எல்லையற்ற அன்பு கொள்வோம்

Sunday, April 13, 2008

மொபைல் போன் தொலைந்து போனால்....

மொபைல் போன் தொலைந்து போவதால் உள்ள ஒரே நன்மை என்னவென்றால்
ஏண்டா மச்சான் போனே பண்ணலன்னு யாராச்சும் கேட்டால் மொபைல் தொலைஞ்சு
போய் நம்பர் காணாமா போச்சுடா மாப்ளன்னு சொல்லலாம். கடன்காரன், ஊர்க்காரன்
தூரத்து சொந்தம், தினமும் ஆபிஸ்லருந்து ஓசி போனில் ஒயிலாக பேசும் ஊழியர்கள்
இடமிருந்து கூட உபரியாக தப்பிக்கலாம்.

கடந்த வாரத்தில் ஒருநாள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது என் தலையணைக்கடியில்
இருந்த மொபைலை என் தூக்கம் கலையாமல் லவட்டிவிட்டார்கள். நான் கதவைப்
பூட்டாமல் தூங்கியதை எந்த உளவுத்துறையினர் அக்கொள்ளையர்களுக்கு தகவல்
கொடுத்தார்களோ தெரியவில்லை. விலைமதிப்புமிக்க பாவனா, நமீதா, இன்னபிற
திரை அழகிகளின் புகைப்படங்கள் தவறிவிட்டன. இளையராஜா பாடல்களும்
நானே பாடி பதிவு செய்த பாடல்களும் பொக்கிஷம் போல யாருக்கும் தெரியாமல்
பாதுகாத்து வைத்திருந்தேன் அத்தனையும் புஸ்.

காவல் நிலையத்தில் புகார் செய்ய போனபோது அங்கொரு கொடுமை சிங்கில் பீஸில்
ஆடியது. அங்கே இருந்த ஒரு போலீசுக்கு மருந்துகுப்பி அளவு கூட ஆங்கிலம்
தெரியவில்லை. எனக்கோ கட்டிப்போட்டு அடித்தால்கூட அரபி வராது. அக்கம்
பக்கத்தில் வார்த்தைகளை கடன் வாங்கி கூடவே சைகை நடனம் ஆடி அவர்களுக்கு
புரியவைத்தேன். போன் வாங்கியதற்கான ரசீது, சீரியல் எண், அடையாள அட்டை
எல்லாவற்றையும் கொடுக்க சொன்னார்கள். எதுவுமே இல்லாமல் வந்திருந்த எனக்கு
பேரதிர்ச்சி உடனே அறைக்குச் சென்று எடுத்து வருகிறேன் என்று வெளியே வந்தேன்.

என் நேரம் ஒரு டாக்சி கூட கிடைக்கவில்லை. மெதுவாக நடந்து செல்லும்போது
ஆப்பிரிக்கன் ஈஸ்டர்ன் தென்பட்டது. உள்ளே நுழைந்து இரண்டு புட்டிகள் வாங்கி
தொலைந்துபோனதை கொண்டாடிவிடலாம் என்று மனம் கணக்கு போட்ட நொடியில்
ஆவோ பாய் என்ற எனக்கு தெரிந்த இந்தி வார்த்தையில் ஒரு பாகிஸ்தானி டாக்சிகாரன்
அழைத்தான். போய் திரும்ப அழைத்து வர அவனுடன் இந்தியில் கதைத்து (ஆம் இந்தி)
அறை வந்தபோது ரசீது எங்கு வைத்தேன் என்பது மறந்துபோனது. கட்டிலையே புரட்டி
அடியில் இருந்த பேப்பரை எடுத்தால் ரசீதாக இருந்தது. மொபைலே கிடைத்த சந்தோஷம்
சீரியல் எண்ணும் அதிலேயே எழுதி இருந்தது.

மறுபடியும் அதே போலிஸ் ஸ்டேஷன். அவர்கள் கொடுத்த பாரத்தில் விடைகளை
நிரப்ப சொன்னார்கள். பேனா எடுத்து வரவில்லை. சூன்யமான முகத்துடன் அந்த
தாடி போலிசை பார்த்தேன். நம் ஊர்களிலாவது ஒருமீட்டர் செருப்பு தைக்கும் நூலில்
பேனாவை இறுக்கமாக கட்டி வைத்திருப்பார்கள். இங்கே அதுவும் இல்லை. பக்கத்தில்
நின்றிருந்த ஒரு சூடானியரிடம் கெஞ்சி வாங்கி நிரப்பி ரசீதின் நகல், அடையாள அட்டை நகல், எல்லாவற்றையும் இணைத்து கொடுத்தேன்.

இவ்வளவு சிரமத்துக்கு இடையில் கொடுத்தபோது அதை இடக்கையால் வாங்கி பிரித்து
கூட பார்க்காமல் ஓரமாக வைத்துவிட்டார் அந்த கனவான் இப்படியாகும் என்று தெரிந்து
இருந்தால் நானே புலனாய்வில் இறங்கி திருடனுக்கு வலை விரித்திருப்பேன். வெளியே
வந்து காவல் நிலையத்திற்கு பின்னால் இருந்த ஆப்பிரிக்கன் ஈஸ்டர்ன் கிளையினுள்
நுழையப்போனேன். அப்போதுதான் வேலை நேரம் முடிந்து கதவை அடைத்தார்கள்.
"ஐயா கருணையாக ஐந்து நிமிடத்தை தாருங்கள்" என்று என்று ஏலம் விட்டு படிப்படியாக
நான்கு, மூன்று, இரண்டு என்று கடைசியாக ஒருநிமிடம் கூட திறக்க முடியாது என்று
சொல்லி கதவை அடைத்து விட்டார் அந்த கறார் ஊழியர்.

தொலைந்து போனது கிடைக்கும் வரை தற்காலிகமாவது ஒரு சிம்கார்டு இருந்தால்
நல்லது என்று அதை வாங்க சென்றேன். அந்த மெகாமாலில் இதுவரை ஆங்கிலத்தில்
வந்திராத ஆங்கிலப் படங்கள் எல்லாம் விலைக்கு இருந்தன. அய்யா இது எல்லாம்
எந்த நூற்றாண்டில் வெளிவந்த படங்கள் என்று கேட்கலாம் போல இருந்தது.
இந்த பிலிப்பைன் தேசத்து பிகர்கள் பணம் எண்ணி கல்லாபெட்டியில் போடுவதற்கும்,
தொலைபேசிக்கு பதில் சொல்லவும் மட்டும் பிறந்தவர்களா என்ற சந்தேகம் அடிக்கடி
எனக்கு ஏற்படுவதுண்டு. கல்லாக்களில் நீக்கமற வெள்ளை நிற பிலிப்பினி பிகர்கள்
பொம்மைகள் போல அமர்ந்திருந்தன.

