எல்லையற்ற அன்பு கொள்வோம்

Friday, September 26, 2008

சாரு, தாம்தூம், வசனங்கள்

சாருநிவேதிதா தனது குட்டிக்கதைகள் என்ற பெயரில் நல்ல நல்ல கதைகள் எழுதி
வருவது அனைவருக்கும்(?) தெரிந்தே இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த குட்டிக்கதையில் துபாய்
பார்களில் ஆடும் பெண் ஒருவரைப்பற்றி எழுதி இருக்கிறார். இதில் ஆச்சரியப்பட
என்னடா வெங்காயம் இருக்கிறது என்கிறீர்களா? அந்த அம்மையாருக்கு ராஸலீலா என்ற சாருவின் நாவலை தருவதாக ஒருவர் தலையில் அடித்து சத்தியம் செய்து
இருக்கிறாராம்.

பொதுவா ரம்ஜான் மாசத்துக்கு ஒரு வாரம் முன்னாடியே அமீரகத்தில் உள்ள அனைத்து
பார்களும் மூடிடுவாங்க. ஒருமாசத்துக்கு தாகசாந்திக்கு தடா அதனால டிஸ்கோ பார்
பெண்கள் எல்லாம் பொட்டி கட்டிக்கொண்டு ஊருக்கு போய்விடுவார்கள் என்று அமீரக
குடிமக்கள் அனைவருக்கும் தெரியும்.

எனக்குத் தெரிந்தவரையில் ராஸலீலா நாவலை இங்கு ஆசிப் அண்ணாச்சி மட்டுமே
வைத்துள்ளார். அமீரகத்தில் அண்ணாச்சி இலக்கியப்புரட்சி செய்துவருவதாக வெளிவந்த
வதந்திகளை நம்பாமல் இருந்தேன். சாருவின் குட்டிக்கதையை படித்தவுடன் புரட்சியை
கண்டு நம்பாமல் இருக்கமுடியவில்லை. இந்தசெய்தி குறித்து அவரிடம் தகவல் கேட்க
தொலைபேசியபோது சிக்னல் இல்லை என்று எஸ்கேப் ஆகிவிட்டார்.


---



தாம்தூம் படத்தில் வரும் கங்கனா ராவத்தை சப்பை பிகர் என்று எல்லாரும் சொன்னது
எனக்கு மனசு வலிக்கிறது. சப்பையாக இருந்தால் சப்பை பிகரா? நானும் படத்தை
இரண்டு முறை பார்த்தவகையில் அவர் கும் பிகர் என்று சொல்ல அத்தனை
தகுதியும் அவரிடம் இருக்கிறது. கிராமத்தில் இப்படி ஒரு வெளுத்த பெண்ணா என்று
கேட்கலாம். இப்போதெல்லாம் கிராமத்துப் பெண்கள் நுனிநாக்கு ஆங்கிலமும் ஜீன்ஸ்
ஸ்லிவ்லெசுமாக சுற்றுகிறார்கள். கிராமத்துப் பெண் என்றால் இன்னமும் தாவணி
கட்டிக்கொண்டு வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அப்படியே தாவணி போட்டால்
பொருந்தவேயில்லை என்று சொன்னாலும் சொல்வார்கள். அவரிடம் என்ன ஒரே
ஒருகுறை என்றால் நடிக்க தெரியவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.
போஸ் வெங்கட்டையும், சேத்தனையும் அநியாயத்திற்கு வீணத்திருக்கிறார்கள்
பேசாமல் அவர்களுக்கு ரஷ்ய போலிஸ் இலாகாவில் ஆபிசர் உத்தியோகம்
கொடுத்திருக்கலாம்.

---

சில வசனங்கள் நான் ரசித்தது... என்ன படம் என்பதை நீங்களே கண்டுபிடித்து
சொல்லலாம்.

"ஒருவேளை நீங்க உள்ள வரும்போது நான் புத்தகம் படிச்சிட்டோ, பாட்டு கேட்டுகிட்டோ
இருந்திருந்தேன்னா என்ன பண்ணிருப்பிங்க?

"கேவலமா சாரி கேட்டிருப்பேன்"
---

"வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆணுக்கு பின்னாலயும் ஓடிப்போய் ஒரு பொண்ணு சேந்துக்கறாங்க பாரு, அதான் அவங்களோட திறமை"

---

"தம்மாத்துண்டு இருந்துக்கினு தவ்லத்து மாரி பேசுது பாத்தியா... சார்ப்புடா"

---

"நான் அடிச்சா நீ செத்துருவ"

---

"நீங்க சாஃப்ட்வேரா?

"நானா? சாஃப்ட்வேரா, ஹார்டுவேர்ங்க... போலிஸ் ஆபிசர்"

---

"அடிச்சாதாண்டா எம்ஜியாரு, அடிவாங்குனா நம்பியாரு"

---

தெரியாதுடா... அதான் நூறுவாட்டி சொல்லிருக்கேன்ல. தெரியாது தெரியாது தெரியாது

---

call me an asshole one more time... இந்த படத்தை பேரரசுவின் தூரத்து உறவினர்
எடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். :)

---

I will love you my whole life. you and no other, forever. மெல் கிப்சன் அண்ணாச்சி ஒன்னுமே போடாத ஒரு சூப்பர் பிகரிடம் இந்த டயலாக் அடிப்பார்.

