எல்லையற்ற அன்பு கொள்வோம்

Sunday, May 31, 2009

குயில்


பறவைகள் பல கண்டிருந்தும் குயிலைக்
கண்டதேயில்லை என் கண்கள்
தினசரி நான்கு மணிக்கு எதிர்வீட்டுச்
சிறுமியொருத்தி குயில் போலக்கூவுகிறாள்
குயிலும் ஆமோதிப்பதுபோல கூவுகிறது
மறுதினம் கூவுவதெப்படி என்று எனக்கு
அச்சிறுமி பயிற்சியளித்தாள் பிறகு
தினசரி நாங்களிருவரும் குயிலிடம்
கூவிக்கொண்டிருந்தோம் ஒருநாள்
உன் அக்கா பெயரென்ன என்று
கேட்டேன் முறைத்துப் பார்த்தவள்
வயிற்றில் குத்திவிட்டு சென்றுவிட்டாள்
அதற்கடுத்த நாட்களில் குயில் தனியாக
கூவிக்கொண்டிருந்தது.

Thursday, May 28, 2009

நினைவுகளின் நீள்கரங்கள்


உனது நினைவுகளின் நீள்கரங்கள்
என்னை சதா துரத்தியபடி வருகின்றன
உனது நேசத்தின் எல்லைகள் தாண்டிய
இடங்களைத் தேடி ஒளிகிறேன்
கண்ணாடி தம்ளர்கள் வழிந்து முடிந்த
மறுநொடி துரோகத்தின் கதவுகள்
அடைபடுகின்றன வழக்கம்போல்
பொங்கும் காமத்திற்கப்பால்
காதலென்பது பொய்யென
உனக்கு எப்போது புரியும்...
உன்னதமான ஒன்று இல்லவே இல்லை
முடிவில்லாத உன் அன்புகளை
தயவுசெய்து நிறுத்திக்கொள் தோழி

Tuesday, May 12, 2009

மூன்று படங்கள்

சென்னையின் அதிகபட்ச வெயில் நாட்கள் இவை. வெளியில் எங்கும் செல்லாமல்
வீட்டுக்குள் அடைந்துகிடக்க வேண்டிய நிலை. மின் விசிறிக்கு கீழே உட்கார்ந்திருப்பது
கூட அடுப்படியில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு. அதிகபட்ச வெயில் அடிக்கும்
அமீரகத்தில் கூட வெப்பத்தை உணர்ந்ததில்லை. எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இந்த
வெயில் ரொம்ப பிடிக்கலாம். ஆனால் நமக்கு அப்படியில்லை. சென்னையில்
வெப்பமென்றால் ஊரில் தினசரி நான்கு மணி நேரம் மின்வெட்டு. அதிகாலை மற்றும்
நன்பகலில் இரண்டு மணி நேரங்கள். அதிகாலையில் மின்சாரம் இல்லாமல் உறக்கம்
கலைவதென்பது முன் ஜென்ம சாபம். சில நாட்களில் பழகிவிட்டது. அப்போது
பார்த்த மூன்று படங்கள். மூன்றுமே கவர்ந்திருந்தன.

Brokeback Mountain (ப்ரோக்பேக் மவுண்டைன்)



படத்தின் கரு இரு இளைஞர்கள் காதலிக்கிறார்கள். தெளிவாக சொல்லவேண்டுமென்றால்
ஓரினச்சேர்க்கையாளர்கள். படத்தின் கதைச்சுருக்கத்தை படித்தபிறகு பார்க்கவேண்டுமா
என்று யோசித்து பிறகு பார்த்தேன். காதல் என்பது பெண் மீது மட்டுமே வர வேண்டும்
என்பதல்ல அது ஆண் மீது கூட வரலாம். அன்பு ஒன்றே அங்கே பிரதானமாக இருக்க
வேண்டும். இந்தப்படத்தில் இருவர் கொள்ளும் அன்புதான் அவர்களை கடைசிவரை
இணைக்கிறது.

