எல்லையற்ற அன்பு கொள்வோம்

Saturday, June 30, 2007

கொழுப்பாத் தின்ற கூர்ம்படை மழவர்

கல்சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பை
தாழிமுதல் கலித்த கோழிலைப் பருத்தி
பொதி வயிற்றிலங்காய் பேடை ஊட்டி
போகில் பிளந்திட்ட பொங்கள் வெண்காழ்
நல்கூர் பெண்டிர் அல்கற்கூட்டும்
கலங்கு முனைச் சீறூர் கைதலை வைப்பக்
கொழுப்பாத் தின்ற கூர்ம்படை மழவர்


ஓகே இது புரியுது நடந்திருக்கவும் வாய்ப்பிருக்குது அவ்வளவு ஏன்
இப்பவும் இது சாதாரணமானதுதான்.

புலி தொலைத்துண்ட பெருங் களிற்றொழி ஊன்
கலி கெழு மறவர் காழ்க்கோத் தொழிந்ததை
ஞெலி கோறிசிறு தீமாட்டி ஒலிதிரைக்
கடல் விளை அமிழ்தின் கணம்சால் உமணர்
சுனை கொள் தீம்நீர் சோற்றுலைக் கூட்டும்....


இதுதாங்க பிடிபடவே மாட்டேங்குது. நம்ம முன்னோர்கள் இப்படியெல்லாம்
இருந்தாங்களா? அவங்க உணவுப்பழக்கம் நிஜமாவே இப்படியா?
இல்ல எதோ ஒரு புலவன் கள்ளு குடிச்சிட்டு கைக்கு வந்தத எழுதிட்டானா?
ஒண்ணுமே புரியல யாருக்காச்சும் தெரிஞ்சா விளக்குங்க ப்ளீஸ்...

Monday, June 25, 2007

ஹாலிவுட்டில் வடிவேலு!!!!!!!!!!!!!





தற்போது கோலிவுட்டை கலக்கி வரும் வைகைப்புயல் இனி ஹாலிவுட்டில் கலக்கப்போகிறார்
ஆம். மனோஜ் கே ஷ்யாமளன், ஏ.ஆர்.ரஹ்மான், சிவமணி வரிசையில் வடிவேலுவும்
இணைவது தமிழுக்கு, தமிழனுக்கே பெருமை.

ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. தற்போது வடிவேலுவின் கால்ஷீட் கிடைத்ததே
பெரும் பாக்கியம் எனவும் இனிமேல்தான் கதையை உருவாக்க வேண்டும் என்று
படத்தின் இயக்குனர் மார்க்கு விக்கு கூறினார். படத்தின் பெயர் மட்டும் முடிவு
செய்யப்பட்டுள்ளது. படத்தின் பெயர் கீழே

Sing in The Rain

வடிவேலு பாடற மாதிரியே பாடிப்பாருங்க பாதி படம் பார்த்த எபெக்ட் கிடைச்சாலும்
கிடைக்கும்.

ஐ ஆம் சொய்ய்ங் இன் த ரய்ன்.

ஐ வாண்ட் மோர் இன் த ரய்ன்....

Tuesday, June 19, 2007

உழைக்க வரவில்லை, உயிர்பிழைக்க வந்தேன்

ஒரு முறை ஆமியில் இருந்த மாமா அவர்கள் மாட்டிறைச்சி கொண்டு வந்தார்கள்
அதை சமைச்சி சாப்பிட்ட பொறவுதான் இந்த வருத்தம் வந்தது. வகுத்துலே
ஊசி கொண்டு குத்துறாப்புல இருக்கி. நாட்டிலே டொக்டரிடம் காட்டினால்
வயித்துலே சிறிய கல் இருக்கிறதெண்டு சொன்னார்கள். ஆப்ரேசன் செய்ய
முடியாதெண்டும் மாத்திரை மூலமே சரிப்படுத்த முடியும் என்றும் சொன்னார்கள்.
சிறீலங்காவிலே பெரிய மருத்துவமனையிலே காட்டிதான் விமானமேறினேன்.
இங்க வந்தபிறகுதான் மறுபடி இந்த வருத்தம் வருதண்ணா. ஏன் எண்டுதான்
விளங்கல்லை.

