எல்லையற்ற அன்பு கொள்வோம்

Monday, January 12, 2009

நாட்குறிப்பு போன்றவை

பொதுவாக தற்கொலை செய்துகொள்பவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
தீர்க்கமான முடிவுடன் தற்கொலை செய்துகொள்பவர் இவர் பிழைக்க வாய்ப்புகள்
இல்லாதவாறு சூழ்நிலையை அமைத்துக்கொள்வார். இரண்டாவது சுற்றத்தவரை
பயமுறுத்தவென்று தற்கொலை செய்துகொள்பவர் போல நடிப்பவர். மிகப்பெரும்பாலும்
இரண்டாவது வகையினர்தான் அதிகம். பல்வேறு பிரச்சினைகளால் தற்கொலை
முடிவு எடுப்பவர்கள் ஒருபுறம் என்றால் மறுபாதி காதல்தோல்வி என்ற காரணமே
பின்னால் இருக்கிறது (கள்ளக்காதலும் இதில் அடக்கம்).

இரண்டு வருடங்களுக்கு முன்பு பால்யகால சினேகிதன் ஒருவனின் அப்பா பூச்சிமருந்து
குடித்து தற்கொலை செய்துகொண்டார். வெற்றிலைத்தோட்டத்தில் வெற்றிலை திருடி
கையும் களவுமாக சிக்கிய அவமானத்தில் பூச்சிமருந்தை காதில் ஊற்றிக்கொண்டு
விட்டார். சில நிமிடங்களில் உயிர் பிரிந்துவிட்டது. பொண்டாட்டி வேறு ஒரு
ஆணுடன் படுத்ததால் தற்கொலை செய்துகொண்டார் என் பக்கத்துவீட்டுக்காரர்.
வினோதமான மருந்துநெடியுடன் முகம் மஞ்சள் நிறத்திற்கு மாறிப்போயிருந்தது
டவுசரை இறுக்கிப்பிடித்தபடி சேலைகளின் பின்புறத்தில் மறைந்திருந்து கண்ட
காட்சிகள் நினைவில் வருகின்றன. தேர்வில் தோல்வியடைவதால், கடன் தொல்லையால்,
சோரம் போனது தெரிந்துபோனதால், களவாடியதால் இப்படி நிறைய தற்கொலைகள்
சகஜம் இங்கே. வெளியூர் நண்பர் ஒருவர் சகநண்பர் பேசாமல் தன்னை உதாசீனப்படுத்துவதால் அதை தாங்கமுடியாது பூச்சி மருந்தைக் குடித்துவிட்டார்.

எப்படியோ அவசர அவசரமாக மருத்துவமனையில் சேர்த்து உயிர்பிழைக்க வைத்தனர்.
அவரைப் பார்த்து ஆறுதல் சொல்வதற்காக அம்மாவுடன் திருக்கோவிலூர் அரசு
மருத்துவமனைக்கு சென்றிருந்தேன், பழங்கால சுண்ணாம்பு சுவற்றுடனான ஓட்டுக்
கூரை கட்டிடம். சுவரெல்லாம் சுண்ணாம்பு உதிர்ந்துபோய் பரிதாபமான உணர்ச்சிகளை
மனதில் உருவாக்கியது. உள்புறம் தோற்றத்தில் சேதுபடத்தில் வரும் காட்சிகளை
நினைவுபடுத்துவது போல இருந்தது. சுவரோரங்களிலும், சில படுக்கைகளிலும்
நோயாளிகள் படுத்துக்கிடந்தனர். படுக்கை இல்லாததால் மூலையில் பாய் ஒன்றை
விரித்து அதில் படுக்க வைத்திருந்தனர் நண்பரை. சுவருக்குப் பின்னால் மூத்திரப்புரை
போல. நிற்கவே முடியவில்லை. பழங்களை அளித்துவிட்டு ஆறுதல் சொல்லிக்கொண்டு
இருந்தார். நான் சற்று நகர்ந்து மற்ற முகங்களை கவனிக்க ஆரம்பித்தேன். உலகத்தின்
துயரமான முகங்கள் தமிழக மருத்துவமனைகளில் மட்டுமே சாத்தியம் என்பதுபோல
இருந்தது. பல அலட்சியங்கள் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய அலட்சியமாக அதன் உருவம்
இருப்பது போல பட்டது. ஜன்னலின் ஓரத்தில் பச்சை நிறத்தில் பூச்சிக்கொல்லி
மருந்துக்குப்பி இருந்தது. அவர் குடித்ததாக இருக்கலாம் மேலும் இதுபோன்ற
கேஸ்களில் மருத்துவர் நோயாளி குடித்த வஸ்துவை பார்த்து அதற்கேற்றபடி மருந்து
தருவார். திறந்து முகர்ந்து பார்த்தேன் கூவமெல்லாம் பிச்சை வாங்கவேண்டும்.

