எல்லையற்ற அன்பு கொள்வோம்

Friday, August 29, 2008

நாற்புறமும் தனிமையின் நர்த்தனம்


நீ விட்டுச்சென்ற இவ்வறை சொற்களால் நிறைந்திருக்கிறது
சிறியதும் பெரியதும் பெரியதும் சிறியதுமாய்
பரிமாறப்பட்ட சொற்களின் கனம் தாங்காமல் எந்
நேரமும் அறை வெடித்துச் சிதறலாம்.
தாமதியாமல் வண்ணப்பெட்டியில் அடைக்க வேண்டும்.
அமுதாவுடனான சொற்கள் பிங்க் நிறப்பெட்டியிலும்
தனாவுடனான சொற்கள் நீல நிறப்பெட்டியிலும்
சேமித்திருந்தேன்.
சுகந்தியுடனான சொற்கள் காலாவதியாகிவிட்டன
என்று முன்பொரு யுகத்தில் கனலில் இட்டேன்.
தேவி விடாப்பிடியாக அடம்பிடித்து சொற்களை
திரும்பப் பெற்றுக்கொண்டாள்.
முத்துலட்சுமி இறந்தபோது அவளுடனான சொற்களும்
எப்படியோ மாயமாகி விட்டிருந்தன.
சாந்தியுடன் சொற்பரிமாற்றமில்லை எனினும்
பார்வைகளின் அடர்த்தியை சேமித்திருந்தேன்
யுகமாயிரமாயிர சில்லறைச்சொற்கள் அங்கொன்றும்
இங்கொன்றுமாய்.
இன்று நீ விட்டுச்சென்ற சொற்களை மயிலிறகு
பெட்டி ஒன்றில் அடைக்கையில் நிலம் அதிர
கீழே விழுந்தது ஒரு சொல்.
வெடித்துச் சிதறிய அறையின் நாற்புறமும்
தனிமையின் நர்த்தனம்.

Saturday, August 23, 2008

இது எங்க ஏரியா.... யாவரும் வரலாம்

கேமரா மாடல் என்ன? எத்தன லென்ஸ் யூஸ் பண்ணிங்க? சப்ஜெக்ட், சூம், ஆங்கிள்
அப்பச்சர்னு ரப்ச்சர் பண்ண கூடாது. இந்த போட்டோ எல்லாமே என்னோட காணாம
போன மொபைலில் எடுத்தது. ஜனவரியில் ஊருக்கு சென்றபோது எடுத்த படங்கள் இவையெல்லாம். ஒவ்வொரு புகைப்படம் பார்க்கும்போதும் ஒரு கவிதை, அல்லது
கதைக்கான "ஒளி" தெரியுதுன்னு ஒருத்தர் உசுப்பேத்தி விட்டதுனால இத எல்லாம்
பார்க்க வேண்டிய கட்டாயம் ஆயிடுச்சு.



என் நண்பன் ஒருத்தனுக்கு ரெண்டாவது கல்யாணம். அதுக்காக நிச்சயதார்த்ததுக்கு போகும்போது அவங்க வீட்டு வாசல்ல எடுத்தது. ரோஜாப்பூ நல்லா இருந்ததுனால
டபால்னு கிளிக்கியாச்சு.



இது எங்க வீட்டுப்பூனை. ரொம்ப நேரம் யோசிச்சபிறகு இதுக்கு பூனைன்னே பேர்
வெச்சிட்டென். இந்த பேர் பக்கத்துவீட்டு ஜனனியும் நானும் ரொம்ப நேரம் ஆலோசனை
செஞ்சு வெச்சது. அவ "பூன.. பூன.. எங்க இருக்க நீ" ன்னு கேக்குற அழகே தனி.
வீட்டுல காலைலயே எல்லாரையும் எழுப்பிவிடும். அசந்து தூங்குற நேரம்
தலையணைக்கு பக்கத்துல வந்து படுத்துக்கும். அதனிடம் இருந்து கிளம்பி
வரும் சூடான காற்றுடன் சுவாசத்தின் க்ர்ர்ர் சத்தம் கேட்கும்போது லேசாக உணர
ஆரம்பிப்பேன். கண்களை மூடிக்கொண்டே அதனிடமிருந்து இணக்கமான ஒரு சப்தம்
வரும் அந்த சப்தம்தான் என்னை துயிலெழுப்பும் சப்தம். வீடுன்னா ஒரு பூனை இருந்தே
ஆகணும்னு தோன்ற எண்ணத்தை உருவாக்கிய பூனை இது.



எங்க ஊர்லருந்து மூணு கிலோமீட்டர் தள்ளி இந்த அணை இருக்கு இந்த மலைமேல
ஏரி மேல்பரிகத்துலருந்து பாத்தா சுத்துப்பட்டுல எல்லாமும் தெரியும். இந்த இருக்கற
அணைக்குப் பேரு கோமுகி அணை. (பேரே வித்தியாசமா இருக்குல்ல) இந்த
அணைக்கு கொஞ்சம் தள்ளி மூங்கில் மரத்தால் சூழ்ந்த நிறைய புற்றுக்கள் கொண்ட
ஒரு அம்மன் கோயில் இருக்கு. இங்கதான் கெடாவெட்டுலாம் நடக்கும். பச்சை
பசேல்னு சுத்திலும் மூங்கில் மரம் நடுவில ஒரு அம்மன் கோயில் அங்க தனியா
சாமி கும்பிட்டோம்னா ஏகாந்தமா இருக்கும். நான் பள்ளிக்கு பங்க் அடிச்சா இந்த
அணைக்குதான் போவோம். அப்படி போனா இந்த கோயிலுக்கு மறக்காம போவேன்.



மேகம் அருவிக்கு போறவழில ரோட்டுலருந்து எடுத்த புகைப்படம் இது. இந்த அருவில
உற்பத்தி ஆகுற தண்ணீரெல்லாம் சின்ன சின்ன ஓடையா மாறி ஒரு இடத்துல
சேர்ந்து ஆறா ஓடி கோமுகி அணையில சேரும். குறிப்பா ஆகஸ்ட் முதல் டிசம்பர்
வரை அணை முழுக்க தண்ணி இருக்கும். புகைப்படம் எடுக்கும்போது தண்ணி
குறைவாதான் இருந்தது.



இங்க உக்காந்திருக்கும் ஒருவரை பார்த்தால் எதோ ஒரு கிராமத்தான் பஸ்சுக்கு வெயிட்
பண்றான்னு நினைப்பிங்கதானே... ஆனா அது இல்ல. இவர் உட்கார்ந்திருக்கும் இடம்
வெள்ளிமலைக்கு செல்லும் பாதையில் இருக்கும் குண்டியாநத்தம் என்ற பேருந்து நிறுத்தம்.
கடந்த ஒருவாரமா இவர் இங்க காத்திருக்கார். எதுக்குன்னு கேக்கறிங்கள்ல... பெரிய
விஷயம் ஒன்றுமல்ல. நியாயவிலைக்கடையில் போடும் அரிசிக்காக காத்திருக்கிறார்.
அந்த லாரியானது எப்போது எப்படி கடந்துபோகும் என்றே தெரியாது. இப்படி
காத்திருந்து பார்த்தால்தான் அரிசி வாங்கமுடியும். வண்டி போவதை கவனிக்காவிட்டால்
அரிசி வாங்க முடியாது. இவர் கவனிச்சு அங்க இருக்கற சில வீடுகள்ல சொல்லி
பிறகு நாலஞ்சு கிலோமீட்டர் தள்ளி இருக்கற இன்னொரு ஊருக்கு போய் வாங்கிட்டு
வரணும். இவர்கிட்டகொஞ்சநேரம் உக்காந்து பேசினதுல தெரிஞ்சது இது. ரொம்ப
அழகா சிரிச்சு பேசினார். என்னோட போட்டோ எடுக்கும் திறமையினால
"சேது எபெக்ட்" தெரியுது மத்தபடி நல்லா பேசினார்.