சமீபத்தில் எங்கள் அலுவலகத்தில் செக்யூரிட்டியாக வேலைக்கு வந்த இலங்கை
நண்பரின் பேச்சுதான் இது. திடீர்னு அவருக்கு பயங்கரமான வயித்து வலி
வந்துடுச்சி. டாக்டர்கிட்ட தன் பிரச்சினைய எடுத்து சொல்ற அளவுக்கு ஆங்கிலம்
தெரியாத காரணத்தால் நானும் அவருடன் சென்றேன். அப்படி போனபோது
அவருடன் ஏற்பட்ட உரையாடலே மேல் உள்ளவை.

வாயிலை கடந்து செல்லும்போதும், வரும்போதும் கை அசைப்பார்.

ஏங்க வயித்துல ப்ராப்ளம் வச்சிகிட்டு எதுக்கு வந்திங்க? எல்லாம் சரியான பிறகு
வந்துருக்கலாமே!

அதுதான் அண்ணா நாங்க பண்ணின பாவம். எங்கட ஊரிலே எனக்கு சொந்தமாக
10 ஏக்கரும் ரெண்டு கிணறும் இருக்குது. கடந்த வருடம் கோயில் பூமியும் சேர்த்து
குத்தகைக்கு எடுத்து உழைத்தும் ஒண்ணும் காணல. கடன் வாங்கித்தான் விவசாயம்
பண்ணினோம். ரெண்டாவது முறை எடுக்கலாமெண்டுதான் நெல் விதைச்சேன்
அப்போதான் பிரச்சினை வந்து ஊரைவிட்டு ஓடிப்போனோம் அப்படியே பாடுபட்ட
நிலத்தை விட்டுபோட்டு. நல்ல விளைச்சலிலே ஆமிக்காரன் மாட்டை விட்டு மேய
விட்டுட்டான். மொத்தமும் கடனாகிப்போச்சு. அதெல்லாம் அடைக்கணும்
அல்லவா?

அதுக்கு ஏன் அவசரபட்டு வந்திங்க? ஏதாச்சும் தொழில் தெரிஞ்சாலும் பரவால்ல.
விவசாயத்தை மட்டும் தெரிஞ்சிகிட்டு வந்துட்டிங்களே. பாருங்க இங்க செக்யூரிட்டியா
நிக்க வச்சிட்டாங்க.

ஆமிக்காரனுக்கு பயந்தேதான் இங்கு வந்தேன். உழைக்கவெல்லாம் தெம்பிருக்கதுண்ணா
உடம்பிலே. ஆனால் உயிர்பயம்தான் கவலையாயிருக்கு. ரெண்டு வயசு பிள்ளைய
விட்டுபோட்டு வந்துட்டதுதான் இன்னும் வருத்தமாயிருக்குது.

பொண்டாட்டி பிள்ளைகள விட்டுட்டு வந்துட்டிங்களே அவங்களுக்கு மட்டும் ஆபத்து
இல்லையா?

ஆண்கள கண்டாதான் அடிப்பான், உதைப்பான். பெண்களையும், குழந்தைகளையும்
அதிகம் துன்புறுத்த மாட்டான்.

மருத்துவமனை வந்திருந்தது. அந்த அரபி டாக்டரிடம் பேசி புரிய வைக்கறதுக்குள்ள
நாக்கு தள்ளிபோச்சு. நெஜமாவே இவன்லாம் டாக்டருக்கு படிச்சானா? இல்ல நம்மூரு
மாதிரியான்னு சந்தேகமாகிச்சு எனக்கு.

வழக்கம்போல, தேவையில்லாம எல்லா டெஸ்டும் எடுத்து வயித்துல கல்தான் இருக்குன்ற
பெரிய உண்மைய கண்டுபிடிச்சிட்டாரு. ஒரு ஊசி, மருந்து மாத்திரை எழுதி கொடுத்தார்.
எல்லாம் சேர்த்து 200 திர்ஹாமுக்கும் எட்டிவிட்டது. வந்து முதல் மாத சம்பளம் கூட
வாங்காமல் செலவாகிவிட்டதே என்ற வருத்தம் அவருக்கு. அந்த கவலையில் வயிற்று
வலி போயிடுச்சி.

