதாகவும் ஆனால் அது மிகச்சிறிய வயதில் எடுத்தது.
நான் சொல்லும் குறிப்புகளை வைத்து படம் வரைந்து தரமுடியுமா எனக்கேட்கிறார். அதுவரை தன் ஓவியத்திறமைக்கு எவருமே ஆதரவாக இல்லை என்ற குறை அவருக்கிருந்தது அதனால் உடனே சம்மதிக்கிறார். புகைப்படத்தை வாங்கிக்கொண்டு
அவர் சொல்லும் குறிப்புகளை எழுதிக்கொண்டு பதினைந்து நாளில் வரைந்து தருவதாக வாக்குறுதி அளிக்கிறார். தன் திறமைகள் அனைத்தையும் கொட்டி பார்த்துப் பார்த்து
செதுக்கி அதிகாரியிடம் காட்டுகிறார் அவர் சலனமேயில்லாமல் வெகுநேரம்
அமைதியாக பார்த்துவிட்டு புலவரிடம் கண்களில் நீர் கசிய சொல்கிறார். என் மகளை
எனக்கு மீட்டுத்தந்து விட்டீர்கள் என அணைத்துக்கொள்கிறார்.

அதுவரை ஓவியத்திற்கு விலையாக ஐம்பது ரூபாய் கொடுப்பார் என்று எண்ணியிருந்த புலவருக்கு மேலும் அதிர்ச்சி தரும் வகையில் தன் பணப்பையில் இருந்து
எண்ணாமலேயே அள்ளிக்கொடுக்கிறார். அதில் அறுநூற்று ஐம்பதுக்கும் மேலாக
பணம் இருக்கிறது. அந்தக்காலத்தில் அது மிகப்பெரிய பணம்.

புலவர் வாழ்நாள் முழுவது எதோவொரு குழப்பத்திலேயே வாழ்ந்து விட்டதாகவே வாசிக்கையில் தெரிகிறது. அல்லது வாழ்நாள் முழுவதும் மற்றவரின் விருப்பத்திற்காகவே வாந்ததுபோல என்று சொல்லலாம். தன் எதிர்கால வாழ்க்கைப் பற்றி தன் தந்தையே எல்லாவற்றையும் தீர்மானிப்பது. தன் திருமணம், அசைவத்தை விடவேண்டும் என்று நான்கைந்து முறை சபதமெடுத்து அவற்றில் தோல்வியடைவது, இல்லறவாழ்வில் வறுமையில் வாடுகையில் தன் தந்தை சொல்படி போலிஸ் உத்தியோகத்திற்கு சென்றிருந்தால் இந்த வருமை எட்டிப்பார்த்திருக்காது என வருந்துவது என நிறைய சொல்லலாம்.

இவரின் இளமைக்காலம் மிகுந்த சுவாரசியமுள்ளதாகவே தெரிகிறது. ஒருபாடம் தவிர
மற்ற எல்லாப்பாடங்களிலும் மிகுந்த ஞானம் கொண்டிருந்தார். அது கணிதம். இவருக்கு கணிதம் கற்பிக்க பல பிரயத்தனங்கள் செய்தும் பலன் அளிக்காமல் போகிறது. சிறந்த கால்பந்து வீரராகவும் இருந்திருக்கிறார். சுதந்திரத்துக்கு முந்திய இந்தியாவின் மூலை முடுக்கு ஒன்றுவிடாமல் சுத்தி வந்திருக்கிறார். ஒரு பயணத்திற்கு குறைந்தது ஆறுமாதங்கள். பாகிஸ்தானின் பெஷாவர் வரை சென்று வந்திருக்கிறார். அதுகுறித்த விவரமாக புத்தகத்தில் இடப்பெற்றிருக்கிறது. மிகுந்த சுவாரசியத்துடன் எழுதியிருக்கும் இப்பகுதியை இருமுறை வாசித்தேன்.