புளியம்பூ பாக்க அழகா இருக்கும். பறிச்சு தின்னா அதவிட நல்லா இருக்கும். அதையே
பூவிட்டபிறகு கொஞ்சநாள்ல பொறந்த கொழந்தையோட வெரல் மாதிரி சின்ன பிஞ்சா
இருக்கும் அதுல லேசா உப்பு கொஞ்ச பட்ட மொளகா வெச்சு அடிச்சோம்னா கும்முனு
இருக்கும். பொண்ணுங்க நெல்லிக்காவுக்கு அடுத்ததா புளியங்காதான் ரொம்ப புடிக்கும்
இப்பவும் நடராஜா ஜாமெண்ட்ரி பாக்ஸ் உள்ள பொண்ணுங்க ஒளிச்சு வைக்கிற சீசன்
காய் இது. டீச்சருங்க கூட இதை ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. போட்டோவில
இருக்கற மரத்துல இலைகளவிட காய் அதிகமா இருந்துச்சு. சின்னவயசுல கலெடுத்து
அடிச்சா காயம்பட்ட காய் விழும். இப்பலாம் நின்னுகிட்டே பறிச்சுடறமாதிரி இருக்கு
காலத்தின் வளர்ச்சி!



மூணு பைக்குல இந்த அருவிக்கு நான் என்னோட தம்பி அப்புறம் அவனோட கூட்டாளி
சிலபேர் போனோம். முதல்முதலா இந்த அருவிக்கு +1 படிக்கும்போது கட் அடிச்சுட்டு
வந்தது எல்லாம் ஞாபகம் வந்தது. அப்ப கட் அடிச்சபோது கூட வந்தவன் இப்பவும்
என்கூட அருவிக்கு வந்தது பலவிஷயங்கள ஞாபகப்படுத்த உதவியது. இந்த அருவிக்கு
போக பத்து வருசத்துக்கு முன்னாடி வழிகாட்டியா வந்த ஒரு சிறுவனை என் கண்கள்
தேடியது ஆனா அவன் பேர் தெரியாததுனால கிடைக்கலை. என்னோட முதல் பீடி
அங்குதான் புகைக்கப்பட்டது அதுவும் வழிகாட்டியா வந்த அந்த சின்ன பையன்கிட்ட
இருந்து ஆட்டை போட்டது. இந்த அருவிக்கு போகணும்னா குண்டியாநத்தத்தில்
இறங்கி இரண்டு மலைமுகடுகளை ஏறி இறங்கணும். கண்டிப்பா வழிகாட்டி ஒருத்தர்
இருக்கணும். இல்லாட்டி "மந்தையிலிருந்து பிரிந்த ஆடுதான்" கதி. ஆனாலும்
இங்க போகணும்னு முடிவெடுத்து திரும்பி வரும்போது வாயில் நுரை தள்ளிடுச்சி.
இருந்தாலும் அற்புதமான ஒரு சாகசப்பயணம் செய்த திருப்தி இருந்தது. அருவியை
பார்க்கும்போதே எனக்குப் பிடிச்ச ஒரு கவிதையையும் போடறேன்.

நெஞ்சு படபடக்கிறது
நீர்வீழ்ச்சியென்று
அருவியை
யாராவது
சொல்லிவிட்டால்…
- விக்ரமாதித்யன்


அருவியை நேர்ல பார்க்கும்போது இந்த கவிதை கண்டிப்பா உங்களுக்கு நினைவுக்கு
வரும்.



சிரிச்சமுகமா கைலி கட்டிட்டு உக்காந்திருப்பவர் அருவிக்குப் போக வழிகாட்டினார்.
இரண்டு மலை ஏறி இறங்கியும் சோர்வடையாம போட்டோவுக்கு சூப்பரா போஸ்
குடுக்கறார். நாங்கதான் ஓய்ஞ்ச வாழைப்பழம் மாதிரி ஆகிட்டோம். திரும்பற வழில
ஆட்டுப்பட்டில ஒரு ஆடு குட்டி போட்டுகிட்டு இருந்துச்சு. பிறந்து சிலமணி நேரம்
ஆனதும் அது தத்தி தத்தி எழுந்து நிக்க முயற்சி செஞ்ச காட்சி இருக்கே...
சாயந்திர வெயில் தங்க நிறத்துல தக.. தகன்னு மின்ன அந்த ஒளி புது ஆட்டுக்குட்டி
இளம் தோல்மேல பட்டுத்தெறிக்கும்போது ஒரு புதுவிதமான வண்ணம் தெரிஞ்சது
செம சூப்பரா இருந்துச்சு. ஒருத்தங்க வீட்டுல தண்ணி வாங்கி குடிச்சோம் அந்த வீட்டுல
ஒரு பன்னிக்குட்டி ரொம்ப அழகா இருந்தது. தூக்கி கொஞ்சலாம் போல...
பருவத்துல பன்னிக்குட்டி கூட அழகாதாண்டா இருக்கும்னு சும்மாவா சொன்னாங்க.



பொதுவா எனக்கு வயசான ஆளுங்க கூட உக்காந்து பேசறதுன்னா ரொம்ப பிடிக்கும்.
(அதனாலதான் ஆசிப் அண்ணாச்சிகூட உக்காந்து நிறைய பேசுவேன்)
இந்த போட்டோல இருக்க தாத்தாகூட என்னோட கடி தாங்காம அந்தப்பக்கம் திரும்பிக்
கொண்டார். ஒரு கெடாவெட்டு போகும்போது எடுத்த போட்டோ இது. அங்க உறுமி
மேளம் அடிக்க வந்தவர் இவர். அடி அடியென்று அடித்து ஓய்ந்தபோது நான் அவரிடம்
மொக்கை போட ஆரம்பித்தேன். கெடாவெட்டும் முன்பு அச்சாரமாக இரண்டு பேருக்கு
ஒரு மெக்டொவல் ஆஃப் பாட்டில் வீதம் வழங்கப்பட்டது. இதை உள்ளுக்கு இறக்கி
விட்டால் கறிவிருந்து அருமையாக இருக்கும். இல்லாவிட்டால் சுமாராக இருக்கும்.



இங்க சாமி கும்பிடறாரே அவருடைய பேரனுக்குதான் காதுகுத்து. எங்கப்பா போக
வேண்டிய நிகழ்ச்சி இது. அவரை தள்ளிவிட்டு நான் போனேன். இந்தமாதிரி
தனியா காட்டுக்குள்ள காதுகுத்து, பொங்கல், கிடாவெட்டுன்னா நான் போகணும்னு
சின்ன வயசுல அடிம்பிடிப்பேன். இப்பவரைக்கும் அது மாறல. காதுகுத்துக்கு வந்த
ஒரே ஒரு சுடிதார் போட்ட பொண்ணு. நானும் என்னென்னமோ சேட்டை செஞ்சும்
அதுகூட திரும்பி பாக்கல. எதாவது ஏடாகூடமா ஆயிருந்தா ஆட்டு கழுத்துல
போடறதை என் கழுத்துல போட்டுருவாங்க பாசக்காரங்க.