வயிறு பசித்தது. எங்காவது காரமாக உள்ளே தள்ளவேண்டும் போல இருந்தது. நேராக
தென்னிந்திய உணவு விடுதி நோக்கி சென்றேன். "இப்பதான் ரெடியாகிட்டு இருக்குங்க"
இட்லி தோசை வேணா சூடா கிடைக்கும் என்றார்கள். சரி எதாச்சும் கொடு என்றேன்.
போனில் பேசியபடியே ஒருவன் என் அருகில் உட்கார்ந்தான். புதிதாக வந்தவன் போல
ஊருக்கு போன் பண்ணி பிஸ்து காமித்துக் கொண்டிருந்தான் நடு நடுவே "ஆமா...
இல்லயா பின்ன.." என்று வேறு இந்தநேரத்தில் என் கையில் டுபாக்கி இருந்தால்
ரோட்டில் போன் பேசி செல்லும் அனைவர் வாயிலும் குறிபார்த்து சுடுவேன்.

போனை ஒரு வினாடி நிறுத்திவிட்டு "அண்ணே எனக்கு ஒரு ஆவூ" என்றான் அந்த
அண்ணாரும் "ஒண்ணே ஒன்னு போதுமா கண்ணு" என்று திருப்பி கேட்டார். இவன்
சைகையாலே பதில் அளித்தான். (இல்லயா பின்ன IST லைன் இல்லா) என்னால்
ஆர்வத்தை அடக்க முடியவில்லை போன் பேசிக்கொண்டிருந்தவனிடம் "ஏங்க ஆவூ"
என்றால் என்ன என்று கேட்டேன். ஆவூன்னா ஆனியன் ஊத்தாப்பம் என்ற தன் அரிய
சுருக்கு சொல்லை சொன்னார்.

"அப்ப சாதா வூத்தப்பத்த என்னன்னு சொல்விங்க? சாவூன்னா? என்று கேட்டேன். வேறு
இடம் பார்த்து உட்கார்ந்து கொண்டு ஆவூவை அவசரமாக சாப்பிட்டுவிட்டு வெளியேறினான்.

அறைக்கும் திரும்பும் வழியில் டாக்சியில் என் பக்கத்தில் இருந்தவர். என் மொபைல்
மாடல் போலவே வைத்திருந்தார். (Sony ericson k800i) அப்படியே புடுங்கிகிட்டு
கார்லருந்து குதிச்சிறலாமான்னு தோன்றியது. போனையே வெறித்து பார்க்க அவர்
பேண்டின் உள்பாக்கெட்டில் போட்டு பத்திரப்படுத்திவிட்டார்.

கடந்த ஒருவாரமாக எண்களை மொபைல் போனில் சேமிக்காமல் மனதில் மனனம்
செய்வது என்று முடிவுசெய்து சேமிக்காமல் விட்டுவிடுகிறேன். ஆனால் ஒன்றிரண்டு
தவிர மனனம் ஆக மாட்டேன் என்கிறது. தூங்கும்போது நிறைய எண்கள் கனவில்
வருகிறது, கார் நம்பர்கள் குறுக்கே வந்து குழப்பமளிக்கிறது, திடிரென்று என்
டெலிபோன் எக்ஸ்டென்சன் மறந்து போனது, உச்சகட்டமாக புதிதாக வாங்கிய எண்
என்னவென்று தெரியவில்லை. அலுவலக போனில் இருந்து 100 மைல் தள்ளி
இருந்த ஒருவருக்கு அழைத்து எண் உலாபேசி எண் என்னவென்று சொல்ல முடியுமா?
என்று கேட்டேன்.

"அண்ணே என்னண்ணே ஆச்சு? கவலபடாதிங்க எல்லாம் சரியாயிரும்..." நம்பர்
சொல்றேன் குறிச்சுக்கங்க என்று சொல்லி நம்பர் சொன்னார்.

சிறுவயதில் உறவுக்காரர்கள் வீட்டு டெலிபோன் எண் எல்லாம் டாண் டாண் என்று
சொல்வேன். மொபைல் வந்ததிலிருந்து மூளை என்ற வஸ்துவை உபயோகபடுத்தாமல்
விட்டதினால் துருப்பிடித்து விட்டது.



என்
எதிரே
எண்களின்
குவியலாக உள்ளது
எந்த எண்ணிலும் என்
எண்கள் இல்லை எதிரில்
உள்ள கார் எண்ணின் கூட்டுத்தொகை
என் காதலி வீட்டு எண்ணை ஒத்திருக்கிறது.
எங்கெங்கு காணினும் எண்களடா தம்பி எண்களடா
எத்தனை கோடி எண்கள் வைத்தாய் எங்கள் இறைவா..??

இதுக்கு பேர்தான் படிக்கட்டு கவுஜை.

Friday, April 11, 2008

ஒரே கடல்.

சென்ற வியாழன் இரவு அபுதாபி கலாச்சார மையத்தில் இந்திய திரைப்படவிழா
நடைபெற்றது. பதேர் பாஞ்சாலி மற்றும் ஒரே கடல் என்ற இரண்டு படங்கள்
திரையிடப்பட்டன. மிகவும் கவர்ந்த படமாக ஒரே கடல் பற்றி சில வார்த்தைகள்.

உலகத்தில் சில விஷயங்கள் தொடர்ச்சியான விகிதத்தில் நடந்து கொண்டேதான்
இருக்கின்றன. நமக்கான அனுபவங்கள் வரும்போது அவை புதிது போல தெரிகிறது
நிஜத்திலே எத்தனையாவது முறை இந்த உலகத்தில் ஏற்பட்டது என்று யாராலும்
சொல்ல முடியாது.

நாதன் (மம்முட்டி) சிறந்த பொருளாதார மேதை. வாழ்க்கையை கொண்டாடும் மனிதன்.
இந்த உலகத்தில் எதுவுமே புனிதமில்லை என்று நம்புபவன். வீடு முழுக்க புத்தகங்கள்
மதுப்புட்டிகள் என கணிப்பொறியுடன் வாழ்பவன். உறவு, காதல், போன்றவை மேல்
நம்பிக்கை இல்லாதவன்.



ஜெயக்குமார் (நரேன்) கல்யாணமாகி குழந்தை பெற்ற ஒரு வேலையில்லா பட்டதாரி
தீப்தி (மீரா ஜாஸ்மின்) நரேனின் மனைவி. வேலையில்லாத கணவனுடன் குடும்பம்
நடத்தும் அதிகம் படித்திடாத பெண்.

இவர்கள் மூவரும் ஒரே கட்டிடத்தின் வெவ்வேறு தளங்களில் வசிக்கிறார்கள்.
இவர்களுக்குள் நடப்பதுதான் கதை.

