எல்லையற்ற அன்பு கொள்வோம்

Wednesday, February 27, 2008

இராமரும் முருகனும் பிற்சேர்க்கையாக சுஜாதாவும்



பஞ்சாயத்து செய்திகளை சொல்ல பறையடிப்பவர் தெருமுக்குகளில் நின்று
சொன்னதெல்லாம் இப்போது அடியோடு மறைந்து விட்டது. பறையடிக்கும்போது
மோளத்தை சூடு காட்ட வைக்கோலினை சிறிது எடுத்து தீயிட்டு காயவிடுவார்கள்.
அப்போதே சிறுவர் கூட்டம் கூடி பறை இசையை ரசிக்க கூடிவிடும். எப்போது
அடிப்பார்கள் என்று எங்களுக்குள் போட்டியே நடக்கும். திடீரென்று மழைபெய்வது
போல் அடிப்பார்கள். கேட்டதும் கையை காலை அசைக்க தூண்டும் அடி.
மழைவிட்டது போல அடி நிறுத்தும்போது ஒருவர் ஓங்கி குரலெடுத்து ராகத்தோடு
பாடுவார். அனைத்து வீட்டிலிருந்து தலைகள் எட்டிப் பார்த்து செய்தி வாங்கும்.
சிலர் நெருங்கி வந்து விசாரிப்பர். பெரும்பாலும் இவையணைத்தும் அதிகாலையிலோ
அல்லது இரவிலோ நடக்கும். இப்போதைய ராப், அதிரும் ட்ரம்ஸ் இசைக்கெல்லாம்
ஆதி எதுவென கேட்டால் நிச்சயமாய் பறைமேளத்தை சொல்வேன்.

பறைமேளம் மூலம் செய்தி சொல்லும் முறையை நவீனமாக்கிதான் முருகன்
வந்தார்.

முருகனுக்கு ஒருகண் பார்வை மட்டுமே மறுகண் எப்படி போனதென்று
தெரியவில்லை. ஊருக்குள் அவரைத்தெரியாத ஆள் இருக்கு முடியாது. திருமணம்,
மஞ்சள் நீர், மரணசெய்தி, தியேட்டரில் புதிய படம் போட்டால் செய்தி, அரசியல்
நிகழ்ச்சி என அனைத்துக்கும் இவர் உதவி தேவை. ஒரு ஆட்டோவில் மைக்செட்
ஸ்பீக்கர் சகிதம் இவர் நுழைந்து விட்டால் அனைத்து காதுகளும் கூர்தீட்டி நிற்கும்
என்ன செய்தி சொல்லபோகிறார் என்று. சில சிறுவர் கூட்டம் ஆட்டோவின் பின்னால்
நோட்டீஸ் வாங்க என்று ஓடும். நானும் என் டவுசர் காலத்தில் நோட்டீஸ்
வாங்க அவர் பின்னே ஓடியிருக்கிறேன். ஆரம்பத்தில் ஆட்டோ வைத்து
விளம்பரம் செய்யும் வசதி இல்லை என்பதால் சைக்கிளில் ஒருவர் மிதிக்க
இவர் பின் அமர்ந்து சென்று செய்தி சொல்வார். பெருமாலும் விளம்பரம் மட்டுமே
சொல்வதுண்டு. மரண செய்திகளுக்கென்றும், விளம்பரசெய்திக்கென்றும், திருமண
செய்திக்கென்றும் தனித்தனி அலைகளில் பேசுவதை தொடர்ந்து கேட்பவர் மட்டுமே
உணர முடியும்.

உங்கள் பொன்மலை / க்ரசண்ட்
திரை அரங்கில்
நாளைமுதல் தினசரி நான்கு காட்சிகளாக
சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த (உலகத்துலயே இரட்டை வேடங்கள்ல
அதிக முறை நடிச்சவர் இவராத்தான் இருக்க முடியும்)
நாட்டாமை திரைப்படம்.
முதல்நாள் முதல் டிக்கெட் எடுக்கும் டிக்கெட் எடுக்கும் பெண்மணிக்கு
படையப்பா நீலாம்பரி சேலை இலவசம் என்று அவர் பேசும் அழகு தனி.


இன்றும் முருகனுக்கென்று தனி ரசிகர் கூட்டம் உண்டு.