குழப்பமான மனநிலைய உருவாக்குவதுபோல உணர்ந்ததால் கிளம்பலாம் என்று
அம்மாவுடன் கிளம்பினேன். மருத்துவமனை வாசலில் இடதுபுறம் ஒருதரம் திரும்பி
பார்த்தார் அம்மா. "அங்கேதாண்டா உன்னை பெத்தெடுத்தேன்" என்று சொன்னார்.
உன்ன மட்டும் இல்ல உங்க நாலு பேரையும் அங்கேதான் பெத்தேன் என்றும். உடனே
அங்கே சென்று பார்க்கவேண்டும் போல இருந்தது. கையைப்பிடித்து அழைத்துச்சென்றேன்.
அது ஒரு பெரிய ஓட்டுக்கூரையின் கீழ் அமைந்த கூடம். இரண்டாவது கட்டிலில்
சமீபத்தில் பிரசவித்த குழந்தையுடன் உறங்கிக்கொண்டிருந்தார் ஒருவர். அங்கேதான்
என்னையும் ஈன்றெடுத்ததாக அம்மா சொன்னார். நெகிழ்ச்சியாக உணர்ந்தேன்.
---

இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் திமுகவின் பொதுக்குழு கூடி
தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதை நேரடியாக ஒளிபரப்பின. கலைஞர் கருணாநிதி
பத்தாவது முறையாக மீண்டும் தலைவராகவும், பொருளாலராக ஸ்டாலினும் தேர்ந்து
எடுக்கப்பட்டதாக முடிந்தது. கருணாநிதி அமெரிக்காவின் தொழிளார் கட்சிக்கோ அல்லது
இங்கேயே இருக்கும் எதோ ஒரு கட்சிக்கோ தலைவராக தேர்ந்தெடுக்கப்படவில்லை
அவரது கட்சிக்குதான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாரே ஒழிய வேறொன்றும்
இல்லை. உயிருள்ளவரை திமுகவிற்கும் தமிழகத்திற்கும் அவர்தான் தலைவரும்
முதல்வரும் ஆவார். மேலும் எந்த வாரிசை தலைமைப்பீடத்திற்கு அமர்த்தப் போகிறார் என்பதற்கு ஆதிதான் இது. இதற்கு நேரடி ஒளிபரப்பு, பட்டாசு வெடிப்பு என இத்தனை ஆர்ப்பாட்டம். இன்று காலை தேர்தல் வாக்குகளின் முன்னணி நிலவரங்களை ஆர்வமாக நண்பர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். வேடிக்கையாக இருந்தது. குழப்பமான எதிர்க்கட்சிகள்
அதன் கோமாளித்தலைவர்கள் என போட்டிக்களத்தில் இருக்கும்போது வெற்றிவாய்ப்பு
ஆளுங்கட்சிக்கு மட்டுமே இருக்கலாம். சகோதரி நமீதா என்று விளித்த சரத்குமார்
கட்சியின் வாக்கு எழுநூற்று சொச்சமாம். இது அவருக்கு முன்பே தெரிந்துவிட்டது
அதனால்தான் "வெற்றி முக்கியமல்ல களம் கண்பதுதான் முக்கியம்" என்று அவரே
அறிக்கை விட்டுவிட்டார். இந்தக்கோமாளிகள் காஷ்மீர் பனிமலையில் நாயகியின்
இடை தடவுவதோடு விட்டு விடுவதே சிறந்தது.

---

இப்பொழுதும் கிராமப்புறங்களில் தேர்தலின் போது "உங்கள் வாக்குகள் யாருக்கு" என்று
கேட்டால் எம்ஜியார் கட்சிக்கு என்றுதான் சொல்வார்கள். அதைப்போலவே இன்றும்
எந்த தொலைக்காட்சி பார்ப்பீர்கள் என்று கேட்டால் அதுவும் சன் டீவி மட்டுமே.
இதனால் வீட்டுக்குள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் விளம்பர இடைவேளையில்
அதிகபட்ச ஒலிகளுடன் படிக்காதவன், தெனாவட்டு, திண்டுக்கல் சாரதி ஆகிய
விளம்பரங்களை மூன்று லட்சத்திற்கும் அதிகமான முறை காதாலும் கண்ணாலும்
பார்த்திருப்பேன். விதி. எந்திரன் எப்படியும் இரண்டு மூன்று வருடத்திற்கு டாப்
டென்னின் முதலிடத்தில் இருக்க வாய்ப்பிருக்கிறது.

---

எங்களூர் ஏரி நவம்பர் மாதவாக்கில் நிறைந்து காணப்படும். கோடி விழும் இடத்தில்
அருவி (நீர் வீழ்ச்சி அல்ல)போன்ற இடத்தில் நீர் வந்தால் நிறைந்துவிட்டது என்று
அர்த்தம். ஜனவர் மாதவாக்கில் அல்லி, தாமரை மலர்களால் நிரம்பும். தாமரை இலை
மற்றும் பூக்களால் நிறைந்து ஒருகட்டத்தில் அது மட்டுமே தெரியும். அதிகாலையில்
அல்லி, தாமரைகள் விரிய நீரிலிருந்து மெல்லிய புகைபோல ஆவி கிளம்பும் பார்த்துக்
கொண்டே இருக்கலாம். அதுவும் கக்கா போய்க்கொண்டே ரசிப்பதென்பது விசேஷமானது.