---

That there are things in this world
not carved out of gray stone. That
there's a small place inside of us
they can never lock away, and that
place is called hope.
---

சதீசு எப்படிரா மச்சான் மொதவாட்டி கேக்கற மாரியே எல்லா வாட்டியும் கேட்டுகிட்டுருக்க?

யார்ரா இவன்? என் நண்பன் டா... நீ சொல்லு மச்சி...
---

நீ ரொம்ப அழகா இருக்க, உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு... i like you
(இதே டயலாக் அப்டியே உல்டா பண்ணியும் இருவது வருஷம் கழிச்சு பெரிய ஹிட் ஆச்சு)

---

யாரோ லாபத்துக்கு யாரையோ கொல பண்றது ஒரு தொழிலு??
---



மூணு வாரத்துக்கு முன்னாடி எழுதி ட்ராப்ட்ல இருந்த ஐட்டங்கள் இவை.
எதுவும் இல்லன்னா எத வேணாலும் எழுதலாம்ன்றதுக்கு இது ஒரு உதாரணம்.

Wednesday, September 17, 2008

கோயில்களைப்பற்றி

கோயில்பற்றி நினைத்தாலே மனதுக்குள் ஒரு வாசம் தோன்றி மறையும் அதை
என் நாசி உணரும். வாசம் என்று சொல்வதை விட புழுக்கை மணம் என்று
சொல்வதுதான் சரியாக இருக்கும். வவ்வால்களின் புழுக்கையுடன் கற்பூரமும்
ஊதுவத்தியின் மணமும் கலந்த கலவையான மணம். இதை அனுபவித்தால்
மட்டுமே உணரமுடியும். சில மணங்களை எப்போது முகர்ந்தாலும் அது நம்மை
முந்தின காலத்திற்கு இட்டுச்செல்லும். முற்றிலும் கருங்கற்கள் கொண்டு கட்டிய
பழைய கோயில்களில் இந்த மணத்தை உணரலாம். கோயில் என்றவுடன்
சாமி கும்பிடும் இடமாக அல்லாது அது ஒரு விளையாடும் இடம் என்றுதான்
எனக்குத் தோன்றும். ஏனென்றால் நான் வளர்ந்தது பாட்டியிடம், பாட்டியின்
பின்கட்டு வீட்டின் பின் உள்ள தோட்டத்தில் பூக்களின் வாசம் நுகர்ந்தபடி
சென்றால் கடைசி சுவருக்கு அருகில் அழகிய வேலைப்பாடுகளுடன் உள்ள
கோயிலின் சுவருக்குப் பின்னால் சென்று விடும்.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கோயில் அது. பின்புறத்தில்
மிகப்பெரிய இரண்டு மாமரங்கள் உள்ளன. சுவற்றை ஒட்டி கோயிலில் மட்டுமே
காணப்படும் சாமிப்பூ மரங்கள், இதனை செடி என்று சொல்ல மனம் வரவில்லை.
எத்தனை பலம் கொண்டு கல்வீசினாலும் அதில் மாங்காயே விழுந்ததில்லை
அவ்வளவு உயரத்தில் இருக்கும் அவை. உலகிலேயே பெரிய மாமரங்கள் அவை
என்றே நினைத்திருந்தேன். இன்றுவரைகூட அதைவிட பெரிய மரங்களைப்
பார்த்திருந்தாலும் அதைவிட பெரிய மாமரத்தைக் கண்டதில்லை. அங்கே
காம்புகளில் காவிநிறமும் மல்லிகையைப் போன்ற வெண்மை நிறமும் கொண்ட
ஒரு பூமரம் இருந்தது இதையும் செடி என்ற சொல்வது சரியாக இருக்காது.
கோயில்கள் கட்டப்பட்டபோதே அவைகளை நட்டிருக்கவேண்டும். இல்லாவிட்டால்
செடி என்றும் அவ்வளவு பெரிய மரமாகாது.

அந்தப்பூக்களில் இருந்து ஒருவிதமான வாசம் வரும். அந்தவாசத்தை நுகர்ந்தால்
மெல்லிய சந்தோஷம் உண்டாவதுபோல எண்ணம். முலைப்பால்குடி மறக்காத
குழந்தையிடம் மட்டுமே அந்தவாசம் வரும். அந்தப்பூவின் பெயர் அறிய நிறைய
சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும் அதை அறிய வேண்டும் என்று எண்ணியதில்லை.
அழகான நினைவுகளுக்கு இட்டுச்செல்லும் மணம் என்று மட்டும் நினைவில்
இருக்கிறது.

தாத்தாவுடன் செல்லும்போது கோயிலில் நான் செய்யவிரும்பாத ஒரு காரியத்தை
செய்யச் சொல்லுவார். அது சாமிகும்பிடுவது. கோயில் என்பது சந்தோஷமாக அல்லது
குழப்பமாக இருக்கும்போது சுற்றிப்பார்த்துவிட்டு வரும் இடம். அவ்விடத்தில் கைகூப்பி
கன்னத்தில் இட்டு விழுந்து எழுவது என்பது பிடிக்காத விஷயம். தாத்தா முற்றிலும்
வேறானவர். கோயிலின் வெளிப்புறப்படிக்கட்டில் இருந்து ஐம்பது அடி தூரத்தில்
ஒரு சின்னக்கல் நட்டிருப்பார்கள். அந்தக்கல்லில் கற்பூரம் கொளுத்திய சுவடுகள்
இருக்கும். கோயிலில் உள்ளே சென்று தரிசிக்க நேரமில்லாதவர்கள் அவசரமாக
கும்பிட்டுச்செல்லும் இடம் அது. முதலில் அங்கே கற்பூரத்தை கொளுத்துவார் தாத்தா
சற்று குனிந்து பார்த்தால் தூரத்தில் தெரியும் கோபுரம், நந்தியின் தலை, பெரியமரம்
மணிகளால் செய்த பெரிய கதவு, கோயில் வெளித்தாழ்வாரம் தாண்டி மிகத்துல்லியமாக
பெருமாளின் முகம் தெரியும். அத்தனை கச்சிதமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
எப்படி கட்டியிருப்பார்கள் என்று தெரியவில்லை.