இப்போது முருகன் பாணியை விட நவீனாமாக லோக்கல் கேபிள் சேனல்களில்
ஐந்து நிமிட இடைவெளியில் நாளுக்கு 8756 முறை ஒரே செய்தியை தொலைக்காட்சியின்
அடிக்கோடியில் ஓட விடுகிறார்கள். யாரும் பார்க்கத்தான் ஆளில்லை.

கடந்த இருபது ஆண்டுகளில் எங்கள் ஊர் கிராமம் என்ற வட்டத்தை விட்டு வெளியே
வந்து நகரத்துடன் இணைந்திருப்பதுடன் பல அரிய விஷயங்களை சிதைத்து விட்டு
இவ்வுருவம் பெற்றிருக்கிறது.

உதாரணத்திற்கு என் பள்ளிப்பருவத்தில் முடிவெட்ட இராமர் என்பவர் வருவார்.
வெற்றிலை குதப்பிய வாயுடனும், சிவந்த முட்டைக்கண்கள் உடைய பார்க்க
அச்சமூட்டுபவர் போல தோன்றினாலும். வாய் திறக்கும்போது வெள்ளந்தியாக
தெரிவார். "வா கண்ணு ஏன் பயப்படுற? செத்த நிமிசம் உக்காருப்பா...
என்று கெஞ்சுவார். அவர் வரும் திசை தெரிந்தாலே இரண்டு தெரு தள்ளி நிற்பேன்.
வலுக்கட்டாயமாக தேடி இழுத்து வந்து மனையில் உக்கார வைப்பார் அப்பா.
தலையில் தண்ணீர் தெளித்து 'கரக்' 'கரக்' என்று வெட்ட ஆரம்பிப்பார்.
வெட்டும்போது கண்ணாடியை நாம்தான் கையில் பிடித்திருக்க வேண்டும். இது
ஒன்றுதான் எனக்கு பிடிக்காத விஷயம்.

பின் அவரது வாரிசுகள் என்று சொல்லிக்கொண்டு கடைத்தெருவில் சலூன்கடை
வைத்தார்கள். முன்னும் பின்னும் பார்க்க பெரிய பெரிய கண்ணாடிகள். எந்நேரமும்
சிலு சிலுவென்ற பாட்டுச்சத்தம். கத்தரி மறைந்து அரைமணிக்கொருதரம் கடைக்குள்
வந்து தலை சீவி தலையை திருப்பி திருப்பி பார்த்து திருப்தியுறாத இளந்தாரிகள்
என்று மாறிப்போனபோது இராமரிடம் ஊரில் உள்ள பல் பெயர்ந்த கிழவாடிகள்
மட்டுமே வாடிக்கையாளர்கள் என்றானார்கள்.

சமீபத்தில் ஊருக்கு சென்றிருந்தபோது இராமரை சந்திக்க நேர்ந்தது. முக்கத்தில்
முதுமை வரைந்த கோடுகள். ஆனால் அதே பெரிய சிவந்த கண்கள் இம்முறை
பயம்காட்டவில்லை. நீண்ட கழியின் முனையில் பண்ணருவா பாதி வளைத்துக் கட்டி ஆட்டுக்கு குழை ஒடித்துக்கொண்டிருந்தார். வீட்டில் ஆடு வளர்க்கிறாராம்.
எப்போதாவது வரும் தொழில் மீது நம்பிக்கை அற்றிருக்கலாம்.


இன்று மொத்தமாக பத்துக்கும் மேற்பட்ட சலூன்கள். அத்தனையிலும் ஆளுயர
கண்ணாடிகள். முடிவெட்டும் கோவிந்தனிடமும், கண்ணனிடமும், லவ்லியிடமும்
இராமரின் சாயல்கள் மறைந்திருந்தன.
---

பின்குறிப்பு: இன்னிக்கு ஏண்டா ரீல் சுத்திகிட்டு இருக்கன்னு தோணுச்சுன்னா அதுக்கான
காரணம். இன்று அதிகாலை உறக்கத்தில் முருகன் ஆட்டோவுக்கு பின்னால்
கலர் கலராக நோட்டீஸ் வாங்கி அருகிலுள்ள பசங்களிடம் நாந்தான் அதிகம்
நோட்டீஸ் வாங்கினேன் என்று பெருமையட்டி பின் அதை கப்பல் செய்து அனைவரும்
வாய்க்காலில் விட்டதுபோல ஒரு கனவு. அதான் கொஞ்சம் சுத்தியாச்சு.
ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்த கனவ பத்தி எழுதலாம்னு நினைச்சேன். ஆனா
அதுக்கு "A" சர்டிபிகேட் கிடைக்கும் அவ்வளவு வன்முறை. அய்யனார் சொன்னா
அதையும் எழுதிடலாம்.
---

