எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, March 07, 2020

திரௌபதிம்

முகநூலில் நேற்று ஒரு நிலைத்தகவல் இட்டிருந்தேன்.

//ஒரு கருத்தை ஏற்பதா? எதிர்ப்பதா? என்று குழப்பம் வரும் போது பார்ப்பனீயம் எதை ஆதரிக்கிறது என்று பார்!
யோசிக்காமல் அதை எதிர்த்து நில்!
-பெரியார்//

இதற்கு என்ன அர்த்தம்? நமக்குள்ள நடக்கும் பிரச்சினைகளை நீங்கள் எதற்கு முகநூலில் எழுதுகிறீர்கள் என்றொரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

எனக்கு பகீர் என்றது. நான் நிறைய சந்தர்ப்பங்களில் பெரியார் குறித்தும் இலக்கியம் குறித்தும் என் மனைவியுடன் பேசுவதுண்டு. பெரிய கொட்டாவி ஒன்றை விட்டு "அதுக்கென்ன இப்ப" என்பது போல பார்ப்பார். இத்தனைக்கும் வீட்டில் நானூறு புத்தகங்களுக்கு மேல் இருக்கிறது. ஓய்வான சமயங்களில் நான் எடுத்துப் பிரித்துப் படிக்க ஆரம்பிக்கும்போதுதான் வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளின் நீளமான பட்டியல் ஒன்றை வாசிப்பார். நான் புத்தகங்களை மூடிவிட்டுக் கிளம்ப வேண்டியதுதான்.

விஷயத்துக்கு வருவோம். இந்த நிலைத்தகவலில் பொதுவான ஒரு விஷயத்தைத் தான் சொல்லியிருக்கிறேன். அது பெரியார் சொன்ன ஒரு கருத்து. அதில் எங்கே நம் பிரச்சினை இருக்கிறது என்றேன்?

அதுசரி, நீங்க சொல்ற மாதிரியே இருக்கட்டும். அதை ஏன் இப்போ எழுதணும்?

அதைச் சொல்றதுக்கு முன்னாடி பெரியார் பற்றியும், திராவிடர் கழகம், பற்றியும், பகுத்தறிவு, பெண்ணுரிமை, சாதியொழிப்பு பற்றியெல்லாம் விளக்கிச் சொல்ல வேண்டியிருக்கும். அப்படிப் பேச ஆரம்பித்தால் இரவு சோறு நிச்சயம் கிடைக்காது. அதைப் பற்றிப் பேசப்போவதுமில்லை. ஆனால் அந்த நிலைத்தகவல் என்னை இந்த இக்கட்டில் கொண்டு வந்துவிடும் என எழுதியபோது எண்ணவில்லை. 

இப்போது ஒரு கருத்து சமூகத்தில் நடக்குதென்று வைத்துக்கொள்வோம். அது நம் சமூகத்திற்கும், மக்களுக்கும் ஏற்புடையதா? இல்லையா என்றொரு குழப்பம் வரும்போது பார்ப்பனீயம் அதை ஆதரித்தால் அதை எதிர்த்து நில்
அப்படின்னு பெரியார் சொல்லியிருக்கார் என்றேன்.

பார்ப்பனீயம்னா என்ன? 

எனக்கு நெஞ்சு வலித்தது. சமூகமே ஒரு பிரச்சினையில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும்போது இவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாது மகிழ்ச்சியில் இருப்பது எனக்கு பெரும் துயரைத் தந்தது.

நான் பேச ஆரம்பிக்கும் நேரம் வந்துவிட்டது என தொண்டையைச் செருமிக் கொண்டு இப்போ திரௌபதி என்றொரு படம் வந்திருக்கிறது. அதன் போஸ்டரில் "ஜாதிகள் உள்ளதடி பாப்பா" என்று டேக்லைன் போட்டு போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். படமும் வெளிவந்து வசூலில் வெற்றிபெற்று ஓடிக்கொண்டிருக்கிறது இது நல்ல படமா நஞ்சை விதைக்கும் படமா என்று எல்லோரும் விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் என் முடிவைப் பற்றி ரெண்டு வரி எழுதியிருக்கிறேன் அதுதான் அந்த நிலைத்தகவல்?

மலையாளப்படமா?

இல்லை, தமிழ்ப்படம்தான். 

இதுல விவாதிப்பதற்கு என்ன இருக்கு?

பார்ப்பனீயம் இதுல எங்க வந்துச்சு?

பாரதிய ஜனதா, இந்து முண்ணனி போன்ற அமைப்புகள்ல இருக்கிற சிலர் இந்தப்படத்துக்கு ஆதரவு தெரிவிச்சிருக்காங்க.  இந்த கட்சிகள் எல்லாம் பிராமணக் கொள்கைகள் உடையவை, பிராமணியம் தீண்டாமையை ஆதரிக்கும் கட்சி. பாமக, வன்னியர் பேரவை, முக்குலத்தோர், சோழர் படை, என எல்லா ஜாதி சங்கங்களும் இந்தப்படத்தை மக்களுக்கு இலவசமா டிக்கெட் எடுத்து தரோம்னு கூட அறிவிச்சிருக்காங்க.  தீண்டாமைய ஒழிக்கணும்னு தமிழ்நாட்டுல எவ்வளவு போராட்டாங்கள் நடந்து இப்ப இருக்கிற நிலையை அடைஞ்சிருக்கோம். இப்பவும் எல்லாமும் ஒழிஞ்சதா சொல்ல முடியாது ஆனா மத்த மாநிலங்கள்ல இருக்கறதை விட ஜாதிப்பிரச்சினை இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறைகள் குறைவான மாநிலம். இப்படி இருக்கற நேரத்துல மறுபடி இருபது, முப்பது ஆண்டுகளுக்கு பின்னாடி இழுத்துட்டுப்போற பிற்போக்கு கலாச்சாரத்தை எதிர்க்க வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் இருக்கு.