கதை நிகழும் வருடம் 1963 இரு இளைஞர்கள் ஆடுமேய்க்கும் வேலைக்காக வ்யோமிங்
மலைப்பகுதிக்கு வருகிறார்கள். கூட்டம் கூட்டமாக ஆடுகளை மேய்ச்சலுக்கு இட்டுச்
செல்லும் வேலை. அங்கேயே தங்குவது. சாப்பிடத்தேவையான பொருட்களை
அவ்வப்போது எழுதி வாங்கிக்கொள்ளலாம். எனிஸ் எப்போதாவது பேசும் வகை.
ஜாக் எப்பொழுதும் பேசிக்கொண்டே இருக்கும் வகை. தனிமை சூழ்ந்த இயற்கை
அவர்களை ஒன்றிணைக்கிறது. இருவருமே ஏழ்மைப் பிண்ணனியில் இருந்து வந்தவர்கள்.
அதிகபட்ச குளிர் நாள் ஒன்றில் இருவரும் ஒன்றுகலக்கிறார்கள். விடியலில் அவரவர்
முகமும் குற்ற உணர்ச்சியால் நிரம்பியிருக்கும். பின்வரும் நாட்களில் தங்கள்
காதலிப்பதை உணர்கிறார்கள்.

இருவரும் காதலர்களைப்போல் இருப்பதை பார்க்கும் முதலாளி அடுத்தபருவத்தில்
இருவரையும் வேலைக்கு வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். அவரவர் சொந்த
ஊருக்கு செல்கிறார்கள். காலப்போக்கில் இருவருக்கும் திருமணம் குழந்தை என்று
ஆகிறது. அதேசமயம் கூண்டுக்குள் அடைபட்ட வாழ்க்கை இருவருக்குமே கசக்கிறது.
அவர்கள் இருவரும் சுதந்திரமாக, ஆடையில்லாமல், மலையின் புல்வெளிகளில்
இரண்டு ஆண்டுகள் வாழ்ந்த ஞாபகம் வர இருவரும் தொடர்பு கொள்கிறார்கள்.
நான்கைந்து வருடம் கழித்து மீண்டும் சந்தித்துக்கொள்ளும் அவர்களிடம் முன்பைவிட
காதல் பெருகுகிறது. எனிஸ் மனைவி இதை கவனிக்கிறாள். அப்போதுதான் அவளுக்கு
தன் கணவன் பின்புறம் புணர்வதை அதிகம் விரும்புவது ஏன் என்று புரிகிறது.

இருவரும் சேர்ந்து சுற்றுவது தொடர்வதால் எனிஸ் ன் மனைவி விவாகரத்து
கோருகிறாள். ஆழ்மனதில் தான் ஒரு ஓரினச்சேர்க்கை விருப்பமுடையவன் என்பதில்
வருத்தப்படுபவனாக எனிஸ் உணர்ந்தாலும் அன்பின் காரணமாக அதை தொடர்கிறான்.
ஆனால் ஜாக் தான் ஓரினச்சேர்க்கையில் விருப்பமுடையவன் என்பதை நம்புகிறான்.
ஒருமுறை எனிஸ் உடன் கருத்துவேறுபாடு ஏற்படும்போது ஓரினச்சேர்க்கை விடுதிக்கு
சென்று வேறு ஒருவனுடன் உடலுறவு கொள்கிறான்.

