எல்லையற்ற அன்பு கொள்வோம்

Wednesday, October 21, 2009

பேராண்மை, காடு, மாரி சில குறிப்புகள்

மழையில் நனைந்த மோட்டாருக்கு காயில் கட்ட கடையில் கொடுத்துவிட்டு, கட்டும்
நேரத்தில் சினிமா பார்க்க வந்திருந்தார் எனக்கு பக்கத்து இருக்கைக்காரர். இருக்கையின்
நுனி வரை கொண்டு சென்றது என்ற பதத்திற்கான அர்த்தம் அவரிடம் கண்டேன்.
உற்சாகமாக கை தட்டிக்கொண்டும் விசில் அடித்துக்கொண்டும் கடைசி அரைமணி
நேரம் மிக அமைதியாகவும் பார்த்தார். படம் பார்த்து முடிந்ததும் செல்பேசி படம்
சூப்பர் என்று நண்பர்களுக்கும் சொன்னார். படம் பேராண்மை. அறிவியல்/ நாட்டை
அழிக்கும் நாசகும்பல், ராக்கெட் சைன்ஸ்(முத்துலிங்கம் கதையில் ராக்கெட் சைன்ஸ் என்று
ஒரு கதை வரும்) போன்ற விஷயங்களை பாமர மக்களுக்கும் புரியும் வகையில்
படமெடுத்த ஜனாவுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். எனக்குப் படம் மிகவும்
பிடித்திருந்தது. இணைய சுப்புடுக்கள் விமர்சனங்களையெல்லாம் பொருட்படுத்த
வேண்டாம் என்றே வர வர தோன்றுகிறது. பிரத்தியேக திரையிடலிலேயே
மடிக்கணினியோடு சென்று அங்கேயே "விமர்சனம்" என்ற போர்வையில் எழுதித்
தள்ளும் இணையசுப்புடுக்களின் இம்சை இப்போதெல்லாம் தாங்க முடியவில்லை.
யார் முதலில் எழுதுவது என்ற போட்டியே மேலோங்கி வருவதாகவும் தோன்றுகிறது.

முந்தின நாள் இரவில் ஜனநாதனின் நேரலையை பாலிமர் சேனல் ஒலிபரப்பியது
பொதுவாக நேரலையின் பாட்டு கேட்டு டெடிகேட் செய்யும் அபத்த கலாச்சாரத்தை
வெறுத்தாலும் தரமான இயக்குனர்களின் நேரலை சுவாரசியம் நிரம்பியதாகத்தான்
இருக்கிறது. நேரலையில் உற்சாகமாக பதிலளித்த ஜனநாதனின் மொழி முழுக்க
முழுக்க சென்னைத்தமிழ். குறிப்பாக இயக்குனர், நடிகைகளில் அலட்டலான
அந்நிய அணுகுமுறை முற்றிலுமாக இல்லாமல் பதிலளித்தது ரசிக்கும்படி இருந்தது.
பார்ப்பதற்கு குறுந்தாடி, மற்றும் கண்ணாடியுடன் விஞ்ஞானி தோற்றத்தில் இருந்தாலும்
பேசிய மொழி மிகுந்த நெருக்கத்தை அளிப்பதாக இருந்தது. இவரின் முந்தைய
படங்கள் பற்றிப் பேசும்போது அந்த சிறுகதையின் பாதிப்பில் எடுத்தது என்ற
அவரின் திறந்த பேச்சு முற்றிலும் புதியது. ஈ படம் கூட கான்ஸ்டன் கார்டனர்
போன்ற படங்களின் பாதிப்பில் உருவானது. இந்தப்படமும் கூட ஒரு கட்டுரையின்
தாக்கத்தால் உருவானது என்று குறிப்பிட்டிருந்தார். மிக சுவாரசியமான மனிதர்.


"காடு களை கட்ட" கிட்டத்தில் படத்தோடு இணைந்த மிக வேகமான, உக்கிரமான
பாடல் கேட்டறியவில்லை ஆனால் பேராண்மை படத்தில் காடு களை கட்ட என்ற
பாடல் அத்தனை உக்கிரமாக இருந்தது. இதையொற்றியே ஈ படத்தில் யேசுதாஸ்
பாடலொன்று வரும் "வாராது போல் வந்து வீழ்ந்தானடா" இதற்கு முன் பிதாமகன்
படத்தில் "அடடா அடடா அகங்கார அரக்க" பாடல் படத்தோடு இணைந்த உணர்ச்சிகரமான
பாடல். இப்பாடல் ஒலிக்கும் சமயத்தில் திரையரங்கில் படம் பார்ப்பவர்களின் முகத்தில்
வெறி குடிகொண்டிருக்கும். பக்கத்து இருக்கை லுங்கி நண்பர் அவ்வெறியுடன் பார்த்ததை
கவனித்தேன். அது எனக்கும் தொற்றிக்கொண்டது. எளிமையான சர்வதேசப்படமாக
இதைக்கருதலாம்.