இந்த மாதிரி பார்ப்பனீய கொள்கைகள் உடைய கட்சிகள் ஆதரவு இந்தப்படத்துக்கு இருக்கிறது. எதோவொரு ஆதாயத்துக்கு அவங்க ஆதரிக்கறாங்க என்ற ஒரு காரணமே போதும் இப்படத்தை எதிர்க்கறதுக்கு. அதனால அந்த நிலைத்தகவல் இட்டேன்.

எவனோ என்னமோ படம் எடுத்துட்டுப் போறான் உனக்கென்ன?

இந்தப் படம் வெற்றி பெற்றால் இதைப்போல இன்னும் பத்து படம் வரும். எல்லாத்தையும் நாடக காதல்னு சொல்லி கடைசில காதலித்தாலே குற்றம்னு கொண்டுவந்து தாலிபான் ஆட்சியைக் கொண்டு வருவார்கள். இதெல்லாம் எதிர்க்கணும் இல்லியா?

ஆமா... இப்படி ஒரு படம் வந்ததே யாருக்கும் தெரியல. நீ சொல்லிதான் எனக்கே தெரியும். எல்லாரும் இப்படி பேசி பேசிதான் சின்ன விஷயத்தைப் பெருசா ஆக்கறிங்க. 

அதிலும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கிறது. 

Friday, March 06, 2020

பக்தி மார்க்கம் - அஷ்வகோஷ்

எழுத்தாளர் ராஜேந்திர சோழன் என்கிற அஷ்வகோஷ் அவர்களின் சில சிறுகதைகள் அந்த மொழிநடைக்காக பெரும் வாசகர்களைக் கவர்ந்திருக்கிறது. பெரும்பாலான வாசகர்கள் அவரின் புற்றில் உறையும் பாம்புகள், தனபாக்கியத்தோட ரவ நேரம், தற்செயல், சிதைவுகள் என குறிப்பிட்ட சில கதைகளையே சிலாகித்துப் பேசிக்கொண்டிருப்பார்கள். உண்மையில் அவருடைய சிறுகதைகளில் எல்லாமே எல்லா நேரத்திலும் வாசிக்கக் கூடியவையாக இருப்பது பேரதிசயம்.  அவர் கதைகளின் அடிப்படை பலமே அதன் எளிமைதான். எந்த விதமான ஜோடனைகளும் இன்றி
பூச்சுகள் இன்றி சராசரி மனிதர்களின் உரையாடல் இருக்கும். பாலியல் கதைகள் எழுதியிருக்கிறார் ஆனால் பாலியல் சொல்லாடல் ஒன்று கூட இருக்காது. பெரும்பாலான கதைகள் உரையாடல் வழிதான். எளிய நடுத்தர வர்க்கம், கிராமப்புற விவசாய சனங்கள் சந்திக்கக் கூடிய பிரச்சினைகள்தான் அவரின் கதைகள் பேசும். 

எனக்கு ஒவ்வொருமுறை எதை வாசிப்பது என்ற குழப்பம் ஏற்படும்போதெல்லாம் அஷ்வகோஷ் சிறுகதைத் தொகுப்பு நூலை எடுத்து எதாவது ஒரு பக்கத்தில் பிரித்து அக்கதையை வாசிப்பதை வழக்கமாக வைத்திருப்பேன். அதை ஏற்கனவே வாசித்திருந்தால் கூட மறுபடி வாசிக்கும்போது வேறொரு கோணத்தில் கதை வெளிப்படுவதை உணர்ந்திருக்கிறேன்.

அப்படி ஒரு கதையை நேற்று வாசித்து இரவு முழுக்கச் சிரித்துக்கொண்டிருந்தேன். அவ்வப்போது நினைத்துச் சிரிக்கும் அளவுக்கு அதில் ஓர் வரியை ஒளித்து வைத்திருந்தார். அதை நேற்றைய மீள் வாசிப்பில் கண்டுகொண்டேன்.

கதையின் பெயர் "பக்தி மார்க்கம்". பெயரைப் பார்த்ததும் ஆன்மீகக் கதை என்று நினைக்க வேண்டாம். கட்சிக்கதை. ஒரு கட்சியின் வட்டப்பேரவைக் கூட்டத்தில் கட்சியின் புதிய நிலைப்பாட்டை விவரிக்கும் நிகழ்வும் அதைத்தொடர்ந்து கட்சியின் நிலைப்பாட்டின் மீது தனக்கிருக்கும் சந்தேகத்தை ஒரு தோழர் எழுப்புகிறார். அந்த எளிய கேள்வியின் வழியாக நடக்கும் உரையாடலில் கடைசி வரை கேள்வி எழுப்பிய தோழருக்கு விடையே கிடைக்காது. மாறாக கேள்வி கேட்டவரையே குழப்பி கட்சியின் நிலைப்பாட்டுக்கு அவரை சம்மதிக்க வைத்துவிடுவார்கள்.

அந்தக்கதை இப்படி ஆரம்பிக்கும்.

"ஆகவே தோழர்களே இன்றைய காலகட்டத்தில், இப்போதுள்ள யதார்த்த நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாகப் பரிசீலனை செய்து, ஐந்தும் ஐந்தும் ஒன்பது என்ற, சரியானம் தெளிவான அரசியல் நிலைப்பாட்டிற்கு நமது கட்சி வந்துள்ளது, ஆகவே வரக்கூடிய காலகட்டங்களில் நடைபெற இருக்கிற... தேர்தலில்""

இப்படி ஆரம்பிக்கும் கதையில் ஒரு தோழருக்கு ஐந்தும் ஐந்தும் பத்துதானே வரும் எப்படி ஒன்பது வரும் என கேள்வி எழுப்புகிறார்.  அக்கேள்விக்கு இடைக்கமிட்டித் தோழர், மேல்கமிட்டித்தோழர் என ஒவ்வொருவராக வந்து வெவ்வேறு ஆங்கிளில் பதில் அளிக்கிறார்கள். சிரிக்காமல் இக்கதையைப் படிப்பது மிகச்சிரமம்.