இப்ப எப்படிய்யா இருக்கு?

இப்போ கொஞ்சம் பரவால்லங்கண்ணா

கொஞ்சம் சகஜ நிலைக்கு அவரை திருப்ப பேச்சை சுவாரசியமாக்க நினைத்தேன்.

ஏன்யா கல்யாணம் ஆகி எவ்வளவு நாள் ஆச்சு?

மூண்டு வருடமும் ஐந்து மாதமும் ஆச்சு.

காதல் கல்யாணமா? வீட்ல பாத்தாங்களா?

சிறு புன்னகையுடன் வெட்கப்பட்டுக்கொண்டே காதல் கல்யாணம்தான் ஆச்சு என்றார்.

இந்த மாதிரி காதல் கதைகள கேக்கணும்னாவே கொஞ்சம் ஆர்வம் அதிகம் நமக்கு.
ஆமா எந்த இடத்துல பாத்திங்க முதல் முதல்ல? யார் முதலில் காதலை சொன்னது?

அவரும் சிரித்துக்கொண்டே என்ன இப்படியெல்லாம் கதைக்கறிங்களே என்று ரொம்பவே
கூச்சப்பட்டுவிட்டார்.

அட சும்ம சொல்லுங்க. அறைக்கு போக இன்னும் நேரமிருக்கு. உம்முனு இருக்காம
எதாச்சும் பேசலாமில்ல.

எங்கட மனைவிதான் முதலில் சொன்னது. பிறகு நானும் சொன்னேன்.

என்னன்னு?

மறுபடியும் வெட்கப்பட்டுவிட்டார்!

ஐ லவ் யூ எண்டுதான். வேறென்ன சொல்வார்கள். இதெல்லாம் கேள்வியெண்டு
கதைக்கறீங்களே அண்ணா!

சரி சரி கடைசியா ஒரே கேள்வி. பொண்ணு உங்க ஊரேவா? இல்ல பக்கத்து
ஊரா? எப்படி சந்திப்பிங்க என்ன பேசிப்பிங்க?

பக்கத்து வீடேதான். சொந்த மாமன் பொண்ணுதான் சிறு பிராயத்திலிருந்தே தெரியும்.
விரும்பினோம் கல்யாணம் செய்து வைத்தார்கள்.

யோவ்! உன்னயெல்லாம் என்ன செய்றது? சொந்த அத்தை பெண்ண யாராச்சும்
லவ் பண்ணுவாங்களா? நீங்க சும்மா இருந்தாவே பெரியவங்க அவங்களுக்குள்ள
பேசி கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க.

சிரித்துக்கொண்டே தலையாட்டினார்.

வலியும் மனதும் அவருக்கு லேசானது போன்ற உணர்வு அவர் முகத்தில்.

எனக்கும்தான்.

ஆதரவில்லாத இடத்தில் ஆறுதலாக இரண்டு வார்த்தை பேசுவதற்கு கூட நேரமில்லாத
ஊரல்லவா இது.

Sunday, June 10, 2007

மவராசனா போய்ட்டு வாய்யா...

நாளை அவசர விடுப்பில் இந்தியா செல்லவிருக்கும் எங்கள் பாசக்கார குடும்பத்தின்
ஆணிவேர் அபிஅப்பா நல்லபடியாக இந்தியா சென்று திரும்ப பதிவுலகத்தின்
சார்பாக எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

வீட்டில் உள்ள அபி, அபிஅம்மா, அபி சித்தப்பா, அபி சின்னம்மா மற்றும் பாட்டி
தாத்தா என வீட்டில் உள்ள அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறோம்.

Photo Sharing and Video Hosting at Photobucket


முக்கியமாக அபி அப்பா வீட்டில் புதிதாக பிறக்கப் போகும் குழந்தைக்கு
எங்கள் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.


எதைப்பற்றியும் கவலைப்படாமல் செல்லுங்கள் அபிஅப்பா எல்லாமே நன்றாக
நடக்கும்.

எங்களது வாழ்த்துக்களை உங்கள் குடும்பத்துக்கு தெரிவியுங்கள்.

Friday, June 08, 2007

பி.ந பற்றிய சில சந்தேகங்கள்.

