எல்லையற்ற அன்பு கொள்வோம்

Wednesday, February 27, 2008

இராமரும் முருகனும் பிற்சேர்க்கையாக சுஜாதாவும்



பஞ்சாயத்து செய்திகளை சொல்ல பறையடிப்பவர் தெருமுக்குகளில் நின்று
சொன்னதெல்லாம் இப்போது அடியோடு மறைந்து விட்டது. பறையடிக்கும்போது
மோளத்தை சூடு காட்ட வைக்கோலினை சிறிது எடுத்து தீயிட்டு காயவிடுவார்கள்.
அப்போதே சிறுவர் கூட்டம் கூடி பறை இசையை ரசிக்க கூடிவிடும். எப்போது
அடிப்பார்கள் என்று எங்களுக்குள் போட்டியே நடக்கும். திடீரென்று மழைபெய்வது
போல் அடிப்பார்கள். கேட்டதும் கையை காலை அசைக்க தூண்டும் அடி.
மழைவிட்டது போல அடி நிறுத்தும்போது ஒருவர் ஓங்கி குரலெடுத்து ராகத்தோடு
பாடுவார். அனைத்து வீட்டிலிருந்து தலைகள் எட்டிப் பார்த்து செய்தி வாங்கும்.
சிலர் நெருங்கி வந்து விசாரிப்பர். பெரும்பாலும் இவையணைத்தும் அதிகாலையிலோ
அல்லது இரவிலோ நடக்கும். இப்போதைய ராப், அதிரும் ட்ரம்ஸ் இசைக்கெல்லாம்
ஆதி எதுவென கேட்டால் நிச்சயமாய் பறைமேளத்தை சொல்வேன்.

பறைமேளம் மூலம் செய்தி சொல்லும் முறையை நவீனமாக்கிதான் முருகன்
வந்தார்.

முருகனுக்கு ஒருகண் பார்வை மட்டுமே மறுகண் எப்படி போனதென்று
தெரியவில்லை. ஊருக்குள் அவரைத்தெரியாத ஆள் இருக்கு முடியாது. திருமணம்,
மஞ்சள் நீர், மரணசெய்தி, தியேட்டரில் புதிய படம் போட்டால் செய்தி, அரசியல்
நிகழ்ச்சி என அனைத்துக்கும் இவர் உதவி தேவை. ஒரு ஆட்டோவில் மைக்செட்
ஸ்பீக்கர் சகிதம் இவர் நுழைந்து விட்டால் அனைத்து காதுகளும் கூர்தீட்டி நிற்கும்
என்ன செய்தி சொல்லபோகிறார் என்று. சில சிறுவர் கூட்டம் ஆட்டோவின் பின்னால்
நோட்டீஸ் வாங்க என்று ஓடும். நானும் என் டவுசர் காலத்தில் நோட்டீஸ்
வாங்க அவர் பின்னே ஓடியிருக்கிறேன். ஆரம்பத்தில் ஆட்டோ வைத்து
விளம்பரம் செய்யும் வசதி இல்லை என்பதால் சைக்கிளில் ஒருவர் மிதிக்க
இவர் பின் அமர்ந்து சென்று செய்தி சொல்வார். பெருமாலும் விளம்பரம் மட்டுமே
சொல்வதுண்டு. மரண செய்திகளுக்கென்றும், விளம்பரசெய்திக்கென்றும், திருமண
செய்திக்கென்றும் தனித்தனி அலைகளில் பேசுவதை தொடர்ந்து கேட்பவர் மட்டுமே
உணர முடியும்.

உங்கள் பொன்மலை / க்ரசண்ட்
திரை அரங்கில்
நாளைமுதல் தினசரி நான்கு காட்சிகளாக
சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த (உலகத்துலயே இரட்டை வேடங்கள்ல
அதிக முறை நடிச்சவர் இவராத்தான் இருக்க முடியும்)
நாட்டாமை திரைப்படம்.
முதல்நாள் முதல் டிக்கெட் எடுக்கும் டிக்கெட் எடுக்கும் பெண்மணிக்கு
படையப்பா நீலாம்பரி சேலை இலவசம் என்று அவர் பேசும் அழகு தனி.