விளையாடும்போதும் அந்தவழி போய்வரும்போதும் எதையோ யோசித்தவன் போல
பெருமாள் தெரிகிறாரா என்று பார்ப்பேன். எப்படி பார்த்தாலும் தெரிகிறாரே என்று
ஆச்சரியம் தோன்றும். அங்கேயிருந்துதான் தாத்தா சாமி கும்பிட ஆரம்பிப்பார்.
நேரே நடந்து சென்று படிக்கட்டு அருகே செருப்பைக் கழட்டிவிட்டு படியில் ஒரு
குனிந்து கும்பிடு அப்புறம் பிள்ளையாரை முதல் தரிசனம். அங்கே ஆசனங்களில்
ஒன்றை செய்வார். அதற்கு அருகிலே ஒரு பெயர்தெரியாத கடவுள் அங்கிருந்து
கோயிலைச் சுற்றி சுமார் நூறு கடவுள்கள் இருப்பார்கள் அனைவருக்கும்
கைகூப்பல், கன்னம் ஒற்றுதல் போன்ற சடங்குகள் நடக்கும் நானும் அவரைப்
போல செய்கிறேனா இல்லை வெறுமனே வேடிக்கை பார்க்கிறேனா என்று
ஓரக்கண்ணால் ஒருபார்வை. சரியாக செய்யவில்லையென்றால் தலையில் ஒரு
குட்டு. மாமரத்திற்கு அருகில் செல்லும்போதுதான் மனம் சந்தோஷமாக இருக்கும்
அங்கேதான் ஆஞ்சநேயர் இருப்பார். கடவுளர் எல்லாம் மனைவி கடவுள்களை
அணைத்தவண்ணம் சாந்தமாக இருக்க ஆஞ்சநேயர் சிலை மட்டுமே மற்றவர்களைப்
போல அல்லாமல் கம்பீரமாக கதையை தோளில் சுமந்தபடி இருக்கும்.

அந்த கம்பீரம் என்ற ஒரு காரணத்துக்காக என்பதையும் தாண்டி பாட்டியின் கதைகள்
மூலம் ஆஞ்சநேயரிடம் நல்ல அபிப்பிராயம் இருந்தது. கிட்டத்தட்ட அது என் தோழனை
போல. ஆஞ்சநேயருக்குப் பின்னால்தான் புற்கள் அடங்கிய தரையில் அந்தப்பூமரம்
உள்ளது. அந்தப்பூவின் வாசம் ஆஞ்சநேயரைக் கடக்கையில் உணரலாம். நினைத்தால்
கூட நாசியில் உணரும் தன்மை கொண்டது அது. அதைத்தாண்டி பின்பக்கம் விக்கிரகம்
அபிஷேக நீர் வெளியேறும் கால்வாய் போன்ற அமைப்பு அதுவும் அழகிய வேலைப்பாடுகள்
கொண்டது. அங்கே எந்த நேரமும் தண்ணீர் வந்தபடி இருக்கும். அந்த தண்ணீரை தலையில்
கொஞ்சமாக தடவிக்கொள்வார். எனக்கும் கொஞ்சம் தடவிவிடுவார். எண்ணைப் பிசுக்கான
தண்ணீர் பாலும், சந்தனமும் கலந்து வரும். அதில் கூட ஒருவிதமான மணம் உண்டு.
எதைக் கொடுத்தாலும் அதை முகர்ந்துபார்க்கும் வியாதி எனக்கு. சிறுவயது முதலே
இந்த வியாதி. அப்படி முகர்ந்து முகர்ந்து ஆயிரக்கணக்கான வாசனைகளை மூளையில்
சேமித்திருக்கிறேன். ஒவ்வொரு வாசனைக்கும் ஒவ்வொரு நினைவுகள், காட்சிகள்
சிலவற்றுக்கு மட்டும் விசேஷமான தகுதிகள். அவைகளில் முதன்மை இடம் இக்கோயிலில்
வரும் வவ்வால், ஊதுவத்தி, கற்பூரம் ஆகியவை கலந்த மணம்.