--
"இஷ்டாங்கா ஒரு டீ போடு மாமே" என்றொரு வசனம் உன்னைப்போல் ஒருவனில்
வருவதைக்காணலாம். இதை இரா.முருகன் எழுதியிருக்க வாய்ப்பே இல்லை. சத்தியமாக
இத்தனை கேவலமாக முஸ்லிம்களை சித்தரிக்கும் போக்கை கமல்தான் செய்திருக்கவேண்டும்.
முன்பே தசாவதாரத்தில் நாகேஷ் தமிழ் பேசுவதை குறிப்பிட்டிருந்தேன். இன்னும் எத்தனை
காலத்துக்கு இதையே கமல் காண்பிக்க போகிறார் என்று தெரியவில்லை.

இன்னுமா முஸ்லிம்கள் இப்படி தமிழ் பேசுகிறார்கள்? அப்படியென்றால் எந்தப்பகுதி
முஸ்லிம்கள் இப்படி பேசுகிறார்கள்?

--
ச.தமிழ்ச்செல்வனின் சிறுகதைத் தொகுப்பொன்றை வாசித்துக்கொண்டிருந்தேன். முன்பே
சசியின் நேர்காணல் ஒன்றில் தமிழ்ச்செல்வனின் சிறுகதையொன்றை கருவாகக்கொண்டு
உருவான படம்தான் பூ என்பதை அறிந்திருந்தேன். "மாரி" என்ற அக்கதையினை
இத்தொகுப்பில் படித்தேன். சிறுகதையை சிதைக்காமல் அழகிய வடிவம் கொடுக்கப்பட்ட
திரைப்படம். மாரி என்ற அந்த நெகிழ்ச்சியான கதையை நினைக்கும்போதே ஆனந்தம்
ஏற்படுகிறது. இதுபோன்ற ஏராளமான சிறுகதைகள் படமாக எடுக்கலாம். முக்கியமாக
கண்மணி குணசேகரனின் கதைகளைக் குறிப்பிடலாம்.

--



ஜெயமோகனின் காடு நாவல் படிக்க காட்டுக்கே செல்லலாம் என்று நினைத்திருந்தேன்
நல்லவேளையாக ஊரில் இருக்கும் நேரம் நாவல் கைக்கு கிடைத்தது. கச்சிராயபாளையத்தில்
இருந்து வெள்ளிமலை செல்லும் பாதையில் பெரியார் அருவி என்ற சிற்றோடை ஒன்று உண்டு
அதுதான் நான் தேர்ந்தெடுத்த இடம். புத்தகத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.
வீட்டிலேயே மின்விசிறிக்கு அடியில் ஒய்யாரமாக படித்திருந்திருக்கலாம். காட்டில் நல்ல
வெயில் இருந்தது. பெரியார் அருவியில் சன்னமாக விழும் நீர் இருந்தது. பரவாயில்லை
என்று காட்டின் உள்நோக்கி ஒரு மைல் வரை பாறையில் நடந்து சென்றேன். குளிர்மையான
பாறைக்கடியில் சிற்றோடை சலசலக்க அமர்ந்து படித்தது வினோதமான அனுபவமாக
இருந்தாலும் ஒருவிதமான பயத்தோடுதான் படிக்க ஆரம்பித்தேன்.

காடு நாவலின் உள்ளே செல்ல முதலில் தடையாக இருந்தது அந்த மொழிதான். மலையாளத்தை
தமிழில் எழுதியது போல. பிறகு, ரெசாலம், குட்டப்பன், கிரி, அய்யர், கண்டன் புலையன்,
ராசப்பன், சினேகம்மை, நீலி, மாமி, ஆபெல், ராபி என்று ஒவ்வொருவராக உள்நுழைந்து வர
மெதுவாக நானும் காட்டினுள் நுழைந்துவிட்டேன். சற்று நேரத்தில் கண்ணயர்ந்தும் விட்டேன்.
எவ்வளவு நேரம் உறங்கினேன் என்று தெரியவில்லை. விழித்தபோது இருள் சூழ ஆரம்பித்தது.
மடத்தனமான காரியமொன்றை செய்துவிட்டோமென்ற எண்ணமும் வந்தது. கரடிகள் அதிகம்
சுற்றும் வனம் என்று அறியப்பட்ட வெள்ளிமலை, கரியாலூர் போன்ற வனப்பகுதிகள்.
பதறியபடி வெளிவந்துவிட்டேன்.