வேறுபாடு களைந்து மீண்டும் ஒன்று சேர்கிறார்கள். சுற்றுகிறார்கள். மறுபடி பிரிகிறார்கள்
பின்னர் விபத்து ஒன்றில் ஜாக் இறக்கிறான். தாமதமாக அறியும் எனிஸ் மிகவும்
உடைந்துபோகிறான். ஜாக்கின் பெற்றோரை சந்திக்க செல்லும்போது தாம் பனிமலையில்
சண்டைபோட்டுக்கொண்ட போது ஜாக்கின் சட்டையில் ரத்தகறை எற்பட்ட அந்த
சட்டையை பத்திரமாக வைத்திருப்பதைக் காண்கிறான். அந்த சண்டைதான் அவர்களை
ஒன்றிணைத்தது. படம் இப்படி முடிகிறது. இன்றைய நாகரீக உலகில் ஓரிணச்சேர்க்கை
அங்கீகரிப்பட்டதாக இருந்தாலும் படம் நடக்கும் காலத்தின் அது தவறான செயலாக
சமூகம் பார்த்தது. இருவருக்கு அது குறித்த குற்றவுணர்ச்சி படம் நெடுக இருக்கும்.
சிறப்பான ஒளிப்பதி மற்றும் நடிப்பின் மூலம் இப்படத்தை சிறப்பாக தந்திருக்கிறார்
இயக்குடன் ஆங் லீ. தைவானை பிறப்பிடமாக கொண்டாலும் அமெரிக்க சூழ்நிலையை
இயல்பாக படம்பிடித்த இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மிகப்பெரும்
சர்ச்சைகளை கிளப்பிய இந்த திரைப்படம் மூன்று ஆஸ்கார் விருதுகளை பெற்றது
குறிப்பிடத்தக்கது.

பின்குறிப்பு: தனிமையான சூழ்நிலையில் ஒன்றிணையும் இவ்வகை கதையை கல்லூரிக்காலத்தில் நான் கேட்டிருக்கிறேன். தோட்டவேலை, ஒட்டகம் மேய்க்க என்று
இந்தியாவில் இருந்து 60களில் வேலைக்கு சவுதிக்கு சென்ற ஒருவர் சொன்ன கதையது.
நான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர்தான் அவர். தான் இவ்விதம் செய்தது
சரி, தவறு என்று வாதம் செய்யாமல் அன்றைய சூழ்நிலையில் உடலுறவு கொண்டாக
வேண்டிய சூழ்நிலையில் செய்ததாக சொன்னார் அவர். மூன்று வருடங்களுக்கு
ஒருமுறை மட்டுமே மற்ற மனித முகங்களை பார்க்க வாய்ப்பிருக்கும் வேலை
அவருக்கு மற்ற நாட்களில் நகரத்திலிருந்து பலநூறு மைல்கள் தள்ளியிருக்கும்
தோட்டங்களில் வேலை செய்தவர் அவர். வருடத்திற்கு ஒரு விடுமுறை நாள்தான்.
கடிதம் ஒன்றே போக்குவரத்து அது வந்து சேரவே பல மாதங்களாகுமாம். இத்தகைய
சூழ்நிலையில் உடனிருக்கு எவருடனாவது ஓரல் செக்ஸ், மற்றும் ஓரினச்சேர்க்கை
வைத்துக்கொள்வது சகஜமான ஒன்று என்று சொன்னார். ஆனால் இவை எல்லாம்
ரகசியமாக வைத்திருப்பார்கள். எனக்கு அவர் இதைச் சொன்னபோது அவருக்கு
வயது 65 இருக்கலாம். நாற்பது வருடகாலங்கள் பாலைவனத்தில் கழித்திருக்கிறார்.
நாற்பது வருடங்களில் ஐந்து முறை மட்டுமே இந்தியா வந்து சென்றிருந்தார்.


Diving Bell and the butterfly



யாராவது கண்களால் ஒரு நாவலை எழுதி முடித்ததாக சொன்னால் நம்ப முடியுமா உங்களால்? ஆனால் நடந்திருக்கிறது. இந்தப்படம் ஒரு உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக
கொண்ட படம். ஜீன் டொமினிக் பாப் ஒரு பேசன் பத்திரிக்கை எடிட்டர். விவாகரத்தானவர்
வார இறுதிகளில் குழந்தைகளை சந்திக்கும் பாசமிகு தந்தை. திடிரென்று பாரலைஸ் என்று
சொல்லக்கூடிய உடலுறுப்புகள் செயலிழந்து போகும் நோயில் விழுகிறார். மூன்று வாரங்கள் கோமா நிலையில் இருக்கும் அவர் ஒரு நாள் மீள்கிறார். அது அவர் ஒப்புக்கொண்ட
நாவல் ஒன்றை எழுதுவதற்காக மட்டுமே. இருப்பினும் அவருக்கு ஒரு கண்ணும்
இரு காதுகள் மட்டுமே வேலை செய்கின்றன. மற்றபடி அவரின் உடலுறுப்புகள் ஒன்றுகூட
வேலை செய்யாது.