அதில் வந்த ஒரு பத்தியில் சிரிப்பைக்கட்டுப்படுத்த முடியாமல் சிரித்துக்கொண்டிருக்கும்போது வீட்டம்மணி முறைத்தார். அப்பத்தியை அப்படியே கீழே தருகிறேன்.

போனதடவை அப்படிதான் அஞ்சும் அஞ்சும் பதனொண்ணுன்னு முடிவு பண்ணமே... அப்ப, எங்க போனாலும்.... என்னாங்க இது அஞ்சும் அஞ்சும் பத்துன்னுதான் ஆரம்பத்துல சொன்னீங்க. இவ்வளோ நாளும் அப்பிடியேதான் சொல்லிக்னு வந்தீங்க. இப்ப போய்த் திடீர்னு என்னாங்க பதனொன்னுன்னு சொல்றிங்க, எல்லாம் ஆரம்பத்துல நல்லாதான் சொல்றாங்க. அப்புறம் போவப் போவ எல்லாரும் மத்தவங்க மாதிரிதான் ஆயிடறாங்க... உங்க கட்சி அப்படி ஆவாதுன்னு பாத்தம். கடைசீல நீங்களும் அப்படி ஆயிட்டிங்களான்னு கேட்டாங்க. அதுவே நம்ம தோழர்களுக்கெல்லாம் ஒரு மாதிரியாயிருந்தது. அது போதாதுன்னு இப்ப வேற் அவங்ககிட்ட போய் அஞ்சும் அஞ்சும் ஒம்பதுன்னு சொல்லி அதுக்கு அவங்க விளக்கம் கேட்டாங்கள்னா என்னா பதில் சொல்றது. அதனாலதான் தோழர் இதெல்லாம் கேக்க வேண்டியதா இருக்குது இந்த சிக்கல் இல்லண்ணா ஏன் இதெல்லாம் கேக்கறோம்"

இதுல என்ன தோழர் சிக்கல். அப்ப நாம்ப பு.ந.கவோட கூட்டு வச்சிருந்தோம். பதனொண்ணுன்னு சொன்னோம். இப்ப பூ.ஊ.கவோட கூட்டு வச்சிருக்கறோம். அதனால ஒம்பதுன்னு சொல்றம்... இதுல என்ன தோழர் தப்பு என மேல்க்ககமிட்டி தோழர் பதில் சொல்கிறார்.

பு.ந.க,     பூ.ஊ.க.... யூகிக்க முடிகிறதா?

அதுக்குதான் விடிந்தும்கூட சிரித்துக்கொண்டிருந்தேன்.

Wednesday, March 04, 2020

கொரோனா

கொரோனா பாதிப்பு இந்தியாவில் துவங்கிவிட்டதாக செய்திகளிலிருந்து அறிய முடிகிறது. முதல் கட்டமாக கேரளாவில் வுஹானிலிருந்து திரும்பிய மூன்று மாணவர்களுக்கு அறிகுறி தென்பட்டு சிகிச்சையிலிருந்து மீண்டு விட்டார்கள். இதுவே மிகப்பெரிய ஆச்சரியம். அந்த மூன்று பேரிலிருந்து வேறு எவருக்குமே பரவாமல் தடுத்திருப்பது மிகப்பெரிய சாதனைதான். கேரள அரசு உண்மையிலேயே மெச்சத்தக்கது. சிறந்த உள்கட்டமைப்பைக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் அரசு நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துமே இன்னும் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறி வருகிறார்கள். சிங்கப்பூரின் இன்னொரு சாதக அம்சம் இங்கு இருக்கும் வெயில்தான். வெப்பம்தான் இந்தக் கிருமித்தொற்று பரவுவதைத் தடுக்கிறது. இன்றைய நாளில் வுஹானின் வெப்பநிலை 10 டிகிரி செல்ஷியஸ். ஊட்டியை விட ஆறேழு டிகிரி குறைவு. இந்தக்காலநிலையில் வைரஸ்கள் எளிதில் சாவதில்லை, தொடுதல் மூலமோ, ஒரே அறைக்குள் பயணப்பட்டாக வேண்டிய சூழலோ எதுவானாலும் எளிதில் பரவிவிடும் வாய்ப்புள்ளது. இன்று சிங்கப்பூரில் 28 டிகிரி செல்ஷியஸ். இங்கு அதிகமாக பரவாததற்கு இதுவும் ஒரு காரணமாகச் சொல்லலாம்.

இருந்தாலுமே கூட பொதுமக்களும், அரசாங்கமும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறது. மக்கள் கூடுமிடங்களைத் தவிர்க்க வேண்டுமாய் அறிவுறுத்துகிறார்கள், தொட்டுப் பேசுவதை தவிர்க்கச் சொல்கிறார்கள். எல்லா வங்கி, அரசு,பள்ளிகள், கல்லுரிகள்,  தனியார் நிறுவனங்களிலும் வேலைக்குச் செல்லும் ஒவ்வொருவரையும் வாசலிலேயே வைத்து உடல் சூட்டைச் சோதிக்கிறார்கள். கொஞ்சம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் அவரை தனிமைப்படுத்தி, அவருடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எச்சரிக்கை செய்கிறார்கள். பொதுப்போக்குவரத்தில் எந்நேரமும் கிருமி நாசினி கொண்ட திரவங்களை வைத்து அழுந்தத் துடைத்தபடியே இருக்கிறார்கள். லிப்ட் பட்டன்கள், எஸ்கலேட்டர் கைப்பிடி, பேருந்தின் கம்பிகள், ரயில் பெட்டி நின்ற ஐந்து நிமிடத்தில் ஒவ்வொரு கம்பார்ட்மெண்டிலும் ஒரு குழு சென்று சுத்தமாக துடைத்து அனுப்புகிறார்கள். முன்னரே தீர்மானிக்கப்பட்ட கூட்டங்கள், தொழில் சந்திப்புகள், எதுவாக இருந்தாலும் தவிர்க்கச்சொல்லி வலியுறுத்துகிறார்கள்.