ராஜாஜி, வா.வே.சு ஐயர், பெரியார், காந்தி, பாரதி, பாரதிதாசன், என்று
அனைவருடனும் மிகுந்த நட்புடன் பழகி இருந்திருக்கிறார். தமிழகத்தில் காங்கிரசு வளர முக்கிய காரணிகளுல் ஒன்றாக இருந்திருக்கிறார். இவரது மேடைப்பேச்சினைக் காண
மக்கள் திரண்டிருக்கின்றனர். காங்கிரசின் ஆஸ்தான பேச்சாளர்களில் முதன்மையான ஒருவராக திகழ்ந்திருக்கிறார்.

பாரதியின் மேல் இவருக்கு ஒரு மிகப்பெரிய அபிமானம் இருந்திருக்கிறது. வெறி என்று
கூட சொல்லலாம். அந்தளவுக்கு அவரின் மேல் பற்று இருந்திருக்கிறது. அவரைக்கான புதுச்சேரிக்கு பலமுறை சென்றும் காணமுடியாமல் திரும்பியிருக்கிறார். ஒருமுறை தேவகோட்டைக்கு நண்பருடன் சென்றிருக்கும் புலவருக்கு பாரதி இங்கே வந்திருக்கிறார்
என தகவல் கிடைக்கிறது. மேலும் அதிகாலையில் அவர் கிளம்பிவிடுவார் என்றும்
தகவல் கிடைக்கிறது. ஏற்கனவே இரவு நெருங்கியிருந்தது ஆனால் சற்றும் யோசிக்காமல் அவரைக்காண புறப்படுகிறார். மாட்டுவண்டி கூட ஏற்பாடு செய்யாமல் வயல்வெளிகளில் சுற்றி நடந்தே பல மைல்கள் கடந்து செல்கிறார். கடைசியில் அங்கு
சென்றடையும்போது பாரதியார் நண்பர்களுடன் உலாத்தப்போயிருக்கிறார் என்று சொல்கின்றனர் உடனே அவரைத் தேடி அலைகிறார். இறுதியாக கண்டுகொள்கிறார்.
ஊருக்கு வெளியே காட்டில் நிலவொளியின் கீழ் நண்பர்களுடன் அமர்ந்து விவாதித்துக்கொண்டிருக்கிறார். அவர் அருகில் செல்லும்போது எனது உடல் நடுங்கியது. எவ்வளவு கட்டுப்படுத்தியும் தான் உணர்ச்சிவசப்படுவதை கட்டுப்படுத்த முடியவில்லை
என்று குறிப்பிடுகிறார்.

தலையில் முண்டாசு கட்டி கோட் அணிந்திருந்தார் பாரதி. நிலவொளியின் கீழ் அவர்
ஒரு ஓவியம் போல இருந்தார். அவரைக்காண்கையில் எனக்கு இரண்டு ஆசைகள்
இருந்தன. ஒன்று அவரை ஓவியம் தீட்டுவது, இரண்டாவது அவர்பாடக்கேட்பது.
தன்னை அறிமுகப்பத்துக்கொள்கிறார். பாரதி முன்பே இவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்
ஏனெனில் ஓவியத்திறைக்கு சான்றாக அவர் டெல்ல்லி வரை சென்று பதக்கம் பெற்று
திரும்பியிருந்தார். தானும் ஒரு கவி என்று சொல்லும்போது மரமதிர சிரித்த பாரதி
“நீர் ஒரு காவியக்கவிஞர் என்று சொல்லும்” என்று சிரித்தாராம். பாரதியின்
முன்னிலையில் தான் இயற்றியிருந்த பாடல்களை பாடினார் கவிஞர்.