மீராவின் குழந்தைக்கு உதவுகிறார் மம்முட்டி நன்றி சொல்ல மம்முட்டியின் வீட்டுக்கு
வரும் மீரா அந்த வீட்டையும், தனியனான மம்முட்டியையும் கண்டு பிரமிக்கிறாள்.
இது அவளுக்கு முற்றிலும் புதியதான உலகம். தயங்கியவாறே நன்றி சொல்லிவிட்டு
செல்கிறாள். உதவிபெறல்களின் தொடர்ச்சியாக இருவருக்கும் உறவு ஏற்படுகிறது.
மம்முட்டியின் சிபாரிசில் கணவனுக்கு நல்ல வேலை கிடைத்து விடுகிறது.

மம்முட்டி மூலம் கர்ப்பமாகிறாள் மீரா. இதைச் சொல்ல வரும் மீராவினை தன்
அறிவுஜீவித்தனத்தால் காயப்படுத்தி அனுப்பும் மம்முட்டி. உடல்சுகத்தை தாண்டி
தன்னிடம் வேறெதுவும் எதிர்பார்க்கவில்லை என்ற உண்மை தெரியவரும்போது
மீராவுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் தான் கொண்டிருக்கும் நேசத்தை
புறக்கணிக்கும் போது ஏற்படும் மன உளைச்சலில் மனநிலை பாதிக்கப்படுகிறாள்.




இயல்புக்கு மாறான தொடர்ந்த சில சம்பவங்களில் மருத்துவமனையில்
சேர்க்கப்படுகிறாள். சில வருட சிகிச்சைக்குப் பின் குணமடைந்து கணவனுடன்
திரும்புகிறாள்.

இடைப்பட்ட காலத்தில் தனது வீடு மாறி, தான் தன்னை பறிகொடுத்த அதேவிதத்தில்
இன்னொரு வேலையில்லாதவனின் மனைவியுடன் தன் கணவனுக்கு தொடர்பு
இருப்பதை உணர்கிறாள். ஒரே கடல் என்ற தலைப்பிற்கு அர்த்தம் அந்நேரத்தில்
புரிய வரும். மிக வலிமையான தலைப்பு.

ஒரு அழகான பெண்ணின் காதலை, பரிசுத்தமான அன்பை, குடும்பத்தை கலைத்த
குற்ற உணர்ச்சியில் பெரும் குடிகாரராகிறார் மம்முட்டி. தன்னால்தான்
கர்ப்பமுற்றாள் என்பதை நம்ப மறுக்கிறார் அதன் விளைவாகவே மீரா மனநிலை பாதிக்கப்படுவதையும்நம்ப மறுக்கிறார். உண்மையை ரம்யா கிருஷ்ணன்
விளக்கும்போதும் நம்ப மறுக்கிறது. பேலா (ரம்யா கிருஷ்ணன்) உயர்தர பார்
நடத்தும் தனிமை பெண். திரைப்படத்தில் ஒரு பெண் பார் நடத்த வேண்டுமென்றால் இயக்குனர் அந்த பாத்திரத்திற்கு ப்ளாஷ்பேக் வைத்திருப்பார். அதற்கென்று சில
ரீல்கள் செலவில்லாமல் பாத்திரமே சொல்வது போல செய்து நம்மை
காப்பாற்றி விட்டார்.

உலக பந்தங்கள் அனைத்து சுயநலமானவை என்று நினைக்கும் அவனுக்கு
அடுத்தவனின் மனைவி மூலம் வாரிசு ஏற்படுவதை ஏற்க முடியவில்லை.
தொடர்ச்சியான சுயகேள்விகள் மூலம் பெரும் குடிகாரனாகிறார் மம்முட்டி. முடிவில்
தான் மீராவை காதலிப்பதை உணர்கிறார். இரு குழந்தைகளுக்கு தாய். கணவன்
என்ற பந்தங்களை விட்டு வேளிவர முடியாத ஒருத்தியின் மேல் காதல் என்பது
சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயம் அல்ல.

நம் சமூகம் கட்டமைத்த உறவுகளின் மேல் நம்பிக்கை இல்லாதது என்பது மேலை
நாட்டுக் கலாச்சாரம். நம் சமூகத்துக்கு முற்றிலும் பொருந்தி வராத கலாச்சாரம்.
புனிதங்களின் மேல் நம்பிக்கையில்லாதவன் உறவுச்சிக்கல்களின் முடிவில் காதலின்
புனிதத்தை உணர்கிறான். இருவரின் காதலையும் இச்சூழல் ஏற்க மறுக்கிறது.
மிகவும் சிக்கலான இக்கதையில் மிகச்சிறந்த நடிப்பாக மம்முட்டியையும், மீரா
ஜாஸ்மினையும் சொல்லலாம்.

புகழ்பெற்ற வங்காள எழுத்தாளர் சுனில் கங்கோபாத்யாயாவின் ஹீரக் தீப்தி என்ற
நாவலின் தழுவலே ஒரே கடல். மிக அபூர்வமான படம். தனது வாழ்க்கையில் நடித்த
மிகச்சிறந்த படம் என்று மீரா ஜாஸ்மின் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். மம்முட்டி
பற்றி சொல்லவேண்டியதில்லை. படத்தின் இருபெரும் தூண்கள் இவர்கள்தான்.
நரேனின் நடிப்பு சுமார். ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு திணிப்பாக மட்டும் உள்ளது.

நான்கே நான்கு பாத்திரங்கள் கொண்டு கலவையான உணர்ச்சிகளுடன் ஒரு மிகச்சிறந்த
படத்தை கொடுத்த இயக்குனர் ஷ்யாமப்ரசாத் அவர்களுக்கு பாராட்டுகள்.

நிச்சயம் தமிழில் எடுக்கவேண்டிய படம். மம்முட்டி கதாபாத்திரத்தில் நடிக்க தகுதியான
ஒரே நபர் கமல்ஹாசன் மட்டுமே!

Thursday, April 03, 2008

டகீலா கவுஜையுடன் இரு அழுகைகள்

தனியனான என் அறையில் மிக சமீப காலமாய்
சில பேச்சுக்குரல்கள் கேட்கின்றன.
முதல் முறையாக கேட்டது நாராயணனின் குரல்தான்
பலவீனப்படுத்தும் விதம் அவனின் வருகை
இருந்தது பின் குட்டினோவும் வந்தபோது
வாழ்க்கையின் கடைசி அத்தியாயம்
எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
என் மந்தமான புத்திக்கு பெண் வீழ்த்துதல்
பற்றித் தெளிய வெகுநேரம் பிடித்தது.
அதற்கும் மந்தத்திற்கும் தொடர்பில்லை
என்று தெரியவந்தபோது கஸ்தூரியின் மீது
வியப்பு ஏற்படவில்லை. இப்போதைக்கு
நகுலனையும் நவீனனையும் பிரித்தாளுவதுதான்
பெரிய பிரச்சினையாக இருக்கிறது நடுவில்
சுசீலாவின் பிரதி வேறு.

வார்த்தைகளே நீங்கள் என்னை எங்கே அழைத்துச் செல்கிறீர்கள்?

