எல்லையற்ற அன்பு கொள்வோம்

Tuesday, October 07, 2008

The Bridges of Madison County


clint Eastwood மேல் எனக்கு மிகப்பெரும் மரியாதை இருக்கிறது. அது அவருடையை
தோற்றத்திற்கும் அபாரமான நடிப்பிற்கும் செய்யும் மரியாதை. சென்றவாரம்
அவரின் படம் ஒன்றை மாலில் கண்டபோது எந்தவித யோசனையும் இல்லாமல்
வாங்கிப் பார்த்தேன். Bridges and his madison county என்ற படம். காதல் எந்த
வயதில் வேண்டுமானாலும் வரலாம். குடும்பம் என்ற அமைப்பில் உள்ள
பெண்ணிற்கும் வரலாம், கிழவனுக்கும் வரலாம். வந்தால் எப்படிப்பட்ட
பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள்/வேண்டும் என்பதை உணர்வுப்பூர்வமாக
உணர்த்திய படம். படத்தில் நான் பெரிதும் ரசித்த, ஈஸ்ட்வுட்
பயன்படுத்திய ஒரு வசனம்.

ஒரு காதல் வெற்றியடையும்போது மறுகாதலுக்கான வழியை அது
அடைத்துவிடுகிறது. இது குடும்பம் என்ற அமைப்பிற்கும் பொருந்தும்.

தான் இறந்தபிறகு தனது சொத்துக்கள் மற்றும் கடிதங்களை தனது இருபிள்ளைகளுக்கு
எழுதி வைத்துவிட்டு இறந்துபோகிறாள் ப்ரென்சாசெ. மேலும் தனது அஸ்தியை
காதலனை சந்தித்த பாலத்தின் மேலிருந்து கீழே தூவவேண்டும் என்றும் அதற்கான
காரணத்தை கடிதத்தில் எழுதி இருக்கிறார். அந்தக்கடிதத்தை படிக்கிறாள் மகள்.
அதில் தான் கணவரில்லாத வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்ததாக
எழுதியிருக்கிறது. தன் தாய் வேறொருவனுடன் சோரம் போனதை படிக்க மறுத்து வெளியேறுகிறான் மகன். அவள் கடிதத்தை தொடர்கிறாள், நமக்கு கதை
காட்சிகளாக விரிகிறது.

அழகான குடும்பம், அன்பான கணவன், 16 மற்றும் 14 வயது நிரம்பிய ஆண்
மற்றும் பெண் பிள்ளைகள். அவளைத்தவிர்த்து மற்ற அனைவரும் கண்காட்சி
ஒன்றிற்காக நகரம் செல்கிறார்கள். எல்லாருக்கும் கையசைத்து விடைகொடுக்கிறாள்.
வீட்டின் முன் பரந்த பசும்புல்வெளி. தூரத்தில் ஒரு வாகனம் வருகிறது
அதுதான் ஈஸ்ட்வுட்.

ஈஸ்ட்வுட் ஒரு புகைப்படக்காரர். natioanal geographic ல் வேலை செய்கிறார்.
கதையில் வரும் கிராமத்தில் மரத்தாலான ஒரு பாலத்தை புகைப்படம் எடுக்க
வருகிறார். அந்தப்பாலம் முழுக்க மரத்தால் ஆனது. கிட்டத்தட்ட வேட்டையாடு
விளையாடு படத்தில் உயிரிலே எனது உயிரிலே பாடலில் வருவது போல அழகாக
இருக்கும். உலகம் முழுக்க சுற்றி புகைப்படம் எடுப்பது இவரின் வேலை அதுவே பொழுதுபோக்கு. புகைப்படம் எடுக்கப்போகும் இடத்தைப்பற்றி அப்பெண்மணியிடம்
வழி கேட்கிறார். வழிசொல்வதில் தடுமாற்றமிருப்பதால் தானே உடன் வந்து
காண்பிப்பதாக சொல்லி இருவரும் பாலத்தை நோக்கி செல்கிறார். போகும்போது
பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொள்கிறார்கள். தான் பிறந்தது இத்தாலியில் பிறந்ததாக சொல்கிறாள். உலகம் சுற்றும் புகைப்படக்காரனாகிய ராபர்ட்(ஈஸ்ட்வுட்) தான் அந்த
இடத்தை அறிவதாகவும் அது அழகாக இருந்தமையால் போகின்ற வழியை
தவிர்த்துவிட்டு ரயிலில் இருந்து அங்கே இறங்கி தங்கியிருந்ததாகவும் சொல்கிறார்,
அங்கே ஆரம்பிக்கிறது ஆச்சரியம். அதிலிருந்து படம் முழுக்க ஆச்சரியம்தான்.