அவருடன் பேச வேண்டுமென்றால் அவரின் இடது கண்ணிற்கு நேராக சென்று குனிந்து
பேச வேண்டும் அவரால் திரும்ப பதிலளிக்க முடியாது. ஆனால் எழுத்துக்களை வரிசையாக
சொன்னால் குறிப்பிட்ட எழுத்து வரும்போது ஒருமுறை இடது கண்ணை திறந்து மூடுவார்.
இப்படி வரிசையாக சொல்லப்பட்ட எழுத்துக்களை ஒன்று கூட்டினால் உங்களுக்கான பதில்
கிடைக்கும். ஒன்று மற்றும் இரண்டு கண் சிமிட்டல்கள் மட்டுமே உங்களால் அவரிடமிருந்து
பெறக்கூடிய பதில். ஒருமுறை கண் சிமிட்டினால் ஆம் என்று அர்த்தம். இருமுறை கண்
சிமிட்டினால் இல்லை என்று அர்த்தம். இந்த முறையினால் அவரின் தெரபி மருத்துவரின்
உதவியோடு தான் எழுத ஒப்புக்கொண்ட நாவலை எழுதி முடிக்கிறார். நாவல் வெளியாகி
பெரும் விற்பனையாகிறது. ஆனால் நாவல் வெளிவரும் பத்து நாட்களுக்கு முன்பே
மரணமடைகிறார். விந்தையான இந்தக்கதையை படிக்கும்/பார்க்கும் அனைவருக்குமே
உணர்ச்சிமயமாக இருக்கும். இது நிஜ சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான
திரைப்படம்.

ப்ரெஞ்ச் மொழியில் வெளியான இத்திரைப்படம் நான்கு ஆஸ்கர் விருதுகளுக்கு
பரிந்துரைப்பட்டிருந்தது. நிஜ சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திரைப்படம்
எடுக்கும் இப்படத்தின் இயக்குனர் ஜூலியன் ஷெனபில் இன் இதற்கு முந்தைய இரண்டு
படங்களும் சுயசரிதைத் தன்மை கொண்டது இப்படமும் அதே. இப்படத்தின் திரைக்கதையை
எழுதிய ரொனால்ட் ஹார்வர்டிரின் குறிப்பிடத்தக்க திரைப்படம் தி பியானிஸ்ட்.

இதே போன்ற ஸ்பானிய மொழிப்படமான சீ இன்சைட் The Sea Inside இதே போன்றதொரு
சுயசரிதைத் தன்மை கொண்டதுதான். தனது மரணத்திற்காக போராடும் ஒருவரின் கதை
அதிலும் கதையின் நாயகன் ஆரம்பம் முதல் இறுதி வரை படுக்கையிலே இருப்பார்.
இதிலும் அதே. படத்தின் இறுதியில் இருவருமே இறந்து போவார்கள். நிஜ வாழ்க்கையில்
எவருமே ஒருநாள் இறந்து போவதைப் போல.

மூன்றாவது படமாக The legend of 1900 படம் பற்றி பிறகு எழுதலாம். இதுவே நீண்டு
விட்டது.

ஓட்டுரிமை உள்ள அனைவரும் ஓட்டு போடுங்கள்.