டகீலா கவிதைகள் என்று வகைப்படுத்தக் கூடிய கவுஜைகள் இவை.
டகீலா சாப்பிட்டவுடன் பழைய ஞாபகங்கள் வரும் என்று ஆப்பிரிக்க டகீலாக்காரி
சொன்னது உண்மைதான் என்ற ஞானம் விடியலில் வந்தது.

நன்றி - நகுலன்

------------

ஒரேநாளில் இரண்டு விதமான அழுகையை பார்க்க நேர்ந்தது. இரண்டுக்குமான
வித்தியாசத்தை நீங்களே பிரித்தறியலாம்.

ஏசியா நெட் சேனலில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவுகளில் ஐடியா (Idea)
ஸ்டார் சிங்கர் என்றொரு நிகழ்ச்சி. நல்ல குரல் வளம் உள்ள ஆரம்ப நிலை
பாடகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி. முதல் பரிசு நாப்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள
வீடு, இரண்டாம் பரிசு கார் இப்படியாக. இந்நிகழ்ச்சி கடந்த ஆறு மாதங்களுக்கு
மேலாக நடந்து வருகிறது. விறுவிறுப்பான நிகழ்ச்சி. தங்களது திறமையை
எவ்வளவு வெளிப்படுத்த முடியுமோ அவ்வளவு அழகாக வெளிப்படுத்துகிறார்கள்.
தரமான, கேட்க இனிமையாகவும் இருந்தது.

நேற்று முந்தைய தினம் பாடிய ஒருவர் பெயர் மறந்து விட்டது. ஏதோ ஒரு
ராகத்தில் பாட ஆரம்பித்தார். அரங்கமே அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தது
ராகம் தாளம் லயம் தெரியாத நானும் ரசித்துக்கொண்டிருந்தேன். பத்து நிமிடங்களுக்கு
மேலாக அதை பாடிக்கொண்டிருந்தார். உருகி உருகி பாடுவதென்பது அதுவாகத்தான்
இருக்கவேண்டும். அவர் பாடி முடிக்கும்போது உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் விட்டே
அழுது விட்டார். அவர் மட்டுமல்ல அங்கு அமர்ந்திருந்த மலையாளத்தின் புகழ்பெற்ற
பாடகர்கள் இரண்டு பேர் (M.G. Sreekumar தமிழில் ஒரே ஒரு பாடல் பாடியிருக்கிறார்
சின்ன சின்ன மழைத்துளிகள் - என் சுவாசக் காற்றே இன்னொருவர் சரத்), ஒரு இசையமைப்பாளர், மற்றும் உஷா உதூப் எனஅனைவர் கண்ணிலும் கண்ணீர்.

பாடினவர் இயல்பு நிலைக்கு திரும்ப சில நிமிடங்கள் பிடித்தன. அவர் பாடி
முடித்தவுடன் தான் அரங்கத்தில் உள்ளவர்கள் கூட இயல்பு நிலைக்கு திரும்பினர்.
நடுவர்கள் 96 மதிப்பெண்கள் வழங்கினர்.இதுவரை பெற்ற மதிப்பெண்களில்
அதிகபட்சம் இதுவே.

புரியாத கர்னாடக இசையென்றாலும் அதனை கேட்கையில் அப்படி ஒரு சாந்தம்.

ஒரு நல்ல இசையின் உச்சம் என்பது கேட்பவரையும், பாடுபவரையும்
நெகிழ்ச்சிப் படுத்துவதாக, பலவீனப்படுத்துவதாக கூட இருக்கலாம்.


இரண்டாவது அழுகையை பாருங்கள்

மானாட மயிலாட நிகழ்ச்சியை பார்க்கும் துர்பாக்கியம் எனக்கு வாய்த்ததை
என்னவென்று சொல்வது? எனக்கு ஏன் இரண்டு கண்களை படைத்து பின்
மானாட மயிலாட நிகழ்ச்சியையும் பார்க்க வைத்தாய் எங்கள் இறைவா...

இது நடன நிகழ்ச்சி (அப்படிதான் விளம்பரப்படுத்துகிறார்கள்)

ஒரு மூதாட்டி (இவரை மூதாட்டி என்றே சொல்ல வேண்டும்) கலவையான குத்துப்
பாடல்களுக்கு கலவையாக காலை அகட்டி அகட்டி வைத்து ஆடிக்கொண்டிருந்தார்.
குத்துப்பாடல்களுக்கேற்ற வேக அசைவுகள் தோன்ற இயலாத வகையில் பருத்த
உடலமைப்பு. இசைமாறுதல்களுக்கேற்ப தன்னை தயார்படுத்திக் கொள்ள அவர்
எடுத்துக்கொள்ளும் ஒரு வினாடி நேரத்தில் அசிங்கமான கெட்ட வார்த்தையால்
திட்ட வேண்டும் என்று நமக்கு தோன்றும் அடுத்த வினாடி ஆட ஆரம்பிக்கிறார்.

மதிப்பெண் வழங்கும்போது குறைவாகவோ அல்லது எதோ விமர்சனத்தை
அந்த நடுவ நாட்டாமைகள் வழங்க அம்மணி அங்கிருந்தே முகத்தை பொத்திய
வாறு குலுங்கி குலுங்கி அழுதுகொண்டிருந்தார். நாலு ஆங்கிள்களில் அதை
மறக்காமல் படமெடுத்து சோக பிண்ணனி இசையில் ஒளிபரப்பினர். பார்க்கவே
நாராசமாக இருந்தது.

ஏண்டா அழுவுறத கூடுமா காப்பி அடிக்கறதூ???

மேலே சொன்ன இரண்டு அழுகைக்குமான வித்தியாசத்தை நீங்களே புரிந்து
கொள்ளுங்கள்.

-----------

இந்த வார பிகர் பிரிவில் இரண்டு வாரமாக மாற்றம் செய்யவேயில்லை
இது குறித்து எந்த ஜொள்ளரும் கேள்வியெழுப்பாததை எப்படி எடுத்துக்கொள்வது.
இந்த பிகரையே பார்த்துக்கொண்டிருக்கலாம் என்றா? :)

Sunday, March 23, 2008

டம்போ டுபாம்பி கவிதைகள்-மொழிபெயர்ப்பு

நேற்று காலை கென்யாவின் தெற்குப் பகுதியில் இருந்து வெளியாகும் ஸ்வாஹிலி
தின இதழை படித்துக் கொண்டிருந்தேன். உலகின் மிக வேகமாக அழிந்து வரும்
மொழிகளில் ஒன்றாக இதை போக்குவரத்துறை அறிவித்திருக்கிறது. விசேஷம்
என்னவென்றால் அந்த தினசரியின் மூன்றாம் பக்கத்தில் கென்ய நாட்டின் கவிஞர்
"டம்போ டுபாம்பி" ஒரு அருமையான கவிதையை வெளியிட்டிருந்தார்.
பொதுவாகவே எனக்கு தெரிந்து காதல் கவிதைகளை கக்கா போகும்போது
படிப்பதுதான் வழக்கம். அது ஒரு மலமிலக்கியாக கூட சில சமயம் எண்ணி
இருக்கிறேன். ஆகவே அந்த புகழ்பெற்ற கவிஞரின் கவிதையை வலக்கையால்
தள்ளி அடுத்த பக்கத்தை புரட்டினேன். ஆனால் கவிதைக்கு நடுவில் இடம்
பெற்றிருந்த மதுப்புட்டியின் நிறம் இழுத்ததால் மீண்டும் இடக்கையால் தாளினை
திருப்பி அக்கவிதையை படித்தேன். இதை மொழிபெயர்க்க மிகுந்த சிரமம்
எடுத்தேன் என்று அப்பட்டமான பொய்யை நீங்கள் நம்பவேண்டும்.