இன்றும் முருகனுக்கென்று தனி ரசிகர் கூட்டம் உண்டு.

இப்போது முருகன் பாணியை விட நவீனாமாக லோக்கல் கேபிள் சேனல்களில்
ஐந்து நிமிட இடைவெளியில் நாளுக்கு 8756 முறை ஒரே செய்தியை தொலைக்காட்சியின்
அடிக்கோடியில் ஓட விடுகிறார்கள். யாரும் பார்க்கத்தான் ஆளில்லை.

கடந்த இருபது ஆண்டுகளில் எங்கள் ஊர் கிராமம் என்ற வட்டத்தை விட்டு வெளியே
வந்து நகரத்துடன் இணைந்திருப்பதுடன் பல அரிய விஷயங்களை சிதைத்து விட்டு
இவ்வுருவம் பெற்றிருக்கிறது.

உதாரணத்திற்கு என் பள்ளிப்பருவத்தில் முடிவெட்ட இராமர் என்பவர் வருவார்.
வெற்றிலை குதப்பிய வாயுடனும், சிவந்த முட்டைக்கண்கள் உடைய பார்க்க
அச்சமூட்டுபவர் போல தோன்றினாலும். வாய் திறக்கும்போது வெள்ளந்தியாக
தெரிவார். "வா கண்ணு ஏன் பயப்படுற? செத்த நிமிசம் உக்காருப்பா...
என்று கெஞ்சுவார். அவர் வரும் திசை தெரிந்தாலே இரண்டு தெரு தள்ளி நிற்பேன்.
வலுக்கட்டாயமாக தேடி இழுத்து வந்து மனையில் உக்கார வைப்பார் அப்பா.
தலையில் தண்ணீர் தெளித்து 'கரக்' 'கரக்' என்று வெட்ட ஆரம்பிப்பார்.
வெட்டும்போது கண்ணாடியை நாம்தான் கையில் பிடித்திருக்க வேண்டும். இது
ஒன்றுதான் எனக்கு பிடிக்காத விஷயம்.

பின் அவரது வாரிசுகள் என்று சொல்லிக்கொண்டு கடைத்தெருவில் சலூன்கடை
வைத்தார்கள். முன்னும் பின்னும் பார்க்க பெரிய பெரிய கண்ணாடிகள். எந்நேரமும்
சிலு சிலுவென்ற பாட்டுச்சத்தம். கத்தரி மறைந்து அரைமணிக்கொருதரம் கடைக்குள்
வந்து தலை சீவி தலையை திருப்பி திருப்பி பார்த்து திருப்தியுறாத இளந்தாரிகள்
என்று மாறிப்போனபோது இராமரிடம் ஊரில் உள்ள பல் பெயர்ந்த கிழவாடிகள்
மட்டுமே வாடிக்கையாளர்கள் என்றானார்கள்.

சமீபத்தில் ஊருக்கு சென்றிருந்தபோது இராமரை சந்திக்க நேர்ந்தது. முக்கத்தில்
முதுமை வரைந்த கோடுகள். ஆனால் அதே பெரிய சிவந்த கண்கள் இம்முறை
பயம்காட்டவில்லை. நீண்ட கழியின் முனையில் பண்ணருவா பாதி வளைத்துக் கட்டி ஆட்டுக்கு குழை ஒடித்துக்கொண்டிருந்தார். வீட்டில் ஆடு வளர்க்கிறாராம்.
எப்போதாவது வரும் தொழில் மீது நம்பிக்கை அற்றிருக்கலாம்.