எங்கெங்கோ சென்று விட்டேன். கோயிலின் இடப்புறமாக சென்று சுற்றி பின் வலப்புறம்
வந்து உள்நுழைகையில் பன்னிறு ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஏன் திருவள்ளுவருக்கு
கூட அங்கே ஒரு சிலை உண்டு. நவக்கிரகத்தைச் சுற்றி வருவது மிகவும் பிடித்தமான
விளையாட்டு. ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு சிலையின் தலையை மிகுந்த ஆசையோடு
தடவுவது. கிட்டத்தட்ட அந்த வயதில் அவை எனக்கு விளையாட்டு பொம்மையைப் போல.
அவற்றை ஒன்பது சுற்று சுற்றி வெளியே வந்தால் கிறு கிறு வென்று வரும் மயக்கம்.
இன்னொருமுறை சுற்றவேண்டும் என்று தோன்றும். இவை எல்லாம் முடிந்து பெருமாள்
குடியிருக்கும் உள்பிரகாரம் செல்லவேண்டும் உள்பிரகாரத்தை ஒரு சுற்று சுற்றி பின்புதான்
பெருமாளை தரிசிக்க வேண்டும். கிட்டத்தட்ட அரசாங்கத்தின் உயர் அதிகாரியை காணும்
முன்பு பல சிறிய ஆட்களை காணவேண்டுமே அதுபோல. அங்கேயும் இடப்புறம் ஆரம்பித்து
வலப்புறம் வந்து பின்பு சந்நிதிக்குள் நுழைய வேண்டும். அப்படி வரும்போது பின்பக்கத்தில்
அளவில் சிறிய ஒரு கிணறு உண்டு. தாத்தாவின் விரல்பிடித்தபடி செல்லும் நான் அந்த
இடத்தில் மட்டும் விலகி கிணற்றில் எட்டிப்பார்ப்பேன். பெரிய சைஸ் அண்டாவின்
அளவைப்போலத்தான் அது இருக்கும். எப்போதுமே இருட்டாக தண்ணீர் தெரியாது
அதில். சிறிய கல்லை எடுத்துப்போட்டால் சற்று நேரம் கழித்து க்ளக் என்று சத்தம்
வரும். அது இல்லாமல் முன்பொருமுறை எட்டிப்பார்க்கும்போது மிகச்சரியாக நிலா
தெரிந்தது அங்கே, வட்டமான நிலாவை கருமை சூழ்ந்த மர்மக்கிணற்றில் பார்க்கும்போது
அதிசயத்தைக் கண்டதுபோல சிரிப்பு வரும். அதை ஒரேஒருமுறை மட்டுமே பார்த்து
இருக்கிறேன். பின் எப்போதுமே பார்த்ததில்லை.

இவ்வளவு சடங்கையும் முடித்துவிட்டுச் சென்றால் பெருமாளை தரிசிக்கலாம்.
முற்றிய தேங்காயை உடைக்கும்போதுகூட ஒருவித வாசனை வரும். அதுவே பல
தேங்காய்கள் உடைபடும் இடத்தில் நன்றாக வரும். பெருமாளின் அருகில் வரும்போது
அந்த வாசனை தூக்கலாக வரும். பலநூறு வருடங்கள் கற்பூரமும், திரிவிளக்கும்,
ஊதுவத்திப்புகையும் அண்டிய கரிய கல்சுவர்கள் நான்கு புறமும். ஒருவிதமான
பயத்தை ஏற்படுத்தும். கைகள் நடுங்கியபடி கண்மூடி கைகுவித்து நிற்பேன். மந்திரங்கள்
முடிந்த பிறகு வெள்ளியிலான குடுவை ஒன்றை கையில் ஏந்தியபடி ஐயர் அருகில்
வருவார். இன்று கூட விபூதியை எந்தக்கையில் வாங்குவது என்ற திடீர்க்குழப்பம்
வரும் வழக்கம்போல வலது கைமேல் இடது கைவைத்து வாங்க நிற்பேன். கையைத்
தட்டிவிட்டு குனிந்து நெற்றியில் விபூதியும் குங்குமமும் வைப்பார். அந்த விபூதியிலும்
கூட மணம் இருக்கிறது. கடைசியாக தட்டில் இருந்து வெள்ளிக்குடுவையை என்
தலையில் ஒற்றி எடுப்பார். அந்த ஒரு நொடியில் பேரரசனைப்போல உணர்வேன்.
ஏனென்றால் அந்தக் குடுவை என்பது ராஜாவின் தலைக்கவசம் என்றுதான் நினைத்து
இருந்தேன். தேங்காய்த்தண்ணீரில் துளசி கலந்த தீர்த்தம் கையில் தருவார். அதையும்
முகர்ந்து பார்த்துப் பின்புதான் குடிப்பேன். சுவையான நீர் அது இன்னும் கொஞ்சம்
கிடைக்குமா என்று நிமிர்ந்து பார்ப்பதற்குள் அய்யர் நகர்ந்துவிடுவார். காற்றுகூட
இல்லாத அந்த இடத்தைத் தாண்டி வெளிப்பிரகாரம் வருகையில் புதிதாக பிறந்தது
போல உணர்வு வரும் இந்த உணர்வுதான் அந்தக்கோயிலுக்கு அடிக்கடி என்னை
அழைத்துச் செல்லும்.

எல்லாம் முடிந்தபின்பு கோயிலிலே எனக்கு மிகவும் பிடித்த இடத்தில் அமர்வோம்.
அது கோயிலின் குளம். படிகளின் இடையில் பசும்புற்கள் முளைத்த இடம் பசும்புல்லை
முகர்ந்துபார்த்தாலும் ஒரு வாசனை வரும். அந்தப்படிக்கட்டில் அமர்ந்து கீழே தெரியும்
குளத்தின் தண்ணீர் பார்த்தால் வானின் நட்சத்திரங்களும் நிலாவின் நிழலும் காணலாம்.
சிறிய கல்லை எடுத்துப்போட்டால் அவை பாம்பைப்போல நெளியும். பயத்துடன் நீச்சல்
பழகிய குளம். பச்சை நிறமான அந்தக்குளத்தின் நடுவே கிணறு ஒன்று உண்டு. குளம்
வற்றினாலும் கிணறு வற்றாது, அந்தக்கிணற்றில் உள்ளே சுரங்கப்பாதையின் வழி
சென்றால் தஞ்சாவூர் செல்லும் என்று சொல்வார்கள். அதையும் நம்பி இருக்கிறேன்.