தவம்போல மதுவருந்துதல்

ஒவ்வொரு விடியலிலும் முதல் காரியமாக தண்ணீர்
அருந்தும் பழக்கம் எனக்கிருந்தது.
ஒவ்வொரு முறை கக்கா போகும்போதும் சுருட்டு
வலிக்கும் பழக்கம் உற்சாகமானது.
மிகவும் உற்சாகமான சமயங்களில் சீழ்க்கை அடிக்கும்
என் மனநிலையை சிலர்தான் புரிந்துகொள்வர்.
நூலினை முனைமடிக்காது படிக்கும் பழக்கமும் மடிக்கும்
வழக்கம் உள்ளவரை வெறுக்கும் பழக்கமும் எனக்கிருந்தது.
பசிக்கும்போது உணவருந்துவது என் முக்கியமான
பழக்கங்களில் ஒன்று.
அழகிய பெண்களை கண்டால் ஒருகணம் அப்படியே
நிலைகுத்தும் என் பார்வையின் பழக்கத்தை
தவிர்க்க முயன்று தோற்றே வந்திருக்கிறேன்.
கவிதைகள் எழுதுவதை விரும்பவும் அதை வாசிப்பதை
வெறுப்பதும் என் முக்கியமான பழக்கம்.
இப்படி சொல்லிக்கொண்டிருப்பதே என் பழக்கம்.
ஒவ்வொரு மாலையிலும் காப்பியுடன் சுருட்டு பிடிப்பது
அபிமான பழக்கங்களில் ஒன்று.
ஒவ்வொரு இரவிலும் கிடார் வாசிக்கும் பழக்கமும் பின்
மதுவருந்துவது கூட என் பழக்கங்களில் ஒன்றுதான்.

ஆஹா இவனல்லவா கவிஞன்...

Monday, March 10, 2008

பிராந்து - நாஞ்சில் நாடன்



பேய்க்கொட்டு (1994) சிறுகதை தொகுப்பு வெளியான பின்பு எழுதப்பட்ட கதைகள் இவை.
மொத்தம் பதினெட்டு சிறுகதைகள்.

"உலகத்தரத்திலான தமிழ்ச்சிறுகதையின் வரலாறு தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும்
காலப்பகுதியில் முன்னேர் அல்லாத, கழுத்தேர் அல்லாத, கடைசி ஏரும் அல்லாத
எனது சிறுகதைகள்" கால்நூற்றாண்டுகளுக்கு மேல் எழுதிக்கொண்டிருக்கும் இவரின்
எந்தவித தன்மிகை இல்லாத முன்னுரை மேலும் நம்மை ஈர்க்கிறது.

பிராந்து பிடித்துக் கொண்டிருக்கும் அல்லது ஏற்கனவே பிடித்து விட்டிருக்கும் காலக்
குறுக்கு வெட்டை கவலையோடு கவனித்துக் கொண்டிருப்பவன் கலைஞன். சுழன்று
சுழன்று கோட்டம் விழுந்து விட்டது போலும் பூமியின் அச்சில். இயற்கையின்
செயற்பாடுகளில், இயற்கையை அண்டியும் போராடியும் வாழும் மனித மனங்களின்
வெளிப்பாடுகளில் இந்த கோட்டம் வெளிப்படையாகக் காணக்கிடைக்கிறது.

"இனி மீட்சியே இல்லை எனத் தோன்றும்போது ஒப்பவும் மறுக்கிறது கலைஞனின்
மனம் நம்பிக்கை என்பதோ நம்பிக்கை இழப்பு என்பதோ கையிலிருக்கும் தீவட்டி
வெளிச்சத்தில் காண முயல்வதுதானா? என் தீவட்டி எப்போதும் என் மனத்தில்:
என் கரங்களில் அல்ல. அது எரிக்கும் ஒளி பாய்ச்சும். எண்ணையற்று கருகிப்
புகைந்தும் போகும்".

கால் நூற்றாண்டுக்கும் மேலாக எழுதிக்கொண்டிருக்கிறேன். தடம் பதித்து விட்டவனா
இல்லை தடம் தொலைத்து விட்டவனா என்பது புரிபடுவதில்லை பல சமயம்.
எல்லாத்தடங்களையும் அழித்துவிட்டுக் காடு செழிக்க வேண்டும் மறுபடியும்.
நம்பித் தொடர்ந்த தடங்களெல்லாம் தப்பாக தெரிகின்றன தற்போது.

- முன்னுரையிலிருந்து-

புனைவுகள் கற்பனைகள் என்ற வடிவங்கள் என்றுமே எழுத்தாளனின் மிகையுணர்ச்சி
மற்றும் கற்பனைத்திறனை சார்ந்து எழுதப்படுவது. வாசகனை ஈர்க்க வேண்டும்
என்ற யுக்தியுடன் எழுதப்படுபவை யாவும் எவரும் திறமை வளர்த்து எழுதலாம்.
ஆனால் உண்மையை/நிகழ்வை/வலியை எந்த வித மிகையும் இல்லாமல் பதிவிக்க
சிலரால் மட்டுமே முடியும். அந்த வகையில் நாஞ்சில் நாடனின் கதைகள் மிக
அபூர்வமானது.