இந்நாவலில் வரும் நீலி, குட்டப்பன், ஆபெல், ராபி போன்ற கதாபாத்திரங்கள் எனக்கு
மிகுந்த நெருக்கத்தை உருவாக்கினார்கள். கதைச்சுருக்கமெல்லாம் எழுதமுடியாது. இது
ஒரு அனுபவம் நாவலைப் படித்தால் மட்டுமே உணரமுடியும்.

வன நீலி என்ற சொல்லை சொல்லும்போதே அதுகொடுக்கும் பரவச உருவகம் நாவலில்
அருமையான பகுதிகள். மற்ற எழுத்தாளர்களின் படைப்பைப் போல ஒரே அமர்வில்
வாசிப்பது போல காட்டை வாசிக்க இயலவில்லை. நானூற்றி எழுபது பக்கங்களில்
மொத்தமாக ஐம்பது முறையாவது முனை மடித்திருப்பேன். மேலும் கடந்த மூன்று
நாட்களாக கனவு கூட மலையாளத்தில்தான் வருகிறது. அங்கே மலையாளத்திலே
சம்சாரிப்பது போல வருவது இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது.

--

பவா செல்லத்துரை இல்ல விழாவிற்கு சென்று வந்த குறிப்பை பவா பாலுவுக்கு படித்துக்
காட்டினாராம். அதில் டப்பா லூமிக்சில் நம்மை படமெடுத்தால் ஒட்டுமொத்த புகைப்பட
உலகுக்கே அவமானம் என்றும், அவருடன் புகைப்படம் எடுக்க விருப்பப்பட்டது குறித்தும்
எழுதியிருந்தேன். என்கிட்ட சொல்லியிருந்திருந்தா தாராளமா எடுத்திருக்கலாமேப்பா...
என்று பாலு வருத்தப்பட்டதாக பவா சொன்னார். மறுபடியும் பெருமையாக இருக்கிறது.
(அய்ஸ் மிஸ் பண்ணிட்டோமேய்யா...) இணையத்தில் எழுதுவதினால் ஆன பயன்!

--

Thursday, October 15, 2009

அன்பினால் நிறைந்த வீடு

கடந்த வாரம் பவா செல்லத்துரையின் இல்லத்திறப்பு விழாவிற்கு சென்றிருந்தேன்.
அய்யனார் அழைப்பிற்கிணங்கவே சென்றிருந்தேன் முன்பாக பவாவின் வலைப்பூவை
மட்டுமே அறிந்திருந்தேன் மற்றும் அவரது ஷைலஜாவின் மொழிபெயர்ப்புகளைப்பற்றி
அறிந்திருந்தேன். எது என்னை அங்கே செல்ல வைத்தது என்று தெரியவில்லை ஆனால்
ஒரு நிறைவான விழாவினை கண்ட சந்தோஷம் மனத்தில். பவா, ஷைலஜாவின் உள்ளம்
முழுக்க அன்பினால் நிறைந்திருக்கிறது அந்த அன்பு அவர் வீடு முழுவதும் விரவியிருக்கிறது
வந்தவர்கள் அனைவருக்கும் சந்தோஷம் பகிர்ந்தளிக்கப்பட்டது. முழுக்க முழுக்க
கருங்கற்கல் கொண்டு கட்டப்பட்ட வீடு, விளக்கு மாடங்கள், ஓவியங்கள் என
ரசனையில்லாதவரையும் அமர்ந்து ரசிக்க வைக்கும் வடிவங்கள்.