நேற்று ஏதேச்சையாக துபாய் பக்கம் போனபோது கிடேசன் பார்க்கில் சிக்க
நேரிட்டது. இதுவரைக்கும் பார்க் மீட்டிங்னா வாரயிறுதிய சந்தோஷமா
கொண்டாடிட்டு இருந்தோம். இந்த வாரம் ஒரு காரசாரமான விவாதம் நடத்தி
இதுவரைக்கும் இல்லாத ஒரு கெட்ட விஷயத்தை பண்ணிட்டோம்.

எந்த முன்னேற்பாடும் இல்லாத இந்த சந்திப்புக்கு அனானிகள் திரண்டு வந்தார்கள்
என்றெல்லாம் பீலா விடமாட்டேன். பதிவர்கள் அல்லாதவர்களையும் அனானிகளா
சேத்துகிட்டாதான் கணிசமான ஆள்னு சொல்லமுடியும் அப்படின்றதினால அவங்களையும்
சேத்தாச்சி. எல்லாரும் இப்படியே பேசிகிட்டு இருந்தா வேலைக்காகாதுன்னு அந்த
ஏரியா தல ஒண்ணு சவுண்டு விட்டு என்னாதிது ராஸ்கல்ஸ் ஆளுக்கு ரெண்டு மூணு
நிமிசம் ஒதுக்கறேன் அவங்களுக்கு தோன்றத பேசலாம்.

முதல்ல அய்யனார் நீங்க பேசுங்கன்னு சொல்லிட்டார் அந்த ஒன்சைட் நீதிபதி.

இலக்கியங்கள பத்தி நாம பேசலாம்னு ஆரம்பிச்சி சங்ககாலம், குற்றால குறவஞ்சி
சிலப்பதிகாரம்னு பட்டைய கெளப்புனாரு. சங்ககால இலக்கியங்கள் எல்லாம்
என்னை பொருத்த வரைக்கும் இலக்கியங்கள்னு ஒத்துக்கவே மாட்டேன். அதெல்லாம்
உயர்ந்த நிலை மக்களுக்காக உற்பத்தி செய்யப்பட்டவை. ஒரு தலைவன் தலைவிக்கு
காதல் வர்றதும் அதுக்கு ரெண்டு பேர் தூது போறதும் எழுதறாங்களே தவிர அந்த
தூது போன தோழிக்கும் காதல்னு ஒண்ணு இருக்குமே அதை யாருமே ஏன்
எழுதல? சாதாரண மக்களுக்கும் காதல் வரும் இல்லையா? அதை எழுதணும்னு
ஏன் யாருக்குமே தோணல?? ஏன்னா அங்க பொற்காசு கிடைக்காது அதனாலதான்.

இப்ப அந்த தோழியோட காதல் ரொம்ப முக்கியமாய்யா? நாட்டுல எவ்வளவோ
பிரச்சினை இருக்கு அதெல்லாம் பேசாம... பேசறாங்கைய்யா பேச்சின்னு
சொல்லிகிட்டே கிச்சன் பக்கம் ஓடிட்டாரு ஒருத்தர்.

பாய்ண்ட பிடிச்சாருய்யா, நீங்க மேல பேசுங்க அய்ஸ்னு நீதிபதி சொல்லிட்டாரு.

அங்க இருந்த அனானிகள் இன்னுமா??னு சொல்லிகிட்டே அரண்டு ஓடிட்டாங்க
இன்னும் சிலபேர் இந்தாளுக்கு ரெண்டு நிமிசம் ஜாஸ்தியா யோவ்னு சவுண்டு
விட்டாங்க உடனே பேசிகிட்டு இருந்த தளத்தையே மாத்திட்டாரு.
வசனகவிதை, புதுக்கவிதை, மரபுக்கவிதை, நவீன கவிதை இதெல்லாம் யாரு
ஆரம்பிச்சது எப்படியிருக்கும்னு சொல்லிட்டு பின்நவீனத்துவம்னு ஒரு மேட்டருக்கு
வந்தார்.