குறிப்பு: ஒருவாரத்திற்கும் முன்பு எழுதப்பட்டது இது. இணையத்தில் குழப்பம் வந்ததால்
தாமதமாக....

Saturday, January 10, 2009

எஸ்.ரா, சாரு, நாய்க்குட்டி

எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்து எப்போழுதுமே எனக்கு பிடித்தமானது. ஆவியில்
வந்த அவரின் துணையெழுத்து படித்து கல்லூரிக்காலத்தில் அவரின் மேல் பைத்தியமாக
இருந்தேன். சமீபத்திய அவரின் புத்தக வெளியீட்டுவிழாவில் நேரில் சந்தித்தது
மிக்க மகிழ்ச்சியைத்தந்தது. விழாவில் அவர் பேசியதுகூட அவ்வளவு அருமையாக
இருந்தது. எழுத்தைப்போலவே மிக மென்மையான மனிதர்.

விழா ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் சாருநிவேதிதா எனக்கு முன்னிருக்கையில்
வந்து அமர்ந்தார். பேசலாம் என்று நினைத்து எங்கே திட்டிவிடுவாரோ என்று
விட்டுவிட்டேன். அவர் வந்தவுடன் அனைவரும் அவரையே பார்த்தனர். சாரு
வந்த கொஞ்ச நேரத்தில் ஜெயமோகன் நான்கு பேர் புடைசூழ வந்தார். நேர் எதிர்
வரிசைகளில் இருவரும் அமர்ந்திருந்தார்கள். எதிர்பாராது சந்திக்க நேர்ந்தால் கவுண்டமணி
செந்தில் போல பேசிக்கொள்வார்களோ என்று எனக்குள் கற்பனை ஓடியதில் தனியாக
சிரித்துக்கொண்டிருந்தேன். மேடையில் எனக்கு பேசவராது ஸ்கிரிப் பேப்பர் இருந்தாதான்
பேசுவேன் ஆனா இப்ப எப்படி பேசப்போறன்னு எனக்கே தெரிலன்னு சொல்லிட்டு
அனைவரையும் பேச்சில் வியப்பிலாழ்த்தினார் நாடக/திரைப்பட/எழுத்தாள/ க.நா.சு
அவர்களின் மருமகனான பாரதிமணி. இவர் பேச்சை மிகவும் ரசித்தேன்.

க.நா.சு இறந்தபோது அவரின் உடைமைகள் யாவையும் ரயிலில் டெல்லிக்கு
அனுப்பினார்களாம் ஆயிரக்கணக்கான புத்தகங்களுக்கு மத்தியில் சாகித்திய அகாதமி
விருதையும் சேர்த்து. அவற்றை பெற்றுக்கொண்ட பாரதிமணி அவரின் காரில் மிகுந்த
சிரமத்துக்கிடையில் அடைத்து விட்டாராம். ஓட்டுனர் இருக்கை தவிர அனைத்து இடங்களிலும்
புத்தகமே இருந்திருக்கிறது. அதில் புகுந்த திருடன் டாஷ்போர்டில் இருந்த ஆயிரம் ரூபாய்
மதிப்பிலான சிகரெட் பைப்ப திருடிவிட்டானாம். இந்தி தெரிந்த திருடன் சாகித்திய அகாதமி
விருதை தூக்கி தூரப்போட்டுவிட்டு போயிருக்கிறான். (விருதுகள் குறித்து அவர் சொன்னது இது)

இரண்டு நாள் கழித்து அதே பாரதிமணியை சாருவின் விழாவில் சந்தித்தேன். பைப்பை
எடுத்து புகைக்க ஆயத்தமாகிக்கொண்டிருந்தார். "உங்க பைப்ப பத்திரமா பாத்துக்கோங்க
சார்" என்றேன். "என் பைப்ப எவன்யா திருடப்போறான்" என்று சிரித்தபடி சொன்னார்.
இதில் என்ன உள்குத்து என்றே புரியவில்லை.