வைரசை விட போலிச்செய்திதான் மிகப்பெரிய அபாயம். அப்படி போலிச் செய்திகளைப் பரப்புபவர்களை மிகக்கடுமையான தண்டனைக்கு ஆளாகலாம் என எச்சரிக்கிறார்கள். ஓரிருவர் தண்டிக்கப்பட்டதாக தகவல்கள் வந்தன. வெளிநாட்டு ஊழியராக இருக்கும்பட்சத்தில் அவரின் வேலை உரிமத்தை ரத்து செய்து நாட்டுக்குள் நுழைய முடியாதபடி தடை செய்ய முடியும் என அறிவித்திருக்கிறார்கள். வைரஸ் தொடர்பான போலிச் செய்திகள் பரவுவதை முற்றிலுமாக தடுத்துவிட்டது அரசின் மிகப்பெரிய சாதனை.

சிங்கப்பூரில் இன்றைய நிலவரப்படி 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட போதிலும் உயிரழப்பு என்பது இல்லை என்பது  கவனிக்க வேண்டிய விஷயம். மிக உயர்ந்த சிகிச்சையை வழங்கி உயிரைக் காப்பாற்றி அனுப்புகிறார்கள். 70க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று முற்றிலும் வைரஸ் நீங்கி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது அரசு. ஒருவரியில் சொல்வதென்றால் இமாலய சாதனை. சிங்கப்பூர் போன்ற மக்கள் அடர்த்தி மிக்க தீவில் மிக எளிதாக பரவி பலிவாங்கக்கூடிய வைரஸ் காய்ச்சலை ஒரு உயிரழப்பு கூட இல்லாமல் தடுத்திருப்பது நிச்சயமாக சாதனைதான்.

இப்போது இந்தியாவுக்கு வருவோம். வட இந்தியாவில் 28 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இது இரண்டே நாட்களில் பத்து மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. நம் ஆட்சியாளர்கள் அப்படி. மக்களை பீதியடைய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறார்கள். எச்சரிக்கைச் செய்திகளை வெளியிடுவதற்குப் பதிலாக மாட்டு மூத்திரத்தைக் குடிக்கச் சொல்லும் கூட்டம் வடநாட்டில் உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களே மேடைதோறும் முழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.  டெல்லியில் இன்னும் கோடை தொடங்கவில்லை, குளிர்காலத்தின் இறுதிக்கட்டம், வுஹான் நகரத்தை விட ஐந்து டிகிரி அதிகம்தான். இருந்தாலுமே கூட ஒரு நாளில் 28 பேருக்கு பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. டெல்லி இந்தியாவில் தலை என்றால் மற்ற நகரங்களுக்கு மிக எளிதாக பரவுவதற்கு வாய்ப்புள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களான, கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூரு என எல்லாமே மக்கள் நெரிசல் மிக்க நகரங்கள்தான். இங்கெல்லாம் பரவினால் தடுக்க கடவுளாலும் முடியாது. அப்படி ஆகாது என வேண்டிக்கொள்ளலாம்.

ஆனால் மாட்டு மூத்திரம் குடிக்கச்சொல்லும் கூட்டமும், மருந்து கண்டுபிடித்துவிட்டதாக சொல்லும் கப்சா கும்பலும், நமக்கெல்லாம் வராது பாஸ் எனச் சொல்லும் ஆட்களும் இருப்பதுதான் பயத்தைக் கொடுக்கிறது.


வல்லினம் சிறுகதைச் சிறப்பிதழ்

மலேசியாவிலிருந்து வெளிவரும் இணைய இலக்கிய இதழான வல்லினத்தை தொடர்ந்து கவனித்து வருகிறேன். படைப்புகளிலும், நிகழ்வுகளிலும் பங்கேற்று வந்திருக்கிறேன். இம்மாத இதழ் சிறுகதை சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறார்கள். மொத்தம் பனிரெண்டு சிறுகதைகள். அதில் இரண்டு சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டது. மீதி பத்தும் உலகின் பல பகுதிகளிலிருந்து எழுதும் புதிய, மூத்த, சற்று அறிமுகம் ஆன எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆசானும், சு.வேணுவும் எல்லோருக்கும் அறிமுகம் ஆனவர்கள். அனோஜன், சுரேஷ் பிரதீப், நவீன், சுனில் கிருஷ்ணன் என அறியப்பட்ட எழுத்தாளர்களும் எழுதியிருக்கிறார்கள்.

எல்லா கதைகளையும் வாசித்துவிடவேண்டும் என்ற முனைப்பில் இருந்தேன். ஆனால் ஆசானின் சமீப கதையான சா தேவி படித்த சோர்வில் இருந்ததால் ஆசான் கதையைத் தவிர்த்து எல்லாவற்றையும் வாசித்தேன்.  தமிழ்ச்சிறுகதைப் பரப்பில் எல்லாவிதமாகவும் சிறுகதைகளை எழுதிப்பார்த்துவிட்டார்கள். வாசகர்களும் திளைப்பில் இருந்து மீண்டு விட்டார்கள், ஆனாலும் ஏதோ ஒன்று மிச்சமிருப்பதை ருசித்துவிடவேண்டும் என்ற வேட்கையை தவிர்க்க முடியாது. மிக அபூர்வமாகவே கலைத்தருணங்கள் மிளிர ஒரு கதை பேசப்படும்.  அப்படியான கதைகளைத் தேடித்தான் எல்லா கதைகளுமே வாசிக்கப்படுகின்றன. 