மேலே சொன்ன மரபுகளையெல்லாம் ஒடைச்சி தூள் தூளாக்குறதுதான் பின்
நவீனத்துவம். கட்டுடைத்தல். விளிம்புநிலை மக்கள பத்தி பேசறதுதான் இதனோட
நோக்கம். இதை கண்டுபிடிச்சவர்னு ஒரு பேர சொன்னாரு அது யாருக்குமே
புரியல. மேட்டர்தான் முக்கியம். முதலில் வாசிக்கும்போது இதுல பேசப்படற
வார்த்தைகள், சொல்ற விஷயங்கள் எல்லாமே ரொம்ப அதிர்ச்சியா இருக்கும்
தாங்கமுடியாது ஆனா அதுதான் உண்மை. எதார்த்ததை அப்படியே சொல்லணும்
வார்த்தைப்பூச்சுகள, வியாபாரதந்திரங்கள்னு இல்லாம இருக்கணும். எல்லாருமே
புனிதபிம்பத்தோட நடிக்கிறாங்க. என்னோட பி.ந கவிதைகள்ல இதை
பத்தி சொல்லியிருக்கேன்.

கவிதைன்னவுடனே அபிஅப்பா அச்சு அச்சுன்னு தும்மிட்டாரு.

சரி சரி உங்க டைம் முடிஞ்சி போச்சி அடுத்து தம்பி நீங்க பேசுங்கப்பா!

பின்நவீனதத்துவம்னு புதுசா ஒரு விஷயம் சொல்லிருக்காரு அதை பத்தி
சந்தேகங்கள் இருந்தா கேளுங்கய்யா.

அய்யா அது பின்நவீனத்துவம். தத்துவமில்ல.

எனக்கு என்னங்க இருக்கு பேச? எனக்கு ஒண்ணுமே தெரியாதுங்க. இருந்தாலும்
பின்நவீவனத்துவம் பத்தி எனக்கு கொஞ்சம் டவுட்டு இருக்குங்க அதை பத்தி
இவர்கிட்ட கேட்டுக்கறேன். பி.ந என்ற வார்த்தையே தமிழ்மணம் பக்கம் வந்துதான்
தெரிஞ்சிகிட்டேன். என்னை பொருத்தவரைக்கும் நான் எப்படி புரிஞ்சிகிட்டேன்னா
அதாவது பி.ந வாதிகள்னு ரெண்டு மூணு பேர் எழுதற கவிதை கட்டுரைகள்னு
படிச்சி நான் புரிஞ்சிகிட்டது இதான் இதுல மட்டும் புழக்கத்தில் இல்லாத அதாவது
சாதாரணமான உரையாடல்களில் இல்லாத பலரும் சொல்லவே விரும்பாத சொற்களான
ஆண்குறி, யோனி, மாதவிடாய், முலை,புணர்தல்னு இன்னும் பல வார்த்தைகள்
இதெல்லாம் தவறாமல் கவிதையில இடம்பெறுவது எதனால். இதுதான் பி.நவா?
இதெல்லாம் இல்லாமல் எழுதமுடியாதா? இல்ல ஒருவேளை இதுமட்டும்தான் பி.நவா?
இல்ல இதை எழுதற ஆளுங்களுக்கு மட்டும் இந்த உணர்ச்சிகள் இருக்குமா? ஏன்னா
சில கவிதைகள் படிக்கும்போது சரியான சைக்கோத்தனமா எழுதியிருக்கான்யான்னு
எனக்குள்ளவே சொல்லிக்குவேன். சில கவிதைகள் ஒண்ணுமே புரியறதில்ல.

நீதிபதி அவர்களே நான் ஒரே ஒரு விஷயம் சொல்லிக்க ஆசப்படறேன்னு
அபிஅப்பா அடம்பிடிக்க.

அவங்கவுங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துலதான் பேசணும்.

இல்லிங்க முக்கியமான ஒரு விஷயம். அவங்களோட அனுமதிய எதிர்பார்க்காம
அவரா சொல்ல ஆரம்பிச்சிட்டார்.

தமிழ்மணம்ன்றது வயதில் சிறியவர்கள், மாணவர்கள், பெண்கள், பெரியவர்கள் இந்த
மாதிரி பலபேர் வந்துபோற இடம் இதுல போய் கன்னாபின்னான்னு வார்த்தைகள
போட்டு கவிதைன்ற பேர்ல எழுதறாங்க.தம்பி சொன்ன கருத்துக்களுடன் முழுமையாக நான் உடன்படுகிறேன். இதுதான் மட்டும் என்னோட வேண்டுகோள் ஆபாசமான வார்த்தைகள்
இல்லாம எழுதணும்ங்க அம்புட்டுதேன். உட்கார்ந்துவிட்டார்.