இந்த முக்கு சந்துக்கு பேரு பேங்க் ஸ்டாப். இங்கன நாலு படிக்கட்டு இருக்கு அங்க
உக்காந்து டீ சாப்பிட்டுகிட்டே வெட்டிக்கதை பேசியிருக்கேன். அங்க ஒருநாள்
உக்காந்து பேசிட்டு இருக்கும்போது ஊர்மக்கள் எல்லாரும் ஆத்தோரமா இருக்கற
அம்மன் கோயிலுக்கு பொங்கல் வைக்கப்போனாங்க. அங்க முன்னாடி ரெண்டு
பசங்க செம ஆட்டம் போட்டாங்க. கூடவே ஆடணும்போல அந்த தவுலுகாரரும்
செம பின்னு பின்னிட்டார். so funny people னு நானும் விவேக் மாதிரி சொல்லி
போட்டோ எடுத்துட்டேன்.



கள்ளக்குறிச்சிலருந்து வேப்பூர் போறவழில விருகாவூர்ல இறங்கி அசகளத்தூர் என்ற
ஊருக்குப் பின்னாடி போகற ஒத்தயடிப்பாதையில் ஒருகிலோமீட்டர் தள்ளி போனோம்னா
இந்தக்கோயில் இருக்கு. இதுதான் எங்க குலதெய்வமாம். வேடப்பார்னு பேர். முன்னர்
இங்க வந்தபோது வெறும் பாறைய அடிக்கி வெச்சு நாலு வேல் குத்தி இருந்தாங்க.
இப்ப சின்னதா கோயில் கட்டி அய்யனார் சிலை, குதிரை, யானைன்னு கலர்புஃல்லா
மாத்திருக்காங்க. இன்னும் கண் வரையாத அய்யனார் சிலைய போட்டோ எடுக்க கூடாது
என்று பூசாரி சொன்னார். இந்த பூசாரி கோட்டர் பாட்டில் இல்லாம படையலே வைக்க
முடியாதுன்னு சொன்னவர்.

இப்படிலாம் கலர் கலரா போட்டோ எடுத்து அருமை பெருமையா வெச்சிருந்த ஒரு
போன் காணாம போச்சு. காணாம போன அன்னிக்கு இந்த கருங்காலி பூனையதான்
கடைசியா எடுத்தேன்.



குறிப்பு: நாள் குறிப்பிடாத இரண்டு புகைப்படங்கள் வேற ஒரு கேமரால எடுத்தது. அது
பேர் கூட என்னவோ canon lumix FX10 னு நினைக்கிறேன்.

Thursday, August 21, 2008

உறைந்த ரத்தங்கள் - சுப்ரமணியபுரம்

கொலை நடந்த பிறகு அந்த இடத்தைப் பார்ப்பதும் கொலையை நேரில்
பார்ப்பதற்குமே கூட அசாத்திய துணிச்சல் வேண்டும். நான் முதல் முதலாக
கொடூரமான கொலையைப் பார்த்தபோது எனக்கு வயது நினைவில்லை. அப்பொழுது ஏழாவது படித்துக்கொண்டிருந்தேன். என் வீட்டிலிருந்து சரியாக ஏழு வளைவுகளை கடந்துசென்றால் வரும் ஏழாவது முனை ஏரிமுனை. வளைவின் ஓரத்திலேயே பெரிய
கிணறு ஒன்று உண்டு. மிகுந்த போதையில் பைக் ஓட்டிச்சென்று நிதானம் தவறி வந்த வேகத்தில் தரை தேய்த்தபடி கிணற்றோரத்தில் வண்டியை நிறுத்தி உயிர்பிழைத்தவர்களும் உண்டு, தவறி விழுந்தவர்களும் உண்டு. எனவே அந்த முனை பிரசித்திபெற்றது மட்டுமல்லாது போதையில் வருபவர்களுக்கு மிகுந்த சவாலாக இருந்தது அம்முனை. அம்முனையை ஒட்டிய வீடுதான் கோபாலுக்கு கோபால் மிகச்சிறந்த குடிகாரன்.
குடித்தபிறகு யாரையாவது கொலைவெறியில் அடிப்பது அவனின் ஒருவகை
மனோவியாதி. பெரும்பாலும் வாயில்லாத ஜீவன்களை அடித்து சித்ரவதை செய்வான். அவன் மனைவியையும் ஒரு வாயில்லாத ஜீவன் என்று நினைத்து ஒருநாள்
மண்வெட்டியால் தலையை வெட்டிவிட்டான். தூக்கத்திலிருந்தவாறே கழுத்து
வெட்டப்பட்ட நிலையில் இறந்துபோனாள். வெட்டிய கணம் முதல் அவள்
சாவதற்கு மிகுந்த சிரமப்பட்டிருக்க வேண்டும். மண்வெட்டியானது கழுத்தை வெட்ட
சரியான ஆயுதமில்லை. கழுத்தின் பாதிவரை மட்டுமே அதன் கூர்மை செல்லுபடியானது போல கிணற்றை ஒட்டிய அவளின் தலை தொங்கிக் கொண்டிருந்தது. தலையின்
கணம் தலை எந்நேரமும் உடலிளிருந்து பிய்ந்து கிணற்றில் விழலாம் என்ற நிலையில்
அது தொங்கிக் கொண்டிருந்தது. ஆஸ்பத்திரிகளில் இரத்தம் ஏற்ற அல்லது அவசர
சிகிச்சைப் பிரிவு நோயாளிகளுக்கு மூக்கினுள் செல்லும் சிறிய குழாய் அமைப்பில் அக்கழுத்திலிருந்து நரம்புகள் அறுபட்டிருந்தன. அந்நரம்புகள் முனையில் ரத்தம் தொய்ந்திருந்தது.

மிகவும் கோரமான அந்தக்காட்சிகள் பார்க்கவே பயமாகவும் அறுவெறுப்பையும்
தருவதாக இருந்தாலும் அதை பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றியது.
அபூர்வமான படத்தின் "இன்றே இப்படம் கடைசி" காட்சியை பார்த்துவிடவேண்டும்
என்ற ஆவல் தோன்றுமே அப்படி. விட்டால் பிறகு இதுபோன்ற காட்சியை பார்க்க
முடியாது. அன்று நீல நிற சட்டை காக்கி ட்ரவுசரும் அணிந்திருந்தேன். இதெல்லாம்
பார்க்க கூடாது என்று அம்மா அடித்து இழுத்துக்கொண்டு போனாள். பிறகு அந்த நீலநிற
சட்டை போடும்போதெல்லாம் குரூரமான அல்லது அவஸ்தையான புன்னகையுடன்
ஒரு சிரிப்பு வரும். அறியாத வயது அது. ஆனால் அதற்கடுத்த வருடமே இன்னொரு
கொடூரமான கொலையை நேரில் பார்க்க நேர்ந்தது. அப்போது அந்த உடலில் தலையே
இல்லை. மேலும் முன்பு பார்த்ததை விட இந்த அறுந்த முண்டத்தில் நிறைய குழாய்கள்
பிய்ந்து தொங்கிக்கொண்டிருந்தன.

வெளிநாட்டுக்கு சென்று வந்திருந்த கணவன். ஆசையாக அணைத்தவனை மிளகாய்
கரைத்த தண்ணியை முகத்தில் ஊற்றி கொலைசெய்யப்பார்த்திருக்கிறாள். இடைப்பட்ட
நாளில் வேறொருவனுடன் உடலால் பழகிவிட்டதால் கணவனின் திடீர் வருகை
அவளுக்கு பிடிக்கவில்லை. பெண்களுக்கு ஆண்களைப் போல பலமில்லை. அவள்
வெட்டிய வேகம் உயிரைப் பறிக்கும் அளவுக்கு துல்லியமாக விழவில்லை. மாறாக
அதே அரிவாள்மனையாள் அவளின் கழுத்து அறுபட நேர்ந்தது. முன்பு
பார்த்தகொலைபோல நிதானமில்லாம வெட்டியது போல் அல்ல இந்தக்கொலை. நின்று நிதானமாக நேர்த்தியுடன் வெட்டியதுபோல இருந்தது. வாசல் படிக்கட்டில் சரிந்திருந்த
அந்த உடல் தலையே இல்லாமல் வினோதமாக இருந்தது.