இன்று மொத்தமாக பத்துக்கும் மேற்பட்ட சலூன்கள். அத்தனையிலும் ஆளுயர
கண்ணாடிகள். முடிவெட்டும் கோவிந்தனிடமும், கண்ணனிடமும், லவ்லியிடமும்
இராமரின் சாயல்கள் மறைந்திருந்தன.
---

பின்குறிப்பு: இன்னிக்கு ஏண்டா ரீல் சுத்திகிட்டு இருக்கன்னு தோணுச்சுன்னா அதுக்கான
காரணம். இன்று அதிகாலை உறக்கத்தில் முருகன் ஆட்டோவுக்கு பின்னால்
கலர் கலராக நோட்டீஸ் வாங்கி அருகிலுள்ள பசங்களிடம் நாந்தான் அதிகம்
நோட்டீஸ் வாங்கினேன் என்று பெருமையட்டி பின் அதை கப்பல் செய்து அனைவரும்
வாய்க்காலில் விட்டதுபோல ஒரு கனவு. அதான் கொஞ்சம் சுத்தியாச்சு.
ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்த கனவ பத்தி எழுதலாம்னு நினைச்சேன். ஆனா
அதுக்கு "A" சர்டிபிகேட் கிடைக்கும் அவ்வளவு வன்முறை. அய்யனார் சொன்னா
அதையும் எழுதிடலாம்.
---

சுஜாதாவை நேரில் சந்தித்த போது அவர் குறித்த எந்த விதமான ஆச்சர்யங்களும்
இருந்ததில்லை ஏனெனில் நமது வாசிப்பு அந்த தளத்தில் விரிவடையாமல் இருந்ததே
காரணம். ஆனால் இவர்தான் சுஜாதா என்று தெரியும். கல்லூரியின் இறுதி பருவத்தில்
ப்ராஜெக்ட் செய்வதற்காக கோடம்பாக்கத்தில் உள்ள பென்டாசாப்ட் நிறுவனத்தில்
இருந்தபோது தினமும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். பார்க்கும்போதெல்லாம் எனக்கு
தோன்றியது இதுதான் 'இவரால் எப்படி பாய்ஸ் படத்துக்கு வசனம் எழுத முடிந்தது"
என்று. நான் பார்த்தபோது வயோதிகம் முற்றியிருந்தது. சிறிய உதவியில்லாமல்
காருக்குள்ளிருந்து வெளியே வரவோ, படி ஏறவோ முடியாது.

கோடம்பாக்கம் என்பதால் அடிக்கடி எதாவது ஒரு நடிக பிரபலத்தையும் அவர் பின்
சிறு கூட்டங்களையும் காணலாம். பென்டாசாப்ட் எதிரில் உள்ள பொட்டிக்கடையில்
நின்று புகைக்கும்போது எப்போதாவது நீல நிற ஸ்கோடா கார் வந்து நிற்கும்
"டேய் சுஜாதாடா" வாங்கடா போய் பேசலாம் என்று அழைப்பேன். "டேய் உனுக்கு
வேலையே இல்லையா" என்று விலகிவிடுவார்கள். ரசிகனுடன் நடிகர்கள் கொள்ளும்
வசீகரத்துக்கு இணையாக எழுத்தாளருக்கும் இருப்பதை கண்டு வியந்திருக்கிறேன்.
வேலை முடிந்து கிளம்புவதற்கு முன்னர் எப்படியாவது சந்தித்து பேசவேண்டும்
என்று நினைத்திருந்தேன். ஒவ்வொரு சமயத்திலும் நழுவிக் கொண்டே சென்று
கடைசியில் இல்லையென்றாகிப் போன போது பெரிதாக நட்டமேதுமில்லை
என்றாலும் பேசியிருக்கலாம் என்ற எண்ணம் அடிக்கடி தோன்றும். இனி அது
தோன்றாது.

இன்றளவும் சுஜாதாவின் "என் இனிய இயந்திரா" தவிர வேறெதும் படித்ததில்லை.
அவர் மீது நான் கொண்டது சினிமா மோகமேயன்றி வேறெதுமில்லை.

21 comments:

குசும்பன் said...

//சில சிறுவர் கூட்டம் ஆட்டோவின் பின்னால்
நோட்டீஸ் வாங்க என்று ஓடும்//

உங்க ஊர்ல ஆட்டோ ம்ம்ம்ம் சரி உங்க ஊரு போட்டோவில் காட்டிய ரோட்டில் ஒரு ஆள் சைக்கிளில் தானே போக முடியும், அப்புறம் எப்படி ஆட்டோ?