சுஜாதாவை நேரில் சந்தித்த போது அவர் குறித்த எந்த விதமான ஆச்சர்யங்களும்
இருந்ததில்லை ஏனெனில் நமது வாசிப்பு அந்த தளத்தில் விரிவடையாமல் இருந்ததே
காரணம். ஆனால் இவர்தான் சுஜாதா என்று தெரியும். கல்லூரியின் இறுதி பருவத்தில்
ப்ராஜெக்ட் செய்வதற்காக கோடம்பாக்கத்தில் உள்ள பென்டாசாப்ட் நிறுவனத்தில்
இருந்தபோது தினமும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். பார்க்கும்போதெல்லாம் எனக்கு
தோன்றியது இதுதான் 'இவரால் எப்படி பாய்ஸ் படத்துக்கு வசனம் எழுத முடிந்தது"
என்று. நான் பார்த்தபோது வயோதிகம் முற்றியிருந்தது. சிறிய உதவியில்லாமல்
காருக்குள்ளிருந்து வெளியே வரவோ, படி ஏறவோ முடியாது.

கோடம்பாக்கம் என்பதால் அடிக்கடி எதாவது ஒரு நடிக பிரபலத்தையும் அவர் பின்
சிறு கூட்டங்களையும் காணலாம். பென்டாசாப்ட் எதிரில் உள்ள பொட்டிக்கடையில்
நின்று புகைக்கும்போது எப்போதாவது நீல நிற ஸ்கோடா கார் வந்து நிற்கும்
"டேய் சுஜாதாடா" வாங்கடா போய் பேசலாம் என்று அழைப்பேன். "டேய் உனுக்கு
வேலையே இல்லையா" என்று விலகிவிடுவார்கள். ரசிகனுடன் நடிகர்கள் கொள்ளும்
வசீகரத்துக்கு இணையாக எழுத்தாளருக்கும் இருப்பதை கண்டு வியந்திருக்கிறேன்.
வேலை முடிந்து கிளம்புவதற்கு முன்னர் எப்படியாவது சந்தித்து பேசவேண்டும்
என்று நினைத்திருந்தேன். ஒவ்வொரு சமயத்திலும் நழுவிக் கொண்டே சென்று
கடைசியில் இல்லையென்றாகிப் போன போது பெரிதாக நட்டமேதுமில்லை
என்றாலும் பேசியிருக்கலாம் என்ற எண்ணம் அடிக்கடி தோன்றும். இனி அது
தோன்றாது.

இன்றளவும் சுஜாதாவின் "என் இனிய இயந்திரா" தவிர வேறெதும் படித்ததில்லை.
அவர் மீது நான் கொண்டது சினிமா மோகமேயன்றி வேறெதுமில்லை.

Monday, February 25, 2008

புத்தகங்கள், வாசிப்பு, ரசனை மற்றும் கொஞ்சம் நையாண்டி

இங்கிருந்து கிளம்பும்போதே அய்யனார் ஒரு லிஸ்ட் கொடுத்து அதில் உள்ள
புத்தகங்களை வாங்கி வரச்சொன்னார். எங்கு தேடியும் கிடைக்காத வரிசை அவை.
நாஞ்சில் நாடன் நாவல்கள் தந்த ஈர்ப்பால் அவரின் மற்ற அனைத்து நாவல்களையும்
எப்படி அலைந்தாவது வாங்கிவிட முயற்சி செய்து அவற்றில் ஓரளவு வெற்றியும்
கிட்டியது. அவற்றை வாங்கும்போதும், வாங்கியபின்னர் படித்த அனுபவங்களுமே
இங்கு பேசப்போகிறேன்.