சிறப்பு அழைப்பாளராக வந்த ஒருவர் (பெயர் கவனிக்கவில்லை)ஒரு குயர் பேப்பரின்
அனைத்துப்பக்கங்களிலும் எதையோ எழுதிவந்து வாசித்து இம்சித்தார். மொத்தக்கூட்டத்தில்
அவர் பேச்சு மட்டுமே சுவாரசியமற்றதாக இருந்தது. அவர் பேசிக்கொண்டிருந்தபோது
ஜெயமோகன் அருகில் அமர்ந்திருந்த அவரது நண்பர்களிடம் பேசிக்கொண்டேஏஏஏ இருந்தார். எனக்கு என்னவோ போல இருந்தது வெளியில் சென்று விற்பனை செய்துகொண்டிருந்த புத்தகங்களை பார்த்துக்கொண்டிருந்தேன் எஸ் ராமகிருஷ்ணனின் சிறுகதைத்தொகுப்பு
ஒன்றை வாங்கி மெதுவாக புரட்டிக்கொண்டிருந்தேன். சாரு மெதுவாக வெளியே வந்தார்.
சிறிதுநேரம் அரபி இசை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். நூலின் முதல்பக்கத்தில்
அவரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டேன்.அவரின் பத்துநூல்கள் வெளியீட்டு விழாவுக்கு
வருமாறு அழைத்தார். எங்கே நடக்கிறது என்று வாய்தவறி கேட்டுவிட்டு பிறகு
மன்னிச்சுடுங்க எசமான் ரெண்டுமுறை அழைப்பிதழ படிச்சும் மறந்துபோய்
கேட்டுவிட்டேன் என்றதும் சிரித்துவிட்டார். கைகுலுக்கிவிட்டு நேராக ஜெயமோகனிடம்
சென்று கையெழுத்து போடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொண்டேன். அவரும் வாங்கி
முதல் பக்கத்தில் சாருவின் கையெழுத்துபார்த்து திகைத்து யோசித்து பின் அவரும்
கையெழுத்து போட்டார். பிறகு அதேபக்கத்தில் ராமகிருஷ்ணனிடமும் கையெழுத்து
வாங்கினேன். எல்லாவற்றுக்கும் கீழே கொட்டை எழுத்தில் (அண்ணாச்சி கவனிக்க) என் பெயரை எழுதிக்கொண்டேன்.

--

இரண்டுநாள் கழித்து சாருவின் பத்து நூல்கள் ஒரே சமயத்தில் வெளியிடும் விழா
கொட்டும் மழைக்கு இடையில் இனிதே நடந்து முடிந்தது. பத்து நூலினைப்பற்றியும்
பேச பத்து விருந்தினர். தொகுத்து வழங்கியவர் தவிர ஏனைய அனைவரும் நன்றாக
பேசினர். கடைசி நேர இழுபறியில் முரளிகண்ணனை பலிகடாவாக்கியிருந்தார்கள்.
குறிப்பாக இந்திராபார்த்தசாரதியின் பேச்சு சந்தோஷப்படுத்தியது. மனிதர் தள்ளாடும்
முதுமையில் இருந்தாலும் பேச்சு கணீரென்று தடையில்லாமல் வந்தது. அனுபவம்.
அமீர், சசி, தமிழச்சி மூன்று பேரும் மேடையில் பின்னிருக்கையில் அமர்ந்து
கடலை போட்டுக்கொண்டிருந்தனர். சினிமா சினிமா நூல் குறித்து மதன் பேசுகையில்
சாருவை ஒரு காட்டு காட்டிவிட்டார். ஆனால் பின்னால் வந்த பிரபஞ்சன் பெரிய
ஆப்பாக மதனுக்கு வைத்துவிட்டுப்போனார். முந்தைய விழாவில் பாரதிமணி
கலக்கினாரென்றால் இந்த விழாவில் பிரபஞ்சன் கலக்கினார்.

மேடையில் எப்படி இயல்பாக ஒரு தோழனிடம் பேசுவதைப்போல பேசவேண்டும்
என்பதை எழுத்தாளர் சிவகாமியிடம் கற்கலாம். அவ்வளவு தெளிவாக, அழகான
உச்சரிப்போடு அவர் பேசியது ஆச்சரியமாக இருந்தது. எழுதும்போதுகூட அவரின்
அமைதியான முகம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. இதற்கு நேர் எதிராக தமிழச்சி
தங்கபாண்டியன் அவர்களின் பேச்சு அமைந்திருந்தது. சாலமன் பாப்பையா பட்டி
மன்றத்தில் பேசுவதைப்போல "பேசிவிட்டு ஓரிரு நொடி அமைதியாக ரசிகர்களின்
நாடியறிய இடைவெளி விடுவதுப்பேசினார்". மூடுபனிச்சாலையை வாங்கவேண்டும்
என அவர் பத்துநிமிடம் கோரிக்கை விடுத்தார்.

சுரேஷ் கண்ணன் அவர்களை சந்தித்தேன். மொத்தமாக இரண்டு மூன்று வார்த்தைகளே
பேசியிருப்போம். விழா மும்முரத்தில் அதிகம் பேசவில்லை.

விழாவின் முடிவாக நீண்ட உரை ஒன்றை நிகழ்த்தினார் சாரு நிவேதிதா. வழக்கம்போல
கூபா, சீலே, கரப்பானுக்கு ஏது நாடு, ப்ரான்சு, கேரளா, மாத்யமம், தமிழ் இலக்கியம்,
அதன் வாசகர்கள் என பிரித்து மேய்ந்தார். அரங்கே அமைதியாக அவர் பேச்சைக்கேட்டது.
நானும் ரசித்துக் கேட்டேன்.