ஏதுனா இரண்டு வீல் உடைய அட்வான்ஸ் டெக்னாலஜி ஆட்டோவா இருக்கு

குசும்பன் said...

//ஆரம்பத்தில் ஆட்டோ வைத்து
விளம்பரம் செய்யும் வசதி இல்லை என்பதால் சைக்கிளில்//

தம்பி ”ரோட்டு” அப்படின்னனு ஒரு வார்த்தை மிஸ்ஸிங்.

ஆங் இப்ப மட்டும் அந்த வசதி வந்துட்டா?

வவ்வால் said...

தம்பி ,

இராமர், முருகர் அவர்கள் வாழ்வியல் குறித்தான அனுபவங்கள் ஆகியவற்றை சுவையாக அசைப்போட்டுள்ளீர்கள்.

கால வெள்ளத்தில் அடித்துசெல்லப்படும் பழமையின் நிலையே , சில சுவடுகள் மட்டும் எஞ்சியிருக்கும்.

//ப்ராஜெக்ட் செய்வதற்காக கோடம்பாக்கத்தில் உள்ள பென்டாசாப்ட் நிறுவனத்தில்
இருந்தபோது தினமும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். பார்க்கும்போதெல்லாம் எனக்கு
தோன்றியது இதுதான் 'இவரால் எப்படி பாய்ஸ் படத்துக்கு வசனம் எழுத முடிந்தது"
என்று. நான் பார்த்தபோது வயோதிகம் முற்றியிருந்தது.//

இன்னும் கனவு கலையவில்லையா, சுஜாதா மீடிய டிரிம்ஸில் இருந்து போனப்பிறகே பாய்ஸ் படம் வந்தது. அப்புறம் எப்படி அவரைப்பார்த்த போதெல்லாம் பாய்ஸ் படம் எப்படி செய்தார் என்று சிந்தனை ஓடியது :-))

கிட்டத்தட்ட பாய்ஸ் படம் வந்த போதெல்லாம் மீடியா டிரிம்ஸ் , பெண்டா சாப்ட் எல்லாம் இழுத்து மூடப்பட்டுவிட்டதே.

அந்த காலக்கட்டத்தில் வயோதிகம் தான், ஆனால் நன்றக நடந்துக்கொண்டிருந்தார், பீச்சில் பார்த்து இருக்கேன்.

குசும்பன் said...

//சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த (உலகத்துலயே இரட்டை வேடங்கள்ல
அதிக முறை நடிச்சவர் இவராத்தான் இருக்க முடியும்)
நாட்டாமை திரைப்படம்.
முதல்நாள் முதல் டிக்கெட் எடுக்கும் டிக்கெட் எடுக்கும் பெண்மணிக்கு
படையப்பா நீலாம்பரி சேலை இலவசம் என்று அவர் பேசும் அழகு தனி.//

அப்ப படையப்பா ரிலீஸ் ஆன பிறகுதான் உங்க ஊரில் நாட்டாமையே பார்த்தீங்களா?

என்னது ரஜினி நடிச்ச புதுபடம் தளபதி இந்த வாரம் ரிலீஸா? அப்படின்னும் கேட்பாங்களா உங்க ஊரில்:))

குசும்பன் said...

//பத்தி எழுதலாம்னு நினைச்சேன். ஆனா
அதுக்கு "A" சர்டிபிகேட் கிடைக்கும் அவ்வளவு வன்முறை. அய்யனார் சொன்னா
அதையும் எழுதிடலாம்.//

அம்புட்டு DVDயையும் நீ அய்யனாரிடம் இருந்து எடுத்து போகும் பொழுதே நினைச்சேன்:))

கதிர் said...

