எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, February 25, 2008

புத்தகங்கள், வாசிப்பு, ரசனை மற்றும் கொஞ்சம் நையாண்டி

இங்கிருந்து கிளம்பும்போதே அய்யனார் ஒரு லிஸ்ட் கொடுத்து அதில் உள்ள
புத்தகங்களை வாங்கி வரச்சொன்னார். எங்கு தேடியும் கிடைக்காத வரிசை அவை.
நாஞ்சில் நாடன் நாவல்கள் தந்த ஈர்ப்பால் அவரின் மற்ற அனைத்து நாவல்களையும்
எப்படி அலைந்தாவது வாங்கிவிட முயற்சி செய்து அவற்றில் ஓரளவு வெற்றியும்
கிட்டியது. அவற்றை வாங்கும்போதும், வாங்கியபின்னர் படித்த அனுபவங்களுமே
இங்கு பேசப்போகிறேன்.

இந்தியா வந்ததும் மறக்காமல் சந்திக்க வேண்டும் என்று அன்புடன் சுரேகா கேட்டுக்
கொண்டார். திருச்சி சென்று அவரை பார்க்க முடிவானதும் அங்கேயே புத்தகங்களும்
வாங்க முடிவு செய்திருந்தேன். அவர் ஒரு பதிவர், உதவி இயக்குனர் என்ற
அளவிலேயே தெரியும் நயமாக பேசுவார் என்பது நேரில் சந்தித்த போதுதான்
தெரிந்தது. இடைவிடாது பேசிக்கொண்டே இருந்தார். திரையுலகம் சம்பந்தப்பட்ட
செய்திகள் வழக்கம்போலவே ஒவ்வாமையைத் தந்தது.

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக எனக்கு தனி மடல் இட்டு ஊக்கப்படுத்தியர்
திருச்சியை சேர்ந்த விஜயபாஸ்கர் என்பவர். அவரை சந்திக்க பி.எஸ்.என்.எல்
அலுவலகத்திற்கு சென்றோம் அங்குதான் அவர் வேலை செய்கிறார். அரசு
அலுவலகத்துக்கே உண்டான வாசனை, கோப்புகள், தடித்த கண்ணாடி அணிந்து
சிரமப்பட்டு தடிமனான நோட்டில் எதையோ எழுதும் பெருசுகள் என்று அனைத்து
லட்சணமும் பொருந்தின. என்னை கண்ணைக் கட்டிக்கொண்டு எதாவது ஒரு அரசுத்
துறை அலுவலகத்தில் நிறுத்தினால் அது எந்த மாதிரியான அலுவலகம் என்பதை
சரியாக சொல்லிவிடுவேன்.

பாஸ்போர்ட் வந்த புதிதில் அதைப் பெற்றுக்கொள்ள கிராம நிர்வாக அலுவலரிடம்
இருந்து ஒரு நற்சான்றிதழ் வாங்கி காவல் நிலையத்தில் கொடுக்க வேண்டும்.
அதற்கு அலுவலர்களே 50 ரூபாய் என நிர்ணயித்திருந்தார்கள். காலம் காலமாக
நடந்து வரும் இந்த பாரம்பரிய வழக்கத்தை அரசு ஊழியரான என் தந்தையே
மீற அவர் மனம் ஒத்துழைக்கவில்லை. கையில் அம்பது ரூபாய் தந்து "நீயே
போய் வாங்கி வா என்றார்".

சின்ன சின்ன வேலைகளிலும் ஒன்று, இரண்டு என்றே கமிஷன் அடித்து பழகியதால்
கையூட்டு கொடுக்க வைத்திருந்த ஐம்பதில் இருபதை ஆட்டையை போட்டேன்.
நிர்வாக அலுவலர் முன்பு நின்று 30 ரூபாயை நீட்டும்போது விலைவாசி நிலவரம்
தெரியுமா? உங்கப்பாவே இப்படி நடந்துக்கலாமா? என்று நியாயம் பேசினார்.
அல்லாம் தெரியும் பேப்பர குடுங்க சார் என்று வாங்கி வந்தேன்.