இந்தியா வந்ததும் மறக்காமல் சந்திக்க வேண்டும் என்று அன்புடன் சுரேகா கேட்டுக்
கொண்டார். திருச்சி சென்று அவரை பார்க்க முடிவானதும் அங்கேயே புத்தகங்களும்
வாங்க முடிவு செய்திருந்தேன். அவர் ஒரு பதிவர், உதவி இயக்குனர் என்ற
அளவிலேயே தெரியும் நயமாக பேசுவார் என்பது நேரில் சந்தித்த போதுதான்
தெரிந்தது. இடைவிடாது பேசிக்கொண்டே இருந்தார். திரையுலகம் சம்பந்தப்பட்ட
செய்திகள் வழக்கம்போலவே ஒவ்வாமையைத் தந்தது.

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக எனக்கு தனி மடல் இட்டு ஊக்கப்படுத்தியர்
திருச்சியை சேர்ந்த விஜயபாஸ்கர் என்பவர். அவரை சந்திக்க பி.எஸ்.என்.எல்
அலுவலகத்திற்கு சென்றோம் அங்குதான் அவர் வேலை செய்கிறார். அரசு
அலுவலகத்துக்கே உண்டான வாசனை, கோப்புகள், தடித்த கண்ணாடி அணிந்து
சிரமப்பட்டு தடிமனான நோட்டில் எதையோ எழுதும் பெருசுகள் என்று அனைத்து
லட்சணமும் பொருந்தின. என்னை கண்ணைக் கட்டிக்கொண்டு எதாவது ஒரு அரசுத்
துறை அலுவலகத்தில் நிறுத்தினால் அது எந்த மாதிரியான அலுவலகம் என்பதை
சரியாக சொல்லிவிடுவேன்.

பாஸ்போர்ட் வந்த புதிதில் அதைப் பெற்றுக்கொள்ள கிராம நிர்வாக அலுவலரிடம்
இருந்து ஒரு நற்சான்றிதழ் வாங்கி காவல் நிலையத்தில் கொடுக்க வேண்டும்.
அதற்கு அலுவலர்களே 50 ரூபாய் என நிர்ணயித்திருந்தார்கள். காலம் காலமாக
நடந்து வரும் இந்த பாரம்பரிய வழக்கத்தை அரசு ஊழியரான என் தந்தையே
மீற அவர் மனம் ஒத்துழைக்கவில்லை. கையில் அம்பது ரூபாய் தந்து "நீயே
போய் வாங்கி வா என்றார்".

சின்ன சின்ன வேலைகளிலும் ஒன்று, இரண்டு என்றே கமிஷன் அடித்து பழகியதால்
கையூட்டு கொடுக்க வைத்திருந்த ஐம்பதில் இருபதை ஆட்டையை போட்டேன்.
நிர்வாக அலுவலர் முன்பு நின்று 30 ரூபாயை நீட்டும்போது விலைவாசி நிலவரம்
தெரியுமா? உங்கப்பாவே இப்படி நடந்துக்கலாமா? என்று நியாயம் பேசினார்.
அல்லாம் தெரியும் பேப்பர குடுங்க சார் என்று வாங்கி வந்தேன்.

இப்படி பாரதிதாசன் பல்கலைக்கழகம், அரசு மருத்துவமனை, காவல் நிலையம்,
பஞ்சாயத்து அலுவலகம், நீதிமன்றம் என்று அரசின் அத்தனை அலுவலகத்தின்
வாசனையையும் பிரித்தறிய நாசி பழகிக் கொண்டது. விஜயபாஸ்கர் அலுவலகம்
சென்ற போது அத்தனையும் மனதின் முன் மீண்டும் எவ்வித மாற்றங்களும்
இல்லாமல் நிழலாடியது.

விஜயபாஸ்கர் என்னைப் பார்த்ததும் மிகவும் பதட்டமடைந்து விட்டார். இதைக்
கண்ட சுந்தருக்கு ஒன்றுமே புரியவில்லை. எனக்கே புரியவில்லை. கம்ப்யூட்டரை
தட்டுவதும் தொலைபேசியில் பேசுவதுமாக மதிய உணவு வரை இருந்தார்.
நானும் சுரேகாவும் அரசு அலுவலகம் என்றும் பாராமல் அலப்பறை கொடுத்துக்
கொண்டிருந்தோம். கொஞ்ச நேரத்தில் மதிய உணவாக தி இங்கிலிஷ் பேக்கரியில்
பொறை (பொறைகூட நல்லாருக்கும்) வாங்கி சாப்பிட்டு இடத்தை காலி செய்தோம்.