சிறுகதைகள் சினிமா போல அல்ல. சினிமாவின் கதாநாயகர்கள் செய்யும் ஒரே
விதமான சாகசங்கள், காதல்கள், பாடல்கள் எதுவுமே இல்லாதது. எந்த
வித அலங்காரமுமில்லாது சம்பவத்தை பதிவித்தலே சிறுகதைகள். இப்போது
நிறைய சிறுகதைகள் வருகின்றன எல்லாவற்றையும் சிறுகதை என்று
ஒப்புக்கொள்ளமுடியாது. சினிமாவுக்கும் கதைக்கும் ஒரே ஒற்றுமை என்னவென்றால் பாத்திரங்களோடு தன்னையோ, பிறரையோ இணைத்து பின் உள்வாங்குதல்.
உங்களால் யாரையும் ஒப்பிட்டு பார்க்க முடியாத தருணத்தில் அந்த சிறுகதை/சினிமா உங்களை நெருங்காமலே சென்று விடும். நாஞ்சில் நாடனின் கதாநாயகர்கள்
சாகசங்கள் ஏதுமற்ற சாதாரண வாழ்வியல் மனிதர்கள். அதிகார/அலங்காரங்கள்
அற்ற பாத்திரங்கள் அவருடையது. பிராந்து என்றால் மனம்பிறழ்ந்த/பாதித்தவர்களை குறிப்பிடும் வார்த்தை. இச்சிறுகதைத் தொகுப்பின் ஒரு சிறுகதையாக பிராந்து
என்னும் சிறுகதையும் உண்டு. அதுவே இத்தொகுப்பின் தலைப்பாக வைத்திருக்கிறார். நாஞ்சிலின் தலைப்புகள் மீது எனக்கு தனி காதல் உண்டு உதாரணமாக


"என்பிலதனை வெயில் காயும்"
"எட்டுத்திக்கும் மதயானை"
"நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை"

"'நள்' என்று ஒலிக்கும் யாமம்"

எளிமையாகவும் அதே சமயம் வலிமையான அர்த்தம் கொண்ட தலைப்புகள். எட்டு
திக்கும் மதயானை தலைப்பிற்காக வெகுநாள் காத்திருந்தாராம். எதோ ஒருநாள்
அதிகாலை உறக்கத்தில் திடீரென்று உதயமானது என்று அவரே சிலாகித்திருக்கிறார்.

இதில் மனதை மிகவும் கலங்க வைத்த சிறுகதையாக "சாலப்பரிந்து" என்பதனை சொல்லலாம். படித்து முடித்த பின் சொல்லமுடியாத பாரம் வந்து தொற்றிக்
கொண்டது. எல்லாமே அனுபவத்திலும்/நேரிலும் கண்டதை எழுதும் நாஞ்சில்
சாலப்பரிந்து என்பதையும் எங்கோ கண்டு எழுதியிருந்தால் என்று தோன்றும்போதே
நெஞ்சை கனக்க செய்கிறது. கதையின் சுருக்கம் இதுதான் வயதான தாய் தனக்கும்
தன் குடும்பத்தினருக்கு உபயோகப் படாதபோது மகன், மருமகள் தன் மீது காட்டும்
உதாசீனம். ஒருகட்டத்திற்கு மேல் படுத்த படுக்கையாகி கிடக்கையில் இறந்து
விட்டாள் என்று கருதி ஊரெல்லாம் சொல்லப்போக அவள் இறவாமல் சீராக
மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறாள். "ஊரெல்லாம் செத்துட்டான்னு சொல்லியாச்சு
விடியறதுக்குள்ள மூச்சு அடங்கற மாதிரி தெரியல" பாத்ரூம்ல கொண்டு வச்சு
நாலு வாளி தண்ணி ஊத்துங்க சவம் அப்பவாச்சும் சாகுதான்னு பாக்கலாம்னு
மருமகள் சொல்கிறாள். மகனும் வேறு வழியின்றி காற்று போன பலூன் மாதிரி
இருக்கும் கிழவியை தூக்கி வந்து கழிவறையில் வைத்து தண்ணீர் ஊற்றுகிறான்.
"கிழவி சிரித்த மாதிரியே இறக்கிறாள்" இப்படி முடியும் கதையை யார்
படித்தாலும் அடுத்த பத்து நிமிடங்களுக்கு மனது அலைபாயும்.

வட்டார வழக்குகளில் மட்டும் எழுதி மொழியை சிதைப்பவர் என்ற குற்றச்சாட்டு
இவர் மீது உண்டு. அது மிகவும் தவறான குற்றச்சாட்டு வட்டார வழக்கிற்கும்
உருவம் உண்டு மொழியை சிதைப்பதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. கதையின்
தன்மைக்கு எது பொருந்துகிறது என்பதை படைப்பாளிதான் தேர்ந்தெடுக்கவேண்டும்
அந்த வகையில் தன் நிலைப்பாட்டின் மேல் உறுதியாக இருப்பது பாராட்டத்தக்கது.
இவர் தேர்ந்தெடுக்கும் சொற்கள் கூட சாதாரணமாக இருந்தாலும் அசாதாரண
தன்மை கொண்டவையாக இருக்கும்.

பேப்பர், பேனா, தபால் தலை, அஞ்சல் உறைக்கு கூட போதுமானதாக
இல்லாதவாறுதான் சிறுகதை படைப்பாளிக்கு சன்மானம் அளிக்கப்படும் சூழல்
நமது. உலகத்தரம் மிக்க படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழலில்
எத்தனையோ படைப்பாளிகளின் வாழ்க்கைத் தரம் இன்னமும் சிக்கலான
நிலையில்தான் இருக்கிறது. "நேர்காணல்" மற்றும் "காக்கைக்கு கூகை கூறியது"
போன்ற சிறுகதை எந்த மிகையுமில்லாமல் படைப்பட்டிருக்கிறது. நடப்பு
உலகத்தில் கூட உதாரணங்கள் கூறலாம் நல்லநாள் என்றில்லாமல் வேறு
எந்த நாளிலோ கூட நடிக,நடிகர்கள்,அரசியல்வாதி தவிர்த்து எந்த தொலைக்
காட்சியிலாவது எழுத்தாளனின் நேர்காணலை பார்த்திருக்கிறீர்களா? எந்த
எழுத்தாளனும் தொலைக்காட்சி நேர்காணலை எதிர்பார்த்து இல்லாவிட்டாலும்
குறைந்தபட்ச அங்கீகாரம் இல்லாவிட்டால் என்ன நிகழும் என்பதுதான்
நேர்காணலின் கதை.

சில விஷயங்கள் மிகவும் சாதாரணமாகவும் சில நல்லெண்ண முயற்சிகள்
அபாயகரமான விளைவுகளையும் தரக்கூடும். பேருந்தை தவற விட்டு வருகையில்
சில திருடர்கள் தேங்காய் களவாடுவதை பார்க்கிறான். புகார் சொல்லபோனால்
கண்டும் காணாமல் இருக்க கடைசியில் திருடனே அவனை கூப்பிட்டு இளநீர்
வெட்டி தருகிறான்.

சாகித்ய அகாடமி விருதை புறந்தள்ளும் கும்பமுனி என்கிற எழுத்தாளரின் வேதனை.
இக்கதையில் வரும் எள்ளல் அசாத்தியமானது.

சுய மதிப்பீடுகளின் சாயம் இழந்த விட்ட மனிதர்களை காணச்சகியாமல் அரசு
வேலையை ராஜினாமா செய்த மந்திரமூர்த்திக்கு ஊர் வைத்த பெயர் "பிராந்து"

கதைகளின் ஊடாக இவர் தரும் நகைச்சுவை மிகுந்த சிரிப்பை வரவழைக்க கூடியது.
இவருக்கு மட்டுமே சாத்தியமான நுண்ணிய நகைச்சுவை உணர்வு. பொதுவாக
தென்பகுதி எழுத்தாளர்களின் படைப்புகளில் இவற்றை காணலாம். இவரின் பாதை
தனித்து தென்படும்.