கிளம்பும்போது பொங்கல் தருவார்கள், வெல்லம், பச்சரிசி, நெய் விட்டு அய்யர் வீட்டில்
செய்தது. அதற்கும் ஒரு மணம் உண்டு. எல்லாம் முடிந்து செருப்பில் கால் நுழைக்கும்போது
எதையோ பிரிந்ததுபோல ஒரு ஏக்கம் வரும்.

புறாக்களை பிடிக்காதவர்கள் எவருமே இருக்கமுடியாது. அந்தகோயிலின் ஒவ்வொரு
மாடத்திலும் புறாக்கள் வசிக்கிறது. கருமையான, வெண்மையான, பழுப்பு நிற, சாம்பல்
என்று பலநிறத்தில். புறாக்களை விட அது வீடடைந்து இரவில் எழுப்பும் சப்தம் என்பது
கேட்க மிக இனிமையானது. அந்தக்கோயிலில் இரவுநேரங்களில் சிரமப்பட்டு தூணின் மேல்
ஏறினால் அளவில் சிறிய புறாக்களை பிடித்துவிடலாம். அவ்விதம் பிடிப்பது சிரமம்
என்றாலும் பிடித்துவிட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். புறாவின் இறக்கைகளை
தடவியபடியே அதனுடன் பேசிக்கொண்டிருந்து சிறிது நேரம்கழித்து பறக்கவிடலாம்.
அவ்விதம் பேசிய புறா மறுநாள் நம்மை அடையாள கண்டு அருகில் வரும் என்று
அய்யர் வீட்டு சிறுமி சொல்லியிருந்தாள். ஆனால் எந்தப்புறாவும் என் அருகில்
வந்ததே இல்லை.

குளத்திற்கு நேர் எதிரே பெரிய இடம் உண்டு. அங்கே பல விளையாட்டுக்கள் விளையாடி
இருக்கிறேன். பாண்டி, திருடன் போலீஸ், நொண்டி, சடுகுடு, கண்ணாமூச்சி, என்று.
திருடன் போலிஸ் விளையாடும்போது ஒவ்வொருமுறையும் ஆஞ்சநேயரின் அருகில் உள்ள
பூமரத்தில்தான் ஒளிவேன். ஒவ்வொருமுறையும் என்னை சரியாக முதலில் கண்டுபிடிப்பாள்
அய்யர் வீட்டுச் சிறுமி. மிகப்பெரிய அந்தக்கோயிலில் திருடன் போலிஸ் விளையாடும்போது
அனைவரும் எங்கே ஒளிந்திருக்கிறார்கள் என்றே கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். சிலசமயம்
கண்டுபிடிக்க முடியவில்லையே என்று கோயிலின் நடுவே உட்கார்ந்து ஓவென்று கூட
அழுதிருக்கிறேன். அழுகைச்சத்தம் கேட்டவுடன் ஒவ்வொருவராக மறைவிலிருந்து வெளியே
வருவார்கள். சிரிப்பு மூட்டுவார்கள், வேற விளையாட்டு விளையாடலாம் என்று அழுகை
தேற்றுவார்கள் நானும் எல்லாரையும் கண்ட சந்தோஷத்தில் சிரிப்பேன்.

கடைசியாக பாட்டி வீட்டுக்கு சென்றேன். பாட்டி வீடு என்றுதான் பெயர் அங்கே பாட்டியும்
இல்லை தாத்தாவும் இல்லை. எப்போதோ சென்று சேர்ந்துவிட்டார்கள். கோயில் மட்டும்
சற்று சிதிலமடைந்து அப்படியே இருக்கிறது.

கோயில் பற்றிய நினைவுகளை எழுத நிறையக்கோயில்கள் இருந்தாலும் இந்த ஒரு கோயில்
நினைவுகளே பெரியதாகிவிட்டது, மேலும் பலவற்றை எழுதவேயில்லை. நேரம் கிடைத்து
நல்ல சூழ்நிலையும் கிடைத்தால் மீதம் உள்ளவற்றையும் எழுதலாம்.

Monday, September 15, 2008

காரிருள் தேவதை


கோடிட்ட இப்பக்கங்களை தினம் தினம்
நிரப்ப யாதொரு அதிசயமும் நிகழ்ந்துவிடவில்லை.
நாட்குறிப்பில் இந்த சுவாரசியமற்ற நாட்களை
என்ன வார்த்தை கொண்டு நிரப்புவது.
ஒலிகள் எல்லாம் ஓய்வெடுக்கச் சென்றுவிட்ட
பேரமைதியான இரவு.
இருள்சூழ்ந்த அறையின் முழுவதும்
வண்ணங்கள் மறைந்துவிட்டிருந்தன.
பின்னிரவுப்பொழுதொன்றில் இருள் தேவதை
உள்ளிறங்கி வந்திருந்தாள்.
இருளுக்கு ராகம் இருப்பதை இன்றுதான்
கண்டுகொண்டேன். அவள்
பிரபஞ்சத்தின் முதல் ராகத்தை பாடியபடி
இருளில் சுழன்றாடினாள்.
சப்தங்கள் அற்ற ராகத்தின் உச்சங்களில்
ஆடைகள் ஒவ்வொன்றாக களைந்துவிட்ட
அவளின் நிறம் இப்போது காரிருள்.
விளக்கின் திடீர்ப்பிரவேசத்தில் கலைந்த அவள்
தன் கடைசி ராகத்தை என் முகத்திலெறிந்தபடி
வெளியேறினாள்.
உடலில் மைதுனத்திற்கு பின்னான அதிர்வுகள்.
அறைக்குள் வண்ணங்கள் ஒவ்வொன்றாக
மீண்டும் வரத்தொடங்கின.