புகைப்படம் எடுக்க சாத்தியமில்லாத நேரத்தினால் மறுநாள் எடுப்பதாக ராபர்ட் முடிவெடுக்கிறார். இரவு உணவிற்கு அழைக்கிறாள் அவள். சம்மதிக்கிறார் ராபர்ட். பேசுகிறார்கள். ஒருவரின் உலகம் மற்றொருவரின் உலகத்தைத் தாண்டி ஒரேமாதிரி பிரதிபலிக்கிறது. நிறைய பேசுகிறார்கள். படத்தில் முக்கியமாக சொல்லவேண்டிய
விஷயம் இருக்கிறது. காட்சிகளுக்கேற்ப வானொலியிலோ அல்லது மதுவிடுதியிலோ காட்சிக்கேற்ற பாடல் ஒலிக்கிறது. சுப்ரமணியபுரம் படத்தில் வருவது போல.

மதுவருந்தியபடி தனித்த வீட்டில் பேசுகிறார்கள். பேச்சின் முடிவில் மனஸ்தாபம் உண்டாகிறது. உண்மையில் அந்த வருத்தம் அவளின் கனவுகளை அவன்
பிரதிபலித்ததால் உண்டாவது. அதை ஏற்க மறுக்கிறாள். வெளியேறுகிறார் ராபர்ட்.
தன் தவறு உணர்கிறாள் அவள். மிகுந்த மன வருத்தத்துடன் அந்த பாலத்தில்
புகழ்பெற்ற நாவலின் பிரிவுறுத்தும் வரிகளை தாளில் எழுதி பதிக்கிறாள். மறுநாள்
புகைப்படம் எடுக்கவரும் ராபர்ட் கடிதத்தினை வாசிக்காமலே யார் எழுதியது என்று புரிந்துகொண்டு தொலைபேசுகிறார். சந்திக்க நிகழ்ச்சிகள் முடிவாகின்றன.
சந்திப்பிற்கு பிரத்தியேகமாக தன்னை தயார்படுத்திக்கொள்கிறாள் அவள்.

சந்திப்பின் முடிவில் உடல் கலக்கிறார்கள். இரண்டு நாட்கள் உலகம் மறந்த
வயது முதிர்ந்த காதலர்களின் பயணம். பிரிவுணர்த்தும் காலம் வருகிறது.
வாய்க்கப்பட்ட உலகம், தனக்கு உள்ள பொறுப்புகளைக் களைந்து தன் காலம்
கடந்த காதல் நிமித்தம் ராபர்ட்டோடு வெளியேற மறுத்து தத்தமது காதலை
நினைவில் வைத்து இருவரும் பிரிகிறார்கள்.

மறுநாள் முதல் இருவரும் தங்களின் வழக்கமான நாளை சந்திக்கிறார்கள்.
மிகுந்த மனவலியுடனே தன் அடுத்த நாளை எதிர்கொள்கிறாள் அவள்.

காலங்கள் கரைகின்றன. கணவன் மரணப்படுக்கையில் சொல்கிறார். நான் என்
வாழ்நாள் முழுவதும் உன்னைப் பெரிதும் நேசித்தேன். உனக்கு வேறு கனவுகள்
இருந்தது என்று எனக்குத்தெரியும் ஆனாலும் உன்னைப் அதனிலும் பெரிது நேசித்தேன்
என்று சொல்லி மறைகிறார்.

ராபர்ட் மற்றும் அவளின் உறவுகள், சந்திப்புகள் சாட்சியாக அந்தப்பாலம் மட்டுமே
இருக்கிறது மற்ற எந்த தொடர்புகளும் இல்லை. ராபர்ட் இறந்தபிறகு அவளுக்கு
ஒரு பார்சல் வருகிறது. ராபர்ட்டின் கடைசி ஆசையாக அவரின் உடைமைகள் என்று
கருதப்படுகிற கேமிரா மற்றும் கடிதங்கள் அவள் வசம் சேர்ப்பிக்கவும் அவரின் அஸ்தி
அந்த பாலத்தின்கீழ் ஓடும் ஓடையில் தூவ வேண்டும் என்பதே அவரின் இறுதி ஆசை.

கடிதத்தைப் படித்ததும் நெகிழ்கிறாள் அவள். இருவருமே தாங்கள் இறக்கும் வரை
தத்தமது காதலை யாரிடமும் சொல்லாமலே இறக்கிறார்கள் கடைசியாக தன் உயிலின்
மூலம் தனது அஸ்தியை அதே பாலத்தின் அடியில் தூவ வேண்டுமாய் பிள்ளைகளுக்கு விண்ணப்பிக்கும் அந்த கடித்தத்தின் மூலமே பிள்ளைகளுக்கு தெரிகிறது.