வாலி, சுக்ரீவன், அங்கதன் வதைப்படலம் கதையில் கல்லூரியின் பாடத்திட்டதில்
உள்ள எழுத்தாளன் அப்பல்கலைக்கழகத்து உரையாற்ற அழைக்கப்படுகிறான். போக
வர ஆகும் செலவு அறுநூறு ஆனால் அங்கே சன்மானமாக தரப்படுவதோ கவரின்
உள் மடித்து வைத்த பத்து பத்து ரூபாய் நோட்டுகள். சம்பளமில்லாத விடுப்பில்
பயணம் சென்று வரும் சன்மானம் இதுதான். படைப்பாளியின் அனுமதியின்றி
பாடத்திட்டத்தில் சேர்த்த கதையை யாரோ ஒருவர் தெரியப்படுத்துவதன் மூலம்
தெரிந்துகொள்வது என இக்கதை தமிழ்ச்சுழலை நினைவுபடுத்துகிறது.

தொகுப்பில் உள்ள அனைத்து மிகத்தரமான சிறுகதைகள்.

விஜயா பதிப்பகம்
விலை ரூபாய் 100
நன்றி Anyindian.com

ஸ்ருதி கமல்ஹாசன், சிம்பு, தருண்கோபி மற்றும் வேதிகா





ஒனிடா டீவி என்றாலே விளம்பரம் வித்தியாசமாக இருக்கும். சில வருடங்களுக்கு
முந்திய ஓனிடா டீவி விளம்பரம் பார்த்திருப்பீர்கள். அதில் வெள்ளைக்கார பெண்மணி
வாயை அகல விரித்து பெருங்குரலெடுத்து "ஓ..." வென்று கத்துவார் (பாடுவார்)
அப்போது அவருக்கு முன்னே "சரக்கடிக்க உபயோகப்படும்" மெல்லிய கண்ணாடி
தம்ளர் காட்டப்படும். வெ.பெண்மணி உச்சஸ்தாயியில் பாட ஆரம்பிக்கும்போது
கேமரா பின்னோக்கி நகரும். சோபாவில் உட்கார்ந்து கண்ணாடி தம்ளரை கையில்
பிடித்தபடி சோபாவில் உட்கார்ந்து கொண்டு ஒருவர் தொலைக்காட்சி பார்த்துக்
கொண்டிருப்பார். தொலைக்காட்சியில் அப்பெண் மேலும் உச்சஸ்தாயில் பாடும்
போது இவர் கையில் பிடித்திருக்கும் கண்ணாடி தம்ளர் படீரென உடையும்.
ஒனிடா தொலைக்காட்சியின் "ஒலித்திறன்" அப்படிப்பட்டது.

சமீபத்தில் ஸ்ருதி கமல்ஹாசனின் பேட்டியை பார்த்தபோது மேற்படி பெண்மணியின்
குரலுக்கும் இவருக்கும் அதிக வித்தியாசமில்லை. பேட்டி கண்டவர் பெயர் ஞாபகம்
இல்லை (சீரியல்களின் பெண்களுக்கு அடுத்தபடியாக இவர்தான் அதிகம் கண்
கசக்கியவர்) "தென்பாண்டி சீமையிலே" பாடலை மேற்படி பெண்மணியின் குரலில்
அம்மணி பாட ஆரம்பிக்க அதிர்ந்து போனேன் நான். எவ்வளவு உணர்ச்சியான
பாடல இப்படி காமெடி பண்ணிட்டாங்களேன்னு ஆனால் அவங்க கீபோர்டு
வாசிச்சது அவ்வளவு அழகா இருந்தது. அவங்களும்தான்.

பாடலை பாடி முடிச்சதும் பேட்டி எடுத்தவர் சொல்றார். "அய்யோ இந்த பாடல
இவ்ளோ அழகா பாடமுடியும்னு எங்களுக்கு தெரியாமலே போச்சு. எனிவே ரொம்ப
தேங்ஸ் ஆவ்சம், எக்சலண்ட்னு ரொம்ப ஜாஸ்தி கூவினார். (டேய் வுட்டா கால்லயே
வுழுந்துடுவ போலருக்கு). ரெண்டு பேருல யாரு வாசிச்சதுன்னு ஒரே குழப்பாச்சு.
சும்மா சொல்லக்கூடாது நல்லா கீபோர்டு வாசிக்கறாங்க. ஆங்கிலப்பாடலுக்கு ஏற்ற
குரல். பேசும்போது அப்படியே பெண்மை கலந்த கமலினை ஞாபகபடுத்துகிறார்.

என்னைப் பத்தி சொல்றதுக்கு என்ன இருக்கு? "நான் பொய் சொல்ல
மாட்டென், திருட மாட்டேன், கோவம் ஆக மாட்டேன்" இதெல்லாம் யார்
சொன்னாலும் பொய்.
(இந்த இடத்துல அப்படியே கமல் ஸ்டைல்)என்னைப் பத்தி
இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு கேளுங்க அப்ப சொல்றேன். பேசும்போது தலைய
சாய்ச்சு. குனிஞ்சு, முகத்தை சுழிச்சி இந்த மாதிரி எல்லாத்தையும் குழந்தை
மாதிரி செய்தது ரசிக்க முடிஞ்சது.

லாஸ் ஏஞ்சல்ஸ்ல மியூசிக் கத்துகிட்டிங்க, லாஸ் ஏஞ்சல்ஸ்ல மியூசிக்
கத்துகிட்டிங்கன்னு ஒரே லாஸ் ஏஞ்சல்ஸ் புராணமா விட்டுகிட்டிருந்தாரு கேள்வி
கேட்டவர் நான் அவர ஒரு கேள்வி கேட்க ஆசைப்படுகிறேன். இந்தியாவிலருந்து
ஸ்ருதிதான் மொதமொத அமெரிக்கா போனாங்களா/போய் மியூசிக் கத்துகிட்டாங்ளா?
ஏன்யா இந்த மாதிரி பெரிய இடம்ன உடனே உடம்ப வளைச்சு கேள்வி கேக்கறிங்க?
ஏன் சொல்றேன்னா இதுக்கு முன்னாடி அஜித் பேட்டி கலைஞர் டீவில வரும்போது
என்னவோ அவர கடவுள் ரேஞ்சுக்கு வச்சு காபந்து பண்ணாங்க. இந்த பொண்ணு
இன்னும் அதிசயிக்கற மாதிரி ஒண்ணூமே பண்ணல. அதுக்குள்ள ஏன்யா இப்படி
மீடியா லைட்ட போடறிங்க?.