தெய்வீகனின் கதை “கறை நதி” முதல் வரியிலேயே உள்ளிழுத்துக்கொண்டது. எழுத்து நடை அ.முத்துலிங்கத்தைப் போலவே உணர முடிந்தது. சொற்களின் தேர்வு, உரையாடல்களுக்கிடையேயான பகடி. ஒரு கணம் இக்கதை அ.மு எழுதியதுதானோ என்றொரு மயக்கம் கொள்ள வைத்தது. இலங்கையிலிருந்து மேல்படிப்புக்கு ஆஸ்திரேலியா வரும் ஒருவனுக்கு இத்தாலிய முதியவர்களின் வீட்டில் தங்க இடம் கிடைக்கிறது. பிறகு பகுதி நேர வேலை கிடைக்கிறது, அங்கே ஒரு சம்பவம் பிறகு முடிவு. வெகு இயல்பான கதை. சொல்லிச்செல்லும் விதமும், இடையிடையே வரும் தகவல்களும் கதையை ஆர்வமாக வாசிக்கக் கோருகிறது. எனக்கு மிகவும் பிடித்த கதையாக இதைச் சொல்வேன்.

அனோஜன் பெயரை அங்குமிங்கும் கேள்விபட்டிருக்கிறேன். சமீபமாக இலக்கிய உலகில் உச்சரிக்கப்படும் பெயர். ஆசானின் தளத்தில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது படித்த நினைவுள்ளது. அவரின் பச்சை நரம்பு சிறுகதைத் தொகுப்பு வாசிக்க வேண்டிய பட்டியலில் உள்ள புத்தகம். அவரின் பெயர் பார்த்த உடனே ஆர்வமாக வாசித்தேன். கதையின் தொடக்கம் பொம்மையை புணர்வதாக ஆரம்பித்த உடனே சா தேவி போல கதை என்ற சலிப்பு உண்டானது. ஆனால் கதை வேறு தளத்தில் பயணித்தது. ஆரம்பகட்ட சலிப்பை எண்ணி நொந்துகொண்டேன். பிரமாதமான கதை.
இறுதிக்கட்டப் போரின்போது பொதுமக்களை வலியச்சென்று பிடித்து இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பார்கள் என்ற தகவல் புதியது. அதுவும் வீட்டுக்கொருவர் ஆண் பெண் பேதமின்றி. ஒருவீட்டில் 16 வயது நிரம்பிய பெண்ணை இயக்கத்திற்கு அனுப்பு விருப்பமில்லாத அப்பா அவளுக்கு விருப்பமில்லாத மூர்க்கனுடன் திருமணம் செய்து அனுப்புகிறார். அவள் கற்பமடைகிறாள். போர்ச்சூழலின் விபத்தொன்றில் அவள் கர்ப்பபை எடுக்கும்படி ஆகிறது. பிறகு இலங்கை வந்து படிப்பைத் தொடர்கிறாள். பொம்மையை புணரும் அதே சமயம் நிஜத்தில் தடுமாறும் அவனிடம் நானும் ஒரு பொம்மைதான். என்னைப்புணர்ந்தாலும் கர்ப்பம் தரிக்க முடியாது என்கிறாள். கதையின் இரண்டு பகுதிகளை ஒன்றாகச் சேர்த்த விதம் அபாரமானது.  போர் முடிந்த இந்த பத்தாண்டுகளில் புலிகள் இயக்கத்தின் மீதான விமர்சனப்பார்வை இலக்கியத்தில் பல்வேறு படைப்புகளின் வழியாகப் பதியப்பட்டு வருகிறது. இது ஆரோக்கியமான விஷயம். எல்லாத்தரப்பு மக்களின் பாடுகளும் வாசிக்கப்படவேண்டும். பதியப்படவேண்டும்.

சுசித்ராவின் கதை ஆராய்ச்சி மாணவி ஒருத்தியின் பயணம் வழியாக ஒரு தீவின் மக்களை, சடங்குகளை, வாழ்வியலைச் சொல்கிறது. திசைகளை நாம் பார்ப்பதற்கும் அத்தீவின் மக்கள் பார்ப்பதற்கும் உள்ள வேறுபாடுகள் ஆச்சரியப்பட வைக்கின்றன. எனக்கு இப்போது திசைகள் குழப்பம்தான் சிறு வயதில் இன்னும் மோசம். இடது மாட்டை இழுத்துப்பிடிக்கச்சொன்னால் எது இடது என்றொரு குழப்பம் படர்ந்துவிடும். தெக்காலப் போய் வடக்குல திரும்பணும் என்றால் எது தெற்கு எது வடக்கு என்று மண்டை காயும். என்னை ப்போலவே பலர் இருக்கலாம். நம் திசையறியும் அறிவு நமக்கு சரியாக போதிக்கப்படவில்லையோ என்று தோன்றும். ஆனால் கதையில் வரும் சிறுகுழந்தைகள் கூட திசையறிவு உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதுதான் வாழ்வியல் அறிவு. அது போதிக்கப்படுவதில்லை தலைமுறைகளாக கடத்தபடுவது என்று நினைத்துக்கொண்டேன். என்னைப்போன்ற திசைக் குழப்பவாதிகள் இருமுறை வாசிக்கவேண்டிய கதை இது. வித்தியாசமான சிறுகதை.