முதல் வகுப்பு படிக்கிற மாணவன்கிட்ட இதுதான் "அ" இதுதான் "ஆ" அப்படின்னு
சொல்லிகுடுத்தா கடைசிவரைக்கும் மறக்கவே மாட்டான். அதுமாதிரிதான் பின்நவீனத்துவம்
அப்படின்னு முதலில் அறிமுகமாகிறவர்களுக்கு இதுபோன்ற ஆபாசமான வார்த்தைகள்
மட்டுமே நிறைந்திருந்து காணப்பட்டால் கடைசிவரை அவர்களிடம் இது "ஒரு
மாதிரியான மேட்டர்" என்ற அணுகுமுறைதான் இருக்கும். எனக்கு தெரிஞ்சி எங்கயோ
படிச்சேன் எங்கேன்னு ஞாபகமில்ல, அவளை அப்படியே பின்புறமாக இருந்து புணர
வேண்டும்னு எழுதினாராம். அவர்கூட பின்நவீவத்துவாதிதானாம். பி.ந என்பது
மிகப்பெரிய விஷயம் நம்மவர்கள் இதை ஒரு கட்டுக்குள் வைத்து இதுதான் பி.ந என்று
கற்பிக்க முயல்கிறார்கள்னு தோணுது.

யோவ் இணையத்துல இப்படி ஒரு கில்மா மேட்டர் இருக்குதுன்னு சொல்லவே
இல்லியே. இதுமாதிரிலாம் எழுதறாங்களா அப்படின்னு அந்த நிகழ்ச்சிக்கு தலைமை
தாங்கின நீதிபதி ஆச்சர்யப்பட்டுபோனார்.

கார்த்திக் நீங்க உங்க கருத்தை சொல்லலாம். நம்ம நடுவர் அழைக்கிறார்

யோவ் அவர எழுப்புங்கப்பா!

தூக்கத்தை கெடுக்கறிங்களே என்றபடி எழுந்த அனானி அன்பர். எதுவா இருந்தாலும்
அய்யனாரின் கருத்து உடன்படுகிறேன்னு சொல்லிட்டு மறுபடி தூங்கிட்டார்.

அபிஅப்பா நீங்க சொல்லுங்க. இது உங்கள் ரவுண்டு.

எங்க என்னோட ரவுண்டு என அவரது கண்கள் வேறு எதையோ தேட.
நடுவர் கலவரமாகி,இப்ப உங்களோட முறைன்னு சொன்னேங்க அபிஅப்பா

அதான் என்னோட கருத்தை நான் சொல்லிட்டேனே. தமிழ்மணத்துல ஒரு
குடும்பமா இருக்கற மாதிரி பீல் பண்றேன் இதுல ஆபாச வார்த்தைகள்
வர்றது எனக்கு சுத்தமா பிடிக்கலங்க. இதான் என்னோட கருத்து.
நறுக்குன்னு முடிச்சிட்டார்.

அடுத்த ஒரு அனானி சொல்றார். எந்த விஷயத்துலயும் எல்லாருக்கும் ஒரு
தனித்தன்மை, தனிக்கருத்து இருக்கும் அது யாரோடயும் ஒத்துப்போகணும்னு
அவசியமில்ல. அதுமாதிரி அய்யனாருக்கு தோணினது அவர் எழுதறார் அது
அவரோட கருத்து. இவருக்கு (என்னைக்காட்டி) தோண்றதை எழுதறார்.
இதுவரைக்கும் நான் வலைப்பூ படிச்சதே இல்ல. படிக்கவும் எனக்கு நேரமில்ல.
படிக்கறதா ஐடியாவும் இல்லன்னு சொல்லி படார்னு வச்சிட்டார்.

அய்யனார் உங்க கருத்தை சொல்லுங்க உங்கமேல இப்படி ஒரு குற்றச்சாட்டு
சொல்றாங்களே என்ன சொல்றிங்க?

