எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, March 30, 2009

நகரத்துப் பூக்கள்

காற்றடிக்கும்போதெல்லாம் என்னறையின்
வாசல்புற சாக்கடையில் பூக்கள் மிதந்து
வருகின்றன. பக்கத்து வீட்டின்
காம்பவுண்ட் சுவர்களுக்கப்பால் வளர்ந்த
பவழமல்லிகை கிளையொன்று
காற்றுடன் சல்லாபிக்கும் ஒவ்வொரு
தருணத்திலும் பூக்களை உதிர்க்கின்றது.
இத்தெருவிலே பல பூமரங்களுண்டு
அனைத்துமே சுவரைவிட்டு தள்ளியே
கிளைபரப்புகிறது. அனைத்துமே பூக்களை
உதிர்க்கின்றது பல வண்ணங்களில்
சாக்கடைப்பூக்கள். இந்த நகரத்திலே
பெண்கள் பூக்களை சூடுவதில்லை
சாக்கடைக்குதான் வாய்த்திருக்கிறது.

Monday, March 16, 2009

நாட்குறிப்பு போன்றவை 1

சென்ற வார இறுதியில் வாசுதேவநல்லூர் செல்வதற்காக அரசு விரைவுப்பேருந்தில்
ஏறி அமர்ந்திருந்தேன். மிகப்பெரும்பாலும் அது ஓட்டை ஒடிசலாக இருந்தாலும்
தொல்லைக்காட்சி பொட்டி இல்லையென்றால் அரசுப்பேருந்தில் மட்டுமே பயணம்
செய்யும் கெட்ட பழக்கம் எனக்கு உண்டு. இப்படி செல்லும்போதெல்லாம் எனக்கு
ஒரு சந்தேகம் வருவதுண்டு அது வீட்டிலிருந்து கிளம்பும்போதே இரண்டு தூக்க
மாத்திரையை வாயில் போட்டு சப்பிக்கொண்டே வருவார்களா என்பதுதான்.
இருக்கையில் அமர்ந்த மறுவினாடியில் குறட்டையை கெளப்புகிறார்கள். பலவருடங்களாக
ஒரு வியாதி என்னை பாடாய் படுத்துகிறது பேருந்து, விமானம், ரயில், இன்னபிற
எந்த வாகனங்களில் சென்றாலும் அது எத்தனை மணி நேரம் என்றாலும் இம்மி
அளவு தூக்கம் வராது. என்றாவது ஒருநாள் வந்தால் அது பேரதிசயம்.

எனக்கு பக்கத்து இருக்கை முன்பதிவு செய்தவர் தாம்பரத்தில்தான் ஏறுவார் என்றார்கள்
கோயம்பேட்டிலிருந்து தாம்பரத்துக்கு வர அந்த விரைவுப்பேருந்து எடுத்துக்கொண்டது
120 நிமிடங்கள். அதற்குள் குளிர்சாதனம் வேலை செய்யல, துண்டு குடுக்கல, சீட்டு
நாறுதுன்னு ஏகப்பட்ட புகார்கள். எனக்கு ஒரு புகாரும் இல்லை ஆனால் ஒரு வேண்டுதல்
இருந்தது. முன்பதிவு இருக்கையில் எதாவது ஒரு அகண்ட உருவமில்லாத ஆசாமி
மேலதிகமாக ஒரு சுமாரான பிகர் அமர்ந்தால் பயணம் சுகப்படுமே என்று வேடப்பாரிடம்
மனுப்போட்டபடி அமர்ந்திருந்தென். வேடப்பாருக்கு முந்தின வேண்டுதல்களே மூன்று
குவார்ட்டர்கள் பாக்கி உள்ளது. இதுவும் சேர்ந்ததென்றால் ஒரு ஃபுல்லாக வைத்து
விடலாம் என்று எண்ணத்தில் இருந்தபோது ஒரு சிவப்பான ஆள் வந்து உட்கார்ந்தார்.
குமாஸ்தா முகம். மண்ண போட்டுட்டியே நீயெல்லாம் ஒரு குலதெய்வமா என்று
மனதுக்குள் சபித்துக்கொண்டேன்.

வடகலையா தென்கலையா என்று பிரித்தரிவதில் நான் இன்னும் தேர்ச்சி பெறவில்லை.
பக்கத்தில் உட்கார்ந்த நபர் மேலே கைபட்டதும் அசூயையாக உணர்ந்தாரா என்னவோ
ஏளனமாக என்னைப்பார்த்தார். திரும்பி ஒருக்களித்துப்படுத்துக்கொண்டு குறட்டை விட
ஆரம்பித்தார். ஒருகட்டத்திற்குமேல் ஒன்று இரண்டாகி இரண்டு இருபதாகிப்போனது.
எனக்குப்பொறுக்கவில்லை. என் தொண்டையிலிருந்து அதிகபட்ச ஒலியினால் குறட்டை
விட ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட அது ஊளையினைப்போல இருந்திருக்கும்போல
அடித்து பிடித்து எழுந்துவிட்டனர் நான் ஒன்றுமே அறியாதவன் போல கண்ணை மூடி
அமர்ந்திருந்தேன்.