அடித்தூர் என்றொரு கதை. சிறுகதை எழுதப்பயிலும் எல்லோருமே முதலில் தேர்ந்தெடுப்பது சிறுவயது நினைவுகளை எழுதிப்பார்ப்பதுதான். பல மறந்த விஷயங்கள் துல்லியமாக மேலெழுந்து வந்து எழுத்தில் அமரும். எழுதியவருக்கே ஆச்சரியத்தைக் கொடுக்கும். அப்படியொரு கதைதான் இது. தனது தாத்தா பாட்டியின் நினைவுகளை அசைபோடும் பேரனின் கதை. கதையின் முதல் பாராவில் தாத்தா ஆள்காட்டி விரலையும் மோதிர விரலையும் விரித்து எச்சில் துப்பினார் என்று வருகிறது. நடுவில் உள்ள விரலை அவர் என்ன செய்தார்? மடக்கினாரா அல்லது நடுவிரல் இல்லையா? அது எப்படி அருகிலேயே ஒரு விரல் இருக்க அவர் ஏன் மூன்றாவதாக உள்ள விரலைத் தேர்ந்தெடுத்தார். அனிச்சையாக நான் எனது ஆள்காட்டி விரலையும் மோதிர விரலையும் விரித்து எச்சில் துப்புவதுபோல முயற்சித்துப் பார்த்தேன். சுலபமாக வரவில்லை. ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் விரித்தால்தான் சுலபம் அதுதான் உலக வழக்கமும் கூட. கதையைவிட்டு நான் இப்படி ஒரு ஆராய்ச்சியில் இறங்கிவிட்டேன். உடனே சினிமாவில் வந்த நாக்கால் மூக்கைத் தொடும் காட்சி நினைவுக்கு வந்தது.
அந்தத் தாத்தாவின் பிடிவாத குணம் அவருக்கு நேர் எதிரான குணமுடைய பாட்டியின் குணம் இடையில் ஒரு பேரன் பாத்திரம் என மூன்றே பாத்திரங்கள்தான். இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாமோ எனத் தோன்றியது.

சுரேஷ் பிரதீப்பின் வெம்மை சிறுகதை அபூர்வ வகை. அவரின் கதைகள் மிகுந்த கவனத்தோடு வாசிக்க வேண்டியவை. சில கதைகளை முதல் வாசிப்பிலேயே கொடுக்க வேண்டிய அனுபவத்தைக் கொடுத்து விடும். சில கதைகளை திரும்பத் திரும்ப வாசிக்கையில் வேறொரு பரிமாணத்தைக் கொடுத்தபடியே இருப்பவை. இரண்டாவது வகை கதைகள் சுரேஷ் உடையது.  மகாபாரதத்திலிருந்து ஒரு கருவை எடுத்து புனைவாக மாற்றியிருக்கிறார். கதை வாசிக்கும்போது தளபதி படமும், கர்ணன் சிவாஜி வாயில் ரத்தம் கொப்பு நினைவுக்கு வந்தனர். சந்தேகமில்லாமல் குந்தி களங்கிய கண்களுடைய ஸ்ரீவித்யாதான்.  இதிகாசங்களில் இருந்து இப்படி ஏராளமான சம்பவங்களை உருவியெடுத்து சிறுகதைகளாக மாற்றலாம். திரையில் இதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. வரவேற்கப்பட வேண்டிய உத்தி எழுத்து. இதுபோன்ற கதைகளை நீண்ட அனுபவமும் பயிற்சியும் உள்ளவர்கள் எளிதில் அடையாளம் கண்டு நுழைந்துவிட முடியும். கதைக்கு இடையேயான மெல்லிய விவரணைகளை அனுமதிக்கலாம் ஆனால் நீளமான விவரணைகள் அலுப்பூட்டுபவை, அன்றி அதையும் வாசகன் சோர்வடையாமல் எழுத முயல வேண்டும்.

சுனில் கிருஷ்ணனின் இயல்வாகை கதை இயல்பாக இருந்தது. ஆசான் பள்ளியைச் சேர்ந்தவர் என்றே இவரை மனதில் நினைத்திருந்தேன். அந்த எழுத்தின் சாயல் இவரிடமும் இருக்கிறது என்றே வாசக மனம் சொல்லியது. இதற்கு முன் அனோஜனின் கதையிலும் அப்படி உணர்ந்தேன். மனதிற்கு நெருக்கமான முன்மாதிரி எழுத்தாளர்களின் தாக்கம் இல்லாமல் எழுத முடியாது. அப்படி எழுதியவர்களின் எழுத்து பிற்காலத்தில் தனித்த இடத்தில் தானாகவே சென்று அமர்ந்துவிடும். இந்த சிறப்பிதழில் கறை நதி கதைக்கு அடுத்த இடத்தில் இக்கதையை மனம் நினைத்துக் கொள்கிறது. ஒரு மருத்துவர், அவரின் அக்கா மகனுக்குப் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டிய தந்தை பொறுப்பில் இருக்கிறார். முதல் பெண் பார்த்து அது தடைபட்டுப் போன சோகத்தில் இரண்டாவது பெண் அமையும்போது பெண்ணைப் பற்றிய ஒரு உண்மை இவருக்குத் தெரிகிறது. உண்மையைச் சொல்லி நிறுத்தினால் தன் தொழிலுக்கு நேர்மையாக இருக்க முடியாது, சொல்லாமல் விட்டால் தன் மருமகனின் வாழ்க்கையைப் பாழ்பண்ணி விட்டோமே என்ற குற்ற உணர்வு வரக்கூடும். எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்று தவிக்கையில் ஒரு அற்புதம் நிகழ்கிறது. இக்கதை எனக்கு கி.ராவின் மின்னல் சிறுகதையை நினைவுபடுத்தியது. ஒரு நல்ல சிறுகதை உங்களை தொந்தரவு பண்ணும் அல்லது இன்னொரு நல்ல சிறுகதையை நினைவுபடுத்தும்.

