
பஞ்சாயத்து செய்திகளை சொல்ல பறையடிப்பவர் தெருமுக்குகளில் நின்று
சொன்னதெல்லாம் இப்போது அடியோடு மறைந்து விட்டது. பறையடிக்கும்போது
மோளத்தை சூடு காட்ட வைக்கோலினை சிறிது எடுத்து தீயிட்டு காயவிடுவார்கள்.
அப்போதே சிறுவர் கூட்டம் கூடி பறை இசையை ரசிக்க கூடிவிடும். எப்போது
அடிப்பார்கள் என்று எங்களுக்குள் போட்டியே நடக்கும். திடீரென்று மழைபெய்வது
போல் அடிப்பார்கள். கேட்டதும் கையை காலை அசைக்க தூண்டும் அடி.
மழைவிட்டது போல அடி நிறுத்தும்போது ஒருவர் ஓங்கி குரலெடுத்து ராகத்தோடு
பாடுவார். அனைத்து வீட்டிலிருந்து தலைகள் எட்டிப் பார்த்து செய்தி வாங்கும்.
சிலர் நெருங்கி வந்து விசாரிப்பர். பெரும்பாலும் இவையணைத்தும் அதிகாலையிலோ
அல்லது இரவிலோ நடக்கும். இப்போதைய ராப், அதிரும் ட்ரம்ஸ் இசைக்கெல்லாம்
ஆதி எதுவென கேட்டால் நிச்சயமாய் பறைமேளத்தை சொல்வேன்.
பறைமேளம் மூலம் செய்தி சொல்லும் முறையை நவீனமாக்கிதான் முருகன்
வந்தார்.
முருகனுக்கு ஒருகண் பார்வை மட்டுமே மறுகண் எப்படி போனதென்று
தெரியவில்லை. ஊருக்குள் அவரைத்தெரியாத ஆள் இருக்கு முடியாது. திருமணம்,
மஞ்சள் நீர், மரணசெய்தி, தியேட்டரில் புதிய படம் போட்டால் செய்தி, அரசியல்
நிகழ்ச்சி என அனைத்துக்கும் இவர் உதவி தேவை. ஒரு ஆட்டோவில் மைக்செட்
ஸ்பீக்கர் சகிதம் இவர் நுழைந்து விட்டால் அனைத்து காதுகளும் கூர்தீட்டி நிற்கும்
என்ன செய்தி சொல்லபோகிறார் என்று. சில சிறுவர் கூட்டம் ஆட்டோவின் பின்னால்
நோட்டீஸ் வாங்க என்று ஓடும். நானும் என் டவுசர் காலத்தில் நோட்டீஸ்
வாங்க அவர் பின்னே ஓடியிருக்கிறேன். ஆரம்பத்தில் ஆட்டோ வைத்து
விளம்பரம் செய்யும் வசதி இல்லை என்பதால் சைக்கிளில் ஒருவர் மிதிக்க
இவர் பின் அமர்ந்து சென்று செய்தி சொல்வார். பெருமாலும் விளம்பரம் மட்டுமே
சொல்வதுண்டு. மரண செய்திகளுக்கென்றும், விளம்பரசெய்திக்கென்றும், திருமண
செய்திக்கென்றும் தனித்தனி அலைகளில் பேசுவதை தொடர்ந்து கேட்பவர் மட்டுமே
உணர முடியும்.
உங்கள் பொன்மலை / க்ரசண்ட்
திரை அரங்கில்
நாளைமுதல் தினசரி நான்கு காட்சிகளாக
சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த (உலகத்துலயே இரட்டை வேடங்கள்ல
அதிக முறை நடிச்சவர் இவராத்தான் இருக்க முடியும்)
நாட்டாமை திரைப்படம்.
முதல்நாள் முதல் டிக்கெட் எடுக்கும் டிக்கெட் எடுக்கும் பெண்மணிக்கு
படையப்பா நீலாம்பரி சேலை இலவசம் என்று அவர் பேசும் அழகு தனி.