விழா முடிந்ததும். கண்ட்ரி கிளப்பில் விருந்து. நல்ல பையனாக நாலு டம்ளர் தண்ணியும்
லக்கி, அதிஷா, நர்சிம், சாரு என அனைவரிடமும் நான்கு வார்த்தை பேசிவிட்டும்
வெளியில் வந்தேன்.

சாலையை மழை சுத்தமாக துடைத்து விட்டிருந்தது. அதிகாலை மூன்று மணியிருக்கும்
அங்கிருந்து குரோம்பேட்டை அடைவது எப்படி என்றே தெரியவில்லை. யாருமில்லாத
சாலையில் நீண்ட தூரம் நடந்து ஆட்டோபிடித்து வந்தது மறக்க முடியாதது.

--

இருவாரம் முந்தைய நாள் ஒன்றின் அதிகாலைக்குளிரில் வெடவெடத்தபடி ஒரு குட்டி கருப்புநாய் வீட்டின் திண்ணை ஓரம் தஞ்சமடைந்திருந்தது. சிறிது பால் ஊற்றி
அதன் பசியாற்றியதன் நன்றி மறவாமல் வீட்டையே சுற்றி சுற்றி வந்ததால் அதனை
வளர்க்கலாம் என்று முடிவானபோதுதான் தெரிந்தது அது பெட்டை நாய். வீட்டைச்
சுற்றி குட்டிபோடும் என்பதால் வேண்டாம் என மறுத்தார்கள். தினமும் காலையில்
எழுந்ததும் திண்ணையிலிருந்து இறங்கி வந்து காலைச்சுற்றி விளையாடும்.
விளையாட்டாக காலை உதறும்போது பயத்தில் கடித்துவிட்டது. கடித்தநாய்
கண்டிப்பாக உயிரோடு இருக்கவேண்டும் என்பதால் கட்டாயமாக கண்பார்வையில்
இருந்தே ஆகவேண்டும் என அக்கம் பக்கம் வசிக்கும் இலவசமருத்துவர்கள்
ஆலோசனை கூறினார்கள். ராஜ உபச்சாரத்துடன் அது வளர்ந்துகொண்டிருக்கிறது. குட்டிநாயால் எப்போதுமே நேராக ஓடமுடியாது. குழந்தை எப்படி எப்படி தத்தி தத்தி நடக்கிறதோ அதேபோல தத்தி தத்தி சரக்கடித்தைப்போல ஓடிவரும் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். தினமும் பொழுதுபோக்கே அதுதான்.

Friday, January 02, 2009

அண்ட பிரம்மாண்ட கோடி அகில பரிபாலனா


பாடல் வெளியாகும் அன்றே இணைத்திலிருந்து தரவிறக்கி கேட்கும் மனோபாவம்
தொடர்ந்தபடி இருப்பதால் அது தவறு என்பதே மறந்து விட்டிருக்கிறது. இணைய
காலத்தில் இதெல்லாம் சகஜமப்பா என்றாலும் அவ்வப்போது தோன்றுகிறது.
கோழித்தலையை அறுக்கும் நேரத்தில் ச்ச்சோ என்றாலும் அடுத்தநொடி குழம்பை
நினைத்து நாக்கு உச்சு கொட்டும். சேது படம் பார்த்து பாலா மீது பிரமித்திருந்தேன்.
நான் முதல் முதலாக காசு கொடுத்து ஆடியோ கேசட் வாங்கியது பாலாவின் நந்தா.
மற்றபடி ரேடியோவிலோ, நண்பர்களின் வீட்டிலோ மட்டும்தான் பாடல்களைக் கேட்கும்
வழக்கம். மெனக்கெட்டு வாங்கி ரசிக்கும் அளவுக்கு என் ரசனை இல்லை. ஆனால்
சேதுவின் பாடல்கள் எல்லாமே மிகவும் தேர்ந்த வரிகளைக்கொண்ட அற்புதமான
பாடல்கள். அதனாலேயே நந்தா பாடல் கேசட்டை வாங்க என்னைத்தூண்டியவை.

எங்களூரில் உள்ள ஒரு மியூசிக் சென்டரில் தினமும் சென்று நந்தா பாடல்
வந்துவிட்டதா என்று கேட்கும் அளவுக்கு என்னை மாற்றி விட்டிருந்தது. ஒருநாள்
அதிகாலையில் வந்தேவிட்டது. வாங்கிவந்து கைகள் நடுங்க டேப்ரிக்கார்டரில்
போட்டுக்கேட்டேன். கேட்டுக்கொண்டே இருந்தேன். எனக்குப் பிடித்த பாடல்களை
திகட்டும் அளவுக்கு கேட்டுக்கொண்டே இருப்பேன். தொடர்ந்தபடி ஒருவாரமெல்லாம்
ஒரே பாடலை ஆயிரக்கணக்கான முறை கேட்டிருக்கிறேன். அப்படி நந்தாவில் மிகவும்
பாதித்த ஒரு பாடல் "எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில்" எத்தனை முறை
கேட்டிருப்பேன் என்றே தெரியாது.