பக்கத்தில் இருந்த நண்பர்கள் வாந்தியெடுத்தபடி விலகிப்போனார்கள். சிலநொடிகள்
ஆச்சரியமாக பார்த்துக்கொண்டே என் சட்டையின் நிறத்தைப் பார்த்தேன். நல்லவேளை
வெள்ளைச்சீருடை. இந்தக்கொலை அதிகாலையில் நிகழ்ந்திருக்கவேண்டும். நான்
பள்ளிக்கு செல்லும் சமயம் அந்த நிகழ்வின் மிச்சத்தைப் பார்த்தேன். கழுத்து அறுபட்ட நேரத்தில் எல்லாரும் உறங்கிகொண்டிருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
அவளின் கணவன் அவளின் தலையை உரச்சாக்கு ஒன்றில் முடிச்சு போட்டு குறிஞ்சி
ஓட்டலில் பரோட்டா தட்டும் டேபிளின் மேல் வைத்துக் கதவை தட்டியிருக்கிறான்.
அவன் வெளிநாடு செல்லும்போது அங்குதான் காவல்நிலையம் இருந்தது. பிறகு அங்கிருந்தவர்கள் வழிசொல்ல ஆத்தோரத்தில் உள்ள புதிய காவல்நிலையத்திற்கு
சென்றதாக ஓட்டல் வைத்திருப்பவரின் மகன் பள்ளியில் பரபரப்பான தகவலின் சாட்சியை
விரிந்த கண்களுடன் பரப்பிக்கொண்டிருந்தான்.

இந்த இரண்டு கொலைகளுக்குப்பிறகு நான் கல்லூரி செல்லும் வரை வேறு எந்த
கொடூரமான கொலையையும் கண்டிருக்கவில்லை.

அப்போது பெரம்பலூரில் படித்துக்கொண்டிருந்த சமயம். எங்கள் அறையின் பக்கத்தில்
குறவர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் இருந்தார். அவர்கள் இணத்திலேயே அதிகம் படித்தவர்.
கல்லூரிக்கு மூன்று மாதங்கள் சென்று பின் நின்றுவிட்டதாக சொன்னார். உறக்கம் வராத
சமயங்களில் அவரிடம் சென்று பேசுவேன். நான் குடியிருந்த வீட்டிற்கு எதிரிலே ஒரு
குடிசை போன்ற அமைப்பில் அவர் குடியிருந்தார். எப்பொழுதும் வெள்ளைச் சட்டை
அணிபவர் உள்ளுக்குள் சிவப்பு நிற பனியனின் நிறம் தெரியுமாறு அந்தச்சட்டை இருக்கும்.
அற்புதமான உடலமைப்பு அவருக்கு. தினமும் உடற்பயிற்சி செய்வார். அவருடன் பழக்கமானது விநோதமான சம்பவம். அவரின் வீட்டில் மின்சாரம் கிடையாது
தெருவிளக்கின் அடியில்தான் உட்கார்ந்து எதாவது எழுதிக்கொண்டிருப்பார். எப்போதாவது அந்தப்பக்கம் கடந்து செல்லும் நான் ஓர்நாள் அவரின் அருகில் சென்று என்ன எழுதுகிறார் என்று பார்த்தேன்.

ஓரங்கள் கிழிந்த நாற்பதுபக்க இரட்டை வரி நோட்டில் கவிதை எழுதிக்கொண்டிருந்தார்.
பக்கத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். சிரித்தபடியே நோட்டை என்னிடம்
கொடுத்தார். படித்துப்பார்த்தேன். ஒன்றுமே புரியவில்லை. எப்போதோ காதலித்தபோது கவிதை எழுதியது பிறகு நான் கவிதை என்று வாசிப்பது வாரமலரின் கடைசிப்பக்க
காதல் கவிதைதான். ஆனால் அவரின் கவிதை அதுபோல இல்லாததால் எனக்குப்
புரியவேயில்லை. சூப்பரா இருக்குது என்று நோட்டை எடுத்து அவரிடமே கொடுத்தேன். தெருவிளக்கு கம்பத்தின் அடியில் ஒரு கல்லைப் போட்டு அமரிந்திருந்த அவரின்
பக்கத்தில் ஒரு நீண்ட கம்பு இருந்தது.

வரி வரியாக கருப்புக்கோடுகள் போட்ட வழவழப்பான கம்பு அது. நீண்ட உபயோகத்திற்கு
பிறகே வரும் வழுவழுப்பு அது. அதை எடுத்து தேவர்மகனில் கமல் கம்பின் அளவு
பார்ப்பது போல நெற்றிக்கு நேராக வைத்து பார்த்தேன். "கம்பு சுத்த தெரியுங்களா சார்"
என்று கேட்டார். என்னை முதல் முதலில் சார் என்று கூப்பிட்டவர் அவர்தான்.
தெரியாதுங்க சார் என்றேன். ஆச்சரியமாக பார்த்தார். பிறகு சட்டையைக் கழற்றி என்னிடமிருந்த கம்பை வாங்கி சுழற்ற ஆரம்பித்தார். தேவர்மகன் கமலை விட நன்றாக சுழன்று ஆடினார்.

பொதுவாக இரவுநேரத்தில் குழல்விளக்கின் வெளிச்சத்தில் குச்சியை வேகமாக
சுழற்றினால் நீலமும் மஞ்சளும் சிவப்பும் கலந்த கோடுகள் நொடிப்பொழுது வேகத்தில் குச்சியின் சுழற்சிக்கு ஏற்ற வேகத்தில் வரும். சிறிய வயதில் முயற்சித்துப் பார்த்திருக்கிறீர்களா?

ஆம் என்றால் அதை நினைவுகொள்ளுங்கள். அவர் சுழன்ற வேகத்தில் நீலமும்,
மஞ்சளும் சிவப்பும் நொடிப்பொழுதில் மின்னி மறைந்துகொண்டிருந்தன. யாருமில்லாத தெருவின் விளக்கு வெளிச்சத்தில் அந்த சிலம்பாட்டம் என் ஒருவனுக்காக நிகழ்ந்துகொண்டிருந்தது. அவரின் மேல் மிகுந்த பிரமிப்பு ஏற்படுத்திய இரவு அது.

எனக்கும் கம்பு சுற்ற கற்றுத்தரும்படி கெஞ்சினேன். "நான் பத்து வயசுலருந்து
சுத்தறேங்க இருவது வருசம் ஆச்சு. இன்னமும் எனக்கு சரியா சுத்த வரல. தினமும்
அரை மணி நேரமாவது சுத்தறேன். எடுத்த உடனே கத்துகிட்டு ப்ளாக்பெல்ட் வாங்க இது கராத்தே இல்லங்க. சின்ன வயசுலருந்து உடல் வளையணும் என்று சொன்னார். கராத்தேவிலும் ப்ளாக் பெல்ட் வாங்கியவர் என்று பின்னர்தான் தெரிந்தது. இருந்தாலும்
என் பிடிவாதம் காரணமாக எனக்கு சொல்லித்தர முன்வந்தார். படிப்பில் நான் எப்படியோ அதேபோல கம்புசுத்துவதிலும் என் திறமை இருந்தது. உங்களுக்கு வராது என்று அவரே விலகிக்கொண்டார்.