இந்த இடத்தில் அவளின் மகள் உடனே தன் கணவருக்கு தொலைபேசி தன்
இதே வீட்டில் வசிக்கப்போவதாகவும் உங்களை மிகவும் நேசிக்கிறேன் என்றும்
கண்ணீர்ப்பெருக்குடன் சொல்கிறாள். அவள் மகன் தன் மனைவியை உடனே
சென்று பார்க்கிறான். புதிதாக பார்ப்பதுபோல.

ராபர்ட் நான்கு நாட்கள் என்ற பெயரில் எழுதிய புத்தகம் ஒன்றை எழுதி
அத்துடன் அனுப்புகிறார். அவளுடன் கழித்த அந்த அற்புத நான்கு நாட்களைப்
பற்றிய குறிப்புகள் அதில் உள்ளன. அந்த நூலின் முதல் பக்கத்தில் இருப்பது அவள்
எழுதி பாலத்தில் ஒட்டிய அந்த நான்கு வரி வாசகம். உண்மையில் இந்தக்
காட்சியில் சிலிர்த்துவிட்டது.

மேலோட்டமாய் பார்த்தால் ஒரு திருமணமான பெண் இன்னொரு ஆணிடம்
படுத்துக் கொள்வதாய் தெரிந்தாலும் உடல் சுகம் தவிர்த்த ஏதோ ஒன்று உணர்ந்ததினால் மட்டுமே தன்னை பறிகொடுக்கிறாள். ஈர்ப்புகள் எந்த வயதிலும் வரலாம் வயோதிகம்,
குடும்ப அமைப்புகள் அதற்கு ஒன்றும் தடையல்ல.

நீங்கள் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கும் இதே சமயத்தில்தான் உங்களது
கணவனோ/மனைவியோ வேறொரு உலகத்தை கற்பிதம் கொண்டு உங்களொடு வாழ்ந்துகொண்டிருக்கலாம். ஆக காதல் அல்லது ஒரு ஆண்/பெண் திருமணம்,
காதல் என்பவற்றைத் தாண்டி உலகில் வேறொரு எதிர்பாலினத்துடன் இணைய
ஏக சந்தர்ப்பங்கள் வாய்த்துக்கொண்டே இருக்கின்றன. இதை அனைவரும்
உணரவேண்டும்.

படம் பார்த்து முடித்தவுடன் தோன்றியது இதுதான். இந்தப்படம் பார்க்கையில்
ஒரு நாவலை படிப்பது போன்ற உணர்வைத்தந்தது. நம் சினிமாவைப் பொறுத்தவரை நாவலை படமாக்குவது என்பது நாவலுக்கு செய்யும் துரோகத்தைப்போன்றது.
(கிட்டத்தில் ரசித்தது ஒன்பது ரூபாய் நோட்டு மட்டுமே). ஆனால் இது அப்படியல்ல. இணையத்தில் தேடியபோது இந்தக்கதை உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில்
எழுதப்பட்ட பெரும் வெற்றியடைந்த நாவல். திரைப்படத்தின் பெயரிலேயே வெளி
வந்த நாவலை ஈஸ்ட்வுட் தயாரித்து இயக்கியிருக்கிறார்.

இதே சாயலில் மலையாளத்தில் ஒரு படம் உள்ளது ஒரே கடல். முற்றிலும் இதேமாதிரி இல்லாவிட்டாலும் கருவின் அடிநாதம் பிறன்மனை கவர்தல், கவர்தல்னு
சொல்றதைவிட காதல் என்று சொல்லலாம் காதல் அன்பென்றால்.

3 comments:

KARTHIK said...

// ஈர்ப்புகள் எந்த வயதிலும் வரலாம் வயோதிகம்,குடும்ப அமைப்புகள் அதற்கு ஒன்றும் தடையல்ல.//

உண்மைதான்
நல்ல பதிவு.

கோபிநாத் said...

விரைவில் பார்கிறேன்...

\\நீங்கள் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கும் இதே சமயத்தில்தான் உங்களது
கணவனோ/மனைவியோ வேறொரு உலகத்தை கற்பிதம் கொண்டு உங்களொடு வாழ்ந்துகொண்டிருக்கலாம். ஆக காதல் அல்லது ஒரு ஆண்/பெண் திருமணம்,
காதல் என்பவற்றைத் தாண்டி உலகில் வேறொரு எதிர்பாலினத்துடன் இணைய
ஏக சந்தர்ப்பங்கள் வாய்த்துக்கொண்டே இருக்கின்றன. இதை அனைவரும்
உணரவேண்டும்.\\

கலக்கல் ;)

ஒரே கடல் மட்டும் இல்ல...மிஸ்டர் அண்ட் மிஸ்ஸிஸ் ஜயர் படமும் கூட ;)

கதிர் said...

நன்றி கார்த்திக், கோபி