பாடி முடித்ததும் வெகுநேரம் கைதட்டினாராம் பாரதி. பின்னர் வெகுநேரம் சுதந்திரம் குறித்தும், கவிதைகள் குறித்தும் பேசிக்கொண்டிருந்தனர். விடியல்காலை மூன்று மணி ஆகியது. ஆனால் தூக்கத்தின் அறிகுறிகள் எதுவும் அவரிடத்தில் தெரியவில்லை. புறப்படுகையில் பாரதியாரிடம் பாடும்படி கேட்டுக்கொண்டார் கவிஞர். கேட்கும்போதெல்லாம்
பாடமுடியாது எனக்குத்தோன்றும்போதுதான் பாடமுடியும் என்று சொல்லிவிட்டார்.
இதனால் வருத்தமடைந்த கவிஞர் ஓவியம் வரையவேண்டும் என்கிறார். அதற்கான
நேரம் வரும் என்று சொல்கிறார்.

பாரதி அதிகாலையில் பயணமாகி வேறு ஒரு இடம் செல்லவேண்டும் ஆகவே
கிளம்பலாம் நண்பர்களே என்று கிளம்புகின்றனர். அங்குள்ள ஒரு வீட்டில் பாரதி
தூங்குகிறார் அவருக்கு அருகில் கவிஞர். அதிகாலை நான்கு மணிக்கு அருகில் குறட்டை விட்டு உறங்கிக்கொண்டிருந்த கவிஞரை எழுப்பி “பாடல் வேண்டுமென்று கேட்டாயே
இப்பொழுது இப்பொழுது பாடட்டுமா என்று கேட்கிறார். சந்தோஷமிகுதியில் தலையாட்ட பாடத்துவங்குகிறார்.

கம்பீரமான குரலில் பாட ஆரம்பிக்கிறார் பாரதியார். அங்கே உறங்கியவர்கள் எழுந்து உட்கார்ந்து ஆர்வமாக கேட்க ஆரம்பிக்கின்றனர். கவிஞர் கண்களை மூடி பாடலில் லயிக்கிறார். தொடர்ந்து வெகுநேரம் பாடிக்கொண்டே இருக்கிறார். பயண ஏற்பாட்டாளர்கள் பயண நேரம் தாண்டிப்போனதால் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருக்கின்றனர்.
அவரோ நிறுத்துவதாக தெரியவில்லை. இறுதியில் கண்களைத்திறந்து பாடலை நிறுத்துகிறார். இப்போழுது திருப்தியா என்றவாறு புறப்படுகிறார் பாரதி. இவ்வாறு தான் பாரதியை சந்தித்ததை எழுதியிருக்கிறார் நாமக்கல் கவிஞர்.

நூலில் பல இடங்களில் சில வார்த்தைகள் புரியவில்லை. குறிப்பாக “அகஸ்மாத்தாக” என்று பல இடங்களில் உள்ளது. நாமக்கல் பகுதி நகராட்சி அலுவலகத்தில் இன்றும் அவரது ஓவியங்கள் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன் நாமக்கல் பகுதியில் உள்ளவர் கண்டிருந்தால் எப்படியிருக்கிறது என்று தெரியப்படுத்தலாம்.

அந்தக்கால கல்வி முறையில் படித்ததை விவரிக்கும்போது “ஐந்தாவது பாரம் படித்துக்கொண்டிருக்கையில்” “நான்காவது பாரம் படித்துக்கொண்டிருக்கையில்” என்று வருகிறது அது ஐந்தாம் வகுப்பா அல்லது வேறு எதாவதா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.


“கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” இந்த வரிகளை எழுதியது பாரதிதான்
என்று நினைத்திருந்தேன். ஆனால் எழுதியது நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை.
அற்புதமான வரிகள். பாரதியின் மறைவுக்குப்பின் அவரின் வெற்றிடத்தை இராமலிங்கம் அவர்களால் தான் நிரப்ப முடிந்தது என்று பல்வேறு சுதந்திர தியாகிகள் பல தருணங்களில் கூறியதை பதிவித்திருக்கிறார். அவருடன் ஒப்பிடுகையில் நான் எதையும் சாதிக்கவில்லை என்றும் பதிவித்துள்ளார்.