பிறகு நேரம் கிடைக்கும்போதெல்லாம் பேசுவோம். ஓட்டலுக்கு சாப்பிடப்போகும்போதுகூட
அழைப்பேன். குழந்தைகள விட்டுட்டு என்னால வரமுடியாது. அப்படியே இருந்தாலும்
அவங்கள விட்டுட்டு சாப்பிடறமேன்னு தோணும். அதனால வரமுடியாது என்பார்.
நாளுக்கு நாள் அவரின் மதிப்பு என்னில் அதிகமாகிப்போனது.

ஒருநாள் மருந்துக்கடையில் எதோ மருந்து வாங்கிக்கொண்டிருந்தேன். படிக்கட்டு அருகில்
ஒருவர் பைக்கை ஸ்டார் செய்ய முயற்சித்துக்கொண்டிருந்தார். எங்கிருந்தோ ஒருவர்
புயல் வேகத்தில் வந்து அவரின் தலை வெட்டிவிட்டு சென்றார்.

சீற்றமாக வரும் குழாயில் தண்ணீரை அடைத்துப்பிடித்தால் நாலாபக்கமும் தண்ணீர்
வேகமாக சீறி அடிக்கும் பார்த்ததுண்டா? அதேபோல வெட்டப்பட்ட கழுத்திலிருந்து
ரத்தம் பீய்ச்சி அடித்துக்கொண்டிருந்தது. நொடிநேரத்தில் நிகழ்ந்துவிட்டது. முண்டா
பனியனை மேல் முடிச்சு போட்டு கண்களுக்கு சிறு இடைவெளிவிட்டு கீழே முடிந்து
விட்டதால் பார்ப்பதற்கு முகமூடி திருடன் போல் இருந்த ஒருவன் வெட்டிவிட்டு ஓடினான்.
கொலையுண்டவர் என்னிலிருந்து பத்தடி தூரம் துடித்துக்கொண்டிருந்தார். அதிர்ச்சியுடன்
ஓடியவனின் திசை பார்த்தேன். வெள்ளைச்சட்டை சட்டையை மீறி வெளித்தெரியும் நீல
நிற பனியன். எனக்குப் பழக்கமான, சீரான கட்டுடைய உடல்.

மறுநாள் செய்தித்தாளில் நக்கீரன் நிருபர் கொலை என்று இருந்தது. நேற்று கண்ட அதே
சம்பவம். பெரம்பலூர் போன்ற நகரத்தில் இதெல்லாம் சகஜம் என்று பேசிக்கொண்டார்கள்
நானும் இரண்டொரு மாதத்தில் மறந்தே போனேன். அந்த கம்பு சுற்றுபவரையும் காணவில்லை.

பின்பொருநாள் மருத்துவமனையில் இரத்தம் கொடுத்துவிட்டு வருகையில் அவரைச் சந்தித்தேன். அந்தக்கொலையை அவர்தான் செய்ததாக சொன்னார். விபத்தில்
சிக்கியதுபோல இருந்தார். அவரின் படுக்கைக்கு அருகில் நீண்ட கழியில் இரத்தம் ஏறிக்கொண்டிருந்தது. ஏன் என்று கேட்டேன். பதில் ஒன்றும் இல்லை. இரத்தவகை கேட்டேன். ஓ நெகட்டிவ் என்றார்.

என்னுடைய இரத்தவகையும் அதுதான். ஒருவேளை அது என்னுடைய ரத்தமாக கூட இருக்கலாம்.




இந்த மூன்று கொடூரமான சம்பவங்களுக்குப் பிறகு வேறு எந்த கொடூரமான
கொலைகளையும் பார்க்கவில்லை. ஆனால் நேற்று சுப்ரமணியபுரம் படம் பார்த்தேன்.

ஒவ்வொரு கொடூரமான கொலைகளுக்குப் பின்னாலும் துரோகம், தோல்வி, விசுவாசம், காதல், கள்ள உறவு, பழிக்குப்பழி என்ற எதோ ஒரு காரணம் இருந்துகொண்டேதான் இருக்கிறது.

சுப்ரமணியபுரம் படத்தையும் குரூரமான புன்னகையோடு ரசிக்கவே செய்தேன்.
நிகழ்பவைதானே கதையாக மாறுகிறது.

Friday, August 15, 2008

கருணையற்ற கோடை

நீளமான இந்த கோடையில்
குறைந்தபட்சமான குளிர்ந்த காற்று போதும்
உனக்காக ஒரு கவிதையினை எழுதிவிடுவேன்.
கொஞ்சம் நீர்த்துளிகள் வானத்திலிருந்து.
அல்லது
பாசாங்குகள் அற்ற மழலையின் சிரிப்பு.
அல்லது
பழுத்த இலை ஒன்று மென்காற்றை கிழித்துக்
கீழிறங்கும் காட்சி.
அல்லது
கண்கள் மூடிய சவத்தின் மவுனம்.
அல்லது
எதிர் வீட்டுப் பூனையின் ஆச்சர்யமான தலையுயர்த்தல்.
அல்லது
தென்னையோலையின் கடைசித்துளி மழைநீர்
குளத்தில் வீழ்ந்தெழும் அந்நொடி.
அல்லது
முதல் முட்டை இட்ட கோழியின் ஆசுவாசமான
கெக் கெக் கெகே... சப்தம்.
அல்லது
விணையின் நரம்பில் நகங்கீறி குருதி
தெறிக்கும் உச்சம்
இக்கடும் கோடையினை மதியிலகற்றவும்
முகமறியா உனக்காக அபூர்வான சொற்களை
கோர்க்கவும் சிலவற்றை நினைவுகொள்கிறேன்
தோழி.

Thursday, August 14, 2008

கவ்வாலி இசை, உருவ ஒற்றுமை, காமிக்ஸ் உலகம்

சென்ற வாரத்தின் ஒருநாள் பணிநிமித்தமாக தொலைதூரம் செல்லவேண்டி இருந்தது.
அலுவலகத்தில் பாகிஸ்தானி ட்ரைவர்கள்தான் அதிகம். அப்படி ஒருநாள் செல்லும்போது
காரில் ஒரு பாடலை ஒலிபரப்பினார் பாக் நண்பர். பொதுவாக ஒரேமாதிரி இசைக்கும்
பாகிஸ்தானிய நாட்டுப்புற இசையை நான் விரும்புவதே இல்லை. என்ன செய்வது
வேறு வழியின்றி போடுப்பா கேக்கலாம் என்றேன். எதோ ஒரு பாட்டை போட்டார்
பயணம் முடிகிற வரை அந்த ஒரு பாட்டை மட்டுமே திருப்பி திருப்பி கேட்கும்படியான
குரல். ஹரிகரனைப் போல, எஸ்.பி.பி போல அத்தனை அருமையான குரல்
இல்லையென்றாலும் எதோ ஒன்று அந்த குரலில் இருந்து என்னை ஈர்த்தது.
பத்து நிமிடங்களுக்கு மேல் ஓடும் அந்தப்பாடலுக்கு சொந்தக்காரர் நுஸ்ரத் ஃபதே
அலிஃகான் என்று சொன்னார். குறித்துக்கொண்டேன்.