இன்றும் முருகனுக்கென்று தனி ரசிகர் கூட்டம் உண்டு.
இப்போது முருகன் பாணியை விட நவீனாமாக லோக்கல் கேபிள் சேனல்களில்
ஐந்து நிமிட இடைவெளியில் நாளுக்கு 8756 முறை ஒரே செய்தியை தொலைக்காட்சியின்
அடிக்கோடியில் ஓட விடுகிறார்கள். யாரும் பார்க்கத்தான் ஆளில்லை.
கடந்த இருபது ஆண்டுகளில் எங்கள் ஊர் கிராமம் என்ற வட்டத்தை விட்டு வெளியே
வந்து நகரத்துடன் இணைந்திருப்பதுடன் பல அரிய விஷயங்களை சிதைத்து விட்டு
இவ்வுருவம் பெற்றிருக்கிறது.
உதாரணத்திற்கு என் பள்ளிப்பருவத்தில் முடிவெட்ட இராமர் என்பவர் வருவார்.
வெற்றிலை குதப்பிய வாயுடனும், சிவந்த முட்டைக்கண்கள் உடைய பார்க்க
அச்சமூட்டுபவர் போல தோன்றினாலும். வாய் திறக்கும்போது வெள்ளந்தியாக
தெரிவார். "வா கண்ணு ஏன் பயப்படுற? செத்த நிமிசம் உக்காருப்பா...
என்று கெஞ்சுவார். அவர் வரும் திசை தெரிந்தாலே இரண்டு தெரு தள்ளி நிற்பேன்.
வலுக்கட்டாயமாக தேடி இழுத்து வந்து மனையில் உக்கார வைப்பார் அப்பா.
தலையில் தண்ணீர் தெளித்து 'கரக்' 'கரக்' என்று வெட்ட ஆரம்பிப்பார்.
வெட்டும்போது கண்ணாடியை நாம்தான் கையில் பிடித்திருக்க வேண்டும். இது
ஒன்றுதான் எனக்கு பிடிக்காத விஷயம்.
பின் அவரது வாரிசுகள் என்று சொல்லிக்கொண்டு கடைத்தெருவில் சலூன்கடை
வைத்தார்கள். முன்னும் பின்னும் பார்க்க பெரிய பெரிய கண்ணாடிகள். எந்நேரமும்
சிலு சிலுவென்ற பாட்டுச்சத்தம். கத்தரி மறைந்து அரைமணிக்கொருதரம் கடைக்குள்
வந்து தலை சீவி தலையை திருப்பி திருப்பி பார்த்து திருப்தியுறாத இளந்தாரிகள்
என்று மாறிப்போனபோது இராமரிடம் ஊரில் உள்ள பல் பெயர்ந்த கிழவாடிகள்
மட்டுமே வாடிக்கையாளர்கள் என்றானார்கள்.
சமீபத்தில் ஊருக்கு சென்றிருந்தபோது இராமரை சந்திக்க நேர்ந்தது. முக்கத்தில்
முதுமை வரைந்த கோடுகள். ஆனால் அதே பெரிய சிவந்த கண்கள் இம்முறை
பயம்காட்டவில்லை. நீண்ட கழியின் முனையில் பண்ணருவா பாதி வளைத்துக் கட்டி ஆட்டுக்கு குழை ஒடித்துக்கொண்டிருந்தார். வீட்டில் ஆடு வளர்க்கிறாராம்.
எப்போதாவது வரும் தொழில் மீது நம்பிக்கை அற்றிருக்கலாம்.
இன்று மொத்தமாக பத்துக்கும் மேற்பட்ட சலூன்கள். அத்தனையிலும் ஆளுயர
கண்ணாடிகள். முடிவெட்டும் கோவிந்தனிடமும், கண்ணனிடமும், லவ்லியிடமும்
இராமரின் சாயல்கள் மறைந்திருந்தன.