Sunday, May 10, 2009

புறாக்களை பார்ப்பவனின் கதை

மூன்று மாதங்களுக்கு முன்பு தாய்மாமாவின் வீட்டிற்கு சென்ற போது மாமா தனது
மகன் சரியாக படிப்பதில்லை என்று குறைபட்டுக்கொண்டார். தன்னைப்போலவே
டீக்கடையில் டீ ஆத்துகிற வேலை செய்யாமல் கொஞ்சமாவது படிக்க வைக்கலாம்னு
நினைச்சா அத புரிஞ்சிக்காம எந்த நேரமும் எதையாச்சும் வாங்கிட்டு வந்து வளக்கறேன்னு
சொல்லிகிட்டே இருக்கான். போனமாசம் சேத்துவெச்சிருந்த காசையெல்லாம் எடுத்துகிட்டு
மீன் தொட்டி, கலர் மீன், மீனுக்கு தீனின்னு முன்னூறு ரூபாயை செலவு பண்ணிட்டு
வந்தான். இந்தமாசம் நாலு புறாவை வாங்கிட்டு வந்து எந்த நேரமும் அதையே
பாத்துகிட்டு இருக்கான். இன்னிக்கு எங்கயிருந்தோ மூணு பூனைய தூக்கிட்டு வந்துட்டான்.
எல்லாமே ரவ ரவ பூனை. அவனுக்கு எது குடுத்தாலும் முழுசா தான் வளக்கறதுக்கு
செலவு செஞ்சிடறான். பிராணிகள் மேல இருக்கற அக்கறை கொஞ்சமாச்சும் படிக்கறதுல
இருந்தா உருப்படலாம். இந்த வருசம் பத்தாவது தேறுவானான்னு சந்தேகமா இருக்கு.
இப்படி குறைபட்டுக்கொண்டார்.

மாமா பையனான முரளிக்கு படிப்புமேல எந்தவிதமான அபிப்ராயமும் இல்லை. அது
தனக்கு வரவில்லையே என எந்த கவலையும் இருப்பதாக கூட தெரியவில்லை. எனக்கு
அவனை சிறுவயதுமுதலே தெரியும். அறிவுரை சொன்னாலும் புரிந்துகொள்ளும் பக்குவம்
கிடையாது. அமைதியாக எதையும் கேட்டுக்கொள்வான். அடுத்தநொடி சொல்வதற்கு
எதிராக செய்துகொண்டிருப்பான். கண்டித்தால் கூட சிரித்துவிட்டு நாம் மறந்து சிறிது
நேரம் கழித்துப்பார்த்தால் புறாவையே பார்த்துக்கொண்டிருப்பான்.

மாமா பூனைகளை இரவோடு இரவாக எங்கேயோ கொண்டுபோய் விட்டார். மீன்
தொட்டியை யாருக்கோ கொடுத்துவிட்டார். அதிகாலையில் கிளம்பிய என்னிடம் நான்கு
புறாக்களை பெட்டியில் அடைத்துக் கொடுத்துவிட்டார். கலங்கிய கண்களுடன் என்னையே
பார்த்துக்கொண்டிருந்தான் முரளி. அந்த புறாக்களை எடுத்துப்போக எனக்கு துளியும்
விருப்பமில்லை. எனினும் எதிர்வரும் முழுத்தேர்வில் தேர்ச்சியாகவேண்டுமெனில்
கொஞ்சமாவது படிக்கவேண்டும் என்ற காரணத்தால் நான் எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்.

புறாக்களை எடுத்துவந்துவிட்டே ஒழிய அதை எங்கே வைப்பது என்று தெரியவில்லை.
நல்ல கூண்டு ஒன்றை செய்யவேண்டும். இதற்கே எனக்கு இரண்டுநாள் ஆனது. புறாவுக்கு
என்ன தீனி போனவேண்டும் என்பதை முரளி அழுதுகொண்டே சொன்னது நினைவுக்கு
வந்தது. கம்பு, கேழ்வரகு, ஒவ்வொரு கிலோ அதுகூட நூறுகிராம் பொட்டுக்கடலை
சேத்து கலந்து ஒரு டப்பாவுல வெச்சுக்கோங்க மாமா. காலைல ரெண்டு கை, மாலைல
ரெண்டு கை வாசல்ல தூவுனிங்கன்னா ஒவ்வொன்னா பொறுக்கி தின்னும். சிமெண்ட்
அள்ளுற பாண்டு வீட்டுல இருக்கா? இருந்ததுன்னா அதுல நிறைய தண்ணி ஊத்தி
வாசல்ல வெச்சிருங்க. அதுல தண்ணி குடிச்சிக்கும். வெயில் வேற அதிகமா அடிக்குதுல்ல
மதியத்துல அதுல குளிச்சிக்கும். மார்கெட் பக்கம் போனா காய்கறி அடைச்சு வெச்சிருக்க
மரப்பெட்டி கிடைக்கும் அதை வாங்கி நம்ம வீட்டுக்கு முன்னாடி மல்லிகைப் பந்தல்
இருக்குல்ல அதுமேல வெச்சிடுங்க. அப்பப்போ துடைப்ப குச்சிய ஒடச்சி தீனி போடற
எடத்துல போட்டிங்கன்னா அது கூடுமாதிரி ஒண்ணு ரெடி பண்ணிக்கும். முட்ட
வெச்சிதுன்னா பதினஞ்சி நாள்ல பொறிஞ்சிடும். மூச்சு விடாமல் சொல்லி முடித்தான்
முடிக்கும்போது அவனது அழுகை காணாமல் போயிருந்தது.