இந்த ஒருவாரத்தில் நூற்றுக்கும் அதிகமான முறை கேட்டிருப்பேன். ஒருவார்த்தையும்
புரியவில்லை, முற்றிலும் புதியதான இசை என்றாலும் என்ன பிடித்திருக்கிறது என்றே
தெரியவில்லை. மிக ஆழ்ந்து யோசித்ததில் அதில் எனக்குத் தெரிந்து சில நினைவுகளை
மீட்டெடுக்கிறது என்று கண்டுகொண்டேன். மார்கழி மாதத்தில் பெருமாள் கோவிலில்
போடப்படும் கீர்த்தனை, சாமிப்பாடலின் ஏதோ ஒரு குரல் இந்தக்குரலுடன் ஒத்துப்
போவதாக உள்ளிருக்கும் நினைவு சொல்கிறது. இரண்டாவதாக பாடலில் கடைசியாக
உச்சக்கட்ட ஸ்தாயில் நுஸ்ரத்தின் குரல் எனக்கு மிக நெருக்கமான அதே மாதிரி
உச்சஸ்தாயியில் குரல் பிசிரடிக்குமாறு அமைந்திருந்தது. அது எம்.எஸ் விஸ்வநாதனின்
குரல். வசீகரம், ஆவேசம், உணர்வுகள், தொழுதல், தாளத்திலிருந்து வெளிச்செல்லும்
குரல் போன்ற பல வடிவங்களின் தொகுப்பாக இந்தப்பாடல் உள்ளது.



இவரைப்பற்றி அறிந்துகொள்ள இணையத்தில் தேடியபோது வெங்கட் அருமையான
பதிவொன்றை எழுதியிருந்தார். பாடலை நிதானமாக கண்ணை மூடி ரசித்துப்பாருங்கள்.

விடியோ தெரியாதவர்கள் Tumhein dillagi bhool என்று youtube ல் தேடினால்
கிடைக்கும்.

***

தூக்கமிழந்து போகும் இரவுகளில் எல்லாம் சண்டைப் படங்களைப் பார்ப்பது வழக்கம்
(அதற்காக "சண்ட" படத்தைப் பார்க்கும் துணிவு இல்லை) கடந்தவாரத்தில் ஒருநாள்
அப்படி தூக்கமிழந்து போனது ஒரு இரவு. மெல் கிப்சனின் பேட்ரியாட் படத்தினைப்
பார்த்தேன். மெல் கிப்சனின் இப்போதையை முகத்தினைக் காணும்போதெல்லாம்
இதே முகத்தை வேறெங்கோ கண்டிருக்கிறேன் என்று தோன்றும். அப்படியே தீவிரமான
யோசனைக்குப் பிறகு இதேபோன்ற ஒரு முகம் அல்லது அதே போன்ற உடல்மொழியுடன்
கூடிய ஒரு நடிகர் எனக்கு ஞாபகம் வந்தார். பொதுவாகவே எனக்கு புதிதாக ஒரு முகத்தை
கண்டால் இதற்கு முன்பு இதே மாதிரி உள்ள ஒருவரோடு ஒப்பிட்டு பார்த்துக்கொள்வேன்.
ஆயிரத்தில் ஒன்றிரண்டு முகம் அதேபோல உண்டு. உதாரணத்திற்கு இந்த பதிவு
பார்த்தால் தெரியும்.



மெல்கிப்சனைப்போலவே உள்ள ஒரு முகமாக நான் நினைப்பது மறைந்த நகைச்சுவை
நடிகர் சந்திரபாபு. ஓரளவுக்கு முக ஒற்றுமை இரண்டு பேருக்கும் இருப்பதாக நான்
நம்புகிறேன். சினிமாவில் வருவதுபோல அச்சில் வார்த்ததுபோல ஒரே மாதிரி எல்லாம்
இருக்க மாட்டார்கள் எனினும் சில பாவனைகளின்போது, சிரிப்பின்போது ஒருநொடியில்
தோன்றுமே அதுதான் ஒற்றுமை. நிஜத்தில் பேட்ரியார் பார்க்கும்போது சந்திரபாபுதான்
நினைவுக்கு வந்தார். இதேபோல முக ஒற்றுமை மேலும் இரண்டு பேருக்கு இருக்கிறது
அவற்றை கீழே கொடுக்கிறேன். பெயரை நீங்களே கண்டுபிடியுங்கள்.



ஒண்ணுமே தெரில எங்கடா ஒத்துமை தெரியுதுன்னு கேட்டிங்கன்னா, படங்கள் ரெண்டு ரெண்டா தெரியுற நிலைக்கு வரவும். அப்பவும் தெரிலன்னா வுட்டுடுங்க.

***

மூன்றாவது ரவுண்டு முடிந்திருந்த நேரம். மல்லு நண்பன் குழறலாக ஆரம்பித்தான்.

"இதுவரைக்கும் அந்த ஒரே ஒரு விஷயத்தைத் தவிர அழுததே இல்ல தெரியுமா?"

"எந்தா விஷயம் சொல்லு மச்சி" (ரெண்டு பெக்கு உள்ள போச்சுன்னா உடனே ப்ளாஷ்பேக் போய் பெயிலியர் லவ்வ நெனச்சு ஒப்பாரி வெப்பானுங்களே)

எனக்கு காமிக்ஸ் புக்குன்னா ரொம்ப புடிக்கும் போபனும் மோளியும், பாலராமா,
பாலபூமி, பாலமங்களம், பூம்பாட்டு, முத்தஷி (பாட்டி கதைகள்) இந்தமாதிரி
ஒருநூறுக்கும் மேல சேத்து வெச்சிருந்தேன். "சின்ன வயசுல ஸ்கூலுக்கு அலுமினிய சூட்கேஸ்ல புக்கு எடுத்துட்டுபோவோம்ல" அதுலதான் காமிக்ஸ் அடுக்கி வெச்சு
என் ரூம்ல வச்சிருந்தேன்.

காமிக்ஸ்னா ரொம்ப இஷ்டமா மச்சி?...

ஆமாண்டா வளெர இஷ்டம்.

படிப்ப முடிச்சிட்டு நான் மும்பைக்கு போனேனா அங்க போனபிறகு ஆறுமாசத்துக்கு
ஒருமுறைதான் ஊருக்கு போவேன். எப்பப்ப போறேனா அப்பலாம் அந்த காமிக்ஸ்
பொட்டிய திறந்து படிப்பேன். அப்படியே பள்ளிக்கூட நாட்கள் ஞாபகம் வரும். நான்
ஊருக்குப் போக ஆர்வமா இருக்கறதும் இது ஒரு காரணம்.

"கேக்கறதுக்கே நல்லாருக்கே மேல சொல்லு மச்சி"

அப்படி ஒருமுறை ஊருக்கு போகும்போது என்னோட அறைல அந்த காமிக்ஸ் பொட்டிய
காணும். வீடெல்லாம் தேடினபோது கிடைக்கவேல்ல. நேசிக்கற பொருள் தொலஞ்சு
போனா எப்படி இருக்கும்? என்னோட பர்ஸ், மூணு மொபைல் காணாம போகும்போது
கூட எனக்கு பெருசா எந்த கவலையும் இல்ல. ஆனா இப்ப பொட்டிய காணும்னவுடனே
என்னால அழுகைய கட்டுப்படுத்தவே முடில.

அம்மாகிட்ட போய் கேட்டேன். ஒருமாதிரி தயக்கமான குரல்ல சொன்னா. இந்தமாதிரி
என்கிட்ட பேசினதேயில்ல. பாத்திரம் வாங்கறவங்கிட்ட போட்டு பாத்திரம் வாங்கிட்டதா
சொன்னா. அப்படியே தோட்டத்துக்கு ஓடிப்போயிட்டேன்.

பிறகு எந்தங்கச்சி வந்தா. "நான் காலேஜ் போயிருந்த சமயம் அம்மா இப்படி செஞ்சுட்டாங்க.
நான் கேள்விப்பட்டவுடனே அம்மாகிட்ட சொன்னேன். "இந்த புக்குலாம் கிட்டத்தட்ட அஞ்சு
வயசுலருந்து அண்ணன் சேகரிச்சுட்டு வரான்மா". இங்க வந்தா இதபடிக்காம இருக்க
மாட்டான். அடுத்தமுறை வரும்போது இத கண்டிப்பா தேடுவான் ஏன் இப்படி செஞ்சேனு
கேட்டேன்.