இப்படி பாரதிதாசன் பல்கலைக்கழகம், அரசு மருத்துவமனை, காவல் நிலையம்,
பஞ்சாயத்து அலுவலகம், நீதிமன்றம் என்று அரசின் அத்தனை அலுவலகத்தின்
வாசனையையும் பிரித்தறிய நாசி பழகிக் கொண்டது. விஜயபாஸ்கர் அலுவலகம்
சென்ற போது அத்தனையும் மனதின் முன் மீண்டும் எவ்வித மாற்றங்களும்
இல்லாமல் நிழலாடியது.

விஜயபாஸ்கர் என்னைப் பார்த்ததும் மிகவும் பதட்டமடைந்து விட்டார். இதைக்
கண்ட சுந்தருக்கு ஒன்றுமே புரியவில்லை. எனக்கே புரியவில்லை. கம்ப்யூட்டரை
தட்டுவதும் தொலைபேசியில் பேசுவதுமாக மதிய உணவு வரை இருந்தார்.
நானும் சுரேகாவும் அரசு அலுவலகம் என்றும் பாராமல் அலப்பறை கொடுத்துக்
கொண்டிருந்தோம். கொஞ்ச நேரத்தில் மதிய உணவாக தி இங்கிலிஷ் பேக்கரியில்
பொறை (பொறைகூட நல்லாருக்கும்) வாங்கி சாப்பிட்டு இடத்தை காலி செய்தோம்.

முன்பின் பழக்கமில்லாத, இணைய எழுத்துகளின் மூலம் அறிந்த ஒருவரை காணும்
போது ஒரு நண்பனிடம் பழகுவது போல பேசுவது, பழகுவது என்பது
அனைவருக்கும் சாத்தியமல்ல.

சத்திரம் பேருந்து நிலையம் வரும் வழியில் ஒரு புத்தகக்கடையை பார்த்தோம்.
உரிமையாளரை தட்டி எழுப்பி புத்தகம் வாங்க வந்திருப்பதாக சொன்னோம்.
சுவாரசியம் இல்லாமல் உள்ளே சென்று பார்க்குமாறு கையை காட்டி விட்டு
மறுபடியும் தூங்க சென்றார்.

ஊறுகாய் செய்வது எப்படி முதல் எந்த நேரத்தில் சாந்தி முகூர்த்தம் வைத்து
எந்த நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றால் புருசனுக்கு நல்லது
என ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருந்தன. ரேடியோ பழுது பார்ப்பது, டீவி
ரிப்பேர் செய்வது எப்படி போன்ற புத்தகங்கள் இல்லாமல் போனது மகிழ்ச்சி
அளித்தது. ஆயிரக்கணக்கான "எப்படி" புத்தகங்களுக்கு நடுவே தரமான நாவல்கள்
கட்டுரைத் தொகுப்புகளைக் காண சந்தோஷமாக இருந்தது. நாஞ்சில் நாடனின்
"தலைகீழ் விகிதங்கள்", ரமேஷ் ப்ரேமின் "ஆதியிலே மாம்சம் இருந்தது" மற்றும்
எம்.டி வாசுதேவன் நாயரின் காலம் நாவல் தந்த சுகத்தினால் அவரின் சிறுகதை
தொகுப்பு ஒன்றும் வாங்கினேன்.