கிளம்பும்போது அருகில் வந்தான். "மாமா அடுத்த மாசம் நான் லீவ் விட்ருவாங்க
அங்க வந்துருவேன். மஞ்ச தடவிடாதிங்க என்று கேட்டுக்கொண்டான்". எவ்ளோ
அழகா இருக்கு இத போய் யாராச்சும் அடிச்சு சாப்பிடுவாங்களா... ஒழுங்கா படி
என்று சொல்லிக் கிளம்பினேன். பத்து மாத்திரை கொண்ட அட்டை ஒன்றை நீட்டி
"இது நியூரோபின் மாத்திரை இத தண்ணில கலந்து வெச்சிட்டிங்கன்னா ஒரு
நோயும் வராது" என்று கையில் வைத்து அழுத்தினான்.

பாட்டி வீட்டுக்கு விடுமுறையில் செல்லும்போதெல்லாம் வீட்டின் பின்புறம் உள்ள
கோயிலில் புறாக்களை பார்த்துக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. அங்கிருந்தவை
எல்லாம் பழுப்பு நிற புறாக்கள். இவை அழகான வெள்ளைப் புறாக்கள்.

சிறுவயதில் பயணம் செய்யும்போதெல்லாம் ஒரு எலுமிச்சை பழத்தை வாங்கித்தருவார் அப்பா. வாந்தி வராமல் இருக்க அது உதவுதாக சொல்வார். மேலதிகமாக இரு பாலிதீன்
பைகளையும் என் கையில் கொடுப்பார் அதை உபயோகிக்காமல் கர்மசிரத்தையாக யார்
மடியிலாவது வாந்தி எடுத்து வைப்பேன். ஆனால் விவரம் தெரிந்தபிறகு பேருந்து
பயணங்களில் தலைசுற்றல், வாந்தி போன்றவை நின்று விட்டது. இன்னமும்
முரளிக்கு வாந்தி வியாதி நிற்கவில்லை போல. தேர்வு முடிந்த மறுநாள் தனியனாக
பேருந்தில் ஏறி எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டான். வருவதற்கு முன்னிரவும் காலையும்
ஆகாரம் எடுத்துக்கொள்ளாமல் பேருந்தில் ஏறி இருக்கிறான். அதனால் வாந்தி தலை
சுற்றல் இல்லை.

வந்த முதல் வேலையாக புறாக்களை பார்க்க ஆரம்பித்தவன் நாளின் தூங்கும் நேரம்
போக மற்ற நேரங்களில் திண்ணையில் அமர்ந்துகொண்டு மல்லிகைக்கொடி பந்தலின்
மேல் உள்ள மரப்பெட்டியையே பார்த்துக்கொண்டிருப்பான். வாழைமரத்தில் சிறிது
நேரம், மாமரத்தில் சிறிது நேரம் தரையில் தானியங்கள் பொறுக்கியபடி சிறிது நேரம்
என புறாக்கள் இருந்தது.

ஒருமுறை திண்ணையில் முரளியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். வழக்கம்போல
புறாக்களை பார்த்துக்கொண்டிருந்தான். அவை கூறையின் மத்தில் ஏறி அங்கேயும்
இங்கேயும் நடந்துகொண்டிருந்தன.