துவந்த யுத்தம் என்ற கதையை கிரிதரன் ராஜகோபாலன் என்பவர் எழுதியிருக்கிறார். சற்றே நீளமான கதை. ஸ்க்ரோல் வாசிப்புக்குப் பழக்கப்பட்ட விரல்கள் அடம்பிடித்தன. விரலே நொந்துகொள்ளும்படி ஸ்க்ரோல் செய்யச் செய்ய போய்க்கொண்டே இருந்தது. விவரணைகள் மிக அதிகமாக இடம்பெற்றிருந்ததுதான் காரணம் என யூகிக்கிறேன். இப்போதெல்லாம் ஒப்பீடு இல்லாமல் ஒரு கதையை வாசிக்க முடியவில்லை. இக்கதைக்குள் நுழைந்த உடனே எனக்கு கோணங்கி நினைவுக்கு வந்தார். தொன்மம்தான் காரணம். இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு கூலிகளாக பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு இந்தியாவிலிருந்து மொரிஷியஸ் சென்றவர்களின் பிண்ணனியில் கதை எழுதப்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கில் மலேரியா காய்ச்சலில் இறந்த இந்தியர்களின் கல்லறைத்தோட்டத்தில் புதிய சர்ச் கட்டுவதற்காகவும் அதைச் செயல்படுத்துவதற்காக நியமிக்கப்படும் வேலு என்பரின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கும் கதை. வரலாற்றுப்பிண்ணனி உடைய கதைகளை வாசிக்கும்போது அவ்வரலாற்றுச் சம்பவங்கள் நாம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். சில கதைகளுக்கு தெரியவேண்டிய அவசியமில்லை. உதாரணம் புயலிலே ஒரு தோணி, கடலுக்கப்பால், சயாம் பர்மா மரண ரயில்பாதை, எரியும் பனிக்காடு போன்றவை. நாவல் அளவுக்கு விரித்து எழுத வாய்ப்புள்ள களம் உடைய கதை இது. ஒருவேளை இது நாவலாக வரும்பட்சத்தில் இன்னும் சிறப்பாக அமையலாம்.

சு.வேணுகோபால் கதைகள் எப்போதுமே ஒரு அதிசயத் திறப்பை முடிவில் உண்டாக்கிவிடும். இக்கதையில் பார்வையற்றவராக வரும் பாத்திரம் கோவை ஞானியாக இருக்குமோ என்றொரு சம்சயம் ஏற்பட்டது. ஒரு சிறிய நிகழ்வுதான் மொத்தக் கதையையும் தாங்கி நிற்கும். அதுபோல குழப்பமான மனநிலையில் ஒருவரைச் சந்திக்கச்செல்பவர் அவரின் பாதையிலேயே சென்று தனக்கான தெளிவை அடைந்துகொள்ளும். சு.வே கதை கூறும் முறை மிக நுட்பமானது. இக்கதையில் மேலும் ஒருபடி கூடி வந்திருக்கிறது. பழனிச்சாமி ஐயா, ஒரு இடத்தில் பழனிவேல் அய்யா என்று மாற்றி எழுதியிருந்தது கண்டு குழம்பி மேலே சென்று பழனிச்சாமி ஐயா என்று உறுதி செய்ய வேண்டியிருந்தது. மற்றபடி அந்தப் பாத்திர உருவாக்கம் அபாரம்.

மற்ற கதைகளை இன்னும் படிக்கவில்லை. திரையைப் பார்த்துக்கொண்டே வாசித்ததால் கண்கள் பூத்துவிட்டன. வல்லினம் குழுவினர் பாராட்டத் தகுதி உடையவர்கள். அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். தகவல் பிழை, எழுத்துப்பிழைகளை இன்னும் கவனமாக பார்க்க வேண்டும். எல்லாருமே கணினியில் தட்டச்சு செய்து கதைகளை அனுப்புபவர்கள். பேனாவில் வருவதை விட க.த இல் பிழை அதிகம் வர வாய்ப்புண்டு. அதிகம் ஒற்றுப்பிழைகள்தான் கவனத்தில் கொள்ள வேண்டும். அமிர்தலிங்கம் இரண்டு இடங்களில் அமிர்ந்தலிங்கமாகிவிட்டார். ஏராளமான எழுத்துப்பிழைகள். கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள்.

Tuesday, March 03, 2020

திறப்பு

தன்னை மீட்டெடுத்தல் என்பது அபூர்வமாக நடக்கும் விஷயம். இன்னது நிகழப்போகிறது என்பதே தெரியாது நடந்துவிடும் ஆச்சரியம். சில நாட்களாக எதிலும் மனம் ஈடுபாடு இன்றி அலைந்து திரிந்தது. பிரத்யேகக் காரணங்கள் ஒன்றுமில்லை. மனக்கதவுகள் தானாக சாத்திக்கொண்டன. ஒரு திறப்பிற்காக நானும் காத்திருந்தேன். இடையில் நானாக சில காரியங்களை திறப்பிற்காக முயற்சி செய்து பார்த்தேன். பயணம். எங்காவது பயணம் சென்று வந்தால் ஓரளவு மனதுக்கு புத்துணர்சி கிடைக்கக் கூடும் என எண்ணி, பிறகு நடைமுறை சாத்தியங்களை நினைத்து தவிர்த்துவிட்டேன். தவறான புத்தகத் தேர்வுகள் வாசிப்பையும் முடக்கிப்போட்டன. திரைப்படங்கள் பார்க்கலாம் என நெட்பிலிக்ஸ் பக்கம் ஒதுங்க, தனது ஆக்டோபஸ் கரங்களால் அது என்னை இழுத்துக்கொண்டது. வகை தொகை இல்லாமல் படங்கள், தொடர்கள். சமீப ஆறுமாதத்தில் அதில்
செலவழித்த நேரத்தைக் கணக்கிட்டால் என் வாழ்நாளில் மொத்த கணினி உபயோகத்தின் நேரத்தில் பாதியை அதில் செலவிட்டிருக்கிறேன். நான்கு சீசனும், சீசனுக்கு பத்து அத்தியாயங்களும், அத்தியாத்திற்கு குறைந்தளவு ஒரு மணி நேரமும் ஓடக்கூடிய தொடர்களை அதிகபட்சம் நான்கு நாட்களில் முடித்திருக்கிறேன்.