சொல்ல மறந்த கதை படத்தினை இன்னும் பார்க்கவில்லை என்பதால் தலைகீழ்
விகிதங்கள் வாங்கினேன். பார்த்தாலும் வாங்கி இருப்பேன் அது வேறு விஷயம்.
தெப்பக்குளம் அருகில் சில புத்தக கடைகள் இருக்கும் அங்கு சென்றால் நாஞ்சில்
நாடன் புத்தகங்கள், கோபி கிருஷ்ணனின் டேபிள் டென்னிஸ் ஆகியவை கிடைக்கலாம்
என்று சுரேகா கூறவே சுவாரசியமில்லாமல் கிளம்பினேன். ஏனென்றால் கல்லூரிக்
காலத்தில் நூலகத்தில் இருந்து தலையணை சைஸ் கம்பியூட்டர் புத்தகங்களை
ஆட்டை போட்டு தெப்பக்குள புத்தக சந்தையில் பாதி விலைக்கு விற்றிருக்கிறேன்.
அங்கே என்ன கிடைக்க போகிறது என்ற நினைப்பில்தால் அந்த அசுவாரசியம்.

நினைத்ததற்கு எதிர்மாறாக அங்கே இதுவரை வாசித்திராத நாஞ்சில் நாடனின்
நான்கு (பேய்க்கொட்டு, மிதவை, என்பிலதனை வெயில் காயும், மாமிசப் படைப்பு)
நாவல்கள் கிடைத்தன. ஜெயமோகனின் திசைகளின் நடுவே மிகுந்த தயக்கத்திற்கு
பிறகு வாங்கினேன்.

"அது இருக்குதா"? "இது இருக்குதா"? என்று கடைக்காரரை காய்ச்சி எடுத்துக்
கொண்டிருந்த சமயம் இரண்டு சுமார் பிகர்கள் சாண்டில்யன் புத்தகங்களாக வாங்கி
குவித்துக் கொண்டு இருந்தார்கள். "பருவம்" "விருந்து" "இன்பலோகம்"
புத்தகங்களுக்கு அடுத்தபடியாக எங்கள் நண்பர் குழாமில் அதிகமுறை சுற்றிய
முக்கால்வாசி புத்தகங்கள் சாண்டில்யன் புத்தகங்களே. மருந்துக்கு கூட அந்த மாணவிகள்
பாட புத்தகங்களை வாங்காதது எனக்கு எந்த அதிர்ச்சியையும் தரவில்லை.



எல்லாம் ஒரு விளம்பரம்தான் கண்டுக்க கூடாது. ஆனா வழக்கம்போல போட்டோ
மேல கிளிக்கி பாத்துட்டா நான் பொறுப்புல்ல.

புத்தகம் வாங்கவே லட்சியத்தோடு வந்த என்னை விட சுரேகா அதிக புத்தகங்கள்
வாங்கினார். ஓஷோ புத்தகங்கள் படிப்பவர்களை எப்போதுமே நான் ஜந்துக்களை
பார்ப்பது போல ஏன் பார்க்கிறேன் என்பது எனக்கே தெரியவில்லை. உலகத்தில்
உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான உபதேச புத்தகங்கள் என்பது என்னவோ
செய்கிறது. என்னைப்பொறுத்தவரை ஓஷோ புத்தகங்களை படிக்கும் நிலை வரவில்லை.

இன்று காலைமுதல் மாலைவரை உங்கள் நேரத்தை வீணடித்து விட்டேன். மிகவும்
நன்றி என்று சொன்னபோது "எல்லாத்தையும் செஞ்சுபுட்டு என்ன கதிர் இது
டயலாக் என்று கலாய்த்து வழியனுப்பினார். பேருந்தில் புத்தக குவியல்களுடன்
உட்கார சென்றதும் எதோ "வாய்ப்பாடு விக்கவந்தவன் போலருக்கு" என்ற நினைப்பில்
இடம் தர மறுத்தனர். ஒரு கல்லூரி மாணவன் மட்டும் ஒதுங்கி இடம் கொடுத்தான்.
"ஏன் சார் குமுதம், விகடன் மாதிரி பொஸ்தகம் வாங்க மாட்டிங்களா"? எதுவுமே
புரிலயே சார் என்றேன்.