மாமா அங்க பாருங்க கால்ல முடி இருக்கறது பெண் புறா கொஞ்சம் தள்ளி இருக்குதே
அது ஆண்புறா அது ரெண்டும் ஒரு ஜோடி. இந்தப்பக்கம் கூறையில இருக்கறது ஒரு
ஜோடி. இப்ப பாருங்க அந்த பெண்புறாவ அந்த ஆண்புறா மெறிக்கும் பாருங்க.

"மெறிக்கறதுனா என்னடா?"

"ஏறி அழுத்தும்பாருங்க"

"ஏறி அழுத்தறதுனா... என்னடா?"

"அதான் மாமா... அது... அப்பதான் புறா முட்ட போடும்"

"ஓஹ் அதுவா... சரி எத்தன நாள்ல முட்ட போடும்?

அது சரியா தெரியல ஆனா கொஞ்ச நாள்ல முட்ட போடும். ரெண்டே ரெண்டு முட்டதான்
போடும். அது முட்ட போடறதுக்கு ஒருவாரம் முன்னாடி கூடுகட்ட ஆரம்பிச்சிடும்.
அப்போ ஆண்புறா என்ன செய்யும்னா அங்க இங்க அலஞ்சு சின்ன சின்ன குச்சிகள
தூக்கிட்டு வந்து போடும். அத வெச்சு பெண் புறா சின்ன மேடை மாதிரி செய்யும்.
அதுலதான் முட்டய போடும். அப்போ யாரும் கூண்டுப்பக்கம் போவகூடாது. அப்படி
போய் முட்டய பாத்துட்டிங்கன்னா அவ்ளோதான் அது முட்டய அதுவே கீழ தள்ளி
ஒடச்சிடும்.

"ஏண்டா அப்டி பண்ணுது... ?

அது அப்டிதான் மாமா...

ஒரு தடவ அப்டிதான் என் ப்ரெண்டு ஒருத்தன் ஆசையா முட்டைய எடுத்து பாத்தானா
அந்த புறா முட்டைய கீழ தள்ளி ஒடச்சிடுச்சி.

"ஏண்டா அப்டி?

அது அப்டிதான்னு சொல்றேன்ல. மனுசங்க கை பட்டா அது கூழ் முட்டையாகிடும்னு
நினைக்கிறேன்.

"புறான்னா உனக்கு அவ்ளோ இஷ்டமா?

"ஆமாம்"

"இதுல காட்டற அக்கறைய படிப்புல காமிச்சா நீ பாஸ் ஆகிடலாம் தெரியுமா"

"அதான் எனக்கு வரமாட்டேங்குதே மாமா... என்ன செய்ய?"

"நீ மட்டும் பத்தாவது அப்புறம் பன்னிரண்டாவது பாஸ் பண்ணிட்டேன்னு வையி...
பறவைகள பத்தி ஆராய்ச்சி செய்றதுக்குன்னே ஒரு படிப்பு இருக்கு அதுக்கு பேர்
ஆர்னித்தாலஜி அத படிக்கலாம்". உலகம் முழுக்க இருக்கற பறவைகள பாத்துட்டே
இருக்கலாம். அதபத்தியும் படிக்கலாம் என்ன சொல்ற?

"நெஜமாவா மாமா"

"ம்ம்... படிப்பியா"?

பாக்கலாம் என்றபடி மறுபடி புறாக்களை பார்க்க ஆரம்பித்துவிட்டான். படிப்பு சம்பந்தமான
விஷயங்களை அவனிடம் பேச ஆரம்பித்தால் அவமானத்தில் குறுகி நிற்கும் மனிதனைப்
போல முகம் மாறிவிடுகிறது. இதனாலேயே அவனிடத்தில் படிப்பைப் பற்றி மட்டும்
பேசுவதில்லை.

இப்படித்தான் அவனிடம் பேச அமர்ந்தால் புறாவில் ஆரம்பித்து அங்கேயே முடிப்பான்.
கொஞ்ச நேரத்தில நாமும் அப்படியே மாறிவிடவும் வாய்ப்பிருக்கிறது.