---
பின்குறிப்பு: இன்னிக்கு ஏண்டா ரீல் சுத்திகிட்டு இருக்கன்னு தோணுச்சுன்னா அதுக்கான
காரணம். இன்று அதிகாலை உறக்கத்தில் முருகன் ஆட்டோவுக்கு பின்னால்
கலர் கலராக நோட்டீஸ் வாங்கி அருகிலுள்ள பசங்களிடம் நாந்தான் அதிகம்
நோட்டீஸ் வாங்கினேன் என்று பெருமையட்டி பின் அதை கப்பல் செய்து அனைவரும்
வாய்க்காலில் விட்டதுபோல ஒரு கனவு. அதான் கொஞ்சம் சுத்தியாச்சு.
ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்த கனவ பத்தி எழுதலாம்னு நினைச்சேன். ஆனா
அதுக்கு "A" சர்டிபிகேட் கிடைக்கும் அவ்வளவு வன்முறை. அய்யனார் சொன்னா
அதையும் எழுதிடலாம்.
---
சுஜாதாவை நேரில் சந்தித்த போது அவர் குறித்த எந்த விதமான ஆச்சர்யங்களும்
இருந்ததில்லை ஏனெனில் நமது வாசிப்பு அந்த தளத்தில் விரிவடையாமல் இருந்ததே
காரணம். ஆனால் இவர்தான் சுஜாதா என்று தெரியும். கல்லூரியின் இறுதி பருவத்தில்
ப்ராஜெக்ட் செய்வதற்காக கோடம்பாக்கத்தில் உள்ள பென்டாசாப்ட் நிறுவனத்தில்
இருந்தபோது தினமும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். பார்க்கும்போதெல்லாம் எனக்கு
தோன்றியது இதுதான் 'இவரால் எப்படி பாய்ஸ் படத்துக்கு வசனம் எழுத முடிந்தது"
என்று. நான் பார்த்தபோது வயோதிகம் முற்றியிருந்தது. சிறிய உதவியில்லாமல்
காருக்குள்ளிருந்து வெளியே வரவோ, படி ஏறவோ முடியாது.
கோடம்பாக்கம் என்பதால் அடிக்கடி எதாவது ஒரு நடிக பிரபலத்தையும் அவர் பின்
சிறு கூட்டங்களையும் காணலாம். பென்டாசாப்ட் எதிரில் உள்ள பொட்டிக்கடையில்
நின்று புகைக்கும்போது எப்போதாவது நீல நிற ஸ்கோடா கார் வந்து நிற்கும்
"டேய் சுஜாதாடா" வாங்கடா போய் பேசலாம் என்று அழைப்பேன். "டேய் உனுக்கு
வேலையே இல்லையா" என்று விலகிவிடுவார்கள். ரசிகனுடன் நடிகர்கள் கொள்ளும்
வசீகரத்துக்கு இணையாக எழுத்தாளருக்கும் இருப்பதை கண்டு வியந்திருக்கிறேன்.
வேலை முடிந்து கிளம்புவதற்கு முன்னர் எப்படியாவது சந்தித்து பேசவேண்டும்
என்று நினைத்திருந்தேன். ஒவ்வொரு சமயத்திலும் நழுவிக் கொண்டே சென்று
கடைசியில் இல்லையென்றாகிப் போன போது பெரிதாக நட்டமேதுமில்லை
என்றாலும் பேசியிருக்கலாம் என்ற எண்ணம் அடிக்கடி தோன்றும். இனி அது
தோன்றாது.
இன்றளவும் சுஜாதாவின் "என் இனிய இயந்திரா" தவிர வேறெதும் படித்ததில்லை.
அவர் மீது நான் கொண்டது சினிமா மோகமேயன்றி வேறெதுமில்லை.