//கிட்டத்தட்ட பாய்ஸ் படம் வந்த போதெல்லாம் மீடியா டிரிம்ஸ் , பெண்டா சாப்ட் எல்லாம் இழுத்து மூடப்பட்டுவிட்டதே.//


//இன்னும் கனவு கலையவில்லையா, சுஜாதா மீடிய டிரிம்ஸில் இருந்து போனப்பிறகே பாய்ஸ் படம் வந்தது. அப்புறம் எப்படி அவரைப்பார்த்த போதெல்லாம் பாய்ஸ் படம் எப்படி செய்தார் என்று சிந்தனை ஓடியது :-))//

வணக்கம் வவ்வால்,

பாய்ஸ் படம் 2003 ஆகஸ்ட்ல வந்ததா ஞாபகம். 2004 வாக்கில நான் சென்னை வந்தபோது பென்டாமீடியால அவரை பார்த்திருக்கேன். அவர்கூட நின்னுகிட்டு எடுத்த போட்டோவோ, ஆட்டோகிராபோ, பார்த்த சாட்சியாகவோ எதுவுமே இல்லை என்னிடம். நிரூபிக்க முடியாமைக்கு வருந்துகிறேன். அதுவுமில்லாமல் சில்லறைச் சந்தேகங்களைத் தீர்க்க இது நேரமில்லை.

//அம்புட்டு DVDயையும் நீ அய்யனாரிடம் இருந்து எடுத்து போகும் பொழுதே நினைச்சேன்:))//

லேய் குசும்பா அம்புட்டும் நான் வாங்கினது. தெரியும்ல...

இராம்/Raam said...

ம்ம்ம்.... அழகா எழுதியிருக்கே கதிரு.... :)

சுரேகா.. said...

நல்ல அசைபோடல்...

யதேச்சையா...இந்த மாசம் எனக்கும் ஒரு கொசுவத்தி...பாருங்களேன்..

http://surekaa.blogspot.com/2008/02/blog-post_14.html

பரத் said...

//ஒவ்வொரு சமயத்திலும் நழுவிக் கொண்டே சென்று
கடைசியில் இல்லையென்றாகிப் போன போது பெரிதாக நட்டமேதுமில்லை
என்றாலும் பேசியிருக்கலாம் என்ற எண்ணம் அடிக்கடி தோன்றும். இனி அது
தோன்றாது.//


அடடா miss panniteengale :(

ILA (a) இளா said...

இராமர்-சிதைவுகள்- நல்லா இருக்கு. கதம்பம் வர வர வழக்கமாகிட்டே வருது..

கோபிநாத் said...

நல்ல கொசுவத்தி ;))

காயத்ரி சித்தார்த் said...

//சுஜாதாவை நேரில் சந்தித்த போது அவர் குறித்த எந்த விதமான ஆச்சர்யங்களும்
இருந்ததில்லை//

"நேரில் பார்த்தபோது" ன்னு சொல்லனும். :)

காயத்ரி சித்தார்த் said...

//அப்ப படையப்பா ரிலீஸ் ஆன பிறகுதான் உங்க ஊரில் நாட்டாமையே பார்த்தீங்களா//

:)))))))))

வெற்றி said...

தம்பி,
உங்கள் ஊரின் பழைய நினைகள் என் கிராமத்து வாழ்க்கையையும் அசை போட வைத்தது. நல்ல பதிவு.

Anonymous said...

Oorukku poyvittu vanthathin adaiyalama photo change
Shruthee kamal
aaam ethanai naalukkuthaan orae mugathai parpathu.. azhagairunthalum kooda

கதிர் said...

குசும்பா உனுக்கு ஒருநாள் வைக்கிறேண்டி ஆப்பு!

நன்றி வைகை ராம், சுரேகா

பரத்,

எதுவுமே பக்கத்துல இருக்கும்போது அருமை தெரியாதுன்னு சொல்வாங்களே! அதுமாதிரி இதுவும்.

கதிர் said...

இளா,

வர வர கதம்பமா ஜல்லியடிக்கறதுதான் நல்லா வருது. அதிகமா யோசிச்சு எழுத வேண்டியது இல்ல. ப்ளாகர திறந்து அரைமணி நேரம் கலப்பைய பிடிச்சா போஸ்ட் ரெடி. மேகி மாதிரி :) ம்ம் மாத்தணும்.