முன்பின் பழக்கமில்லாத, இணைய எழுத்துகளின் மூலம் அறிந்த ஒருவரை காணும்
போது ஒரு நண்பனிடம் பழகுவது போல பேசுவது, பழகுவது என்பது
அனைவருக்கும் சாத்தியமல்ல.

சத்திரம் பேருந்து நிலையம் வரும் வழியில் ஒரு புத்தகக்கடையை பார்த்தோம்.
உரிமையாளரை தட்டி எழுப்பி புத்தகம் வாங்க வந்திருப்பதாக சொன்னோம்.
சுவாரசியம் இல்லாமல் உள்ளே சென்று பார்க்குமாறு கையை காட்டி விட்டு
மறுபடியும் தூங்க சென்றார்.

ஊறுகாய் செய்வது எப்படி முதல் எந்த நேரத்தில் சாந்தி முகூர்த்தம் வைத்து
எந்த நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றால் புருசனுக்கு நல்லது
என ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருந்தன. ரேடியோ பழுது பார்ப்பது, டீவி
ரிப்பேர் செய்வது எப்படி போன்ற புத்தகங்கள் இல்லாமல் போனது மகிழ்ச்சி
அளித்தது. ஆயிரக்கணக்கான "எப்படி" புத்தகங்களுக்கு நடுவே தரமான நாவல்கள்
கட்டுரைத் தொகுப்புகளைக் காண சந்தோஷமாக இருந்தது. நாஞ்சில் நாடனின்
"தலைகீழ் விகிதங்கள்", ரமேஷ் ப்ரேமின் "ஆதியிலே மாம்சம் இருந்தது" மற்றும்
எம்.டி வாசுதேவன் நாயரின் காலம் நாவல் தந்த சுகத்தினால் அவரின் சிறுகதை
தொகுப்பு ஒன்றும் வாங்கினேன்.

சொல்ல மறந்த கதை படத்தினை இன்னும் பார்க்கவில்லை என்பதால் தலைகீழ்
விகிதங்கள் வாங்கினேன். பார்த்தாலும் வாங்கி இருப்பேன் அது வேறு விஷயம்.
தெப்பக்குளம் அருகில் சில புத்தக கடைகள் இருக்கும் அங்கு சென்றால் நாஞ்சில்
நாடன் புத்தகங்கள், கோபி கிருஷ்ணனின் டேபிள் டென்னிஸ் ஆகியவை கிடைக்கலாம்
என்று சுரேகா கூறவே சுவாரசியமில்லாமல் கிளம்பினேன். ஏனென்றால் கல்லூரிக்
காலத்தில் நூலகத்தில் இருந்து தலையணை சைஸ் கம்பியூட்டர் புத்தகங்களை
ஆட்டை போட்டு தெப்பக்குள புத்தக சந்தையில் பாதி விலைக்கு விற்றிருக்கிறேன்.
அங்கே என்ன கிடைக்க போகிறது என்ற நினைப்பில்தால் அந்த அசுவாரசியம்.

நினைத்ததற்கு எதிர்மாறாக அங்கே இதுவரை வாசித்திராத நாஞ்சில் நாடனின்
நான்கு (பேய்க்கொட்டு, மிதவை, என்பிலதனை வெயில் காயும், மாமிசப் படைப்பு)
நாவல்கள் கிடைத்தன. ஜெயமோகனின் திசைகளின் நடுவே மிகுந்த தயக்கத்திற்கு
பிறகு வாங்கினேன்.

"அது இருக்குதா"? "இது இருக்குதா"? என்று கடைக்காரரை காய்ச்சி எடுத்துக்
கொண்டிருந்த சமயம் இரண்டு சுமார் பிகர்கள் சாண்டில்யன் புத்தகங்களாக வாங்கி
குவித்துக் கொண்டு இருந்தார்கள். "பருவம்" "விருந்து" "இன்பலோகம்"
புத்தகங்களுக்கு அடுத்தபடியாக எங்கள் நண்பர் குழாமில் அதிகமுறை சுற்றிய
முக்கால்வாசி புத்தகங்கள் சாண்டில்யன் புத்தகங்களே. மருந்துக்கு கூட அந்த மாணவிகள்
பாட புத்தகங்களை வாங்காதது எனக்கு எந்த அதிர்ச்சியையும் தரவில்லை.



எல்லாம் ஒரு விளம்பரம்தான் கண்டுக்க கூடாது. ஆனா வழக்கம்போல போட்டோ
மேல கிளிக்கி பாத்துட்டா நான் பொறுப்புல்ல.