அனைவரும் வாசிக்கவேண்டிய நூல் இது. அந்தக்காலத்தில் எழுதியதால் சலிப்பு தரும் நடையில் இருக்கும் என்று எண்ண வேண்டாம். சாதாரண பேச்சு வழக்கிலேயே இதை எழுதியிருப்பதால் எந்தவித தடையும் இல்லாமல் சரளமாக வாசிக்க முடிகிறது.

எப்படி எழுதினாலும் எழுத்து நடை வாசிக்க சங்கடமில்லாமல் செல்வது எழுதவரவில்லை.
வெறும் தகவல்களின் தொகுப்பு போலதான் வருகிறது எனக்கு. இந்த அருமையான
புத்தகத்தை வெறும் தகவல்களின் தொகுப்பாகவே தருகிறேன்.
-
பி.கு: ஆரம்பத்தில் நூலக அங்கத்தினராக சேர வெறும் முப்பத்தி ஐந்தே ரூபாய்தான் கட்டணம். வருடத்திற்கு ஐந்து ரூபாய் சந்தா தொகை. இப்படி குறைந்த கட்டணத்தில் எத்தனைபேர் அங்கத்தினராக இருப்பார்கள் என்றால் நூற்றுக்கும் குறைவாகவே இருக்கின்றனர். வாசிக்கும் பழக்கம் நூற்றுக்கு ஐந்து சதவீதம் கூட இல்லை
என்பது வேதனைப்படவேண்டிய விஷயம்.

உள்ளே நுழைந்த உடன் முதலில் நான் கண்டெடுத்தது “மறைவாய் சொன்ன கதைகள்” வெகுநாளாக தேடிக் கொண்டிருந்த நூல். (அண்ணாச்சி வீட்டில் ஆட்டையை போடலாம் என்று நினைத்திருந்தேன் ஆனால் சிக்கவில்லை) அதை முதலில் எடுத்து மேசையில் வைத்ததும் பெண் நூலகர் ஒரு தினுசாக பார்த்தார்.

சிறப்பான பல புத்தகங்கள் மிகச்சிறிய நூலகத்திலேயே கிடைக்கின்றன. குறிப்பாக கிழக்கு, உயிர்மை, காலச்சுவடு புத்தகங்கள் அதிகமாக கிடைக்கின்றன. தொடர்ச்சியாக, மூன்று விரல், சுஜாதாவின் சில்வியா ப்ளாத், தாமரையின் சிறுகதை தொகுப்பு
என எடுத்து வந்து வாசித்தேன்.

எல்லா அரசு அலுவலகங்களும் ஞாயிறு அன்று விடுமுறை விடும்போது நூலகம் மட்டும் ஏன் வெள்ளிக்கிழமை அன்று அரசு விடுமுறை அளிக்கின்றனர்? யாருக்காவது தெரியுமா?

ஒருவேளை விடுமுறை நாளில் அனைவரும் பயபெறும் வகையில் இருக்குமா என்றால் அதுவுமில்லை அன்றுதான் எவருமே உள்ளே நுழைவதில்லை.

Wednesday, July 08, 2009

கேக்குறாங்கய்யா கேள்விகள...

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

தாத்தா வெச்சது. ரொம்ப

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

Into the wild படத்துல ஹீரோ உலகத்த வெறுத்து காட்டுக்குள்ள போயிடுவாரு அப்போ ஆனந்தசுதந்திரமா ஓடி விளையாடும் மான்கள பாக்கும்போது அவர் கண்ல தண்ணி வரும் அப்போ எனக்கும் வந்துச்சு.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

மொத ரெண்டு லைன் புடிக்கும் அதுக்கு மேல காது

4. பிடித்த மதிய உணவு என்ன?

முருங்கக்கா சாம்பார் + சோறு

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

அதெப்படி முடியும்

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா....அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

பாத்ரூம் தவிர எங்க குளிச்சாலும் புடிக்கும்

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

எல்லாத்தையும், உதட்ட முதல்ல பாக்குறது வழக்கம்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

தண்ணி போட்டா ரொம்ப பேசறது. ரொம்ப பேசறது

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

ஆள கண்டுபுடிச்ச உடனே பாக்கணும்

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அப்டிலாம் இல்லயே ரொம்ப யோசிச்சா தாத்தா வர்றார்.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

இல்ல

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

டிவி. ஓடி ஓடி விளையாடு ஓடி ஓடி விளையாட வாடி... இதத்தான் போடறானுங்க எப்பயுமே எல்லாத்துலயும்

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கறுப்பு

14. பிடித்த மணம்?