ஒரு சுபயோக சுபநாளில் ஆண்புறா சிறு சிறு குச்சிகளை சேகரிக்க ஆரம்பித்தது.
பரபரப்பாக மாறினான் முரளி. தென்னந்துடைப்பத்தில் உள்ள குச்சிகளை ஒவ்வொன்றாக
உருவி புறா இருக்குமிடங்களில் எல்லாம் போட்டான். அதற்காக அத்தையிடமிருந்து
திட்டு வாங்கினான்.

"தொடப்பக்குச்சிய ஒடச்சி போட்ட அப்புறம் அத்தாலயே அடி வாங்குவ நீ..."

வேப்பமரத்தின் காய்ந்த கொப்புகளை உடைத்து அந்தச்சிறிய குச்சிகளை சேகரித்து
வந்து அதற்கு மாற்றாக தூவினான. பிறகு திண்ணையில் வந்து அமர்ந்தான்.

"மாமா இப்ப பாருங்க குச்சி பொறுக்கும்..."

அவன் சொன்னது போலவே புறா தயக்கமாக நடந்து வந்து அலகில் கொத்தியவாறு
பறந்து சென்று கூண்டுக்குள் வைத்தது. நாள் முழுக்க சேகரித்து மறுநாள் பார்த்தபோது
அங்கே தட்டுபோன்ற அமைப்பில் கூடு உருவாகியிருந்தது.

அடைகாக்குற நேரத்துல பெண்புறா வெளியவே போவாது மாமா... இப்போ மத்தியானம்
உள்ள போச்சுன்னா அவ்ளோதான். மறுநாள் மதியானமாத்தான் வெளிய வரும் அதுவும்
அதிகம்போனா ஒருமணிநேரம்தான். அந்த ஒருமணி நேரந்தான் ஆண் புறா அடைகாக்கும்.
மத்தபடி எல்லாமே பெண்புறாதான் செய்யனும். அது ரொம்ப பாவம் மாமா.

புறாக்களைப் பற்றியே பேசுவது எனக்கே எரிச்சலாகத்தான் இருந்தது.

முட்டை வைத்த மறுநாள் இங்கு கிளம்பி வந்திருந்தேன். இரண்டு வாரங்கள்
கழித்து தொலைபேசியபொழுது முரளி பேசினான்.

"மாமா இன்னிக்கு காலைல ரெண்டு முட்டையும் பொரிஞ்சிடுச்சி". ரெண்டு குட்டிப்புறா
இப்போ இருக்கு. மொத்தமா ஆறுபுறா இருக்கு நம்மகிட்ட...

இந்த வித்யா தொத்தாகிட்ட சொல்லுங்க மாமா. அடிக்கடி குட்டிப்புறாவ தொட்டுப்பாக்கறாங்க
எதாச்சும் ஆயிடும்னு சொன்னா கேக்க மாட்டேங்கறாங்க. நீங்க கொஞ்சம் சொல்லுங்க
மாமா...

"ம் சொல்றேண்டா போன குடு"

இப்போ குட்டிப்புறாவுக்கு பெண் புறாதான் எல்லாமே கொடுக்கும். குட்டிப்புறா
ஆ னு வாயபொளந்துட்டு இருக்கும் அது உள்ள தீனிய போடும்.

சரிடா போன வைக்கிறேன்.

போனை வைத்தபிறகு கிம் கி டுக்கின் Isle படத்தின் ஒரு காட்சி நினைவுக்கு வந்தது. அப்படத்தின் நாயகி ஒரு தவளையைப் பிடித்து அதைத் தரையில் அடித்து சாகடிப்பாள். பிறகு தவளையின் தொடைக்கறியை நாயகன் வளர்க்கும் பறவைக்கு தின்னக்கொடுப்பாள். அப்போது அவளது உதடுகள் குவிந்திருக்கும்
பார்ப்பதற்கு புறாவினைப்போலவே வெள்ளையாக இருப்பாள்.