கோபி கண்ணா
உன்னோட இந்த மாச பதிவு எப்ப ராசா ரிலீஸ் பண்ணுவ? என்னை மாதிரி உலகம்பூரா காத்திருக்காங்கல்ல.

காயத்ரி,

நான் சந்திக்கும்போது அவர் என்னை பார்க்கவில்லை. :)
எதுக்கு அம்புட்டு பெரிய சிரிப்பு?
நீங்க எவ்ளோ கவிதை எழுதிருக்கிங்க அத பாக்கும்போதெல்லாம் சிரிப்பு வருதுதான், ஆனா என்னிக்காவது சிரிச்சிருக்கேனா? ம்ம் சொல்லுங்கம்மணி.

வெற்றி!
நினைவுகளை மீட்டு எழுதுங்கள்.

நன்றி பாஸ்கர்.

ஜி said...

:))) அருமையான கொசுவத்தி...

சென்ஷி said...

ரசனையான தொகுப்பு... ரசிகனுக்கான சொல்லாடல்களை மிகச்சிறப்பாக தேர்ந்தெடுத்துள்ளீர்கள்!

எனக்கு பிடித்ததாக யோசித்தால் சுஜாதாவின் பல சிறுகதை தொகுப்புகளும், மத்யமர் கதைகளும் (இதன் இரண்டாம் பாகத்திலும் மூன்றாம் பாகத்திலும் இவரை திட்டி வந்த மிரட்டல் கடிதங்களையும் (!!) தொகுத்து வைத்திருந்தார்) மற்றும் கணேஷ் வசந்த் தவறியும் எட்டிப்பார்த்திராத பிரிவோம் சந்திப்போமும், (இவரை நம்பவே முடியாது. குடும்ப கதையிலகூட விவாகரத்து வாங்கிக்கொடுக்கவாவது அவங்க எட்டிப்பார்ப்பாங்க. வழக்கமான ஜோக்கோட.. :)) ) இன்னும் சிலவும் உள்ளது. அதிர வைத்த முடிவுகளுடன் வரும் இரு கடிதங்கள் மற்றும் பெயர் மறந்து போன ஒரு சிறுகதையும் பிடித்தது. (அந்த பெயர் மறந்து போன சிறுகதையில் புதிதாய் திருமணமாகிய ஒரு பெண்ணின் கணவன் சினிமா பார்க்க டிக்கெட் எடுக்க செல்லும்போது நிகழும் ஒரு விபத்தை அருமையாக பதிவு செய்திருப்பார். உண்மையான செம்ம நச்சு கதை அது. பெயர் தான் மறந்து போய்விட்டது). இன்னும் நிறைய சொல்லலாம்.

அவருக்கான எனது அஞ்சலிகளை இங்கு பதிவு செய்து கொள்கின்றேன் :((


சென்ஷி

நந்தா said...

//ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்த கனவ பத்தி எழுதலாம்னு நினைச்சேன். ஆனா அதுக்கு "A" சர்டிபிகேட் கிடைக்கும் அவ்வளவு வன்முறை. அய்யனார் சொன்னா அதையும் எழுதிடலாம்.//

விடுங்க கதிர். வேணும்னா லேபில்ல பி.ந ன்னு போட்டுடலாம். இதுக்கு எதுக்கு ஒரு A வை வேஸ்ட் பண்ணனும்.

வர வர கதம்பம் ரொம்ப அழகாய்க்கிட்டே போகுது. ஒண்ணும் சொல்லிக்க முடியலை. ராமரைப் பற்றியும், முருகனைப்பற்றிம் நீங்கள் எழுதி இருப்பவை எல்லா கிர்டாமத்திற்கும் பொருந்தச் செய்து, எல்லார் மனதையும் சற்று அசை போட வைத்து விடுகிறது.

கதிர் said...

ஜியா,
கோபிக்கே ரிப்பீட்டா?
---

சென்ஷி,

குடுத்த காசுக்கு மேலன்னு ஒரு பழமொழிய யாராச்சும் சொல்லிடபோறாங்க. :)))
---

நந்தா,
அய்யனார ஓட்டணும்னா எல்லாருக்கும் அல்வா சாப்பிடற மாதிரி போல.