அதாவது பி.ந புரியாதவங்க இதுமாதிரிதாங்க பேசுவாங்க. அதனோட வெளி, பிரமிப்பு இதெல்லாம் முதல் முறை ஒரு சின்ன அதிர்ச்சியை ஏற்படுத்தும் அது தவிர்க்க முடியாத
ஒன்று. எதார்த்தத்தை எழுதும்போது அந்த மாதிரியான வார்த்தைகள் சகஜம்தான். இதோட
ஒரே கொள்கையே எதையும் மூடிமறைச்சி பூச்சு இல்லாம இருக்கணும் என்பதுதான். இதெல்லாம் சகஜம். இதைப்போய் ஆபாசம்னு கூச்சல் போடக்கூடாது. ஒருவன்
தனியாக இருக்கும்போது அவனுக்கு இருக்கும் உணர்ச்சிகள், எண்ணங்கள் எல்லாத்தையும்
எழுதலாம்னு உட்கார்ந்தால் பலது அச்சிலே ஏற்ற முடியாத விஷயங்களாக இருக்கும்.
அதே சமயம் அதுதான் உண்மை. இது எல்லாருக்கும் பொருந்தும் எதையும் வெளிக்
காட்டிக்கொள்ளாமல் போலியான வாழ்க்கைதான் நாம் வாழ்கிறோம் இதையெல்லாம்
எப்போது ஒரு மனிதன் உணர்கிறானோ அப்போது அவன் பி.ந வை கண்டு அச்சப்
படவோ, அசிங்கப்படவோ மாட்டான். இதுக்கு மேல சொல்றதுக்கு ஒண்ணுமில்லன்னு
பேச்சை முடிச்சிகிட்டார்.(நிறைய பேசினார் எனக்கு ஞாபகமில்லை).

எல்லோரும் ஆவலோடு நடுவரை பார்க்க அவர் இவனுங்களுக்கு நடுவரா இருந்த
நேரத்துல இன்னும் ரெண்டு பெக் உள்ள விட்டுருக்கலாம்.

நடுவரே தீர்ப்ப சொல்லுங்க.

இது ஒரு மாதிரி சிக்கலான விஷயம் இன்னும் பல கருத்துக்கள், தகவல்கள்
தேவைப்படுது. அதுவுமில்லாம இப்படி ஒரு கில்மா மேட்டர் தெரியாம நான்
இருந்துட்டேன் அதனால இதன் தொடர்ச்சி அடுத்தவாரம்னு சொல்லிட்டு எஸ்
ஆகிவிட்டார்.

கர்ர்ர்ர் நீயெல்லாம் ஒரு நடுவர். வந்துட்டாருய்யா கெளம்பி
போய்யோ போ இன்னிக்கே உங்க இம்சை தாங்க முடியல இதுல அடுத்தவாரமா
யோவ் இனிமே இந்த தமிழ் புலவர்கள கான்ப்ரெண்ஸ் ஹாலுக்குள்ள விடாதிங்கப்பா
விடிய விடிய வெட்டித்தனமா பேசி நம்ம டயத்தை வேஸ்ட் பண்றாங்க.

கிளம்பும்போது ஒரு அனானி அன்பர் கெஞ்சி கேட்டுக் கொண்டதிற்கிணங்க.
இது மட்டும் என்னோட வேண்டுகோள். அபிஅப்பாவைக்காட்டி. இந்தாளு
ரூமுக்குள்ள வரும்போதெல்லாம் இன்னிக்கு 30 பின்னூட்டம், சூப்பர் கும்மி
பாசகாரகுடும்பம் எனக்கு பயங்கர மரியாதை இருக்கு பதிவுலகத்துலன்னு
பீட்டர் விடறார். பாருங்க இவர தினமும் ரூமுக்கு தூக்கிட்டு போறதுக்கே ரெண்டு
பேர் வேணும்ங்க. மட்டையாகிடறார். இதையும் நெட்டுல போடுங்க இவர்
எப்படின்னு எல்லாருக்கும் தெரியட்டும்.

இதைக்கேட்ட உடனே திடீர்னு ஒரு உருவம் எழும்பி தம்பி அப்படிலாம்
போடக்கூடாதுன்னு சுறுசுறுப்பா எழுந்து போய் அறையில் படுத்து
தூங்கிவிட்டார்.