புத்தகம் வாங்கவே லட்சியத்தோடு வந்த என்னை விட சுரேகா அதிக புத்தகங்கள்
வாங்கினார். ஓஷோ புத்தகங்கள் படிப்பவர்களை எப்போதுமே நான் ஜந்துக்களை
பார்ப்பது போல ஏன் பார்க்கிறேன் என்பது எனக்கே தெரியவில்லை. உலகத்தில்
உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான உபதேச புத்தகங்கள் என்பது என்னவோ
செய்கிறது. என்னைப்பொறுத்தவரை ஓஷோ புத்தகங்களை படிக்கும் நிலை வரவில்லை.

இன்று காலைமுதல் மாலைவரை உங்கள் நேரத்தை வீணடித்து விட்டேன். மிகவும்
நன்றி என்று சொன்னபோது "எல்லாத்தையும் செஞ்சுபுட்டு என்ன கதிர் இது
டயலாக் என்று கலாய்த்து வழியனுப்பினார். பேருந்தில் புத்தக குவியல்களுடன்
உட்கார சென்றதும் எதோ "வாய்ப்பாடு விக்கவந்தவன் போலருக்கு" என்ற நினைப்பில்
இடம் தர மறுத்தனர். ஒரு கல்லூரி மாணவன் மட்டும் ஒதுங்கி இடம் கொடுத்தான்.
"ஏன் சார் குமுதம், விகடன் மாதிரி பொஸ்தகம் வாங்க மாட்டிங்களா"? எதுவுமே
புரிலயே சார் என்றேன்.

-----------

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகே குப்பை கொட்டும் இடத்திற்கு
மிக அருகில் புத்தக கண்காட்சி. நீண்ட நாள் தேடிக்கொண்டிருந்த எர்னஸ்ட் ஹெமிங்வே
(சும்மா பில்டப்பு) எழுதிய the old man and sea புத்தகத்தின் தமிழில் கடலும் கிழவனும்
கிடைத்தது. சி.சு செல்லப்பாவின் ஜீவனாம்சம் ஒன்றும் வாங்கினேன். காலச்சுவடு
பதிப்பகத்தை தவிர மற்ற அனைத்து பதிப்பகங்களும் புத்தக சந்தைக்கே உரித்தான
புதிய பெயர்களுடன் காணப்பட்டது. ஒருவேளை எனக்கு தெரியாமல் அப்படிப்பட்ட
அச்சகங்கள் நிறைய இருந்திருக்கலாம்.

ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், எழுதிய, பேருந்து நிலையங்களில் தொங்கி
கொண்டிருக்கும் மர்ம நாவல்களுக்கு பரம ரசிகையான என் அக்காவிடம் கடலும்
கிழவனும் புத்தகத்தை படிக்க கொடுத்தேன். "என்னடா இது டப்பிங் படம் பாக்கற
மாதிரி இருக்கு" என்று சொல்லி புத்தகத்தை தூக்கி எறிந்தாள்.

ஆர்வக்கோளாரில் கவிதை எழுதும் சித்திப் பையனும் இதே ரகம் அவனிடம்
மெர்க்குரிப்பூக்கள் நாவலை கொடுத்து படிக்க சொன்னேன். மறுநாள் என்னண்ணா
இது "செக்ஸ் புக்கு" மாதிரி இருக்கு என்று சொல்லி கொடுத்து விட்டான். ஆக
வாசிப்பு தன்னளவில் வளர்ச்சி அடைய வேண்டுமே தவிர யாரும் அதை திணிக்க
முடியாது. மேலும் அது ரசனையை பொறுத்து அமைவது.

Saturday, February 23, 2008

மாறாததும், மாறியதும்

சில பெருசுகள் மண்டைய போட்டுடுச்சு.

சில சிறுசுகள் ஓடிப்போச்சு.

சிகரெட் விலை ஏறி போச்சு.

சண்டை போட்ட பக்கத்து வீட்டு சனம் பாத்தவுடனே சிரிக்குது.
காலம் எல்லாத்தையும் தோசை மாதிரி திருப்பி போடும்ன்ற உண்மை உண்மைதான்.

மண்டபத்திலாவது எதும் தேறுமான்னு பாத்தேன், அங்கயும் ஒரு லோடு மண்.