Friday, September 12, 2008

Jaane tu ya jaane na, Bashu


கடந்த ஒரு மாதமாக அறையில் மூன்று பாடல்கள் பல்லாயிரக்கணக்கான முறை
ஒலித்துக்கொண்டே இருந்தது. கபி கபி அதிதி சிந்தகி, கண்கள் இரண்டால், மற்றும்
ஐ மிஸ் யு மிஸ் யுடா எனைவிட்டுப் போகாதே. என்ற மூன்று பாடல்கள். இந்த
மூன்று பாடல்களும் பக்கத்தில் இருக்கும் ஜோர்டானியன் பையனுக்கும் கூட பரிச்சயம்
ஆகி அவனும் பாட ஆரம்பித்துவிட்டான்.

Jaane tu ya Jaane na



இந்தப்பாடலுக்காகவே படம் பார்க்கவேண்டும் என்று தோன்றியது. நேற்று கம்பெனி
இஃப்தார் நோன்பு விருந்து கொடுத்தார்கள். கேர்ள் ப்ரெண்ட் இல்லாத குறை நேற்றுதான்
தெரிந்தது. எல்லாரும் நவநாகரீக உடையில் ஜோடியாக வந்திருந்தனர். பகட்டான
இடம் அந்நிய உணர்வைத்தந்தது. சாப்பாட்டை நன்றாக வெட்டு வெட்டிவிட்டு கிளம்பி
திரையரங்கம் சென்றேன். போஸ்டரில் வர்தே ஒரு பாரியா என்று கோபிகா புடவையை உயர்த்தி பிடித்தபடி ஜெயராமை சபித்துக்கொண்டிருந்தார் மறுபக்கம் தெலுங்குப்பட
ரேஞ்சுக்கு மம்முட்டி பிட்டு கலர் துணிகளில் சட்டை போட்டபடி சிரித்துக்கொண்டிருந்தார்.
ஜானெ து யா ஜானெ நா, மும்பை மேரி ஜான் என இரண்டு இந்திப்படம். இங்கு வந்து மூன்று வருடங்களாகியும் இந்தி குன்றி மணி அளவுக்கு கூட பேசவராது. குன்ஸாக புரிந்துகொள்வேன். முன்பே ஒருமுறை தாரே சமீன் பர் இதே அரங்கில் பார்த்திருந்தேன்.
ஜானே துவில் வேறு ஜெனிலியா என்ற அ.ராட்சசியும் இருப்பதால் நிபந்தனையே
இல்லாமல் அதற்கே சென்றேன்.

படத்தின் அனைத்து கதாபாத்திரங்களுமே அழகினால் செய்யப்பட்டிருக்கிறது.
அதிதி என்ற அழகுப் பிசாசு
ஜெய் என்கிற குழந்தைமுகமும் பெண்மையும் கலந்த அழகன்
ஜெய் அம்மாவாக வரும் சாவித்திரி
ஜெய் அப்பாவாக வரும் நஸ்ருதின் ஷா
ஜெய்யின் காதலியாக வரும் மேக்னா
ஜெய்யின் நண்பி தெற்றுப்பல் தெரிய அழகாக சிரிப்பவள்
அதிதியின் ஓவியத்தம்பி
கவ் பாய் சகோதரர்கள்
"ஹேப்பி பர்த்டே டு மி" என்று சொல்லும் பரேஷ் ராவல்
கருப்பு முகமூடியிட்டபடி குதிரையில் செல்லும் கனவு

ஹனிமூன் சென்று திரும்பும் ஹெய் அதிதியை வரவேற்க விமான நிலையத்தில்
கூடுகிறார்கள். அதிலே புதிதாக வந்த பெண்ணிற்கு அவர்களின் காதலை கதையாக
சொல்வதாக படம் ஆரம்பமாகிறது. சுவாரசியமில்லாமல் கேட்க ஆரம்பிக்கும் பெண்
ஒவ்வொரு அத்தியாயமாக கதை செல்லும் ஓட்டத்தில் மிகுந்த சுவாரசியாமக் கேட்க
ஆரம்பிக்கிறாள். அவளைவிட படம் பார்ப்பவர்களுக்கு மிகுந்த ஆர்வம்.

ஆறு இணைபிரியா நண்பர்கள் அவர்களில் மியாவ் என்கிற அதிதி என்கிற ஜெனிலியாவும்
ராட்ஸ் என்கிற ஜெய் என்கிற இம்ரானும் காதலிக்கிறார்கள் என்ற கதைதான். அதையே
அவ்வளவு சுவாரசியமாக எடுத்திருக்கிறார்கள். ஜெயும், அதிதியும் பழகும் விதத்தைக்
கண்டு அதிதியின் பெற்றோர் திருமணம் நடத்தி வைக்கவும் அது சம்பந்தமாக பேசவும்
ஜெய்யை அழைக்கிறார்கள். ஆனால் இருவருமே காதலிக்கவில்லை என்றும் இருவரும்
இணைந்து வாழ்வதை கனவிலும் கூட நினைத்துப்பார்க்க முடியவில்லை என்றும்
சொல்கிறார்கள். ஆனால் இருவருக்கும் தெரியாமல் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள்.
இருவரும் கனவிலும் கூட வேறொருவருடன் வாழமுடியாது என்பதே உண்மை.
அதை பார்வையாளர்களுக்கு புரிய வைப்பதுதான் கதை.