வெற்றிலை, காரணத்த விரிவா மறைவா சொன்ன கதைகள்ல படிக்கலாம்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

ராஜேஷ். நண்பர், நல்லா எழுதுவார்

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு

எ.நி.ச.அறை

17. பிடித்த விளையாட்டு?

திருடன் போலீஸ்

18. கண்ணாடி அணிபவரா?

இல்ல

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்

கலைப்படம். "கலை"ப்படங்களைப் பார்க்க ஆர்வமளித்த அண்ணாச்சிக்கே எல்லா புகழும்

20. கடைசியாகப் பார்த்த படம்?

நாடோடிகள்.

21. பிடித்த பருவ காலம் எது?

கடும் வெயில் கோடைக்காலம் அல்ல

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

என் கதை - நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்களின் வரலாறு

23. உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?



இந்த படத்தைத்தான் ரொம்ப நாளா வெச்சிருக்கேன். மோகன் தாஸ் எடுத்ததுன்னு நினைக்கிறேன்.
இதை வைத்தநாள் முதல் மாத்தல. பொதுவா நான் அடிக்கடி மாற்றுகிறவன் அல்ல.

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

ஓடை நீர் சலசலக்கும் சத்தம். குழந்தை அழும் சத்தம் சுத்தமா பிடிக்காது

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்சத் தொலைவு?

அமீரகம்

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

தெரிஞ்சா சொல்லுவம்ல

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

யாருக்காச்சும் தனியா காத்திருக்கறது.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோவம்

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

கொடைக்கானல்

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

நல்லாவே இருக்கணும்னு

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

தெரில

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

அட சரியா தெரிலங்க.

எழுதறதுக்கான அமைப்புகள் சரியா இல்லாத காரணத்தால் எழுதறதில்ல. எப்பவாச்சும் எழுதற இந்தமாதிரி பதிவுகள்லயும் ஓரிரு வார்த்தைகளில் எல்லா பதில்களையும் எழுதிட்டேன். விரிவா எழுதுனாலும் வாசிக்கறதுக்கு ஆள் இல்லைங்கறது தெரிஞ்ச விஷயம்தான். அழைத்த அய்யனாருக்கு நன்றி. என்கிட்ட இருக்க எவ்வளவோ நல்ல குணங்கள்ல இருந்து எதையாச்சும் ஒண்ணை சொல்லிருக்கலாம். அத விட்டுபோட்டு நல்லா குடிப்பேன்னு சொன்ன உன் நல்ல உள்ளத்துக்கு தக்க நேரம் கிடைக்கும்போது கைம்மாறு செய்வேன் ஜாக்கிரத.

Sunday, May 31, 2009

குயில்


பறவைகள் பல கண்டிருந்தும் குயிலைக்
கண்டதேயில்லை என் கண்கள்
தினசரி நான்கு மணிக்கு எதிர்வீட்டுச்
சிறுமியொருத்தி குயில் போலக்கூவுகிறாள்
குயிலும் ஆமோதிப்பதுபோல கூவுகிறது
மறுதினம் கூவுவதெப்படி என்று எனக்கு
அச்சிறுமி பயிற்சியளித்தாள் பிறகு
தினசரி நாங்களிருவரும் குயிலிடம்
கூவிக்கொண்டிருந்தோம் ஒருநாள்
உன் அக்கா பெயரென்ன என்று
கேட்டேன் முறைத்துப் பார்த்தவள்
வயிற்றில் குத்திவிட்டு சென்றுவிட்டாள்
அதற்கடுத்த நாட்களில் குயில் தனியாக
கூவிக்கொண்டிருந்தது.