ஒரு வீட்டுக்கு குறைந்தது இரண்டு மொபைல் போன் இருக்குது. எல்லாருமே
ரெண்டு மொபைலாவது வச்சிருக்காங்க. (ரேஷன்ல கூட தர்றாங்களாம்பா)

"இதெல்லாம் தேறும்னு" கணக்கு பண்ணி வச்சிருந்த பிகர்கள ஆட்டை
போட்டுட்டானுங்க.

துப்பாய்ல எங்க இருந்த? என்ற கேள்வியை அனைவரும் கேட்டு கேட்டு
சாகடித்தனர். யோவ் வடிவேலு உன்னய...

டீக்கடையில் டீ குடிச்சதும் கடைக்காரர் பத்திரமா டீகிளாசை வாங்கி
வைத்து நக்கல் சிரிப்பு சிரிக்கிறார்.

ஊர்ல உள்ள மக்கள விட அதிகமா ஒரு ரூபாய் தொலைபேசி பொட்டிகள் தொங்குது.

ஸ்கூல் பொண்ணுங்க கூட பக்கத்துல யார் வர்றாங்க போறாங்கன்னு கவனிக்காம
கை நிறைய ஒரு ரூபாய் வச்சிகிட்டு லொடக் லொடக்னு காச விட்டு கடல போட்டுகிட்டு இருக்குதுங்க. அப்படி போடற காச உண்டியல்ல போட்டா அத வச்சு ஒரு குடும்பமே
வாழலாம்.

எல்லா விலையும் ஏறினாலும் எங்க ஊர் தியேட்டர்ல இன்னமும் அஞ்சு ரூபாய்தான்
டிக்கெட் விக்கறாங்க. இடைவேளைல குடிச்ச டீ கூட அதே சுவை. முன்னல்லாம்
சூடா சமோசா போடுவாங்க. தட்டுல பரப்பி தியேட்டர் உள்ள வந்து விக்கறத
நிறுத்திட்டாங்க. தியேட்டர் பொட்டிக்கடைல ரஸ்னா பாக்கெட் அமோக விற்பனை.
ஆனா நான் ரஸ்னா குடிக்கறதை நிறுத்திட்டேன். :)

எவ்ளோ தாமதமா வீட்டுக்கு வந்தாலும் ஏன் எதுக்குன்னு எப்படின்னு ஒரு
கேள்வியும் இல்லாம கதவ திறந்து விடறாங்க. ரொம்ப ஏமாற்றமா இருந்தது.

ஆங்கிலப்படங்களுக்கு மிரட்டலான தமிழ் பெயர் வைக்கிறாங்க. உதாரணம்
சங்கிலிக்கருப்பன், பாதாள பைரவி.

எல்லார் வீட்டுலயும் கலைஞர் டீவிதான் பாக்கறாங்க.

ரெண்டு டீவி இருக்குற வீட்டுல மூணாவதா கலைஞர் டீவி கொடுத்துருக்காங்க.
கிட்டதட்ட எல்லா வீட்டுலயும் இதுதான்.

எல்லா ஊர்லயும் பிரம்மாண்டமான வினைல் போர்டுல பல்லாயிரக்கணக்கான
தலைகள் சிரிச்சிகிட்டும், செல்போன்ல பேசுற மாதிரியும், வணக்கம் வைக்கிற
மாதிரியும் போஸ் குடுத்துகிட்டு இருக்கறாங்க. புருடா புராணத்துல இதுக்கு
எதாச்சும் தண்டனை இருக்குதான்னு பாக்கணும் இல்லாட்டி உருவாக்கணும்.

ரூட் கிளியராயிடுச்சி, அப்ப அடுத்து உனக்குதான கல்யாணம் என்ற கேள்வியை
அனைவரும் வாயிலேயே வைத்திருந்தனர்.

பதிவர்களில் புலி மட்டும் கல்யாணத்திற்கு முதல் நாள் வந்து கொஞ்ச நேரம் உறுமி
விட்டு போனது. நான் புலிக்கு எதுமே செய்யலன்ற குற்றவுணர்ச்சி தினம் தினம்
என்னை கொல்லுது. துபாய் வா ராசா!

ரோட்டுல போற எதாச்சும் ஒரு பொண்ண ரெண்டு நிமிசம் தொடர்ந்தாப்புல
பாத்தம்னா அடுத்த அஞ்சாவது நிமிசத்துல ரெண்டு மூணு பேர் பைக்ல வந்து
"ஏன் பாத்த"ன்னு ஜோதிகா ரேஞ்சுல கேள்வி கேக்கறானுங்க.