அதேபோல பிதாமகன் படத்தின் "அடடா அடடா அகங்கார அரக்க கைகளில் உலகிங்கே"
பாடலை கோடிக்கணக்கான முறை கேட்டிருப்பேன். ஒலியாகவும், ஒளியாகவும்
சிறப்பாக இந்தப்பாடல் இருக்கும். இந்த பாடலை எப்படி சாந்தக்குரல் ஜேசுதாசிற்கு
கொடுத்தார்கள் என்று முதலில் நினைத்தேன் பிறகு இவரைத்தவிர வேறு எவரும்
இவ்வரிகளுக்கு நியாயம் செய்திருக்க முடியாது இளையராஜாவின் தேர்வு எப்போதுமே
சரியானதாக இருக்கும்.

இன்று முழுக்க எனது கணிணியில் நான் கடவுள் பாடல்கள் மட்டும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

நான் கடவுளிலும் திரும்ப திரும்ப கேட்கும் ஒரு பாடல். "அண்ட பிரம்மாண்ட கோடி அகில பரிபாலனா" எனும் வரிகளைக்கேட்கும்போது நாடி நரம்பெங்கும் புதுரத்தம் புகுந்தோடுவது போல உணர்வு. அடடா அடடா அகங்கார பாடலைப்போலவே மிக அழுத்தமானதாக இருக்கலாம்.


சில நாட்களுக்கு முன்பு வார இதழில் பாலாவின் பேட்டி ஒன்றினைப் படிக்க நேர்ந்தது.

"இது கடவுள் இருக்காரா, இல்லையாங்கிற ஆத்திகநாத்திக விளையாட்டு இல்லை. பக்திப் படம் எடுப்பது என் வேலை இல்லை. எவருடைய நம்பிக்கை களையும் காயப்படுத்தக் கூடாது என்பது என் இயல்பு. அந்த அடிப்படை நாகரிகத்தில் நான் எப்போதும் தெளிவா இருக்கேன். இது விளிம்பு நிலை மனிதர்களின் உலகம். ஒரு எளிய கேள்வியை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன். படம் பார்த்தால் பதில் கிடைக்கும். என்னை, உங்களை, நம்மை, நம் உலகத்தை அது இன்னும் தெளிவாக்கும்!"


''ஊர்ல உலகத்தில் எவ்வளவோ பிச்சைக்காரங்க இருக்காங்க. எதிர்ப்படுற எல்லா பிச்சைக்காரங்களுக்கும் நாம் உதவுவதில்லை. பாவப்பட்டோ, இரக்கப்பட்டோ, புண்ணியத் துக்கோ, நாம போடுற சில சில்லறைக் காசுகளோட, அவங் களை ஒதுக்கிடுறோம். 'அய்யா தர்மதொர, அம்மா மகராசி!'ன்னு ஒரு வாய் சோத்துக்காக நம்மிடம் கையேந்தி நிக்கிற பாவப்பட்ட மனிதர்களைப் பத்தி யோசிச்சி ருக்கோமா? பிச்சை எடுக்கிறது என்ன குலத் தொழிலா? அவங்க எப்படிப் பிச்சையெடுக்கிற நிலைமைக்கு வந்தாங்க?

பெத்த பிள்ளைங்களால விரட்டி அடிக்கப்பட்டு, வீதிக்கு வந்த துக்கம் தாங்க முடியாம, காவி வேட்டிக் கட்டி கௌரவமா பிச்சையெடுக்கிறது எவனோன்னு போறோம்... அவன், நம்ம அப்பனா இருந்தா? மானத்தைக் காப்பாத்திக்க வழி தெரியாம, பிச்சையெடுக்கிற அவமானத்தோட அலையுற பொம்பளை, நம்ம அம்மாவா, அக்காவா இருந்தா? அப்பனோ, ஆத்தாவோ உடம்புத் திமிர்ல யாரோடவாவது ஓடிப் போக, ஆதரவுக்கு யாருமில்லாம, எச்சி இலையை நக்கித் திங்கிறது நம்ம புள்ளையா இருந்தா? அப்பத் தெரியும்ல அந்த வலி!