போகவர 24 மணி நேரப்பயணத்தில் நான் பேசிய வார்த்தைகள் என்னவென்று
யோசித்துப்பார்த்தேன். செல்பேசியில் பேசிய ஓரிருவார்த்தைகள் தவிர ஒருவார்த்தைகூட
பேசவில்லை.


கடந்த இரண்டு நாள் மழையில் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது
என்றார்கள். குற்றாலத்திற்கு நான் சென்றதே இல்லை போய்ப்பார்த்தேன். விக்ரமாதித்யன்
கவிதை நினைவுக்கு வந்தது. ஆசை தீர குளித்துமுடித்து வெளியேவந்தேன். சாலையில்
ஒருவர் டிவிஎஸ் அம்பதில் பதனி விற்றுக்கொண்டிருந்தார். குடிக்கலாம் என்று அருகில்
சென்றால் கள் இருக்குது குடிச்சி பாக்கறிங்களானே என்றார். தெய்வமே குடுங்க என்றேன்.
குடுத்தார் சர்க்கரைக் கரைசல் அது. எதுவும் சொல்லாமல் காசைக்கொடுத்துவிட்டு
"அண்ணே கள்ளுக்காரன காலைல எழுப்பி கூட்டிகிட்டே போய் கள்ளு குடிச்ச ஆளுங்க
நாங்க" என்றேன். காசுகுடுத்தாச்சில்ல எடத்த காலிபண்ணுடே என்கிறார்.


மனிதர்களுடன் சேர்ந்து குரங்குகளும் சிக்கன் சாப்பிட ஆரம்பித்துவிட்டன. அதுவும்
எலும்பை மரத்தின் மேலே எடுத்துபோய் கடித்து நம் தலையிலேயே குறிபார்த்து
எறியவும் தெரிகிறது அதற்கு. முத்துலிங்கத்தின் கட்டுரை ஒன்றுல் மேஜரது வளர்ப்பு
குரங்கு குறிப்பிட்ட நேரத்தில் பைப்பை திறந்து குளித்துவிட்டுப்போகும் என்று படித்த
ஞாபகம். வாசுதேவநல்லூர் அடுத்த தலையணை என்ற ஓடைக்கு நண்பர்களுடன்
சென்று அருவியில் குளித்துவிட்டு அங்கேயே சமையல் செய்து காட்டின் நடுவில்
உணவருந்தினோம். வழியில் சற்றுமுன்னர் யானை வந்துவிட்டுப்போன தடயங்கள்
இருந்தன. சூடான யானைச்சாணத்தை ஒருவர் பார்சல் கட்டி எடுத்துப்போனார்.
வாசுதேவநல்லூரில் பார்க்கும் வயல்களில் எல்லாம் மயில்களாக உள்ளது. ஒன்று
கூட தோகைவிரித்து ஆடவில்லை.

காதல் வைபோகமே பாடல் பார்த்தேன். நமீதா இல்லாவிட்டால் சரக்குகுமார், சுந்தர் சி
போன்றவர்கள் சினிமா அனாதைகள் ஆகிவிடுவார்கள் போல.

கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் கிட்டத்தட்ட வாசித்து முடித்தாயிற்று.
வாசித்து நிமிர்ந்து வலைப்பூ படிக்க ஆரம்பித்தால் ஸ்க்ரோல் பண்ணமட்டுமே முடிகிறது.
தலைப்புகூட மனதில் தங்குவதில்லை.

பின்குறிப்பு: தம்பினு இன்னொருத்தர் எழுதறாங்கண்ணே, என்ன ஏதுன்னு விசாரிங்க,
பகுமானமா இருந்துக்கப்பு, உம்பேர்ல வேற யாரோ பாத்தனே தம்பி, தம்பி... எங்கய்யா
ஆளையே காணும் கேப்புல உன்பேர்ல இன்னொருத்தர பாத்தனேப்பா நிஜார கெட்டியா
புடிச்சக்கப்பு என்று நண்பர்கள் சொன்னார்கள்.

எனக்கே நீண்ட நாளாக இதை மாற்றுவதில் எண்ணம் அதற்கான காரணங்கள் மூன்று.
என்னப்பா தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரன் மாதிரி பேர் வெச்சுகிட்டியா...?
மாதவன்னு நினைப்பா...?
முத்துன மாங்கா மாதிரி இருந்துகிட்டு தம்பினு பேர் வெச்சிருக்கியே என்னப்பா நியாயம்?

புதுசா வந்திருக்கும்(?) தம்பி என்ற நண்பருக்காகவும் ரொம்ப நாளா மனசுல இருக்கற என்
எண்ணத்துக்காகவும் நானே வெச்சுகிட்ட இந்த பேர மாத்தி என் பேரையே வெச்சுகிட
போறேன்.

சுயகுறிப்பு, சோறுபொங்கி சாப்பிட்டது, இன்னபிற குறிப்புகள் எழுதறத விடணும்னு
நினைச்சாலும் முடியல. எழுறதே இல்லையே ஏம்பா கதிரு என்னு கேட்ட அந்த
இரண்டு நல்ல(?) உள்ளங்களுக்கும் இந்தப்பதிவு சமர்ப்பணம்.