முழுக்க முழுக்க கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்களைக் காணும்போதெல்லாம் மனம்
தனிமையை உணரும் சிறுவயதிலிருந்தே பழக்கப்பட்டிருப்பது அது. அதிகம் அடம்பிடித்தால்
உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி வழியில் அமைந்திருந்த ஒரு பள்ளியில் சேர்த்துவிடுவதாக
சொல்லி பயமுறுத்தியிருந்தார் அப்பா. முன்னதாக அங்கெ சென்று வந்த நாள் முதல் எனது
சேட்டைகளை மூட்டை கட்டியது நினைவிலிருக்கிறது. வீட்டை விட்டு விடுதியில் இருப்பதே
தாங்க முடியாததாக இருக்கும். மேலதிகமாக அவ்விடுதி முழுக்க முழுக்க எவ்வித அலங்காரமும்
அற்ற கருங்கற்களால் கட்டப்பட்டது. மிக உயரமான சுவர்கள் கொண்டது. பல சிறுவர்கள் களையிழந்த
முகங்களுடன் படித்துக்கொண்டிருப்பார்கள். கிட்டத்தட்ட சஷாங்க் ரிடம்ப்ஷன், க்ரீன் மைல்
படத்தில் வரும் சிறைச்சாலையை ஒத்திருக்கும். எனவே கற்களால் கட்டப்பட்ட வீட்டையோ
விடுதியையோ பார்த்தால் சிறைச்சாலையின் தனிமை பிம்பம் வந்துபோகும். இனிமேல் அது வரா.
பவாவின் அன்பு நிறைந்த இல்லமே ஞாபகம் வரும். பிற்காலத்தில் இதேபோன்றதொரு வீடு
கட்டவும் எண்ணமிருக்கிறது.



படத்தில் பாலுவும் கரிசலும்

இதுவரை பார்த்திராத புதுமையில் நடத்தினார். வீட்டில் முதலில் மாட்டை புக வைக்கும்
சம்பிரதாயமில்லை. மாறாக எழுத்தாளர்கள், எழுத்தை ரசிப்பவர்களால் இல்லம் நிரம்பியிருந்தது
சிகரம் வைத்தது போல தமிழ் சினிமா பெருமைப்படும் பாலுமகேந்திரா வந்திருந்தார்.
அவரை மிக அருகாமையில் சந்தித்ததே கனவினைப்போன்றதொரு தோற்றம் தந்தது.
த.மு.எ.ச வைச் சேர்ந்த கரிசல் குயில் கிருஷ்ணசாமி மற்றும் அவரது குழு இயற்றிய தமிழ்
பாடல்களை(சினிமா அல்ல) கிருஷ்ணசாமி பாட அவரைச்சுற்றிலும் அமர்ந்து அனைவரும்
கேட்டுக்கொண்டிருந்தோம். கேட்டுக்கொண்டே இருக்கலாம் போன்ற குரல். முன்னதாக
பாலுமகேந்திராவுக்கு பாடிக்காட்டிக்கொண்டிருந்தபோது அறையில் வெளியிலிருந்து
ஒட்டுக்கேட்டுக்கொண்டிருந்தேன். பிறகு அமர்வில் பாடும்போது தெளிவாக கேட்டேன்.



பாடலின் போது நண்பர்கள், வெண்சட்டையில் ஒய்யாரமாய் நின்றிருப்பவர் பவா.

பாடல் முடிந்ததும் பவா மற்றும் நண்பர்கள் சில நிமிடங்கள் பேசினார்கள். அனைவரும்
ஒருமித்த குரலாக பேசியது ஒன்றைத்தான். இவ்வீடானது இலக்கிய ஆர்வமுள்ள அனைத்து
பறவைகளுக்கும் வேடந்தாங்களாக அமையும் என்பது. அன்பால் நிறைந்த வீடு. வீடு என்ற
கனவைப்பற்றி பாலு பேசும்போது மிகுந்த நெகிழ்ச்சியாக இருந்தது. சிறு வயதில் தூர்தர்ஷனில்
வீடு படத்தை பார்த்த காட்சிகளும் நினைவுக்கு வந்தன. மனிதர்களில் அபூர்வமானவர் பாலு
அவரது பேச்சும் ரத்தினச்சுருக்கமாகவும் அழகாகவும் இருந்தது.

நம் இருவரையும் பாலு புகைப்படமெடுத்தால் எப்படியிருக்கும்? கேட்டுப்பாக்கலாமா என்று
அய்யனார் என்னிடம் கேட்டதை உடனடியாக நிராகரித்தேன். இந்த டப்பா லூமிக்சில் அதுவும்
நம்மை அவர் படமெடுப்பது ஒட்டுமொத்த புகைப்பட உலகுக்கே அவமானம் என்றேன்,

அங்கு செல்லும்போது அய்யனாரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தேன். இந்த ப்லாக்
எழுதறவன், பதிவு எழுதறவன்னு தயவு செய்து யார்கிட்டயும் அறிமுகப்படுத்த வேண்டாம்
என்பது. சாதாரண வாசகன்னு சொல்லு போதும் என்று. ஆனால் சொல்லிவைத்தது போல
இவர் ஒரு ப்லாக்கர் என்றே அறிமுகப்படுத்தினார். க.சீ.சிவக்குமார் என்னவெல்லாம் எழுதுவீர்கள்
என்று கேட்டார் சொல்வதற்கு விழிக்க வேண்டியதாயிருக்கிறது.