இப்படி சொல்லியிருந்தார்

நெடுஞ்சாலைப் பிணியாளர்கள் என்று ஒரு ஜாதியே நம் நாட்டில் உண்டு இவர்களுக்கென்று
இரக்கப்படவோ, ஆதரவளிக்கவோ எவரும் இல்லை. இந்தியப் பிரஜைகளாய் இருந்து
பின் தூக்கியெறியப்பட்டவர்கள். இவர்கள் குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள் என்பதை
விட மக்களால் கைவிடப்பட்டவர்கள் எனலாம். ஏன் இப்படி சொல்கிறேன் என்றால்
சில நாட்களுக்கு முன்பு அதிகாலைக்குளிரில் பவானியில் திருமணத்திற்கு செல்லும்
வழியில் நான் கண்டவையே. கிட்டத்தட்ட பதினேழுக்கும் மேற்பட்ட சித்தம்
கலங்கிய நிலையில் சாலை ஓரங்களிலும் மரங்களின் அடியில் அழுக்குச்சட்டை
பரட்டைத்தலையுடனும் நான் கண்டவர்களின் எண்ணிக்கை. அதைவிட கூடுதுறை
கோயில் வாசல்புறத்தில் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். சபரிமலைக்கு
செல்லும் சாமிகள், தரிசிக்க வந்த பக்தர்கள், திருமணத்திற்கு வந்தவர்கள் என
அனைவருமே மறக்காமல் கோயில் உண்டியலில் சாமிக்கு சில்லறைகளாகவும்
நோட்டுகளாகவும் கடவுளுக்கு கருணை காட்டினார்கள். அருகிள் அனாதைகளாக
நிற்கும் சக மனிதர்களுக்கு எவரும் மறந்தும் கூட எதையும் தந்துவிடவில்லை.
இந்தியாவில் உள்ள நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் இப்படி சித்தம் கலங்கிய நிலையில்
திரிபவர்களைக் கணக்கெடுத்தால் கூட சில லட்சங்கள் தேறலாம்.

அங்கிருந்த ஒரு டீக்கடையின் அருகில் நான் சில நண்பர்கள் டீ சாப்பிட்டுக்கொண்டிருக்கையில்
அடர்ந்த தாடி, சிக்குத்தலை, பின்புறம் சுத்தமாய் கிழிந்த கால்சட்டை மட்டும் அணிந்திருந்த
ஒருவர் பக்கத்தில் வந்து நின்றார். அவருக்கும் சேர்த்தே டீ சொல்லி சாப்பிட்டோம்.
ஒரு சலாம் வைத்துவிட்டு அருந்தினார். பழக்கப்பட்டுவிட்டார் போல. டீ சாப்பிட்டவுடன்
இருவர் மட்டும் புகைக்க ஆரம்பித்தோம். அவர் காதோரத்திலிருந்து ஒரு பீடியை எடுத்து
பற்ற வைக்க கடைக்கு சென்றார். ஈரமாக இருந்த அந்த பீடி பற்றவே இல்லை. இரண்டு
மூன்று என தீக்குச்சியின் எண்ணிக்கை அதிகமாகவே கடைக்காரர் தீப்பெட்டியை பிடுங்கி
வைத்துக்கொண்டார். அவர் நெருப்புக்காக என் முகத்தை பார்க்க ஆரம்பித்தார்.
என்னிடமோ தீப்பெட்டி இல்லை ஆனால் லைட்டர் இருந்தது. ஆனால் அதைக்கொடுப்பதிலோ
பற்ற வைப்பதிலோ விருப்பம் இல்லை. ஏனென்றால் அது ஏற்கனவே ரிப்பேராகி அளவுக்கதிகமாக நெருப்பு வருகிறது. முகமூடி அணிந்தத்தைப்போல முடி அடர்ந்த அவரின்
முகத்தில் உதட்டில் பொருத்தி பற்ற வைக்கும்போது கணிசமான முடி எரிந்துவிட
வாய்ப்பிருக்கிறது.

ஒருவழியாக தயக்கத்துடன் கொடுத்தபோது திருப்பி திருப்பி பார்த்து பற்றே இல்லாமல்
என்னிடம் கொடுத்துவிட்டார். பிறகு நானே பற்றவைத்தபோது இரண்டு மூன்று முடிகள்
கருகிவிட்டன. வாய்நிறைய புகை கக்கியபடி சென்றுகொண்டே இருந்தார் மக்கள்கூட்டம்
அவருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றன.