-----------

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகே குப்பை கொட்டும் இடத்திற்கு
மிக அருகில் புத்தக கண்காட்சி. நீண்ட நாள் தேடிக்கொண்டிருந்த எர்னஸ்ட் ஹெமிங்வே
(சும்மா பில்டப்பு) எழுதிய the old man and sea புத்தகத்தின் தமிழில் கடலும் கிழவனும்
கிடைத்தது. சி.சு செல்லப்பாவின் ஜீவனாம்சம் ஒன்றும் வாங்கினேன். காலச்சுவடு
பதிப்பகத்தை தவிர மற்ற அனைத்து பதிப்பகங்களும் புத்தக சந்தைக்கே உரித்தான
புதிய பெயர்களுடன் காணப்பட்டது. ஒருவேளை எனக்கு தெரியாமல் அப்படிப்பட்ட
அச்சகங்கள் நிறைய இருந்திருக்கலாம்.

ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், எழுதிய, பேருந்து நிலையங்களில் தொங்கி
கொண்டிருக்கும் மர்ம நாவல்களுக்கு பரம ரசிகையான என் அக்காவிடம் கடலும்
கிழவனும் புத்தகத்தை படிக்க கொடுத்தேன். "என்னடா இது டப்பிங் படம் பாக்கற
மாதிரி இருக்கு" என்று சொல்லி புத்தகத்தை தூக்கி எறிந்தாள்.

ஆர்வக்கோளாரில் கவிதை எழுதும் சித்திப் பையனும் இதே ரகம் அவனிடம்
மெர்க்குரிப்பூக்கள் நாவலை கொடுத்து படிக்க சொன்னேன். மறுநாள் என்னண்ணா
இது "செக்ஸ் புக்கு" மாதிரி இருக்கு என்று சொல்லி கொடுத்து விட்டான். ஆக
வாசிப்பு தன்னளவில் வளர்ச்சி அடைய வேண்டுமே தவிர யாரும் அதை திணிக்க
முடியாது. மேலும் அது ரசனையை பொறுத்து அமைவது.

17 comments:

சுரேகா.. said...

கூட ஊர் சுத்துனவனே முதல் பின்னூட்டமும் போட்டுட்டேன்.

என் கடமை...!

எப்புடி?

சுரேகா.. said...

அது கிளாசிக் பேக்கரி!

Ayyanar Viswanath said...

/செய்து அவற்றில் ஓரளவு வெற்றியும்
கிட்டியது/.

என்ன கொடும..டம்பி நீ கொண்டு வந்த திரைப்படங்கள பாத்த மகிழ்ச்சியில இந்த மேட்டர ஃப்ரியா விடுறேன்..நீ வர வர குசும்பனமாதிரியே வெளம்பர பிரியனா மாறிட்டு வர்ர..நல்லா இருந்தா சரி..

கோபிநாத் said...

\\எல்லாம் ஒரு விளம்பரம்தான் கண்டுக்க கூடாது. ஆனா வழக்கம்போல போட்டோ மேல
கிளிக்கு பாத்துட்டா நான் பொறுப்புல்ல.\\

ஏலேய்....நீயுமா!!!..
அந்த மனுஷனுக்கு கல்யாணம் ஆகாபோகுது இத்தோட முடிஞ்சது கதைன்னு நினைச்சேன்...இப்போ நீ போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறதை பார்த்த அடுத்த வாரிசு வந்துடுச்சின்னு தோணுது..

நல்லாயிருந்த சரி ;)

Anonymous said...

Neundhoora payanam sentu vanthathai pola.. chinna chinna visayangaludan..
ellaai kovaiyaga korthu...

oru eluthalanai adaiyalam kaatukirathu..

வவ்வால் said...