ஒரு ஒயின்ஷாப் இருந்த ஊர்ல இப்ப அஞ்சு டாஸ்மாக் இருந்தும் கேட்ட
சரக்கு கிடைக்கவில்லை. என்ன கொடும இது...

ஒருநாளைக்கு மூணு என்ற வீதத்துல ஒவ்வொரு முறையும் ஒரு மணி நேரம்
மின்சாரத்தை நிறுத்தி வச்சிடறாங்க. முன்னாடி இதுபோல இல்ல. இப்ப மட்டும்
ஏன்னு தெரில. இங்கருந்து கர்னாடகாவுக்கு போகற மின்சாரத்துல எந்த
தடையுமில்லை.

முன்னவிட தினத்தந்தி சாணி பேப்பரின் தரம் குறைந்து சினிமா படங்களின்
விளம்பரங்களும், பிறந்தநாள் வாழ்த்து பக்கங்களாலும் நிறைந்திருக்கிறது.
இப்ப டீக்கடைய நம்பி பத்திரிக்கை நடத்துறாங்கன்னு யாரும் சொல்ல முடியாதுல்ல.

இப்பலாம் குங்குமத்துக்கு இனாமா எதுவும் கொடுக்கறதில்லயாம். என்ன ஏதுன்னு
கேட்டா இனாமா கொடுத்த பொருள் எதுவும் சந்தைக்கு வரும்போது காசு கொடுத்து
வாங்கறதில்லியாம். இத அடுத்த வாரம் இனாமா வாங்கிக்கலாம்னு விட்டுருப்பாங்க
போலருக்கு.

தாரே சமீன் பர் படத்தை அக்கா பசங்களுக்கு போட்டு காட்டணும்னு ஆவலோட
டிவிடி வாங்கி வந்து போட்டேன். அஞ்சாவது நிமிசத்துல "அட இதுவா மாமா
நான் ஏற்கனவே இந்த படத்தோட கதைய கேட்டுட்டேன்னு சொல்றான்.
அவங்க ஸ்கூல் மிஸ் சொன்னாங்களாம். மிஸ் பேர் என்ன? வயசு என்னன்னு
கேட்டதுக்கு "அய்யய்ய ஆய் மாமான்னு" சொல்லிட்டு தூங்கிட்டான்.

நிறைய பேர பாக்கணும்னு நினைச்சு பாக்கமுடில. எங்க ஊர்லருந்து சென்னை
போகணும்னா குறைந்தது 10 மணி நேரம் ஆகுது. பத்து மணி நேரம், பன்னெண்டு
மணி நேரம் ட்ராபிக் எல்லாம் சாதாரணம். ரோடு போடறாங்களாம். இதுக்காகவே
போகவில்லை.

பதிவர்களில் சந்தித்தது இரண்டு பேர்தான். சுரேகா மற்றும் ஜ்யோவ்ராம் சுந்தர்.
ரெண்டு பதிவர்களின் பேரும் சுந்தர். அப்புறம் என்னுடைய தீவிர ரசிகர்(?)
ஒருத்தரையும் பார்த்தேன். யோவ் அய்யனார் எனக்கும் ரசிகர் இருக்காங்க!

"பக்கத்து சீட்டுல பாட்டி உக்காராம பிகர் உக்காரணும்னு கடவுள்கிட்ட வேண்டிக்குங்க
அய்யனார்னு சொன்னேன். உனுக்குலாம் ஆயாதாண்டா பக்கத்துல உக்காரும்னு சாபம்
விட்டார். பத்தினன் சாபம்தான் பலிக்கும்னு நினைச்சேன்.

சினிமாக்கு போற வழில ஒரு ஆயா எலந்தபழம்னு கூவிகிட்டே போச்சு. ரெண்டு
ரூபாய்க்கு வாங்கி பேண்ட் பாக்கெட்ல போட்டு கடிச்சி தின்னுகிட்டே போனேன்.
"ஏண்டா நீ உண்மைலயே துபாய்லருந்துதான் வந்தியா"ன்னு கேட்டுட்டான்.

இல்லடா மச்சி, நான் அபிதாபி...

சும்மா இது ஒரு வருகைப் பதிவு மட்டும்தான்.