ஏழாம் வகுப்பு படிக்கையில் ஓர்நாள் மதியம் பள்ளியிலிருந்து சற்றுத்தள்ளி ஒதுக்குபுறத்தில்
ஒரு மின்மாற்றி உள்ளது அதன் அருகில்தான் அனைவரும் சென்று மூத்திரம் பெய்வோம்.
நீண்ட தூரம் பீய்ச்சி அடிப்பதில் தினமும் எங்களுக்குப் போட்டி. அப்போது புதரின் அருகில்
கருத்த நிறத்தில் தோல்கள் சுருங்கிய கிழவி ஒருத்தி உயிரை விட்டுக்கொண்டிருந்தாள்.
அவளின் உடைகள் ஒருகாலத்தில் வெள்ளை நிறமாய் இருந்திருக்கலாம். பார்த்த
மாத்திரத்தில் பயந்துபின்வாங்கி பிறகு பார்த்தோம். பள்ளியே திரண்டு வந்து பார்த்தது. அங்கே எலந்தப்பழம், இன்னபிற தின்பண்டங்கள் விற்ற கிழவிகள் கூட ஓடி வந்து
பார்த்து பயந்து பின் வாங்கினார்கள் நானும் இன்னொருவனும் ஓடிப்போய் தண்ணீர் வாங்கிவந்து வாயில் ஊற்றினோம். சிறிது குடித்து மீதம் எல்லாவற்றையும் வெளியில் விட்டாள். மணி அடிக்கவே மனதே இல்லாமல் கிளம்பினோம். சூனியக்காரக்கிழவி என்றார்கள் அவளைப்பார்த்தால் பரிதாபமாக இருக்கிறாளே ஒழிய சூனியம் வைப்பவளைப்போல தெரியவில்லை. வகுப்பில் இப்படியே நினைத்துக்கொண்டு இருந்தேன். பள்ளிவிட்டது ஓடிப்போய் பார்த்தால் வாய், மற்றும் கண் ஓரங்களில் எறும்புகள் மேய்ந்துகொண்டிருந்தன. அழுகையே வந்துவிட்டது. தெருவில் நாய் அடிபட்டால் கூட ரோட்டிலிருந்து இழுத்து ஓரமாய் விடும் மக்கள் ஒரு சக மனித உயிர் இறந்துவிட்டால்
பதுங்கி நழுவி விடுகிறது. கிட்டத்தட்ட ஏழுமணி கழித்து பேருராட்சி குப்பை அள்ளும்
வண்டி வந்துதான் அதை ஏற்றிச்சென்றது.

சாலை ஓரங்களில் திரிபவர்களை அப்போதிலிருந்தே கவனித்து வருகிறேன். சில சமயம்
உரையாடவும் செய்திருக்கிறேன். ஒரு சமயம் பளாரென்று அறையே வாங்கி இருக்கிறேன்.
அப்போது கல்லூரியின் உணவு இடைவேளையின்போது அருகில் இருந்த அண்ணாச்சி
கடைக்கு புகைக்கச்செல்வோம். தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் கல்லூரி
அது. ஊருக்கு சற்று தள்ளியே இருக்கும். கல்லூரி வாசலின் இருபுறத்திலும் புளிய
மரங்கள். ஒன்றின் அடியில் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தார் பலநாள் குளிக்காததினால்
உடல் அழுக்கேறி இருந்தது. கவனித்தபடியே சென்று விட்டேன். கல்லூரியின் பின்புறமே
விடுதி என்பதால் இரவு உணவு முடிந்ததும் மறுபடி சாலைக்கு வருவோம். அப்படி
திரும்ப வரும்போது அவர் அங்கே அமர்ந்திருந்தார். பலநாள் சாப்பிடாததின் வருத்தம்
முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. உடனே விடுதியின் சமையலறைக்கு சென்று
தட்டு நிறைய சோறு, குழம்பு ஊற்றி தண்ணிர் புட்டியுடன் வந்தேன். சிறிது தயக்கத்துடனே
அவரின் அருகில் சென்று தட்டையும் தண்ணீரையும் வைத்து சாப்பிடச்சொன்னேன்.
அவ்விடம் கொஞ்சம் இருட்டாக இருந்தது. எவ்விதமான பாவனையும் இல்லாமல் தட்டை
நகர்த்தி வைத்துவிட்டார். சிறிது நேர யோசனைக்குப் பிறகு சாப்பிட ஆரம்பித்தார்.
சாப்பிட்டதும் தண்ணீரை எடுத்து தட்டில் கை கழுவினார் பிறகு கழுவிய தண்ணீரையே
எடுத்துக்குடித்தார் பிறகு பாட்டில் தண்ணீரையும் குடித்துவிட்டு வைத்தார். இருவரும்
அருகிலிருந்த அண்ணாச்சி கடையில் சிகரெட் வாங்கி புகைத்தோம். நீண்ட நேரத்திற்கு
பிறகு வாய்திறந்து பேசினார். ஆனால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கிட்டத்தட்ட
இரண்டரை மணிநேரம் கேட்டுக்கொண்டிருந்தேன். பல முகபாவங்கள். அழுகை, சிரிப்பு,
ஏமாற்றம், மகிழ்ச்சி என மொழிக்கு அப்பாற்பட்ட மொழிகள் மட்டும் புரிந்தன.அவர் பேசிய பேச்சில் இருந்து அவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது. மற்ற எதுவுமே புரியவில்லை. எப்படி இங்கு வந்திருப்பார் என்றுகூட தெரியவில்லை. ஆனால் நம்மைப்போலவே எதோ ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருப்பார் என்று மட்டும்
தெளிவாக புரிந்தது.

எங்கோ படித்தது "மூளையழிவதும் கூட்டுக்குள் திரும்புவதும் ஒன்றே"