தம்பி,

//புத்தகம் வாங்கவே லட்சியத்தோடு வந்த என்னை விட சுரேகா அதிக புத்தகங்கள்
வாங்கினார். ஓஷோ புத்தகங்கள் படிப்பவர்களை எப்போதுமே நான் ஜந்துக்களை
பார்ப்பது போல ஏன் பார்க்கிறேன் என்பது எனக்கே தெரியவில்லை.//

அப்போ சுரேகா ஓஷோ புத்தகங்கள் வாங்கி இருக்கார், அவரை நீங்க ஜந்து மாதிரி பார்த்து இருக்கிங்க! செம உள்குத்து தான் :-))

பரவாயில்லை காசு செலவு செய்து புத்தகம் வாங்கும் ஆர்வம் உங்களிடம் இன்னும் குறையாம இருக்கே , எனக்கு அந்த ஆர்வம் எல்லாம் போய் ரொம்ப நாட்களாகிவிட்டது. ஓசியில் படிக்கும் ஆர்வம் அதிகமாகிவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம் :-))

நல்லப்புத்தகங்களாகத்தான் தேடி இருக்கிங்க , அதான் வித்தியாசமா பார்த்து இருக்காங்க, வெகுஜனங்களுக்கு ராஜேஷ் குமார், சுஜாதா , பாலகுமாரன் எழுதுவது தான் இலக்கியம் :-))

நம்ம பதிவின் தலைப்பு கூட நாஞ்சில் நாடனின் தலைக்கீழ் விகிதங்களின் உந்துதல் தான்!

முடிஞ்சா நீங்க வாங்கினதில் படித்ததில் , பிடித்த புத்தகத்தினை விமர்சனம் செய்து பதிவும் போடுங்கள்.

Anonymous said...

யோவ் எங்களை புக் வாங்க விடாம வெச்ச கண்ணு வாங்காம அப்படி சைட் அடிச்சுட்டு இங்க வந்து சுமார் ஃபிகர் அது இதுன்னு சீன் விடறியா???

அடுத்த ஊருப்பக்கம் வந்து பாரு உனக்கு இருக்கு.

கதிர் said...

பாஸ்டன் பாலா,

:) _/\_
---

சுரேகா
நான் நல்லா படிச்சேன்! போர்ட்ல "தி இங்கிலிஸ் பேக்கரி"ன்னு போட்டுருந்தாங்க. நான் கூட சொன்னேன்ல இந்த சிக்கன் பர்கர இங்கிலிஸ்காரன் தின்னான்னா பர்கரையே மறந்துடுவான்னு.
---

அய்யனார்,

இதுல என்னய்யா கொடுமைய நீ கண்ட?

கதிர் said...

கோபிச்செல்லம்,

அப்படிலாம் இல்ல! நாமெல்லாம் அப்படிப்பட்ட விளம்பரத்துக்கு ஆசைப்படுவோமா? இது ஒரு மாதிரி குட்டி விளம்பரம்னு நினைச்சுக்க :)
---

நன்றி பாஸ்கர்!
---

வவ்வால்,

இங்க அய்யனார், குசும்பர் எல்லாம் ஓஷோ பத்தி படிப்பாங்க, பேசுவாங்க அவங்கள பாத்து அப்படி சொன்னேன். :) மத்தபடி சுரேகா சொல்லல. அதுவுமில்லாம உலகத்துல என்னவோ எல்லாரும் மனநிம்மதி இல்லாம அலையுற மாதிரியும் உலகத்து மக்கள் அனைவருக்கு ஒரே மாதிரியான உபதேசங்களுடன் இந்த மாதிரி ஆட்கள் புத்தங்கங்கள் எழுதி குவிப்பதாலும் அவற்றை மக்கள் பேராதரவுடன் வரவேற்பதும் பல்வேறு எரிச்சல்களை தருகிறது. இந்த எரிச்சல் எந்த வகைல சேத்தின்னு தெரில.

இவ்ளோ நாளும் ஓசிலதான் படிச்சேன். ஏன்னா இங்க புத்தகம் வாங்கும் சூழ்நிலை இல்லை. அங்க இருக்கும்போது வாங்கினேன். காசு கொடுத்து வாங்கறது மேட்டர் இல்லிங்க. வாசிக்கணும்னு ஆர்வம் இருந்தாவே போதும்.