நண்பர்களின் ஆலோசனைப்படி இருவருமே ஒருவருக்கு மற்றொருவர் ஜோடி தேர்வு செய்வதாக ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். ஜெய்யின் காதலியாக மேக்னாவை
அதிதி தேர்வு செய்வதும் அந்த கவ்பாய் சகோதரர்களிடம் இருந்து மேக்னாவை
காப்பாற்றும் காட்சிகள் சுவாரசியமான அழகு. ஜெய்யின் மீது காதல் கொள்கிறாள்
மேக்னா. இடையே ஜெனிலியாவுக்கு பெற்றோர் ஒரு மாப்பிள்ளை பார்க்கிறார்கள்.
இருவரும் சந்திக்க வாய்ப்பில்லாத சந்தர்ப்பங்களில் தங்களின் காதலை உணர்கின்றனர்.
அதைச் சொல்ல இருவருக்குமே தயக்கம்.

ராஜஸ்தான் ரதோர் வம்சத்துக்கே உரிய முரட்டுத்தனத்துடனும் தனது கணவரைப்போலவும்
தன் மகன் ஆகிவிடக்கூடாது என்று ஜெய்யை பொத்தி வளர்க்கும் சாவித்திரி.
ஒவ்வொரு ரதோர் வம்சத்து ஆண்மகனும் மூன்று தகுதிகளை வளர்த்துக்கொண்டால்
மட்டுமே அவன் ஆண். அவையாவன குதிரையேற்றம், அடிதடி, சிறைசெல்வது
இவை எல்லாவற்றையும் நம் மகனும் செய்வான் என புகைப்படத்தில் இருந்தபடியே
சவால் விடும் நஸ்ருதின். இந்தக்காட்சிகள் அருமையான கற்பனை.

நஸ்ருதின் சவால்படியே ஜெய் அதிதிக்கு பார்த்த மாப்பிள்ளையை அடிக்கிறார்.
சிறை செல்கிறார். இறுதியில் குதிரையில் ஏறி விமானநிலையம் சென்று அதிதியை
கைபிடிக்கிறார். விமானநிலைய காட்சிகளும் அருமை.

படத்தின் எல்லா காட்சிகளும் ஒன்றன்பின் ஒன்றாக சங்கிலிபோல வந்து இறுதியில்
வியப்பில் ஆழ்த்துகிறார்கள். அமீர்கான் மீதான பிரமிப்பு இப்படத்தின் மூலம் இன்னும்
அதிகமாகிறது லகான், தாரே சமீன் பர், ஜானே து ய ஜானே நா என தொடர்ச்சியாக
அவரின் தயாரிப்பில் வெற்றிப்படங்கள்.

பாஷு (bashu)


ஈரான் ஈராக் யுத்தத்தில் தாய், தந்தை, தமக்கை என அனைவரையும் கண் முன்னே இழக்கிறான் பத்து வயது சிறுவன் ஒருவன். உயிர்பிழைக்கவும் குண்டுச் சத்தத்தில்
இருந்து தப்பிக்கவும் ஒரு ட்ரக்கில் ஏறி பதுங்குகிறான், அப்படியே தூங்கியும்
போகிறான். ஈரானின் தெற்குப்பகுதியில் கிளம்புகிற ட்ரக் வடக்குப்பகுதிக்கு நிறுத்தமே
இல்லாமல் பயணமாகிறது. கண்விழிக்கிற சிறுவனுக்கு தான் பிறந்த இடமான
வறண்ட பாலைவனம் போல அல்லாமல் நந்தவனம் போல இருப்பதைக் கண்டு
அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். ட்ரக்கிலிருந்து இறங்குகிறான். பக்கத்தில் பாலம் கட்டும்
பணி நடைபெறுவதால் குண்டுவெடிக்கிறது தான் இன்னமும் யுத்தம் நடக்கும் இடம்
தாண்டி வரவில்லை என பயந்து காடுவழி ஓடுகிறான்.

பசும்நெல் வயல்கள் நடுவே ஒருகிராமம். எல்லாருமே வெள்ளையான மனிதர்கள்
இப்பகுதிமக்கள் எல்லாருமே வெள்ளை நிறத்தவர். இவனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
இரண்டு குழந்தைகளுடன் வயலில் வேலைசெய்துகொண்டிருக்கிறாள் ஒருத்தி. அவளின்
குழந்தைகள் விளையாடுகின்றன. அப்போது கருப்பாக இருக்கும் இவனைப்பார்த்து
பயந்து கத்தும்போது அத்தாய் வருகிறாள். அனைவரையும் கண்டு மிரள்கிறான் பாஷு
எனும் அச்சிறுவன். அவனது துரதிர்ஷடம் நிறத்திலிருந்து மொழிவரை வேறு வேறாக
இருக்கிறது. ஒன்றும் புரியவில்லை. ஆனால் அத்தாய்க்கு அவன் மீது பரிவு ஏற்படுகிறது.
உணவு பகிர்கிறாள், அவனைப் பிடித்து பயம்போக்கி உறங்க வைக்கிறாள்.