அம்மா பதறிட்டாங்க. உடனே இருஞ்சாலக்குடில இருக்க அத்தனை வேஸ்ட் பேப்பர்
கடைலயும் தேடினோம். கிட்டத்தட்ட ஒருவாரம் தேடியும் கிடைக்கல. அம்மா
இந்த காரியத்துக்காக ரொம்ப வருத்தப்பட்டாங்க.

உடனே வீட்டுக்கு ஓடிப்போய் பாத்தேன். அம்மா அழுதுட்டு இருந்தாங்க. "தெரியாம
செஞ்சுட்டேன் என்ன மன்னிச்சிருடான்னு சொன்னா" புத்தகம் தொலைஞ்சு
போன வருத்தத்தோட அம்மா என்கிட்ட மன்னிப்பு கேட்டதும் என்னால அழுகைய
கட்டுப்படுத்த முடியவேல்ல. அந்த சம்பவத்துலருந்து அம்மா என் விஷயங்கள்ல
ரொம்ப கவனமா இருக்கபோதெல்லாம் காமிக்ஸ் பெட்டி தொலைஞ்சு போனதுதான்
ஞாபகம் வரும்.

"வுட்றா.. வுட்றா... இப்பலாம் ஆன்லைன்ல செமி போர்னோ காமிக்ஸ்லாம் வருது.
நாளைக்கு உன்னோட மெயிலுக்கு லிங்க்ஸ் அனுப்பி வைக்கிறேன். பாத்து எஞ்சாய்
பண்றா ஆனா "மிஸ்டு கால் குடுத்துடாத" (மிஸ்டு கால் ன் பதம் தெரியாதவர்கள்
தனியாக கேட்கவும்)

டேய் என்ன இருந்தாலும் அந்த பழைய காமிக்ஸ்ல வர்ற மாதிரி இருக்காதுடா

"ரப்சர் பண்ணாம கெளம்புடா" அவனவனுக்கு லவ் பெயிலியர் ஆச்சுன்னாதான் ஒப்பாரி
வெப்பானுங்க. இவன் என்னடான்ன கொத்து புஸ்தகம் (கொச்சுப் புஸ்தகம் இல்லிங்க)
காணாம போனதுக்கெல்லாம் சின்னபுள்ளயாட்டம் அழுதுகிட்டு.

Tuesday, August 05, 2008

குசேலன், நாஞ்சில், Two Women

படம் பாத்துக்கொண்டிருக்கும்போதே பக்கத்தில் இருந்தவர் சொன்னார். "எவ்வளவு
செலவானாலும் பரவாயில்ல பீவாசுவ போட்டுத்தள்ளிரணும்டா" என்று.
வேறு படத்தின் ஷோக்கள் திரையிட்டு நேரமானதாலும் குசேலன் மட்டும்தான் பார்க்க
முடியும் என்ற நிலை. கூட வந்திருந்த மலையாளத்து பையன் படம் முடிந்ததும்
காறி துப்பினாலும் துப்பி விடுவான் என்ற பயத்தினால் நான் அறைக்கே திரும்பிட
நினைத்திருந்தேன்.

பசுபதி வெயில் என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். இரண்டாவதாக
ஈ என்ற படத்தில் ஓரளவுக்கு நடித்திருப்பார் பிறகு மஜாவில் "ஸ்மார்ட் பாய்" என்று சொல்லும் இடங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் என்று சொல்ல முடியும். மற்ற
எல்லா படமும் குசேலன் மாதிரிதான்.

அரங்கில் நுழைந்தபோது எனக்கு முன்னரே நான்கு பேர் வந்துவிட்டிருந்தனர். பிறகு
எங்களைத்தவிர வேறு யாரும் வரவில்லை. இதற்கு முன்பு தொட்டி ஜெயா என்ற
படத்திற்கு நானும் என் நண்பனும் சென்றிருந்தபோது தியேட்டரில் ஒருவரும் இல்லை
எங்கள் இரண்டு பேருக்கு மட்டும் படத்தை ஓட்டினார்கள்.

வயதான காலத்தில் நயனின் இடைசுற்றி, உதடு வருடி, இடுப்பை ஆட்டி நடனம் ஆடும்
கோமாளித்தனமெல்லாம் சகிக்கவில்லை. பீவாசுவுக்கும் நடன இயக்குனருக்கும் மனித
வதை தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை தருமளவுக்கு ரஜினியை கொடுமைபடுத்தி
இருக்கிறார்கள்.

இந்த வசனத்தை மம்முட்டி பேசுவதுபோல் படித்தால் அந்த கேரள நண்பன் சொன்னது
புரியும்.

"ரஜினின்ற மலைய நம்பி இந்த படத்த எடுக்கலடா நயந்தாராவோட ----- நம்பிதான்
எடுத்துருக்காங்க. ஏண்டா நல்ல நல்ல படத்த எல்லாம் இப்டி நாசம் பண்ணி வைக்கறிங்க"

எலேய் மொக்க படம்லாம் எப்படி எடுக்கறதுன்னு கத்து தர்றதும் ஒரு கலைதான் இத
போய் குத்தம் சொல்லக்கூடாது.

கேரள சினிமாலயே இப்பலாம் மொக்கைப்படம் நிறைய வர ஆரம்பிச்சுடுச்சி. அதிசயமா
வர்ற கதையுள்ள சினிமாவயும் நம்மாளுங்க கார்ப்பரேஷன் கக்கூஸ் மாதிரி ரீமேக்
பண்ணி கெடுத்துடறாங்க.

கத பறயும் போள் "மாம்புள்ளிக் காவில் மகரந்த" பாட்டில் அந்த ஹீரோயின் இடுப்பு
நளினமாக ஆடி அற்புதமான கலை வடிவில் உள்ள பாடலை இங்கே பான்பராக்
வாயுடன் நடனமாடி கெடுத்துள்ளனர். நயன், ரஜினி க்ளோசப் காட்சிகளில் யாருக்கு
லிப்ஸ்டிக் அதிகம் என்று கண்டுபிடிப்பதில் பெரிய போட்டியே நடந்தது. திரையில்
ராமராஜனுக்கு அடுத்தபடியாக ரஜினி லிப்ஸ்டிக் கம் க்ளோசப் காட்சிகளில் ரசிகர்களை
அதிகம் கொடுமைப்படுத்தியவர் சூப்பர் ஸ்டார்தான்.

பின்னிருக்கை நண்பர் சொன்னதுதான் எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல பீவாசுவ...
இங்க ஒருத்தர் சொல்லிருக்கறத பாருங்க.

சீனிவாசன் என்ற படைப்பாளிக்கு தமிழ்சினிமா செய்த மிகப்பெரும் அவமானம் குசேலன்.