முன்பே நாஞ்சில் நாடன் குறித்து சதுரங்க குதிரை, எட்டுத் திக்கும் மதயானை, நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை எழுதிருக்கேன். மேலும் படிக்கறதை பகிர்ந்து கொள்ளவே இந்த வலைப்பூ. அதனால கவலபடாதிங்க கண்டிப்பா எழுதியே தீருவேன்.

கதிர் said...

//சாண்டில்யன் புத்தகம் வாங்கின் ரெண்டு சுமார் ஃபிகர்களில் ஒரு ஃபிகர் said... //

வாங்க ஒரு பிகர்!

உங்கள நான் அன்னிக்கு சரியாவே பாக்கல! அதனாலதான் சுமார் பிகர்னு சொன்னேன். நீங்கவேணா உங்க போட்டோவ என் மெயிலுக்கு அனுப்புங்க. அட்டு பிகரா, சூப்பர் பிகரான்னு கரெக்டா சொல்லிடரேன்.

//அடுத்த ஊருப்பக்கம் வந்து பாரு உனக்கு இருக்கு.//

அடுத்தா ஊருபக்கம் வந்து பாரு உன்ன வெச்சிக்கரென்னு சொல்ற மாதிரிதான் கேள்விபட்டுருக்கேன். "உனக்கு இருக்கு"ன்ற வார்த்தை சரியா வாக்கியத்தோட பொருந்தலயே...

சுரேகா.. said...

அட..ஆமா..
நான் முதல் பாதியை பாத்திருக்கேன்..
நீங்க அடுத்த பாதி!

தி..கிளாசிக் இங்கிலீஷ் பேக்கரி..!

பன்னும்,,கட்லெட்டும் குடுத்து பர்கர்ன்னு நினைச்சுக்கச்சொன்னதுல கொளம்பிட்டேன்.

ரைட்டு..! ஓஷோ...ஜந்து....அதெல்லாம் நமக்குள்ள குடுத்துக்கறது வாங்கிக்கிறதுததான்..! ஜந்துவாகவாவது பாத்தீங்களே! :))

சென்ஷி said...

எலே தம்பி! என்கிட்டயும் ஒரு போட்டோ குடுத்து வச்சிருக்க.. ஞாபகத்துல வச்சுக்கிட்டு பதிவ எழுது :))

ஜி said...

:)) ஹ்ம்ம்ம்.. இதெல்லாம் பாக்குறப்ப நமக்கும் எதாவது வாசிக்கனும்னு தோனுது.... பாப்போம் :)))

சுரேகா.. said...

ஆமா...வி.பா..போஸ்ட் ஆபீஸில் இல்ல வேலைபாக்குறாரு!

இப்படிக்கு

குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்கள் முன்னேற்ற சங்கம்

முபாரக் said...

என்னங்க இப்டி சொல்லாம கொல்லாம திடீர்னு மாறிட்டீங்க?

பாவனாவுலேர்ந்து மாற உங்களுக்கு எப்டிங்க மனசு வந்துச்சி ;-)

செம சுவாரஸ்யமா எழுதுறீங்க

கதிர் said...

முபாரக்!
நீங்க சொல்றது என்னவோ வஞ்சப்புகழ்ச்சி அணி மாதிரி இருக்கு!
கலாய்க்கறீங்ளா, உண்மைய சொல்றிங்களான்னு தெரில. இருந்தாலும் நன்றி.

கதிர் said...

//பாவனாவுலேர்ந்து மாற உங்களுக்கு எப்டிங்க மனசு வந்துச்சி ;-)//

பாவனாவ நெஞ்சுல வச்சிருக்கேன்.
இவங்கள எல்லாம் வாரத்துக்கு ஒருமுறை மாத்திகிட்டே இருப்பேன்.
என்ன இருந்தாலும் பாவனா மாதிரி வராதுல்ல. :)