இசைத்துறைய பொறுத்தவரை இவர் என்ன சாதிப்பார் என்று தெரியவில்லை.
ஆனால் சினிமாத்துறையில் நிச்சயமாக சாதிப்பார். புலிக்கு பிறந்தது கண்டிப்பாக
பூனையாக இருக்காது. :) மியாவ்வ்

அடுத்ததா அனுஹாசன் மேல பயங்கர கொலவெறில இருக்கேன். காளைனு ஒரு
வெற்றி படமாம் அதுல நடிச்ச சொம்பு, வேதிகா மற்றும் இயக்குனர கூப்பிட்டு
காபி வித் அனுல பேச விட்டுருக்காங்க. ஒரு மொக்க படத்த எடுத்ததுமில்லாம
அத பத்தி பேசறதுக்கு ஒரு நிகழ்ச்சி அத ஊர் உலகம் பாக்கறதுக்கு ஒரு
தொலைகாட்சி மற்றும் இணையம். என்ன எழவுடா சாமி.

நானும் தெரியாமதான் பாக்கறேன் டீவி புரொக்ராம்ன உடனே இந்த கீரோயின்லாம்
எங்கருந்துதான் இந்த ஸ்லீவ்லஸ் டாப்ஸ் வாங்கறாங்களோ தெரில. ஃபேன் ஓடாத
இடத்துல, காற்றோட்டம் அதிகமில்லாத இடத்துல கூட அவுங்க முடி அலைபாயும்
உடனே அத எடுத்து காதுல சொருவுவாங்க. இந்த மாதிரி அக்குள் காட்டி பேட்டி
குடுத்தின்னா போட்டிய எடுத்துடுவம்னு மிரட்டினாதான் ஒழுங்கா பெக்கெ பெக்கெனு
சிரிக்காம இருக்கும்.

தருண்கோபி எடுத்த திமிரு கன்னாபின்னானு ஓடுச்சாம். நான் சொல்வேன் பேரரசு
வரிசைல இவரும் ஒரு விஷச்செடி.

டென்சன் டென்சன் டென்சன் ஒரே டென்சனப்பா...

இப்படிக்கு
வெட்டியாக ஆபிஸ் நேரத்தில் youtube வீடியோ பார்த்து பதிவெழுதும் சங்கம்.

Sunday, March 09, 2008

நடிப்பு சுனாமியின் அடுத்த படம் தயாராகிறது!!!

தமிழக மக்களுக்கு ஏற்கனவே பரபரப்பான அறிமுகம் தந்தவரும் "கானல் நீர்"
படத்தில் அதிரடியாக தோன்றி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தவருமாகிய
முகவை குமார் என்கிற JK ரித்திஸ் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை
விடுத்துள்ளார். தனது முதல் படம் தந்த அதிர்ச்சியிலிருந்து தமிழக மக்கள் மீளும்
முன்பே அடுத்த படத்தையும் அறிவித்துள்ளது கண்டு மக்கள் சோகத்தில்
ஆழ்ந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் என் பங்களிப்பு
கணிசமாக இருக்கவேண்டும் என்பதற்காக தொடர்ந்து படங்களில் நடிப்பேன்
என அறிவித்துள்ளதால் குழந்தைகள் முதல் பல்போன ஆயாவரை அனைவரும்
குலை நடுக்கத்தில் இருப்பதாக செய்திகள் குய்யோ முறையோ என்று
தெரிவிக்கிறது.

அவரது அடுத்தபடத்தின் தலைப்பே மிக வித்தியாசமாக அமைந்திருப்பதாக
அவரே குறிப்பிட்டு சிலாகித்தார்.
"பத்தாவது முடிச்சிட்டு சும்மாருக்கோம்" என்ற தலைப்பை
கேட்டவுடன் அவருக்கு பிடித்துவிட்டதாகவும் படத்தில் பத்தாவது படிக்கும் பையன்
வேடத்தில் நடிப்பதால் அதற்கேற்றவாறு முகத்தில் மேக்கப் அப்ப வேண்டும்
அதனால் கொட்டாம்பட்டி அருகிலிருந்து தெருக்கூத்து நடிகர்களுக்கு பவுடர்
போட்டு பளபளப்பாக்கும் மேக்கப் நிபுணர்களை ஸ்பெசலாக வரவழைப்பதாக
சொன்னார். படத்தின் அவரது மேக்கப் தனியாக தெரிய வேண்டும்
என்று இந்த ஏற்பாடாம்.

படம் வெகு ரகசியமாக எடுக்கப்படுவதால், சின்ன ஸ்டாம்ப் சைஸ் போட்டோ
கூட வெளிவரவில்லை. அதனால் அங்க இங்க பொறுக்கி பொறுக்கி எடுத்த
போட்டோக்கள்



பிகரின் பின்னால் கருஞ்சிறுத்தையென நிற்பவர்தான் ஜேகே ரித்திஸ், நன்றாக
உற்றூப்பாருங்கள். (என்ன கொடும்ம்ம சார் இதுனுலாம் புலம்ப கூடாது)

இங்கே ஜேகே ரித்திஸின் புஜபல
பராக்கிரமத்தை (அக்கிரமம்) காணலாம் மேலும் தனது அடுத்த ப்ராஜெக்ட் மற்றும்
அரசியல், சமூகம் குறித்த தனது பங்கையும் வெளிப்படுத்தியிருக்கிறார். ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் இணைய முகவரி அளித்திருக்கிறார். அவருக்கு
நீங்கள் மடல் செய்யலாம். உங்களுடைய சந்தேகங்களை அவர் தீர்ப்பார்.

பெயரிடப்படாத இன்னொரு படத்திலும் கையெழுத்திட்டிருக்கிறார். இரு
கதாநாயகர்களில் ஒருவராக இருந்தாலும் தனது எவர்சில்வர் பாத்திரத்துக்கு பங்கம்
வராமல் இருப்பதால் ஒத்துக்கொண்டிருக்கிறார். மேலும் இணைந்த கைகள், அக்னி
நட்சத்திராம், சின்னதம்பி பெரியதம்பி வரிசையில் இதும் மெகா வெற்றிப்படமாக
இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தாண்டு இறுதி வரை படப்பிடிப்பு இருப்பதால் தன்னுடைய கால்ஷீட், பெட்ஷீட் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வரை எதுவாக இருந்தாலும்
அடுத்த வருடம் மட்டுமே கிடைக்கும் என்றும் அறிவித்தார்.


ரித்திஸ் ரசிகராக என்னுடைய ஆசை ஒன்றே ஒன்றுதான் பேரரசு இயக்கத்தில்
விஜய டோ ராஜேந்தரும், ரித்திஸும் இணைந்து நடிக்க வேண்டும் என்பதே!

(கற்பனை பண்ணும்போதே உடம்பு சிலிர்க்குது)
பார்ப்போம் எம் கனவு பலிக்கிறதா என்று.

இப்படிக்கு உலக நடிப்பு சூறாவலி ரித்திஸ் ரசிகர் மன்றம்
அபுதாபி கிளை
கொல்லம்பாளையம் ரோடு
பொட்டிக்கடை சந்து
போஸ்டாபீஸ் எதிரில்
துபாய் 6003236568941115