நைட் ஷிப்ட் வாட்ச்மேன் போல நடைகூட தள்ளாடிப்போனது. இதனால் நான் இழந்தது நிறைய. பிள்ளைகளுடனான அணுக்கமின்மை, வீட்டம்மணியுடன் உரையாடல் குறைந்தமை, வார இறுதிகளில் சமையல் பக்கம் உதவி நின்றது, நண்பர்களுடனான சந்திப்பு குறைந்தது. வாசிப்புப்பக்கம் கொஞ்சமும் செலவழிக்காதது. என பட்டியல் நீளும். ஒரே நல்ல விஷயம் குடி அமர்வுகளில் சமீப காலமாக பங்கேற்கவில்லை.

ஒரு திறப்பு எல்லாவற்றிற்கும் உண்டல்லவா... காலப்போக்கில் இந்த நெட்பிளிக்ஸ் போரடிக்க ஆரம்பித்தது. தொடர்களில் நாட்டம் குறைந்து மொத்தமாக மறைந்தது என்று சொல்லமுடியாவிட்டாலும் முன்பு போல அதில் நேரம் அதிகம் செலவழிப்பதில்லை.

சென்றவாரம் டாக்டர் சைமன் அழைத்திருந்தார். வீட்டம்மணி முன்பு வேலை பார்த்த கிளினிகின் பல் டாக்டர் அவர். கிளினிக்கில் கணினி சம்பந்தப்பட்ட வேலைகளில் உதவி தேவை என்றால் என்னை அழைப்பார். செய்து தருவேன். இந்த முறை ரசீதுகளைப் பிரிண்ட் செய்வதுபோல சிறிய அளவில் ஒரு பிரிண்டரை கவுண்டருக்குப் பக்கத்தில் வைக்க வேண்டும் என்றார். அதற்கு முன் சைமன் அவர்களைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் ஒரு கனவான். வாழ்வில் நிறைய பெரிய மனிதர்களை சந்தித்தாலும் சிலரை மட்டுமே கனவான் என மனதில் வைத்திருப்போம் அல்லவா அதுபோல ஒரு கனவான் அவர். ஒரு குறுஞ்செய்தியில் எத்தனை மரியாதை கலந்த வார்த்தைகள் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு வார்த்தைகளை அன்புடன் கலந்துதான் அனுப்புவார். நான் அதற்கு ஒற்றை வரியில் பதில் அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். கனவானுக்கும் சில்லறைக்கும் வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சைமன் ஒரு வேலையிட்டார் அல்லவா. அதற்காக சிம்லிம் சென்று ஒரு பிரிண்டர் வாங்கவேண்டும். வேலையிலிருந்து நேராக சிம்லிம் சென்று வாங்கி கிளினிக்கில் பொருத்துவதாக திட்டம் வகுத்துக்கொண்டேன். கிளினிக் போகும் வழியில்தான் ராஜாராம் முடிதிருத்தும் கடை வைத்திருக்கிறார். அங்கே ஒரு டீக்கடையும் இருக்கிறது. நண்பர்களுடன் நின்று கொண்டே தேநீர்க்கோப்பையுடன் உரையாடுவது அலாதியான விஷயம். இங்கு எல்லா கடைகளிலும் அமர்ந்து சாப்பிடும் முறைதான் உள்ளது. சிங்கப்பூரிலேயே நின்றுகொண்டு சாப்பிடும் ஒரு கடை அதுதான். அதனால் அவ்வழியாக செல்லும்போதெல்லாம் அங்கே நின்று ஒரு டீ சாப்பிடுவது வழக்கம். சோகம் என்னவென்றால் ராஜாராம் எப்போதுமே பிசியாக இருப்பார். சும்மா இருப்பது அபூர்வம். அவர் சும்மா இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்வேன். ஆனாலும் எவர் தலையிலாவது விளையாடிக்கொண்டிருப்பார்.

அம்பானியுடன் கூட தேநீர் அருந்த வாய்ப்புண்டு. ஆனால் ராஜாரமுடன் அருந்த முயல்வது கடினம். வேலையிலிருந்து சற்று நேரம் விலகி டீ சாப்பிடலாம் என்று அவரை அழைப்பது சரியாக இருக்காது. அது அவரது தொழிலைக் கெடுக்கும் செயல். ராஜாவின் கடைக்குச் செல்ல மற்றுமொரு காரணம் அங்கே புத்தகங்கள் இருக்கும். சாரு, ஆசான், எஸ்ரா, ஷோபா சக்தி, லசகு என இலக்கியவாதிகளின் பெயர்கள் சரளமாக புழங்கும். சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்புவது வழக்கம். கெட்ட வார்த்தை என்ற சாருவின் நூல் ஒன்று கண்ணில் பட்டது. கேட்டவுடன் “எடுத்துட்டுப் போங்கணே” இதுல்லாமா கேட்டுகிட்டு இருப்பாக என்றார்.

எடுத்துவந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு திறப்பு நிகழும் என்று காத்திருந்தேன் அல்லவா, அந்தத் திறப்பை கெட்ட வார்த்தைதான் செய்துகொண்டிருக்கிறது. வாசித்துக்கொண்டிருக்கும் போதே உற்சாகம் தொற்றிக்கொள்ளும் எழுத்து சாருவினுடையது.

சீன ராயா என்றொரு சிறுகதை எழுத ஆரம்பித்து நான்கு பாராக்களுடன் நிற்கிறது. அதைத் தொடர வேண்டும். முடிக்கவேண்டும். வலைப்பூவில் தினமும் எதையாது தோன்றுவதை எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற ஆவலை சாரு ஏற்படுத்திவிட்டார். இந்த உத்வேகத்தை எழுத்தும் வாசிப்பும் மட்டுமே உருவாக்கும்.