---

விகடனில் எழுதும் எழுத்தாளர்களின் கட்டுரைத்தொடரினை ஒவ்வொருவாரமும் எதிர்
பார்த்து கிடக்கவே கூடாது. எப்போது அதை தூக்குவார்கள் என்றே தெரியாது. அதேபோல
குமுதமும். உதாரணத்திற்கு ஓ பக்கங்கள், அகம் புறம் போன்ற கட்டுரைத்தொடர்.
கடந்த மூன்று வாரங்களான நாஞ்சிலாரின் தீதும் நன்றும் என்ற தொடர் வந்துகொண்டு
இருக்கிறது. சமூகத்தின் மீது கோபம் கொள்ளவைக்கும் கட்டுரைகள் நாஞ்சிலுடையவை.
பின்வரும் வாரங்கள் பல தளங்களில் வாசகர்களை இட்டுச்செல்வார் என்று நம்பலாம்.
குறிப்பாக நாஞ்சில் நாட்டு சமையல் முறை. ஏற்கனவே வஞ்சகமில்லாமல் சாப்பிடும்
பழக்கம் உள்ளவனாக இருந்தபோதும் நாஞ்சிலின் எழுத்துக்கள் உணவின்மீது காதலை
ஏற்படுத்திவிட்டது. இதைப் படித்தால் உங்களுக்கே புரியும்

---


உலகிலேயே அழகிய பெண்கள் உள்ள நாடு ஈரான் என்று எவரோ/எங்கோ சொல்லி
கேட்டதாக ஞாபகம். அழகிய பெண்களைக் கண்டால் மட்டுமே இந்த வாக்கியங்கள்
நினைவில் வந்துபோகும். நானும் இரானில் உள்ள தீவிற்கு நான்கைந்து முறை
சென்றிருந்தும் ஒருமுறைகூட பேரழகுடைய பெண்களை காணமுடியவில்லை. ஆனால்
ஒருமுறை ஷாப்பிங் மால் சென்றபோது நிறைய பெண்கள் அணி அணியாக வந்து
இருந்தனர். முக்கால்வாசிபேர் முகத்தை மூடி இருந்தனர். மிகச்சிலர் திறந்து விட்ட
முகத்துடன் வந்தனர். ஓரளவுக்கு உண்மையாகவே அழகானவர்கள்தான். குறிப்பாக
சிவப்புமல்லாத/மாநிறமும் அல்லாத ஒருவகை பால் நிறமேனி அவர்களுக்கு. கடும்
வெயில் அடித்த அந்த பருவத்தில் ஒருவருக்கு கூட வியர்க்கவில்லை. எனக்கோ
வியர்த்துக் கொட்டியது.

படத்தின் முதல் காட்சியாக தன் தோழி ரோயாவுக்கு தொலைபேசி மருத்துவமனைக்கு
வரவைத்து ஃப்ரெஸ்தா தன் கதையை சொல்ல ஆரம்பிக்கிறாள். நீண்டாநாள் பிரிந்த
தன் தோழியிடம் கதையை சொல்லிமுடிக்கும் கடைசி நிமிடத்தில் அவள் கணவன்
இறக்கிறான். பதினைந்து வருடங்கள் பிரிந்திருந்த தன் தோழியிடன் கதையை
சொல்வதுதான் two women படம்.

கடந்த வாரத்தில் two Women என்ற இரானியப் படம் பார்க்கையில் இந்த நினைவுகள்
மீண்டு வந்து நிழலாடியது. வகுப்பில் எத்தனைபேர் இருந்தாலும் நன்றாக படிக்கும்
மாணவர் ஒருவர் மட்டுமே இருக்கமுடியும். அப்படிப்பட்ட மாணவி ஃபெரஸ்தா
அவளுக்கு ஒரு தோழி பெயர் ரோயா. இருவரும் இணைபிரியா தோழிகள்.
எல்லா திறமையிலும் நிகரற்றவள் ஃபெரஸ்தா அவளை ஒருவன் காதலிக்கிறான்.
நன்றாக படித்து வேலைக்குச் சென்று தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற
லட்சியத்தில் டெஹ்ரானில் உள்ள தன் மாமாவின் வீட்டில் தங்கி படிக்கும் அவள்
அவனின் காதலை நிராகரிக்கிறாள். உலகத்தில் எந்த மூலைக்கு சென்றாலும் நானே
உன் கணவன் என்று சொல்லும் அவனை ஒரு சந்தர்ப்பத்தில் அவமானப்படுத்தி
பொதுமாத்து வாங்க வைக்கிறாள்.

வன்மம் கொண்ட அவன் பழிதீர்க்க சந்தர்ப்பம் தேடுகிறான். தன் மாமாவின் மகனுடன்
தெருவில் நடந்து செல்கையில் அவள் முகத்தில் ஆசிட் வீசுகிறான் அது அவள் மேல்
படாமல் அத்தை மகன்மீது படுகிறது. கோபம் கொண்ட உறவினர் படித்தது போதும்
நீ கிளம்பு என்று சொல்ல தன் மீது எந்த தவறுமில்லாமல் தன் படிப்பு வீணாகிப்போவதை
எண்ணி கண்ணீருடன் தன் ஊருக்கு பயணமாகிறாள் ஃப்ரெஸ்தா. அங்கும் வருகிறான்
அந்த ஒருதலைக்காதலன். அவளைத் துரத்தும்போது இருவரும் ஒரு விபத்தில் சிக்கி
காவல் நிலையம் செல்ல நேர்கிறது. அஹ்மத் என்பவரின் உதவியிடன் ஃப்ரெஸ்தா
மீது குற்றமில்லை எனவும் விபத்துக்கு காரணமான அந்த ஒருதலைக்காதலன் முகம்மத்
பதினான்கு வருடம் சிறை செல்கிறான். திரும்பி வந்து உனைக்கொல்வேன் என்று சொல்கிறான்.

பண உதவி செய்த அஹ்மத் அவளை திருமணம் செய்ய முன்வருகிறான் அவளுக்கோ
இஷ்டமில்லை. இருவீட்டாரும் இணைந்து பேசி அவளின் ஒப்புதல் இல்லாமல் மணம்
நடைபெறுகிறது. திருமணமான முதல் நாளில் இருந்து அவளின் மேல் சந்தேகம் தினம்
தினம் நரகவேதனை. பேசினால், நடந்தால், பார்த்தால் கூட குற்றம் என்கிறான்.

இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. அப்பொழுதும் தினம் சந்தேகம் பேச்சுகள் என்று
போகிறது. ஒருகட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். சிறைக்குச் சென்ற
முஹம்மத் அதே சமயத்தில் வெளிவருகிறான்.

கொலைசெய்ய துரத்தும் முகம்மதுவிடம் இருந்து தப்பி ஓடுகிறாள். ஒரு முட்டுசந்தில்
மாட்டி இனிமேல் ஓடமுடியாது என்று சொல்லி அங்கேயே திரும்பி உட்காருகிறாள்.
அவன் கொல்லவருகிறான்.

கடைசிவரை நான் எனக்காக வாழவில்லை. வாழவிடவுமில்லை. என் லட்சியங்கள்
இரண்டு ஆண்களின் முன்னால் அர்த்தமற்றுவிட்டது. இனிமேல் வாழ்வதில் எனக்கு
ஆசையில்லை என்னைக்கொன்றுவிடு என்று அழுகிறாள் ப்ரெஸ்தா. அதேசமயம்
பின்னால் வரும் ப்ரெஸ்தாவின் கணவன் முகம்மதுவுடன் தன் மனைவி கள்ள
உறவு வைத்துள்ளதான தன் சந்தேகம் உறுதிபட்ட்டது என நம்பி முகம்மதை கொல்ல
முயற்சிக்க அங்கே மாறாக ப்ரெஸ்தாவின் கணவனுக்கு கத்திக்குத்து விழுகிறது.

பெண்ணின் கனவுகள், உணர்வுகள் எப்படி சமூக நிர்பந்தங்களால் அழிக்கப்படுகின்றன
என்பதை ஓவியம்போல சொல்லியிருக்கிறார் இயக்குனர். முக்கியமாக பெண்களின்
உணர்வுகள் தெளிவாக பதிவாக்கியிருக்கிறார் ஏனென்றால் இயக்குனரும் பெண்தான்.
எழுத்தாளரான தஹ்மின் மிலனியின் நாவலை அவரே இயக்கிய இந்தப்படம் இஸ்லாம்
சமூக பெண்களுக்கு நேரும் பிரச்சினைகளை பெண்களுக்கே உண்டான மென்மையுடன்
சொல்லியிருக்கிறது.