நண்பர்களே எதாவது தவறாக எழுதியிருந்தால், சின்னப்பையன் தெரியாம
எழுதிட்டான்னு விட்டுடுங்க.

நன்றீ.

Tuesday, June 05, 2007

அரூப வெளிகளில் சுற்றித்திரியும் மோகினிகள்

என் நினைவுக்கூடங்களை
ஒவ்வொன்றாக தனிமையின்
வெளிகளுக்கு பிரயத்தனப்பட்டு
அனுப்பியும் எஞ்சிய புலன்களில்
ஒன்று விழித்திருந்தது
என்னையறியாமல்.

யாரோ ஒருத்தியின் வருகைக்காக
அது விழித்திருக்கக் கூடும்.

என்றாவது வருபவள்தான்.

அவளை
முன்
பின்
பார்த்ததில்லை.
குரல் மட்டுமே அறிந்திருந்தேன்

எவளொருத்தியின் முகமாவது
ஒட்ட வைத்து உருவகப்படுத்த
முயன்றும்
இவையாவும் எனக்குப் பொருந்துவன
அல்ல என எக்காளமிட்டுச்
சிரிப்பவள் இந்த அரூபக்காரி.
எனவே அப்படியப்படியே
தொடர்ந்தது எங்கள் உறவு.

வெக்கையில் கண்ணீர் சிந்தும்
மயானச்சுவர்கள் போல
கசிந்துருகி நின்றாள்.

என்னையும் அரூபவெளிக்குள்
அழைத்துச் செல்லும்
முயற்சியாக அவளின் மெல்லிய
விசும்பல்கள்.

எஞ்சிய ஒரு புலனும் அடங்க
உடல் விட்டு எழுந்தேன்.

வழக்கமான சிறு தீண்டலில்
மாயமானாள்.

அவளின் அடுத்த வருகைக்குள்
பொருந்தச் செய்வதாக
ஒரு முகம் தேட வேண்டும்.

எழவெடுத்த கனவுல
எவ எவளோ வாரா இந்த
பாவனா மட்டும் வரவே
மாட்டேங்கிறாளேய்யா!

Sunday, June 03, 2007

கவுஜையாக பின்தொடரும் ஒருவன்

சாலையில் நடந்து செல்கிறேன்
சாலை கோணலல்ல
என் நடை கோணலாகியதா?
பின் தொடர்பவர் எவரிடமாவது
கேட்க நினைத்து
வேண்டாம்
உன் நடை நேர் என அவசரமாக
ஒரு பதில் அதுவும் அவனேதான்.
தொடர்கிறான்...

மனித கூட்டத்தின் நடுவே சென்று
என் அவனை தொலைக்க வேண்டும்
சுயத்தையும் இருப்பையும் நித்தம்
கேள்விக்குள்ளாக்குபவன்.

சிலசமயம் காணாமல் போவான்

அவனை மறந்த ஒரு காலைப்பொழுது
எதிர்பட்ட ஒருத்தியின்
ஏளனப்புன்னகையில்தான்
உரைத்தது...

கீழ் குனிந்து இழுத்து மூடினேன்.
நினைவிலிறுத்திக் கொண்டே இருக்கிறான்
நான் உன்னை விட்டு விலகுவதில்லை

சிரைக்க முனையும்போது
ப்ளேடு வாங்க மறந்த ஞாபகம்.

தலைவாரும்போது கண்ணாடியில்
தெரியும் காதுமடல் சோப்பு நுரை

காலணிக்குள் கால்நுழைக்கையில்
மனம் செய்தே நுழைக்கிறேன்
கதவு திறந்து வெளிக்கிடுகையில்
கண்சிமிட்டி நுழைகிறான்

ஏண்ணே எனக்கு மட்டும் இந்த மாதிரி???

டேய் இதெல்லாம் வயசுக்கோளாருடா
எல்லாருக்கும் வர்றதுதான் ஏதோ உனக்கும் மட்டும்
வந்துட்டா மாதிரி கவுஜ வடிக்கிறயே.

காக்கா ஒரு எடத்துல உக்காராது
மனசு ஒரு எடத்துல நிக்காது

போக போக சரியாகிடும்டா.

ம்
அப்படின்ற...