ஆரம்பத்திலிருந்து இந்தக்காட்சிகளான இருபது நிமிடங்களும் வசனமே கிடையாது.
பாலுமகேந்திரா படங்களைப்போல கேமரா மட்டும் பேசிய காட்சிகள். அபாரமான
உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சியமைப்பு.

மறுநாள் கிராமத்தில் உள்ள அனைவரும் வந்து அவனை வீட்டை விட்டு விரட்டுமாறு
ஆலோசனை சொல்கிறார்கள்.அனவரையும் புறக்கணித்து அவனை வீட்டில் வளர்க்கிறாள்
அவர்கள் பெற்றோர் வந்து அழைத்துச்செல்லும் வரை பாஷு பாதுகாப்பாக இருக்க
வேண்டும் என்பது அவள் விருப்பம். புதுஇடம் புதுமனிதர்கள் தந்த அதிர்ச்சியும்
மொழிபுரியாமலும் ஏகப்பட்ட எதிர்ப்புகளுடனும் அங்கு தங்குகிறான் பாஷு.

ரொட்டி சுடும் இடத்தில் நெருப்பைக் கண்ட பாஷு தன் தாய் தீப்பிடித்து எரிந்த காட்சி
கண்முன்னே வர தான் வந்த கதையை மொழி தெரியாத அத்தாயிடம் அவனது
மொழியிலேயே கண்ணீருடன் சொல்கிறான். முழுதும் அபிநயம் கலந்த மொழி
கண் மூடாமால் கண்ணில் நீர் வழிய கேட்கிறாள் அத்தாய். அவன் மீது மேலும்
பரிவுகொள்கிறாள்.

அதற்கடுத்த நாளே கடும் காய்ச்சல் வருகிறது பாஷுவுக்கு கிராமத்தில் யாருமே உதவிக்கு
வரத்தயாரில்லை. மறுநாள் பெரியவர் ஒருவர் உதவியால் மீள்கிறான். இடையில்
சிறு சிறு தொந்தரவுகள். பொருளீட்ட சென்ற கணவனுக்கு பாஷுவினை பற்றி
எழுதுகிறாள். சில நாட்களிலேயே அனைவரையும் கவர்ந்துவிடுகிறான் பாஷு.

கணவனிடமிருந்து கடிதம். உற்றார் உறவினர் என அனைவரையும் விசாரித்து
எழுதப்பட்ட அக்கடிதத்தில் பாஷுவினைப் பற்றி எந்த குறிப்புமில்லை. தன் குடும்பத்தில்
ஒருவனாகவே மாறிவிட்ட பாஷுவைக் குறித்து எழுதவில்லை. இருந்தாலும் எழுதியது
போல அவள் படிக்கிறாள். தன்னைக்குறித்தும் முகமறியா ஒருவர் அன்பொழுக
விசாரித்திருப்பதாக நினைத்து பூரிப்படைகிறான் சிறுவன். மிகுந்த நெகிழ்ச்சியான
கவிதை போன்ற காட்சி.

அவள் ஒரு வித்தியாசமானவள் ஒலிகள்தான் அவளது சைகைகள். பறவைப்போல
கழுகைப் போல, வாத்தைப்போல, குதிரையைப் போல ஒலிகள் எழுப்புவாள்.
வித்தியாசமான ஒலிகள் கேட்டால் உடனே அதுபோன்ற ஒன்றை தன் தொண்டையிலுருந்து
கொண்டுவருவாள். இது தானியங்கள் காக்கவும் வயல்வெளிகளில் பறவைகளை
விரட்டவும் காட்டுநரிகளிடம் இருந்து கோழிகளை காக்கவும் அவள் கொள்ளும் உபாயம்.
இதுவும் கவிதையைப் போல அங்கங்கே தூவப்பட்டிருக்கிறது. இந்த ஒலிகளால்
பாஷுவும் கவரப்படுகிறான். அவனும் ஒலிகளை தன்குரல் மூலம் பிரதியெடுக்கிறான்.

இரண்டாவது கடிதம் கணவனிடம் இருந்து வருகிறது. பாஷுவினை விருந்தினனாக
வைத்திருப்பது எனக்கு சம்மதமில்லை என. வழக்கமாக கடிதம் வாசிக்கும் ஊர்
பெரியவர் இதை வாசிக்கையில் பாஷு கேட்கிறான். மனமுடைந்து அங்கிருந்து
வெளியேறி வழிதெரிந்த போக்கில் செல்கிறான். பதைத்து தேடுகிறாள். மிகுந்த
தேடலுக்குப்பின் கிடைக்கிறான் நெகிழ்வான காட்சி அது.

இறுதியில் அவளின் கணவன் ஒரூ கையை இழந்து ஊர் திரும்புகிறான். பாஷுவினால்
கவரப்படுகிறான். நிபந்தனையற்ற அன்பினால் தன் மூன்றாவது மகனைப்போல்
வாழ்கிறார்கள். ஈரான் ஈராக் யுத்தத்தின்போது எடுக்கப்பட்ட முக்கியமான திரைப்படம்.
அன்பானது மொழி, நிலங்களைக் கடந்தது என்பதை வலியுறுத்தும் கதை.

பஹ்ரம் பெய்சய் ஈரானிய சினிமாவில் புதிய அலைகளை உருவாக்கிய முக்கியமான
படைப்பாளி.