மூவாயிரத்தி சொச்சம் விமர்சகர்கள், ரெண்டாயிரத்தி சொச்சம் கவிஞர்கள், ஆயிரத்து சொச்சம்
கந்தசாமிகள், ஐநூத்தி சொச்சம் மொக்கைகள்.... இதெல்லாம் சொல்லவில்லை. சிவாவுக்கு
வலையுலகம் என்ற அபத்தமே தெரியாலிருப்பது சந்தோஷமான விஷயம் என்று அய்யனார்
அறிவுரை கூறினார்.

குமார சம்பவம் படித்துவிட்டீர்களா என்று கேட்டார். வாராந்தர தொடர்களில் ஆர்வமில்லை
ஒரே அமர்வில் படித்தாலும் மூளையில் நிற்காத அளவு நினைவுத்திறன் கொண்டவன் நான்
என்றேன். ஆனால் அவர் எழுதிய சிறுகதைகள் அடங்கிய பிடிஎஃப் கோப்பு
ஒன்றை அவரிடம் காட்டினேன். "அடப்பாவிகளா இதெல்லாம் இன்னும் பத்திரிக்கைக்கே
அனுப்பலியேஉங்க கைக்கு எப்புடிய்யா கெடச்சுது என்றார். இதில் எல்லாமே விகடனில்
வெளிவந்தவையா இருக்கலாம் எவராவது ஒருவர் வாராவாரம் திரட்டி இதுபோன்ற கோப்புகளாக
மாற்றி வெளியிடுவார். இது ஒன்றுமட்டுமல்ல உலகம் முழுக்க வெளிநாடு
வாழ் வாசகர்களுக்கு இம்மாதிரி கோப்புகள் மட்டுமே கிடைக்கும் சாத்தியம். இப்படித்தான் நான்
பல நாவல்கள் படித்தேன். அவருக்கே தெரியாமல் அவரது கதைகள், நேர்காணல்கள் எப்படி
வந்தது என்று தெரியவில்லையாம். இணைய உலகம். கடைசியாக ஒருவேண்டுகோள் விடுத்தார்
எனக்கொரு பிரதி அனுப்ப முடியுமா என்று.

சிவக்குமாரின் சிறுகதைகள் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவை அதே சமயம் அரசியலமைப்பு,
அதிகாரம் போன்றவற்றின் மீதான எள்ளல். இந்த எள்ளல் ஒவ்வொரு வரியிலும் இருக்கும்.
எனக்கு மிகவும் பிடித்திருந்தது உதாரணம்

"அகர முதல எழுத்தெல்லாம் கூடிமுயங்கப் பெறின்(முதல் நான்கெழுத்தின் சேர்க்கை வினோதம்!.)
கிடைக்கக்கூடிய கோடானு கோடி சாத்தியங்களில் ஒன்றாக ஆதிமங்களத்து விசேஷங்கள் நெர்ந்தது"

"ஈடில்லாததும் வீடில்லாததுமான அந்த நாய் கருப்பு வெள்ளை நிறமுடையது"

கவிதைகளும் அழகியல் உணர்வுடன் படைக்கப்பட்டிருக்கிறது. விகடனில் தவறவிட்டவர்கள்
கோப்பு வடிவில் வாசிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் தெரிவிக்கலாம். அனுப்புகிறேன்(அவரின் அனுமதியுடனே!)

எழுத மனம் நிறைய சந்தோஷமான அனுபவங்கள் இருந்தாலும் இத்தோடு முடித்துக்கொள்ளலாம்
என்று நினைக்கிறேன்.

இன்னொரு சந்தோஷமான விஷயம். தடாலடியாக பத்து, பனிரெண்டு என்று நூல் வெளியிடும்
எழுத்தாளர்களுக்கு மத்தியில் இணைய உலகில் இருந்து அய்யனாரும் அப்பட்டியலில் இணைகிறார்.
வம்சி வெளியீடாக, கவிதைகள், புனைவுகள், திரைப்படங்கள் என மூன்று நூலாக வெளிவருகிறது.
இணைய எழுத்துக்களில் தரமானவை அச்சில் வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி